World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: one million protest government offensive against young workers'
conditions

பிரான்ஸ்: இளந் தொழிலாளர்களின் நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்த்து ஒரு மில்லியன் மக்கள் ஆர்ப்பாட்டம்

By Rick Kelly
20 March 2006

Use this version to print | Send this link by email | Email the author | Featured Articles

பிரான்ஸ் முழுவதும் கிட்டத்தட்ட 1,500,000 என்று மதிப்பிடப்பட்ட மக்கள் சனிக்கிழமையன்று கோலிச அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்த" (CPE) சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தினர். இந்த தேசிய நடவடிக்கை தினம் இம்மாதத்தில் இளைய தொழிலாளர்களின் நிலைமைகளை தகர்ப்பதற்கு எதிராக நடத்தப்பட்ட மூன்றாவது வெகுஜன ஆர்ப்பாட்டமாகும்.

நாடு முழுவதும் பெருநகரங்களிலும் பேரூர்களிலும் மொத்தம் 160 ஊர்வலங்கள் நடைபெற்றன. மிகப் பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பாரிசில் நடந்தது, அதில் 350,000 மக்கள் கலந்து கொண்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின் 500 ஆர்ப்பாட்டக்காரர்கள் சோர்போனை நோக்கி (பாரிஸ் பல்கலைக் கழகத்தை நோக்கி) "சோர்போனுக்கு விடுதலை கொடு -- போலீசார் எங்கும் உள்ளனர்; நீதியை எங்கும் காணோம்" என்று கோஷமிட்டுக் கொண்டு, அணிவகுத்துச் சென்றனர். பல்கலைக் கழக வளாகம் முழுவதும் வெள்ளிக் கிழமையில் இருந்து ஒருவரும் செல்ல முடியாதபடி தடுக்கப்பட்டிருந்தது. மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் மார்சேயிலும் (130,000 எதிர்ப்பாளர்கள் பங்கு பெற்றனர்), Bordeaux (55,000), Nantes (45,000 மக்கள்), Toulouse (40,000), மற்றும் Rennes (35,000) இலும் நடைபெற்றன.

நூறாயிரக் கணக்கான உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களும் தெருக்களில் அணிவகுத்ததை ஆர்ப்பாட்டங்கள் காட்டின. கடந்த வியாழனன்று, தேசிய அளவில் 500,000 மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். சனிக்கிழமையன்று நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் பிரெஞ்சு சமூகத்தின் பரந்த அளவினர் சேர்ந்தனர். CPE- எதிரானதில் ஓய்வு பெற்றவர்களும் வயதான தொழிலாளர்களும் இளைஞர்களுடன் சேர்ந்தனர். அனைத்து வயதிலிருத்தும் தொழிலாளர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் இருந்தும், தொழிற்சங்கம் அமைக்கப்பட்ட, அமைக்கப்பட்டிரா பிரிவுகளில் இருந்தும், பிரான்சில் பிறந்தவர்களும், புலம்பெயர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். சிறுவர்கள் உட்பட முழுக் குடும்பங்களும் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.

முதல் வேலை ஒப்பந்தம் வேலைகொடுப்பவர்களுக்கு, 26 வயதிற்குட்பட்ட ஒரு தொழிலாளியை முதல் இரண்டு ஆண்டு பணிக்காலத்தில் எக்காரணமும் இல்லாமல் பணி நீக்கும் அதிகாரத்தை கொடுத்துள்ளது. டொமினிக் டு வில்ப்பன்னுடைய UMP அரசாங்கம் இந்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் மிக விரைவில் இயற்றியது. அரசாங்கத்திற்கு எதிரான விரோதப் போக்கு கடந்த வாரங்களில் பெரிதும் அதிகரித்துள்ளது. CPE ஆனது கூடுதலான தாக்குதல்களை முழுத் தொழிலாள வர்க்கத்தின் மீதும் கொண்டுவருவதற்கான முன்னோடி நடவடிக்கை என்றே பிரான்சின் சாதாரண மக்களால் இன்னும் கருதப்படுகிறது.

பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர்கள், உலக சோசலிச வலைத் தள அறிக்கையான "அரசாங்கத்தின் 'முதல் வேலை ஒப்பந்தத்திற்கு' எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்" என்ற அறிக்கையை வினியோகித்தனர். இது ஆர்ப்பாட்டக்காரர்களால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. CPE -க்கு எதிரான போராட்டத்தின் ஐரோப்பிய மற்றும் சர்வதேச முக்கியத்துவத்தை அறிக்கை வலியுறுத்தியதோடு, எவ்வாறு பிரான்சின் தொழிலாளர்கள், இளைஞர்களை முழு ஆளும் வர்க்கத்திற்கும் எதிராக நிறுத்தியுள்ளது என்பதையும் கூறியது. சிராக்-வில்ப்பன் நிர்வாகம் முழுவதையும் மட்டும் என்றில்லாமல் தொழிற்சங்கங்களின் உத்தியோகப்பூர்வ "இடது" அதிகாரத்துவங்கள், சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளின் "பன்மை இடது" க்கும் எதிரான, ஒரு சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கு அடிப்படையிலான ஒரு சுயாதீனமான போராட்டம் தேவை என WSWS வலியுறுத்தியது.

தொழிலாளர்களின் அணிவகுப்புக்கள் பல தொழிற்சங்கங்களின் பதாகைகளின்கீழ் நடைபெற்றன. சோசலிச, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் குழுக்களும் பாரிசில் அணிவகுப்பின் முன்வரிசைகளில் சென்றன. சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் Francois Hollande, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் Marie-George Buffet ஆகியோரும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிறிய பிரிவினர்தான் பழைய பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்துவ அமைப்புக்களின் கொடிகளையும், பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். பெரும்பாலானவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வந்திருந்தனர்; தங்களுடைய சொந்த அட்டைகளையே ஏந்தியிருந்தனர்: "இளைஞர்களை தூக்கியெறிவதை நிறுத்து", "கசக்கப்பட்ட எலுமிச்சைகளாக எத்தனை காலம் இருப்பது?", "க்ளீனெக்ஸ் ஒப்பந்தம் வேண்டாம்", "பின்புற வழியாக அடிமை உழைப்பு", "ஒப்பந்த வேலையை தூக்கி எறியுங்கள்; உங்கள் இளமையை தூக்கி எறியாதீர்கள்!" என்றெல்லாம் அட்டைகள் இருந்தன. ஓர் அட்டையில் தலைவெட்டுப் பொறி இயந்திரம் (கிலட்டின்) 1789 பிரெஞ்சுப் புரட்சியின் புகழ்பெற்ற முழக்கமான சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் என்பதைச் சிதைப்பது போல் காட்டியது. மிகபிரபலமான பதாகையில் CPE என்பது "அடிமைகளுக்கான ஒப்பந்தம்" (Contrat Pour Esclaves) என்று எழுதப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரும் உற்சாகத்துடன் அணிவகுத்துச் சென்றதுடன் அரசாங்கத்தின் மீது தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தினர், தளர்ந்துவிடாமல் இருப்போம் என்பதையும் காட்டினர். இளைஞர்கள் உற்சாகத்துடன், "வில்ப்பன், உண்மையான மனிதனால் நாங்கள் உன்னுடன் போராடுவோம்", என்றும் "எல்லாம் தகர்ந்துவிடப் போகின்றது" என்றும் கோஷமிட்டனர்.

கணிசமான அளவில் கடந்த ஆண்டு கலவரங்களால் பாதிக்கப்பட்டு இருந்த புறநகர்ப்பகுதிகளில் இருந்து கருப்பர்களும், அரேபிய இளைஞர்களும் எதிர்ப்பில் கலந்து கொண்டனர். CPE ஐ வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவும் நடவடிக்கை என்று சித்தரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை.

மார்ச் 17ம் தேதி Financial Times தகவல் கூறியதாவது: "க்ளீனெக்ஸ் தலைமுறையினராக இருப்பதில் பிரெஞ்சு ஏழைகளும், மாணவர்களும் ஆர்வம் காட்டவில்லை:" மேலும் அரசாங்கத்தின் புறநகர்ப்பகுதியில் உள்ள வறியவர்களுக்கான சீர்திருத்த முயற்சிகளுக்கு பரந்த எதிர்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது. இப்பகுதிகளில் 50 சதவிகித இளைஞர்கள் வேலையின்மையில் உள்ளனர்.

"அந்த மாணவர்கள் இங்கு வந்து எப்படி உள்ளது என்று கண்டால், அவர்கள் இன்னும் எதிர்ப்பைத்தான் தெரிவிப்பர்; ஏனெனில் எதிர்ப்பு ஏன் என்று அவர்களுக்குத் தெரிந்துவிடும்" 26 வயது வேலையற்ற Sema என்பவர், Clichy-sous-Bois ல் வசிப்பவர் பைனான்சியல் டைம்சிற்கு தெரிவித்ததாவது: "CPE நியாயமற்றது. இரண்டு ஆண்டுகள் மிக அதிகமான காலம். என்னைப் போன்றவர்களுக்கு அதிக ஆபத்தைக் கொடுக்கக் கூடியது; எனக்கு வீட்டில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் எவ்வேலையும் இல்லாமல் நான் நிற்க நேரிடலாம். முதலாளிகள் அதைப் பயன்படுத்திக் கொண்டு சில மாதங்களில் வேலையாட்களை பணி நீக்கம் செய்துவிடுவர்."

பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் சனியன்று இறுதியில் ஒரு சிறிய இளைஞர் குழு கற்களையும் மற்றவற்றையும் போலீசாரை நோக்கி வீசியதாக கூறப்படுகிறது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; கடைகள் சேதத்திற்குள்ளாயின. இளைஞர்களை நோக்கி பல சுற்றுக்கள் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன. குறைந்தது 17 பேராவது காயமுற்றனர்; அதிகாரிகள் 167 பேர் கைதுசெய்யப்பட்டதாக கூறியுள்ளனர். போலீசார் Marseille, Rennes, Lille ஆகிய இடங்களில் தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினர்.

அரசாங்கமும் பிரெஞ்சு செய்தி ஊடகத்தின் சில பிரிவுகளும் வன்முறையை சுட்டிக்காட்டி மாணவர்களையும் அவர்களுடைய கோரிக்கைகளையும் இழிவுபடுத்த முற்பட்டுள்ளன; ஆனால் புதிய பாசிசக் குழுக்கள்தான் அத்தகைய பூசல்களைத் தூண்டிவிட்டன என்பதை அவை கருத்திற்கொள்ளவில்லை. கடந்த வெள்ளியன்று, உள்துறை மந்திரியான நிக்கோலா சார்க்கோசி கலவரத்தடுப்பு போலீசாருடன் ஆலோசனை நடத்தியதுடன், செய்தி ஊடகத்திடம் ஒரு சேதமுற்ற போலீ்ஸ் ஹெல்மெட்டையும் காட்டினார். "இவ்வாறு செய்பவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்லர்; குண்டர்கள்" என்று அவர் அறிவித்தார்.

பெருகிவரும் எதிர்ப்பு இயக்கம் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது. ஜனாதிபதி ஜாக் சிராக்கின் ஆதரவைப் பெற்ற பிரதம மந்திரி வில்ப்பன், CPE ஐ திரும்பப் பெற மறுத்துவிட்டார்; "பேச்சு வார்த்தைகள்" நடத்தத் தயார் என்று மட்டும் கூறியுள்ளார். கடந்த வெள்ளியன்று அவர் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களை சந்தித்தார். "நாம் ஒரு பெரும் பூசலின் விளிம்பில், உண்மையான பூசலின் விளிம்பில் நிற்கிறோம் என்பதை அவர் உணர்ந்துள்ளார்" என்று பல்கலைக் கழகங்களின் மாநாட்டுத் துணைத்தலைவரான Yannick Valle, கூட்டம் முடிந்தவுடன் அறிவித்தார். பல்கலைக் கழக தலைவர்கள் CPE ஐ நிறுத்திவைத்து மாணவர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்துமாறு பிரதம மந்திரிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் வேலைநிறுத்தம் கிட்டத்தட்ட பிரான்சின் 84 பல்கலைக் கழகங்களில் 60 சதவிகித்தைப் பாதித்துள்ளது; குறைந்தது 16 பல்கலைக் கழகங்களாவது மாணவர் தடுப்புக்களையொட்டி அடைக்கப்பட்டுள்ளன. பல பல்கலைக் கழகங்களிலும் ஆசிரியர்களும் CPE எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிற்சங்கத் தலைவர்களுடனும் அரசாங்கம் விவாதங்களை நடத்த முற்பட்டுள்ளது. கடந்த வாரம் Jean-Louis Borloo, சமூக ஒழுங்கு அமைச்சர் மற்றும் வேலைத்துறையின் இணை அமைச்சர் Gerard Larcher ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்த தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

CGT (தொழிாளர் பொதுக் கூட்டமைப்பு, FO (தொழிலாளர் சக்தி) உட்பட தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு இயக்கத்தை CPE சட்டம் பற்றிய ஒற்றைப் பிரச்சினையுடன் நிறுத்திக் கொள்ளக் கடுமையாக முயன்றுள்ளன. இந்த மக்கள் விரோதப் போக்கு அரசாங்கத்தின் வலதுசாரித் திட்டத்திற்கு எதிராக இருப்பதை சோசலிச, கம்யூனிச கட்சிகளுக்கு ஆதரவு என்று திசைதிருப்பவும் முற்பட்டுள்ளன. தொழிற்சங்கங்கள் முழு உணர்வுடன் CPE எதிர்ப்பு இயக்கத்தை தனிமைப்படுத்த இலக்கு கொண்டுள்ளன; ஏனெனில் இது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து மீறிவிடக்கூடும் என்று அவை உணர்ந்துள்ளன.

தொழிற்சங்கத் தலைவர்கள் கடந்த சனி மாலையில் பாரிசில் மாணவர்கள் தலைவர்களையும் சந்தித்தனர். அடுத்த வியாழன், மார்ச் 23 நடக்க இருக்கும் ஒருநாள் தேசிய வேலைநிறுத்தத்தில் சேறுமாறு தொழிற்சங்கங்களுக்கு மாணவர்கள் அழைப்பு விடுத்தனர். அன்று உயர்நிலைப் பள்ளி, பல்கலைக்கழக மாணவர்களுடைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடக்க உள்ளன. தொழிற்சங்க தலைவர்கள் இந்த கோரிக்கையை மறுத்துவிட்டனர். ஸ்ராலினிசப் போக்குடைய CGT உடன் சேர்ந்த FSU கல்வித் தொழிலாளர்கள் தொழிற் சங்க அமைப்பின் பிரதிநிதி Laurent Zappi, தொழிற்சங்க ஒற்றுமை காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் மார்ச் 23 வேலைநிறுத்தத்தை ஏற்கவில்லையாதலால் அது முன்னே செல்ல முடியாது என்றும் அறிவித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று, ஸ்ராலினிஸ்டுக்களுடன் கூட்டிலுள்ள CGT இன் தலைவர் Bernard Thibault பிரான்ஸ் 3 என்னும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்: "அவர்கள் நாங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால், நாங்கள் நாடு முழுவதும் ஒரு பொது வேலைநிறுத்தம் என்ற நிலையை நோக்கிச் செல்லுவோம். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது... அரசாங்கம் இருக்கும் நிலைமையின் தீவிரத்தை, தாங்கள் ஏற்படுத்திய விளைவுகளை அறிந்து, இறுதி முடிவெடுக்கும் என்று நம்புகிறேன்."

அடுத்த வியாழன் நடக்கவுள்ள மாணவர் எதிர்ப்பில் CGT சேர மறுத்துள்ளது, Thibault உடைய போலித்தனத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. வில்ப்பன் அரசாங்கம் நன்கு அறிந்துள்ளபடி, தொழிற்சங்கத் தலைவர் அடுத்து பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடும் கருத்து எதையும் கொண்டிருக்கவில்லை.

கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, அனைத்துத் தொழிற் சங்கங்களும் மற்றொரு கூட்டம் திங்களன்று (இன்று) நடத்தப்படவேண்டும் என்றும் மார்ச் 28 அல்லது 30ல் ஒரு ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கான வாய்ப்பு பற்றி விவாதிக்கலாம் என்றும் முடிவெடுத்துள்ளன. இந்த தாமதத்திற்கான காரணம் CPE எதிர்ப்பு இயக்கம் சிதைந்துவிடும் என்ற நம்பிக்கையும், அரசாங்கத்திற்கு பேச்சு வார்த்தைகள் மூலம் சமரசம் காண அவகாசம் கொடுப்பதும், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தவிர்க்க இயலுவதும்தான்.

ஆனால் CPE ஐ கைவிடப்போவதில்லை என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது; தொழிற்சங்கங்களுக்கு சில சலுகைகள் கொடுக்கத் தயாராக இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. செய்தித்தொடர்பாளரான Jean-Francois Cope ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், "அரசாங்கம் CPE ஐ "முன்னேற்றப்படுத்துவதற்கான" பேச்சு வார்த்தைகளுக்கு தயாராக உள்ளது; கதவுகள் திறந்திருக்கின்றன." என்று கூறியுள்ளார்.

See Also:

பிரான்ஸ்: அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

பிரான்ஸ்: இளம் தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் நடத்தும் தாங்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: கலவரத் தடுப்புப் போலீஸ் ஸார்போன்னில் மாணவக் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கியது

CPEக்கு எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டம் தேவை

பிரான்ஸ்: இளைஞர்களின் வேலைநிலைமைகள் அழிப்பிற்கு எதிராக மாணவர்கள் அணிதிரளுகின்றனர்

Top of page