World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Police stall in Human Rights Commission inquiry into disappearance of SEP member

இலங்கை: சோ.ச.க. உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பான மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையில் பொலிஸ் தெளிவான விடையளிக்கவில்லை

By our correspondent
27 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அண்மைய விசாரணை, இந்த வழக்கு தொடர்பாக எந்தவொரு தக்க விசாரணையையும் மேற்கொள்ள அதிகாரிகள் தவறியுள்ளதை அம்பலப்படுத்துகின்றது.

விமலேஸ்வரனும் மதிவதனனும் மார்ச் 22 புங்குடு தீவில் இருந்து அவர்கள் வசிக்கும் ஊர்காவற்துறைக்கு திரும்பிக்கொண்டிருந்த போது காணாமல் போயினர். இந்த இரு வடக்குத் தீவுகளும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. கடற்படை அங்கு வீதித் தடைகளில் கடமையில் இருப்பதோடு ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டு கடுமையான ஊரடங்குச் சட்டங்களையும் அமுல்படுத்தி வருகின்றது. இந்த இருவரும் ஊர்காவற்துறைக்கு செல்லும் நீண்ட கடல் பாலத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக புங்குடு தீவு சோதனை நிலையத்தில் வைத்து மோட்டார் சைக்கிளை இயக்குவதை சாட்சிகள் கடைசியாகக் கண்டுள்ளன.

சோ.ச.க. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்தது. அது சோ.ச.க. யும் உலக சோசலிச வலைத் தளமும் இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணையைக் கோரி தொடர்ச்சியான சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுத்ததை அடுத்து மட்டுமே ஜூன் 14 முதலாவது விசாரணையை நடத்தியது. ஜூலை 6 ஆணைக்குழுவின் இரண்டாவது விசாரணை, முன்னைய விசாரணை அதிகாரி பிரசன்ன அரம்பத் வருகைதரத் தவறியமையால் கிட்டத்தட்ட முடிவுக்கே வந்தது. நீண்ட விவாதத்தின் பின்னரே இன்னுமொரு அதிகாரியான கலிஸ்டஸ் அருண்குமார இறுதியாக விசாரணையை நடத்த உடன்பட்டார்.

கடற்படை கட்டளைத் தளபதியையும் பொலிஸ்மா அதிபரையும் பிரதிநிதித்துவம் செய்யும் அதிகாரிகள் முதல் விசாரணைக்கு வருகை தந்தது போல் இம்முறை வருகை தரவில்லை. ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர அங்கு வருகை தராததோடு காரணங்களை அறிவித்திருக்கவும் இல்லை. முதலாவது விசாரணையின் முடிவில், அவரை ஜூலை 6 விசாரணைக்கு வருமாறு பிரசன்ன அரம்பத் அறிவித்தல் அனுப்பியிருந்தார்.

ஆணைக்குழுவின் போக்கைக் கண்டித்த சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், ஆணைக்குழுவால் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் சோ.ச.க. யிற்கு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு முதலாவது விசாரணையின் உத்தியோகபூர்வ பதிவில் பிழைகள் இருப்பதையும் சுட்டிக் காட்டினார். குறிப்பாக, இந்த இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தால் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிராவிட்டால் அது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற சோ.ச.க. யின் கோரிக்கைகள் அந்தப் பதிவில் பிழையாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. எழுத்துப் பிழையுடன் பதிவு செய்யப்பட்டுள்ள பல பெயர்களை திருத்துவதாக விசாரணை அதிகாரி அருண்குமார உடன்பட்ட போதிலும், பொறுப்பில் உள்ள அதிகாரி தான் அல்ல எனத் தெரிவித்து எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்ள மறுத்தார்.

உத்தியோகபூர்வமான அறிவித்தல் அனுப்பியும் ஊர்காவற்துறை பொலிஸ் அதிகாரி வருகை தராமையானது, ஆணைக்குழு ஸ்தாபித்த 1996 சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என டயஸ் சுட்டிக்காட்டினார். அத்தகைய வருகையின்மையை அணுகுவதற்கான வழிமுறை நீண்டகாலமாக உள்ளதாகவும் மற்றும் சிக்கலானதுமாகும் என அருண்குமார சுட்டிக்காட்டினார். முதலில் ஆணைக்குழுவானது, வருகைதராமைக்கு விளக்கம் கோரவேண்டும், பின்னரே அந்த விவகாரத்தைப் பற்றி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதையிட்டு அக்கறைசெலுத்த முடியும். இந்த வழிமுறையைப் பின்பற்றுவதாக விசாரணை அதிகாரி சமிக்ஞையையும் காட்டவில்லை.

நாட்டின் கடற்படையையும் மற்றும் பொலிஸ் தலைமையையும் பிரதிநிதித்துவம் செய்தவர்கள் முதல் விசாரணையில் சொன்னதையே சாதாரணமாக திருப்பிக் கூறினர். புங்குடு தீவில் உள்ள கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி ஹேமந்த பீரிஸிடம் வாக்குமூலத்தை ஊர்காவற்துறை பொலிஸ் பதிவு செய்ததாக பொலிஸ் அதிகாரி அறிவித்த போதிலும், அவர் அந்த வாக்குமூலத்தை முன்வைக்கவில்லை.

காணாமல் போன சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணையின் பூரணமான அறிக்கை ஒன்றை பொலிஸ் பிரதிநிதி வழங்கத் தவறியதை டயஸ் எதிர்த்தார். வழக்கை விசாரிக்கும் நீதவான் கேட்டுக்கொண்டவாறு ஜூன் 15 அன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க பொலிஸ் தவறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"பொலிஸ் விசாரணைக்கான பிரதான தேவை என்னவெனில், விமலேஸ்வரனும் மதிவதனனும் காணாமல்போன மார்ச் 22ம் திகதி மாலை 5 மணிக்கும் 7 மணிக்கும் இடையில் புங்குடு தீவையும் ஊர்காவற்துறையையும் இணைக்கும் நீண்ட கடல் பாலத்தின் இரு முடிவிலும் உள்ள சோதனை நிலையங்களில் கடமையில் இருந்த கடற்படை உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலத்தை பதிவு செய்வதாகும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை என்பது இங்கு பொலிசார் வழங்கிய வாக்குமூலங்களில் இருந்து தெளிவாகின்றது," என டயஸ் விளக்கினார்.

சோதனை நிலையத்தில் உள்ள சிப்பாய்கள் வாகன இலக்கத்தைத் தவிர வாகனத்தில் செல்பவர்களின் பெயர்களை பதிவு செய்ய மாட்டார்கள் என கடற்படை அதிகாரி கூறினார். ஆணைக்குழு கோருமானால் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு கடமையில் இருந்த கடற்படை உத்தியோகத்தர்களின் பெயர்களை கடற்படையால் வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.

பெயர்களை அறிவிப்பது மட்டுமன்றி விசாரணையின் பாகமாக அவர்களிடம் வாக்குமூலங்களை பொலிசார் பதிவு செய்ய வேண்டும் என டயஸ் வலியுறுத்தினார். "மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பாக தக்க விசாரணையை முன்னெடுக்க கடற்படையும் மற்றும் பொலிசும் தவறியுள்ளமை, இந்த காணாமல் போன சம்பவத்தில் அவர்கள் தலையிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துகின்றது," என அவர் தெரிவித்தார்.

விசாரணை அதிகாரி இன்னுமொரு திகதியை விசாரணைக்கு குறிப்பதாக வாக்குறுதியளித்த போதிலும், திங்கட் கிழமை வரை அவரோ அல்லது தலைமை விசாரணை அதிகாரி அரம்பத்தோ அவ்வாறு செய்யவில்லை.

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஜூலை 20 ஒரு விசாரணை நடந்தது. ஊர்காவற்துறை பொலிஸின் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் முறைப்பாட்டை முன்வைத்த போதிலும் அதில் புதிதாக ஒன்றும் இருக்கவில்லை. அவர் முறைப்பாடு செய்தவர்களான விமலேஸ்வரனின் மனைவி சிவாஜினி மற்றும் மதிவதனனின் மனைவி சுலக்ஷனாவிடம் இருந்தும் வாக்குமூலங்களை பொலிஸ் பதிவு செய்ததாக சுட்டிக்காட்டினார்.

பொலிசார் விமலேஸ்வரனின் சகோதரி ஜெயசித்திரா சித்திரகுமார், மற்றும் அருள் என அழைக்கப்படும் செல்லத்துரை ரஞ்சிதனிடம் இருந்தும் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். இந்த இருவரும் சோ.ச.க. விசாரணையில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட இரு கண்கண்ட சாட்சிகளாவர். காணாமல் போனவர்களை புங்குடு தீவுக்கு செல்லும் வழியில் ஊர்காவற்துறை சோதனை நிலையத்தில் ஜெயசித்திரா கண்டுள்ளார். அவர்கள் மீண்டும் திரும்புவதற்காக புங்குடு தீவு சோதனை நிலையத்தில் மோட்டார் சைக்கிளை இயக்குவதை அருள் கண்டுள்ளார்.

சிவாஜினி மற்றும் சுலக்ஷனாவுக்காக வழக்காடும் சட்டத்தரணி எஸ். இ. ஏகநாதன், விசாரணையை முன்னெடுப்பதில் பொலிசாரின் நடவடிக்கை குறைவை எதிர்த்தார். புங்குடு தீவிலும் மற்றும் ஊர்காவற்துறையிலும் கடற்படை உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலங்களைப் பெறுமாறு நீதிமன்றத்தால் பொலிசுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டதை அவர் நினைவூட்டினார். விமலேஸ்வரனும் மதிவதனனும் காணாமல் போன அன்று கடமையில் இருந்த கடற்படை சிப்பாய்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என பொலிசுக்கு கட்டளை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை ஏகநாதன் கேட்டுக்கொண்டார். இந்த விசாரணைக்காக பொலிசார் மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டதை அவர் எதிர்த்தார்.

இலங்கை பொலிசும் மனித உரிமைகள் ஆணைக் குழுவும் இதுபற்றி முழுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளமை, ஒரு இழிவான செயலாகும். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ 2005 நவம்பரில் நடந்த தேர்தலில் அதிகாரத்திற்கு வந்து நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளியதில் இருந்து, நூற்றக்கணக்கானவர்கள், பிரதானமாக தமிழர்கள் "காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்" அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 18 அன்று, ஊர்காவற்துறை கிராமத்தவர்கள் 22 வயதான இளைஞர் ஒருவரின் சிதைந்து போன உடலொன்றைக் கண்டெடுத்தனர். அவர் ஆறு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார். இந்த சடலம் கொங்கிரீட் தூண் ஒன்றுடன் நைலோன் நூலால் கட்டப்பட்டு சின்னமடு பிரதேசத்தில் ஒரு கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது.

இந்த சம்பவங்களின் தடயங்கள் அனைத்தும் பாதுகாப்புப் படையினரால் அல்லது அவர்களுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் துணைப்படையினரால் பராமரிக்கப்படும் கொலைப் படைகளின் நடவடிக்கையை சுட்டிக்காட்டுகின்றன. இவற்றில் மிகச் சில வழக்குகளையே பொலிஸ் அடையாளம் கண்டுள்ளது, ஆனால் இதுபற்றி எந்தவொரு சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்படவில்லை.

இந்த இருவரையும் கண்டுபிடித்து விடுதலை செய்துகொள்வதன் பேரில், விமலேஸ்வரனும் மற்றும் மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பான அவசர விசாரணையைக் கோரி இலங்கை அதிகாரிகளுக்கு கண்டனக் கடிதங்களை எழுதுமாறு தனது ஆதரவாளர்களுக்கும் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் சோ.ச.க. வேண்டுகோள் விடுக்கின்றது.

கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Gotabhaya Rajapakse,
Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha,
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529
Email: secretary@defence.lk

N. G. Punchihewa Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road, Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924

பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பிவையுங்கள்.

Socialist Equality Party,
P.O. Box 1270,
Colombo, Sri Lanka.
Email: wswscmb@sltnet.lk

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப தயவு செய்து இந்த online படிவத்தை பயன்படுத்தவும்.

அண்மையில் வந்த கடிதங்கள் சிலவற்றை இங்கு வெளியிடுகின்றோம்.

* * *

அன்பின் ஐயா,

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினரும் அவரது நண்பரும் காணாமல் போயுள்ளனர்.

மார்ச் 22 சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் புங்குடு தீவில் இருந்து ஊர்காவற்துறையில் உள்ள வேலனை கிராமத்தை நோக்கி நீண்ட கடல் பாலத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது காணாமல் போயுள்ளமை பற்றி விளக்கம் கிடைக்காமையையிட்டு எனது கவலையை தெரிவிப்பதற்காக நான் இதை எழுதுகிறேன். இந்த கடல் பாலம் கடற்படையின் கடுமையான கண்காணிப்பின் கீழ் இருந்த போதும், பாலத்தின் இரு பகுதியிலும் சோதனை நிலையங்கள் இருப்பதால் கடல் பாலத்திற்குள் நுழைபவர்கள் வெளியேறுபவர்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் வைத்திருக்கக் கூடிய நிலை இருந்த போதிலும் கடற்படை கட்டளைத் தளபதிகளால் இந்த இருவரும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக எந்த விளக்கத்தையும் தரமுடியாமல் இருப்பதையிட்டு நான் கவலையடைந்துள்ளேன்.

இந்த இருவருக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய தக்க விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கவில்லை மற்றும் நடக்கப்போவதுமில்லை என்பது ஜூன் 14 நடந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பொலிஸ் மற்றும் கடற்படை பிரதிநிதிகள் வழங்கிய பதில்களும் மற்றும் பின்பற்றிய வழிமுறைகளும் உறுதிப்படுத்துகின்றன. ஆணைக்குழுவின் விசாரணைக்கு தகவல்களை வழங்க பொலிசும் மற்றும் கடற்படையும் மறுத்துள்ளமை தொடர்பாக உலக சோசலிச வலைத் தளத்தில் கடைசியாக வெளிவந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக எனக்கு தோன்றுகின்ற ஒரே விளக்கம், அவர்கள் கடத்தப்பட்டு கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதேயாகும்.

இந்த வழக்கு தொடர்பாக உறுதியான மற்றும் பகிரங்க விசாரணைகளை முன்னெடுக்கவும் இந்த இருவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உங்களது அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி அவர்களை சாத்தியமானளவு விரைவாக தமது குடும்பத்தினருடன் இணைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

என்.எச்

என்.எஸ்.டபிள்யூ, ஆஸ்திரேலியா

* * *

செயலாளர் கோதபாய இராஜபக்ஷ,

நடராஜா விமலேஸ்வரன் மற்றும் சிவநாதன் மதிவதனனும் மார்ச் 22, 2007 காணாமல் போயுள்ளமை தொடர்பாகவும் மற்றும் அவர்களது நிலைமை தொடர்பாக நிறைவான விசாரணையை நடத்த உங்களது அமைச்சு மறுக்கின்றமை தொடர்பாகவும் ஆழ்ந்த உடன்பாடின்மையுடன் இதை எழுதுகிறேன். இவர்கள் காணாமல் போயுள்ள சம்பவத்தில் இலங்கை பாதுகாப்புப் படைகள் சம்பந்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எந்தவொரு கடுமையான தேடுதலையோ அல்லது விசாரணையையோ முன்னெடுப்பதற்கு உங்களது அலுவலகம் தாமதிப்பதானது முழு உலகமும் காணும் வகையில் உங்கள் மீதும் மற்றும் உங்களது பிரதிநிதிகள் மீதும் குற்றச் சாயத்தை வீசுகின்றது.

விசாரணையின்றி கொல்லப்பட்டவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நூற்றுக்கணக்கான வன்முறைகள் இலங்கையில் இருந்து மனித உரிமை அமைப்புக்களால் மேற்கோள் காட்டப்படுகின்றன. இந்த வழக்குத் தொடர்பாகவும் ஊர்காவற்துறை நீதவான் கடற்படை அதிகாரிகளிடம் தக்க பொலிஸ் விசாரணை நடத்துமாறு ஏற்கனவே கட்டளையிட்டுள்ளார்.

விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனின் நிலைமை தொடர்பாக தீர்மானிப்பதில் உறுதியான முன்னெற்றத்தை எதிர்பார்ப்பேன். 2006 ஆகஸ்ட் 7 அன்று சோ.ச.க. ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாகவும் முழு விசாரணை நடத்துமாறு நான் அவசர வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்த குற்றவியல் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் உண்மையான நடவடிக்கைகளை உலக சமூகம் உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருப்பதோடு எந்தவொரு தொடர்ச்சியான நடவடிக்கையின்மைக்கும் வரலாறு கொடூரமான தீர்ப்பளிக்கும்.

உண்மையுள்ள,

â.H.

* * *

அன்பின் ஐயா,

நான் ஒரு தொழிலாளி என்ற வகையில் சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன் ஆகியோர் காணாமல் போயுள்ளமை தொடர்பான நம்பிக்கையான பதிலைக் கோருகின்றேன். மூன்று மாதங்களுக்கு முன்னர் மார்ச் 22 அன்று இந்த இருவரும் காணாமல் போனதில் இருந்து, எந்த அர்த்தத்திலும் அல்லது எந்தவொரு பெறுமதியான விளக்கத்தை வழங்கும் வகையிலும் விசாரணைகளை முன்னெடுக்க அக்கறையான முயற்சியும் உங்களால் எடுக்கப்பட வில்லை.

காணாமல் போன இருவரின் பெயர்களும் தீவின் ஒரு பகுதியில் புத்தகத்தில் பதியப்பட்டுள்ள போதிலும் மறு பக்கத்தில் பதியப்பட்டிருக்கவில்லை! புங்குடு தீவுக்கு செல்லும் நீண்ட கடல் பாலத்தின் வேலனை நுழைவாயிலில் சுமார் மாலை 5 மணிக்கு காணாமல் போன இருவரையும் கடற்படை அதிகாரிகள் உடல் சோதனை செய்வதையும் மற்றும் சாதாரண உடையில் இருந்த புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவர்களை விசாரிப்பதையும் கண்கண்ட சாட்சிகள் பார்த்துள்ளனர். இந்த சோதனை நிலையத்தில் அவர்கள் கடைசியாக காணப்பட்ட பின்னர் அங்குள்ள கட்டளைத் தளபதி சில்வா, விமலேஸ்வரனின் மனைவியை கடற்படை தளத்திற்கு வருமாறு அறிவித்தல் அனுப்பியுள்ளார். "அவரது சிப்பாய்கள் எவரையும் கைதுசெய்யவில்லை மற்றும் இந்த இருவர் தொடர்பாக அவர்களுக்கு எதுவும் தெரியாது" என்றே இதுவரையும் எங்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.

இங்கு இராணுவம் அதனது உண்மையான நிறத்தை காட்டியுள்ளதோடு மற்றும் இதில் சம்பந்தப்பட்டுள்ள அரசியல் கோழைத்தனம் கவனிக்கத்தக்கதாகும்: அதாவது, இராணுவம் இத்தகைய இழிவான நடவடிக்கைகளை செய்துவிட்டு பின்னர் துணிவும் அடிப்படையும் இல்லாமல் இருக்கின்றது --தாம் செய்ததையே தாம் மறுக்கின்றது. இந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனரா அல்லது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா?

«ü.C

சிட்னி, ஆஸ்திரேலியா.