World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan police stall on disappearance of SEP member

இலங்கை பொலிஸ் சோ.ச.க. உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பான விசாரணையை தட்டிக்கழிக்கின்றது

By our correspondents
2 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பான வழக்கிற்கு நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த இலங்கை பொலிசார், வழக்கிற்கு சமர்ப்பிக்க எதையும் கொண்டு வந்திருக்காததோடு மேலும் கால அவகாசத்தை கோரினர்.

இந்த இருவரும் காணாமல் போனது மார்ச் 22ம் திகதியாகும். அவர்கள் புங்குடு தீவு மற்றும் ஊர்காவற்துறை ஆகிய வட இலங்கைத் தீவுகளை இணைக்கும் நீண்ட கடல் பாலத்திற்குள் நுழையும் போது கடைசியாக காணப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் செறிவாக நிலைகொண்டிருக்கும் இலங்கை கடற்படை கடல் பாலத்தின் இரு பகுதியிலும் சோதனை நிலையங்களை வைத்திருக்கின்றது. விமலேஸ்வரனும் மதிவதனனும் புங்குடு தீவு சோதனை நிலையத்தை கடந்துவிட்டதாக அந்த சோதனை நிலையத்திற்குப் பொறுப்பான கடற்படை கட்டளைத் தளபதி உறுதிப்படுத்திய போதிலும், பாலத்தின் அடுத்த கரையில் உள்ள அதிகாரி இந்த இருவர் தொடர்பாக எதுவும் தெரியாது என மறுக்கின்றார்.

புங்குடு தீவு மற்றும் வேலனையில் (ஊர்காவற்துறை) உள்ள கடற்படை கட்டளைத் தளபதிகளிடமும் மற்றும் மார்ச் 22 கடமையில் இருந்த கடற்படை சிப்பாய்களிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் அடிப்படை நடவடிக்கையை பொலிசார் மேற்கொள்ளவில்லை. ஜூலை 20 ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஒரு மாதத்திற்கு முன்னர் நீதவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டதன் படி அந்த வாக்குமூலங்களை பொலிசார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கத் தவறியதோடு மேலும் ஒரு மாதம் கால அவகாசமும் கோரினர்.

காணாமல் போன இருவரதும் மனைவிமாரின் சட்டத்தரணியான எஸ்.இ. ஏகநாதன் பொலிசாரின் நடவடிக்கையை எதிர்த்ததோடு சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரிகளின் சாட்சிப் பட்டியலை சமர்ப்பிக்க பொலிசாருக்கு கட்டளையிடுமாறு நீதவானிடம் கேட்டுக்கொண்டார். பொலிசாருக்கு ஜூலை 27 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட போதும், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் வெறுங்கையுடன் நீதிமன்றத்திற்கு அவர்கள் வந்தனர். பட்டியலை சமர்ப்பிப்பதற்காக பொலிசாருக்கு மேலும் ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டு ஆகஸ்ட் 3 வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மனைவிமார் இருவரும் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்த மே 10ம் திகதியில் இருந்தே இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுகின்றது. நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு கட்டளையிடப்பட்ட பின்னர், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி குனசேகரவும் மற்றும் வேலனை கடற்படை முகாமின் அதிகாரி டி.எம்.எஸ். திசாநாயக்கவும் மே 18ம் திகதி நீதிமன்றத்திற்கு சமூகமளித்தனர். இந்த இருவரும் காணாமல் போய் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகியும் அவர்களைக் கண்டுபிடிக்க பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வெளிப்படையானதாகும். மார்ச் 22 விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனின் நடமாட்டம் பற்றிய கண்கண்ட சாட்சிகளை தேடிப்பிடித்தது சோசலிச சமத்துவக் கட்சியே அன்றி பொலிசார் அல்ல.

மனைவிமாரிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்யுமாறு பொலிசாருக்கு கட்டளையிட்ட நீதவான், ஜூன் 15 நடக்கவிருந்த முழுநாள் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு வேலனை மற்றும் புங்குடு தீவில் உள்ள கடற்படை கட்டளைத் தளபதிகளுக்கும் அழைப்பாணை அனுப்பினார். இந்த இரு கடற்படை அதிகாரிகளும் நீதிமன்றத்திற்கு வருகை தராததோடு அவர்களைத் தொடர்புகொள்ள பொலிசார் முயற்சிக்கவும் இல்லை. இரு கண்கண்ட சாட்சிகளிடம் மட்டுமே வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தன. இவர்களில் ஒருவர் விமலேஸ்வரனும் மதிவதனனும் புங்குடு தீவு செல்லும் வழியில் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள சோதனை நிலையத்தில் விசாரிக்கப்படுவதை கண்டிருந்தார். மற்றையவர் அவர்கள் புங்குடு தீவில் இருந்து திரும்பத் தயாராகும் போது கண்டுள்ளார்.

பொலிசும் கடற்படையும் நீதிமன்றத்தை அலட்சியம் செய்யும் போக்கு வழமைக்கு மாறானது அல்ல. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளியதில் இருந்து கடந்த ஆண்டில் நூற்றுக்கணக்கானவர்கள், பிரதானமாக தமிழர்கள் காணமல் போயுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். பலமான சூழ்நிலை ஆதாரங்கள் இந்த சம்பவங்களில் பாதுகாப்பு படையினரதும் மற்றும் அவர்களுடன் சேர்ந்து செயற்படும் தமிழ் துணைப்படைகளதும் தலையீட்டை சுட்டிக்காட்டுகின்றன. ஒரு சில சம்பவங்களில் தன்னும் பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிக்கவோ அல்லது குற்றவாளிகளைக் கைதுசெய்யவோ பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜெயரட்னம் அனுரேகா, 20, அவரது கனவர் ஜேசுதாசன் ஜெயரட்னம் காணாமல் போனது பற்றி உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்தார். அவர்களது குடும்பம் வசிக்கும் ஊர்காவற்துறை தீவின் அல்லைப்பிட்டி கிராமத்தில் கடற்படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த ஆகஸ்ட்டில் நடந்த மோதலில் இருவரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறிய பின்னர் நாவாந்துறையில் உள்ள புனித நிக்கலஸ் அகதி முகாமில் தமது இரு பிள்ளைகளுடன் தங்கியிருந்துள்ளனர்.

ஜெயரட்னமும் மேலும் பலரும் பனை விறகு விற்று கொஞ்சம் பணம் சேகரிப்பதற்காக அல்லைப்பிட்டிக்கு சென்றார்கள். இவர்கள் கடற்படையின் காவலரைனைக் கொண்ட ஊர்காவற்துறையையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் நீண்ட பண்ணைப் பாலத்தை கடக்க வேண்டியிருந்தது. அல்லைப்பிட்டியிலும் ஒரு சோதனை நிலையம் இருந்தது. அங்கு கடற்படை முகாம் ஒன்றும் உள்ளது. அல்லைப்பிட்டியில் உள்ள கிராமத்தவர்கள் புலிகளுக்கு உதவுவதாக கடற்படை சிப்பாய்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால் தனது கணவருக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை என அனுரேகா தெரிவித்தார்.

பெப்பிரவரி 7, ஜெயரட்னம் காணாமல் போய்விட்டார். அவருடன் இருந்த சந்தனம் பாஸ்கரன் அனுரேகாவின் கனவர் பண்ணை சோதனை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரிடம் தயக்கத்துடன் தெரிவித்தார். பண்ணை மற்றும் அல்லைப்பிட்டி சோதனை நிலையங்களில் கேட்ட போதும் அங்கு கடமையில் இருந்தவர்கள் காணாமல் போனவர் பற்றி எதுவும் தெரியாது என மறுத்ததாக அனுரேகா தெரிவித்தார். அவர் பொலிசிலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணக் கிளையிலும் மற்றும் இலங்கை கண்காணிப்புக் குழு அலுவலகத்திலும் முறையிட்ட போதும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. தங்களால் எதுவும் செய்ய முடியாது என பொலிசார் கைவிரித்துவிட்டனர்.

விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக உடனடியாக முழு விசாரைணையை நடத்தி அவர்கள் பாதுகாப்பாக விடுதலையாவதை உறுதிப்படுத்த இலங்கை அதிகாரிகளைக் கோருமாறு நாம் சோ.ச.க. ஆதரவாளர்களிடமும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இது, அரசாங்கம் இனவாத யுத்தத்தை உக்கிரப்படுத்துகின்ற நிலையில், அது வெளிப்படையாக நசுக்கும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் பரந்த பிரச்சாரத்தின் ஒரு பாகமாகும்.

கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Gotabhaya Rajapakse,
Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha,
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529
Email: secretary@defence.lk

N. G. Punchihewa Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road, Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924

பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (சோ.ச.க.) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் (உ.சோ.வ.த.) அனுப்பி வையுங்கள்.

Socialist Equality Party,
P.O. Box 1270,
Colombo, Sri Lanka.
Email: wswscmb@sltnet.lk

உ.சோ.வ.த. ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப தயவு செய்து இந்த online படிவத்தை பயன்படுத்துங்கள்.

* * *

அண்மையில் கிடைக்கப்பெற்ற கடிதத்தை இங்கு பிரசுரிக்கின்றோம்.

அன்பின் ஐயா,

மீண்டும்: சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன் ஆகியோர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக.

மார்ச் 22 சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் புங்குடு தீவில் இருந்து ஊர்காவற்துறையில் உள்ள வேலனை கிராமத்தை நோக்கி நீண்ட கடல் பாலத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது காணாமல் போயுள்ளமை பற்றி விளக்கம் கிடைக்காமையையிட்டு எனது கண்டனத்தை தெரிவிப்பதற்காக நான் இதை எழுதுகிறேன்.

காணாமல் போன இருவரும் புங்குடு தீவில் இருந்து ஊர்காவற்துறைக்குத் திரும்பும் வழியில் உள்ள நீண்ட கடல் பாலத்தின் புங்குடு தீவு கரையில் உள்ள சோதனை நிலையத்தில் பாலத்தை கடக்கத் தயாராக மோட்டார் சைக்கிளை மீண்டும் இயக்குவதை சாட்சிகள் கண்டுள்ளனர். அதன் பின்னர் இந்து இருவரும் காணாமல் போயுள்ளனர். இந்த கடல் பாலம் கடற்படையின் கடுமையான கண்காணிப்பின் கீழ் உள்ளது. பாலத்தின் இரு தொங்கலிலும் கடற்படை சோதனை நிலையங்களை பராமரித்து வருவதால் பாலத்தில் நுழைபவர்கள் மற்றும் வெளியேறுபவர்கள் தொடர்பான விபரங்களை அவர்கள் வைத்திருக்க முடியும்.

இன்னமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் விசாரணை இராணுவத்தினதும் பொலிசினதும் தடங்கல்களை எதிர்கொள்கின்றது. உலக சோசலிச வலைத் தளத்தில் அண்மையில் (ஜூலை 27) வெளிவந்த கட்டுரையொன்று குறிப்பிட்டதாவது: "மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பாக தக்க விசாரணையை முன்னெடுக்க கடற்படையும் மற்றும் பொலிசும் தவறியுள்ளமை, இந்த காணாமல் போன சம்பவத்தில் அவர்கள் தலையிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துகின்றது."

அந்தக் கட்டுரை தொடர்ந்தும் தெரிவிப்பதாவது: "இலங்கை பொலிசும் மனித உரிமைகள் ஆணைக் குழுவும் இதுபற்றி முழுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளமை, ஒரு இழிவான செயலாகும். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ 2005 நவம்பரில் நடந்த தேர்தலில் அதிகாரத்திற்கு வந்து நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளியதில் இருந்து, நூற்றுக்கணக்கானவர்கள், பிரதானமாக தமிழர்கள் "காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்" அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 18 அன்று, ஊர்காவற்துறை கிராமத்தவர்கள் 22 வயதான இளைஞர் ஒருவரின் சிதைந்து போன உடலொன்றைக் கண்டெடுத்தனர். அவர் ஆறு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார். இந்த சடலம் கொங்கிரீட் தூண் ஒன்றுடன் நைலோன் நூலால் கட்டப்பட்டு சின்னமடு பிரதேசத்தில் ஒரு கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது."

"இந்த சம்பவங்களின் தடயங்கள் அனைத்தும் பாதுகாப்புப் படையினரால் அல்லது அவர்களுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் துணைப்படையினரால் பராமரிக்கப்படும் கொலைப் படைகளின் நடவடிக்கையை சுட்டிக்காட்டுகின்றன. இவற்றில் மிகச் சில வழக்குகளையே பொலிஸ் அடையாளம் கண்டுள்ளது, ஆனால் இதுபற்றி எந்தவொரு சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்படவில்லை."

உலகம் பூராவும் உள்ள பலர் இத்தகைய காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பாக விழிப்புடன் இருப்பதோடு இந்த விசாரணையையும் மிக நெருக்கமாக அவதானித்து வருகின்றனர். நடராஜா விமலேஸ்வரன் மற்றும் சிவநாதன் மதிவதனனின் நிலைமையையும் மற்றும் அவர்கள் இருக்கும் இடத்தையும் வெளிப்படுத்தும் இந்த வழக்கின் முன்னேற்றத்தை நான் எதிர்பார்த்துள்ளேன்.

தங்கள் உண்மையுள்ள

என்.சி

கிளாஸ்கோவ், பிரித்தானியா