World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Week one of the World Cup

While millions celebrate, German government presses ahead with its agenda

உலகக் கோப்பையின் முதலாவது வாரம்

மில்லியன் கணக்கில் மக்கள் களித்து மகிழும்போது, ஜேர்மன் அரசாங்கம் தன்னுடைய செயற்திட்டத்தை முன்னெடுக்கின்றது

By Stefan Steinberg
20 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வாரத்தில் ஜேர்மனியில் மில்லியன் கணக்கான கால்பந்து ரசிகர்களும், உலகெங்கிலும் நூறு மில்லியன் கணக்கான மக்களும் கால்பந்து உலககோப்பை அதன் முதல் வெற்றியாளர்கள், தோல்வியுற்றவர்களை தோற்றுவித்ததோடு களிப்பிலும், தூக்கத்திலும் மூழ்கிப்போயினர். பல ஜேர்மனிய நகரங்களிலும் நடக்கும் உலகக் கோப்பையின் சர்வதேச பரிமாணம் சிறிதும் ஐயத்திற்கு இடமில்லாதது ஆகும். பேர்லினிலும் மற்றைய பல முக்கிய ஜேர்மனிய நகரங்களில் இரயில்களும் பேருந்துக்களும், தங்கள் தேசத்தின் குழுக்களின் சட்டைகள், தலையங்கிகள் மற்றும் குல்லாய்களை அணிந்து உலகெங்கிலுமிருந்து வந்த இரகசிகர்கள் கூட்டத்தினால் பல வர்ணக்கடலாக மாறியிருந்தன.

உலகக் கோப்பைக்கான நுழைவுக் கட்டணங்களை மிகப் பெரிய அளவு கொடுத்து வாங்கியுள்ள சிறு சதவிகித ஆதரவாளர்கள் அரங்கங்களுக்குள் தேசிய முகாம்களாக கூடியிருக்கையில், வெளியே பல நாடுகளை சேர்ந்த சாதாரண இரசிகர்கள் ஒன்றாக அமர்ந்து மிகப் பெரிய தொலைக்காட்சி திரைகளில் விளையாட்டுக்களை கண்டு களிக்கின்றனர். தங்கள் வீடுகளில் இருந்து விளையாட்டுக்களை காண்பதைக்காட்டிலும் பொதுவான திரைகளில் ஒன்றாக உட்கார்ந்து பார்த்து மகிழ விரும்புவதை பார்ந்து உலகக் கோப்பை அமைப்பாளர்கள்கூட வியந்துள்ளனர். பேர்லினில் உள்ள பிராண்டன்பேர்க் நுழைவாயிலின் பின்னால் உள்ள ரியர்கார்டனில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்டமான திரைகளுக்கு முன் கிட்டத்தட்ட பெரும்பாலும் இளைஞர்களை கொண்ட 5 இலட்சம் மக்கள் குழுமிக் களிக்கின்றன.

ஜேர்மனிய கொடிகள் (சீனாவில் தயாரிக்கப்பட்ட) ஜேர்மனிய கடைகளில் விற்றுத்தீர்ந்து விட்டன; ஆனால் உலகக் கோப்பையில் பங்கு பெறும் 32 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடிகள் ஒவ்வொன்றும் இப்பொழுது காட்சியில் உள்ளது. பேர்லினில் உள்ள Kreuzberg பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியின் முழு முகப்பும் 32 நாடுகளுடைய பெரிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதே புறநகர்ப்பகுதியில் (கூடியளவு துருக்கி மக்கள் வசிக்கும்) பல வாகனங்களில் ஜேர்மனிய துருக்கி கொடிகள் அலங்கரித்த வண்ணம் உள்ளன. தங்களுடைய ஜேர்மனிய மேல் சட்டைகளுக்கு அன்று எந்த நாடு விளையாடுகிறதோ, உதாரணமாக பிரேசில் என்றால் அதற்கு என்று பறிமாறிக்கொள்ளும் இளைய ஜேர்மனிய இரசிகர்களை பற்றி செய்தித்தாள்கள் தகவல் கொடுக்கின்றன; தங்களுடைய நாட்டுக் குழு விளையாடாதபோது, பல ஜேர்மனிய ஆதரவாளர்கள் விசுவாசத்தை தற்காலிகமாக மாற்றிக் கொள்ளுவதற்கு தயாராக உள்ளனர். வார இறுதியில் கோலோனில் விளையாடிய கானா நாட்டு வீரர்கள் செக் குழுவை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்த போது இந்த தோல்வியடைந்த குழுவிற்கு ஆதரவு கொடுத்தற்காக ஜேர்மனிய இரசிகர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பல நாடுகளில் இருந்து வந்துள்ள இரசிகர்கள் மிக எளிதில் இணைந்து களிப்பான நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருப்பது கால்பந்து திடலில் அதிகரித்தளவில் புறநிலையான ஒருங்கிணைப்பு நிகழ்வுப்போக்கு இருப்பதை பிரதிபலிக்கிறது. போலந்திற்கு எதிராக வெற்றியை கடந்த வாரம் பெற்ற ஜேர்மனிய அணி Miroslav Klose, Lukas Podolski என்னும் இரு வீரர்களை பெரிதும் நம்பியிருந்தது; இவர்கள் போலந்தில் பிறந்தவர்கள், தற்பொழுது ஜேர்மனிய குடிமக்கள் ஆவர். இவ்விருவரும் ஒருவரோடு ஒருவர் களத்தில் தங்கள் தாய் மொழியில் பேசுகின்றனர் போல் தோன்றுகிறது. ஜேர்மனி வெற்றி பெறுவதற்கான கோலை கடைசி நிமிஷத்தில் ஸ்விட்சர்லாந்தில் பிறந்த Oliver Neuville போட்டார்.

கடந்த வாரம் Trinidad & Tobago விற்கும் இங்கிலாந்திற்கும் இடையே நடைபெற்ற விளையாட்டில் அநேகமாக களத்தில் இருந்த வீரர்கள் அனைவருமே இங்கிலாந்து கால்பந்து அணிகளில் ஊதியம் பெறுபவர்கள் ஆவர். Real Madrid க்கு விளையாடும் அணித்தலைவர் டேவிட் பெக்கம் போன்ற வீரர்களை தவிர மற்றைய இங்கிலாந்து வீரர்கள் முதல் பிரிவு அணிகளில் கூடுதலாக ஆடுபவர்கள்; Trinidad & Tobago அணியில் பெரும்பாலானவர்கள் இங்கிலாந்து மூன்று, நான்காம் பிரிவில் ஆடுபவர்கள். இனவெறி, ஆக்கிரோஷம் மற்றும் தேசியவாதம் ஆகியவற்றை கால்பந்து போட்டிக்களை சுற்றி எழுப்ப முயன்ற நவ நாசிசக்காரக்களுக்கு எதிராக கணிசமான மக்கள் எதிர்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1936 பேர்லின் ஒலிம்பிக் போட்டிகளின் தன்மை மீண்டும் வரப்போவதில்லை.

ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் இருந்து சாதாரண கால்பந்து போட்டி ஆதரவாளர்கள் மில்லியன் கணக்கில் உலக கோப்பை விளையாட்டுக்களை பார்ப்பதை தங்களுடைய அன்றாட வேலை வாழ்வில் (அல்லது வேலையின்மை வாழ்வில்) இருந்து தப்பிக்கும் நல்வாய்ப்பு என்று கருதுகையில், ஜேர்மனிய அரசாங்கம், பெருவணிம், செய்தி ஊடகத்தின் பிரிவுகள் சில போன்றவை வேண்டுமென்றே களிப்பு நிகழ்வுகளை பயன்படுத்தி தங்களுடைய சமூக, அரசியல் செயற்திட்டத்தை முன்னெடுத்து செல்ல முயன்றுள்ளன.

ஜேர்மனியின் அதிபரான அங்கேலா மேர்க்கல் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்- CDU) மற்றும் அவருடைய பெருங்கூட்டணி அரசாங்கமும் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், சமூக ஜனநாயக -SPD) ஆகியவை மக்களுடைய கவனத்தை சமூக உண்மைகளில் இருந்து திசை திருப்பவும் தங்களுடைய கொள்கைகளை விரைவில் செயல்படுத்தவும் சிறந்த வாய்ப்பாக உலகக் கோப்பை உள்ளது என்பதை உணர்ந்துள்ளனர்.

அதிகாரபூர்வமாக தேசியவாதத்தை ஊக்குவிக்க ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகக் கோப்பை விளையாட்டுக்கள் அனைத்திலும் குறைந்தது ஒரு ஜேர்மன் மந்திரியாவது பார்வையாளராக இருக்க வேண்டும் என்றும் பேர்லினில் ஜேர்மன் அரசியல்வாதிகளை பல இடங்களுக்கும் இட்டுச் செல்லும் ஆடம்பரக் கார்கள் தேசியக் கொடிகளை அலங்காரமாக வைத்திருக்க வேண்டும் என்றும் மேர்க்கல் உத்திரவிட்டுள்ளார்.

மேர்க்கலுக்கு கால்பந்து போட்டிகளில் அதிக ஆர்வம் இல்லை என்பது நன்கு அறியப்பட்டிருந்தாலும்கூட, கடந்த வாரம் ஜேர்மனிக்கும் போலந்திற்கும் இடையே நடந்த விளையாட்டில் அவர் முக்கிய பார்வையாளராக இருந்தார். ஆடம்பர "விருந்தோம்பல்" அறைகளிலும், பெரிய மனிதர்களுக்கான சொகுசு அறைகளிலும், அரசாங்க மற்றும் மந்திரிசபை அங்கத்தவர்கள் பெருவணிக, நிதிய உயரடுக்கினருடன் தங்களுடைய தொடர் விவாதங்களை நிகழ்த்த கூடியதாக இருந்தது.

ஆனால் கால்பந்துப் போட்டிக் களத்திற்கு வெளியேயும் கூட்டணி ஆட்சி தீவிரமாக செயல்படுகிறது. உலகக் கோப்பை ஜேர்மனியில் தோற்றுவித்திருக்கும் மக்களுடைய இந்த பரந்த ஆரவாரத்தினதும் ''பொது பெருமையினையும்'' ஆட்சி உயரடுக்கின் உறுப்பினர்கள் சிடுமூஞ்சித்தனமாக பாவித்து மக்களது அரசியல் எதிர்ப்பினை பலமிழக்கச்செய்ய பயன்படுத்திக் கொண்டு தங்கள் சொந்த நலன்களை சிறிதும் இரக்கமின்றி முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். Der Spigel சஞ்சிகை அதன் சமீபத்திய பதிப்பில் குறித்துள்ளபடி, "உலகக் கோப்பை பெரும் கூட்டணிக்கு ஒரு அதிருஷ்டகரமான நிகழ்வு ஆகும்."

ஒரு தொடர் தாக்குதல் நடவடிக்கைகள்

உலகக் கோப்பையின் ஆரம்ப வாரத்தில் கூட்டணி அரசாங்கம் ஜேர்மனிய பாராளுமன்றத்தின் இரு பிரிவுகளிலும் மதிப்பு கூட்டப்பட்ட வரியில் (Value Added Tax-VAT) மூன்று சதவிகிதம் கூடுதல் செய்யும் சட்டத்தை இயற்றியுள்ளது. 2007 தொடக்கத்தில் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்தக் கூடுதல் வரிவிதிப்பு, போருக்கு பிந்தைய ஜேர்மன் வரலாற்றில் ஒரு வரிமீதான மிக அதிக விதிப்பாகும்; குறைவூதியம் பெறுவோரையும் வறியவர்களையும் இது கடுமையாக தாக்கும். கடந்த வார வழமையான பாராளுமன்ற செய்தியாளர் கூட்டத்தில், (பொதுவாக இத்தகைய முடிவுகள் விவாதிக்கப்பட்டு வினாக்கள் எழுப்பப்படும்) சிறிதளவே செய்தியாளர்கள் வந்திருந்திருந்ததுடன், விவாதமும் அதிக சாரமுடையதாக இருக்கவில்லை.

ஜேர்மனியின் ஜனாதிபதி ஹோர்ஸ்ட் கோலரும் மேர்க்கலுடன் ஜேர்மனி-போலந்து விளையாட்டை பார்க்க வந்திருந்தார்: உலகக் கோப்பை கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி ஜேர்மனியில் "காத்திரமான நாட்டுப்பற்று" (எத்தகைய கொடூர சொற்றொடர்!) இருப்பதாக தனது ஆர்வத்தைப் புலப்படுத்தினர். அதே நேரத்தில் ஜேர்மன் சமூகநல அரசாங்கத்தின் கூறுபாடுகளை அகற்றுவதில் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் மேர்க்கல் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். ஞாயிறன்று பேர்லினில், Deutschlandfunk என்னும் தேசிய வானொலிக்கு அவர் "ஜேர்மன் சமூகநல அரசுக் கொள்கை திருத்தம்" என்பது இப்பொழுது முன்னுரிமை பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார். "சமூக துறைகளில் விஷயங்களை இப்படியே விட்டுவிடக் கூடாது" என்று குறிப்பிட்ட அவர் போருக்கு பிந்தைய நாட்டின் அரசியலமைப்பு, குறிப்பிட்ட சமூகநல அரசின் சமப்படுத்தும் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என வரையறுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜேர்மன் சுகாதாரக் காப்புறுதி முறையை உடைக்க வேண்டியதை தீவிரப்படுத்தும் வகையில் அரசாங்கத்தை தூண்டுதல்தான் கோலருடைய ஆரம்ப முயற்சி என்று கொள்ளப்படுகிறது; இப்பொழுது இது முதலாளி, தொழிலாளி இருவரும் இணைந்து செலுத்தும் பங்களிப்புக்களை அடிப்படையாக கொண்டுள்ளது. இதற்குப் பதிலாக தனியார் காப்புறுதிமுறை ஒன்றை, வருமானத்தை அடிப்படையாக கொண்டு சுகாதாரக் காப்புறுதி கொடுக்கும் முறைக்கு கோலரின் திட்டம் வகை செய்கிறது. இவருடைய திட்டத்திற்கு ஜேர்மன் நிதி மந்திரி பீர் ஸ்ரைன்புரூக் (SPD) உடனடியாக ஆதரவைக் கொடுத்தார்; மேலும் ஸ்ரைன்புரூக் தேசிய வரவுசெலவுத்திட்டத்தில் இருந்து குறைவூதிய குடும்பக் குழந்தைகளுக்கு காப்புறுதி ஆதரவு நிதியத்தை அளிக்க அரசாங்கம் தயாராக இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். புதிய சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு ஜூலை மாத நடுப்பகுதிவரை தான் இறுதிக்கெடு என்றும் மந்திரிசபை நிர்ணயித்துள்ளது.

துணை ஊதியச் செலவினங்களை குறைக்க வேண்டும் என்றும் கோலர் அழைப்பு விடுத்துள்ளார்; இது ஸ்ரைன்புறூக்கின் மற்றொரு விருப்பமான விடயமாகும். அவருடைய திட்டங்களில் ஒன்றான இன்னும் வணிக வரிகளைக் குறைத்தல் என்பது ஜூன் 25ல் உரிய கூட்டணிக் குழுவிடம் கையளிக்கப்பட உள்ளது.

மேலும் அரசாங்கத்தின் ஹார்ட்ஸ் IV வேலையின்மை நடவடிக்கைகள் பற்றிய மாறுதல்களும் தேவை என்று ஜனாதிபதி கோலர் கோரியுள்ளார். ஹெகாட் ஷ்ரோடரின் தலைமையில் முன்னாள் சமூக ஜனநாயக கட்சி- பசுமைக் கட்சி கூட்டணி முதலில் கொண்டுவந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் அதிகரித்தளவில் தாக்குதலுக்கு உட்பட்டுள்ள நிலையில் இவருடைய கருத்துக்கள் வெளிந்துள்ளன. அரசாங்கம், வணிக வட்டங்களில் உள்ள விமர்சகர்களின் கருத்தின்படி, கருமித்தனமாக உள்ள ஹார்ட்ஸ் IV இனால் வழங்கப்படும் ஆதரவு விகிதம் அதிகமாக உள்ளதால் வேலையற்று இருப்போரை குறைவூதியத் தொழில்களை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாதுள்ளது மற்றும் உதவி பெறுபவர்கள் அதனை தவறாகப் பயன்படுத்தும் வகையில் உள்ளது என்பதும் இவர்கள் வாதமாகும்.

வேலையற்றவர்கள் தங்களுடைய வேலையின்மை உதவித்தொகையை முழுமையாகப் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று சமூக ஜனநாயக கட்சியின் புதிய தலைவரான குர்ட் பெக்கின் சமீபத்திய அவதூறான கருத்துக்களின் பின்னால் வேலையில்லாதோருக்கு எதிரான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. ஜேர்மன் நிறுவனங்கள் இலாபத்தில் கொழிக்கையில், அவற்றின் உயர் நிர்வாகிகள் முன்னோடியில்லாத வகையில் ஊதியங்களை ஈட்டுகையில், பெக் வேலையில்லாதோர் தங்களுடைய உயர்ந்த உதவித்தொகையான 345 யூரோக்களை (US$ 434) மாதமொன்றிற்கு பெறுவதற்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்கிறார்.

எதிர்பார்த்தபடி, பெக்கின் கருத்துக்களை ஒட்டி கடந்த வாரம் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் வேலையற்றோர் கட்டாயப்பணி செய்ய வேண்டும் என்ற அதிகாரபூர்வ வடிவமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஜேர்மனியில் இத்தகைய கட்டாய வேலைத்திட்டம் (Arbeitsdienst) ஹிட்லரின் தேசிய சோசலிஸ்டுகள் காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பொழுது ஜேர்மனியின் சமூகநல அரசாங்கத்தின் கூறுபாடுகளை குறைத்து வேலையில்லாதோரை மிரட்டும் வகையில் குரல் கொடுக்கும் கூட்டத்தில் கோலரும் சேர்ந்துள்ளார்.

ஜேர்மனியின் தொழிற்துறை உயரடுக்கினர் உலகக் கோப்பைக்கு நடுவே மிக அதிக வேலைக் குறைப்புக்களையும் அறிவித்துள்ளது சரியென கருதுகின்றனர். Volkswagen உடைய நிர்வாக அதிகாரியான Horst Neumann கடந்த வார இறுதியில் கார்த் தொழிலில் கிட்டத்தட்ட 30,000 வேலைகள் இழக்கப்படக்கூடும் என்று அறிவித்தார். சமீப காலம்வரை நிறுவனம் 20,000 வேலைகள் இழக்கப்பட நேரிடும் என்றுதான் கூறிவந்தது. இப்பொழுது இன்னும் ஒரு 10,000 வேலைகள் ஆபத்திற்கு உட்பட்டுவிட்டன; தற்போது ஆறு மணித்தியாலமாக இருக்கும் வேலை நேரத்தை அதிகப்படி வேலைநேரத்திற்கான ஊதியம் இல்லாது அதிகரிக்க தொழிலாளர்கள் ஒப்புக் கொண்டால் ஒழிய, Golf மாதிரியை ஜேர்மனியின் முக்கிய ஆலையான Wolfsbusrg இல் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற நேரிடும் என்று நிர்வாகம் கூறியுள்ளது.

உலகக் கோப்பை விளையாட்டுக்கள் பற்றி தொடர்ந்த செய்திகள் வந்த வண்ணம் இருக்கையில், ஊழல்கள் மற்றும் வதந்திகள் பற்றிய செய்திகள் தொலைக்காட்சிகளிலும் மற்றும் செய்தி ஊடகங்களில் வந்துள்ள வகையில், ஜேர்மன் மக்கள், கால்பந்து இரசிகர்கள், இரசிகர்கள் அல்லாதவர்கள் ஆகியோர் சர்வதேச வளர்ச்சிகள், அவற்றில் தங்கள் அரசாங்கத்தின் பங்கு பற்றிய ஆய்வுத் தகவல்கள் கொடுக்கப்படாமல் மறுக்கப்படுகின்றனர். இவை விளையாட்டுச் செய்திகளால் மூழ்கடிக்கப்பட்டுவிடுகின்றன; இது அமெரிக்காவில் சாதாரணமாக இருக்கலாம்; ஆனால் இது ஐரோப்பாவில் ஒப்புமையில் ஒரு புதிய நிகழ்வாகும்

கூட்டணி அரசாங்கம் கடந்த வாரம் எடுத்த வேறு சில நடவடிக்கைகளும் செய்தி ஊடகத்தில் அதிகம் குறிப்பிடப்படவில்லை; இவற்றில் எதியோப்பியா, எரித்திரியா ஆகியவற்றிற்கு ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கைகள் நீட்டிக்கப்படும் என்பது ஒன்றாகும்; இந்த நடவடிக்கையில் ஜேர்மன் பார்வையாளர்களும் அடங்கியுள்ளனர். இவ்விரு ஆபிரிக்க நாடுகளில் நீடிக்கப்பட்ட ஐ.நா. நடவடிக்கைக்கு ஜேர்மனிய ஆதரவு கொடுப்பது என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக கொங்கோவிற்கு படைகளை அனுப்புவது என்ற அரசாங்கத்தின் முடிவை அடுத்து வருவதாகும். இந்நடவடிக்கைகள், சர்வதேச "அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு" ஜேர்மனியும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் எனக் கூறப்படுபவை, உண்மையில் ஜேர்மன் ஏகாதிபத்தியம் உலகளவில் பெருகிய ஆக்கிரோஷத்துடன் வெளிப்படுவதைத்தான் காட்டுகின்றன.

மேர்க்கலும், ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரியான Franz Joseph Jung (CDU) வும், தேசிய நலன்களை நேரடியாக காக்கும் வகையில், ஜேர்மனியின் இராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கப்பட வேண்டிய தேவை தொடர்பான கருத்துக்களை வெளிப்படையாக கூறியுள்ளனர்.

உலகக் கோப்பை மற்றும் ஜேர்மனியில் "காத்திரமான நாட்டுப்பற்று" என்பது வெளிப்பட்டுள்ளது தொடர்பாக ஒரு கடைசிக் கருத்தும் கூறப்படவேண்டும். இத்தகைய தேசிய உணர்வை ஊக்குவிக்கும் அரசியல் சக்திகளில் முன்னணியில் இருப்பது பசுமைக் கட்சியாகும். "காத்திரமான நாட்டுப்பற்றின்" பொருளுரை பசுமைக் கட்சியின் தலைவர் கிளாடியா ரோத் ஜேர்மனியின் மிகத்தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளுள் ஒருவரான பவேரிய மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, உட்துறை மந்திரி குன்தர் பெக்ஸ்ரைனுடன் சேர்ந்து கொண்டு ஈரானிய அணி அதன் தொடக்க ஆட்டத்தில் வந்தபோது பிற்போக்குத்தனமான எதிர்ப்பைக் காட்டியதில் முன்னின்றல் வெளிப்பட்டுள்ளது.

ரோத்திற்கு முன்பு பதவியில் பசுமைக் கட்சியில் தலைவர் என்ற முறையில் இருந்த ஜோஷ்கா பிஷ்ஷர் அண்மையில் அமெரிக்க நாட்டிற்கும் அதன் ஈராக் போர் பற்றியும் ஆற்றிய பணிகளுக்காக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பணி ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும்போது, அவருக்கு பின் பதவிக்கு வந்தவருக்கு ஜேர்மனியில் உள்ள தீவிர வலதுசாரிகளுக்கு பின் அடிபணிந்து நிற்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை; அவர்கள்தாம் மத்திய கிழக்கில் ஒரு புதிய ஏகாதிபத்திய முறையிலான ஆக்கிரமிப்பு வேண்டும் என்று அழைப்புக் கொடுப்பவர்கள் ஆவர்.

Top of page