World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Rice's Middle East tour: Arab regimes back US war drive in Iraq and Iran

ரைசின் மத்திய கிழக்குப் பயணம்: ஈராக்கிலும் ஈரானிலும் அமெரிக்கப் போர் உந்துதலுக்கு அரேபிய ஆட்சிகள் ஆதரவளிக்கின்றன

By Jean Shaoul and Chris Marsden
19 January 2007

Use this version to print | Send this link by email | Email the author

புஷ் நிர்வாகத்தின் ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்பினை தீவிரப்படுத்தலுக்கும் ஈரான் மீதான இராணுவத் தாக்குதலுக்கான அதன் திட்டங்களுக்கும் செளதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமான் மற்றும் எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ளன.

மத்திய கிழக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் மேற்கொண்டுள்ள பயணத்தின் நிறைவு கட்டமாக, ஜனவரி 16ம் தேதி குவைத் எமரின் பாயன் அரண்மனையில் நடைபெற்ற கூட்டமானது, ஆறு நாடுகள் வளைகுடா ஒத்துழைப்புக் குழு (Six-nation Gulf Cooperation Council GCC), மற்றும் எகிப்து, ஜோர்டான் வெளியுறவு மந்திரிகள் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டதில் முடிவுற்றது.

ஈராக்கிற்கு ஜனாதிபதி புஷ் இன்னும் கூடுதலாக 21,000 படையினர்களை அனுப்புவதற்கு வெளியுறவு மந்திரிகள் ஒப்புதல் கொடுத்ததோடு, உள்நாட்டுப் போராக சரியாமல் தடுப்பதற்கு இது ஒரு வழிவகை என்றும் சித்தரித்துக் காட்டியுள்ளனர். "ஈராக்கின் நிலப்பகுதியை காத்து, அனைத்து ஈராக்கிய சமூகங்களுக்கும் ஒரு வெற்றிகரமான, நியாயமான, உள்ளிணைந்த அரசியல் வழிவகை பாதுகாப்பாகக் கிடைப்பதற்கும் நாட்டின் உறுதித்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்பதற்குமான" அமெரிக்காவின் கடப்பாட்டை வரவேற்பதில் ரைஸூடன் அவர்கள் இணைந்து நின்றனர்.

"குவைத்தில் ஒன்பது வெளியுறவு அமைச்சர்களும் [ரைஸ் உட்பட], ஈராக் ஒரு உள்நாட்டுப் போருக்குள் வழிக்கிச்சென்றுவிடமால் திட்டவட்டமாய் தடுப்பதற்கு கூடுகின்றனர். இது உரத்த குரலில் பலவற்றைத் தெரிவிக்கிறது" என்று குவைத்தின் வெளியுறவு மந்திரி ஷேக் மகம்மது அல்-சலீம் அல்-சபா கூறினார். "பாக்தாத்தை உறுதிப்படுத்தவும், ஈராக் மக்கள் இந்த இழிந்த போரில் அதாவது உள்நாட்டுப் போருக்குள் வழுக்கிச்சென்றுவிடாமல் இருப்பதற்கும் ... அமெரிக்க இராணுவத்தினர் எண்ணிக்கையை பாக்தாத்தில் அதிகப்படுத்துவது ஒரு கருவி என்ற ஜனாதிபதியின் திட்டத்தை பார்ப்பதற்கு எங்களது ஆவலை வெளிப்படுத்தினோம்."

செளதி அரேபியாவின் வெளியுறவு மந்திரியான செளத் அல்-பைசல், "புதிய திட்டம், மூலோபாயம் இவற்றால் நிர்ணயிக்கப்பட்டுள்ள முழு இலக்குகளுக்கும் நாங்கள் உடன்படுகிறோம் ... இவை செயல்படுத்தப்பட்டால், ஈராக்கை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும்" எனக் கூறினார்.

எகிப்தின் வெளியுறவு மந்திரி அக்மத் அபுல் கீவாஸ் இன்னும் பணிவான முறையில் தன் கருத்துக்களை கூறும் வகையில் புதனன்று கெய்ரோவில் செய்தியாளர்களிடம், "புஷ்ஷின் மூலோபாயம் வெறும் இராணுவ நடவடிக்கை அல்லது நடவடிக்கை அல்லது ஒருதலைப்பட்ட இராணுவ வேலைத்திட்டம் அல்ல. மாறுபட்ட அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார அம்சங்களைப் பற்றிய ஒரு பார்வையை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது." என்று கூறினார்.

உண்மையில் புஷ்ஷின் திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுப்பது என்பது ஈராக்கிய மக்களை குருதிகொட்டும் முறையில் அடக்குதற்கு வழிவகுப்பதுடன் குறுகிய பிரிவுவாத பூசல்களையும் மோசமாக்கிவிடும். பாக்தாத்தில் சுன்னி எழுச்சியாளர்களை முதலில் அமெரிக்கா அடக்க விரும்புகிறது; ஆனால் நெளரி அல்-மாலிகாவின் ஈராக்கிய ஆட்சி, ஷியா குடிப்படைகள் மீதும் தாக்குதல் நடத்தவேண்டும் என்று கோருகிறது; குறிப்பாக மொக்தாதா அல்-சதரின் மஹ்தி இராணுவம் மீது தாக்குதல் வேண்டும் என்று கூறுகிறது. அத்தகைய தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளதுடன் 400 பேரை கைதும் செய்துள்ளது.

ஆனால் அமெரிக்க இராணுவத்தின் "எழுச்சி" என்பது, ஈராக்குடன் நின்றுவிடப்போவதில்லை. வாஷிங்டனுடைய இலக்கில் ஈரான் உறுதியாக விழுந்துவிட்டது; ஷியா எழுச்சியை முக்கியமாக ஈரான்தான் தூண்டிவிடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அரபு அரசுகளால் ஒப்புதலளிக்கப்பட்ட படைகள் அதிகமாக்கப்படும் என்ற அறிவிப்பைக் கொடுத்த உரையில், அமெரிக்கா "ஈரானில் இருந்தும் சிரியாவில் இருந்தும் ஆதரவு வருவதை இடைமறிக்கும் என்றும், ஈராக்கில் உள்ள எங்களுடைய எதிரிகளுக்கு நவீன ஆயுதங்கள், பயிற்சி ஆகியவற்றைக் கொடுக்கும் வலைப்பின்னல்களை தேடிப்பிடித்து அழிக்கும்" என்றும் புஷ் அச்சுறுத்தியுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு ஈரானை வெளிப்படையாக குறிக்காமல், "அனைத்து நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகள் ஒன்றுக்கொன்று மற்ற நாடுகளின் இறையாண்மை, நிலப்பகுதியின் ஒற்றுமை, மற்ற நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது என்ற கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்" என்று கூறுகிறது. அரபு அரசுகள் பற்றிய மறைமுக அரசியல் சூத்திரத்தை ஒதுக்கி வைத்த வகையில், ரைசின் செய்தித்தொடர்பாளர் பின்னர் இதன் பொருள் ஈரான் என்று அறிவித்தார்.

புஷ்ஷின் உரை கோடிட்டுக்காட்டிய ஒரு புதிய "அலையெழுச்சி" ஒவ்வொரு நாளும் தெஹ்ரானுக்கு எதிராக செலுத்தப்பட்டுவரும் புதிய அரசியல் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களைத்தான் காண்கிறது. அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனி, அப்பிராந்தியம் முழுவதற்கும் ஈரான் "ஒரு பெருகிய பன்முக" அச்சுறுத்தலை கொண்டு விளங்குகிறது என்று கூறியுள்ளார்.

மத்திய கிழக்குத் தலைநகரங்களுக்கு இடையே ரைஸ் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஓர் இரண்டாவது அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் 2003 ல் ஈராக்கிற்கு எதிரான போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக வளைகுடா பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை செய்தித்தொடர்பாளர் ஒருவரின் கருத்துப்படி, வழிநடத்தப்படும் ஏவுகணைப் போர்க்கப்பல் USS Antietam, மூன்று கடற்படை அழிக்கும் கப்பல்களுடனும் -- USS O'Kane, Preble, Paul Hamilton-- நீர்முழ்கிக்கப்பல் USS Key West, வழியேகு ஏவுகணை கொண்ட பழைய போர்க்கப்பல் USS Rentz, பொருட்கள் வழங்கும் கப்பலான USNS Bride ஆகியவற்றைக் கொண்ட தாக்குதல் குழுவின் ஒரு பகுதியாக 3,200 படையினர்களை கொண்ட USS Stennis வந்துள்ளது என்று கூறினார். இது "நிலைமையின் தேவை கோரும் வரை" மத்திய கிழக்கில் தொடர்ந்து இருக்கும்.

அமெரிக்கா ஏற்கனவே ஈராக்கை தவிர, ஏனைய வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட 40,000 படையினரை நிறுத்திவைத்துள்ளது; குவைத்தில் 25,000, கத்தாரில் 6,500, பஹ்ரைனில் 3,000, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 1,300, ஓமான் மற்றும் செளதி அரேபியாவில் சில நூறு துருப்புக்கள் என்று துபாயை தளமாகக் கொண்ட வளைகுடா ஆராய்ச்சி மையத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

"GCC plus two" அறிக்கை வருவதற்கு முதல் நாளான ஜனவரி 15 அன்று, அமெரிக்க பாதுகாப்பு செயலர் ரொபேர்ட் கேட்ஸ் பெல்ஜியத்தில் உள்ள NATO தலைமையகத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். அமெரிக்கா மத்திய கிழக்குப் படைகளை வலிமை செய்திருப்பது "எதிர்காலத்தில் அப்பகுதியில் நீண்ட காலத்திற்கு எங்களுடைய வலுவான நிலைப்பாடு இருக்க வேண்டும் என்ற உறுதியை" மறு உத்தரவாதம் செய்யும் வகையில் இது இருக்கும் என்று அவர் விளக்கினார்.

ஈராக்கில் அமெரிக்கா பலவீனமான நிலையில் இருப்பதாக உணரப்படுவதை ஈரான் பயன்படுத்திக் கொள்ள முற்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். "ஈராக்கில் நாங்கள் கட்டுண்டிருக்கிறோம்; எனவே அவர்கள் முன்முயற்சி எடுக்கலாம், எங்களுக்கு பலவிதங்களிலும் அழுத்தம் கொடுக்கலாம் என்று ஈரானியர்கள் தெளிவாக நம்புகின்றனர். அவர்கள் இத்தருணத்தில் ஈராக்கில் ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை." என்றார்.

பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் ரைஸ் "சிரியாவிற்கும் ஈரானுக்கும் போரைக் கொண்டு செல்வது தீவிரமாகியுள்ளது என்பதை மறுத்தார்" என தெரிவித்துள்ளது. சாதாரணமாய் அது "நல்ல கொள்கை" மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஏற்கத்தகாத மற்றும் மரணம்விளைக்கும் ஈரானிய நடவடிக்கைகளுக்கு எதிர்வினைதான் இது என்றும் அவர் BBC யிடம் தெரிவித்தார்.

பல வர்ணனையாளர்களும் வெளியுறவு மந்திரிகள் உற்சாகத்துடன் ஒப்புதல் கொடுத்திருந்த போதிலும், ஈராக்கில் அமெரிக்கா வெற்றியடையக் கூடிய வாய்ப்பு பற்றிய அவர்களின் அடித்தளத்தில் உள்ள "அவநம்பிக்கை தனம்" மறைக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். "எங்களுக்கு தொடர்பில்லை" என்ற முறையில் இருக்கும் அவர்களுடைய அணுகுமுறை, சுன்னிக்களுக்கும் ஷியாக்களுக்கும் பகுதி முழுவதும் அழுத்தங்கள் மோசமாகப் போகாமல் செய்வதற்கு "பாரபட்சமின்றி" நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பை நிரூபிக்க வேண்டியது மாலிகியின் அரசாங்கம்தான் என்ற வகையில் உள்ளது.

ஆயினும்கூட, இன்னும் கூடுதலான இராணுவச் செயல்கள், உள்நாட்டுப் போர்கள், பூசல்கள் என்று பகுதி முழுவதையும் உறுதித்தன்மை இழக்க வைக்கக்கூடும் என்று தெரிந்தும் போர்த்திட்டங்களை பெருக்கும் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு பின் அரபு ஆட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. உண்மையில் ஜோர்டான் மன்னர் அப்துல்லா, ஈராக், பாலஸ்தீனிய பகுதிகள், லெபனான் ஆகிய முன்று இடங்களில் உள்நாட்டுப் போர்கள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரையில் அத்தகைய விளைவுகள் அப்பகுதியையும் அதன் பரந்த எண்ணெய் இருப்புக்களையும் கட்டுப்படுத்தவேண்டும் என்ற அதன் உறுதிப்பாட்டிற்கு முன் இவை தற்செயல் விளைவுகளாக இல்லாமல் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் விருப்பங்களாகத்தான் உள்ளன. பிரித்தாளும் இதன் ஈராக்கிய கொள்கை, சுன்னி, ஷியா முஸ்லிம்களுக்கு இடையே வேண்டுமென்றே உள்நாட்டுப் போரை ஏற்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது, மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

செனட்டின் வெளியுறவுக் குழுவின் முன் தன்னுடைய சாட்சியத்தில் ஜனவரி 11ம் தேதி ரைஸ் விளக்கியபடி, "இது உண்மையில் சக்திகள் புதிய வகையில் இணைந்துள்ள ஒரு வித்தியாசமான மத்திய கிழக்காக இருக்கிறது. ஒருபுறத்தில் தங்களுடைய நலன்களை சமாதானமுறையில், அரசியல் ரீதியாக மற்றும் இராஜதந்திர முறையில் முன்னெடுக்க விரும்பும் சீர்திருத்தவாதிகள் மற்றும் பொறுப்பான தலைவர்கள் உள்ளனர். மறுபுறத்திலோ, பெரும் குழப்பத்தைப் பரப்ப, ஜனநாயக ஆட்சியயை கீழறுக்க, வெறுப்பு மற்றும் சகிப்பின்மை இவற்றின் செயற்பட்டியலை திணிக்க வன்முறையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு உட்பிரிவு மற்றும் இனவழியின் தீவிரவாதிகள், உள்ளனர்."

"இப்பிரிவின் ஒருபுறத்தில் செளதி அரேபியா, வளைகுடாவின் மற்ற நாடுகளான எகிப்து, ஜோர்டான், இளைய ஜனநாயகங்களான லெபனான், மகம்மத் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீனப் பகுதி மற்றும் ஈராக் ஆகிய வளைகுடா நாடுகள் உள்ளன. பிரிவின் மறுபறுத்தில் ஈரான், சிரியா, ஹெஸ்போல்லா மற்றும் ஹமாஸ் ஆகியவை உள்ளன. இதுதான் அடிப்படைப் பிளவு என்பதை நாம் அறியவேண்டும்."

இருக்கும் நிலையை அப்படியே தக்கவைத்துக் கொள்ளுவதற்கு அமெரிக்கா விரும்பவில்லை; மாறாக கடந்த கோடையில் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை ஒட்டி ரைஸ் முன்னர் கூறியது போல் "ஒரு புதிய மத்திய கிழக்கை" கொண்டு வருதல் என்பது ஆகும். ஈராக், ஈரானில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்று அரேபிய ஆட்சிகள் எதிர்பார்க்கப் படுவது மட்டும் அல்லாமல், அதையொட்டி எழும் உள்நாட்டு எதிர்ப்பை அடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன. அவர்களின் சொந்த உயிர்பிழைப்பு பல தசாப்தங்களாக அமெரிக்க ஆதரவில் தங்கியிருப்பதால் அவர்கள் அவ்வாறு செய்வர்.

புஷ் நிர்வாகம், இஸ்ரேலிய-பாலஸ்தீனிய முரண்பாடுகளுக்கு ஒரு நியாயமான தீர்வு காண விரும்புகிறது என்ற போலித் தோற்றத்தை வாஷிங்டனின் திட்டங்களில் உயர்த்திக் காட்டும் வகையில் தங்களுடைய ஆதரவை அரபு ஆட்சிகள் வனப்புடன் காட்ட முற்பட்டுள்ளன. "பாலஸ்தீனிய-இஸ்ரேலிய முரண்பாடுகள் ஒரு மத்திய, அடிப்படைப் பிரச்சினை, இதைத் தீர்க்காமல் இப்பகுதி நிரந்தர சமாதானம், உறுதிப்பாடு ஆகியவற்றை காணமுடியாது" என்று அறிக்கை உடன்பட்டுக் கூறுகிறது. இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதலுக்கு இரு அரசுகள் என்ற தீர்வின் மூலமாக மத்திய கிழக்கில் சமாதானத்தை அடைவதற்கான உறுதிப்பாட்டை அவை மறு உறுதி செய்தன.

உண்மையில் பாலஸ்தீனத்தில் அமெரிக்க கொள்கையானது, மகம்மது அப்பாசின் பாலஸ்தீனிய அதிகாரத்திற்கு ஹமாசை எதிர்கொள்வதற்கு தேவையான இராணுவத் தளவாடங்களைக் கொடுத்து இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் "பயங்கரவாதத்தின்மீதான போர்" என்பதின் ஒரு பகுதியாக நசுக்குவதேயாகும்.

கடந்த ஆண்டு இறுதியில் Haaretz ல் வந்த தகவல்களின்படி, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றிய பின்னர், அப்பாசுக்கும் இஸ்ரேலிய பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட்டிற்கும் இடையே நடந்த விவாதங்களுக்கு பின்னர், எகிப்து ஏராளமான ஆயுதங்களை எல்லை தாண்டி காசாவிற்கு அனுப்பியது என்று குறிக்கிறது. ஒரு தளவாட அனுப்புதலில் நான்கு கனரக வண்டிகள் 2,000 தானியங்கித் துப்பாக்கிகள், 20,000 வெடிமருந்துக் குப்பிகள் மற்றும் 2 மில்லியன் தோட்டாக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி காவற்படைகளை அழியாது காப்பதற்கும் மற்றும் மூலோபாய எல்லைப்புற கடந்து செல்லல் மீதான அப்பாசின் கட்டுப்பாட்டை விரிவாக்கவும் 86 மில்லியன் டாலர்கள் வரை வழங்குவதற்கு புஷ் நிர்வாகம் காங்கிரசின் ஆதரவைக் கோரியுள்ளது.

ரைஸ், அப்பாசுடன் நடத்திய சுருக்கமான கூட்டம் பாலஸ்தீனிய அரசை தோற்றுவித்தல் சம்பந்தமான நகர்வு எதனையும் கொண்டிருக்கவில்லை. அது அவ்வாறு ஏற்படவும் செய்யாது; ஏனெனில் இப்பகுதியில் வாஷிங்டனின் முக்கிய பிராந்திய கூட்டாளியாக இஸ்ரேல் தொடர்ந்து இருப்பதாலும். ஈரானுக்கு எதிரான தன்னுடைய இராணுவத் தூண்டுதல்களை முன்னெடுப்பதாலும் ஆகும். தன்னுடைய மத்திய கிழக்குப் பயணத்தை ரைஸ் இஸ்ரேலில் இருந்தே தொடங்கினார்; அங்கு அவர் ஒரு மூன்று மணி நேரப் பேச்சு வார்த்தையை ஓல்மெர்ட்டுடன் நடத்தினார்; இதில் அதிகாரிகள் எவரும் இல்லாத தனிப் பேச்சுக்கள் இரண்டரை மணி நேரம் நடந்தன. இப்பேச்சுக்கள் ஈரானுக்கு எதிரான பிரச்சாரங்களில் இஸ்ரேலின் பங்கு பற்றி குவிமையப்படுத்தின.