World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Tensions mount between US and Europe over war threat against Iran

ஈரானுக்கு எதிரான போர் அச்சுறுத்தல் பற்றி அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே பதட்டங்கள் பெருகுகின்றன

By Stefan Steinberg
7 February 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஈரானுக்கு எதிரான தகவல்கள் மற்றும் ஆக்கிரோஷம் நிறைந்த பிரச்சாரத்தை வாஷிங்டன் முடுக்கி விட்டுக் கொண்டிருக்கையில், சில முக்கிய ஐரோப்பிய அரசியல் வாதிகளும் செய்தி ஊடகத்தின் பிரிவுகளும் அமெரிக்க இராணுவத்தின் தூண்டுதல் மத்திய கிழக்குப் பகுதி முழுவதையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தும் பெரும் அபாயத்தை பற்றி தங்களுடைய கவலையை தெரிவித்துள்ளன.

மூன்று முன்னாள் மூத்த அமெரிக்க இராணுவத் தளபதிகளான ரோபர்ட் ஜி. கார்ட், ஜோசப் பி. ஹோர் மற்றும் வைஸ் அட்மைரல் ஜாக் ஷானகன் ஆகியோரால் பிரிட்டிஷ் சண்டே டைம்ஸிற்கு அனுப்பப்பட்டு பெப்ருவரி 4ம் தேதி வெளியிடப்பட்ட ஒரு கடிதம் ஈரான் மீதான எந்தவித அமெரிக்க இராணுவத் தாக்குதலின் விளைவுகள் பற்றியும் எச்சரிக்கிறது.

புஷ் நிர்வாகத்தின் திட்டங்களுக்கு எதிராக ஐரோப்பிய பொது மக்களுடைய கருத்தைத் திரட்டும் தெளிவான முயற்சியாக, அமெரிக்க தளபதிகள் அப்பட்டமாக அறிவித்தனர்: "ஈரான்மீது தாக்குதல் என்பது அப்பகுதியில் உள்ள பாதுகாப்பிற்கும், ஈராக்கில் இருக்கும் கூட்டணிப் படைகளுக்கும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்; மேலும் பிராந்திய, உலகந்தழுவிய பதட்டங்களையும் பெருக்கும். தற்போதைய நெருக்கடி தூதரக வழியில்தான் தீர்க்கப்பட வேண்டும்."

முன்னாள் ஜேர்மனிய வெளியுறவு மந்திரி ஜோஷ்கா பிஷ்ஷரும் இத்தகைய எச்சரிக்கையை கடந்த வாரம் Suddutsche Zeitung ஏட்டின் பக்கங்களில் கூறியுள்ளார். பிஷ்ஷர் ஒன்றும் போர் எதிர்ப்பாளர் அல்ல; 1998-99 ல் ஜேர்மனிய வெளியுறவு மந்திரி என்றவகையில் யூகோஸ்லாவியாவில் போருக்குப் பிந்தைய ஜேர்மனிய இராணுவம் முதல்தடவையாக சர்வதேச தலையீட்டை செய்வதற்கு வழிவகுத்ததில் அவர் முக்கிய பங்கு ஆற்றியவர்; இருந்தபோதிலும் அவர் உறுதியாக வாஷிங்டனின் விரோதியும் இல்லை. அதிகாரத்தில் இருந்தபோது அவர் ஜனாதிபதி பில் கிளின்டனுடைய வெளியுறவு மந்திரியாக இருந்த மாடலின் ஆல்பரைட்டுடன் நெருக்கமான உறவுகளைத்தான் கொண்டிருந்தார். ஆனால் Suddutsche Zeitung ல் கொடுத்துள்ள கருத்துப்படி, பிஷர் ஈராக்கில் புஷ் நிர்வாகத்தின் "தவறுகள்" என இடக்கரடக்கலாக கூறுதலை, தெஹ்ரானிலும் "ஆட்சி மாற்றத்திற்காக" செய்துவிடக்கூடாது என்றும் ஈரானுக்கு எதிரான விரோதப் போக்குகள் விரிவாக்கப்படக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் பெரும் குழப்பம் என்ற அச்சம் ஈரானுக்கு எதிரான ஒரு அமெரிக்க இராணுவத் தாக்குதலின் மூலம் ஏற்படலாமோ என்பது கடந்த வாரம் ஜேர்மனியின் முக்கிய வாராந்திர ஏடான Die Zeit ல் செய்தியாளர் Ulrich Ladurner ஆல் தெளிவாக, சுருக்கமாக எழுதப்பட்டது. புஷ் பற்றிக் குறிப்பிடுகையில், Ladurner எழுதுகிறார்: "அவர் வலிமையற்றவர் என்பது உண்மை; ஆனால் மீண்டும் இன்னும் ஒரு தீரச்செயலில் ஈடுபடமாட்டார் என்பதற்கு அது உத்தரவாதம் ஆகாது. முற்றிலும் மாறான முறையில் அவருடைய பலவீனமே ஒரு ஆபத்து ஆகும். ஈராக்கில் நடந்த பேரழிவுதான் துல்லியமாக புஷ் அரசாங்கத்தை ஈராக் எல்லைகளுக்கு அப்பால், ஈரானுக்கு மத்தியில் செலுத்தத் தூண்டுதலாக இருக்கும்.

"இந்த மூலோபாயத்தைத்தான் அமெரிக்கா எழுபதுகளில் தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தியது. வியட்நாமில் அதிகமாக மேலே செல்லமுடியாது என்று ஏற்பட்டபோது, அவர்கள் கம்போடியா, லாவோஸ் ஆகியவற்றையும் போரில் இழுத்தனர். பலவீனம் என்பதும் போருக்கு செல்வதற்கான ஒரு செயல்நோக்கமாக இருக்க முடியும்.

"ஜனநாயகக் கட்சியினர் இப்பொழுது ஈராக் கொள்கையை கடுமையாகத் தாக்குகின்றனர்; ஆனால் இந்த உட்குறிப்பு ஒன்றும் ஈரான்மீதான தாக்குதலுக்கு அவர்கள் ஆதரவு கொடுக்கமாட்டார்கள் என்று ஆகிவிடாது. எல்லாம் ஒரு காரணத்தைப் பொறுத்துத்தான் உள்ளது. அமெரிக்க வீரர்களை கொல்லுவதில் ஈரான் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதை புஷ் அரசாங்கம் வெற்றிகரமாக நிரூபணம் செய்தால், பின் ஜனநாயக கட்சியினர் அதை எதிர்க்க மாட்டார்கள்; அப்படித்தான் 2003லும் நடந்தது. பின்னர் "நாட்டுப்பற்றாளர் ஒருங்கிணையும்" நேரம் நிகழும். நாம் அனைவரும் நன்கு அறிந்துள்ளபடி, இத்தகையவர் ஜனநாயகக் கட்சியினரின் அணிகளில் ஏராளமாக உள்ளனர்."

வாஷிங்டன் ஈரானுடனான தொடர்புகளை முறித்துக் கொள்ள ஐரோப்பாவிற்கு அழுத்தம் கொடுக்கிறது

ஒரு அமெரிக்க இராணுவத் தாக்குதல் தயாரிப்புக்களுக்கு இணையான முறையில் --அல்லது அமெரிக்க ஆதரவிற்கான ஒரு இஸ்ரேலிய ஆத்திரமூட்டல் போல்-- வாஷிங்டன் ஐரோப்பிய நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களை ஈரானுடன் வணிக, நிதிய உறவுகளை முறித்துக் கொள்ளுமாறு பெருகிய முறையில் அழுத்தத்தை கொடுத்துவருகிறது.

அமெரிக்காவில் இருந்து வரும் வலுவான அழுத்தத்தை ஒட்டி, ஐரோப்பிய அரசாங்கங்கள் டிசம்பர் 2006ல் யூரேனிய செறிவுட்டல் திட்டத்தை நிறுத்துவதற்கு 60 நாட்கள் கொடுத்தும், நிறுத்தாவிட்டால் ஈரான் பொருளாதாரத் தடைகளைச் சந்திக்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் கொடுக்கும் ஐ.நா.பாதுகாப்புத் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்திருந்தன. இப்பொழுது, அமெரிக்கா தன்னுடைய நிலையை துரிதப்படுத்தி, ஐரோப்பிய நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசாங்கங்கள் தெஹ்ரானுடன் தங்கள் தொடர்புகளை துண்டிக்க உறுதியான, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

நியூ யோர்க் டைம்ஸ் தகவல் ஒன்றின்படி, ஒரு மூத்த அமெரிக்க நிர்வாக அதிகாரி அறிவித்ததாவது: "ஈரான் மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்கு இதுகாறும் செய்ததைவிட மிக அதிகமாக ஐரோப்பியர்கள் செயல்பட வேண்டும் என்று அவர்களிடம் கூறிவருகிறோம்." ஆனால் இவ்வதிகாரி ஐரோப்பா மேற்கொண்ட விடையிறுப்பு பற்றி குறைதான் கூறினார்; "ஐரோப்பிய விடையிறுப்பு பொருளாதாரத் துறையை பொறுத்தவரையில் மிகவும் வலுவற்றதாகத்தான் உள்ளது."

ஐரோப்பிய அரசாங்கங்கள் ஈரானுக்கு கொடுக்கும் கடன்களைப் பற்றித்தான் அமெரிக்க நிர்வாகம் குறிப்பாக இலக்கு கொண்டுள்ளது. International Union of Credit and investment Insurers அமைப்பு கொடுத்துள்ள தகவல்படி, ஈரானிய அரசாங்கத்திற்கு 2005ம் ஆண்டில் ஐரோப்பிய கடன்கள் கிட்டத்தட்ட 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தன. மிக அதிகம் கொடுத்த நாடுகள் இத்தாலி (6.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்/4.7 பில்லியன் யூரோக்கள்), ஜேர்மனி (5.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்/4.17 பில்லியன் யூரோக்கள்), பிரான்ஸ் (1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்/1.08 பில்லியன் யூரோக்கள்), ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியா தலா 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது (772 மில்லியன் யூரோக்கள்) என்று உள்ளன.

இதைத்தவிர, அமெரிக்க கருவூலச் செயலாளரான ஹென்ரி போல்சன் ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு 30 ஈரானிய நிறுவனங்களின் பட்டியலை கொடுத்துள்ளார்; வாஷிங்டன் கருத்தின்படி இவை பயங்கரவாதம் அல்லது ஆயுத உற்பத்தியுடன் தொடர்பு கொண்டவை, மற்றும் இவை வணிகப் பங்காளிகளாக இனியும் நடத்தப்படக்கூடாது என அதில் குறிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் உள்ள ஈரானிய வங்கி கிளைகளும் தடைகளுக்கு இலக்காகி உள்ளன.

ஈரானுக்கு எதிரான பொருளாதார, நிதிய தடைகள் தீவிரப்படுத்தப்படுதல் ஈரானின் அணுசக்தி செறிவூட்டத் திட்டத்தினால் உந்துதல் பெற்றுள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினாலும், வாஷிங்டன், ஈரானிய அரசாங்கம் அதன் அனைத்து வெளிநாட்டு வங்கிச் செயற்பாடுகள், அதன் முக்கிய வருவாய் ஈட்டும் எண்ணெய் உட்பட (வெளி வருவாய்களில் 80 சதவிகிதம்), டாலரில் இருந்து யூரோக்கு மாற்றிக் கொள்ளும் நடவடிக்கை குறித்தும் அபாயத்தை காட்டியுள்ளது.

டிசம்பர் 18ம் தேதி தெஹ்ரானில் ஈரானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் Gholam Hossein Elham, அரசாங்கம் அனைத்து வெளிநாட்டு வணிகப் பணம் கொடுத்தல்களையும் டாலரில் இருந்து மாற்ற இருக்கும் விருப்பத்தை வெளியிட்டார். இந்த நடவடிக்கை ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஆக்கிரோஷத்திற்கு ஒரு அரசியல் பதிலாக பகுதியளவில் திட்டமிடப்பட்டுள்ளது; அதே நேரத்தில் ஈரான் தன்னுடைய எண்ணெயை தற்பொழுது வலுவற்ற டாலருக்கு விற்று அதன் பின் தன்னுடைய ஏற்றுமதிகளுக்கு வலுவான யூரோ மூலம் ஐரோப்பாவிற்கு கொடுக்க வேண்டியுள்ளது என்ற உண்மையையும் அடிப்படையாகக் கொண்டதாகும். இத்தகைய நடவடிக்கை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரும் உட்குறிப்புக்களை கொடுக்கும்; ஏனைய நாடுகளாலும் டாலரில் இருந்து யூரோவுக்கு செல்லும் மிகப்பெரிய மாற்றத்திற்கு இயலுமாயின் இட்டுச்செல்லவும் கூடும்.

வணிகம், நிதியம் இவற்றைப் பொறுத்தவரையில், ஐரோப்பா ஏற்கனவே ஈரானிலும் சுற்றியுள்ள மத்திய கிழக்கு நாடுகளிலும் பெரிய அளவு அக்கறைகளை கொண்டுள்ளது. இதுதான் தற்போதைய அமெரிக்க வேண்டுகோளுக்கு ஐரோப்பா இணங்குவதற்கு தயக்கம் காட்டுவதை விளக்குகிறது. ஒரு ஐரோப்பிய அதிகாரி கூறினார்: "கருவூலத் துறை நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறதோ அதைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருப்போம். ஈரானுடன் தங்கள் வணிகத்தை வங்கிகள் குறைத்து வருகின்றன என்பதைக் காண்கிறோம். ஆனால் மிகப் பெரிய ஐரோப்பிய வணிக நலன்கள் இருப்பதால், நாங்கள் மிகவும் எச்சரிக்கையுடன்தான் செயல்பட முடியும்."

இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரியா, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் நாடுகள் அனைத்துமே மிகப் பரந்த முறையில் ஈரானுடன் வணிகத் தொடர்புகளை கொண்டுள்ளன; குறிப்பாக இது ஆற்றல் துறையில் உள்ளது. ஈரானில் இருந்து எண்ணெய் வாங்குவதை தவிர, ஐரோப்பிய நாடுகள் இயந்திரங்கள், தொழில்துறை கருவிகள் மற்றும் பொருட்களையும் ஏற்றுமதி செய்கின்றன; இவை இராணுவ பயன்பாடு அற்றவை; அமெரிக்கா கூறும் ஈரானின் அணுவாயுத வளர்ச்சிக்கான முயற்சிகளில் தொடர்பு அற்றவை.

ஈரானுடனான ஆஸ்திரிய வணிகம் பற்றிய சமீபத்திய அமெரிக்க விமர்சனத்தை மறுக்கும் வகையில் ஐரோப்பிய பிரதிநிதியும், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் SPE -ன் (சோசலிஸ்டுகளுக்கான கட்சியின்) துணைத் தலைவருமான Hannes Swoboda விடையிறுக்கும் வகையில் அறிவித்தார்: "ஈரானுடன் இயல்பான பொருளாதார உறவுகளில் அமெரிக்கா தலையிடுதல், முற்றிலும் நியாயமற்றது ஆகும். ஐரோப்பாவும், ஐரோப்பிய பொருளாதாரமும் அமெரிக்கா ஈரான் கொள்கையில் தோல்வியுற்றதற்கு நஷ்டப்படும்படி செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது." ஆஸ்திரிய அரசாங்கம் தெளிவாக தன்னுடைய வணிக நலன்களை அமெரிக்க அழுத்தத்திற்கு எதிராக காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று Swobody முறையிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கைக்கு ஐரோப்பிய விரோதப்போக்கின் அளவானது கடந்த வாரத்தில் பிரான்சின் ஜனாதிபதி ஜாக் சிராக்கால் செய்யப்பட்ட கருத்து வடிவத்தின் மூலமும் மேற்பரப்பில் வெடித்தது. பிரெஞ்சு, அமெரிக்க செய்தித்தாட்கள் பலவற்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில், ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஏவுகணைகளை அனுப்பிவைத்தால் தெஹ்ரான் ஒரு சில நிமிஷங்களுக்குள் வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டுவிடும் என்று சிராக் ஒளிவுமறைவின்றிக் குறிப்பிட்டார்.

ஒரு சுருக்கமான ஆனால் கொடூரமாக விமர்சிக்கும் வகையில் இருந்த ஊடகப் பிரச்சாரத்தின் போக்கில், உத்தியோகபூர்வ அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கொள்கை முதல் இடத்தில், ஈரான் அணுத்திறன் பெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருக்கும் என்று நினைவுபடுத்தப்படுகையில், சிராக் தன்னுடைய கருத்துக்களின் வன்மையை குறைக்கும் வகையில் மறுநாள் திருத்திக் கொண்டு பேசினார். ஆயினும் கூட சேதம் இழைக்கப்பட்டுவிட்டது. ஒரு வெடிப்புத் தன்மை நிறைந்த உரையில், சிராக் அமெரிக்காவில் இருந்தும் "விருப்பமானவர்களின் கூட்டணியில் இருந்தும்" ஒரு சுதந்திரமான பாதையில் செல்லும் தன்னுடைய உறுதியை வெளிப்படுத்தினார்; அதே நேரத்தில் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பாதுகாப்பிற்காக அவர் வெள்ளை மாளிகையில் அவருக்கு சரிநிகராக உட்கார்ந்திருப்பவர் போலவே ஒவ்வொரு துளியும் ஈவிரக்கமற்ற, மற்றும் மிருகத்தனமான முறையில் நடந்து கொள்ளத் தயார் என்பதையும் தெளிவு படுத்தினார்.

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஜேர்மனியின் பங்கு

அட்லாண்டிக் கடந்த பகுதிகளுள் பெருகிய பிளவுகள் மற்றும் ஐரோப்பாவிற்குள்ளேயே முக்கிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே இருக்கும் பிளவுகள் அண்மையில் ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் வளைகுடாப்பகுதிக்கு பயணித்திருந்த பின்னணியில் இருந்தன. மேர்க்கெல் அரேபிய, வளைகுடா நாடுகளான எகிப்து, செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் குவைத்திற்கு நான்கு நாட்கள் சுற்றுப் பயணத்தை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் இதேபோல் சமீபத்தில் சென்றதை அடியொற்றி, மேற்கொண்டார்.

ரைஸைப் போலவே மேர்க்கெலும் வளைகுடா அரசுகளில் ஈரானை தனிமைப்படுத்தும், ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா இயக்கங்களை பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் தனிமைப்படுத்தும் கொள்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் சென்றிருந்தார். அதே நேரத்தில் ஈரானில் ஜேர்மனிய நலன்கள் வருங்காலத்தில் இழப்புக்களை கொண்டால் அவற்றை ஈடுகட்டும் வகையில் இப்பகுதியில் வணிக உறவுகளை ஆழமாகக் கொள்ளவும் நம்பிக்கை கொண்டுள்ளார்; தற்பொழுது இவை அனைத்தும் அமெரிக்க இராணுவத்தின் பாதுகாப்பிற்கு உட்பட்டுத்தான் இருக்கின்றன.

பலவிதங்களிலும், ஜேர்மனிய முதலாளித்துவம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பூசல் ஏற்பட்டால் ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக இழப்பிற்கு ஆளாகும் நிலையில் உள்ளது. ஈரானுக்கு மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக ஜேர்மனி உள்ளது (4.3 பில்லியன் யூரோ ஏற்றுமதி 2005ல் நடைபெற்றது; இது 2002 உடன் ஒப்பிடும்பொது 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகும்); இந்த வணிகத்தின் பெரும்பகுதி செல்வக் கொழிப்பு உடைய ஈரானிய எண்ணெய் துறையுடன் உள்ளது. ஜேர்மனியின் பெரும் நிறுவனங்களில் சில, Simens, BASF, Linde போன்றவை ஈரானில் சுறுசுறுப்புடன் இயங்குகின்றன; இவற்றை தவிர சில சிறிய ஜேர்மனிய நிறுவனங்களும் உள்ளன.

ஆயினும்கூட, 2005ல் பதவிக்கு வந்தபின்னர், ஜேர்மனிய அதிபர் ஈராக்கில் பேரழிவு தந்த அமெரிக்க போர் மற்றும் ஆக்கிரமிப்பு பற்றி ஒரு சொல்கூட விமர்சிக்கவில்லை; அமெரிக்க நிர்வாகத்திற்கு ஐரோப்பிய ஆதரவு நாடுகளில் மிகவும் உறுதியான ஒன்று என்று தன்னை ஜேர்மனி நிரூபித்துள்ளது.

பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இணைந்து, ஜேர்மனி ஈரானுக்கு எதிராக கடந்த டிசம்பரில் ஐ.நா. பொருளாதார தடைகளை சுமத்துவதில் முக்கிய பங்கை கொண்டிருந்தது. அதன் பின் மேர்க்கெல் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தீவிரப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பிற்கு முக்கியமான அரசியல் மூடிமறைப்பை வழங்கும் வகையில் ஏகாதிபத்திய நால்வர் புதுப்பிக்கப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் -- ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐ.நா இவைதான் அந்த நான்கு அமைப்புக்கள் ஆகும்; இதன் பின் தீவிர இஸ்லாமிய இயக்கங்களை தனிமைப்படுத்தும் புதிய முயற்சியும் அவரால் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய கிழக்கில் தன்னுடைய சமீபத்திய பயணத்தை தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரைஸ் ஐரோப்பாவில் தான் முதலில் வரும் இடமாக பேர்லினை கொண்டார்; அப்பகுதியில் அமெரிக்க கொள்கைக்கு முழு ஆதரவும், புரிந்துகொள்ளுதலும் இருப்பதற்கு பெரிதும் பாராட்டிப் புகழ்ந்தார். கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸிற்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், ஜேர்மனிய வெளியுறவு மந்திரி Frank Walter Steinmeier "மத்திய கிழக்கில் முன்பு இருந்ததை விடப் பெரிய பங்கை அமெரிக்கா ஆற்ற" இருப்பதற்கான நம்பிக்கையைத் தான் பெற்றிருப்பதாக வெளிப்படுத்திப் பேசினார்.

இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர், வரவிருக்கும் G8 உச்சி மாநாட்டின் தலைவர் என்னும் முறையில், ஜேர்மன் அதிபர் அமெரிக்காவை திருப்திப்படுத்தும் தன்னுடைய கொள்கையை தொடர்வதில் உறுதியாக உள்ளார். வாஷிங்டனில் உள்ள அதிகாரிகள் மேர்க்கெல் ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகள் பிரச்சினையில் ஆதரவு கொடுப்பதாகவும், குறைந்தது ஒரு ஜேர்மன் வங்கியான Commerz bank அண்மையில் அந்நாட்டுடன் டாலர்கள் வணிகத்தை நிறுத்தியதாவும் கூறினார்.

ஜேர்மனிய வணிக நலன்கள் மத்திய கிழக்கிலும் வளைகுடாப் பகுதியிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதிலும் மேர்க்கெல் உறுதியாக உள்ளார். இவருடைய பெயரளவிற்கான அப்பகுதி பயணம் மத்திய கிழக்கில் "சமாதான வரைபடத்தை" புதுப்பிப்பதற்கு என்று கூறப்பட்டாலும், இவர் தன்னுடைய பொருளாதார மந்திரி Michael Glos, Deutsche Bank, Simens, Deutsche Bahn, Wintershall energy group ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட 40 ஜேர்மனிய வணிகத் தலைவர்களின் பேராளர் குழுவிற்கு தலைமையேற்றுச் சென்றுள்ளார். அதிபர் செயற்பட்டியலில் உள்ள முக்கிய பிரச்சினைகள், ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் ஜேர்மனிய-எமிரேட்டுக்கள் வணிக அமைப்பில் பங்கு பெறுதல், செளதி அரேபியாவில் ஜேர்மனிய தொழில்நுட்ப ஆதரவு, ஒருவேளை ஈரானினால் பாரசீக வளைகுடா கடல்வழி முற்றுகை இடப்பட்டால், செளதி அரேபியாவிற்கு போக்குவரத்து தொடர்புகள் அளித்தல் ஆகியனவாகும்.

அதிபர் மேர்க்கெல் (Christian Democratic Union), மற்றும் அவருடைய வெளியுறவு மந்திரி Steinmeier (Social Democratic Party) இருவருக்கும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய உறுதியற்ற தன்மையானது, அமெரிக்க செல்வாக்கு அங்கு பலவீனமாக உள்ள நிலைமையின் கீழ் அப்பகுதியில் ஜேர்மனியின் பொருளாதார செல்வாக்கை எல்லை குறித்துக் காட்டுவதற்கு புதிய வாய்ப்புக்களை அளித்துள்ளது. ஆனால் அவ்வாறு செய்கையில், ஜேர்மனிய அரசாங்கம் முரட்டுத்தனமாக, ஈராக்கிய படுகொலையை இப்பகுதி முழுவதும் படரவிடுவதற்கு புஷ் நிர்வாகத்தின் கரங்களை வலுப்படுத்துகிறது, அத்துடன் இது மத்திய கிழக்கில் இருக்கும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள உழைக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய மற்றும் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.