World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

In response to intensifying class antagonisms
India's Congress Party revives discredited "Garibi Hatao" slogan

உக்கிரமடைந்துவரும் வர்க்கப்பதட்டங்களுக்கு விடையாக

செல்வாக்கிழந்த "வறுமையை ஒழிப்போம்" முழக்கத்திற்கு இந்தியாவின் காங்கிரஸ் கட்சி புத்துயிரூட்டல்

By Kranti Kumara and Keith Jones
21 October 2006

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம் நவீன தாராளவாத சீர்திருத்தங்களுக்கு ஒரு அரசியல் மூடுதிரையை அது வழங்கும் என்ற நம்பிக்கையில், 1971 நாடாளுமன்ற தேர்தல்களின்போது இந்திரா காந்தியால் முதலில் பிரபலப்படுத்தப்பட்ட "வறுமையை ஒழிப்போம்" முழக்கத்திற்கு புத்துயிரூட்ட முடிவு செய்திருக்கிறது.

குறிப்பாக, UPA அரசாங்கம் பொது உள்கட்டமைப்பு திட்டங்களை தனியாருக்கு தரும் நோக்குடன் ஆட்குறைப்பு தொழிற்சாலைகள் மூடல் போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் சட்டங்களை ரத்துச் செய்துவருகிறது, மின்சாரத்திற்கு சந்தை விலை நிர்ணயத்தை அறிமுகப்படுத்துகிறது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் உடைமையாக்கி வருகிறது மற்றும் சீனாவை முன் மாதிரியாகக் கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை SEZ நிறுவி வருகிறது. அவற்றில் நிறுவப்படும் நிறுவனங்களுக்கு சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வரிவிதிக்கப்படுவதில்லை, வேலைநிறுத்தங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. தொழிலாளர் மற்றும் சுற்றுப்புறச் சூழல் நெறிமுறைகள் கைவிடப்படுகின்றன.

அரசாங்கத்தின் பிரசாரத்தில் நடுநாயகமாக வறுமை ஒழிப்புத்திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்தவுடன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரது முக்கிய அமைச்சர்களும் பெருவர்த்தகர்கள் நடத்திய மாநாடுகளில், நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டனர். அவற்றில், அவர்கள், பொருளாதார சீர்திருத்தத்தின் வேகத்தை முடுக்கிவிடுவதாக உறுதியளித்தனர் (நவீன தாராளவாத சீர்திருத்தத்தை விரைவுபடுத்த பிரதமர் தந்துள்ள உறுதிமொழிகள் - என்ற கட்டுரையைக் காண்க.)

1970-களின் துவக்கத்தில் தன்னை ஒரு சோசலிஸ்ட் என்று காட்டிகொள்வதற்காக இந்திரா காந்தி எடுத்து வைத்த முழக்கத்தை தற்போது காங்கிரஸ் கட்சி தலைமை புத்துயிர் கொடுத்திருப்பது எதற்காக என்ற சந்தேகங்கள் வர்த்தக வட்டாரங்களில் வரக்கூடாது என்பதற்காக, அரசாங்கப் பேச்சாளர் வெளியிட்ட அறிவிப்பில்,

"வறுமையை ஒழிப்போம்" முதல் அம்சமாக திருத்தப்பட்ட "இருபது அம்சத்திட்டம்", "பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான குறிப்புடன், இந்திய பொருளாதாரத்தை தாராள மயமாக்குதல் மற்றும் பூகோளமயமாக்குதலுடன் தற்காலத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

திருத்தப்பட்ட 2006 இருபது -அம்சத் திட்டம் 2007 ஏப்ரல் மாதம் முதல் செயல்படத்துவங்கும், அது பற்றி இந்துஸ்த்தான் டைம்ஸ் குறிப்பிடும் போது "பஞ்சாப் உத்தராஞ்சல் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்ட சபைக்கான தேர்தல் பிரசாரம் நடக்கின்ற காலகட்டத்தில் ஏறத்தாழ தற்செயல் இணைவாக இந்த புதிய இருபதுஅம்சத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது" இந்தியாவின் மிகப்பெரிய மாநில த்தரபிரதேசத்தில் இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 15 சதவீதம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் காங்கிரஸ் கட்சி "வறுமையை ஒழிப்போம் முழக்கத்திற்கு புத்துயிரூட்டியிருப்பது தேர்தல் கணிப்புகளை மட்டுமே கொண்ட ஒரு விவகாரமல்ல.

புதிய தாராளவாத சமூக பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்திக்கொண்டும், ராணுவ செலவினங்களை பாரியளவிற்கு உயர்த்தியும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாய பங்காண்மையை வடிவமைக்க விரும்பிக்கொண்டு காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியானது சாதாரண மனிதன் மேல் அக்கறை கொண்ட ஒரு கட்சியாக எச்சரிக்கையுடன் கூடிய மற்றும் அதிகரித்த அளவில் ஏற்றுக்கொள்ளவியலாத சமநிலைபேணும் செயலில் சம்பந்தப்பட்டுள்ளது.

நவீன தாராளவாத பொருளாதார திட்டங்களின் விளைவாக இந்திய மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள், பெருகி வந்த வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரத்தில் பாதுகாப்பற்ற நிலை ஆகியவை மீதான பொதுமக்களிடையே நிலவிய அதிருப்திக்கு வேண்டுகோள் விடுத்த பின்னர், 2004 பொதுத் தேர்தல்களில் அதுவே வியக்கும் வண்ணம் காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சி அதிகாரத்திற்கு உந்தித்தள்ளப்பட்டது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி "மனிதநேயத்தோடு சீர்திருத்தங்கள்" என்று தந்த உறுதிமொழி மிகக் கொடூரமான ஒரு மோசடியாக அமைந்துவிட்டது. ஆட்சிக்கு வந்த பின்னர் UPA அரசாங்கம், பின்பற்றி வரும், பொருளாதார மற்றும் பூகோள அரசியல் செயல்திட்டம், இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனாதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் செயல்படுத்தி வந்த அதே திட்டங்களாகும்.

அண்மை வாரங்களில் மத்திய, மாநில அரசாங்கங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க பெருவர்த்தக நிறுவனங்களுக்கு சொற்ப விலையில் அல்லது இலவசமாக நிலத்தை ஒதுக்கீடு செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளிடமிருந்து அவர்கள் விளைநிலங்களை கையகப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் திட்டங்கள் சமுதாய கிளர்ச்சியை உருவாக்கிவிட்டன.

நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிலைநாட்டுவதற்காக, இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அணியை நம்பியிருக்கின்ற UPA, அவர்களை திருப்திபடுத்துவதற்காக அண்மையில் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை (NREGP) துவக்கியது. அதன்படி அரசாங்கம் இந்தியாவிலுள்ள 200 ஏழ்மை நிறைந்த மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்களுக்கு ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திலிருந்தும் ஒரு உறுப்பினருக்கு கட்டாயமாக சட்டப்படி வேலை தரும். ஊதிய விகிதங்கள் வேறுபடலாம், பொதுவாக ஒரு நாளைக்கு 60 ரூபாய் (1.33 டாலர்) ஊதியம் கிடைக்கும்.

இந்த நடவடிக்கை கிராமப்புற இந்திய மக்கள் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும்போது தரப்படுகின்ற பேண்டு எய்டு போன்ற புண்ணுக்கு புணுகு பூச்சு நடவடிக்கைதான். 1998-க்கும் 2003-க்கும் இடைப்பட்ட காலத்தில் கடன் தொல்லைகளால் தாங்க முடியாத வட்டி செலுத்த வேண்டிய கட்டாயத்தினால் 100,000-திற்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்டனர் என்று கடந்த மே மாதம் UPA விவசாய அமைச்சர் ஒப்புக்கொண்டார். இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேராக உள்ள கிராமப்புற இந்தியர்களில் 5-ல் 4 சதவீதம் பேர் 1989-க்கும் 1990-க்கும் இடைப்பட்ட காலத்தில் நபர்வாரி நுகர்வில் வீழ்ச்சி கண்டு வாழ்க்கைத் தரத்தில் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆனால் பெருகிவரும் அரசாங்க பற்றாக்குறைகளால் வேலைவாய்ப்பு உத்தரவாதங்களால் ஏற்படும் இந்த குறைந்தபட்ச சமூக செலவினங்களையும், இதர ஏழைகளுக்கு சாதகமான முயற்சிகளுக்கு ஆகும் செலவினங்களையும் கூட நீடித்து செயல்படுத்த முடியாது என்பதை நிதி அமைச்சக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் பெருவர்த்தக நிறுவனங்கள், நவீனதாராளவாத சீர்திருத்தத்தின் வேகத்தை முடுக்கி விடவேண்டும் என்று கோரி வருகின்றன.

அதைத்தான் காங்கிரஸ் தலைமையிலான UPA செயல்படுத்த ஆர்வத்துடன் உள்ளது. 2009-ல் அடுத்த பொதுத் தேர்தல்கள் நடப்பதற்குரிய முன்னேற்பாடுகளால் அரசாங்க செயல்திட்டம் மேலாதிக்கம் செய்யப்படுவதற்கு முன்னர், UPA அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சகங்களை தங்கள் பொறுப்பில் வைத்திருக்கும் நவீன தாராளவாத சிந்தனையாளர்களும் மன்மோகன் சிங்கும் அரசாங்கத்தின் செயல்திட்டத்தில் பெரும் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு 12 முதல் 15 மாதகால "பலகணி"யை தாங்கள் கொள்வதற்கு திட்டமிட்டு வருகின்றனர்.

எனவேதான் இந்தியாவில் உழைக்கும் மக்கள் கண்களில் மண் தூவுகின்ற ஒரு தெளிவான முயற்சி தான் வறுமையை ஒழிப்போம் முழக்கத்திற்கு புத்துயிர் தரப்பட்டிருக்கின்ற நடவடிக்கையாகும். பெருவர்த்தக நிறுவனங்களின் செயல்திட்டங்களை எவ்வளவு விசுவாசமாக UPA அரசாங்கம் செயல்படுத்துகிறதோ அதே வேகத்தோடு ஏழைகளுக்கு ஆதரவான வாய்வீச்சுத் திட்டங்களிலும் ஈடுபடுவார்கள்.

காங்கிரஸ் வரலாற்று அடிப்படையில், இந்திய தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய ஆளுங்கட்சியாகும். இந்திய முதலாளித்துவத்தின் செயல்திட்டத்திற்கு இந்திய மக்களை கட்டுப்படுத்துவதற்காக, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சோசலிச வாய்வீச்சுக்களை பயன்படுத்துவதுதான் அக்கட்சியின் பிரதான பயன்பாடாகும்.

ஆனால் இந்த மோசடியை நிலைநாட்டுவது பெருமளவில் சங்கடத்திற்கு உள்ளாகி வருகிறது. ஸ்ராலினிச இடதுசாரி அணி தருகின்ற ஆதரவை நம்பி செயல்பட வேண்டியிருக்கிறது இந்து வலதுசாரி அணிக்கு எதிராக மதச்சார்பற்ற கொள்கைக்கு ஒரு அரணாக செயல்படும் காங்கிரசை ஆதரிப்பதாக, ஸ்ராலினிஸ்ட்டுகள் தலைமையிலான இடதுசாரி முன்னணி கூறுகிறது. மேலும் பொதுமக்களது நிர்பந்தங்களுக்கு BJP-யை விட காங்கிரஸ் அதிகம் வளைந்து கொடுக்கிறது என்றும் இடதுசாரிகள் கூறுகின்றனர்.

"மக்களது கட்சி" என்ற தனது செல்வாக்கு சிதைந்து கொண்டு வருவதால் காங்கிரஸ் தலைமை மிகத்தீவிரமாக இந்திரா காந்தியின் வறுமையை ஒழிப்போம் முழக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவது அந்த்தலைமைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியையும், அரசியல் திவாலையும் எடுத்துக்காட்டுகிறது.

"35 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பின்னரும் வறுமையை ஒழிக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்கின்ற வகையில் வறுமை ஒழிப்பு முழக்கத்திற்கு புத்துயிரூட்ட காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் காணப்படும் உள்ளார்ந்த ஆபத்துக்களை அந்தத் தலைவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை" என்று டெக்கான் கிரானிக்கிள் எழுதியுள்ளது.

மேலும், இந்திரா காந்தி மேற்கொண்ட வறுமை ஒழிப்பு முழக்கமும் அத்துடன் இணைந்த சில வரையறுக்கப்பட்ட சீர்திருத்தங்களும் துவக்கத்தில் அவருக்கு அரசியல் ஆதாயத்தை தந்தது. ஆனால் இந்தியாவில் நிலவி வந்த வர்க்க பகை உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் முழு தோல்வி ஏற்பட்டது. வறுமையை ஒழிப்போம் என்ற பதாகையின்கீழ் இந்திரா காந்தி ஒரு "இடதுசாரி திருப்பத்தை" ஏற்படுத்தினாலும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் ரயில்வே தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்தை முறியடிப்பதற்காக இந்தியாவின் பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தினார். அடுத்த ஆண்டு அவசரநிலை பிரகடணத்தின் கீழ் இந்திய அரசியல் சட்ட செயல்பாட்டையே தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

வறுமை ஒழிப்போமிலிருந்து எதேச்சதிகார ஆட்சிக்கு

1960-களின் பிற்பகுதியில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வந்த சுதந்திரத்திற்கு பிந்திய தேசிய பொருளாதார வளர்ச்சித் திட்டத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் இடையில் எழுச்சி தோன்றியது. விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். சுதந்திரக் கட்சி மூலமும் (BJP-யின் முன்னோடியான) ஜனசங்கத்தின் மூலமும் இந்தியாவின் பெருவர்த்தக மற்றும் பழைய நிலபிரபுத்துவ - சமஸ்தான செல்வந்தத்தட்டினர் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஒரு கூர்மையான வலதுசாரி திருப்பத்திற்கு உந்துதல் கொடுக்க முயன்றனர்.

பரவலாக நிலவிய வறுமை மற்றும் சமுதாய துன்பங்களின் காரணமாகவும், பொதுமக்கள் சமூக சீர்திருத்தங்களை வற்புறுத்தி வந்ததாலும் 1967 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்விகளை சந்தித்தது. இந்த தோல்விகளின் விளைவாக காங்கிரஸ் கட்சிக்குள் ஆதிக்க போட்டி நிலவியது.

இந்தியாவின் ஏழைமக்களது பாதுகாவலர் என்று காட்டிக் கொண்டதன் மூலமும் சுதந்திரப் போராட்டத்தில் அதன் தொடர்பின் காரணமாகவும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சூழ்ச்சியாய்க் கையாளும் அதன் திறத்தாலும் வளர்ந்துவரும் சமூக அதிருப்தியை கட்டுப்படுத்தும் சிறந்த சாதனமாக இந்திய செல்வந்தத்தட்டை நம்பச்செய்வதன்மூலமும் 1969-க்கும் 1971-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திரா காந்தி ஊழல் மலிந்த மற்றும் அதிகரித்தளவில் பழைமைவாத பழைய தலைமையிலிருந்து கட்சித்தலைமையைக் கைப்பற்றுவதில் காங்கிரசிற்குள் ஒரு கிளர்ச்சிக்குழுவிற்கு தலைமை வகிக்க முடிந்தது.

இந்த காலகட்டத்தில் இந்திரா காந்தியும் அவரது ஆலோசகர்களும் வறுமையை ஒழிப்போம் முழக்கத்தை உருவாக்கி அதைப்பயன்படுத்தி 1971 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மகத்தான வெற்றியை பெற்றுத்தந்தனர்.

அந்த முழக்கம் வெறும் பிரசாரம் மட்டுமல்ல. வங்கிகள் அரசுடைமை, ஏழைகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு, மன்னர் மானிய ஒழிப்பு போன்ற பல்வேறு பொதுமக்கள் விரும்பும் சீர்திருத்தங்களை காந்தி வரிசையாக அறிமுகப்படுத்தினார்..

ஆனால் பணக்காரர்களுக்கு வரிவிதித்து வருமானம் விநியோக நடவடிக்கை மூலம் வறுமை எதிர்ப்பு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இந்திரா காந்தி பற்றாக்குறை நிதி நடவடிக்கை மூலம் பணப்புழக்கத்தை அதிகரித்தார். இதை வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், காங்கிரஸ் கட்சியின் பணக்கார புரவலர்களை பகைத்துக்கொள்ளாதிருக்க முயற்சித்தார், அதேவேளை இந்தியாவின் உழைக்கும் மக்களை அமைதிப்படுத்துவதற்காக முயன்றார்.

வாங்கும் சக்தி ஏழைமக்களுக்கு மாற்றப்பட்டது அதற்கு ஏற்ப உணவு தானியங்கள் அதிகரிக்கப்படாதது, விலை உயர்வு பணவீக்கத்திற்கு இட்டுச்சென்றது. வியாபாரிகள் தானியங்களை பதுக்கினர். அதற்குப் பின்னர் 1973-ல் உலக எண்ணெய் விலை அதிர்ச்சியால் இந்திய பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

1974-ல், இந்திரா காந்தி சர்வதேச நிதியத்தின் (IMF) அவசர உதவியை நாட நிர்பந்திக்கப்பட்டார்.

ஆக, 1974-1975-ல் இந்திய பொருளாதாரத்தில் மிகக்கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. அதன்மூலம் வர்க்க போராட்டங்கள் வெடித்து சிதறின. அந்தப் போராட்டங்கள் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பின. வேலைநிறுத்த அலைகள் இறுதியாக, ஒரு வாரம் வரை நடைபெற்ற நாடு தழுவிய ரயில்வே வேலை நிறுத்தத்தில் முடிந்தது. அதில் பத்து லடசத்திற்கு மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இராணுவத்தை திரட்டி இந்திரா காந்தி அந்த வேலைநிறுத்தத்தை முறியடிக்க முடிந்தது, என்றாலும் அவரது அரசாங்கத்திற்கு இடதுசாரிகளும் வலதுசாரிகளும் தொடர்ந்து சவால்களை விடுத்துக் கொண்டிருந்தனர். 1975-ல் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு அவர் அவசரநிலை பிரகடணத்தை வெளியிட்டார். அதன் மூலம் அடிப்படை ஜனநாயக உரிமைகள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டன. தொழிலாளர் வர்க்கம் மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த 100,000-திற்கு மேற்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

IMF உதவியை நாடி மற்றும் எதேச்சதிகார ஆட்சியை கொண்டு வந்த பின்னர் இந்திரா காந்தியும் காங்கிரஸ் கட்சி தலைமையும் வறுமையை ஒழிப்போம் முழக்கத்தை கைவிடுவதே நாகரீகமானது என்று கருதி செயல்பட்டனர்.

30 ஆண்டுகளுக்கு பின்னர், செல்வாக்கிழந்துவிட்ட ஜனரஞ்சக பிரச்சார முழக்கத்தை புதுப்பிப்பதன் மூலம் UPA அரசாங்கம் வர்க்க பகை உணர்வுகள் வெடித்து சிதறி இருப்பதை கட்டுப்படுத்த இயலாது என்று உறுதியாக கூறமுடியும்.