World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian Stalinists take leading role in New Delhi's efforts to contain Nepal crisis

நேபாள நெருக்கடியை கட்டுப்படுத்தும் புது தில்லியின் முயற்சிகளில் முன்னணி பங்கை எடுத்துக்கொண்ட இந்திய ஸ்ராலினிஸ்ட்டுகள்

By Keith Jones
3 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

நேபாளத்தில் முதலாளித்துவ ஆட்சியை தாங்கிப்பிடிக்கும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்டு) தலைமை ஒரு முக்கிய பங்கை வகித்து வருகிறது. கிராமப்புறங்களில் ஒரு மாவோயிச கிளர்ச்சியாலும் காட்மாண்டுவிலும் மற்றும் இதர நகர்ப்புற மையங்களிலும் மன்னர் ஞானேந்திராவின் எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெகுஜன கண்டனங்களாலும் வறுமைபீடித்த இமயமலை அரசு ஆட்டம் கண்டுள்ளது.

CPM அரசியல் குழு உறுப்பினரான சீத்தாராம் யெச்சூரி நேபாளத்திற்கு ஏப்பிரல் 28 வெள்ளிக்கிழமை முதல் மே 1 தேதி திங்கள் வரை நேபாளத்தின் புதிய பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா மற்றும் 2005 பெப்ரவரியில் அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் மன்னர் கைப்பற்றிக் கொண்டதை எதிர்த்து நிற்கும் முதலாளித்துவ கட்சிகளின் கூட்டணியான ஏழு கட்சி கூட்டணி அழைப்பை ஏற்று விஜயம் செய்தார்.

இந்திய நாடாளுமன்ற மேல் சபையின் உறுப்பினரான யெச்சூரி இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ஒரு அரை-உத்தியோகபூர்வ பிரதிநிதியாக நேபாளத்திற்கு பயணம் செய்தார். காட்மாண்டுவிற்கு விமானம் ஏறும் முன்னர், அவர் இந்தியாவின் வெளியுறவு செயலர் சியாம் சரணையும் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்தார். காட்மாண்டுவில் இருந்தபோது அவர் கொய்ராலாவுடனும், இதர SPA தலைவர்களுடனும் நேபாளத்தின் நிதித்தேவைகள் பற்றி விவாதித்தார்.

இந்தியாவின் தூதரை போன்று பேசிய யெச்சூரி, ஒரு நேபாள அரசியல் சட்ட சபை இடம் பெறுவதற்கான தேர்தல், அச்சமோ மிரட்டலோ இல்லாமல் நடப்பதை உறுதி செய்து தரும் வகையில் ஒரு சர்வதேச பார்வையாளர் படையை அனுப்புவதற்கு இந்தியா ஆட்சேபிக்காது என்று தெரிவித்தார். இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள நேபாள மாவோயிஸ்ட்டுக்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்று நேபாள அரசாங்கம் கேட்டுக் கொள்ளுமானால் புதுதில்லி அதை நிறைவேற்றக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா திரும்பியதும் யெச்சூரி வெளியிட்ட அறிவிப்பில் இந்த மாதம் பிற்பகுதியில் கொய்ராலா புதுதில்லிக்கு விஜயம் செய்ய எண்ணங்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

ஸ்ராலினிச CPM-ல் வளர்ந்து வரும் நட்சத்திரமான யெச்சூரியை SPA தலைமையும், கொய்ராலாவும் ஒரு பெரும் மதிப்புக்குரியவராக நடத்தினர். 2002-ல் நாடாளுமன்றத்தை கலைக்க மன்னர் கட்டளையிட்ட பின்னர் சென்ற வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்துநின்று கைதட்டி அவரை வரவேற்றனர் மற்றும் அவர் ஞாயிறன்று பிரதமரின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று கொய்ராலாவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்திய பத்திரிகை செய்திகளின்படி யெச்சூரி சென்ற மாதம் நடுவில் மன்னர்- எதிர்ப்பு இயக்கம் உச்சக்கட்டத்தை எட்டியபோது ஒரு முக்கிய பங்கை வகித்தார். ஒரு நடுவராகவும் மத்தியஸ்தராகவும் SPA-விற்கும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் (மாவோயிஸ்ட்) இடையிலும் மற்றும் மன்னர்-எதிர்ப்பு நேபாள எதிர்க்கட்சிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கு இடையிலும் சேவை செய்து வந்தார்.

யெச்சூரியின் முயற்சிகள், நாடாளுமன்ற அரசாங்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை சிதைந்து விடாது தடுப்பதற்காகவும் சென்ற நவம்பர் மாதம் கூட்டாக செயல்பட்டு அடையப்பெற்ற SPA-விற்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை உறுதி செய்வதை நோக்கமாகக்கொண்டது மற்றும் முடியாட்சியை ஒழித்துக்கட்டுவதற்கான ஒரு அரசியல் நிர்ணய சபையை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் கூட, எதிர்கட்சிகளுக்கு பெரிய சலுகைகளை கொடுப்பதற்கு மன்னரை நிர்பந்திப்பதனால் நேபாளத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ள அரசியல் கொந்தளிப்பை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிறந்த வழி என்று UPA அரசாங்கத்தை வற்புறுத்து வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் முயற்சித்தார்.

தலைமை நேபாள மாவோயிஸ்டுகளும் யெச்சூரியும் 1970-களில் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த காரணத்தினால் அவர்களில் பலர் யெச்சுரிக்கு தெரியும் என்று கூறப்படுகிறது. அது எப்படியிருந்தாலும் 2005 மே மாதத்திலிருந்து, இந்திய புலனாய்வுத்துறை நேபாள மாவோயிஸ்டுகளுடன் CPM பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் சந்திப்பதற்கு, ஏற்பாடு செய்ததாக, கூறப்பட்டதிலிருந்து ஒரு தசாப்தமாக நடைபெற்றுவரும் நேபாள கொரில்லா இயக்கத்திற்கும் CPM தலைமைக்கும் இடையில் கணிசமான அளவிற்கு தொடர்புகள் ஏற்பட்டன.

உத்தியோகபூர்வமான முதலாளித்துவ அரசியலில் தங்களை முழுமையாக ஒன்றிணைத்து மற்றும் தங்களது சொந்த அரசியல் பாதையை பின்தொடர்வதற்கு மாவோயிஸ்ட்டுகளை இந்திய ஸ்ராலினிஸ்டுகள் வற்பறுத்தினர். CPM தலைமையிலான இடது முன்னணி புதிய-தாராளவாத UPA-வை ஆட்சியில் நீட்டித்துக்கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் மேற்கு வங்காளத்தில் இடது முன்னணி அரசாங்கம் முதலீட்டாளர்-சார்பு சீர்திருத்தங்களை தானே திணித்து வருகிறது.

மேற்கு நாட்டு அரசாங்கங்களுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருக்கும் ஒரு சிந்தனையாளர் குழுவான சர்வதேச நெருக்கடி குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்ற அக்டோபர் மாதம் பெயர் குறிப்பிட விரும்பாத ''மூத்த இந்திய கம்யூனிஸ்ட்'' கூறியதாக ஒரு தகவலை வெளியிட்டது: "மாவோயிஸ்டுகள் ஒரு CPM முன் மாதிரியை பின்பற்றுமாறு ஊக்குவிக்கப்படவேண்டும். நாங்கள் அவர்களை ஒரு பொது மன்னிப்பு மற்றும் அரசியலில் பங்கெடுத்துக் கொள்வது என்ற வகையில் அறிவுறுத்தி இணங்க வைக்க முயலுவோம்.....ஒரு நீண்ட போரில் ஊக்குவிக்கப்பட்ட மக்களை அதில் சோர்வடையும் போது அவர்கள் தங்களது கெளரவத்தை இழந்துவிடாது காப்பாற்றுவதற்கு தாங்கள் ''வெற்றி'' பெற்றுவிட்டதாக கூறுகின்ற நிலச்சீர்திருத்தங்கள் போன்ற ஒரு திட்டத்தை அறிவிக்க வேண்டும்."

சென்ற மாதம் நேபாளத்தின் நகர மையத்தில் வெகுஜன கண்டனங்கள் வெடித்தபோது, ஒழுங்குமுறையான அடிப்படையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் முகர்ஜியுடன் யெச்சூரி சந்திப்பையும் தொடர்பையும் கொண்டிருந்தார், அதே நேரத்தில் பகிரங்கமாக, CPM-ன் செயல்திட்டமான ''தற்போதைய அரசியல் நெருக்கடியிலிருந்து நேபாள மக்களை மீட்க உதவும் நடைமுறைக்கு உதவுவதாக'' உயர்வாய் பாராட்டினார்.

இறுதியாக, புதுதில்லியின் ஆதரவை வென்றெடுப்பதிலும் SPA - மாவோயிஸ்டுக்களுக்கு இடையில் ஒரு உடன்பாடு ஏற்படுவதற்கு உருவான தடையை நீக்குவதிலும் நேபாள அரசியல் நிர்ணய சபையை கூட்டுவது மற்றும் நாடாளுமன்ற அரசாங்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான ஒரு நான்கு-கட்ட செயற்திட்டத்தை உருவாக்கியதிலும் இந்திய பத்திரிகைகளும் SPA-வும் யெச்சூரியைப் பாராட்டுகின்றன.

மாவோயிஸ்டுகளை உத்தியோகபூர்வமான நேபாள அரசியலுக்குள் கொண்டு வரவும் இந்திய அரசாங்கத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளச் செய்யவும் தொடர்ந்து வேலை செய்வது தான் யெச்சூரியின் காட்மாண்டு விஜயத்தின் பிரதான நோக்கம் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

மாவோயிட்டுக்கள் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை கைவிடுவதில் ஆர்வத்துடன் இருப்பதாக திரும்பத்திரும்ப சமிக்கை காட்டியுள்ளனர். அவர்கள் சென்ற நவம்பரில் SPA-வுடன் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தில், பல கட்சி போட்டி முறையில்'' ஒன்றிணைந்துக்கொள்ள சம்மதித்தனர் மற்றும் ஐ. நா. அல்லது வெளிநாட்டு மேற்பார்வையின் கீழ் அரசியல் நிர்ணய சபைக்கான ஒரு தேர்தலை நடத்த சம்மதித்தனர். அவர்கள் அமெரிக்காவுடன் நேசமான நட்புறவுகள் கொள்ளவும் உறுதியளித்தனர் அதே நேரத்தில் தீவிர மாற்றம் என்பது ஒருபுறம் இருக்கட்டும், குறிப்பிடத்தக்க சமூக பொருளாதார சீர்திருத்தம் பற்றி எந்த கடப்பாட்டையும் உத்தரவாதம் செய்யவில்லை.

அப்படியிருந்தாலும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் உத்தியோகபூர்வமான முதலாளித்துவ கட்சிகளுக்கும் இடையில் எந்த நிரந்தரமான பங்காண்மைக்கும் பல தடைகள் உள்ளன. அவற்றில் நேபாளத்தின் சாதாரண மக்களது எதிர்பார்ப்புக்கள் எந்த வகையிலும் குறைந்ததல்ல அவர்களது விருப்பங்களான அரசியல் மற்றும் சமூக மாற்றம் கடைசியாக அடையப்பட்டுவிடும் என்றும் வறுமையையும், நிலப்பிரபுத்துவத்தையும் ஜாதி ஒடுக்குமுறையையும் ஒழித்துக்கட்டுவதற்கு உண்மையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

இரண்டு தரப்புமே ஒன்றையொன்று விழிப்புடன் நோக்குகின்றன. ஒரு தரப்பு காட்மாண்டு அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் உருவாகும் அணுகூலங்களை கருதிப்பார்க்கிறது, மற்றொரு தரப்பு கிராமப்புறங்களில் கூடுதலாக அதன் அரசியல்-இராணுவ மேலாதிக்கத்தின் விளைவை கருதிப்பார்க்கிறது.

SPA மற்றும் மாவோயிஸ்ட்டுகள் ஆகிய இரண்டு தரப்பினருமே மன்னர் அல்லது இராணுவம் அல்லது இரண்டுமே, அமெரிக்காவின் ஆதரவோடு அல்லது எதிர்காலத்தில் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்தியா, தங்களது கூட்டணியை சிதைப்பதற்கு முயலக்கூடும் மற்றும் நேபாள கிராமப்புறங்களில் தாக்குதல் நடத்தி மாவோயிச கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு மறுபடியும் முயற்சிக்கக்கூடும் என அஞ்சுகின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் வரை, வாஷிங்டன், மன்னரை வலுவாக ஆதரித்து வந்தது மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான அவரது நிலைப்பாட்டை, உலகம் முழுவதிலும் புஷ் நிர்வாகத்தின் சொந்த பயங்கரவாத-எதிர்ப்போடு ஒப்பிட்டது. புதிய SPA-அரசாங்கம் மாவோயிஸ்ட்டுகளோடு ஒரு சமரசத்திற்கு வருகின்ற முயற்சியை முழுமையாக கண்டிக்காவிட்டாலும், நேபாளத்திலுள்ள, அமெரிக்க தூதர் ஜேம்ஸ் மோரியார்டி சென்ற வியாழன்று வெளியிட்ட அறிவிப்பில், வாஷிங்டன் தொடர்ந்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை, (மாவோயிஸ்ட்) தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்கின்ற வரை "ஒரு பயங்கரவாத அமைப்பு" என்றுதான் வகைப்படுத்தும் என்று குறிப்பிட்டார். நேபாள தொலைக்காட்சியில் உரையாற்றிய மோரியார்டி முதலில், "தங்களது ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு வன்முறையை கைவிடாவிட்டால்'' எந்த அரசியல் நிர்ணயசபை தேர்தலிலும் பங்கெடுத்துக் கொள்ள அதை அனுமதிப்பிற்கு எதிராக SPA-விற்கு ஆலோசனை கூறினார்.

நேபாளத்தில் இந்தியாவின் மூலோபாய அக்கறைகள்

பிரிட்டிஷ் இராஜ்யத்தின் காலனித்துவ தலைமை பிரபுகளை போன்று, இந்தியாவின் ஆளும் செல்வந்தத்தட்டினர் நேபாளம் தங்களது மூலோபாய ஆதிக்க செல்வாக்கெல்லையில் ஓர் அங்கம் என்று கருதுகின்றனர்.

நேபாளத்தில் இந்திய இராணுவம் தலையிடுவது பற்றிய சாத்தியக்கூறு குறித்து சென்ற மாதம் கேள்வி ஒன்றிற்கு பிரதமர் மன்மோகன் சிங் தந்த பதில் ஸ்தாபனத்தின், கருத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது: "நேபாளத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும், இந்தியாவிற்கு, ஒரு கவலை தருவதாகும். நேபாளத்திற்கு சமாதானத்தை நிலைநாட்டும் படைகளை அனுப்புகின்ற ஒரு கட்டத்தை அது இன்னும் அடையவில்லை."

இரண்டு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான பொருளாதார உறவுகள் உள்ளன, நேபாளத்தில், இடம்பெற்றுள்ள வெளிநாட்டு முதலீடுகளில் 50 சதவீதம் இந்தியாவை சேர்ந்தது மற்றும் நேபாளத்தின் வர்த்தகத்தில் 70 சதவீதம் இந்தியாவுடையதாகும்.

நேபாளத்தில் ஆழமாகிக் கொண்டு வரும் அரசியல் நெருக்கடியில் இந்தியாவின் நடவடிக்கை, இரண்டு பிரதான கவலைகளால் உந்தப்பட்டதாகும்.

முதலாவதாக, நேபாளத்தில் மேலாதிக்க பூகோள-அரசியல் சக்தியாக விளங்குவதை உறுதி செய்து கொள்வதில், சீனா அல்லது அமெரிக்கா அந்த இடத்தை பிடித்துக் கொள்ளக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அத்தோடு தொடர்புடைய மற்றொரு கவலை, தனது பாரம்பரிய எதிரியான பாக்கிஸ்தான், நேபாளத்தில் நடைபெறுகின்ற நெருக்கடியை பயன்படுத்தி, காட்மாண்டுவில் அதிக செல்வாக்கை பெறுவதற்கு அனுமதிக்க கூடாது.

சீனா, இந்தியாவை போன்று, நேபாளத்தின் எல்லையில் உள்ளது என்றாலும் அந்த இமயமலை அரசு வரலாற்றுரீதியாகவும் சமகால பொருளாதார மற்றும் போக்குவரத்து தொடர்புகளிலும் வடபகுதியில் உள்ள நாடுகளை விட இந்தியாவோடு அதிக தொடர்புகளை வைத்திருக்கிறது. இந்தியாவுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ளும் தனது ஒட்டுமொத்தக் கொள்கையில் சீனா நேபாளத்தில் இந்தியாவின் செல்வாக்கை மூர்க்கத்தனமாக சவாலுக்குட்படுத்தவில்லை. ஆனால் புதுதில்லி கவலைப்படுகின்ற வகையில் 2005 பெப்ரவரி மாதம் மன்னர் ஞானேந்திரா ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுகின்ற முயற்சியில் இந்தியா தனது இராணுவ உதவியை வெட்டியபோது, மன்னர் ஞானேந்திராவின் சமிக்கைகளுக்கு சீனா பதிலளித்தது.

சீனாவின் கலவரம் மிக்க திபெத் பிராந்தியத்திற்கு அருகாமையில் நேபாளம் இருக்கின்ற காரணத்தினால் வாஷிங்டன் அந்த இமயமலை அரசின் மீது கொண்டிருக்கும் நலன் வளர்ந்து வருகிறது. பாரம்பரிய கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு மாவோயிச கிளர்ச்சிக்கு ஒரு இராணுவ தீர்வு மட்டுமே காணவேண்டும் என்ற மன்னரது முயற்சியை மிதமிஞ்சிய அளவிற்கு ஊக்குவிக்கின்ற வகையில் வாஷிங்டன் செயல்படுகிறது என்று இந்தியா நம்புவதற்கு அதிகமான சான்றுகள் கிடைத்துள்ளன.

குறைந்தபட்சம், புதுதில்லி, சென்ற நவம்பர் மாதம் SPA-விற்கும் மாவோயிஸ்ட்டுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கையை மறைமுகமாக ஆதரித்தது, ஏனென்றால் அந்த உடன்படிக்கை புதுதில்லியில் உருவானது, மற்றும் இந்திய அரசாங்கம் வசதி செய்த கூட்டங்களில் மாவோயிச தலைவர்கள் கலந்து கொண்டனர் மற்றும் பல்வேறு இந்திய அரசியல்வாதிகளும் பங்கெடுத்துக் கொண்டனர்.

என்றாலும், சென்ற மாதம் நேபாளத்தில் நடைபெற்ற அரசியல் கொந்தளிப்பின் மீது UPA அரசாங்கம் எடுத்துக்கொண்ட முதலாவது நடவடிக்கை வாஷிங்டனுடன் நெருக்கமாக இணைந்து கொண்டு அந்த நெருக்கடிக்கு தீர்வுகாண்கின்ற ஒரு முயற்சியாகும். ஏப்பிரல் 21-ல் மன்னரின், அறிவிப்பு எல்லா அதிகாரங்களையும் தன் கரங்களில், குவித்து வைத்துக்கொண்டது, தெளிவான பின்னர், அந்த அறிவிப்பு வெகுஜனக் கண்டனங்களை தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது என்பதால், புதுதில்லி ஒரு நாடாளுமன்ற அரசாங்கத்திற்கு, நிர்வாக அதிகாரத்தை உடனடியாக மாற்றித் தருவதற்கு, மன்னர் சம்மதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

நேபாள நெருக்கடிக்கு புதுதில்லியின் பதில் சேதம் ஏற்படுத்துவதாக இல்லாவிட்டாலும், விரக்தி மனப்பான்மை கெண்டது என்று இந்திய பத்திரிகைகளில் பெரும்பகுதி விமர்சனம் தெரிவித்தன என்றாலும் அதனுடைய கருத்து வாஷிங்டனுடன் மோதிக் கொள்ளக் கூடாது என்ற அச்சத்தை எதிரொலிப்பதாக உள்ளது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. குறிப்பாக, அடுத்த இரண்டு மாதங்கள், இந்திய- அமெரிக்க உறவுகளில் முக்கியத்துவம் நிறைந்தவையாக, இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் இந்திய, அமெரிக்க, அணு உடன்படிக்கை உலக அணுசக்தி நெறிமுறை நிர்வாகத்தில் இந்தியாவிற்கு ஒரு தனி அந்தஸ்த்தை தருவதாக உள்ளது. அந்த உடன்படிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பிற்கு வரவிருக்கிறது.

இந்தியாவின் நடவடிக்கை தொடர்பாக நிலவுகின்ற இரண்டாவது பெரிய மூலோபாய கவலை, நேபாளத்தில் நடைபெறுகின்ற மாவோயிச கிளர்ச்சியின் தாக்கம், இந்தியாவில் மிகச் சிறிய பல்வேறு மாவோயிச/நக்சல்பாரி கொரில்லா இயக்கங்களின் மீதான பாதிப்பாகும்.

ஒரு கால் நூற்றாண்டிற்கு மேற்பட்ட காலத்தில் வீழ்ச்சியை சந்தித்து வந்த நக்சலைட்டுக்கள் இயக்கம், அண்மை ஆண்டுகளில் பெருமளவில் வளர்ந்துள்ளது. இந்திய அரசாங்கம் தந்துள்ள தகவலின்படி இந்தியாவின் 602 நிர்வாக மாவட்டங்களில், கால்பகுதி மாவட்டங்கள், தற்போது நக்சலைட்டுகள் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிளர்ச்சி மறுமலர்ச்சி பெற்றிருப்பதற்கு, பின்னணியாக இருப்பது, கிராமப்புற இந்தியாவின் பெரும் பகுதிகளில் நிலவுகின்ற கடுமையான துயர நிலையையும், குறிப்பாக பழங்குடி பிராந்தியங்களில் 15 ஆண்டுகளுக்கு மேல் நவீன தாராளவாத பொருளாதார மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னர் நிலவுகின்ற சூழ்நிலைகளும்தான் காரணமாகும்.

இந்திய அரசியல் ஸ்தாபனத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கியமான பிரிவு, CPM தலைமையில், வாதிடுவது, என்னவென்றால், நேபாள மாவோயிஸ்ட்டுக்களை அதிகாரபூர்வமான அரசியலில் சேர்த்துக்கொள்ள உதவுகின்ற நடவடிக்கைகள், இந்திய நக்சலைட்டுக்களை கூடுதல் ஒடுக்குமுறை மூலம் ஒடுக்குவதற்கான நடவடிக்கையாக இருக்குமே தவிர அதற்கு முரணாக அமையாது என்பதாகும். அவர்களது நம்பிக்கை என்னவென்றால், நேபாள மாவோயிஸ்ட்டுக்கள், மூலம், குறைந்தபட்சம் சில நக்சலைட்டுக்களுக்கு அழுத்தங்கள் கொடுத்து மற்றும் ஏற்கச் செய்து முந்திய நக்சலைட்டு கிளர்ச்சிகாரர்களைப்போல் உத்தியோகபூர்வமான இந்திய அரசியலில் இணைந்து கொள்ளச் செய்ய முடியும் என்பதுதான்.

அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ்சிற்கு அளித்த ஒரு பேட்டியில் யெச்சூரி, "நேபாள மாவோயிஸ்ட்டுக்களை ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துகொள்ள செய்வதன், மிகப்பெரும் அணுகூலம் இந்தியா தனது சொந்த உள்நாட்டு மாவோயிச பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியும்" என விளக்கம் தந்தார்.

இந்த சூழ்ச்சித்திட்டத்தை இந்தியாவின் அரசியல் நிர்வாகத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. நேபாள மாவோயிஸ்ட்டுக்களின், அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிப்பது, வன்முறைக்கு வெகுமதி அளிப்பதாக அமைந்துவிடும் என்று இந்திய பெருநிறுவன ஊடக பிரிவுகள் வாதிடுகின்றன. ''மாவோயிச பயங்கரவாதம் குறித்து மென்மையாக'' செயல்படுவதாக இந்து பேரினவாத பாரதீய ஜனதாக்கட்சி அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளது. பத்திரிகை செய்திகளின்படி, நேபாளத்தில் SPA - மாவோயிச உடன்படிக்கையை ஆதரிப்பதன் புத்திசாலித்தனம் குறித்து பாதுகாப்பு படைகள், மற்றும் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுக்கிடையில் கடுமையான கருத்து வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது.

அது எப்படி இருந்தாலும், CPM-ன் பங்களிப்பு நேபாள கிளர்ச்சி தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையை விரிவுபடுத்தி விளக்கம் தருகின்ற வகையில் இந்திய அரசியல் நிர்வாகத்தின், ஓர் அங்கமாக ஸ்ராலினிஸ்ட்டுக்கள் செயல்பட்டு வருகிறார்கள் -இந்திய முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசின் பூகோள- அரசியல் அபிலாஷை மற்றும் நலன்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கும், தாங்கிப்பிடிப்பதற்கும் நம்பிக்கையான ஓர் அங்கமாக ஸ்ராலினிஸ்ட்டுகள் செயல்பட்டு வருகின்றனர்.

Top of page