World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Sarkozy government introduces law restricting right to strike

பிரான்ஸ்: வேலை நிறுத்த உரிமையைக் குறைக்கும் சட்டத்தை சார்க்கோசி அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது

By Antoine Lerougetel
11 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

பிரான்சின் பாராளுமன்றம், பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒரு குறைந்த அளவு சேவையை பராமரிக்க வேண்டிய புதிய சட்டம் ஒன்றை ஆகஸ்ட் 2ம் தேதி இயற்றியது. வேலை நிறுத்தத்தை குறைக்கும் வகையிலான வரலாற்று முக்கியத்துவத்தை இந்தப் புதிய நடவடிக்கை பிரதிபலிக்கிறது; குறிப்பாக இரயில், பஸ் மற்றும் புறநகர் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு எதிராக இயக்கப்படுகிறது. அதே நேரத்தில், புதிய சட்டம் ஒரு வேலை நிறுத்தம் ஏற்பட்டால் முதலாளிகளுடைய ஒத்துழைப்புடன் குறைந்தபட்ச சேவைகளின் அளவுகளை ஏற்பாடுசெய்யும் மற்றும் கண்காணிக்கும் பொறுப்பை தொழிற்சங்கங்களுக்கு கொடுக்கிறது.

குறைந்தபட்ச சேவைச் சட்டம் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் பற்றிய தங்கள் விருப்பம் பற்றி 48 மணி நேரத்திற்கு முன் தகவல் கொடுக்க வேண்டும், இல்லாவிடின் சில பொருளாதாரச் சுமைகளை ஏற்க வேண்டும் என்றும் --வேலைநிறுத்தம் ஆரம்பித்த ஒரு வாரத்திற்குப்பின்-- நிர்வாகம் தொழிற்துறை நடவடிக்கை தொடர்வது பற்றி தொழிலாளர்களிடையே இரகசிய வாக்கெடுப்பை நடத்தலாம் என்றும் நிர்ணயித்துள்ளது. இந்த நடவடிக்கை தொழிற்துறை நடவடிக்கை பற்றிய அடுத்த கட்ட செயற்பாட்டின் பொறுப்பை கம்பனியின் நிர்வாகத்திற்கு அடிப்படையில் கொடுத்து விடுகிறது.

சட்டவரைவின் மீதான வாக்கெடுப்பு ஜூலை 3ம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வலதுசாரி கோலிச ஜனாதிபதி, UMP யின் நிக்கோலா சார்க்கோசியினால் அழைப்பு விடப்பட்டு கூடிய சிறப்புக் கூட்டத் தொடரின் கடைசி நாளன்று நடந்தது. தொழிலாளர்களிடம் இருந்து செல்வத்தை பிற்போக்கான வரி சீர்திருத்தங்கள் மூலம் மாற்றுதல், நெறிபிறழும் இளைஞர்களின் பொறுப்புக்கான வயதைக் குறைத்தல், பல்கலைக்கழக கல்வியை சந்தை அழுத்தங்கள் மற்றும் முதலாளித்துவ நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு திறந்துவிடும் வகையில் அதனை மறு ஒழுங்கு செய்தல் ஆகியவற்றுக்கு வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான பல பிற்போக்குத்தனம் நிறைந்த "அவசர கால" சட்ட நடவடிக்கைகளை இக்கூட்டத்தொடர் இயற்றியது.

தன்னுடைய புதிய தொழில்துறை சட்டத்தை இன்னும் பரந்த தொழிலாளர் பிரிவுகளுக்கு, குறிப்பாக கடல், விமானப் போக்குவரத்து, கல்வித் துறைகளில் ஈடுபட்டிருப்போரிடையேயும் விரிவாக்கம் செய்வதை தான் பரிசீலித்து வருவதாக அரசாங்கம் தெளிவாக்கியுள்ளது. கடந்த இரு தசாப்தங்களில், இரயில்கள் மற்றும் சுரங்க இரயில் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் செய்த வேலைநிறுத்தங்கள், ஓய்வூதிய உரிமைகள் போன்ற சமூக நலன்கள்மீது அரசாங்கம் நடத்தும் தாக்குதல்களுக்கு மிக உறுதியான எதிர்ப்பைக் கொடுத்திருந்தன.

இப்புதிய சட்டம் தனியார்மயமாக்குதல், ஓய்வூதிய உரிமைகள் மீதான தாக்குதல்கள் (குறிப்பாக "regimes speciaux", ரயில்வே மற்றும் பிற அரசாங்க தொழிலாளர்கள் கொண்டுள்ள சாதகமான ஓய்வூதியத் திட்டங்கள் மீது) மற்றும் பொதுப் பணி வேலைகள், குறிப்பாக கல்வித்துறையில், ஏராளமான வேலை வெட்டுக்கள் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் திட்டங்களை தயாரிக்கும் நோக்கத்தை கொண்டதாகும்.

பிரெஞ்சு தொழிற்சங்கங்கள், சட்டத்தை எதிர்ப்பதற்கு மிக மேம்போக்காகவும், குறைவாக பங்கு பெற்ற வகையிலும் நடவடிக்கை தினத்தை நடாத்திய வகையில் இச்சட்டத்தை எதிர்கொண்டன; தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே பெருநிறுவன வகையிலான ஒத்துழைப்பு விரிவாக்கப்படும் என்று கூறும் சட்டத்தை ஏற்பதற்கு இவை ஏற்கனவே தங்கள் விருப்பத்தை குறிப்பிட்டுவிட்டன. தொழிலாளர்களின் உரிமைகளை குறைக்கும் இப்புதிய சட்டம் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் பிணைந்து நிற்பதை தீவிரப்படுத்துவதுடன், தொழிலாளர்கள் சுயாதீனமான நடவடிக்கையை தனிமைப்படுத்தி ஒடுக்குவதற்கும் அதிகாரத்துவத்தின் திறனை வலுப்படுத்தியுள்ளது.

தொழிலாளர்கள், "முதலாளிகளிடம் தாங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுவது பற்றி... குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்னரே தகவல் கொடுக்க வேண்டும்" என்று சட்டம் கூறுகிறது; இது மேலும் கூறுவதாவது: "வேலைநிறுத்தத்தில் தான் பங்கு கொள்ளும் விருப்பத்தை முதலாளியிடம் தெரிவிக்காத ஊழியர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாவர்." தண்டனை என்ன என்பது பற்றி விவரமாகக் கூறப்படவில்லை.

ஒரு வார வேலைநிறுத்தத்திற்கு பின்னர் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடர விரும்புகின்றனரா என முதலாளிகள் இரகசிய வாக்கெடுப்பு நடத்தும் உரிமை தொழிலாளர்களை தனிமைப்படுத்தும் வழிவகை என்று கொள்ளப்படலாம். ஒரு இரகசிய வாக்கெடுப்பு சிறுபான்மையினராக அவர்களை தள்ளிய பின்னர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று முதலில் கூறப்பட்டுள்ள கருத்து திரும்பப் பெறப்படுதல் நடக்கலாம்; ஏனெனில் அது அரசியலமைப்பு குழுவினால் முரணானது என்று தீர்ப்பளிக்கப்படலாம் மற்றும் வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதன் காரணமாகவும் ஆகும். புதிய சட்டம் வேலைநிறுத்தம் செய்பவர்களின் பரந்த கூட்டத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை கீழறுக்க வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், தொழிலாளர்கள் பரந்த கூட்டத்தில் கூட்டாக வாக்களித்தல் என்பதற்கு பதிலாக தனி நபர்கள் ஆக வாக்களிக்க வேண்டும் என்று கூறுகிறது.

சட்டத்தின் ஒரு பகுதியான உத்தியோகபூர்வ தொழிற்சங்க வேலைநிறுத்த முன்னறிவிப்பை கொடுத்தல் (Préavis de grève) பற்றி தொழிற்சங்கங்களும் "இடது கட்சிகளும்" எதிர்ப்பை காட்டவில்லை, மேலும் செய்தி ஊடகங்களும் அதிக கவனம் செலுத்தவில்லை. ஒப்பந்தத்தை மீறுவதற்காக வழக்குத் தொடர்வதற்கு எதிராக இந்த வேலைநிறுத்த முன்னறிவிப்பு தனிப்பட்ட வேலைநிறுத்தக்காரர்களுக்கு ஒரு சட்டபூர்வ மறைப்பை கொடுக்கிறது. அத்தகைய முன்னறிவிப்பை கொடுப்பதற்கு முன்பு "ஒரு தொழிற்சங்க அமைப்பு எந்தக் காரணங்களுக்காக வேலைநிறுத்த முன்னறிவிப்பை அது கொடுக்கிறது என்பதற்கான காரணங்களை முதலாளியிடம் தெரிவிக்க வேண்டும்" என்று புதிய சட்டம் கூறியுள்ளது.

முதலாளி தொழிற்சங்க அமைப்புக்களுடன் அத்தகைய முன்னறிவிப்பு வந்த மூன்று தினங்களுக்குள் பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டும்; இது ஒரு வாரகாலம் நீடிக்கலாம். இது சட்டபூர்வ பெருநிறுவனமுறையை கூட்டுகிறது: அதாவது தொழிற்சங்க அதிகாரத்துவம் பெருந்திரளான தொழிலாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்களை ஒதுக்கி விட்டு, முதலாளிகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.

இத்தடையுடன் கூட முதலாளிகள், அரசு, தொழிற்சங்கங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் தொழிலாளர்கள் மீது தவிர்க்க வேண்டிய அழுத்தம் கொடுக்கும் இந்த தடையை தவிர, "மற்றும் ஒரு வேலைநிறுத்த முன்னறிவிப்பு கொடுக்கப்படக்கூடாது ... தற்போதைய வேலைநிறுத்த முன்னறிவிப்பு காலாவதியாவதற்கு முன் அல்லது அதன் வழிப்படி நடத்தப்பட வேண்டிய முறைகள் முடிக்கப்படும்வரை" என்றும் கூறப்பட்டுள்ளது-- அதாவது இன்னும் கூடுதலாக பத்து நாட்களுக்கு முன்னறிவிப்பு கொடுக்கப்பட முடியாது.

முதலாளிகள் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாதவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பதிலாக அவர்களுடைய பணியை செய்வதற்காக செயல்பாட்டை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கும் விதிக்கு தொழிற்சங்கங்கள் எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்; அதாவது மாற்றுப் பணியாளர்களை கொண்டு சேவையை தொடரலாம் என்பது பற்றி. தொழிற்சங்கங்கள், முதலாளிகளுக்கு இடையே சேவைத் தொடர்ச்சி பற்றிய திட்டம் உடன்பாடு காணப்பட்டு, "எதிர்பார்க்கக்கூடிய தொந்தரவை தவிர்ப்பதற்காக, பணி அமைப்பு முறைக்கு வேலையாட்கள் திரட்டப்படலாம், கிடைக்கக் கூடிய பணியாளர்கள் தக்க போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படலாம். வேலைநிறுத்தம் ஏற்பட்டால் கிடைக்கக்கூடிய பணியாளர்கள், வேலைநிறுத்தத்தில் இல்லாதவர்களை ஈடுபடுத்தப்படலாம்." என்று சட்டம் கூறுகிறது.

புதிய குறைந்தபட்ச பணிச் சட்டம், தொழிற்சங்களை வேலைநிறுத்தம் செய்யாதோரால் நிர்பந்திக்கப்பட்ட கருங்காலித்தனத்தை ஏற்றுக்கொள்ளும் உடன்பாடுகளில் ஈடுபட அழைக்கும், அவ்வாறு அவர்கள் செய்ய மறுக்கின்றனர் என்றால் ஒப்பந்தத்தை மீறுபவர்கள் என்று அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.

ஒரு வெகுஜன இயக்கத்தின்போது வெளிப்படும் மற்றும் தொழிற்சங்க ஒத்துழைப்பு என்னும் இறுகிய உறையில் இருந்து உடைத்துக் கொண்டு வருகின்ற வேலைநிறுத்த குழுக்கள் மற்றும் பெருந்திரள்கூட்டங்கள், என்பவை எவ்விதச் சட்ட பாதுகாப்பையும் பெறாது; வேலைநிறுத்தங்களும் மிக அதிக அளவில் குற்றத் தன்மையுடையதாக ஆக்கப்பட்டுவிடும்; அதற்கு உத்தியோகபூர்வ தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒப்புதலும் கொடுக்கப்படும்.

ஆயினும், சட்டத்தின் மிகக் கொடிய பகுதி எவ்வித கருத்துத் தெரிவிப்பும் இல்லாமல் இருக்கிறது; ஏனெனில் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் பிரான்சின் இடதுகள் மற்றும் தீவிர இடது கட்சிகள் என அழைக்கப்படும் அமைப்புக்களுடைய உடன்பாடு இதற்கு உள்ளது: "முதலாளியும் தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜனவரி 1, 2008 க்குள் கையெழுத்திடும் நோக்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்; பூசல்களை தவிர்க்கும் வழிவகை மற்றும் சமூக உரையாடலை வளர்க்கும் போக்கு உடைய வடிவமைப்பு உடன்பாட்டிற்கு அவை பாடுபட வேண்டும்." இங்கு வர்க்க ஒத்துழைப்பு கருத்துப்படிவமான "சமூகப் பங்காண்மை" என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையங்களுக்கு மிகவும் பிடித்த கருத்து ஒரு சட்டபூர்வ கட்டாயமாகப் படிம நிலை பெறுகிறது.

சார்க்கோசிக்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவு

சார்க்கோசி, தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் இருந்து இதுவரை தான் பெற்றுள்ள ஆதரவை அடுத்து கூடுதலான வகையில் தொழிலாளர்கள் உரிமை மீது தாக்குதல் நடத்துவதற்கு ஊக்கம் பெற்றுள்ளார். தான் ஜனாதிபதி பதவி ஏற்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு சார்க்கோசி ஐந்து உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்க கூட்டமைப்புக்களை விவாதங்களுக்கு அழைத்திருந்தார். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் அவருடன் ஒத்துழைப்பு தருவதாக தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தனர்.

இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் பரந்த பிரிவுகள் சார்க்கோசியின் சர்வாதிகார, வணிகச் சார்புடைய செயற்பட்டியலுக்கு எதிராக எதிர்ப்புக் காட்டிவருவதற்கு இது முற்றிலும் மாறுபாட்ட தன்மை உடையதாகும். மே 6ம் தேதி சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து தன்னியல்பாக தோன்றிய எதிர்ப்புக்களில் இருந்து தொழிற்சங்கத் தலைவர்கள் தங்களை விரைவில் துண்டித்துக் கொண்டு விட்டனர்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் குறைந்தபட்ச சேவைச் சட்டத்தின் இறுதி வரைவை பார்த்தபின் சில புகார்களை எழுப்பி, 48 மணி நேர முன்னறிவிப்பு பற்றிய வேலைநிறுத்த சட்டத்தின்படி நடக்காத தொழிலாளர்கள் தண்டிக்கப்படுவர் என்பது பற்றித் தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்தனர். ஆனால் அவர்களுடைய எதிர்ப்பு முற்றிலும் கபடத்தன்மை உடையது ஆகும்; ஏனெனில் இந்த விதியை ஒரு சட்டபூர்வ கட்டாயத்திற்கு உட்படுத்தப்போவதாக சார்க்கோசி எப்பொழுதுமே தெளிவாகக் கூறி வந்திருந்தார். இரண்டாம் உலகப்போருக்கு பின் மிக வலதுசாரித் தன்மை நிறைந்த பிரெஞ்சு ஜனாதிபதியுடன் அதிகாரத்துவத்தின் ஒத்துழைப்பு தொழிலாள வர்க்கத்தினை நிராயுதபாணியாக்கி உள்ளளதுடன், சார்க்கோசியின் புதிய சட்டத்தையும் சட்டரீதியாக்கியுள்ளது.

CGT (கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்திற்குள் இருக்கும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின்) ரயில்வே பிரிவின் பொதுச் செயலாளரான Didier Le Reste ஜூலை 31ம் தேதி France 2 TV யில் சட்ட வரைவு பற்றி அடிப்படையில் அவருக்கு கருத்து வேறுபாடுகள் கிடையாது என்று அறிவித்தார். செப்டம்பர் மாதம் "பாராளுமன்ற வழிவகைகளின் இறுதியில் ஏதோ ஒரு விதத்தில் சட்டவரைவு இன்னும் சற்று தீவிரமாக்கப்படும் என்றால் அது இன்னும் அதிக பேச்சுவார்த்தைகளுக்கு தடையாகக் கூடும்" என்று அவர் கூறினார். சார்க்கோசியின் நடவடிக்கைகளுக்கு எதிராக எத்தகைய போராட்டங்களையும் நடத்த வேண்டிய பொறுப்பு தொழிற்சங்கங்களுக்கு இல்லை என்று மறுத்த அவர், அரசாங்கத்திடம் முன்முயற்சியை தள்ளிவிடும் வகையில் கூறினார்; "பந்து இப்பொழுது அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினர் பக்கம் களத்தில் உள்ளது."

பிரான்சில் "நடவடிக்கை தினத்தில்" CGT பங்கேற்றது; ஆனால் வந்திருந்தவர் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும். சட்டம் விவாதிக்கப்பட்டிருந்த பாரிசின் பாராளுமன்ற கட்டிடமான Palais Bourbon க்கு வெளியே கிட்டத்தட்ட 2,000 தொழிலாளர்கள் கூடியிருந்தனர். மற்ற பெரு நகரங்களில் ஒன்றில் இருந்து 200 எதிர்ப்பாளர்கள்தான் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதாகத் தகவல்கள் வந்துள்ளன.

உண்மையில், ஜூலை 31 மக்கள் திரட்டப்பட்டது வேண்டுமென்றே தொழிற்சங்கங்களால் மிகச் சிறிய எண்ணிக்கையில் செய்யப்பட்டது. பல ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த முன்னறிவிப்பை கொடுக்கவில்லை, பேரணி நடத்த மட்டுமே அழைப்பு விடுத்திருந்தன. பாரிஸ் பகுதியில் பல ரயில்வே தொழிலாளர்களுக்கு பாராளுமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் இருப்பதாகக் கூடத் தெரிந்திருக்கவில்லை. பெரும்பாலான ரயில்கள் வழக்கம்போல் ஓடின.

பாராளுமன்றத்தில் சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில், பல பிராந்திய சோசலிஸ்ட் கட்சி தலைவர்கள் சட்டம் இயற்றப்பட்டுவிட்டால் அதைச் செயல்படுத்தப் போவதாகவும் உள்ளூர் போக்குவரத்தில் குறைந்த பட்ச சேவையை நிறுவ இருப்பதாகவும் கூறியுள்ளனர். ஏனெனில் நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களை காத்துக்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் திறனை கட்டுப்படுத்தும் சார்க்கோசியின் உந்துதலுடன் அவர்களுக்கு உடன்பாடுதான்; குறிப்பாக பொதுப் போக்குவரத்தை தனியார் மயமாக்குவது பற்றி; இவை பிரெஞ்சு பெரு வணிகத்தின் இலாபத்தை பெருக்கும் வடிவமைப்புக் கொண்டுள்ளதுடன் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் பிரான்சின் நிலையையும் பெருக்கும்.

சோசலிஸ்ட் கட்சிக்கும் சார்க்கோசிக்கும் எந்த அளவிற்கு உடன்பாடு பற்றிய பரப்பு உள்ளது என்பது ஆகஸ்ட் 3ம் தேதி பழமைவாத நாளேடான பிகாரோவில் வந்துள்ள அறிக்கையில் நிரூபணம் ஆகியுள்ளது. சமீபத்தில் கட்சியைவிட்டு நீங்கி சார்க்கோசி முகாமில் சேர்ந்து, நிர்வாகத்தில் சேர்ந்துள்ள சோசலிஸ்ட் கட்சி பிரதிநிதிகளின் சமரச நிலைப்பாட்டை பற்றி இக்கட்டுரை விளக்குகிறது. "சோசலிஸ்ட்டுக்கள் அதிகம் செயல்படுவதில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளனர்" என்று கூறும் கட்டுரை தொடர்வதாவது: "சமூக-தாராளக் கொள்கை உடைய Jean-Marie Bockel பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும்; அவர் புதிய கருத்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். Martin Hirsch, Fadela Amara மற்றும் Jean-Piere Jouyet ஆகியோர் தனிப்பிரிவில் உள்ளனர்; எந்த சோசலிஸ்ட்டும் அவர்களை சந்தர்ப்பவாதிகள் என்று குற்றம் சாட்டவில்லை; அவர்கள் தங்கள் செயலில் நேர்மையாக இருப்பதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளனர். 'அவர்கள் உண்மையில் அரசாங்கக் கொள்கையில் செல்வாக்கு செலுத்த முடியும் என்று நினைக்கின்றனர்.' என்று ஒரு மூத்த சோசலிஸ்ட் கட்சியின் அதிகாரி கூறினார்."
எதிர்பார்க்கக்கூடிய வகையில், புதிய சட்டம் Lutte Ouvrière (LO) மற்றும் Ligue Communiste Révolutionnaire (LCR) ஆகியவற்றால் விமர்சிக்கப்பட்டுள்ளன; இவை எதிர்ப்புக் காட்டாததற்காக தொழிற்சங்கங்களையும் விமர்சித்துள்ளன. ஆனால் இத்தகைய அமைப்புக்கள் புதிய சட்டத்தின் பெருநிறுவனத் தன்மையை அடையாளம் காண முற்றிலும் தவறி விட்டன; இது தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்துவத்தின் அதிகாரத்தை பெருக்கியுள்ளது. அதிகாரத்துவத்தின் பங்கு பற்றிய தர்க்கத்தை வெளிக் கொண்டுவந்து, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் சீர்திருத்தவாதக் கட்சிகளின் தொழிற்சங்கங்களில் இருந்து நனவாக உடைத்துக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுவதற்குப் பதிலாக, இந்த அமைப்புக்கள், அதிகாரத்துவம் தெருக்களில் இருந்து வரும் அழுத்தம் போர்க்குணம் ஆகியவற்றின் மூலம் சீர்திருத்தப்பட முடியும் என்ற வெற்று நம்பிக்கையை பிரச்சாரம் செய்ய முயல்கின்றன.

பிரான்சின் போருக்குப் பிந்தைய காலத்தில் தொழில்துறை உறவுகள் முறையில் முன்னோடியில்லாத வகையில் ஒரு தாக்குதலை இச்சட்டம் பிரதிபலித்தாலும், கன்சர்வேடிவ் மற்றும் வணிக வட்டங்கள் இது போதுமான அளவிற்குத் திறன் உடையதில்லை என்று குறைகூறியுள்ளன.

ஆகஸ்ட் 4ம் தேதி பிகாரோ பதிப்பு பரந்த அளவில் தாராள அமைப்புக்களிடம் இருந்து மேற்கோளிட்டுள்ளது; அவை சார்க்கோசி பரப்பின் மேற்பகுதியைத்தான் சீரமைக்கிறார் என்ற உணர்வில் உள்ளன. வரி செலுத்துவோர் அமைப்பான Contribuables associés, உடைய சார்பில் பேசும் Benoite Taffin, கூறியுள்ளார்: "இயற்றப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் குடியரசின் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த பிரெஞ்சு மக்களின் எதிர்பார்ப்புக்களைவிட மிகக் குறைவான தன்மையைத்தான் கொண்டுள்ளன ...தன்னுடைய பிரச்சாரத்தின்போது சார்க்கோசி, காலை, மாலை சுறுசுறுப்பான நேரங்களில் இயல்பான சேவை இருக்கும் என்று உறுதியளித்திருந்தார். இப்பொழுது பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ள சட்டம் அப்படி ஏதும் கூறாமல், உள்ளூர் அரசாங்கத்திற்கு முன்முயற்சியை விட்டுள்ளது."

மற்றவர்கள் ஜனாதிபதி "தொழிற்சங்கங்களுடன் மோதல் என்ற அச்சத்தை தவிர்க்க முயல்கிறார்" என்று குற்றம் சாட்டி, "குடியரசின் ஜனாதிபதி புனிதமான பசுக்கள் மீது கைவைப்பது என்றால் தெருக்களில் பூசல் என்பது தவிர்க்க முடியாதது" என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

புதிய சட்டம் ஒரு தொடக்கம்தான் என்பதில் ஐயமில்லை. இன்னும் கூடுதலான, பரந்த அளவில் வேலைநிறுத்தத்திற்கு எதிராக நடவடிக்கை கொண்டுவரப்பட வேண்டும் என்றால் அதற்கு பிரெஞ்சு அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்; அத்தகைய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் சார்க்கோசி உறுதி கொண்டுள்ளார். கூடுதலான வாங்கும் வரி (TVA) சுமத்தி செல்வந்தர்களுக்கு வெளிப்படையான வரி விலக்கு கொடுக்க அவர் செய்த முயற்சி, அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு தேவையான UMP கட்சிக்கு எதிர்பார்த்த மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை கொடுக்காத வகையில் தேர்தலில் அவருக்கு பதிலடியை கொடுத்தது; அது கிடைக்காதது அவருடைய திட்டங்களுக்கு சற்று தடைதான்; ஆனால் இவருடைய சட்டமியற்றல்களின் சமீபத்திய செயல் ஒரு ஆரம்பந்தான் என்பதை சார்க்கோசி தெளிவுபடுத்தியுள்ளார்.

தன்னுடைய கோடை விடுமுறைக்கு அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் செல்லுமுன் (அங்கு அவர் ஜனாதிபதி புஷ்ஷையும் சந்திக்கிறார்), சார்க்கோசி இறுமாப்புடன் கூறினார்: "விடுமுறை காலத்திற்கு பின்னர் நாங்கள் வலுவாக முயல்வோம் என்ற உண்மையை மறவாதீர்கள்"; நிதிய ஏடான Les Echos, "சார்க்கோசி சீர்திருத்தங்கள் நிறைந்த இலையுதிர்காலத்திற்கு உறுதிமொழி அளிக்கிறார்" என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டது.