World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government blocks Tamil website

இலங்கை அரசாங்கம் தமிழ் இணையத்தை தடை செய்தது

By S. Jayanth
3 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மேலுமொரு ஊடக தணிக்கை நடவடிக்கையில் தமிழ்நெட் இணையத்தை வாசிப்பதற்கான இணைய வழியை ஜூன் 15 முதல் மூடியுள்ளது. இந்த இணையம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தனது அனுதாபத்தை வெளிப்படையாகக் காட்டிய போதிலும், உக்கிரமடைந்துவரும் யுத்தம் மற்றும் இலங்கை இராணுவத்தால் ஜனநாயக உரிமைகள் மீறப்படுதல் மற்றும் நூற்றுக்கணக்கான "காணாமல் போகும்" சம்பவங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பானவை உட்பட பல கவனத்திற்குரிய பகுதிகளையும் பற்றி செய்திகளை வெளியிட்டு வந்தது. தமிழ்நெட்டின் பல கட்டுரைகளில் மோதல்கள், அரசாங்கத்தின் மற்றும் இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் சம்பந்தமான விடயங்கள் ஒளிவுமறைவின்றி வெளிவந்தன.

அரசாங்க ஊடகங்களும் மற்றும் இணையத் தளங்களும் செய்திகளை முற்றிலும் மாறுபடுத்திக் காட்டுகின்றன. யுத்தம் தொடர்பான அனைத்து செய்திகளும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தால் விழிப்புடன் புலன்விசாரணை செய்யப்படுகின்றன. இந்த மத்திய நிலையம் இராணுவத்தின் இழப்புக்களை மூடி மறைப்பதோடு, பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்படும் ஜனநாயக உரிமை மீறல்களை மறுப்பதுடன் மற்றும் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" முன்நிலைப்படுத்தி வருகின்றது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, 2005 நவம்பரில் பதவிக்கு வந்ததை அடுத்து உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் தொடங்கியதில் இருந்தே எஞ்சியுள்ள ஊடகங்களும் "தேசிய பாதுகாப்பு" என்ற பெயரில் அரசாங்கத்தின் பிரச்சாரத்துடன் இணைய வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டிலும் அனைத்துலகிலும் மேலும் மேலும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இராஜபக்ஷ அரசாங்கமானது எந்தவொரு மாற்று செய்தி ஊடகத்தையும் அடக்குவதன் பேரில் கொடூரமான தணிக்கை வழிமுறைகளை அதிகளவில் நாடுகின்றது. ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில், அரசாங்கம் தமிழ்நெட் இணையத்தளத்தை தடை செய்ததா எனக் கேட்டபோது, பாதுகாப்புப் பேச்சாளர் கேஹலியே ரம்புக்வெல்ல, அது தனக்கு "ஒரு செய்தியே" எனக் குறிப்பிட்டார். ஆயினும், அதே மூச்சில், அரசாங்கத்தின் உள்நோக்கத்தை குறிப்புக்காட்டிய அவர்: "அவ்வாறு குறுக்கறுக்கும் வேலைகளைச் செய்பவர்களை வாடகைக்கு அமர்த்த விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

தமிழ் நெட்டை தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் மறுத்தார். ஜூன் 20 ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர் தெரிவித்ததாவது: "அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுவது பொருத்தமற்றது. எங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை."

எவ்வாறெனினும், இந்தக் கூற்றுக்கள் அனைத்தும் பொய் என்பதை இலங்கையில் உள்ள இணைய சேவை வழங்குனர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். நாட்டின் மிகப் பெரிய இணைய சேவை வழங்குனர்களான ஸ்ரீலங்கா டெலிகொம்மின் உதவிப் பிரிவு, தமிழ்நெட் இணையத்தை பார்க்கும் வழியை தடைசெய்யுமாறு தமக்கு அரசாங்கம் கேட்டுக்கொண்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர். "தமிழ்நெட்டைத் தவிர வேறு எந்த இணையத்தையும் உங்களால் பார்க்க முடியும்" என டெலிகொம் ஊழியர்கள் விளக்கியுள்ளனர். ஒரு தனியார் சேவையான டயலொக் டெலிகொம்மின் பேச்சாளர் ஒருவர்: "அரசாங்கத்தின் கட்டளைப்படியே நாங்கள் அதை செய்தோம்" என ராய்ட்டருக்குத் தெரிவித்துள்ளார். பழிவாங்கல்களுக்குப் பயந்து தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உக்கிரப்படுத்தியுள்ள நிலையில், இராணுவமும் மற்றும் அதனுடன் சேர்ந்து செயற்படும் துணைப்படைகளும் அதிகளவில் தமிழ் ஊடகத்தை இலக்கு வைத்துள்ளன. 2005 ஏப்பிரலில் தமிழ்நெட் ஆசிரியரும் மற்றும் டெயிலி மிரர் பத்திரிகையின் கட்டுரை எழுத்தாளருமான தர்மரட்னம் சிவராம் மத்திய கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலம் பாராளுமன்றக் கட்டிடத்தை அன்டிய உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கண்டெடுக்கப்பட்டமையானது, இதில் பாதுகாப்புப் படைகளின் தலையீட்டை பலமான முறையில் சுட்டிக்காட்டுகிறது. கடந்த 18 மாதங்களாக, ஐந்து தமிழ் பத்திரிகையாளர்கள் உட்பட ஒன்பது ஊடகத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் நாட்டின் கொடூரமான பயங்கரவாத் தடைச் சட்டங்களின் கீழ் விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் அகதிகளின் நிலைமை தொடர்பாகவும் மற்றும் கருணா அல்லது வி. முரளீதரனின் தலைமையிலான துணைப்படையுடன் பாதுகாப்புப் படைகளுக்கு உள்ள தொடர்பு பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டமைக்காக டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் சம்பிகா லியனாரச்சியை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய இராஜபக்ஷ விமர்சித்திருந்தார். தனது எச்சரிக்கை அச்சுறுத்தலின் போது, கருணா குழுவின் பழிவாங்கல் நடவடிக்கையை லியனாரச்சி எதிர்கொள்ள நேரிடும் என்றும் மற்றும் அரசாங்கத்திடம் பாதுகாப்பு கேட்க வேண்டாம் என்றும் இராஜபக்ஷ எச்சரிக்கை செய்திருந்தார். கடந்த மார்ச்சில் ஸ்டன்டர்ஸ் நியூஸ் பேப்பர்ஸின் வங்கிக் கணக்கை அரசாங்கம் முடக்கியதால், அந்த நிறுவனம் வெளியிட்டு வந்த மெளபிம மற்றும் சண்டே ஸ்டன்டர்ட் போன்ற சிங்கள மற்றும் ஆங்கிய மொழிப் பத்திரிகைகள் வெளிவராமல் நிறுத்தத் தள்ளப்பட்டன.

ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் வன்முறைகளும் தொடர்கின்றன. ஜூன் 28 அன்று, தினக்குரல் பத்திரிகையின் நிருபரான கே.பி. மோகன் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது மத்திய கொழும்பில் ஒரு சோதனைச் சாவடியில் வைத்து விமானப்படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். கடுமையாகக் காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் தமிழராய் இருந்ததாலேயே தாக்கப்பட்டதாக மோகன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் சர்வதேச சம்மேளனம், சர்வதேச ஊடக நிலையம், எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு மற்றும் இலங்கை சுதந்திர ஊடகவியலாளர் இயக்கம் உட்பட 11 சர்வதேச ஊடக உரிமை குழுக்களின் பிரதிநிதிகள் அன்மையில் இலங்கை அரசாங்கத்தால் ஊடக உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப் பற்றிய ஒரு விசாரணையை மேற்கொண்டனர்.

ஜூன் 22, ஊடகவியலாளர்களின் சர்வதேச சம்மேளனத்தின் தலைவர் ஜக்குலின் பார்க், "ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்பட்டு கொலை செய்யப்படுவது" தொடர்பாக குழுவின் கவலையை வெளியிட்டார். அவர் தெரிவித்ததாவது: "மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவெனில், இந்த வழக்குகளில் எதுவும் விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படாமல் தண்டனையில் இருந்து விலக்கீட்டுரிமை வழங்கப்பட்டுள்ளதேயாகும்.... எங்களது செய்தி மிகவும் தெளிவானது. பாதுகாப்பாக வேலை செய்யக்கூடிய சூழிநிலையை உருவாக்கும் பொறுப்பு அரசாங்கத்துடையதாகும் மற்றும் அது ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது அல்லது கொல்லப்படுவதை பொறுத்துக்கொள்ளாமல் செயற்பட வேண்டும்."

எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதி வின்சன்ட் புரோசெல் தெரிவித்ததாவது: "அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நாங்கள் அறிந்துகொண்டது என்னவெனில், அங்கு பொதுவான ஒரு பீதி உணர்வு காணப்படுவதோடு இது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலைமை தொடர்பாக தகவல்களைப் பெறும் வழியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது." அவர் புலிகளையும் விமர்சித்த போதிலும், ஊடகத் சேவையாளர்களுக்கு எதிரான "இத்தகைய குற்றங்களை விசாரிப்பதில் அரசியல் ரீதியில் விருப்பம் கொள்ளவில்லை" என அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டினார்.

இராஜபக்ஷ அரசாங்கமும் இராணுவமும் இந்தக் கொடூரமான அடக்குமுறைகளில் அந்தரங்கமாக ஈடுபட்டுள்ள காரணத்தால் அவர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் தொழிலாளர்களின் படுகொலை, அல்லது நூற்றுக்கணக்கானவர்கள் "காணாமல் போன" சம்பவங்கள் மற்றும் கொலைகள் தொடர்பான விசாரணையை செய்யப்போவதில்லை. "குறுக்கறுப்பவர்களை" வாடகைக்கு அமர்த்த விரும்புவதாக பாதுகாப்புப் பேச்சாளர் ரம்புக்வெல்ல கூறிய கருத்து, உண்மையில் தமிழ்நெட்டை தடைசெய்வதற்கு மட்டுமல்ல, அதனை நாசம் செய்வதற்கும் விரும்புவதாகும். இது கொழும்பு அரசாங்கத்தின் அராஜகத்திற்கு மேலும் ஒரு அறிகுறியாகும்.

"பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற சாக்குப் போக்கில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ நாட்டின் திட்டமிட்ட உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் தொடங்கியுள்ளதோடு, அதன் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமர்சிப்பதையும் கூட எதாவதொரு மற்றும் இருப்பில் உள்ள எல்லா வழிமுறைகளிலும் நசுக்க முயற்சிக்கின்றார்.