World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Chinese leader's trip to Saudi Arabia and Africa highlights growing resource rivalry

சவுதி அரேபியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் சீனத்தலைவரின் விஜயம் வளங்களுக்கான போட்டி வளர்ந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது

By John Chan
10 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

சென்ற மாதம் வாஷிங்டனுக்கு சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ மேற்கொண்ட பயணம் ஊடகங்களில் கணிசமான அளவிற்கு இடம்பெற்றிருந்தது என்றாலும் அவரது மேலும் நீடிக்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் மீதிப்பகுதிக்கு ஊடகங்கள் எந்த முக்கியத்துவமும் தரவில்லை. அப்படி இருந்தும், சவுதி அரேபியா மற்றும் மூன்று முக்கிய ஆபிரிக்க நாடுகளுக்கு ஹூவின் எஞ்சிய பயணம் வெள்ளை மாளிகையில் அவருக்கு, ஆர்வமற்ற வரவேற்பு அளிக்கப்பட்டதற்கான பிரதான காரணங்களில் ஒன்றை - அது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எண்ணெய் எரிவாயு மற்றும் இதர அரிய வளங்களை கையகப்படுத்துவதில் வளர்ந்து வருகின்ற போட்டியைக் துலக்கமாய் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

உலகின் மிகப்பெரும் எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியாவுடன் சீனாவின் உறவுகளை வளர்த்துக்கொள்வதற்காக, ஏப்ரல் 22 அன்று, தமது மூன்று நாள் விஜயத்தை ஆரம்பிப்பதற்காக ஹீ வாஷிங்டனில் இருந்து, சவுதி அரேபிய தலைநகரான ரியாத்திற்கு வந்து சேர்ந்தார். சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்த சில மாதங்களுக்குப் பின்னர் அந்த வளைகுடா நாட்டிற்கு, ஹூ தனது விஜயத்தை மேற்கொண்டார்-அது இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற மற்றொரு முதலாவது விஜயமாகும், ஏனெனில் சவுதி அரேபியாவுடன் 1990-ல் தான் சீனா இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது.

பல பெரிய உடன்படிக்கைகளில் கையெழுத்திடப்பட்டன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று, மிக பிரமாண்டமான சவுதி எண்ணெய் நிறுவனமான, அராம்கோவிற்கும், (Aramco) சீனாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் நிறுவனமான சைனோபெக்கிற்கும் (Sinopec) இடையில், Empty Quarter என்றழைக்கப்படும் பரவலான பாலைவனப்பகுதியில் கிடைப்பதாக, மதிப்பிடப்பட்டுள்ள ஏராளமான எரிவாயு இருப்புக்களை ஆய்வு செய்து வெளியில் எடுப்பதற்கான ஒப்பந்தமாகும்.

மத்திய கிழக்கின் மிகப்பெரும் எண்ணெய் வளம் சாராத நிறுவனமான சவுதி அடிப்படை தொழில்கள் கழக தலைமை அலுவலங்களுக்கு ஹூ விஜயம் செய்தார். அங்கு அவர் வடகிழக்கு சீனாவில் பெட்ரோலிய இரசாயன தொழில் திட்டங்களில் அந்த சவுதி நிறுவனம் 5.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதற்கு வகைசெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் விவாதித்தார்.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) ரியாத்தில் இருந்து செயல்படும் தலைவரான அப்துல்-ரஹ்மான் அல்-அத்தியா சீனாவிற்கும், GCC நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வதாகவும் ஹூவிற்கு உறுதியளித்தார், அந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியில் கையெழுத்தாகும்.

பெய்ஜிங்கிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான வளர்ந்துவரும் பொருளாதார தொடர்புகள், சீனாவின் பெருகிவரும் எண்ணெய் தேவைகளை அடிப்படையாக கொண்டுள்ளது. 2004-ல் சீனா உலகின் 2-வது பெரிய எண்ணெய் நுகரும் நாடாக விளங்கிய, ஜப்பானையும் மிஞ்சிவிட்டது. மற்றும் சவுதி அரேபியா தற்போது, சீனாவின் மொத்த எண்ணெய் இறக்குமதிகளில் 17 சதவீதத்தை அல்லது ஒரு நாளைக்கு 450,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை தற்போது சப்ளை செய்து வருகிறது.

அதே நேரத்தில் இரண்டு நாடுகளும் மிக கவனமாக நெருக்கமான அரசியல் உறவுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன, ஏனென்றால் அவை இரண்டுமே வாஷிங்டனுடன் எதிர்காலத்தில் மோதுகின்ற நிலை ஏற்படும் என்பதை நன்றாகவே அறிந்திருக்கின்றன. நீண்டகாலமாக அமெரிக்கா, சவுதி மன்னர் ஆட்சியை மத்திய கிழக்கில் தனது முக்கிய அரசியல், நண்பராகவும் பிரதான எண்ணெய் சப்ளையராகவும் கருதி வருகிறது. ஈராக்கிற்கு எதிராக 1991-ல் முதலாவது வளைகுடாப்போரை தொடக்குவதற்கு இந்த வளைகுடா நாட்டை பென்டகன் தனது போரைத் தொடக்குவதற்கான தளமாக பயன்படுத்திக் கொண்டது மற்றும் சவுதி இராணுவத்துடன் நெருக்கமான உறவுகளை நிலைநாட்டி வருகிறது.

அவரது விஜயத்தின்போது ஹூ மன்னரின் மஜ்ஜிலிஸ் ஆஸ்-சூரா அல்லது ஆலோசனை கவுன்சிலில் உரையாற்றும் மிக அபூர்வமான கவுரவம் ஹூவிற்கு தரப்பட்டது, அவர் பிரான்ஸ் ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்கு அடுத்தப்படியாக அந்த மஜ்ஜிலிசில் உரையாற்றிய இரண்டாவது தலைவராவார். மத்திய கிழக்கு இந்த உலகிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது, மற்றும் சீனா சவுதி அரேபியாவுடன் "பணியாற்ற தயாராக இருக்கிறது" என்று அவர் சொன்னார். இந்த பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவவாதத்தின் குழப்பமூட்டும் பங்களிப்பு பற்றி எச்சரிக்கையுடன் கோடிட்டுக்காட்டிய சீனத்தலைவர், "குளிர்யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பின்னர் பல கடுமையான வெப்பமான பிரச்சினைகள், தீர்வு எதுவும் இல்லாமல் விடப்பட்டன மற்றும் தற்போது மோதல்கள் அதிக குழப்பத்தை உண்டாக்கியுள்ளன" என்று அறிவித்தார்.

சவுதியின் மன்னர் ஆட்சியைப் பொறுத்தவரை, பெய்ஜிங்குடன் நெருக்கமான உறவுகளை வைத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள், வாஷிங்டன் மீது, தான் அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் சார்பு நிலையில் செயல்படுவதை தளர்த்த உதவுவதாக கருதுகிறது. சவுதி இளவரசர் வாலித்-பின்-தலால் ஏப்ரல் 23-ல் நியூயோர்க் டைம்சிற்கு பேட்டியளித்தபோது கூறினார்: "நாங்கள் புதிய பாதைகளை திறந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் கிழக்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் சீனா எண்ணெய்யை பயன்படுத்தும் ஒரு பெரிய நாடு, மேற்கிற்கு அப்பால் புதிய வழிகளை தேடியாக வேண்டியது அவசியம்."

சவுதி வர்த்தக சபையின் பொதுச்செயலாளர் ஆன உமர் பலைவா, சவுதி அரேபியாவின் புதிய சீன உறவுகள் பற்றி அமெரிக்கா கலவரம் அடைந்துவிடக்கூடாது என்று கூறினார். "நாங்கள் அமெரிக்காவுடன் கொண்டிருப்பது ஒரு கத்தோலிக்க திருமணம். ஆனால் நாங்கள் முஸ்லீம்களும்கூட - எங்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மனைவி இருக்க முடியும்" என்று அவர் சொன்னார்.

சவுதி அரேபியாவிற்கு ஹூ மேற்கொண்ட சவுதி விஜயம் குறித்து வாஷிங்டன் பகிரங்கமாக விமர்சனங்கள் எதையும் வெளியிடவில்லை. ஆனால் வெள்ளை மாளிகை மத்திய கிழக்கில் ஒரு வரவேற்க இயலாத குறுக்கீடு என்று அந்த விஜயத்தை கருதுகிறது என்பதில், சந்தேகத்திற்கு இடமில்லை. புஷ் நிர்வாகம் ஈரானின் அணுத்திட்டம் தொடர்பாக ஐ. நா. பாதுகாப்பு சபை தண்டனை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று புஷ் நிர்வாகம் வலியுறுத்திக் கொண்டு வருகின்ற நேரத்தில் இந்த விஜயம் நடந்திருக்கிறது. இந்த பிராந்தியத்தில், தனது பொருளாதார மற்றும் மூலோபாய அக்கறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வாஷிங்டனும் சீனாவும் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில், ஈரானுக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு சீனாவின் எதிர்ப்பானது கொந்தளிப்பை மேலும் அதிகரிப்பதற்கான ஒரு வழியாகும்.

ஆபிரிக்க விஜயங்கள்

சவுதி அரேபியாவிலிருந்து ஹூ மொராக்கோ, நைஜீரியா மற்றும் கென்யா ஆகிய ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்தார். 1958-ல் அந்த நாடுதான் ஆபிரிக்காவிலேயே எகிப்திற்கு அடுத்தபடியாக சீனாவை அங்கீகரித்த இரண்டாவது நாடாகும். என்றாலும், அடுத்த இரண்டு நாடுகளுக்கும் அவர் விஜயம் செய்தது பிரதானமாக ஆதார வளங்களை நாடித்தான்.

ஏப்ரல் 26 அன்று அவர் மிக முக்கியமாக நைஜீரியாவிற்கு விஜயம் செய்தார் -அது ஆபிரிக்காவிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, மற்றும் மிகப்பெருமளவிற்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு, அது எண்ணெய் வளம்மிக்க கினியா வளைகுடாப் பகுதியில் நடுநாயகமாக அமைந்திருக்கிறது. அந்த பிராந்தியம் தற்போது அமெரிக்க எண்ணெய் இறக்குமதிகளுக்கு 15சதவீதத்தை வழங்குகிறது மற்றும் அது ஒரு தசாப்தத்திற்குள் 25%-மாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நைஜீரியா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஹூ, ஆபிரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே, "ஒரு மூலோபாய பங்காண்மை ஏற்பாட்டை" செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான்கு எண்ணெய் தோண்டும் உரிமங்களுக்கு ஏலம் எடுப்பதில் சீனாவிற்கு சலுகை அடிப்படையில் உரிமைகளை தருவதற்கான ஒரு பேரத்திற்கு இறுதி வடிவம் தருவதை நோக்கமாக கொண்டது அந்த விஜயம் -அவற்றில் இரண்டு உரிமங்கள் எண்ணெய் வளம்மிக்க, நைஜர் டெல்ட்டா பகுதியிலும், மற்றும் இரண்டு உரிமங்கள் பெரும்பாலும் இன்னும் எண்ணெய் எடுக்கப்படாத சாட் ஏரிபடுகை உரிமங்களும் ஆகும்.

அரசாங்கம் நடத்துகின்ற ஒரு ரயில்வே தடம் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள், மற்றும் அரசு நடத்துகின்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உட்பட நைஜீரியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதில் 4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதற்கு பெய்ஜிங், திட்டமிட்டிருக்கிறது. இரண்டு சீன தொலைத் தகவல் தொடர்பு நிறுவனங்கள் பெய்ஜிங் தரும் 200 மில்லியன் டாலர் கடன்களில் இருந்து கிராமப்புறங்களில் தொலைபேசி சேவைகளை ஏற்படுத்தும்.

ஹூவின் விஜயத்தை ஒட்டி சீன தேசிய எண்ணெய் நிறுவனமான (CNOOC) நைஜீரியாவின் எண்ணெய் கிணறுகளில் ஒரு 45 சதவீத பங்குகளை பெறுவதற்காக 2.7 பில்லியன் டாலர்களை தந்திருக்கிறது. அந்த எண்ணெய் கிணறுகள் 2008-ல் உற்பத்தியை தொடக்கவிருக்கின்றன. சென்ற ஆண்டு சீனாவின் மிகப்பெரிய அரசிற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான பெட்ரோ சீனாவிற்கு, வரும் 5 ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 30,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை வழங்குவதற்கு நைஜீரியா சம்மதித்தது. இந்த பேரம் 800 மில்லியன் டாலர்கள் மதிப்பு உள்ளதாகும்.

கென்யாவில் ஏப்ரல் 27 முதல் 30 வரை மேற்கொண்ட விஜயத்திலும் நிகழ்ச்சி நிரலில் எண்ணெய் முதன்மை இடம்பெற்றிருந்தது. நைரோபியில், சீன ஜனாதிபதி கென்யாவின் கடற்கரை பகுதியை ஒட்டி 6 இடங்களில் CNOOC துரப்பணப் பணிகளுக்கு உரிமங்கள் வழங்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார், சென்ற ஆண்டு கென்யா தனது மின்சார நிலையங்களை மேம்படுத்துவதற்கு சீனா 36.5 மில்லியன் டாலர்கள் உதவி தந்தது.

நைஜீரியாவுடனும், கென்யாவுடனும் சீனா மேற்கொண்ட பேரங்கள் மற்றும் இதர ஆபிரிக்க நாடுகளுடனும் செய்துள்ள பேரம் ஆபிரிக்க கண்டத்தில் எண்ணெய் வளத்தின் மீது, பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு நேரடி அறைகூவல்கள் ஆகும் (ஆபிரிக்காவில் சீனாவின் வளர்ந்து வரும் தலையீடு தொடர்பாக மேற்கு நாடுகளின் கவலை - என்கின்ற கட்டுரையை காண்க)

சீனாவின் பொருளாதார வாரப்பத்திரிகையான China Economic Weekly அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு பதிப்பில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு ஆலோசகர் யாங் பீடாங் சீனாவின் எரிபொருள் இராஜதந்திரத்தை விளக்கினார். சீன வெளியுறவு கொள்கையின் நடுநாயகமாக தற்போது பெய்ஜிங், "வர்த்தக விரிவாக்கம் மற்றும் எரிபொருள், வளங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வளர்ப்பதில் ஊன்றி கவனம் செலுத்தி வருகிறது" என்று அவர் எழுதினார்.

வளம்மிக்க மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களை தருவது சீனாவின் மூலோபாயமாகும். சீனாவிற்கு கனிமப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கைமாறாக இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. தற்போது சீனா உலகின் ஆறாவது மிகப்பெரிய, பொறியியல் ஒப்பந்தக்காரர் ஆகும், சென்ற ஆண்டு அது பெற்ற புதிய ஒப்பந்தங்கள் 24 சதவீதம் உயர்ந்து, 39 பில்லியன் டாலர்களை எட்டியது. சில சந்தர்ப்பங்களில் சீனாவும் சூடான் மற்றும் ஜிம்பாப்வே போன்ற ஆட்சிகளுக்கு அதன் வளங்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு நிதியுதவியும் ஆயுத உதவிகளும் கூட வழங்கியுள்ளது.

ஹூ விஜயத்தின்போது, நைஜீரியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் போலாஜி அக்கின் கேமி வாஷிங்டனுடன் பதட்டங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்கும் விதமாய் கருத்துக்களைக் கூறினார். "மத்திய கிழக்கில், சீனா தலையிடுவதை கலவர உணர்வுடன் அமெரிக்கா பார்க்கிறது, ஆனால் நைஜீரியா தன்னை நாடிவரும் நாடுகளுக்கு இன்னும் இளமை மாறாத நாடாக காட்சியளிக்கிறது, எனவே வாஷிங்டன் அளவிற்கதிகமாக கவலைப்பட வேண்டியதில்லை" என்று அவர் சொன்னார்.

என்றாலும், புஷ் நிர்வாகம், ஆபிரிக்காவில் சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகளை பெருந்தன்மையோடு எடுத்துக்கொள்ளவில்லை. அண்மையில் அது, வெளியிட்டுள்ள தேசிய பாதுகாப்பு மூலோபாயம் சீனா தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள கவலைகளை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது, "வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகிறது, ஆனால் அவர்கள் எப்படியோ ஒரு வகையில் உலகம் முழுவதிலும் எரிபொருள் அளிப்புக்களை 'மூடிவிட' முடியும் என்று செயல்பட்டு வருகின்றனர் அல்லது, சந்தைகளை திறப்பதற்கு பதிலாக ஒரு இழிவுபடுத்தப்பட்ட சகாப்தத்திலிருந்து கடன் வாங்கப்பட்ட வர்த்தகப் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற முடியும் என்று செயல்பட்டு வருகிறது, மற்றும் வளம்மிக்க நாடுகளில் அந்த நாடுகள் உள்நாட்டில் முறைகேடான ஆட்சி நடைபெற்று வருவதையும் பொருட்படுத்தாமல் அல்லது அந்த ஆட்சிகள் வெளிநாடுகளில் முறைகேடாக நடந்து வருவதையும் பொருட்படுத்தாமல், சீனா அந்த ஆட்சிகளை ஆதரித்து வருகிறது."

பல்வேறு ஆபிரிக்க ஆட்சிகளுக்கு சீனா தந்துவரும் ஆதரவு அமெரிக்காவுடனும் இதர பெரிய வல்லரசுகளுடனும் கூர்மையான பதட்டங்களை உருவாக்கி வருகிறது. ஆபிரிக்க நாடுகளுக்கு ஹூவின் விஜயம் தொடங்குவதற்கு முன்னர், மேற்கு நாடுகளின் ஊடகங்கள், சாட் அரசாங்கத்திற்கு எதிராக, சூடான் ஆதரவு பெற்ற புரட்சிக்காரர்கள், ஏப்ரலில் மேற்கொள்ள முயன்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் மிகப்பெரும் பயனை பெறுகின்ற நாடாக, சீனா விளங்கும் என்ற அச்சங்களை வெளியிட்டிருந்தன. தற்போது சீனாவிற்கு சாட் நாட்டின் எண்ணெய் வளத்தில் எந்தப்பங்கும் இல்லை. மற்றும் நடப்பு ஆட்சி தைவானைத்தான் அங்கீகரித்திருக்கிறதே தவிர, சீனாவை அல்ல. கிளர்ச்சியை பிரான்ஸ் நாட்டுத்துருப்புக்கள் ஒடுக்கின.

சீனாவின், "சமாதான எழுச்சி" என்ற இராஜதந்திர பதாகையின் கீழ் ஆபிரிக்காவில் பெய்ஜிங்கின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனா பொருளாதார மறுமலர்ச்சி கண்டுவருவது ஒரு அச்சுறுத்தல் என்று அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் கூட கூறிவந்த குற்றச்சாட்டுக்களுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் ஹூ தலைமையின் கீழ் கொள்கைவழி முன்னெடுத்து வைக்கப்பட்டது. அதன் சாராம்சம் என்னவென்றால், சீனா சர்வதேச அளவில் தனது பொருளாதார நலன்களை அமைதியாக பின்பற்றி வருகின்ற அதேநேரத்தில், பெரிய வல்லரசுகளுடன் மோதல் போக்கை தவிர்க்க சீனா முயன்று வருகிறது.

என்றாலும், இந்த மூலோபாயம், முரண்பாடுகள் நிறைந்ததாகும். உள்நாட்டில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் வேலையில்லாத நிலையினால் உருவான வளர்ந்து வரும் கிளர்ச்சியையும் எதிர்கொண்டு வருகின்ற பெய்ஜிங், பொருளாதார வளர்ச்சியில் வேகம் குறைவதை எந்த வகையிலும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அது உற்பத்தி பெருக்கத்தால் உந்தப்பட்டு வருகிறது. அதற்காக புதிய மூலப்பொருட்களுக்கான வளங்களை பெற்றாக வேண்டும், குறிப்பாக, எண்ணெயையும் புதிய சந்தைகளையும் பெற்றாக வேண்டும். இதனால் ஏற்படுகின்ற, தவிர்க்க முடியாத விளைவு என்னவென்றால், "சமாதான முறையில் எழுச்சி" என்ற அதன் இராஜதந்திரத்திற்கு அப்பாலும் சீனா, அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய வல்லரசுகளுடன், ஆபிரிக்கா மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா மற்றும் இதர பிராந்தியங்களில் நேரடியாக மோதுகின்ற நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.

வாஷிங்டனுக்கு ஹூ விஜயம் செய்தற்கான இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஏப்ரல் 5 அன்று அமெரிக்க செனட் சபை வெளியுறவுகள் குழுவில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கொண்டாலிசா ரைஸ் வளங்களுக்கான பூகோள போட்டி வளர்ந்து கொண்டு வருவதாக, அப்பட்டமாக தனது கருத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார். "அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற முறையில் எரிபொருள் அரசியல் நடத்தப்பட்டு வருகின்ற விதம் என்னை திகைப்படையச் செய்துவிட்டது. நான் வியப்பூட்டும் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். அந்த நெறிபிறழ்வான இராஜதந்திரம் உலகெங்கும் நடைபெற்றுக்கொண்டுள்ளது" என்று அவர் அறிவித்தார்.

"சீனா, இந்தியா போன்ற நாடுகள் எரிபொருள் வளங்களைத்தேடி மிக வேகமாக நடவடிக்கை எடுத்து வருவதால் இதற்கு முன்னர் அவற்றை காணமுடியாத பகுதிகளில் கூட அந்த நாடுகளை பார்க்க முடிகிறது. அந்த நாடுகள் நமது இராஜதந்திரத்திற்கு அறைகூவல்களை விட்டுக்கொண்டிருக்கின்றன" என்று ரைஸ் மேலும் சொன்னார்.

எண்ணெய் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு, ஈராக் மீது, புஷ் நிர்வாகம் படையெடுத்தது மற்றும் இப்போது தனது, பொருளாதார மற்றும் மூலோபாய அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக ஈரானுக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. பூகோள மூலோபாய முக்கியத்துவம் நிறைந்த பிராந்தியங்களில் அமெரிக்காவின் நலன்களுக்கு சீனாவினால் எந்த அறைகூவல்கள் வந்தாலும், அதே மூர்க்கத்தனத்தோடு வாஷிங்டன் பதிலடி கொடுக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

Top of page