World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

IAEA exposes USIAEA exposes US committee's lies on Iran's nuclear programs

ஈரானின் அணுசக்தித்திட்டங்கள் பற்றிய அமெரிக்க குழுவின் பொய்களை IAEA அம்பலப்படுத்துகிறது

By Peter Symonds
19 September 2006

Use this version to print | Send this link by email | Email the author

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஐ.நா.பொது மன்றத்தில் தோன்றி சதாம் ஹுசைனின் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய அப்பட்டமான பொய்களின் அடிப்படையில் ஈராக்கிற்கு எதிராக போர் தொடுப்பதற்கு ஐ.நா. ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரினார். இன்று ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் எனக் கோரி ஐ.நா.விற்கு புஷ் செல்லுகையில், அமெரிக்கா தெஹ்ரானிடம் அணுவாயுதத்திட்டம் உள்ளது எனக் கூறப்படுபவை கட்டுக்கதைகள் என அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஐ.நா.வின் அணுசக்தி மேற்பார்வை அமைப்பான சர்வதேச அணு சக்தி அமைப்பு (International Atomic Energy Agency -IAEA), கடந்த வாரம் ஒரு அமெரிக்க சட்ட மன்றக் குழு "ஈரானை ஒரு மூலோபாய அச்சுறுத்தலாக அறிதல்: அமெரிக்காவிற்கு உளவுத்துறை வகையில் ஒரு சவால்" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 23 வெளியிட்டுள்ள அறிக்கையில் அடங்கியுள்ள "பிழையான, தவறான திசைக்கு இட்டுச் செல்லும் ஆதாரமற்ற தகவல்" பற்றி கடுமையான மறுப்பை வெளியிட்டுள்ளது.

குடியரசுக் கட்சி தலைமையிலான மன்ற உளவுத்துறைக் குழு (HIC) கொடுத்துள்ள அறிக்கை ஈரானுக்கு எதிரான தண்டிக்கும் நடவடிக்கைக்கான புஷ் நிர்வாகத்தின் தயாரிப்பை நியாயப்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட குரூரமான பிரச்சார பயிற்சியை தவிர வேறொன்றுமில்லை. இதன் முக்கிய நோக்கம் அமெரிக்க உளவு அமைப்புக்கள் "உளவுத்துறையில் இருக்கும் வெற்றிடங்களை" நிரப்ப, குறிப்பாக ஈரானிய ஆயுதங்கள் திட்டத்தை பற்றி இன்னும் அதிக அளவில் முயற்சிகள் செய்ய வேண்டும், வேறுவிதமாகக் கூறினால், பொருளாதாரத் தடைகள், போர் ஆகியவற்றை நியாயப்படுத்த புதிய பொய்களை தயாரிக்க வேண்டும் என்பதாகும்.

தெஹ்ரானுக்கு எதிரான கணிசமான சான்றுகள் இல்லாத நிலைகூட, ஈரான் அணுசக்தி ஆயுதங்கள், இராசயன மற்றும் உயிரியில் ஆயுதங்கள் ஆகியவற்றை தயாரிக்க முற்படுகிறது என உறுதியாக வலியுறுத்தும் வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதை நிறுத்த முடியவில்லை. இதே வழிவகைதான் 2003ம் ஆண்டிலும் அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனி, பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்ட் மற்றும் பென்டகனில் உள்ள புதிய கன்சர்வேடிவ்கள் ஆகியோர் இணைந்து அமெரிக்க தலைமையில் ஈராக்கின் மீது குற்றம் சார்ந்த படையெடுப்புக்கான சாக்குப்போக்கை வழங்கும் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய சான்றுகள் எனக் கூறப்படுவதை போலியாய் தயாரித்தனர்.

ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் பற்றி தன்னுடைய கண்காணிப்பின் நேர்மையை அமெரிக்க மன்ற அறிக்கை தாக்கியுள்ளது பற்றி சர்வதேச அணு சக்தி அமைப்பு (IAEA) வலுவாக விடையிறுப்புக் கொடுத்துள்ளதில் வியப்பு ஒன்றும் இல்லை. IAEA இயக்குனர் மொகம்மத் எல் பரடேய் ஈரானில் இருந்து ஆயுத ஆய்வாளர் கிறிஸ்டோபர் சார்லியரை "அணுவாயுத திட்டத்தில் ஈரானிய ஏமாற்றுத்தனத்தை பற்றி கவலைகள் தெரிவித்து ஈரானின் அணுத்திட்டம் அணுவாயுதங்களை கட்டமைப்பது என்ற முடிவிற்கு வந்ததால்" அவரை அங்கிருந்து வெளியேற்றினார் என்று அறிக்கை "தவறாகவும், தவறான திசை காட்டும் வகையிலும் இருப்பதற்கு" "கடுமையான ஆட்சேபத்தையும்" IAEA உடைய கடிதம் தெரிவித்துள்ளது.

"ஈரானிய அணுவாயுதத் திட்டம் பற்றி முழு உண்மையையும் IAEA அதிகாரிகள் வெளியிடுவதை தடுக்கும் விளக்கப்பட முடியாத IAEA கொள்கையை கடைப்பிடிக்காதிருந்ததற்கு" சார்லியர் அகற்றப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அறிக்கை கூறியிருக்கும் கருத்தை IAEA "மட்டுமீறிய மற்றும், நேர்மையற்ற" தன்மையுடையது என்று முத்திரையிட்டுள்ளது. கடிதம் சுட்டிக்காட்டுகிறவாறு, எல் பரடேய் அல்ல, ஈரான்தான் சார்லியர் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரியது; ஈரான் அவ்வாறு செய்ததில் அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையின் அடிப்படையில் தன்னுடைய உரிமைகளை பயன்படுத்தியுள்ளது என்றும் கூறப்பட்டது.

சார்லியர் பற்றி அறிக்கை குறிப்பிட்டுள்ளது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. ஜேர்மனிய செய்தித்தாள் Welt am Sontag கில் ஜூலை மாதம் கொடுத்த பேட்டியில், தெஹ்ரான் இரகசியமாக அணுவாயுதத்திட்டம் ஒன்றை செயல்படுத்திக் கொண்டிருப்பதாக பேட்டி கொடுத்துள்ள அளவில், அவர் ஈரானுக்கு எதிராக போர் நடத்தப்பட வேண்டும் என ஆர்வத்துடன் வாதிடும் அமெரிக்காவின் தீவிர வலதுசாரி வட்டங்களுள் ஓரளவு புகழ் பெற்றவராக இருக்கிறார். இவருடைய கருத்துக்களை பற்றி எடுத்துக் கொண்டவர்களுக்கு அவர் தன்னுடைய கூற்றுக்களை மெய்ப்பிக்கும் வகையில் சான்றுகள் எதையும் கொடுக்கவில்லை.

மன்ற அறிக்கையில் "ஈரானிய அணுவாயுத திட்டத்திற்கான சான்று" என்ற தலைப்பில் உள்ள ஒரு சிறு பிரிவில் இருக்கும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பற்றியும் IAEA ஆட்சேபம் தெரிவித்துள்ளது. ஈரானின் செறிவூட்டல் நிலையம் ஒன்று நட்டான்சில் இருப்பதாகக்காட்டும் நிழற்படத்தின் கீழ் மிகவும் அப்பட்டமான முறையில் தவறான கருத்தைக் கொடுக்கும் தலைப்பின் பால் கவனத்தை ஈர்க்க வைத்தது. அது "ஈரான் தற்பொழுது ஆயுதங்களை 164 இயந்திர மையக்குவிப்பு அருவியை பயன்படுத்தி செறிவூட்டிக் கொண்டிருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

IAEA சுட்டிக்காட்டியுள்ளவாறு அக்கூற்று முற்றிலும் தவறானது. நிழற்படக் கருவி கண்கானிக்கும் IAEA ஆய்வுகளுக்கு உட்பட்டுள்ள நட்டான்ஸ் செறிவூட்டல் நிலையத்தில் இருக்கும் சிறு அருவி 3.6 சதவிகித மட்டத்திற்கே யூரேனியத்தை செறிவூட்டல் செய்யவல்லது- அதாவது அணு ஆக்க சக்தி திரட்டிற்கு தேவையான எரிபொருள் என்று தெஹ்ரான் நிர்ணயித்துள்ள தரம்தான் இது. இது ஒன்றும் "ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தரம்" எனக் கூறப்படுவதற்கு இல்லை என்று கடிதம் கடுமையாக கண்டிதுத்துள்ளது; ஆயுதம் தயாரிப்பதற்கு 90 சதவிகிதம் அல்லது இன்னும் கூடுதலான அடர்த்தி தேவையாகும் என்பது பொதுவாக அங்கீகரிப்பட்டுள்ளது.

தெஹ்ரான் ஒரு அணுவாயுதத்தை கட்டமைக்க முற்படுகிறது என வைத்துக் கொண்டாலும், Bulletin of the Atomic Scientists ஏட்டில் ஜூலை/ஆகஸ்ட் பதிப்பில் வந்துள்ள கட்டுரை ஒன்று, 1,500-18,00 மையவிலக்கு செயற்பாடு இடைவிடாமல் ஓராண்டிற்கு நடந்தால்தான் ஒரு நயமற்ற அணுவாயுதம் தயாரிப்பதற்கு தேவையான உயர் அடர்த்தி யூரேனியம் கிடைக்கும். ஈரான் நட்டான்ஸ் நிலையத்தை விரிவாக்கும் திட்டத்தை கொண்டுள்ளபோதிலும், IAEA அறிக்கை இத்திட்டங்கள் திட்டமிட்டதற்கு தாமதமாக நடைபெறுகின்றன என்றும், ஓர் இரண்டாம் 164 இயந்திரகதி அருவி ஆகஸ்ட் மாதம் கட்டமைக்கப்பட்டு இயக்கப்படவில்லை என்றும் கூறுகிறது.

சட்டமன்றக் குழுவிற்கான செய்தித்தொடர்பாளரான ஜாமல் வேர், "ஈரான் ஆயுதத் தரத்திற்கு யுரேனியத்தை செறிவூட்டுதற்கான திறனை வளர்க்க வேலைசெய்து கொண்டிருக்கிறது, ஆனால் அவ்வாறு இன்னும் செய்யவில்லை" என்றுதான் அறிக்கை தெரிவிக்கிறது எனக் கூறி இவ் விமர்சனத்தை உதறித்தள்ளியுள்ளார். ஆனால் இத்தலைப்பு ஒன்றும் தவறானது அல்ல. தெஹ்ரான் தற்பொழுது "ஆயுதத் தரத்திற்கு செறிவூட்டலில்" ஈடுபடவில்லை, இன்னும் பல ஆண்டுகள் அந்நிலை வருவதற்கு ஆகும் என்றால் அணுவாயுத தயாரிப்பிற்கு அடிப்படை வசதிகூட ஈரானிடம் இல்லை என்றும், தவிர்க்கவியலாத அணுவாயுத அச்சுறுத்தலை அது கொடுக்கிறது என்ற கூற்று பொருளற்றதாகவும் போய்விடுகிறது.

இதேபோல் வேண்டுமேன்ற அறிக்கையில் சிதைத்து கூறப்பட்டுள்ள கருத்தான ஈரான் "இரகசியமாக ரேடியோ ஆக்டிவ் ஐசோடோப் போலானியம்-210 (Po-210) ஐ உற்பத்தி செய்துள்ளது என்ற" கூற்று, மற்றும் அணுவாயுதத் தயாரிப்பிற்கு நியூட்ரானாக உள்ள திறன் அதற்கு உள்ளது என்பதை உயர்த்திக்காட்டும் கூற்றும் உள்ளது என்று IAEA கடிதம் குறிப்பிட்டுள்ளது. "இரகசியமாக" என்ற சொல், தவறான பொருளை கொடுத்துவிடும்; ஏனெனில் ஈரானுடன் கையெழுத்திடப்பட்டுள்ள NPT உடன்படிக்கையின் விதிகளின்படி, "Po-210 உற்பத்தி செய்வதற்கு அறிக்கை கொடுக்க வேண்டியதில்லை" என்று IAEA சுட்டிக் காட்டியிருக்கிறது. 1989ல் இருந்து 1993 வரை சிறு அளவிலான சோதனைகள், அதுவும் வெற்றியடையாமல் நிறுத்தப்பட்டவை, நடத்தப்பட்டது ஒன்றுதான் அமெரிக்க கூற்றுக்கு ஆதாரமாக உள்ளது என்று IAEA தெரிவிக்கிறது.

ஈராக்கிற்கு திரும்புதல்

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் பற்றி வெளிப்படையான பொய்களை IAEA கடிதம் உயர்த்திக் காட்டியுள்ளது; ஆனால் சட்ட மன்றக் குழு அறிக்கையின் எஞ்சிய பகுதிகள் ஏராளமான ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்கள் அல்லது வெளிப்படையான பொய்களை கொண்டுள்ளன; இவை அமெரிக்க அதிகாரிகள் அல்லது "அமெரிக்க உளவுச் சமூகத்தின்" கருத்துக்கள் மறுபடியும் கூறப்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. IAEA கடிதத்தை முதலில் வெளியிட்ட வாஷிங்டன் போஸ்ட் மிகுந்த எச்சரிக்கையுடன் குறிப்பிட்டுள்ளதாவது: "தனிப்பட்ட முறையில் பல உளவுத்துறை அதிகாரிகளும் குழுவின் அறிக்கையில் குறைந்தது அரை டஜன் கருத்துக்களாவது ஒன்றில் ஆதாரமற்றவை அல்லது ஆதாரத்திற்கு உட்படுத்த முடியாதவை எனக் கூறுகின்றனர்"

சட்டமன்ற அறிக்கை பெருமளவில் ஒரு முன்னாள் CIA அதிகாரியாகவும் ஈரானைப் பற்றி கடுமையான கருத்துக்களினால் புகழடைந்தவரும், தற்பொழுது ஐ.நா.வில் அமெரிக்க தூதராக இருக்கும் ஜோன் போல்ட்டனுக்கு கீழ் பணி புரிந்தவருமான பிரெட்ரிக் பிளிட்சால் தயாரிக்கப்பட்டது ஆகும். அப்பொழுது இருந்தது போலவே, இப்பொழுதும் போல்டன் "தீமையின் அச்சு" எனப்பட்ட ஈராக், ஈரான் மற்றும் வட கொரியாவிற்கு எதிரான ஆக்கிரோஷமான கோரிக்கைகளை கொடுத்து இழிபுகழ் அடைந்தவர் ஆவார்; பிளிட்ச்தான் அவருக்கு "சான்றுகளை" இட்டுக்கட்டுவதில் உதவியவர் ஆவார்.

ஒரு முன்னாள் அணுவாயுத ஆய்வாளரான டேவிட் ஆல்பிரைட் வாஷிங்டன் போஸ்ட்டிடம் கூறியுள்ளபடி: "இது பழையபடி ஈராக்கின் மீது படையெடுப்பிற்கு முன்னால் நடந்தது போல்தான் உள்ளது. ஒரு ஈரானிய அணுசக்தி அச்சுறத்தல் இருப்பதாக புனைந்துரைகள் கூறப்படுகின்றன; இதற்காக தவறான தகவல்கள் வேண்டுமேன்றே பொறுக்கி எடுத்துத் தரப்படுகின்றன; ஆய்வாளர்களை தாக்கும் வகையில் அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன." ஈராக் படையெடுப்பிற்கு முன்னதாக புஷ் நிர்வாகம் ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை கண்டுபிடிக்காததற்காக அவர்கள் மீது பெரும் இழிவைச் சுமத்தியிருந்தது.

பெப்ருவரி 2003ல் அமெரிக்கா தன்னுடைய தாக்குதலை தொடங்குவதற்கு ஒரு மாதம்தான் இருந்த நிலையில், தலைமை ஆயுத ஆய்வாளர்களான ஹன்ஸ் பிளிக்சும் முகம்மது எல் பரடேயும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கு அறிக்கைகள் கொடுத்தனர்; அதில் அணுவாயுத, இரசாயன, உயிரியில் ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதற்கான சான்றுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது; அது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவல் போருக்காக கடுமையாக தொடுத்திருந்த வாதத்தை தகர்த்துவிட்டது.

IAEA இயக்குனரான எல் பரடேய் குறிப்பாக உறுதியாக நின்று அறிவித்தார்: "இன்றுவரை ஈராக்கில் தடைக்குட்பட்ட அணு அல்லது அணுதொடர்புடைய நடவடிக்கைகள் இருப்பதற்கான சான்றுகள் எதையும் காணவில்லை". புஷ் நிர்வாகத்தின் மோசடிக் கூறுற்றுக்களை அம்பலப்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்; முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அவை வெளியிடப்பட்டன; அதாவது ஈராக், நைஜரில் இருந்து கணிசமான யூரேனியத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது எனக் கூறப்பட்டது. மார்ச் 2003ல் ஐ.நா.விற்கு எல் பரடேயால் நிரூபணத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் போலியானவை என்று கூறினார்; ஆயினும்கூட புஷ்ஷின் அதிகாரிகள், ஈராக் அணுவாயுதங்களை கொள்ள முயல்கிறது என்று தொடர்ந்து கூறிவந்தனர்.

ஆக்கிரமிப்பிற்கு பின்னர், அமெரிக்க குழுக்கள் பல மாதங்களும் ஈராக்கில் அலைந்தன; ஆனால் பேரழிவு ஆயுதங்களையோ அல்லது அதற்கான சான்றுகளையோ கண்டுபடிக்கவில்லை. தன்னுடைய பொறுப்புக்களை இப்பொய்களில் இருந்து அகற்றி திசை திருப்பும் வகையில் புஷ் நிர்வாகம் CIA மற்றும் பிற உளவுத்துறை அமைப்புக்களை "உளவுப் பிரிவுத் தோல்வி" எனக் குற்றம் சாட்டியது. அதே நேரத்தில் வாஷிங்டன் எல் பரடேய்க்கு எதிராக மறைமுகப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டது; அவருக்கு பதிலாக வேறு ஒருவரை, அமெரிக்க நலன்களுக்கு இசைந்து நடப்பவரை, IAEA இயக்குனராக மாற்றிவிடும் முயற்சி கடந்த ஆண்டு தோல்வியில் முடியும் வரை இது தொடர்ந்தது.

ஈராக்கில் நடந்ததை போன்றே, புஷ் நிர்வாகத்தின் ஈரானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் அமெரிக்கவிற்கு எதிரான "மூலோபாய அச்சுறுத்தல்" என்பதோடு எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. ஒரு சில நயமற்ற அணுகுண்டுகளை கொள்ள அது வெற்றியடைந்தாலும், அமெரிக்க இராணுவ மற்றும் மகத்தான அணுவாயுத கிடங்கிற்கு அது ஒன்றும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையது அல்ல. ஈரான் அணுவாயுதங்களை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்நாட்டின் அச்சம் மற்றும் போர் பீதி நிறைந்த சூழலை தயாரிப்பதற்கான போலிக் காரணம் ஆகும்; அதே நேரத்தில் ஈரானில் "ஆட்சி மாற்றத்திற்கான" செயற்பட்டியலை முடுக்கிவிடவும் அது பயன்படும். அமெரிக்க தலைமையிலான இராணுவ ஆக்கிரமிப்புக்கள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும், ஆழ்ந்த பேரழிவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், புஷ் நிர்வாகம் இருப்புக்கள் கொழிக்கும் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மீது அமெரிக்க ஆதிக்கம் நிறுவப்பட வேண்டும் என்ற தன்னுடைய பேரவாவை செயலாக்குவதில் உறுதியைக் காட்டி வருகிறது.

வாஷிங்டனில் பெருகிய முறையில் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை ஐ.நா. சுமத்தாது பற்றி பெரும் ஏமாற்றத் திகைப்பு உள்ளது. ஐரோப்பிய சக்திகள், ரஷ்யா மற்றும் சீனாவை ஆகஸ்ட் 31 காலக் கெடுவிற்குள் தெஹ்ரான் அனைத்து யூரேனிய செறிவூட்டல் திட்டங்களை நிறுத்திவிட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. ஆனால் ஈரானோ NPT உடன்படிக்கையின்படி, யூரேனிய செறிவூட்டல் உள்பட, அசு எரிபொருள் சுழற்சியின் அனைத்து அம்சங்களையும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் அதன் உரிமைகளை வலியுறுத்தியது. மேலும் ஐ.நா. தீர்மானத்தை சட்ட விரோதமானது என்றும் கண்டித்தது. இதற்கு எதிராக தண்டனை நடவடிக்கைகள் வேண்டும் என்று கோரிய அமெரிக்க முயற்சிகள் தொடர்ந்து ஐரோப்பிய, ஆசிய போட்டியாளர்களினால் தடுப்பிற்கு உட்படுகின்றன; ஏனெனில் அவை அனைத்தும் ஈரானில் கணிசமான பொருளாதார அக்கறைகளை கொண்டுள்ளன.

கடந்த வெள்ளிக் கிழமை ஐ.நா.வில் பேசும்போது, ஜனாதிபதி புஷ் அறிவித்தார்: "என்னுடைய கவலை ஈரான் தாமதப்படுத்தும் என்பதாகும்; அவர்கள் காத்திருந்து நம்மை புறக்கணிப்பர். எனவே என்னுடைய இலக்கின் ஒரு பகுதி நியூ யோர்க்கில் இப்படித் தாமதப்படுத்துவது அனுமதிக்கப்படக் கூடாது என்று மக்களிடம் நினைவுபடுத்துதல் ஆகும்; நாம் தக்க வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்."

புஷ்ஷின் பொறுமையின்மை ஒன்றும் ஈரானின் அணுசக்தித்திட்டத்தை பற்றிய பொதுநிலை மதிப்பீட்டினால் உந்துதல் பெறவில்லை. மாறாக அவருடைய நிர்வாகத்தின் இன்றியமையா அரசியல் செயற்பட்டியலினால்தான் உந்துதல் பெறுகிறது. நவம்பர் மாதம் இடைக்காலத் தேர்தல் என்னும் பெரும் சுமையை எதிர் கொண்டுள்ள நிலையில், இரண்டாம் பதவிக்காலம் ஜனாதிபதிப் பதவிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் உள்ளது என்ற நிலையில், வெள்ளை மாளிகை போதிய அவகசாமில்லை என்பதை உணர்கிறது. பின்வாங்குவது என்ற கருத்திற்கே இடமின்றி, புஷ் நிர்வாகம் இப்பொழுது ஈரானுக்கு எதிராக விளைவைப் பற்றிப் பொருட்படுத்தாத இராணுவ சாகசத்தை காட்ட முற்படுகிறது.

புஷ் நிர்வாகம் "ஆட்சி மாற்றத்திற்கான" தன்னுடைய பிரச்சாரத்தை தீவிரப்படுத்திக் கொண்டு வருகிறது என்பதற்கு உறுதியான அடையாளம் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பென்டகனில் ஈரானிய அரசாங்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பிரிவுகளை நிறுவி இருப்பதாகும். பெப்ருவரி மாதத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் ஈரானிய புலம் பெயர்நதோர் குழுக்களை ஆதரிக்கவும், ஈரானுக்குள்ளேய இருக்கும் அரசியல் எதிர்ப்புக் குழுக்களுக்கு உதவவும் இன்னும் அதிகமான 75 மில்லியன் டாலர்களைக் கேட்டுக் கொண்டார். ஒரு புதிய ஈரானிய தொடர்பு அலுவலகம் துணை ஜனாதிபதி செனியின் மகள் எலிசபெத் செனியின் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது.

பென்டகன் சிறப்புத் திட்டங்கள் அலுவலகம் (OSP) ஒன்றை ஈரானுக்காக நிறுவியுள்ளது என்பது நன்கு அறியப்படாத தகவலாகும்; இதுதான் மோசடியாளர் அஹ்மத் சலாபி போன்ற புலம் பெயர்ந்தவர்களின் கூற்றுக்களை அடிப்படையாக கொண்டு ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பொய்களை தயாரிக்க பொறுப்புக் கொண்டிருந்தது. இந்தப் புதிய அலுவலகம், ஈரான் இயக்குநர் அலுவலகம் என்ற பெயரில் இயங்கிவருகிறது என்று Los Angeles Times தகவல் கொடுத்துள்ளது. இந்த ஏட்டின்படி, ஈரானிய இயக்குநர் அலுவலகம் ஆறு பேர்களை கொண்டுள்ளது, மற்றும் OSP இருந்த பகுதியையே அடிப்படையாக கொண்டிருக்கிறது, மற்றும் பழைய மூத்த அதிகாரி அப்ராம் ஷுல்ஸ்கி உட்பட பழைய OSP அதிகாரிகளையே அதன் பணியாளர்கள் மத்தியிலும் ஆலோசகர்கள் குழுவில் பெரும்பான்மையரையும் கொண்டுள்ளது.