World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan authorities continue to stall over disappearance of SEP member

இலங்கை அதிகாரிகள் காணாமல் போயுள்ள சோ.ச.க. உறுப்பினர் தொடர்பாக தொடர்ந்தும் தட்டிக்கழிக்கின்றனர்

By our correspondent
5 April 2007

Use this version to print | Send this link by email | Email the author

காணாமல் போயுள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனையும் கண்டுபிடிக்க இலங்கை பாதுகாப்புப் படைகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதானது, அவர்களது பாதுகாப்பு தொடர்பாக கடும் கவலைகளை எழுப்புவதோடு அவர்கள் காணாமல் போயுள்ள சம்பவத்தில் இராணுவத்தின் தொடர்பையும் மேலும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த இருவரும் மார்ச் 22 காணாமல் போயுள்ளனர். ஊர்காவற்துறை தீவையும் புங்குடு தீவையும் இணைக்கும் நீண்ட கடல்வழிப் பாலத்தின் தொடக்கத்தில் உள்ள இராணுவ வீதித் தடையில் சுமார் மாலை 6.30 மணியளவில் அவர்கள் கடைசியாக காணப்பட்டுள்ளனர். விமலேஸ்வரன் புங்குடுதீவில் வாடகைக்கு எடுத்த வீட்டில் இருந்த ஆடைகள் சிலவற்றை எடுப்பதற்காக அங்கு சென்று பின்னர் தமது வசிப்பிடமான ஊர்காவற்துறைக்கு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்தார்.

இவர்கள் புங்குடு தீவுக்குள் மாலை 5.30 மணிக்கு நுழைந்து பின்னர் மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து திரும்பியதற்கான பதிவு அங்குள்ள சோதனைச் சாவடியின் புத்தகத்தில் இருப்பதாக புங்குடு தீவு கடற்படை முகாமின் கட்டளைத் தளபதி ஹேமந்த பீரிஸ் சோ.ச.க. க்கு தெரிவித்துள்ளார். 27 வயதான விமலேஸ்வரனும் மற்றும் 24 வயதான மதிவதனனும் புங்குடு தீவில் வீதித் தடையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி மீண்டும் ஸ்டார்ட் செய்து கடல்வழிப் பாலத்தில் நுழைவதற்கு தாயாராகிக்கொண்டிருந்ததை கண்டதற்கான சாட்சிகள் உள்ளன. இதே சமயத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்று கடல்வழிப் பாலத்தைக் கடந்து கொண்டிருப்பதைக் கண்டதாக ஒரு கண்கண்ட சாட்சி தெரிவிக்கின்றார்.

"ஊர்காவற்துறை கடல்வழிப் பாலத்தின் முடிவில் உள்ள வீதித் தடையில் என்ன நடந்தது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஊர்காவற்துறையில் வேலனை கடற்படை முகாமில் உள்ள கட்டளை அதிகாரியான சில்வா, இந்த இருவர் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என நிராகரிப்பதோடு அவரது படைச் சிப்பாய்கள் இவர்களைக் கைது செய்யவில்லை எனவும் பிரகடனம் செய்கின்றார். மேலும் சோ.ச.க. தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சிக்கும் போதெல்லாம் எவரும் அதற்கு பதிலளிப்பதில்லை. அங்கிருந்த ஒரு கடற்படை அலுவலர், "பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி" அவரது பெயர் உட்பட எந்தவொரு தகவலையும் வழங்க மறுத்துவிட்டார்.

ஊர்காவற்துறை வீதித்தடையை பகல் நேரத்தில் அருகில் கிராமங்களில் இருந்து பார்க்க முடியும், ஆயினும் அந்திப் பொழுதில் தெளிவாகப் பார்க்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, பெரும்பாலான கிராமத்தவர்கள் இராணுவத்திற்குப் பயந்து சுமார் மாலை 6.30 மணிக்கு முன்னதாக, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே வீடுகளுக்குள் அடங்கிவிடுவர். இந்தப் பிரதேசங்களில் இரவு 8 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு சட்டம் காலை 5 மணிக்கே தளர்த்தப்படுகிறது.

இந்த வீதித் தடையில் சாதாரணமாக சுமார் 15 கடற்படை சிப்பாய்கள் இருந்த போதிலும், சுமார் மாலை 5.30 மணிக்கு விமலேஸ்வரனும் மதிவதனனும் புங்குடு தீவை நோக்கிச் சென்றுகொண்டிந்த போது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தைச் (சி.ஐ.டி) சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் அங்கு இருந்ததாக ஒரு கண்கண்ட சாட்சி உலக சோசலிச வலைத தளத்திற்குத் தெரிவித்தார். இந்த இரு சீ.ஐ.டி. அதிகாரிகளும் தெளிவாகத் தமிழ் பேசக் கூடியவர்கள். இவர்கள் பிரதேசத்தில் உள்ள வீதித்தடைகளில் உள்ளூர் வாசிகளிடம் விசாரணை நடத்துவதில் ஈடுபடுவதோடு மக்களை "சந்தேகத்தின் பேரில்" எதேச்சதிகாரமாக கைதுசெய்யும் அதிகாரமும் இவர்களுக்கு உண்டு.

விமலேஸ்வரனும் மதிவதனனும் ஊர்காவற்துறையில் உள்ள சீ.ஐ.டி.யினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தபட்சம் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதற்கான பலமான ஆதராங்கள் இதுவரை கிடைத்துள்ளன.

மீனவர்களான இந்த இருவரும், அவர்களது அன்றாட நடவடிக்கைகளின் போது இந்த கடல்வழிப் பாலத்தைப் பயன்படுத்துபவர்களாவர். சோ.ச.க. புங்குடு தீவு கடற்படை முகாம், வேலனை கடற்படை முகாம், ஊர்காவற்துறை பொலிஸ் மற்றும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கும் முறைப்பாடுகள் செய்துள்ள போதிலும், உத்தியோகபூர்வமான பதில்கள் எதுவும் கிடைக்காததோடு எந்தவொரு பொருத்தமான விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகளும் கிடையாது.

இந்த சம்பவம் தொடர்பான அவசர நிலையை வலியுறுத்தி சோ.ச.க. பல தொலைபேசி அழைப்புக்களை எடுத்த போதிலும், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.கே. பாலசூரிய பொலிஸ் விசாரணைகள் தொடர்பான எந்தவொரு விபரங்களையும் வழங்கத் தவறிவிட்டார். பிரதேசத்தில் உள்ள கடற்படை அலுவலர்களுடன் பேசுமாறு அழுத்தம் கொடுத்த போது, ஊர்காவற்துறையிலும் மற்றும் புங்குடுதீவிலும் உள்ள கடற்படை முகாம்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் அதிகாரம் தனக்கு இல்லை என அவர் கூறிவிட்டார்.

விமலேஸ்வரனையும் மதிவதனனையும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (டி.ஐ.டீ.) கைது செய்ததா என டி.ஐ.டீ ஆணையாளர் சந்திரா வாகிஷடவிடம் நேற்று கேட்டதாக பாலசூரிய சோ.ச.க. யிடம் தெரிவித்தார். இன்னமும் எந்தவொரு பதிலும் தனக்குக் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்ததோடு எந்த ஒரு விடயம் தொடர்பாகவும் அழுத்தி வலியுறுத்த தனக்கு அதிகாரம் கிடையாது எனவும் தெரிவித்தார். "ஒரு நிச்சயமான நேரத்தை வழங்குமாறு என்னால் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது" என மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

ஊர்காவற்துறை மற்றும் புங்குடு தீவு உட்பட்ட யாழ்ப்பாணத் தீவுகள், இலங்கை கடற்படையின் இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதோடு ஆளும் கூட்டணியின் பங்காளியும் ஒரு துணைப்படைக் குழுவுமான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) அது நெருக்கமாக செயற்படுகின்றது. காரைநகர் தீவில் கடற்படைக்கு பிரமாண்டமான முகாம் இருப்பதோடு, அதே போல் ஊர்காவற்துறை தீவில் அல்லைப்பிட்டி மற்றும் வேலனை ஆகிய இடங்களிலும் மற்றும் புங்குடு தீவு, மண்டை தீவு மற்றும் நயினா தீவிலும் கடற்படைக்கு முகாம்கள் இருக்கின்றன

இந்தத் தீவுகளில் வாழ்க்கையின் ஒவ்வொரு போக்கையும் கடற்படை மேற்பார்வை செய்கின்றது. கடுமையான ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தல், தொடர்ச்சியான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள், உள் நுழையும் மற்றும் வெளிச் செல்லும் இடங்கள் அதே போல் தீவுகளின் ஏனைய இடங்களிலும் வீதித் தடைகளை இடுதல், வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுதல் போன்றவற்றையும் கடற்படை மேற்கொள்கின்றது. பல மாதங்களாக மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததோடு இப்போது ஆழமற்ற கடலில் மட்டும் காலை 7 மணியில் இருந்து மாலை 4 மணிவரை அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பல மீனவக் குடும்பங்களை பட்டினிக்குள் தள்ளியுள்ளன.

கடந்த ஆண்டு பூராவும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பூராவும், நூற்றுக்கணக்கானவர்கள் "காணாமல் போயுள்ளனர்" அல்லது பெரும்பாலும் இராணுவத்தின் அனுசரணையிலான கொலைப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். விமலேஸ்வரனும் மதிவதனனும் காணாமல் போன அதே தினம் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஊர்காவற்துறை தீவில் நடந்த ஒரு முக்கிய சம்பவத்தில், திருச்செல்வன் நிஹால் ஜிம் பிரவுன் என்ற கத்தோலிக்கப் பாதிரியாரும் மற்றும் அவரது உதவியாளரான வென்சலூஸ் வின்செஸ் விமலாதாசும் கடந்த ஆகஸ்ட்டில் காணாமல் போயினர். இவர்கள் அல்லைப்பிட்டி கடற்படை சோதனைச் சாவடியைக் கடந்தவுடன், உடற் கவசங்கள் அணிந்த மனிதர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் இந்த இருவரையும் பின்தொடர்ந்ததாக கண்கண்ட சாட்சிகள் கூறுகின்றன. இந்த இருவரையும் கடற்படை கைதுசெய்யவில்லை என வடக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான கடற்படைத் தளபதி ரியர் அட்மிரால் உபாலி ரணவீர மறுத்துள்ளார். பாதிரியாரும் அவரது உதவியாளரும் அல்லைப்பிட்டி சோதனைச் சாவடியை கடந்து சென்றதாக கடற்படை சிப்பாய்கள் தெரிவித்த போதிலும் அது சம்பந்தமான பதிவுகள் ஆதாரங்கள் எதையும் பொலிசுக்கு வழங்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

உள்நாட்டு யுத்தத்தை எதிர்ப்பதாலும் மற்றும் தீவின் வடக்கு கிழக்கில் இருந்து அனைத்து ஆயுதப் படைகளையும் கொழும்பு அரசாங்கம் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற அதன் கோரிக்கையாலும் இலங்கை பூராகவும் சோ.ச.க. பிரசித்தி பெற்றதாகும். சுமார் பத்து ஆண்டுகளாக சோ.ச.க. உறுப்பினராக உள்ள விமலேஸ்வரன், யுத்தத்தின் வெளிப்படையான எதிரியாகவும் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளைக் காப்பவராகவும் பிரதேசம் பூராவும் பிரசித்தி பெற்றவராவார்.

விமலேஸ்வரனையும் மற்றும் மதிவதனனையும் கண்டுபிடிக்க ஒரு அவசர விசாரணையை மேற்கொண்டு அவர்கள் இருக்கும் இடத்தை உடனடியாக கட்சிக்கு அறிவிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் மற்றும் பொலிஸையும் சோ.ச.க. கோருகின்றது. இந்த இருவர் தொடர்பாகவும் இலங்கை அதிகாரிகளிடம் இருக்கும் தகவல்களை வெளியிட வேண்டும் எனவும் அதற்கான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரி இலங்கை அதிகாரிகளுக்கு அவசரக் கடிதங்களை அனுப்புமாறு உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் அனைவருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டிய முகவரி:

Gotabhaya Rajapakse,
Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha,
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529
e-mail: secretary@defence.lk

N. G. Punchihewa
Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road,
Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924

பிரதிகளை (இலங்கை) சோசலிச சமத்துவக் கட்சிக்கும் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பிவைக்கவும்.

Socialist Equality Party,
P.O. Box 1270,
Colombo, Sri Lanka.
Email: wswscmb@sltnet.lk

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப தயவுசெய்து இந்த online form படிவத்தைப் பயன்படுத்தவும்

இதுவரை அனுப்பப்பட்டுள்ள கடிதங்களின் இன்னுமொரு தொகுப்பை இங்கு வெளியிடுகின்றோம்.

* * *

1 ஏப்பிரல் 2007

அன்பின் ஐயா,

மார்ச் 30 சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில், அதன் நீண்ட கால உறுப்பினரான நடராஜா விமலேஸ்வரனும் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் மார்ச் 22 காணாமல் போயுள்ளதாக கட்சி அறிவித்தது. இவர்கள் இருவரும் ஊர்காவற்துறை தீவைச் சேர்ந்தவர்களாவர்.

விமலேஸ்வரனும் மதிவதனனும் சம்பவ தினத்தன்று, புங்குடு தீவையும் ஊர்காவற்துறையையும் இணைக்கும் நீண்ட கடல்வழிப் பாலத்தை நோக்கி புங்குடு தீவில் இருந்து மோட்டார் சைக்கிளில் சுமார் மாலை 6.30 மணிக்கு வந்துகொண்டிருந்ததை பலர் கண்டதாக சோ.ச.க. மேலும் தெரிவிக்கின்றது. புங்குடு தீவு கடற்படை முகாமைச் சேர்ந்த கட்டளைத் தளபதி, கடல்வழிப் பாலத்தில் புங்குடு தீவு பகுதியில் உள்ள கடற்படை வீதித் தடையை அவர்கள் கடந்து சென்றுள்ளதாக கூறுகின்றார். பாலத்தின் மறு முனையில் உள்ள வீதித் தடைக்குப் பொறுப்பான ஊர்காவற்துறையில் உள்ள வேலனைப் பகுதியின் கடற்படைத் தளத்தின் கட்டளைத் தளபதி, இவர்கள் தொடர்பாக எதுவும் தெரியாது என மறுக்கின்றார்.

இந்தக் கடல்வழிப் பாலம் கடற்படையின் கட்டுப்பட்டின் கீழ் இருக்கின்ற நிலையில், இவர்கள் இருவரும் காணாமல் போயுள்ளமைக்கு கடற்படை நேரடிப் பொறுப்பாளி அல்லது சம்பவம் தொடர்பாக அவர்கள் அறிந்திருப்பதற்கு வாய்ப்புள்ளது என்று ஒருவர் சந்தேகிக்க முடியும்.

இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பாக தாமதமற்ற தக்க விசாரணை நடத்த வேண்டும் மற்றும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சோ.ச.க. எழுப்பியுள்ளது. நான் முழு மனதுடன் இந்த கோரிக்கையை ஆதரிக்கின்றேன்.

சோ.ச.க. உழக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு ஒரு சோசலிச தீர்வு காண்பதற்கு இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செயற்படும் ஒரே இயக்கமாகும். கடந்த இரு தசாப்தங்களாக, அது யுத்தத்தை எதிர்த்து வந்ததோடு தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக நின்று வந்துள்ளது. அது சோசலிச அனைத்துலகவாதத்தின் அடிப்படையில் சிங்களம் மற்றும் தமிழ் தொழிலாளர்களுக்கு கல்வியூட்டவும் மற்றும் ஐக்கியப்படுத்தவும் இடைவிடாது செயற்பட்டுள்ளது. அது சிங்களப் பேரினவாதத்தையும் அதே போல் தமிழ் பிரிவினைவாதத்தையும் எதிர்க்கின்றது. அத்தகைய ஒரு கட்சியின் காரியாளரை அழிப்பதானது இந்த நாட்டில் மட்டும் அல்ல உலகம் பூராவும் உள்ள உழைக்கும் மக்களுக்கு ஒரு பிரமாண்டமான இழப்பாகும். பொருத்தமான விசாரணையை நடத்துமாறு சோ.ச.க எழுப்பியுள்ள கோரிக்கைக்கு அதற்குரிய முறையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

டி.எச். இஸ்மாயில்

கமிட்டி உறுப்பினர்

இலங்கை டெலிகொம் ஊழியர் சங்கம்

* * *

அன்பின் ஐயா,

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் மற்றும் சிவநாதன் மதிவதனனும் நாட்டின் வடக்கில் ஊர்காவற்துறை தீவில் காணாமல் போயுள்ள செய்தி, இலங்கை பிரஜைகளின் ஜனநாயக உரிமைகள் தொடர்பான அக்கறையை மீண்டும் எழுப்புகின்றது.

இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க கசப்பான போராட்டங்களை முன்னெடுத்ததில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அனைத்து விதமான தேசியவாதத்தையும் மற்றும் புலிகளின் பிரிவினைவாதத்தையும் எதிர்ப்பதில் அது பிரசித்திபெற்றது. இந்த சூழ்நிலையில் நடராஜா விமலேஸ்வரன் காணாமல் போயுள்ளமை அவர் ஆதரித்த மற்றும் நடைமுறையில் கொண்டிருந்த அரசியல் கோட்பாட்டில் வேரூன்றியுள்ளது என நம்ப முடியும்.

இந்த சம்பவம் அரசாங்கப் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசத்திலேயே நடந்துள்ளது. ஆகவே, இந்த சம்பவம் தொடர்பாகவும் மற்றும் மேல் குறிப்பிடப்பட்ட பிரஜைகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கவும் விசாரணை நடத்துமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

எஸ்.டபிள்யு

* * *

செயலாளர் இராஜபக்ஷ மற்றும் ஆணையாளர் புஞ்சிஹேவா,

மார்ச் 22 அன்று வடக்கில் யாழ்ப்பாணத் தீவுகளில் காணாமல் போயுள்ள நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவும் மற்றும் அவர்களின் விடுதலை உறுதிசெய்யவும் சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்துள்ள பிரச்சாரத்திற்கு எனது உடன்பாட்டை வெளிப்படுத்தவே நான் இதை எழுதுகிறேன்.

இந்த இருவரையும் கண்டுபிடிக்க உடனடியாக ஒரு அவசர விசாரணையை உங்களது அரசாங்கமும் மற்றும் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொள்ள வேண்டும் என நான் கோருகிறேன்.

என்னால் முடிந்ததற்கும் மேலாக கருத்துக்களை வெளிப்படுத்தும் இரு கடிதங்களை மீண்டும் அனுப்பிவைக்கின்றேன். அவை ஏற்கனவே எழுதப்பட்டு உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டவையாகும். காணாமல் போயுள்ளவர்களின் விடுதலையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கி முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தும் அனைவருடனும் நான் முழுமையாக உடன்படுகிறேன்.

C.«è

சிகாகோ

* * *

அன்பின் திரு. இராஜபக்ஷ,

நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக உடனடியாக முழு விசாரணையை தொடங்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோருவதற்காகவே இதை நான் எழுதுகிறேன். இவர்கள் இருவரையும் புங்குடு தீவில் மடத்துவெளி கிராமத்தில் மார்ச் 22 மாலை கடைசியாக ஒரு நண்பரும் மற்றும் ஒரு உறவினரும் கண்டுள்ளனர். விமலேஸ்வரன் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினராவார். இவர்கள் இருவரும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக சோ.ச.க. அரசாங்க அதிகாரிகளிடம் (தங்களது அலுவலகம் உட்பட) உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ள போதிலும், அரசாங்கத்தின் பக்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றே தெரியவருகிறது. கடந்த பல மாதங்களாக புலிகளுக்கு எதிரான யுத்தம் உக்கிரமடைவதை கணக்கில் கொள்ளும் போது இது மோசமான நிலைமையாகும்.

உலகம் பூராவும் உள்ள மக்கள் இந்த இருவரதும் உயிர் பற்றி கவலை அடைந்திருப்பதோடு நடராஜா விமலேஸ்வரன் மற்றும் சிவநாதன் மதிவதனனின் பாதுகாப்புக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு என்றும் கருதுகின்றனர்.

உண்மையுள்ள,

«ü.H.

அமெரிக்கா