World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Bush visit to Pakistan will intensify Musharraf's crisis

பாகிஸ்தானுக்கான புஷ்ஷின் விஜயம் முஷாரப்பின் நெருக்கடியை அதிகரிக்கும்

By Peter Symonds
4 March 2006

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், மிகப் பலத்த பாதுகாப்பிற்கிடையேயும், தொடர்ச்சியான அமெரிக்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கிலும் உள்ள நகரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலும் பாகிஸ்தானுக்கு நேற்று இரவு வந்து சேர்ந்தார். ஒரு-நாள் வருகையின் முக்கிய நோக்கம் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் பலமற்ற ஆட்சிக்கு சற்று முட்டுக் கொடுக்கும் வகையில் இருந்தாலும், பாகிஸ்தானின் வலிமையான இராணுவ மனிதர் எதிர்கொண்டுள்ள பெரும்பாலான அரசியல் கொந்தளிப்பிற்கு புஷ் நிர்வாகம்தான் நேரடியாகப் பொறுப்பு ஆகும்.

2001ல் அதன் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" ஆதரவு கொடுக்குமாறு வாஷிங்டனால் கட்டாயப்படுத்தப்பட்டு, அருகில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியை கவிழ்க்கவும் கட்டாயப்படுத்தப்பட்டபின், முஷாரப் அதிகரித்தளவில் பாகிஸ்தான் மக்களின் பரந்த பிரிவினரால் ஓர் அமெரிக்க கையாள் என்றே கருதப்படுகிறார். ஐரோப்பிய, அமெரிக்க செய்தித்தாட்களில் வெளிவந்துள்ள முஸ்லிம்-எதிர்ப்புக் கேலிச்சித்திரங்களுக்கு எதிராக கடந்த மாதம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான மக்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர். அமெரிக்காவிற்கு அடிபணிந்து நிற்பதற்கும், மில்லியன் கணக்கான பாகிஸ்தானியர்களை எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக நெருக்கடி நிலைமைகளை தக்க முறையில் தீர்க்காததற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முஷாரப்பின் ஆட்சி மீது தங்கள் சீற்றத்தைக் காட்டியுள்ளனர்.

புஷ்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நேற்று நிறைய பாகிஸ்தானிய நகரங்களில் வெடித்து எழுந்துள்ளதுடன், இன்று இன்னும் கூடுதலான ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்கட்சி குழுக்கள் இன்றைய தினத்தை "கறுப்பு தினமாக" அறிவித்துள்ளன. புஷ் இறங்கியுள்ள ராவல்பிண்டி விமானதளத்திற்கு அருகே "கொலைகாரனே திரும்பிச் செல்", "அமெரிக்காவிற்கு மரணம்" என்று கூவிக்கொண்டு வந்தவர்களை போலீசார் தடியடிப்பிரயோகம் நடத்தி கலைத்தனர். தெற்கு நகரமான கராச்சியில் கிட்டத்தட்ட 1,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்திற்குள் நுழைய முற்பட்டனர்; அங்கு ஒரு தற்கொலை குண்டுத்தாக்குதல் ஓர் அமெரிக்க அதிகாரியையும் மற்ற மூன்று பேரையும் வியாழனன்று கொன்றது. மூல்டானில் மிகப் பெரிய அணிவகுப்பு ஒன்றில், ஒரு முஸ்லிம் மதகுரு 10,000 பேர் நிரம்பிய கூட்டம் ஒன்றில் புஷ்ஷின் வருகை "பாகிஸ்தானை அடிமைப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது" என்று கூறியதுடன், "அமெரிக்காவிடம் பற்றுக் கொண்டிருப்பதற்கு ஜெனரல் முஷாரப்பிற்கு வெகுமதி அளிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது" என்றும் கூறுனார்.

புஷ்ஷின் வருகையானது, முஷாரப் எதிர்கொண்டிருக்கும் அரசியல் நெருக்கடியின் தீவிரத்தை குறைப்பதற்கு பதிலாக, முஷாரப் இன்னும் கூடுதலான வகையில் அமெரிக்க எதிர்ப்பு சக்திகள் அண்டைப் பகுதியான ஆப்கானிஸ்தானிற்குள் ஊடுருவுதலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆழ்ந்து முன்வைக்கும். வாஷிங்டனுடைய வலியுறுத்தலின் பேரில், பாகிஸ்தானிய இராணுவம் ஏற்கனவே பழங்குடி மக்கள் இருக்கும் ஆப்கான் எல்லையில் 70,000 படையினரை நிறுத்திவைத்துள்ளதுடன், தலிபான் மற்றும் அல்-கொய்தா போாராளிகளை வேட்டையாடி வருகின்றது. இந்தக் கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளும் மற்றும் அமெரிக்க படைகளின் இரகசிய நடவடிக்கைகள் பாகிஸ்தானிற்குள்ளும், மிகப் பரந்த எதிர்ப்பை தோற்றுவித்துள்ளதுடன் முஷாரப்பின்மீது விரோதத்தையும் வளர்த்துள்ளது.

"முஷாரப்பின் பிடி தளருகிறது" என்ற கட்டுரை Asia Times வலைத் தளத்தில் பெப்ருவரி 22ம் தேதி வந்துள்ளது; இதில் கூறுப்படுவதாவது "இஸ்லாமாபாத் நிர்வாகம் ஏற்கனவே வட மேற்கு எல்லை மாகாணத்தில் ஒதுக்கப்பட்டுவிட்டது; அங்கு தெற்கிலும், வடக்கு வஜீரிஸ்தானிலும் தலிபான் தலைமையிலான நிர்வாகம் ஆட்சி நடத்துகிறது; பாகிஸ்தானிய பாதுகாப்பு படைகள் தங்கள் மாவட்ட தலைநகரமான வானா, மிரானஷா ஆகியவற்றை தாண்டிச்செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல், பலூசிஸ்தான் மாகாணமும் ஒரு புதைகுழி போல் ஆகிவிட்டது; பாதுகாப்பு படைகள் தங்கள் இரும்புப் பிடியை எழுச்சியாளர்களிடம் இழந்துவிட்டனர்; எழுச்சியாளர்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி நிற்கிறது. ஒவ்வொரு நாளும் கடுமையான எதிர்ப்பு தாக்குதல்கள் எரிவாயுக் குழாய்களையும், மின்சார இணைப்புக்களையும் இந்த இயற்கை வளங்கள் அதிகமாக உள்ள இடங்களில் அகற்றிவிடுகின்றன; பாகிஸ்தானிய இராணுவம் இதுபற்றி அதிகம் ஏதும் செய்யமுடியவில்லை."

முஷாரப் எழுச்சியாளர்களின் ஊடுருவலை தடுக்க ஏதும் செய்வில்லை என்ற ஆப்கானிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு விடையிறுக்கையில், காபூல்தான் பலூசிஸ்தான் எழுச்சியை தூண்டிவிட உதவி வருகிறது என்ற குற்றச்சாட்டை இஸ்லாமாபாத் முன்வைத்துள்ளது. பாகிஸ்தானிய உள்நாட்டு மந்திரியான Aftab Khan Sherpao செய்தி ஊடகத்திடம் இப் பிரச்சினை புஷ்ஷின் கவனத்திற்கு அவர் வரும்போது முன்வைக்கப்படும் என்றும் "பலூசிஸ்தான் மற்றும் கராச்சியில் உள்ள ஒவ்வொரு பயங்கரவாத அமைப்பும் ஓர் அயல்நாட்டு ஆதரவுப் பின்னணியை இரகசியமாக கொண்டுள்ளது" என்று ஆப்கானிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் நேற்று அவர் கூறினார்.

இத்தகைய கோரிக்கைகளுக்கு புஷ்ஷிடம் எவ்வித வரவேற்பும் இருக்கப் போவதில்லை. புஷ் நிர்வாகம் இருப்புக்கள் நிறைந்த மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில், குறிப்பாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு உதவுவதற்கு முஷாரப்பை ஒரு மிக முக்கிய நண்பராகத்தான் கருதுகிறது. அரசியல் அளவில் முஷாரப்பிற்கு ஆதரவைக் கொடுப்பதற்கு அது எப்பொழுதும் தயாராக இருப்பதுடன், அவருடைய பணிகளுக்காக பொருளாதார உதவிகளையும் கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் வாஷிங்டன் இப்பொழுது இன்னும் நெருக்கமான முறையில் மூலோபாய, பொருளாதார கூட்டை பாகிஸ்தானின் போட்டி நாடான இந்தியாவுடன் கொள்ள விழைகிறது; இந்தியாவை அமெரிக்கா ஒரு பிராந்திய சக்தியை விட கூடுதலான முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்று கருதுகிறது.

தன்னுடைய பங்கிற்கு, முஷாரப் வாஷிங்டனுடைய தொடர்ந்த பாதுகாவலிலுள்ள தன்மையில்தான் தன்னுடைய ஆட்சி நடக்கும் என்பதை நன்கு அறிவார். புஷ்ஷின் வருகைக்கு கட்டியம் கூறும் வகையில் பாகிஸ்தானிய இராணுவம் புதன் கிழமையன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது; அதில் வடக்கு வஜீரிஸ்தானில் ஓர் இராணுவ நடவடிக்கையில் 45 போராளிகள் கொல்லப்பட்டதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் "வெளிநாட்டினர்" என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த செய்தியை பாகிஸ்தானிய ஜனாதிபதி பயன்படுத்தி பாகிஸ்தான் தன்னுடைய பங்கை அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான போரில்" திறம்படச் செய்வதற்கு சான்று எனக் கூறுவார்.

இதற்குப் பதிலாக முஷாரப் ஒன்றும் எதிர்பார்க்கமுடியாது. புஷ் பகிரங்கமாக ஆட்சிக்கு தன்னுடைய ஆதரவைக் கொடுப்பதுடன் முற்றிலும் பாசாக்குத்தனமாக ஜனாநாயகத்திற்கு இவ்வாட்சி எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் பாராட்டுத் தெரிவிப்பார். பாகிஸ்தானில் பெருகி வரும் அரசியல் நெருக்கடிக்கு இடையே, முஷாரப்பின் ஆலோசகர்களும் பாகிஸ்தானின் இராணுவ சார்பான முஸ்லிம் லீக் (Q) உம் 2007ல் வரவிருக்கும் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படக்கூடும் என்று குறிப்பிடுகின்றன. பரந்த வகையில் சர்வாதிகார அதிகாரங்களை கொடுக்கும் முஷாரப் ஜனாதிபதியாகவும், படைத் தளபதியாகவும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் கூறப்படுகின்றன.

புஷ்ஷும் முஷாரப்பும் இருநாடுகளுக்கு இடையேயான வணிக, மூலதனப் பெருக்கம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட உள்ளனர். 2001ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் அமெரிக்க உதவி பெறும் நாடுகளில் முக்கியமானதாக உள்து; 2002ல் இருந்து 2005க்குள் 3 பில்லியன் அமெரிக்க டொலரை நேரடி உதவியாகப் பெற்றுள்ளது; இதில் இராணுவ சார்புடைய உதவி 1 பில்லியன் டொலரும் அடங்கும். இன்னும் கூடுதலான உதவி பாகிஸ்தானிய பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு செலவழிக்கப்பட்ட தொகைகளுக்கு ஈடாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை நோக்கி பார்வை செலுத்துவதால் அழுத்தங்கள்

அமெரிக்கா தற்பொழுது இந்தியாவுடன் கொண்டிருக்கும் உறவு வாஷிங்டனின் குறுகியகால வசதிக்குத்தான் என்று பாகிஸ்தானின் ஆட்சி வட்டங்களின் அச்சத்தை குறைப்பதற்கு புஷ் தன்னால் இயன்ற அளவு சமாதானப்படுத்த முற்படுவார். நிலைமை மாறியவுடன் இந்த ஆதரவும் மாறும் என்று அவர் கூறுவார். இஸ்லாமாபாத்துடன்தான் நீண்டகால உறவை தான் விரும்புவதாக புஷ் நிர்வாகம் பலமுறையும் அறிவித்திருப்பதுடன், பாகிஸ்தானை "ஒரு பெரிய நேட்டோ அங்கத்துவம் இல்லாத நட்பு நாடு" என்றும் கூறியுள்து. எனவே இதற்குச் சிறப்பு இராணுவ உதவி உண்டு என்றும் கூறியுள்ளது. புது டெல்லியை விட்டு நீங்கும்போது பேசிய உரையில், புஷ் பாகிஸ்தானை "மற்றொரு முக்கிய பங்காளி, நட்பு நாடு" என்று விவரித்துள்ளார். ஆனால் இவை ஏதும் இஸ்லாமாபாத்தின் வாஷிங்டன் இப்பொழுது வெளிப்படையாக இந்தியாவை ஆதரிக்கும் தன்மை பற்றிய கவலைகளை குறைக்கப் போவதில்லை.

பாகிஸ்தானுக்கு குறிப்பிடத்தக்க வகையில் எரிச்சல் ஊட்டுவது, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே புதனன்று அறிவிக்கப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் ஆகும். இறுதியில் அமெரிக்க சட்டமன்றம் ஒப்புக் கொண்டபின் நடைமுறைக்கு வரும் இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இந்தியாவை அங்கீகரிக்கப்பட்ட அணுசக்தி திறன் கொண்ட சக்தி என்ற அந்தஸ்திற்கு உயர்த்தும். சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) கட்டுப்பாடுகளை ஏற்பதற்காக, இந்தியாவிற்கு அணுசக்திக்கான எரிபொருள், தொழில்நுட்பம் ஆகியவை, அணுசக்தி பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே கிடைக்கும். அதேபோல் அது தன்னுடைய இராணுவ அணுசக்தி திட்டத்தையும் கைவிடவேண்டியதில்லை. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு பொருள் நலன்கள் கொடுப்பதுடன், இப்பிராந்திய சக்தி என்ற அதன் மதிப்பை பெரிதும் உயர்த்திவிடும்.

இதேபோன்ற ஒப்பந்தத்தை தங்களுடனும் கொள்ளவேண்டும் என்று புஷ்ஷை முஷாரப் கோருவார்; ஆனால் அதற்கு மூக்கறுப்புத்தான் கிடைக்கும். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் செய்தி ஊடகத்திடம் வியாழனன்று, பாகிஸ்தானுடன் அத்தகைய ஒப்பந்தம் தற்பொழுதுள்ள நிலையில் "பெருகியுள்ள அக்கறைகளின்" அடிப்படையில் இயலாது என்று கூறியுள்ளார்; இதற்குப் பொருள் இரகசியமான முறையில் தொழில்நுட்பம் ஈரான், லிபியா, வட கொரியா ஆகியவற்றிற்கு உயர்மட்ட பாகிஸ்தான் அணுசக்தி விஞ்ஞானி A.Q.Khan ஆல் கொடுக்கப்பட்டதுதான். இத்தகைய கருத்துக்கள் இஸ்லாமாபாத்தின் கவலைகளை குறைக்கப்போவதில்லை; அது அமெரிக்க நிலைப்பாடு பாகுபாட்டை காட்டுகின்றது என்றும் அமெரிக்கா இந்தியாவுடனான நட்பிற்கு, பாகிஸ்தானுடனான நட்பைக் காட்டிலும் கூடுதலான அக்கறையை காட்டுகிறது என்பதற்கு சான்று என்றும் கருதுகிறது.

பாகிஸ்தானிய ஜனாதிபதி, புஷ்ஷை இந்தியா காஷ்மீரில் இன்னும் சலுகைகள் கொடுக்க அழுத்தம் கொடுக்குமாறும் கோரக்கூடும். காஷ்மீரின் சமாதான வழிவகை எனக் கூறப்படும் நடைமுறை வந்துள்ளபோதிலும், இவை வெறும் வண்ணப் பூச்சுக்களே அன்றி பல தாசப்தங்களாக போட்டி, அழுத்தம், போர் என்று இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் நிலைக்கு எந்த முடிவையும் கொடுக்கவில்லை. கடந்த அக்டோபரில் பேரழிவு கொடுத்த நில அதிர்ச்சியில் ஒத்துழைப்பு அதிகம் இல்லாத நிலை, இருக்கும் அழுத்தங்கள் பற்றிய தன்மைக்கு கூடுதலான நிரூபணம் ஆகும். வாஷிங்டனுடைய தலையீடு இல்லாவிட்டால் இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகள் சீர்குலைந்துவிடும் என்று பாகிஸ்தான் நம்புகிறது; இதையொட்டி காஷ்மீர் பற்றி எந்த ஒப்பந்தமும் நடைமுறைக்கு கொண்டுவரப்படமுடியவில்லை.

ஆனால், ஒருவருக்கொருவர் நம்பிக்கையையும் சமாதானத்தையும் கொள்ள வேண்டும் என்ற வெற்று முறையீடுகளை தவிர, புஷ் காஷ்மீர் விஷயத்தில் முஷாரப்பிற்கு எந்த ஆதரவு கொடுப்பதும் இயலாது. உண்மையில், அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவிடம் தான் "எல்லை தாண்டி வரும் பயங்கரவாதம்" பிரச்சினை பற்றி முஷாரப்புடன் பேச இருப்பதாக உறுதிகூறியுள்ளார். இந்தியா ஜம்மு-காஷ்மீர் மீது கொண்டுள்ள கட்டுப்பாட்டை எதிர்க்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை கட்டுக்குள் வைக்க கணிசமான நடவடிக்கைகள் எடுத்துள்ள பாகிஸ்தானிய ஆட்சியை பொறுத்தவரையில், இது வாஷிங்டனுடைய இந்திய சார்புத் தன்மைக்கு மற்றொரு அடையாளம் ஆகும்.

புஷ், ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு இன்னும் கூடுதலான ஆதரவைத் தருமாறு பாகிஸ்தானிடம் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது; மேலும் இஸ்லாமாபாத்தும் புது டெல்லியும் ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு பல பில்லிய டாலர் செலவில் எரிவாயுக் குழாய்த்திட்டம் அமைப்பதை கைவிடுமாறும் வலியுறுத்தப்படும். இத்திட்டம் இப்படி முடிவுற்றால் இருநாடுகளுக்குமே பெரிய பாதிப்பாகும். இந்தக் குழாய்த்திட்டம் தங்கள் எரிபொருள் விநியோகத்திற்கு உதவும் என்று பாகிஸ்தான் எதிர்நோக்கியிருந்தது; அது மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த பொருளாதார ஊக்கத்தைக் கொடுத்திருக்கும் என்றும் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கும் என்றும் கருதப்பட்டது.

இத்தகைய தீர்வுகாணப்படாத பிரச்சினைகள் அமெரிக்க-பாகிஸ்தானிய உறவுகளின் அடித்தளத்தில் உள்ள அழுத்தங்கள் ஆகும். புஷ்ஷின் வருகைக்கு 15 நாட்கள் முன்னதாக முஷராப் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் பெய்ஜிங்கிற்கு சென்றார் என்பதும் அங்கு பாகிஸ்தானுடைய பொதுத்தேவைகளுக்கான அணுசக்தித்திட்டத்தின் விரிவாக்கத்திற்கு சீனாவின் உதவியை நாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்பயணத்தின்போது, பாகிஸ்தானிய ஜனாதிபதி 13 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்; ஒரு குறிப்பில் எரிபொருள், பாதுகாப்பு, வணிகம், தொடர்புத்துறை பற்றியும் இருந்தது. பாகிஸ்தானிய இராணுவத்திற்கு முக்கிய தளவாடங்கள் கொடுக்கும் நாடு சீனாவாகும்; இரு நாடுகளும் மிகப்பரந்த அளவில் பொருளாதார உறவுகளை கொண்டுள்ளன. பலூசிஸ்தானில் உள்ள கெளதார் இன் முக்கியமான துறைமுக வசதியை கட்டமைக்க சீனா பெரிதும் ஈடுபட்டுள்ளது.

சீனாவிற்கு முஷாரப் பயணம் செய்திருந்த காலக்கட்டம் தற்செயல் நிகழ்வு அல்ல. பெய்ஜிங்குடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுவதுடன், இப்பயணம் வாஷிங்டனுக்கும் ஒரு வெளிப்படையான தகவலை கொடுத்தது. அமெரிக்கா பாகிஸ்தானுடனான தன்னுடைய பிணைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தினாலோ, கைவிட்டாலோ, இஸ்லாமாபாத்திற்கு பெய்ஜிங்குடனான நெருக்க உறவு என்ற மாற்றீடு கிடைக்கும் என்பதே அது.

முஷாரப் இப்பொழுது அமெரிக்காவுடன் பிணைந்திருந்தாலும்கூட, தன்னுடைய சீனா-எதிர்ப்பு என்னும் நீண்ட கால மூலோபாயத்தில் இந்தியாவுடன் நெருக்கமாகச் செல்லுவது என்பது அமெரிக்காவின் முக்கிய கூறுபாடாக புஷ் நிர்வாகத்தால் கருதப்படும். கணக்கீடுகள் எப்படி இருந்தபோதிலும், வாஷிங்டன் புது டெல்லிக்குக் கொடுக்கும் ஆதரவு தவிர்க்கமுடியாமல் இந்தியாவை ஒரு பிராந்திய சக்தி என்னும் வகையில் வலிமைப்படுத்தும்; தெற்கு ஆசியாவில் முன்னால் இருந்த பலமற்ற சக்தி சமநிலை மாறும்; பாகிஸ்தானை சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வைக்கும்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள நீண்டகால, கடுமையான பூசல் இன்னும் கூடுதலான முறையில் ஆபத்தாக பிணையக்கூடிய வாய்ப்பு வந்துள்ளது என்பதும், 21ம் நூற்றாண்டின் முக்கிய பூகோள-அரசியல் தவறான கோட்டினை ஒழுங்கமைக்கும் ஒன்றாக, அதாவது அமெரிக்க, சீனா இவற்றிற்கிடையே வெடிப்புத்தன்மை கொண்ட மோதலுக்கான வாய்ப்பு உண்டு என்பதும் புலனாகிறது.

See Also:

இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை புஷ் உறுதிசெய்கிறார்

இந்தியாவில் புஷ்ஷிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்: ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயம்

இந்தியாவுடனான முக்கிய மூலோபாய "பங்காண்மையை" தொடர புஷ் தெற்கு ஆசியாவிற்கு பயணம்

ஈரானுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான கூட்டுச் சேரலில் இந்தியாவின் பங்கு, இந்திய - அமெரிக்க உறவுகள் மீதான விவாதத்தை பற்ற வைத்துள்ளது

ஐ.நா பாதுகாப்பு சபைக்கு ஈரான்பற்றி முறையீடு செய்யுமாறு IAEA வை அமெரிக்கா மிரட்டுகிறது

ஒரு "உலக வல்லரசாக'' ஆவதில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு தந்து ஊடாடுகிறது

Top of page