World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Civilian compensation claims: a glimpse into US crimes in Iraq and Afghanistan

சாதாரண மக்கள் இழப்பீட்டுத் தொகை முறையீடுகள்: ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கக் குற்றங்கள் பற்றி ஒரு பார்வை

By Peter Symonds
14 April 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்திற்கெதிராக சாதாரண மக்களால் மனுச்செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான சட்டபூர்வமான உரிமை கோரல்கள் அமெரிக்க மக்கள் உரிமைக் கழகத்தால் (American Civil Liberties Union -ACLU) புதனன்று வெளியிடப்பட்டுள்ளமையானது, இந்த இரு நாடுகளிலும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளால் சுமத்தப்பட்ட துயரங்களை பற்றி ஒரு சிறுகண்ணோட்டத்தை கொடுக்கிறது.

அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் மரணப் படைகளின் குண்டுவீச்சு நடவடிக்கைகள் முக்கியமாக இடம் பெறுகையில், அமெரிக்க துருப்புக்களின் நடவடிக்கைகளால் அன்றாடம் நிகழும் இறப்புக்களும், பேரழிவுகளும் உண்மையாகவே இருட்டடிக்கப்படுகின்றன. ACLU நிர்வாக இயக்குனர் அன்டனி ரோமெரோ ஒரு செய்தியாளருக்கான தகவலில் விளக்குகின்றவாறு, "2001ல் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் காலடி எடுத்துவைத்ததில் இருந்து, போரில் மனித இழப்புக்கள் பற்றிய தகவலை கட்டுப்படுத்தி, மறைப்பதற்கு பாதுகாப்புத்துறை முன்னோடியில்லாத வகையில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது."

ஜூன் 2006ல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ACLU குறிப்புக்களை நாடிய பின்னர்தான் பென்டகன் இழப்பீட்டுத் தொகை மனுக்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. ஈராக்கில் இருந்து 479, ஆப்கானிஸ்தானில் இருந்து 17 என்று மொத்தம் 496 மனுக்கள் அமெரிக்கப் படைகளால் விளைவிக்கப்பட்ட சேதமுற்ற குடிமக்களில் மிகச் சிறிய பகுதியைத்தான் காட்டுகின்றன. பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் ஒன்றில் பெரும் அச்சத்தில் உள்ளனர் அல்லது எப்படி உரிமைகோரி மனுச்செய்வது என்று தெரியாமல் உள்ளனர்; கொடுத்திருந்தாலும் "போர்த் தொடர்பு" இல்லாத நிகழ்வுகளைத்தான் கொண்டிருக்க வேண்டும், மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்று உள்ளது. விவரங்கள் ஆராயப்பட்ட பின்னர், "பல கூடுதலான ஆவணங்கள் பற்றிய தகவல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன" என்று ACLU கூறியுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள மனுக்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேலானவை -- 198 -- "எதிரிகளின் நடவடிக்கையினால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, அமெரிக்க ஆயுதப் படைகள் நிகழ்த்திய பதில் செயல்களின் விளைவுகளினால் "போர் விலக்கம்" என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுவிட்டன. மற்றவைகள் "சான்றுகள் இல்லை" அல்லது "அமெரிக்கத் தொடர்பு உள்ளது என்பதற்குப் போதிய நிரூபணம் இல்லை" என்ற காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. இதைத்தவிர, கிட்டத்தட்ட 10 சதவிகித மனுக்கள் சாட்சிகள் உறுதி கொடுத்தபோதிலும்கூட நிகழ்வுகளுக்கு ஆதாரம் இல்லை, அமெரிக்க இராணுவத்தின் சொந்த "SIGACT" (significant action) குறிப்பிடத்தக்க நடவடிக்கையின் தகவல் தொகுப்பில் காணப்படவில்லை என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன.

496 மனுக்களில் 164 மனுக்களுக்குத்தான் தப்பிப்பிழைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு பண இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டது. இவற்றில் பாதிக்கும் மேலாக அமெரிக்கா சாதாரணக் குடிமகன் இறப்பிற்கு பொறுப்பு ஏற்று "இழப்பீட்டுத் தொகை" கொடுக்க முன்வந்துள்ளது. மற்றவற்றில் பென்டகன் "இரங்கல் உதவித் தொகை" என்று தன் விருப்பத்தையொட்டி 2500 அமெரிக்க டாலர்களுடன் மட்டுப்படுத்தி, பணத்தை "பரிவுணர்வின் வெளிப்பாட்டு" அடிப்படையில், "ஆனால் குற்றம் என்றில்லாமல்" வழங்குவதாக கொடுத்தது. மொத்தத்தில் $32 மில்லியன் குருதிப் பணமாகக் கொடுக்கப்பட்டது; அங்கு அமெரிக்க ஆக்கிரமிப்பினால் ஏற்பட்டுள் மகத்தான துன்பங்களுடன் ஒப்பிடும்போது இது கேலிக்கூத்துக்குரிய, அற்பமான தொகையாகும்.

இந்த ஆவணங்கள் (http:www.aclu.org/natsec/foia/log.html) ஆண், பெண், குழந்தைகள் என்று நூற்றுக்கணக்கில் துப்பாக்கிச் சூடுகள், குண்டுவீச்சுக்கள் ஆகியவற்றில் இறந்துபட்ட சாதாரண மக்களை பற்றிய நெஞ்சை உறையவைக்கும் சான்றுகளை கொடுப்பதுடன் அவர்களுடைய குடும்பங்கள் நண்பர்களுக்கு எத்தகைய பேரழிவுத் தாக்கம் இருந்திருக்கும் என்பதையும் காட்டுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள்தான் முறையீடுகளுக்கு ஆதாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று உள்ளது. சட்டபூர்வ விடையிறுப்புக்களிலும், அமெரிக்கப் படைகள் நிகழ்ச்சிகளில் காட்டிய இரக்கமற்ற தன்மையைத்தான் காண்கிறோம். பல முறையீடுகளும் வெற்றுத்தனமான நிராகரிப்புக்கள் ஆகும். இறப்பிற்குக் காரணமானவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை பற்றி எவ்விதக் குறிப்பையும் காண்பதற்கில்லை.

Foreign Claims Act ல் "போர் நடவடிக்கை இல்லாத நிகழ்வுகளின்" வரம்பு மிகக் குறுகியது என்பதால் பல ஆவணங்களும், சோதனைச் சாவடிகளில் அல்லது சாலைத்தடைகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் 92, அமெரிக்க வாகனவரிசைகளுக்கு ஆபத்து கொடுக்கக்கூடும் என்ற அச்சுறுத்தல் காணப்பட்ட வண்டிகள் மீது 42 என்று இருந்தன. ஒரு டாக்சியின் மீது அமெரிக்கத் துருப்புக்கள் துப்பாக்கித்தாக்குதல் நடத்தி வண்டியோட்டியைக் கொன்று ஒரு இளைஞரை மயக்கநிலையில் தள்ளி, குருடாக்கி, பக்கவாதத்திற்கும் உட்படுத்தின. அவருடைய தந்தை மகனுடைய மனைவி மற்றும் சிறு குழந்தை வாழ்வதற்கு இழப்பீட்டுத் தொகை கேட்டார். "போர் நிகழ்வு" என்ற காரணம் காட்டி இந்த முறையீடு, விளக்கம் ஏதும் கொடுக்கப்படாமல், நிராகரிக்கப்பட்டது. வாடிக்கையான வாசகமான "உங்களுடைய மகனுடைய காயங்களுக்கு வருந்துகிறோம், சுதந்திர ஈராக்கில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்." என்பதுடன் கடிதம் முடிந்தது.

கிட்டத்தட்ட எந்த நடவடிக்கையும் "அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய நடவடிக்கை" என்று கருதப்பட்டது. பெப்ருவரி 8, 2005ல் ஒரு பள்ளி மாணவர் அமெரிக்க படைத்தளம் ஒன்றின் அருகே சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். காவல் கூடத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டவர் மாணவரின் பள்ளிப் பை ஒரு ஆபத்தான பொருள் என்று நினைத்தார் போலும். "போதிய சான்று இல்லை", "போர் நடவடிக்கையினால் ஏற்பட்ட இழப்பு" என்ற காரணம் காட்டி இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பெப்ருவரி 13, 2006ல் அமெரிக்க படையினர்கள் டைகிரிஸ் நதியில் தன்னுடைய படகில் சென்று கொண்டிருந்த மீனவர் ஒருவரைக் கொன்றனர். அவர் தான் பிடித்த மீன்களை உயர்த்திக் காட்டி "மீன், மீன்" என்று கூவி தன்னால் எந்த ஆபத்தும் இல்லை என்பதைக் காட்ட முற்படுகையில், படகின் இயந்திரத்தை அணைக்க முற்படக் குனிந்து போகையில் சுடப்பட்டார். நீரில் அடித்துச்செல்லப்பட்ட படகிற்காக அவருடைய உறவினருக்கு 3,500 அமெரிக்க டாலர்கள் கொடுக்கப்பட்டன, ஆனால் "போர் நடவடிக்கைகளினால்" விளைந்தது என்று தீர்மானிக்கப்பட்ட அவரது உறவினரின் இறப்பிற்கு ஏதும் கொடுக்கப்படவில்லை.

அமெரிக்க மற்றும் கிளர்ச்சியாளர் படைகளுக்கு இடையில் குறுக்கிட்ட பலரும் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 13, 2005 அன்று வீட்டின் முன் கதவு முன்பு கொல்லப்பட்ட தன்னுடைய மகனின் இறப்பிற்கு இழப்பீட்டு மனு கொடுத்த ஒரு தகப்பனார் "போர் நிகழ்வு விலக்கு" என்ற காரணத்தால் நிராகரிப்பிற்கு உட்பட்டார். ஈராக்கிய இராணுவத்தினர் ஒருவர் விடுமுறைக்கு திரும்பிக் கொண்டிருந்தவர் மார்ச் 19, 2006ல் கொல்லப்பட்டதற்காக கொடுத்த மனு, SIGACT அறிக்கையுடன் ஒத்துப் போகவில்லை என்ற காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டது. மனுக் கொடுத்தவர் கண்ணால் பார்த்தவர்களின் குறிப்புகளையும், இறப்புச் சான்றிதழ், சட்ட கருத்து ஆகியவற்றையும் கொடுத்திருந்தார். மற்றுமொரு விஷயத்தில் ஒருவருக்கு அவருடைய சகோதரர் இறந்ததற்காக இரங்கல் தொகையாக $500 கொடுக்கப்பட்டது; இவரோ அவருடைய வீட்டு வாயில் அருகில், போர் நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்டிருந்தார்.

ஒரு நிகழ்விற்கு பின்னர் அல்லது சாலையோர துப்பாக்கிச் சூட்டை அமெரிக்க துருப்புகள் நடத்தியதை அடுத்து ஏராளமான முறையீட்டு மனுக்கள் கொடுக்கப்பட்டன. ஆப்கானில் 17 முறையீடுகளில் ஏழு மே 29, 2006 சாலை விபத்து ஒன்றின் மூலம் வந்தன; அப்பொழுது ஒரு அமெரிக்க வாகனம் ஒன்று காபூலில் பல கார்களுடன் மோதியது. சீற்றமடைந்து திரண்டு வந்த மக்கள் கூட்டத்தின்மீது அமெரிக்க துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைக் கொன்று, காயப்படுத்தினர். இறந்தவர்களில் ஒருவர் 13 வயதுப் பையன்; தெருவில் வண்டியில் பீசாக்களை விற்றவர்; மற்றொருவர் பள்ளியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த மாணவர்; மற்றொருவர் சிறு மெக்கானிக் கடைக்கு உதிரிபாகங்களை கொண்டுபோனவர் இந்த ஏழு மனுக்களுக்கும் தலா $4,000 த்தில் இருந்து $7,000 வரை கொடுக்கப்பட்டது.

ஈராக்கில் அருகில் நிற்பவர்கள் மீது சுடுவது, சாலையோரக் குண்டுவீச்சுக்களுக்கு அமெரிக்க இராணுவத்தின் வாடிக்கையான விடையிறுப்பு போலும். ஜனவரி 12, 2006ல் அமெரிக்கப் படைகள் இலக்கின்றிச் சுட்டு, ஒரு 11 வயது பையனை கொன்றனர்; இது சமாராவிற்கு அருகில் அவர்களுடைய வாகன வரிசையை ஒட்டி ஒரு சாலையோர குண்டு வெடித்ததை தொடர்ந்து நடத்தப்பட்டது. பையனுடைய தகப்பனார், ஒரு வறிய விவசாயி, இழப்பீட்டுத் தொகை கோரினார்; சாட்சிகள் தகவல்கள் மற்றும் இறப்புச் சான்றிதழ் ஆகியவை கொடுக்கப்பட்டிருந்தபோதும் "சான்றுகள் இல்லை", "போரிடல் தவிர்த்தல்" எனக் காரணம் கூறப்பட்டு இது நிராகரிக்கப்பட்டது.

டிபிக் கிராமத்தில் மார்ச் 3, 2004 அன்று ஒரு குடும்பம் படுகொலை செய்யப்பட்டது குறிப்படித்தக்க கொடூர நிகழ்வாகும். ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டை அமெரிக்கப் படைகள் நடாத்தி, மனுதாரரின் தந்தை, தாயார், சகோதரர் உட்பட நால்வரை கொன்று மற்றும், மனுதாரர் உட்பட 40 பேர்களை காயப்படுத்தியது. தாயார் உறங்கிக் கொண்டிருக்கும்போது துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்: தந்தையார் குடும்ப AK 47 ஐக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வருகையில் கொல்லப்பட்டார். குடும்பத்தின் ஆட்டுமந்தையையும் அமெரிக்க துருப்புகள் கொன்று மனுதாரர் வாழவழியின்றிச் செய்துவிட்டனர். அமெரிக்க இராணுவத்தால் கவனமாக எழுதப்பட்ட அறிவிப்பில், துருப்புகள் "வேறு ஒரு இல்லத்தின்மீது சூடு நடத்தியிருக்கக் கூடும்" என்று அறிவித்தனர். துருப்புகளுடைய நடவடிக்கை "தவறில்லை" என்றும், "கவனக்குறைவின் மூலம் நடந்திருக்கலாம்" என்றும் கூறப்பட்டது. இழப்பீட்டுத் தொகையாக $11,200 அளிக்கப்பட்டது.

ACLU மூலம் வெளிவந்துள்ள கோப்புக்கள் மறைந்துள்ள பெரிய விஷயங்களின் சிறிய புதிர்போல் இருக்கின்றன. அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகள் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் உள்ளூர் மக்களுடைய வாழ்வை கெட்ட கனாவிற்கு ஒப்பானதாக்கிவிட்டன --நிரந்தரமான பயத்தில் வாழ்தல், அன்றாட நடவடிக்கைகளிலும் அப்படிப்பட்ட பயம், இழிவான சமூக நிலைமைகளை எதிர்கொள்ளுதல் என்ற நிலை அவர்களுக்கு. ஈராக்கில் அமெரிக்கப் படைகளின் கொலைகார நடவடிக்கைகள் ஷியைட் மற்றும் சுன்னி குடிப்படைகளுக்கு இடையிலான குறுகியவாத உள்நாட்டுப் போரினால் அதிகமாகிவிட்டது; இதைத் தூண்டிவிட்டதில் அமெரிக்ப் போர் நேரடிப் பொறுப்பை கொண்டுள்ளது.

பென்டகன், போரின் தாக்கத்தை பற்றிய எந்த தகவலையும் ஒழுங்குமுறையாக அடக்கியுள்ளது. சாதாரண மக்கள் இறப்பு பட்டியல் ஒன்றை தயாரிக்க அது மறுத்தது; படையினருடன் இயைந்திருக்கும் செய்தியாளர்களின் அறிக்கைகளை தணிக்கை செய்கிறது; வாடிக்கையாக செய்தி ஊடகத்தில் வெளியிடப்படும் கொடூரங்கள் பற்றிய சான்றுகளை நிராகரிக்கிறது. ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதர் Gianni Magazzeni இன் கருத்தின்படி 2006ல் 34,452 பேர் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கையும் கூட ஈராக்கின் சுகாதார அமைச்சரகம், மருத்துவமனைகள், பிரேதக் கிடங்குகளில் இருந்து திரட்டப்பட்டது, குறைமதிப்பீடாகத்தான் இருக்கும்.

கடந்த ஆண்டு Johns Hopkins University யில் உள்ள தொற்றுநோய் நிபுணர்களின் இயக்கத்தின்கீழ் ஈராக்கிய மருத்துவர்கள் குழு ஒன்று தரமான அளவை வகையை கையாண்டு மிகப் பரந்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. பிரிட்டிஷ் மருத்துவ ஏடான Lancet ல் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு ஈராக்கில் அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு 655,000 ஈராக்கியர்களின் இறப்பிற்கு காரணம் என்று கண்டறிந்துள்ளது. இவற்றில் 186,000 அல்லது 31 சதவிகிதம், நேரடியாக கூட்டணி படைகளின் செயற்பாடுகளால், அதாவது அமெரிக்க இராணுவம் அல்லது அதன் கூட்டாளிகள் ஈராக்கியர்களை கொன்றதில் ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

ACLU ஆவணங்கள் இந்த புள்ளிவிவரங்களுக்கு ஒரு மனித முக அடையாளத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளன.