World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Washington escalates slaughter in Iraq

வாஷிங்டன், ஈராக்கில் படுகொலைகளை அதிகரிக்கிறது

By Bill Van Auken
21 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

பாக்தாத்திற்குத் தெற்கே ஒரு சாலைத் தடுப்பில் கிளர்ச்சியாளர்கள் இரு அமெரிக்க இராணுவத்தினரை கொன்றமை ஈராக்கிய மக்களுக்கு எதிராக குருதிப்புனல் ஓடுவதை தீவிரமாக்குவதற்கு வாஷிங்டனால் நியாயப்படுத்தப்படும் செயலாகிவிடும்.

சித்திரவதை, சிதைப்பு இவற்றின் அடையாளம் இருப்பதாக கூறப்படும் இளம் துருப்புக்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்படும் முன்னரே, புஷ்ஷின் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனை, ஆக்கிரமித்துள்ள நாட்டில் அமெரிக்க வன்முறை வியத்தகு முறையில் பெருகும் வகையில் இராணுவ தந்திரோபாயத்தில் மாற்றத்தை செயல்படுத்தும் திட்டத்தைக் கொண்டுள்ளன என்ற குறிப்புக்கள் பெரிதும் தோன்றியுள்ளன.

நூற்றுக் கணக்கான ஆயிரங்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஈராக்கிய இறந்தவர்களையும் விட மிக மிகக் குறைவான, இப்பொழுது 2,500 ஐயும் தாண்டிவிட்ட, அமெரிக்க துருப்புக்களின் அன்றாட இறப்புப் பட்டியலை உயர்த்திக்காட்ட சிறிதும் ஆர்வமற்றிருக்கும் செய்தி ஊடகம் - இரண்டு கொலையுண்ட வீரர்களின் முடிவு பற்றியும் கொடூரமான, விரிவான, வகையில் அவர்கள் மாய்க்கப்பட்டது பற்றியும் ஆழ்ந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர்களுடைய நோக்கம் ஈராக்கிய மக்களுக்கு எதிராக வெறுப்பு, பழிவாங்குதல் என்ற சூழ்நிலையை பெருமளவு உருவாக்குவதாகும்.

மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்துள்ள ஒவ்வொரு காலனித்துவ போரிலும் ஆக்கிரமிக்கும் படையினர்களை மிருகத்தனமான முறையில் மக்கள் கொல்லுவது என்பது தவிர்க்க முடியாத விளைவேயாகும். ஆயினும்கூட, இக்குறிப்பிட்ட இறப்புக்களை பற்றிக் கூறும்போது, அமெரிக்க தொலைக்காட்சி அறிவிப்பாளர்களும், ஒவ்வொரு செய்தித்தாள் தலைப்பு எழுத்தாளரும் அவற்றின் "காட்டுமிராண்டித்தனமான", "மிருகத்தனமான" தன்மையைப் பற்றி பறையறிவிப்பதை தங்கள் கடமையாக கொண்டுள்ளனர். ஆனால் இத்தகைய சொற்கள் ஈராக்கியர்கள் அபு கிறைப்பிலோ மற்ற காவல் மையங்களிலோ நிகழ்த்தும் சித்திரவதைக்கு உட்பட்டு மரணமடையும்போது அல்லது அவர்களுடைய வீடுகளிலேயே 500 பவுண்டு வெடிமருந்துப் பொருட்களை எதிர்கொண்டு ஆடவர், பெண்டிர், சிறுவர்கள் என படுகொலைக்கு உள்ளாகும்போதோ அல்லது "படைகள் பாதுகாப்பு" என்ற பெயரில் ஈராக்கிய தெருக்களில் முறையற்ற வகையில் சாதாரண மக்கள் கொல்லப்படும்போதோ பயன்படுத்தப்படுவதில்லை.

ஈராக்கில் புதிதாக அல் கொய்தாவிற்கு தலைமை ஏற்றுள்ளதாக கூறப்படும் அபு ஹம்ஜா அல்-முகாஜிர் அமெரிக்க துருப்புக்களை தன் கையாலேயே கொன்றார் என ஒரு இணைய தள தகவல் வந்துள்ளதற்கு, செய்தி ஊடகம் உடனடி நம்பகத்தன்மை கொடுத்துள்ளது. மக்கள் ஏற்கவேண்டும் என்பதற்காக அளிக்கும் தீமையின் மொத்த உருவாகிய இந்த சந்தேகத்திற்குரிய பிரச்சாரக் கூற்று, அமெரிக்க மக்களுடைய பெயரால் அளிக்கப்பட இருக்கும் படுகொலைகளுக்கு ஏற்றதாக மக்கள் மனநிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டுள்ளது ஆகும்.

அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்தின் பிரச்சாரம் ஒருபுறம் இருக்க, ஈராக்கின்மீது படையெடுத்து அதை ஆக்கிரமித்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னரும் கூட, அமெரிக்கப் படைகள் தாங்கள் இருக்கும் இடத்தில் ஒரு நிலையான தன்மையை கொண்டிருக்கவில்லை என்பதை உறுதியாக உணர்த்தும் வகையில் குறிப்பாக இப்படுகொலைகள் உள்ளன. முகமூடி அணிந்த துப்பாக்கி வீரர்கள் இராணுவத்துருப்புக்களைக் கவர்ந்து, மூன்று நாட்கள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொன்றபின் அவர்களுடைய சடலங்களை வீசி எறிதல், அதன்பின்னர் சடலங்கள், அவை இருக்கும் சாலைகளுக்குக் கண்ணி வைத்தல் என்ற திறனைக் கொண்டுள்ளனர் என்னும் திறமை, அவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைவீரர்களால் பிடிக்கவும், கண்டறியவும் முடியாமல் உள்ள நிலைமை, ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போரிடுபவர்கள் ஈராக்கிய மக்களிடையே அவர்கள் கொண்டுள்ள மிகப் பரந்த ஆதரவிற்குச் சான்றாக உள்ளது.

ஈராக்கிய நகரத்தின் வழியே கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்த நான்கு இராணுவ ஒப்பந்தக்காரர்கள் கொலை செய்யப்பட்டு, சடலங்கள் சிதைக்கப்பட்டதை அடுத்துத்தான் நவம்பர் 2004ல் பல்லுஜாவில் குருதிப்பாதை நிறைந்தோடியது என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. இந்நகரம் எவரும் குண்டுவீசலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, பெரும் வெடிப்புத் தன்மை கொண்ட குண்டுகளால் பின்னர் தகர்க்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது; இதில் நாபாம் மற்றும் இரசாயன ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன.

அமெரிக்க இராணுவத்தின் முற்றுகைக்குட்படுத்தப்பட்டுள்ள அன்பர் மாநிலத்தின் தலைநகரான ரமடியிலும் இதேபோன்ற கொடுமைகள்தான் இழைக்கப்பட்டு வருகின்றன. போர்விமானங்கள் மூலமும், ஹெலிகாப்டர்கள் மூலமும் தாக்குதல்கள் நகரத்தின்மீது தொடர்ச்சியாக நடைபெற்று, குண்டுவீச்சுக்கள் நிகழ்கின்றன; நகரத் தெருக்களிலோ போர் டாங்குகள் ரோந்து வருகின்றன. ரமடியில் தொடர்ச்சியான சாலைத் தடுப்புக்கள் அனைத்து சாலைகளையும் மூடிவிட்ட நிலையில், அங்கு வசிப்பவர்கள் மின்வசதி, குடிநீர், அவசரகால மருத்து உதவி ஆகிய அடிப்படை வசதிகளையும்கூட பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

கிட்டத்தட்ட 2,500 துருப்புகள் கொண்ட ஒரு முழு அமெரிக்க மரைன் பிரிவும் நகரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது; கூடுதலான 1,500 அமெரிக்க வீரர்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு கொடுக்கும் மையம் என நீண்ட காலமாக கருதப்படும் ரமடியில் குறுக்கீடு செய்வதற்கு ஈராக்கிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அமெரிக்காவினால் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ள ஈராக்கிய அரசாங்க துருப்புக்களில் இரண்டு பட்டாலியன் பிரிவுகளும் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

ரமடியில் இருந்து பல குடும்பங்கள் வெளியேறியுள்ள நிலையில், வெளியேறமுடியாமல் நகரத்திற்குள்ளேயே கிட்டத்தட்ட 150,000 வறிய, வயதான, முடமான மக்கள் இன்னும் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. முழுவீச்சில் அமெரிக்கத் தாக்குதல் தொடங்கியவுடன் இந்த ஆடவர், பெண்டிர் மற்றும் குழந்தைகள் "பயங்கரவாதிகள்" என்று முத்திரையிடப்பட்டு போரில் கொல்லப்பட்ட எதிர் சக்திகளின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுவிடுவர்.

அமெரிக்கா நிகழ்த்தியுள்ள போரும் ஈராக்கிய ஆக்கிரமிப்பிலும் கணக்கிலடங்கா மிருகத்தனமும் கொலையும் உள்ளன என்பதற்கு சான்றுகள் வளர்ந்து வரும் நிலையில், மற்றொரு போர்க் குற்றம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இரண்டு அமெரிக்க வீரர்கள் சிறைபிடிக்கப்பட்ட பின்னர் நடந்த சோதனையிலேயே மிகப் பெரும் வன்முறை ஏற்பட்டிருந்தது. பென்டகனுடைய கருத்தின்படி அமெரிக்கா கிட்டத்தட்ட 8,000 வீரர்களை இந்நடவடிக்கைக்காக இயக்கியதுடன் குறைந்தது 12 கிராமங்களையாவது தகர்த்து, ஏராளமான ஈராக்கியர்களை கட்டாயமாக காவலிலும் வைத்துள்ளது.

கடந்த வாரம் பச்சை வலைய (Green Zone) பகுதிக்கு வரும் வகையிலான புஷ்ஷின் வருகைக்கு பிறகு பாக்தாத்திலேயே பாதுகாப்பு நடவடிக்கைகள் பெருமளவு மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க மற்றும் கைப்பாவை ஈராக்கிய துருப்புக்கள் இணைந்த பிரிவுகளினால் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பெறுவதுடன், காலையில் இருந்து மாலைவரையிலான ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ ஈராக்கிய தகவல்களில்படி கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 2,155 மக்கள் தலைநகரில் வன்முறையில் மடிந்தனர் என்றும் இப்பாதிப்பாளர்களில் பலரும் அமெரிக்க பயிற்சி பெற்றிருந்த கொலைப்படையினரால் கொல்லப்பட்டனர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த வாரம் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்ட மற்றொரு கொடூரம் பாக்தாத்திற்கு 30 மைல் வடகிழக்கேயுள்ள பக்குபா நகரத்திற்கு அருகில் இருந்த ஒரு கிராமத்தில் நடந்தது. பிரசுரமாகியுள்ள தகவல்களின்படி ஒரு விமானத்தாக்குதல், அதைத் தொடர்ந்த விமானப்படையினரின் தாக்குதலில் 13 முதல் 15 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படைகளின் குண்டுக்கு இரையாகி இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கோழிப்பண்ணை தொழிலாளர்கள்; ஒரு குழந்தையும் மடிந்தது.

ஹடியா நகரத்தில் 24 குடிமக்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றிய விசாரணை முடியும் முன்னரே -- இதில் மூன்று அமெரிக்க துருப்புகள்மீது குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன, அனைவருமே இவ்வாரம் பிடிக்கப்பட்டு கொலையுண்ட இரு துருப்புகளின் பிரிவான 101வது விமானப் படை பிரிவு உறுப்பினர்கள் -- கடந்த மாதம் மூன்று ஈராக்கியர்கள் சிறைபிடிக்கப்பட்டு விசாரணை ஏதுமின்றிக் கொல்லப்பட்டனர்.

மே 9ம் தேதி வடக்கு சலாஹுத்தின் மாநிலத்தில் உள்ள தார் தார் என்னும் இடத்திற்கு அருகேயுள்ள இராசயன ஆலைமீது நிகழ்ந்த சோதனையில் காவலுக்குட்படுத்தப்பட்ட 200 பேர்களில் இம்மூவரும் அடங்கியிருந்தனர். பென்டகனுடைய தகவலின்படி துருப்புகள் இக் கொலையில் பங்கு பெற்றிருந்தனர் என்பது மட்டுமில்லாமல் இக்கொலையை பற்றி ஏதேனும் கூறினால் அவரும் கொல்லப்படுவார் என்று நான்காம் நபரையும் எச்சரித்திருந்தனர்.

அமெரிக்கப் படைகளுக்கு எதிராக பெருகிவரும் குற்றச் சாட்டுகள், அவையே குற்றங்களாக உள்ள படையடுப்பு ஆக்கிரமிப்பு இவற்றின் அடையாளம்தான்; இதில் கற்பனையும் செய்யமுடியாத வன்முறையும் இழப்புக்களும் ஈராக்கிய மக்கள்பால் சுமத்தப்பட்டுள்ளன.

பெரும்பாலான கொடூரங்கள் அதிகாரபூர்வ ஒப்புதலுக்கு பின்னர்தான் நடக்கின்றன; இவை அமெரிக்க செய்தி ஊடகத்தினால் தகவல் கொடுக்கப்படுவதில்லை, மற்றும் பெயரளவிற்கு அரசியல் எதிர்க்கட்சியாக உள்ள ஜனநாயகக் கட்சி ஆகியவற்றால் எதிர்க்கப்படுவதில்லை. "பயங்கரவாதத்தின் மீதான உலகந்தழுவிய போர்" என்ற போலிப் போர்வையின் பெயரில் நிகழ்த்தப்படும் கொடூரங்கள் பற்றி அமெரிக்க மக்கள் கிட்டத்தட்ட அறியாமையில்தான் உள்ளனர்.

ஈராக்கை கைப்பற்றி நாட்டின் எண்ணெய் வளத்தை அமெரிக்க கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு ஆதரவு கொடுக்கும் கைப்பாவை அரசாங்கத்தை நிறுவுதல் என்ற அமெரிக்க முயற்சி சங்கடத்திற்குள்ளாகிவிட்டது என்பதற்கு பெருகிய முறையில் சான்றுகள் இருக்கும்போது, புஷ் நிர்வாகமோ அதன் பெயரளவு அரசியல் எதிர்ப்பாளர் ஆகிய ஜனநாயகக் கட்சியோ இக்குருதி சிந்துதலை முடிவிற்குக் கொண்டுவரவேண்டும் என்ற விருப்பத்தை காட்டுவதாக எந்தக் குறிப்பும் இல்லை.

இதற்கு மாறாக, ரமடியின்மீது தாக்குதலுக்கான தயாரிப்புக்களும், பாக்தாத் பெரும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதும், நவம்பர் மாத இடைக்கால தேர்தல்களுக்கு முன்பு ஈராக்கிய நிலைமையில் மாற்றம் வந்து விட்டது போல் ஒரு தோற்றத்தை காட்டுவதற்காக அப்பட்டமான வலிமை மற்றும் மக்களை பீதியடையச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள புஷ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதைத்தான் தெரிவிக்கின்றன.

இத்தகயை அரசியல் கணக்குகள் இந்த இராணுவ மூலோபாயத்தில் முக்கிய பங்கை கொண்டுள்ளபோது, இன்னும் அடிப்படையான தளத்தில் அமெரிக்க ஆட்சி உயரடுக்கு ஈராக்கை ஒரு அரைக்காலனித்துவ மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் இருக்கிறது. காங்கிரசிற்குள்ளும் ஜனநாயகக் கட்சிக்குள்ளும் நிகழும் போலி வாத விவாதங்கள் ஆக்கிரமிப்பை முடிக்கலாமா என்பது பற்றி இல்லாமல் அதை எப்படி வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பது பற்றித்தான் உள்ளது.

"போரெதிர்ப்பு" பிரிவு என்ற ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே அழைக்கப்படும் பிரிவில் மாசச்சூசட்சின் செனட்டர், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியும் உள்ளார்; இப்பிரிவு ஈராக்கில் நடக்கும் காலனித்துவ சாகசச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறவில்லை; வீரர்கள் பயன்டுத்தப்படுவது இன்னும் திறமையுடன், குறைந்த அமெரிக்க இறப்புக்களுடன் நடத்தப்பட வேண்டும் என்றுதான் கூறுகிறது. இப்பிரிவின் முக்கிய கூறுபாடு நியூயோர்க் செனட்டரான ஹில்லாரி கிளின்டனில் முழு உருவைப் பெற்றுள்ளது; இவ்வம்மையார் தற்போதைய படைச் செயற்பாடு தொடரவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதுடன் புஷ் நிர்வாகத்துடன் அதிக வேறுபாட்டை கொண்டிருக்கவில்லை.

கிட்டத்தட்ட ஒவ்வொரு முக்கிய செய்தித்தாளும், தாராளவாதம் எனப்படும் நியூ யோர்க் டைம்சில் இருந்து குடியரசுக் கட்சியின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வரை அனைத்தும் கடந்த வாரத் தலையங்கங்களில் அமெரிக்கப் படைகள் திரும்பப்பெற வேண்டும், படைகள் குறைக்கப்படுவதற்கு கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்கத் தக்கவை அல்ல என்றுதான் கூறியுள்ளன.

ஒவ்வொரு கருத்துக் கணிப்பிலும் பிரதிபலிக்கும் போர் எதிர்ப்பு உணர்விற்கு எதிராக வெளிப்படையாக இத்தகைய நிலைப்பாட்டை பொது மக்கள் கருத்தை உருவாக்கும் பொறுப்பை கொண்டிருக்கும் அமைப்புக்களிடேயே இத்தகைய குறிப்பிடத்தக்க ஒருமித்த உணர்விற்கு காரணம் என்ன? நடைமுறையில் புஷ் நிர்வாகம் செயலை நடைமுறைப்படுத்தும் முறை பற்றி வேறுபாடுகள் இருந்தாலும்கூட, அமெரிக்க நிதிய உயரடுக்கு ஈராக்கை வெற்றிகொள்ள வேண்டும் என்பதற்கான முறைகளை தொடரவேண்டும் என்று கொண்டுள்ள பரந்த ஒருமித்த உணர்வைத்தான் இது பிரதிபலிக்கிறது: மனித உயிர்கள் மற்றும் நிதிய இருப்புக்கள் எவ்வளவு செலவானாலும் இது அடையப்பட வேண்டும் என்பது அக்கருத்தின் நிலைப்பாடு ஆகும். அமெரிக்காவில் பன்மடங்கு மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் இலாப நலன்கள் உலக ஆதிக்கத்திற்கு இராணுவ சக்தியை பயன்படுத்துவதுடன் பிணைந்து உள்ளது; அதை அடைவதற்கு அவர்களை பொறுத்தவரையில் எத்தனை பேர் கொலையுண்டாலும் அக்கறை இல்லை.

இந்த நலன்கள் மற்றும் இவற்றை காப்பதற்காக இருக்கும் இரு-கட்சி முறை ஆகியவற்றிற்கு எதிராக அமெரிக்க தொழிலாளர்களை சுயாதீனமான அரசியல் திரள்வை செய்வதன் மூலம்தான் இந்த இழிவான போருக்கு முடிவு காணமுடியும். ஈராக்கில் உள்ள அனைத்து இராணுவப் படைகளும் நிபந்தனையற்ற முறையில் உடனடியாக திரும்பப்பெற வேண்டும், இந்த சட்டவிரோதமான, தூண்டுதலற்று நிகழ்த்தப்பட்ட போருக்கு காரணமானவர்கள் அனைவரும் போர்க்குற்ற விசாரணைக்காக நீதிமன்றங்களில் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளைத்தான், அமெரிக்க இடைக்கால தேர்தல்களில் தான் தலையிடுவதற்கான காரணங்களில் மையத்தானமாக சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்துள்ளது.

Top of page