World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Tensions mount between Georgia and Russia

ஜோர்ஜியா, ரஷ்யா இடையே அதிகரிக்கும் பதட்டங்கள்

By Niall Green
18 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வாரம், ஜோர்ஜியாவின் எல்லைக்குள் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலுக்கு, ஜோர்ஜிய அதிபர் மிக்கைல் ஷாக்கஸ்வில் ரஷ்ய விமானப்படையை குற்றஞ்சாட்டி இருந்தததால், ஜோர்ஜியவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதட்டம் அதிகரித்தது. ஜோர்ஜிய தலைநகர் டிபிலிஸில் இருந்து 35 மைல்கள் வடமேற்கில் இருக்கும் கோரி பகுதியிலுள்ள ஸிட்லுபானி கிராமத்தில் ரடுகா கேஎச்-58 ரக ஏவுகணை தாக்குதல் நடாத்தியதாக ஜோர்ஜியா, மாஸ்கோ மீது குற்றஞ்சாட்டியது.

ஜோர்ஜிய வெளியுறவுத்துறை மந்திரி கெலா பெஷ்சுவாஸ்வில் செய்தியாளர்களிடம், "ஜோர்ஜியாவின் ஆட்சிக்குரிய பிராந்தியத்தில் குண்டுவீச்சு நடத்தி இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்தி இருக்கிறோம். குண்டுவீச்சு நடைபெற்றதற்கான மறுக்கமுடியாத சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றன." என்று தெரிவித்திருந்தார்.

பெஷ்சுவாஸ்வில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆகஸ்டு 6 -ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலையில் ஜோர்ஜிய விமான எல்லையில் இரண்டு விமானங்கள் நுழைந்து இருக்கின்றன என்பதை ராடார் பதிவு செய்திருப்பதுடன், நேரில் பார்த்தவர்களும் சாட்சி கூறி இருக்கிறார்கள். ஒரு ரஷ்ய குண்டுவீச்சு சுகோய்-24 ரக போர் விமானத்தால் வீசி எறியப்பட்டிருக்காலம் என குற்றஞ்சாட்டப்படும் இந்த 140 கிலோ எடையுள்ள குண்டு அதிஷ்டவசமாக வெடிக்கத் தவறிவிட்டது." எனக் கூறினார்.

உள்ளூர்வாசியான லியா சுட்ரி ரெய்டர் என்பவர் செய்தி நிறுவனத்திடம் கூறி இருப்பதாவது: " நான் என் தோட்டத்தில் அமர்ந்திருந்தபோது வானத்தில் விமானத்தை பார்த்தேன். பின்னர் தரையில் இருந்து வானம் உயரத்திற்கு புகை எழும்புவதை பார்தேன். பின்னர்தான் நான் பெரிய வெடி சத்தத்தைக் கேட்டேன். அதன்பின்னர் அந்த விமானம் திரும்பிச் சென்றுவிட்டது." என்றிருக்கிறார்.

இதற்காக டிபிலிசியில், ஜோர்ஜிய வெளியுறவுத் துறை அமைச்சகம், அந்நாட்டிற்கான ரஷ்ய தூதரை வரவழைத்து ஒரு அதிகாரபூர்வ குற்றச்சாட்டு நகலை அவரிடம் அளித்தது. ஆகஸ்டு 8-ம் நாள், அதிபர் ஷாக்கஸ்வில்லி செய்தித்தாள்களுக்கு தெரிவிக்க ஸிட்லுபானி சென்று, இந்த ஆத்திரமூட்டுதல் அனைத்துமே ஜோர்ஜியாவின் ஸ்திரத்தன்மையை வலுவிழக்கச் செய்ய பயவுணர்ச்சியை கிளப்புவதற்கும், அதன் கொள்கைகளை மாற்றி அமைக்கவும் நோக்கங்கொண்டிருக்கின்றன என்றார்.

உள்நாட்டு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஷோட்டா உஸ்டியாஷ்விலியில், பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறும் போது, இந்த விமானங்கள் ஜோர்ஜியா மீது சுமார் 70 கிலோமீட்டர் (43 மைல்கள்) உயரத்தில் பறந்திருக்கின்றன என்றார். அவர் மேலும் கூறுகையில், இந்த விமானங்கள் தாக்குதலைத் துவங்குவதற்கு முன் வடக்கு காகசஸில் உள்ள ரஷ்ய தளத்தில் இருந்து புறப்பட்டு இருக்கின்றன. பின் இவை ஒரு வீட்டிற்கு அருகிலுள்ள சோளம் மற்றும் உருளைக்கிழங்கு பண்ணையில் தரை இறங்கி இருக்கின்றன என்றார்.

"ஜோர்ஜிய பகுதிகளில் ஊடுருவுவது ரஷ்ய விமானப்படைக்கும் மற்றும் அதன் அரசாங்க துருப்புக்களுக்கும் வழமையான நடவடிக்கையாகி ஆகிவிட்டது என்று தெரிவித்த உஸ்டியாஷ்விலி, "ஆனால் இந்த சம்பவத்தில் என்ன வேறுபாடு என்றால், அவர்கள் இம்முறை ஜோர்ஜிய வான்பிராந்தியத்தை மிகவும் அச்சுறுத்தி விட்டார்கள் என்பதுடன், அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த குண்டையும் இம்முறை பயன்படுத்தி இருக்கிறார்கள்" என்றார்.

ஆனால் இதில் தாம் எவ்வகையிலும் சம்பந்தப்படவில்லை என்று மாஸ்கோ மறுத்திருக்கிறது. "திங்கட்கிழமை அல்லது செவ்வாய்கிழமை எந்த நாளிலும் ரஷ்யாவின் விமானங்கள் ஜோர்ஜியாவின் மீது பறக்கவில்லை" என்று ரஷ்ய விமானப்படைத் தளபதி கொலொனெல் அலெக்சாண்டர் டிராபைஸ்ஷெவ்ஸ்கி கூறி இருக்கிறார்.

ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்துபோன தெற்கு ஒசிட்டியா மாகாணத்தின் எல்லைக்கு மிக அருகில் இருக்கும் ஸிட்லுபானி, மாஸ்கோவில் இருந்து பல அரசியல் மற்றும் இராணுவ ஒத்துழைப்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1994-ல் நடந்த ஒரு சிவில் யுத்தத்திற்கு பின்னர் ஜோர்ஜியாவில் இருந்து பிரித்து வைக்கப்பட்டு இருக்கும் அம்மாகாணத்தின் அரசு, இதுவரை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. இந்நிலையில், தெற்கு ஒசிட்டியாவின் மெய்நடப்பில் உள்ள அரசாங்கத்தின் தலைவர் எடுவார்டு கொகோய்ட்டி கூறும் போது, ரஷ்யாவிற்கு பதிலுக்கு பதில் அளிக்கும் வகையில் ஜோர்ஜிய விமானங்கள் பெரியளவில் தாக்குதலில் ஈடுபட்டன எனத் தெரிவித்திருக்கிறார். இது ஒரு திட்டமிட்ட ஆத்திரமூட்டல் எனக் கூறும் கொகோய்ட்டி, "திங்கட்கிழமை தெற்கு ஒசிட்டியா மீது ஒரு ஜோர்ஜிய விமானம் கடந்து சென்று நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு ஒசிட்டியன் கிராமங்களின் மீது இரண்டு குண்டுகளை வீசியது" என ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறி இருக்கிறார்.

மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்விற்கான ஜோர்ஜிய அமைப்பின் தலைவர் அலெக்சாண்டர் ரோன்டெல் கூறுகையில், "ரஷ்யர்கள் எப்போதுமே குண்டு நியூசிலாந்து அல்லது செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்ததாக கூறி நடிப்பார்கள். ஆனால் எங்களின் பெரிய அயலவர்கள் தான் இந்த சிறிய பரிசை அளித்து மகிழ்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இது எங்களின் செல்வாக்கெல்லை; நீங்கள் உங்கள் இடத்தைக் கண்டுகொள்ளுங்கள் என்பது தான் இதன் மூலம் மேற்கில் இருப்பவர்களுக்கு ரஷ்யா அளிக்கும் சேதி." என்று தெரிவித்திருக்கிறார்.

ராடார் இயந்திரங்களை தாக்க வடிவமைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்படும் இந்த ஏவுகணை, குறிப்பாக ஜோர்ஜியா அதன் ராடார் வலைப்பின்னலின் ஒரு பகுதிகளை வைத்திருக்கும் இடத்தை தாக்கும் இலக்குடன் வீசப்பட்டு இருப்பதாக ஜோர்ஜியாவின் அதிகாரபூர்வ ஆணையங்கள் அறிவுறுத்தி இருக்கின்றன. இருப்பினும், மாகாண நிர்வாகத்தின் அனுமதியுடன் ஒரு வழமையான நடைமுறையாக இரண்டு ரஷ்ய விமானப்படை விமானங்கள் தெற்கு ஒசிட்டியாவின் தெற்கு பகுதியின் மேலே பறந்ததாகவும், மாஸ்கோவுடன் தொடர்புடைய தெற்கு ஒசிட்டியாவின் இராணுவக்குழு அவற்றை தரையில் இருந்து தாக்கியதாகவும் ஜோர்ஜிய ஊடகம் ஒன்று ஒரு கதையைக் கூறி இருக்கிறது. தோளில் வைத்து செலுத்தக் கூடிய ராக்கெட்களின் தாக்குதலில் இருந்து தப்புவதற்கு, விமானங்களில் ஒன்று, ரடுகா கேஎச்-58 ரக ஏவுகணையை வீசி இருக்கலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

தெற்கு ஒசிட்டியாவில் இருக்கும் ரஷ்ய படைப்பிரிவின் கமாண்டர், ஜெனரல் மரட் குலக்மெடொவ் கூறும் போது, அடையாளம் தெரியாத ஒரு விமானம் தெற்கு ஒசிட்டியாவின் மீது பறந்து வந்து அந்த குண்டுகளை வீசியது, இதனால் அதன் மீது தரையில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்றார். இந்த விமானத்தைப் பற்றி எந்த அடையாளமும் கிடையாது, ஆனால் அது ரஷ்யாவில் இருந்து அல்ல, ஜோர்ஜியாவில் இருந்து வந்திருந்தது என்று அவர் முறையிட்டு இருக்கிறார்.

மற்றொரு விளக்கத்தில், அதாவது சில ஜார்ஜிய உள்துறை அமைச்சக அறிக்கைகளின்படி, இந்த கிராமத்தில் விழுந்த அந்த வெடிக்காத ஏவுகணைகள், தரையில் இருந்து வானுக்கு தாக்கும் ராக்கெட்டுகளாக இருக்கலாம்; அவை தெற்கு ஒசிட்டியாவால் அல்லது ஜோர்ஜியாவால் அந்த இரண்டு ரஷ்ய விமானங்களின் மீது செலுத்தப்பட்டு இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன.

காகசஸில் அதிக பதட்டம்

மாஸ்கோ, முன்னால் சோவியத் ஒன்றியத்தில் இருந்த பகுதிகளில் ஓர் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக தன் தகுதியை நிலைநிறுத்த பொறுப்பற்ற வகையிலும், எதிர்ப்புதன்மையுடனும் அதிகரித்தளவில் முயலும் ஒரு ரஷ்ய இராணுவ ஆத்திரமூட்டல் என்பது நிராகரிக்கப்பட கூடியதல்ல. காகசஸ் பகுதியில் கொடூரமான ஆத்திரமூட்டல்களுக்கு ஒரு நீண்ட மற்றும் இரத்த வரலாற்றை புட்டின் நிர்வாகம் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அருகில் இருக்கும் ரஷ்ய குடியரசான செசன்யாவை கூறலாம். இங்கு, தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்த கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு மிருகத்தனமான யுத்தங்களை கிரெம்ளின் சந்தித்திருக்கிறது.

ஆனால் உண்மையில் இது ரஷ்யாவின் தாக்குதலோ அல்லது ஜோர்ஜியாவின் சதிவேலையோ, எதுவாயினும், இந்த காலகட்டம் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்த காகசஸில் பிராந்தியத்தில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜோர்ஜியாவின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட, மாஸ்கோவுடன் நட்பு கொண்டிருக்கும் இரண்டு தனித்து இயங்கும் மாகாணங்களின் இறையாண்மையின் மீது தற்போதிருக்கும் தகராறில் பதட்டத்தை நீடிக்க அனைத்து பக்கங்களில் இருந்தும் அச்சம்பவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உளவு பார்த்ததாக சந்தேகித்து ஜோர்ஜியா நான்கு ரஷ்ய இராணுவ அதிகாரிகளை வெளியேற்றிய போதும், அதற்கு பதிலாக மாஸ்கோ பல ஆயிரக்கணக்கான ஜோர்ஜியன் தொழிலாளர்களை வெளியேற்றி, ஜோர்ஜிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பழங்கள் மற்றும் வைன் போன்றவற்றின் இறக்குமதியை தடுத்ததன் மூலம், இந்த வருடத்திற்கு முன்னதாக ஏற்பட்ட சிக்கலின் காரணமாக, ரஷ்யா மற்றும் ஜோர்ஜியா இடையே ஏற்கனவே ஒரு வெறுப்புணர்ச்சி இருந்து வருகிறது.

ஸிட்லுபானியில் ஒசிட்டியன் மற்றும் ஜோர்ஜிய கிராமத்தவர்கள் இடையே இருந்த சுமூகமற்ற உறவுகள், கடந்த ஆண்டு, அந்த இரண்டு குழுவினரிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பால் மேலும் நலிவுற்றது. இதில் ஒரு குழு ஜோர்ஜியாவில் இருந்து விடுபட சுதந்திரத்தை கோரியது; மற்றொன்று அதனுடனேயே இருக்க விரும்பியது. 1990-ம் ஆண்டின் ஆரம்பத்தில் நடந்த உள்நாட்டு யுத்தத்திற்கு பின்னர், சுமார் 1,60,000 ஜோர்ஜியர்கள் தெற்கு ஒசிட்டியாவை விட்டு வெளியேறினார்கள்; இதில் பாதிக்கும் குறைவானவர்கள் மட்டுமே தங்கள் வீட்டிற்கு திரும்பினார்கள்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த மற்றொரு நிகழ்வில், அதாவது ஒரு பிரச்சனைக்குரிய பகுதியான அப்காஜியாவில் (இது ரஷ்யா ஆட்சியில் இருக்கும் மற்றொரு பிரிவினைப் பகுதியாகும்.), தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியான கொடொரி கோர்ஜில் ரஷ்யா தனது இராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயற்சித்ததற்கு ஜோர்ஜிய அரசாங்கம் குற்றம் சாட்டி இருந்தது.

சுமார் 500 ரஷ்ய துருப்புக்கள் தெற்கு ஒசிட்டியாவில் குவிக்கப்பட்டுள்ளனர். மாஸ்கோ தனது இராணுவ தளவாடங்களை அப்பகுதிக்கு நகர்த்தி இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஜோர்ஜியாவும் இந்த பிரிவினை கோரும் மாகாணங்களுக்கு மிக நெருக்கத்தில் தனது இராணுவ படைகளை நகர்த்தி இருக்கிறது.

2003-ம் ஆண்டு "ரோசா புரட்சி" என்றழைக்கப்பட்டதன் விளைவாக அமெரிக்காவின் பின்புலத்துலத்துடன் தற்போதைய ஜோர்ஜிய அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதிபர் மிக்கைல் ஷாக்கஸ்விலி வாஷிங்டனுக்கு மிக நெருக்கமானவராக இருக்கும் நிலையில், செழிப்பான ஹைட்ரோகார்பன்களை கொண்டிருக்கும் மத்திய ஆசிய பகுதிகள் மீதிருக்கும் ரஷ்யாவின் ஆர்வத்திற்கு இவர் ஆட்சி ஒரு மிக பெரிய தடையாக இருந்து வருவதாகக் கருதப்படுகிறது. வாஷிங்டன் உடனான அதிபர் மிக்கைல் ஷாக்கஸ்விலியின் உறவுக்கு சாட்சியாக, ஈராக்கில் அமெரிக்கா, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய மூன்றாவது படைப்பிரிவைத் தற்போது ஜோர்ஜியா கொண்டிருப்பதே போதுமானதாகும்.

ஏவுகணை வெடித்த உடனேயே, இந்த சூழ்நிலை ஜோர்ஜியாவிற்கு மட்டும் வந்திருக்கும் பிரச்சனையல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பிய பாதுகாப்பிற்கே உரிய பிரச்சனை என உடனடியாக அறிக்கை விடுத்து அதிபர் மிக்கைல் ஷாக்கஸ்விலின், ரஷ்யாவிற்கு எதிராக - தமது ஆட்சிக்கு ஆதரவாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் உதவிகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டார். அந்த வெறுக்கத்தக்க தாக்குதலுக்கு பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் பெஷ்சுவாஸ்வில் பல மேற்கத்திய நாடுகளின் தலைநகரங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் விவாதிக்க ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவின் துணை வெளிவிவகார உதவி செயலாளர் மட் ப்ரைஜா இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும், இரண்டு தரப்பினரையும் அமைதியாய் இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது.

கிழக்கு ஐரோப்பாவில் அமைக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க ஏவுகணை திட்டம் மற்றும் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை மேற்குநாடுகள் அடைவது மற்றும் சேர்பிய பகுதியான கொசோவோவின் இறுதி விளைவு மற்றும் ஈரானின் அணு மின்னுலை சார்ந்த திட்டங்கள் உட்பட அனைத்து விவகாரங்களிலும் மாஸ்கோ மற்றும் வாஷிங்டன் இடையே ஓர் ஆழ்ந்த தொடர்ச்சியான விலகிச்செல்லல் இருந்து வருகிறது.

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஜோர்ஜியா விண்ணப்பித்து இருக்கும் நடவடிக்கைக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வல்லரசுகளின் மூலமாக "தன் அருகிலுள்ள வெளிநாட்டிற்குள்'' ஒரு படிப்படியான அத்துமீறலாக மாஸ்கோ கடுமையாக எதிர்க்கிறது.

இந்த பிராந்தியத்தில் இது போன்ற பெரிய சக்திகளின் தீவிரப்போட்டி கொதித்தெழுவது, காகசஸில் மேலும் இன மோதல்களை தூண்டி விடுவதற்கான அனைத்து உள்ளார்ந்த ஆற்றல்களை கொண்டிருப்பதுடன், மேலும் ஆபத்தான நிகழ்வுகள் தவிர்க்க முடியாதனவாகி வருகின்றன.