World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

The Gaza crisis and the failure of Palestinian nationalism

காசா நெருக்கடியும் பாலஸ்தீனிய தேசியவாதத்தின் தோல்வியும்

By the editorial board
20 June 2007

Use this version to print | Send this link by email | Email the author

பாலஸ்தீனிய அதிகாரத்தின் ஜனாதிபதி மகம்மது அப்பாஸால் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும், காசாவில் இஸ்லாமிய இயக்கத்தின் இராணுவ வெற்றியில் முடிந்த, ஃபத்தாவிற்கும் ஹமாஸிற்கும் இடையே நடந்த, ஒரு வார உள்நாட்டுப் போரின் பின்னர் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளதும், மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளுக்கு இடையே நடைமுறையில் அரசியல் பிரிவினை ஏற்பட்டுள்ளதை பலப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் ஆணையின் பேரில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நேரடிப் பாதுகாப்பு பொறுப்பின்கீழ் அவற்றின் முகவர்களான அப்பாஸ், பிரதம மந்திரியும் முன்னாள் உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் அதிகாரியுமாக இருந்த சலாம் பய்யத் இவர்கள் தலைமையில் இயங்கும்.

முதல் கட்டம், அப்பாசின் கீழ் ஓர் ஆதரவு ஆட்சியை நிறுவி மேற்குக் கரையில் ஹமாஸின் முக்கிய உறுப்பினர்கள் சுற்றி வளைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதுடன் தொடங்கி, ஹமாஸின் அரசியல் செல்வாக்கை முற்றிலும் களைந்துவிடும் பொறுப்பை ஏற்பதாகும். ஃபத்தா துப்பாக்கிவீரர்கள், ஹமாஸ் கட்டுப்பாட்டின்கீழ் ரமல்லா மற்றும் நப்லுஸில் இருக்கும் அமைப்புக்களை திடீரெனத்தாக்கிப் பிடித்துள்ளனர். ஹமாஸின் ஆயுதமேந்திய பிரிவான Izaddin Kassam மற்றும் அதன் துணை இராணுவ நிர்வாகப் படை ஆகியவற்றை தொடர்ச்சியான ஜனாதிபதி ஆணைகள் மூலம் அப்பாஸ் சட்டத்திற்கு புறம்பானவை என்று அறிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ஏற்கனவே அப்பாஸிற்கு நிதிய ஆதரவு கொடுப்பதாகவும், மேற்குக் கரையின் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அகற்றுவதாகவும் குறிப்புக் காட்டியுள்ளன. ஆனால் ஒன்றரை மில்லியன் மக்கள் வாழும் காசாப்பகுதியை வணிக, இராணுவ முற்றுகைக்கு உட்படுத்துதல் ஏற்கனவே அம்மக்கள் எதிர்கொண்டுள்ள பெருந்திகைப்பான வறுமையையும், உணவுத் தட்டுப்பாட்டையும் மோசப்படுத்தும்.

காசா மீது இலக்கு கொள்ளப்பட்டுள்ள அரசியல், பொருளாதார, இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்த நடவடிக்கைகள் முன்னோடிதான்.

இஸ்ரேலும் எகிப்தும் காசா எல்லைகளை மூடிவிட்டன; எரிபொருள் அளிப்புக்களை நிறுத்தப்போவதாகவும் இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது.

செவ்வாயன்று, இஸ்ரேலிய டாங்குகள் ஃபத்தாவிற்கும் ஹமாஸிற்கும் இடையே மோதல்கள் வெடித்தபின் முதல்தடவையாக காசாவிற்குள் நுழைந்தன. (Beit Hanoun) Erez பகுதி வழியே இந்த டாங்குகள் நகர்ந்தன; தப்பியோடிய 500 ஃபத்தா ஆதரவாளர்கள் அங்கு ஐந்து நாட்களாக மாட்டிக் கொண்டுள்ளனர். கான்கிரீட் தடுப்புக்களை இஸ்ரேலிய இராணுவ புல்டோசர்கள் இடித்ததோடு அங்கு பரஸ்பரம் துப்பாக்கிச் சூடுகளும் நடந்தன.

"குறுகிய காலத்திற்குத்தான்" காசாவில் டாங்குகள் இருக்கும் என்று இஸ்ரேலிய ஆதாரங்கள் கூறியுள்ளன. ஆனால் பிரிட்டனின் Sunday Times, ஒரு சில வாரங்களுக்குள் ஒரு பெரிய தாக்குதலுக்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் கொடுத்துள்ளது.

மூத்த இஸ்ரேலிய இராணுவ ஆதாரங்கள் "சில நாட்களில் ஹமாஸின் இராணுவத் திறனை" முற்றிலும் அழிக்கும் வகையில் 20,000 துருப்புக்களை கொண்ட தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்றும் ஒருவேளை இது "ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்தும் ராக்கெட் தாக்குதல்களின் தூண்டுதலால் இருக்கும் அல்லது தற்கொலைப் படைகளின் குண்டுவீச்சிற்கு விடையளிக்கும் வகையில் இருக்கும்" என்றும் விரிவாக கூறியுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி, தொழிற் கட்சியின் எகுட் பராக் இரண்டு கவசப் பிரிவுகள், ஒரு தரைப்படப் பிரிவு, தாக்குதல் விமானப் பிரிவு F16 ஜெட்டுக்கள் உட்பட அனுப்பப்படுவதற்கு விரிவான திட்டத்தை கோரியுள்ளதாக தெரிகிறது. பராக்கிற்கு நெருக்கமான ஆதாரம் ஒன்று, "கேள்வி அப்படியா என்பது இல்லை, எப்பொழுது, எப்படி தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்பதுதான்"

செய்தி ஊடகத்தில் "நாகரிகங்களின் மோதல்" என்று குறிப்பிடும் வகையில் இடைவிடாமல் வரும் குறிப்புக்கள், இஸ்ரேலிய முயற்சியான, ஹமாஸை நசுக்குவதற்கும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை கோரிக்கைகளுடன் அதைத் தொடர்புபடுத்துவதும் தீய அறிகுறிகள் ஆகும்.

அமெரிக்க, இஸ்ரேல் இரண்டும் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிடும்

ஜனவரி 2006 தேர்தல்களில் ஹமாஸ் அதிகாரத்திற்கு வந்தது; இதற்கு முக்கிய காரணம் ஃபத்தாவில் நிறைந்திருந்த ஊழலும், நெருங்கியவர்களுக்கு ஆதாயங்கள் கொடுத்ததும் பரந்த அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. பலரும் அவ்வமைப்பை ஒரு சிறு கோடிஸ்வர குழுவின் பிரதிநிதியாகவும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் உள்ளூர் போலீசாராகவும்தான் பார்த்தனர்.

ஒரு ஜனநாயக வாக்குச்சீட்டை மேலை சக்திகள் அங்கீகரிக்க மறுத்து அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கத்துடன் பொருளாதார தடைகளை கொண்டுவந்து, அப்பாசால் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் அரசாங்கம் ஒன்றை நிறுவ முற்பட்டன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கணக்கீடுகள் ஹமாஸை அழிக்கும் வகையில் அப்பாஸும் ஃபத்தாவும் கணிசமான படைகளை திரட்ட நிர்பந்திப்பதில் எப்போதும் தங்கி இருந்தது. ஆனால் ஃபத்தாவிற்கு எதிரான மக்கள் விரோதப் போக்கின் அளவைக் குறைமதிப்பீடு செய்ததும், ஃபத்தாவின் சண்டையிடும் திறன் பற்றி மிகை மதிப்பீடு செய்ததும்தான் அவற்றின் தவறான கணக்குகள் ஆகும்.

பாலஸ்தீனியர்கள் புஷ் நிர்வாகத்தின் சாலை வரைபடத்துடன் சமரசம் செய்து கொள்ளும் ஃபத்தாவின் முயற்சிகளுக்கும் மேற்குக் கரையின் பெரும்பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்படும் என்பதோடு வெளியேறிய பாலஸ்தீனியர்களுக்கு திரும்பும் உரிமை மறுப்பு என்பது உள்ளடங்கலான இஸ்ரேலால் ஆணையிடப்படும் விதிமுறைகள் கொண்ட உடன்பாட்டிற்கும் அரசியல் எதிர்ப்பிலிருந்து ஹமாஸ் ஆதாயம் அடைந்தது.

ஆனால் பாலஸ்தீனிய மக்களுக்கு ஹமாஸ் தக்க மாற்றீடு எதையும் கொடுக்கவில்லை. மத அடிப்படைவாதத்துடன் மனவுறுதி கொண்ட அதன் முன்னோக்கு அடிப்படையில் தேசியவாதத்தின் அதிதீவிர வடிவமாகும். அரேபிய முதலாளித்துவ வர்க்க பகுதிகளின் நலன்களை அது தெளிவாய் கூறுகிறதே அன்றி, தொழிலாளர்கள் விவசாயிகளுடைய நலன்களைப் பற்றி அல்ல.

மத வெறிக்காக அது வாதிடுதல், தடையில்லா முறையில் செமிட்டிச எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் ஆகியன ஃபத்தாவின் மீது சில பிரமைகளை வைத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் பலரால் எதிர்க்கப்படுகிறது. தங்கள் அரேபிய அண்டை நாட்டு மக்களுடன் சமாதானமாக இருக்க வேண்டும் என்று கருதும் நூறாயிரக்கணக்கான இஸ்ரேலிய தொழிலாளர்களுக்கும் இது ஆழ்ந்த வெறுப்பைத்தான் கொடுக்கிறது. உண்மையில் யூதர்கள் மற்றும் அரேபிய தொழிலாளர்களுக்கு இடையே அரசியலில் ஒன்றுபட்ட போராட்டத்தை தடுப்பதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட கொள்கைகளை எண்ணிப்பார்த்தல் இதைவிட அரிது.

மேலும் சொற்பூச்சுக்களும் சில நேரம் ஆயுதமேந்திய நடவடிக்கைகள் இருப்பினும், ஹமாஸ் மத்திய கிழக்கில் இருக்கும் ஏகாதிபத்திய ஆணைக்கு உட்பட்ட அரச முறையை அக்கறையுடன் எதிர்க்கவில்லை; அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுடன் தனக்கு உகந்த உடன்பாட்டை அது காண முற்பட்டுள்ளது.

தேசியவாதத்தின் முட்டுச்சந்து

இந்த அபிவிருத்திகள் இறுதியில் இஸ்ரேலுடன் சேர்த்து ஒரு பாலஸ்தீனிய அரசு தோற்றுவிக்கப்படும் என்பதற்கான 1993 ஒஸ்லோ உடன்படிக்கையில் அடங்கியிருந்த உறுதிமொழிக்கு --"இரு அரசுகள் தீர்வு" எனக் கூறப்பட்ட யாசீர் அரஃபாத்தின் கீழ் ஃபத்தாவால் கையெழுத்திப்பட்டிருந்ததற்கு-- இறுதியான முடிவை கொண்டுவந்துவிட்டன. பாலஸ்தீனியர்கள் இப்பொழுது மிகக் கசப்புடன் "மூன்று அரசுகள் தீர்வு" பற்றிப் பேசுகின்றனர்.

இன்னும் அடிப்படையில், காசாவிற்கும் மேற்குக் கரைக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவு, இஸ்ரேலிய அபகரித்தல் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டம் அடிப்படையாக கொண்டிருந்த தேசியவாத முன்னோக்கின் இறுதி உடைவை பிரதிநிதித்துவம் செய்கிறது.

வெளியேற்றப்படல், இராணுவ ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிராக ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக போராடியிருந்த பாலஸ்தீனியர்களிடையே இத்தகைய சகோதரத்துவ மோதல் மிக துன்பியலான பரிமாணத்தை கொடுக்கிறது. ஆனால் பாலஸ்தீனிய தேசியவாத வேலைத்திட்டத்தின் பொறிவு தவிர்க்க முடியாமல் பாலஸ்தீனிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் இஸ்ரேலில் அவர்களைப் போல் உள்ளவர்கள், இஸ்ரேலை ஒரு யூத அரசாக நிறுவியதிலிருந்து இப்பகுதியை தொற்றியிருக்கும் அடக்குமுறை சுழற்சி, மரணம், வன்முறை இவற்றிலிருந்து வெளியேற ஒரு வழிவகையை காண வைக்கும்.

ஃபத்தாவின் வரலாற்றுத் தோல்வி மற்றும் வாஷிங்டனின் விருப்பத்திற்கு ஏற்ப அது வளைந்து கொடுக்கும் விதத்தில் மாறியிருத்தல் இவற்றில் இருந்து அரசியல் படிப்பினைகள் பெறுதல் மிக இன்றியமையாததாகும். அதன் இதயத்தானத்தில், பாலஸ்தீனிய மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ள தர்மசங்கடம் ஊழலின் விளைவு அல்ல; மாறாக தங்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக அபிலாஷைகளை ஃபத்தாவின் முதலாளித்துவ, தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் அடைவதற்கு இயலாமையிலிருந்து ஊற்றெடுக்கிறது.

தற்போதைய தேக்கநிலையானது, பாலஸ்தீனிய மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக தேவைகளை, முழு ஏகாதிபத்திய அமைப்பு, அதை நிலைநிறுத்தும் அனைத்து ஆட்சிகளுக்கும் எதிராக - அரேபிய முதலாளித்துவ அரசுகள் மற்றும் இஸ்ரேல் இவற்றுக்கு- எதிராக ஒரு சோசலிச மத்திய கிழக்குக்கான ஒரு பொதுப் போராட்டத்தில் ஐக்கியப்படுத்தும் வேலைத்திட்டத்திலிருந்து விலக்கி உறுதிப்படுத்த இயலாமையை விளக்கிக் காட்டுகிறது.

வரலாற்றுப் படிப்பினைகள்

பல போட்டியிட்ட தேசிய இயக்கங்களுள் மிக தீவிரப் போக்கை பிரதிநிதித்துவம் செய்தது என்ற வகையில் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் தலைமையை ஃபத்தா அடைந்தது. பாலஸ்தீனிய மக்களின் பரந்த பிரிவுகளிடையே அது பெரும் செல்வாக்குப் பெற்றதற்கு காரணம் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டம் நடத்த வேண்டும் என்ற அதன் உறுதிப்பாடுதான்.

ஆனால் ஒரு மத சார்பற்ற, ஜனநாயக பாலஸ்தீனத்தை நிறுவவேண்டும் என்ற அதன் முன்னோக்கு, யூதர்கள் மற்றும் அரேபியத் தொழிலாளர்களிடையே ஐக்கியத்துக்கான அடிப்படையை ஒருபோதும் கொடுக்க முடியவில்லை; ஏனெனில் அதற்கு இஸ்ரேல் ஒரு சியோனிச அரசாக இருப்பது அகற்றப்பட வேண்டிய தேவை இருந்தது. அத்தகைய அடிப்படை அரசியல் போராட்டம் ஒரு சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு அடிப்படையில் கட்டாயம் தளத்தைக் கொள்ள வேண்டியது அவசியமாகும்; அது பாலஸ்தீனியர்கள் மற்றும் யூதர்கள் ஆகியோரின் விடுதலை என்பதை மட்டும் இலக்காகக் கொள்ளாமல் மத்திய கிழக்கு மக்கள் அனைவருமே ஏகாதிபத்திய, வர்க்க ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதாக இருக்க வேண்டும்.

மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்தை செலுத்தும் ஒரே உள்ளூர் முகவர் இஸ்ரேலிய முதலாளித்துவ வர்க்கம் ஆகும். தங்கள் சொந்த சர்வாதிகார ஆட்சியை மக்கள்மீது சுமத்தும் பல்வேறு அரேபிய அரசுகளும் அப்பட்டியலில் உள்ளன.

ஆனால் ஃபத்தாவும் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு ஒட்டு மொத்தமாகவும் யூதர்கள் மற்றும் அரேபிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளது சுயாதீனமான அரசியல் அணிதரளலைச் செய்ய முடியவில்லை. பல்வேறு வகையினை சார்ந்த சமூகக் கூறுபாடுகளையும், பெரிய அளவில் தொழிலாள வர்க்க மற்றும் விவசாய காரியாளர்களை கொண்டிருந்தாலும், ஃபத்தா இறுதியில் புலம்பெயர்ந்து வாழும் பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கத்தால் மேலாதிக்கம் செய்யப்பட்டதுடன் அதன் அரசியல் பிரதிநிதியாகவும் மாறியது.

"ஆயுதமேந்திய போராட்டம்" பற்றி ஏராளமான தீவிரப் போக்கினரால் புகழப்பட்ட போதிலும்கூட, பயங்கரவாதத்தை அது பயன்படுத்தியமை உள்ளடங்கலான PLO வின் இராணுவச் செயற்பாடு, மத்திய கிழக்கில் இருக்கும் அரசுகளின் ஏகாதிபத்திய மேலாதிக்கம் நிறைந்த அமைப்பிற்குள்ளே பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு இடத்தை உத்தரவாதம் செய்து தருகின்ற, ஏகாதிபத்தியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவைக் காணும் நோக்கத்தை கொண்டிருந்தது.

ஏகாதிபத்தியத்திற்கு ஃபத்தாவின் எதிர்ப்பானது முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை அச்சுறுத்தக்கூடிய தொழிலாள வர்க்கத்தில் எந்தவொரு இயக்கத்தின் வளர்ச்சியும் தடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டதாக எப்பொழுதும் இருந்தது. இந்த இலக்கை கருதி PLO "பாலஸ்தீனிய மக்களின் முறைமையான ஏகப்பிரதிநிதி" என்று தன்னுடைய நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்தது; மேலும் தேசியப் போராட்டம் பாலஸ்தீனியர்களிடையே மற்றய பூசல்களை ஒதுக்கிவைத்துவிட வேண்டும் என்ற கொள்கையையும் வலியுறுத்தியது. இதன் சாசனம் "அனைத்து அரேபிய அரசுகளுடனும் ஒத்துழைப்போம்", "அவற்றிற்கு இடையே நடுநிலைக் கொள்கையை வகிப்போம்", "எந்த அரசின் உள்விவகாரங்களிலும் தலையிடோம்" என்று வலியுறுத்தியிருந்தது.

அரேபிய ஆளும் உயரடுக்கை சவால் செய்ய PLO மறுத்தது வர்க்கத் தளத்தை கொண்ட, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் ஒன்றை அனைத்து தேசிய, இனவழி, மத பிரிவுகளை தாண்டி - எல்லாவற்றிற்கும் மேலாக யூதர்கள் அரேபியர்களிடையே கட்டியமைப்பதை முடியாமல் செய்துவிட்டது. உண்மையில் அரஃபாத்தும் அவருடைய நெருக்கமான நண்பர்களும் காட்டிய பெரும் தீரம், தியாகம் ஆகியவை ஒருபுறம் இருந்தாலும், ஃபத்தா ஆனது பல அரபு ஆட்சிகளும் "பாலஸ்தீனிய பிரச்சினையை" இஸ்ரேலுடனான தங்களின் எல்லைப்புற பூசல்களின் மையத்தானமாக வைப்பதற்கு ஆதரவுதருவதற்கான இடையறா சூழ்ச்சிக் கையாளல் பற்றிய கொள்கையாக குறைக்கப்பட்டது.

பாலஸ்தீனிய மக்கள் பெரும் அளவில் கொத்தடிமையாக தொடர்ந்து வைக்கப்பட்டது அரேபிய முதலாளித்துவ வர்க்கத்தினால்தான் என்ற கசப்பான வரலாற்று அனுபவம் விளக்கிக் காட்டப்பட இருந்தது.

உலகளவில் அதன் தேசிய முன்னோக்கு PLO வை, எண்ணெய் வளமுடைய மத்திய கிழக்கில் எவர் ஆதிக்கம் செலுத்துவது என்ற சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையே நடந்த போட்டியில் உள்ள சூழ்ச்சிக் கையாளல்களை சார்ந்திருக்கச் செய்தது. இறுதியில், இஸ்ரேலுக்கு சவால்விடும் அரேபிய அரசுகளின் திறனானது ஒன்றில் சோவியத் ஒன்றியத்தின் இராணுவ ஆதரவில் அல்லது பெருகிய சோவியத் செல்வாக்கின் அச்சுறுத்தலில் அமெரிக்கா மீது அழுத்தம் கொடுக்கக்கூடிய தங்களுடைய திறனில் தங்கியிருப்பதாக ஆனது.

1973ம் ஆண்டு யோம் கீப்பூர் போர்

மத்திய கிழக்கு மற்றும் உலக அரசியலில் 1973ம் ஆண்டு கீப்பூர் போர் ஒரு திருப்புமுனை ஆயிற்று; அவ்விதத்தில் இது பாலஸ்தீனிய தேசிய இயக்கத்தின் அரசியல் நிலைப்பாட்டிற்கும் திருப்புமுனையாயிற்று. எகிப்து, சிரியா ஆகியவை ஆரம்பத்தில் அடைந்த இராணுவ வெற்றிகளுக்கு பின், இஸ்ரேல் தோற்கடிக்கப்படுவதை தடுக்க அமெரிக்கா உறுதியாக செயல்பட்டது. மத்திய கிழக்கிலும், சர்வதேச அளவிலும், "சமபல நிலையை" தக்க வைப்பதற்கு தன்னுடைய பங்கிற்கு சோவியத் ஒன்றியம், 1967ம் ஆண்டு ஆறு நாள் போருக்கு பின்னர் டெல் அவீவ் ஆக்கிரமித்துள்ள அனைத்து பகுதிகளையும் (மேற்குக்கரை, காசா) கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுமாறு விடும் போர் ஒப்பந்தத்தை வலியுறுத்துவதில் வாஷிங்டனின் பின்னே நின்றது.

மத்திய கிழக்கில் இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது அமெரிக்காவின் கொள்கையின் மையத்தானமாகிவிட்டது என்பதை எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் உணர்ந்து இஸ்ரேலுடன் நேரடியான மோதல் என்பதை இனி சிந்தித்தும் பார்க்கமுடியாது என்ற முடிவிற்கு வந்தார். 1978ல் கேம்ப் டேவிட் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டமை மற்றும் 1979ல் எகிப்து இஸ்ரேல் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமை என்ற வகையில் அவர் இஸ்ரேல் பற்றிய அங்கீகாரத்திற்கு முன்னோடியானார்.

இவ்வாறு செய்ததற்கு பல அரேபிய சக்திகளாலும் எகிப்து கண்டிக்கப்பட்டது; ஆனால் லெபனான் மீதான கட்டுப்பாடு பற்றி சிரியாவுடன் பூசல் என்பதைத் தவிர, 1973க்கு பின்னர் இஸ்ரேல் அரபு அரசுகளினால் தீவிர சவால் எதனையும் எதிர்கொள்ளவில்லை. உண்மையில், ஈராக், லிபியா, சிரியா மற்றும் செளதி அரேபியா ஆகியவை ("இரு அரசு தீர்வு" என்ற ஒன்றை முன்னெடுப்பதை நோக்கிய PLO வினால் எடுக்கப்பட்ட ஆரம்ப நகர்வுக்கு எதிரான) PLO விற்குள்ளேயான நிராகரிப்பவர்களின் முன்னணி (Rejectionist Front) போன்ற எதிர்ப்பு போக்குகளை ஒழுங்கமைத்து கொண்டு, இஸ்ரேலை அங்கீகரித்தலை உரத்த குரலில் எதிர்ப்பதுடன் தம்மை எல்லைப்படுத்திக் கொண்டன.

இப்படி காட்டிக் கொண்டது 1970ம் ஆண்டு ஜோர்டானின் உடந்தையுடன் "கறுப்பு செப்டம்பர்" பாலஸ்தீனியர் படுகொலை செய்தது மற்றும் 1975ல் கரன்டினா மற்றும் Tel al Zaatar முகாம்களில் சிரியாவின் உடந்தையுடன் பாலஸ்தீனியர்களை லெபனிய பலாஞ்சிஸ்டுகள் படுகொலை செய்தது உள்பட, பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொடுமைப்படுத்தியதற்கும், PLO மீதான நேரடித் தாக்குதல்களுக்கும் அரேபிய அரசுகளின் உடந்தைக்கு முற்றிலும் மாறுபட்ட தன்மையில் இருந்தன.

1982ம் ஆண்டு PLO வை வெளியேற்றுவதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் லெபனான் மீது படையெடுத்தபொழுது, சிரிய முதலாளித்துவ ஆட்சி ஏதும் செய்யவில்லை; இதையொட்டி PLO துனீசிற்கு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதோடு, பாதுகாப்பு அற்ற நிலைக்கும் தள்ளப்பட்டது. இந்தக் காட்டிக் கொடுப்பிற்கு பாலஸ்தீனிய அகிதகள் கொடுத்த விலைதான் சப்ரா, ஷட்டில்லாவில் நிகழ்ந்த படுகொலைகள் ஆகும்.

முதலாளித்துவ மீட்சிக்கு ஸ்ராலினிச அதிகாரத்துவம் திரும்பியதும் மற்றும் அதைத்தொடர்ந்து சோவியத் ஒன்றியம் பொறிந்ததும் PLO இஸ்ரேலுடன் உடன்படிக்கையை மறுப்பதற்கான எவ்வித வாய்ப்புக்கும் உறுதியாய் முடிவைக் கொண்டு வந்தது. தாங்கள் எதிர்கொண்ட இழிவான நிலையை எதிர்த்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பாலஸ்தீனிய தொழிலாளர்களும் இளைஞர்களும் தன்னிச்சையாக எழுச்சி கொண்ட இன்டிபடா பின்னணியில், அரஃபாத் நம்பிக்கை அற்ற நிலையில் கடைசியாய் ஒரு சூதாட்டத்தை நடத்தினார்: இஸ்ரேலுடன் உடன்பாடு காண்பதற்கு வாஷிங்டனிடத்தில் இருந்தே ஆதரவை நாடுதல் என்பதே அது.

இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் அறிக்கை, இஸ்ரேலுடனான சமாதான உடன்பாடு "இடைக்கால தந்திரோபாயம் அல்ல, மூலோபாயம்" என ஏற்றல், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் கைவிடல் ஆகியவற்றை ஒப்புக் கொண்டு 1998 உடன்பாட்டில் கையெழுத்திடுமாறு அரஃபாத்தை நிர்பந்தித்தன் மூலம் கிளின்டன் நிர்வாகம் பதில் கொடுத்தது. இஸ்ரேலை ஏற்றுக் கொண்டது பற்றி செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்குமாறு கேட்கப்பட்டபோது, அராஃபத் பின்னர் நன்கு தெரிந்த வசனத்தை கூறினார்: "உங்களுக்கு என்ன வேண்டும்? நான் துகிலுரிய வேண்டுமா?"

அமெரிக்க கட்டளைகளை அரஃபாத் ஏற்றது பாலஸ்தீனிய அதிகாரம் நிறுவப்படுதலுக்கு வழிவகுத்தது; இது அப்பாசினால் கையெழுத்திடப்பட்டு அராஃபத்தின் சாட்சியத்திற்குட்பட்டிருந்த 1993 ஓஸ்லோ உடன்படிக்கைகளில் வெளிவந்தது. பாலஸ்தீனிய மக்கள் மீது அதிகாரம் இருந்தாலும், வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு, இஸ்ரேலிய குடியேற்றங்களின் பாதுகாப்பு, எல்லைகள் கட்டுப்பாடு, இஸ்ரேலுக்குள் வருதல் ஆகியவற்றிற்கு இஸ்ரேல் முழுப் பொறுப்பைக் கொண்டிருக்கும் வகையில் இது இஸ்ரேல் பாலஸ்தீனிய மக்களை கண்காணிக்கும் பொறுப்புடன் அதனையே முற்றிலும் நம்பியிருக்க வேண்டிய ஒரு அமைப்பை நிறுவியது.

PA தடையற்ற நெருங்கிய சாக்களுக்கு முன்னுரிமை அளித்தலால் பண்பிடப்பட்டது, குறிப்பாக தொழிலாளர்களும் விவசாயிகளும் பெரும் வறுமையிலும், இழிநிலையிலும் வாடியதற்கு மத்தியில் சர்வதேசக் கடன்கள், உதவிகள் ஆகியவற்றில் ஏகபோக உரிமை கொண்டதன் மூலம் பாலஸ்தீனிய முதலாளித்துவம் தன்னை செல்வக் கொழிப்பில் வளர்த்துக் கொள்ள முற்பட்டது. இஸ்ரேலுக்கு எதிர்ப்புக்கள் அனைத்தையும் நிறுத்துவதற்காக இன்னும் கடுமையான கோரிக்கைகள் PA மீது சுமத்தப்படலாயின; உத்தியோகபூர்வ ஊழலால் தோற்றுவிக்கப்பட்ட வெறுப்புணர்வுடன் இணைந்து, இது ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்தியது; அதை ஹமாஸ் இட்டு நிரப்ப முடிந்தது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அபிமான பிரதிநிதியாக அப்பாஸ் வெளிப்பட்டார்; இது ஃபத்தாவிற்குள் இன்னும் தீவிர கூறுபாடுகளை ஒதுக்கி வைக்க உதவியது. அராஃபத் தன்னுடைய மக்களையே அடக்க மறுத்ததன் காரணமாகவும் கிழக்கு ஜெருசலேம் பற்றிய எவ்வித உரிமை கோரலும் கூடாது, அங்கு திரும்பவதற்கான உரிமை கைவிடப்பட வேண்டும் என்பன உள்ளடங்கலான ஒரு பெயரளவு பாலஸ்தீனிய அரசை ஏற்பதற்காக இன்னும் கடுமையான நிபந்தனைகளை ஏற்கவும் மறுத்ததற்காகவும் அவரை இழிவுபடுத்தி ஒதுக்கும் தீய பிரச்சாரத்தை இது மையமாக கொண்டிருந்தது.

செப்டம்பர் 2000த்தில் இரண்டாம் இன்டிபடா வெடித்தவுடன், அப்பாஸ் அது முடிவிற்கு வரவேண்டும் என்று கூறினார்; இதையொட்டி இவர் 2003ல் பிரதமர் ஆவதற்கு செய்த முயற்சிகளுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுகள் கிடைத்தன. இதற்கு மாறாக, இஸ்ரேல் பலமுறையும் இராணுவ ஊடுருவல்களை செய்தாலும், இன்னும் தெளிவுபடுத்தப்படாத நிலைமைகளின் கீழ், அரஃபாத் அவருடைய அரசாங்க வளாகத்திலேயே அவர் நவம்பர் 2004ல் இறக்கும் வரை சிறைப்படுத்தப்பட்டிருந்தார். ஜனவரி 2005ல் அவருக்கு பின் அப்பாஸ் ஜனாதிபதியானார். இவர் பதவிக் காலம் உள்நாட்டுப்போரின் உச்சநிலையை அடைந்துள்ளது; மேற்குக் கரையில் கிட்டத்தட்ட ஒரு நபர் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தொழிலாளர்களுக்கு சியோனிசம் அழிவுகரமான மரபுவழி

பாலஸ்தீனிய துன்பியல் அதே நேரத்தில் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்திற்கு விரிந்துவரும் துன்பியலின் மையமாகவும் உள்ளது. தேசிய முன்னோக்கு என்பது யூதர்களுக்கு அரேபியத் தொழிலாளர்களை காட்டிலும் எந்தவிதத்திலும் குறைவனதாக இல்லை என நிரூபித்துள்ளது. இஸ்ரேலிய ஆளும் உயர்தட்டானது பொறுப்பற்ற மற்றும் எரியூட்டும் இராணுவ ஆத்திரமூட்டல்களை தவிர வேறு எந்த முன்னோக்கையும் கொண்டிராது, முற்றிலும் திவாலடைந்துள்ளது.

பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதன் மூலம் இஸ்ரேலைத் தோற்றுவித்தது ஒரு குற்றமாகும், அது அடுத்து வந்த அதன் முழு வரலாறு மற்றும் பரிணாமத்தை தீர்மானித்துள்ளது. அண்டை நாடுகளால் விரோதத்துடன் காணப்படும் இது, யூதரல்லாதவர்கள்மீது பிரிவினை காட்டும் தன்மையை தளமாகக் கொண்டுள்ள ஒரு நாடாக வளர்ந்துள்ளது; ஆக்கிரமிப்பு பகுதிகளிலும் லெபனானிலும் பல தசாப்தங்கள் நடைபெற்று வரும் மிருகத்தனத்திற்கு இதுதான் பொறுப்பாகும். பொருளாதார முறையில் நிலைத்திருக்க முடியாத நிலையில் இருக்கும் இது இன்றளவும் படைகள் முகாமைக் கொண்ட நாடாகவும், அமெரிக்காவின் இராணுவ கொத்தளமாகவும்தான் செயல்படுகிறது; தொழிலாள வர்க்கத்தின் சமூக அரசியல் நலன்களுக்கு ஆழ்ந்த விரோதப் போக்கை காட்டும் வலதுசாரி மற்றும் அதிதீவிர மத போக்குகளால் மேலாதிக்கம் செய்யப்படுகிறது.

ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கு ஒன்றுதான் மத்திய கிழக்கில் மக்களை எதிர்கொண்டுள்ள வரலாற்று நெருக்கடியிலிருந்து ஒரு முன்னேற்றப் பாதையை காட்ட முடியும். ஏகாதிபத்தியம், மற்றும் அரேபிய இஸ்ரேலிய உயர் தட்டினருக்குள்ளேயான அதன் முதலாளித்துவ முகவர்கள் ஆகியோருக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கமானது தன் பின்னே கிராமப்புற ஏழைகளை ஐக்கியப்படுத்தியாக வேண்டும்.

உலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் உள்ளடக்கக் கூறின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகள், தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை வேலைத்திட்ட இலக்காக கட்டாயம் ஆக வேண்டும்; இதனூடாக அரேபியர்கள், யூதர்கள், பிற இனக்குழுக்கள் மற்றும் மதக் குழுக்கள் நல்லிணக்கத்துடன் வாழமுடியும் என்பதுடன் இப்பிராந்தியத்தின் வளம் மிக்க ஆதாரங்களில் பலன்களை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த முன்னோக்கிற்குத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.