World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Brutal French government policy on undocumented immigrants leads to tragedy

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் மீதான பிரெஞ்சு அரசாங்கத்தின் மிருகத்தனமான கொள்கை ஒரு பெரும் துன்பியலுக்கு வழிவகுத்துள்ளது

By Kumaran Rahul and Antoine Lerougetel
18 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஆகஸ்ட் 9ம் தேதி பாரிசில் இருந்து வடக்கே 120 கிலோமீட்டர் தூரமுள்ள அமியான் என்னும் இடத்தில் ஒரு போலீஸ் சோதனையில் இருந்து தன்னுடைய தகப்பனாருடன் அவர்களுடைய நான்காம் மாடியில் இருந்த வீட்டில் இருந்து தப்பியோட முயற்சிக்கையில் ஒரு 12 வயது சிறுவன் பால்கனியில் இருந்து கீழே விழுந்தான். செச்சென் அகதி குடும்பத்தை சேர்ந்த இச்சிறுவன் இவான், கடுமையான தலை மற்றும் பிற காயங்களுக்காக ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தாலும் ஐந்து நாட்களுக்கு பின்னரும் மருத்துவ மனையில் கோமா நிலையிலேயே உள்ளான்.

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுள்ள வழிவகைகள் பற்றி, இந்த சோக சம்பவம் ஒரு பெரும் அதிர்ச்சியையும், இகழ்வையும் அதிர்வலையென எழுப்பியுள்ளது. நிகழ்ச்சி நடந்த மறுநாள் காலையில் அமியான் நகரில் கிட்டத்தட்ட 300 பேர் இக்குடும்பம் வசிக்கும் Pigeonnires சபைப் பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு அணிவகுத்துச் சென்றனர். "தலைமை போலீஸ் அதிகாரி அவர்களே, சுற்றி வளைப்பதை நிறுத்தவும்", "குழந்தைகளையும் பெற்றோர்களையும் வேட்டையாடாதீர்கள்", "சார்கோசியின் சட்டங்கள் உரிமைகளை கொல்லுகின்றன" என்று முழங்கிய பதாகைகளை அவர்கள் எடுத்துச் சென்றனர்.

குடியேறுவோர் உரிமைகள் ஆதரவுக் குழுவான France terre d'asile, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோலிச UMP அரசாங்கத்தின் குடியேற்றம் மற்றும் தேசிய அடையாள அமைச்சரும், ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் நீண்டகால நண்பரும் ஒத்துழைப்பாளருமான Brice Hortefeux, ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்களை வேட்டையாடும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ள இந்நிலையில், இத்தகைய துன்பியல்களின் தவிர்க்க முடியாத தன்மையைச் சுட்டிக்காட்டியது. இக்குழு அறிவித்ததாவது: "ஆவணங்கள் அற்ற புலம்பெயர்ந்தோர்களை முறையாக வேட்டையாடும் அத்தகைய கொள்கை இத்தகைய சோகங்களுக்குத்தான் இட்டுச் செல்லும் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். அமியானில் நடக்கும் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே இளம் இவான் ஊசலாடும் நிகழ்ச்சி... துரதிருஷ்டவசமாக முதல் நிகழ்வு அல்ல. இக்கொள்கை தொடருமேயானால் இது கடைசி நிகழ்ச்சியாகவும் இருக்காது."

இவானுடைய தாயாரான நத்தாலியா டெம்ஸ்கி ஒரு செச்சென் ஆவார்; இவானின் தந்தையான ஆண்ட்ரேய் டெம்ஸ்கி ஒரு உக்ரைனியர் ஆவார். அவர்கள் 1995ல் செச்சென் தலைநகரமான Grozny ரஷ்ய இராணுவத்தால் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்டபோது அதைவிட்டு வெளியேறினர். பெப்ருவரி 2005ல் இருந்து, பிரான்சில் டெம்ப்ஸ்கி குடும்பம் வந்து ஆறு மாதங்களுக்கு பின்னர் அவர்கள் பலமுறையும் அரசியல் தஞ்சம் மற்றும் வசிக்கும் அனுமதிகளை கேட்டனர்; அவை அனைத்தும் மறுக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளாக பிரான்சில் இவான் பள்ளியில் படித்து வருகிறான்; அவனுடைய ஆசிரியர்களுடைய கருத்தின்படி அவன் மிகச் சிறப்பாகப் படிப்பவன் ஆவான்.

Pigeonniers பகுதியில் பல ஆவணமற்ற குடும்பங்களுக்கு உதவும் Sylvette Chevalier செய்தியாளர்களிடம் தங்கள் வழக்கை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று குடும்பம் கோரியதாக தெரிவித்தார்: "ஒரு மாதம் முன்பு கூட ஒரு கடிதம் அனுப்பினோம்; ஆனால் அதற்கு பதில் ஏதும் வரவில்லை. திங்களன்று நத்தாலியா, இவானுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார். அவரை கணவனுடன் வருமாறு போலீசார் கூறினர். எந்த விளக்கங்களும் அவர்கள் கொடுக்கவில்லை; ஆனால் அங்கு திரும்பிச் செல்வது ஆபத்தாகக்கூடும் என்று அவர் நினைத்தார். அவர்கள் போலீஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டுவிடக் கூடும் என்றும் தாய்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிடக்கூடும் என்றும் நியாயமான காரணங்களுடன் அஞ்சினர்.

நிறைய போலீஸ் வாகனங்கள் அவர்களுடைய கட்டிடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு, கதவுகள் பெரிதாக தட்டப்பட்ட அளவில் குடும்பத்தினர் பெரும் பீதிக்கு உட்பட்டனர்; அதேபோல மேலும் கைதாவதில் இருந்து தப்பிப்பதற்கான ஆற்றொணா முயற்சி, எந்த அளவிற்கு சார்க்கோசியின் புதிய அரசாங்கம் நனவுடன் பெரும் பீதிச் சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது என்பதை பிரதிபலிக்கிறது.

அமியானில் உள்ள ஆவணங்கள் அற்ற புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவு கொடுக்கும் இயக்கத்தில் தீவிரமாக உள்ள 74 வயது முன்னாள் மருத்துவத்தாதி Therese Couraud விளக்கினார்: "மக்களை வேட்டையாடுவது அவர்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது... சிலர் தங்கள் தாய்நாட்டிற்கு திருப்ப அனுப்பப்பட்டு அங்கு சித்திரவதைக்கு உள்ளாவதைவிட, கதவு வழியாக குதித்து இறப்பதைக்கூட விரும்புகின்றனர். இந்த வாரம் வேறு மூவர் போலீஸ் தலைமையகத்திற்கு வருமாறு கோரிய கடிதங்களை பெற்றுள்ளனர்; எதற்காக என்று அதில் கூறப்படவில்லை. அதன் பின்னர் எதற்காக எனக் கூறப்படாமல் அவர்கள் காவலில் அடைத்துவிடப்படுவர். நாங்கள் அவர்களை போக வேண்டாம் எனக் கூறி எங்களுடைய பாதுகாப்பில் வைத்திருக்கிறோம்."

Therese தொடர்ந்து கூறினார்: "இது உண்மையிலேயே பிரான்சை பற்றிய இருண்ட சித்திரத்தைக் கொடுக்கிறது. 1940ல் எனக்கு ஏழு வயதாகி இருந்தபோது, போரின் போது நடத்த கைதுகள் பற்றிய சூழ்நிலையை இந்த நிலைமை எனக்கு நினைவு படுத்துகிறது." மார்ஷல் பிலிப் பெத்தானின் விஷி ஆட்சி, நாஜி ஆக்கிரமிப்பிற்கு ஒத்துழைப்புக் கொடுத்து, போலீசார், யூதர்களை பெரும் திரளாக கைது செய்வதற்குப் பயன்படுத்திய Rafles என்ற சொல்லையே இவர் இப்பொழுது பயன்படுத்துகிறார்.

CIMADE என்னும் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான அமைப்பு தெரிவிப்பதாவது: "சில இடங்களில் சோதனைக்காக மிகப் பெரிய, முறையான, சோதனைகள், rafles ஆக இருப்பதை இப்பொழுது நாம் காண்கிறோம்." RESF - எல்லைகளற்ற கல்வி வலைப்பின்னலை (Reseau) சேர்ந்த Brigitte Weiser செய்தியாளர்களிடம் பாரிசில் தெரிவித்தார்: "போலீஸ் தலைமையகம் முடுக்கிவிட்டுச் செயல்புரிய முடிவெடுத்துவிட்டது. கோடை காலத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்: இல்லாவிடின் பள்ளிகள் இப்பொழுது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும்."

ஆவணமற்றவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களின் பாதிப்பிற்கு உட்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் பிரச்சாரத்தை நடத்தும் அமைப்பான RESF, இந்த விபத்திற்கு பொறுப்பு அரசாங்கம்தான் எனக்கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. "இது ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி அல்ல. இது அரசாங்கத்தால் préfectures மற்றும் போலீசாார் மீதும் திணிக்கப்பட்ட கொள்கைகளின் நேரடியான, தவிர்க்கமுடியாத விளைவு ஆகும். சட்டத்தை செயல்படுத்தும் முகவாண்மைகள் கைது செய்யப்படவும் (மந்திரி கோரியுள்ள 125,000 கைதுகள்) திருப்பி அனுப்பப்படுவதற்கும் (25,000)" உள்ளாக்கப்படுகின்றன.

அறிக்கை வலியுறுத்துவதாவது: "ஆம். ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்கள் போலீசாரால் வேட்டையாடப்படுகின்றனர்", அவர்களின் இல்லங்களிலேயே கூட. "இதையும்விட குறைந்த தன்மையுடைய ஏனைய சோகங்களும் பிரான்ஸ் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன: நாம் இதை எழுதும்போது பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பத்து பெற்றோர்கள் (தாயார்களோ, தகப்பனார்களோ) பாரிஸ் போலீசால் தடுப்புக் காவல் மையத்தில் வைக்கப்பட்டு, வந்த இடத்திற்கு திருப்பி அனுப்பப்படுவதை எதிர்பார்த்துள்ளனர்." மேலும் இந்த அமைப்பு இது பெரும் பனிப்பாறையின் உச்சி மட்டும்தான் என்றும் கூறியுள்ளது. "நம்முடைய அண்டை வீட்டுக்காரர்களுக்கு எதிராக போலீசாரால் நடத்தப்பெறும் திருப்பி அனுப்பப்படல்கள், இன்னும் பல வழிவகைகள் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும்" என்று அறிக்கை கூறுகிறது.

இக்குடும்பங்களை தொந்தரவு செய்யும் வகையில் நாடுகடத்துதல், துன்பப்படுத்துதல் ஆகியவற்றுக்கெதிரான பெரும் இயக்கத்தை எதிர்கொள்கையில், கடந்த கோடையில் சார்க்கோசியின் இழிவான சூழ்ச்சிகளால், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் மீதான ஒடுக்குமுறை உக்கிரப்படுத்துதல் எளிதாகியுள்ளது. உள்துறை மந்திரி என்னும் முறையில், பள்ளிகளில் சேர்ந்துள்ள குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு அவர் இறுதி எச்சரிக்கை அளித்து, சில நெறிகளுக்கு உட்பட்டிருந்தால், கோடை காலத்தில் ஆறு அல்லது ஏழு ஆயிரம் குடும்பங்களுக்கு, சட்டபூர்வ அந்தஸ்து அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். கிட்டத்தட்ட 30,000 விண்ணப்பதாரர்கள் தாங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டிருந்ததாகத்தான் நினைத்து தாங்கள் இருக்கும் இடங்களை அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, முழு அளவில் நிபந்தனைகளுக்கு உட்பட்டிருந்த 23,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

கோடை மாதங்களில் சட்டவிரோத குடியேறுபவர்களுக்கு எதிரான நடவடிக்கை அதிகரித்துள்ளது என்பதை Hortefeux மறுத்துவிட்டார். ஆனால் அவருடைய செய்தித் தொடர்பாளர் ஜூலை மாதத் தொடக்கத்தில் "செயல்முறை பிரச்சினைகள் பற்றி" நிர்வாகத் துறைகளின் கூட்டங்கள் நடைபெற்றிருந்தது என்று ஒப்புகொண்டார்; அதே நேரத்தில் எழுத்து மூலமாக ஆணைகள் ஏதும் இல்லை என்றும் அவர் கூறிவிட்டார். ஆனால் Liberation நாளிதழ் பெற்றுள்ள அரசாங்க ஆவணம் ஒன்று, ஆவணமற்ற குடும்பங்களை அவர்கள் இல்லங்களில் போலீஸ் சோதிக்க வேண்டும் என்றும் அழைக்கப்பட்ட நபர்கள் "வரத்தவறினால்", அரசாங்க வழக்கறிஞர் "அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்றும் பரிந்துரைத்திருந்ததாக தெரிவித்துள்ளது.

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்கள் FPR எனப்படும் தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்தியது. குடியேறுபவர்கள் உரிமைகள் அமைப்புக்கள் ஆவணமற்ற குடும்பங்களின் மீதான போலீஸ் சோதனைகள் முன்பு அசாதாரணமாகத்தான் நடைபெற்றது என்றும், Hortefeux இன் பரிந்துரைகள்தாம் அவற்றை வாடிக்கையாக்கிவிட்டதாகவும் கூறுகின்றன. Syndicat des Magistrats என்னும் நீதிபதிகளின் சங்கத்தின் துணைத் தலைவரான Jean-François Zmirou கூறினார்: "தன் அரசியல் வேலைத்திட்டத்திற்காக உள்துறை அமைச்சரகம் குற்றவியல் விசாரணை நீதிபதிகளை இதற்காக பயன்படுத்துவது எனக்கு மிகவும் உளைச்சலை தருகிறது."

சட்ட விரோதமாக புலம்பெயர்பவர்களை சூனியக்கார முறையில் வேட்டையாடுவதற்கு எதிரான மக்களின் நேர்மையும் அக்கறையும் கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்றாலும், "இடது" கட்சிகளின் பங்கு கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். லியோனல் ஜோஸ்பன்னுடைய பன்முக இடது அரசாங்கத்தின் கீழ், சோசலிஸ்ட் கட்சி (PS), கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சி இணைந்து செயல்பட்ட ஒரு கூட்டணியின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் 12,000 ஆவணமற்று குடியேறியவர்கள் நாடு கடத்தப்பட்டனர் (Liberation ஆகஸ்ட் 11 தலையங்கம் கொடுத்துள்ள தகவல்.)

2007 சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி தேர்தலுக்கான வேலைத்திட்டம் குடியேற்றத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தது: "சட்ட விரோத குடியேற்றத்தை பொறுத்தவரையில், நாங்கள் உறுதியான கொள்கைகளை செயல்படுத்துவோம். இதை ஒட்டி நாம் சட்ட விரோத குடியேற்றத்தை அகற்றுவோம்." சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் செகோலென் ரோயால் தன் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களைத் திருப்தி செயும் வகையில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக பேசிய போது, சில மணி நேரங்களுக்குள்ளயே முன்னர் கூறிய தன்னுடைய கருத்துக்களை தவறெனக் கூறி கைவிடதிரும்பப் பெறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். (See "France: Police attack defenders of immigrant school children").

அமியானில் வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரே அரசியல் பிரமுகர், ஒரு சோசலிஸ்ட் கட்சி வழக்கறிஞரும் பிக்கார்டியின் நகரமன்றக் குழு உறுப்பினருமான Francis Lec மட்டுமேயாகும். இவர் Somme பிராந்தியத்தில் RESF ற்காக உள்ளார். இவான் மற்றும் அவனுடைய பெற்றோர்கள் முழுமையாக சட்டபூர்வ அந்தஸ்து பெற வேண்டும் என்று லெக் கோருகிறார்; அதற்கு சமூகப் பணி குழுக்களின் முழு ஆதரவு உள்ளது என்றும் கூறியுள்ளார். தங்கள் மகன் பிழைக்கும் வரை ஆறுமாத காலம் டெம்ஸ்கி குடும்பம் இருக்கலாம் என்று "மனிதாபிமான முறையில்" Hortefeux கூறியுள்ளது, இவானின் காயங்களுக்கு பல ஆண்டுகள் மருத்து உதவி தேவைப்படலாம் என்பதை உணர மறுப்பதாக உள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் பத்திரிகைகளுக்கு கொடுத்த அறிக்கையில் லெக், பிரான்சின் முழு ஆளும் உயரடுக்கினாலும் பின்பற்றப்படும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிராக எந்த அரசியல் பிரச்சாரத்தையும் தொடக்க இருப்பதாக தெரிவிக்கவில்லை.