World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan Human Rights Commission hearing into disappearance of SEP member

சோ.ச.க. உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

By our correspondents
4 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன் ஆகியோர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக, சோசலிச சமத்துவக் கட்சியும் (இலங்கை) மற்றும் அனைத்துலகப் பிரச்சாரமும் மீண்டும் மீண்டும் அவசர விசாரணையை கோரிய பின்னர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜூன் 14 அன்று தனது முதலாவது விசாரணையை நடத்தியது.

இந்த இருவரும் மார்ச் 22 அன்று காணாமல் போய் இப்போது மூன்று மாதங்கள் கடந்துள்ளன. இவர்கள் புங்குடு தீவில் இருந்து தாம் வசிக்கும் ஊர்காவற்துறை தீவுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போதே காணாமல் போயுள்ளனர். ஊர்காவற்துறையானது வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டிய தீவுகளில் ஒன்றாகவும் மற்றும் கடற்படையின் இறுக்கமான கட்டுப்பாட்டிலும் உள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கத்தால் உக்கிரப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் யுத்தத்தின் குவிமையமாகும்.

விமலேஸ்வரன் சம்பவ தினம் இரவு திருமண வைபவம் ஒன்றுக்கு செல்வதற்காக தனது நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்த ஆடைகளை எடுத்து வருவதற்காக, ஊர்காவற்துறையில் இருக்கும் வேலனையில் இருந்து அயலில் உள்ள புங்குடு தீவுக்கு தனது நண்பரான மதிவனனுடன் அவரது மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றுள்ளார். புங்குடு தீவுக்குச் செல்லும் நீண்ட கடல் பாலத்தின் வேலனைப் பகுதியின் நுழை வாயிலில் சுமார் மாலை 5 மணியளவில் இந்த இருவரையும் கடற்படை சிப்பாய்கள் சரீர பரிசோதனை செய்துள்ளதையும் மற்றும் சாதாரண உடையில் இருந்த இரு புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவர்களை விசாரித்துள்ளதையும் கண்கண்ட சாட்சிகள் காட்டுகின்றன. விமலேஸ்வரனும் மற்றும் மதிவதனனும் ஆடைகளை எடுத்துக் கொண்ட பின்னர் மீண்டும் வேலனைக்குத் திரும்பும் போது சுமார் 6.30 மணியளவில் புங்குடுதீவு கடற்படை சோதனை நிலையத்தில் மோட்டார் சைக்கிளை மீண்டும் இயக்கும்போது, சாட்சிகள் அவர்களைக் கடைசியாகக் கண்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளியுள்ள நிலையில், கடந்த 18 மாதங்களாக நூற்றுக்கணக்கானவர்கள், பிரதானமாக தமிழர்கள், "காணாமல் போயுள்ளனர்." இந்த சம்பவங்களில் பாதுகாப்புப் படையினரும் மற்றும் அவர்களோடு ஒத்துழைக்கும் தமிழ் துணைப்படைகளும் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படும் சூழ்நிலையிலேயே இது தொடர்கின்றது. பொலிசாரும் மனித உரிமைகள் ஆணைக் குழுவும் மற்றும் ஏனைய இலங்கை அதிகாரிகளும் இத்தகையை வழக்குகளை விசாரிக்கத் தவறியுள்ளமை, இத்தகைய கடத்தல்கள் மற்றும் படுகொலைகளில் அவர்களின் பங்கை வெளிப்படுத்துகிறது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சோ.ச.க. செய்த முறைப்பாட்டுக்காக, கடற்படை கட்டளை அதிகாரியினதும் மற்றும் பொலிஸ் மா அதிபரினதும் பிரதிநிதிகளே விசாரணைக்கு வருகை தந்திருந்தனர். --கடற்படை சட்ட அதிகாரி அசங்க கருணாரட்ன மற்றும் உதவி அத்தியட்சகர் சரத்--- புங்குடு தீவு மற்றும் வேலனையில் உள்ள கடற்படை கட்டளைத் தளபதிகள் சமூகமளிக்கவோ அல்லது பிரதிநிதிகளை அனுப்பவோ இல்லை.

முறைப்பாட்டை பதிவு செய்திருந்த சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், மார்ச் 22 என்ன நடந்தது என்பது பற்றி விளக்கினார். இந்த இருவரும் காணாமல் போனது தொடர்பாக தெரிந்துகொண்டதை அடுத்து, சோ.ச.க. புங்குடு தீவு மற்றும் வேலைனை முகாம்களில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்ததோடு முறையே ஹேமந்த பீரிஸ் மற்றும் சில்வா ஆகிய கடற்படை கட்டளைத் தளபதிகளுடனும் தொடர்புகொண்டது, என அவர் விளக்கினார்.

"மார்ச் 24 அன்று, விமலேஸ்வரனின் உறவினர்களில் ஒருவரான அருள் ஊடாக விமலேஸ்வரனின் மனைவிக்கு செய்தி ஒன்றை அனுப்பிய ஹேமந்த பீரிஸ், (புங்குடுதீவில்) கோடைம்பர முகாமில் வந் தன்னை சந்திக்குமாறு அறிவித்தார். அப்போது முகாமுக்கு முன்னால் காவல் கடமையில் இருந்த ஒரு கடற்படை சிப்பாய், மதிவதனன் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டினார். கட்டளைத் தளபதி விமேலஸ்வரனையும் மதிவதனனையும் கைது செய்யவில்லை என மறுத்த போதிலும், விமலேஸ்வரனின் மனைவியை அங்கு வரச்சொன்னது ஏன் என்பதை விளக்கத் தவறிவிட்டார்," என டயஸ் தெரிவித்தார்.

"அதே தினம், சோ.ச.க. ஹேமந்த பீரிஸை தொடர்புகொண்ட போது, ஊர்காவற்துறையையும் புங்குடுதீவையும் இணைக்கும் பாலத்தில் புங்குடுதீவு பகுதியில் உள்ள கடற்படை சோதனை நிலையத்தில் உள்ள பதிவுகளின்படி, விமலேஸ்வரனும் மதிவதனனும் மாலை 5.30 மணிக்கு தீவுக்குள் நுழைந்துள்ள அதே வேளை, மாலை 6.30 மணிக்கு தீவில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த அறிக்கை உண்மையென்றால் அவர்கள் வேலனையை சென்றடையவில்லை. வேலனை முகாமில் உள்ள கட்டளைத் தளபதி சில்வா, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பாலத்தில் வேலனை பகுதியில் சோதனை நிலையம் ஒன்று இருப்பதைக் கூட மறுத்துவிட்டார். தனக்கு கீழுள்ள சிப்பாய்கள், எவரையும் கைதுசெய்யவில்லை என்றும் இந்த இருவர் தொடர்பாக எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார்."

டயஸ் விளக்கிய அளவில்: "இந்த இருவரும் 3.8 கிலோமீட்டர் தூரம் உள்ள கடல் பாலத்திற்குள் நுழைந்திருந்தால், அவர்கள் கைதுசெய்யப்பட்டிராவிட்டால் எங்கே போயிருக்க முடியும். அவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதோடு ஒருவரால் கடலில் மோட்டார் சைக்கிள் ஓட்ட முடியாது." விமலேஸ்வரனும் மதிவதனனும் காணாமல் போயுள்ளமைக்கு கடற்படையே பொறுப்பு என சோ.ச.க. பலமாக சந்தேகிப்பதாக அவர் தெரிவித்தார். கடற்படைக்குத் தெரியாமல் அவர்கள் காணாமல் போயிருக்க முடியாது என அவர் வலியுறுத்தினார்.

விசாரணையின் போது கடற்படை அதிகாரியும் மற்றும் பொலிஸ் அதிகாரியும் பிரதிபலித்த விதம், அவர்கள் எந்தவொரு தக்க விசாரணையையும் நடத்தத் தவறியுள்ளனர் என்பதை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. "பொலிஸ் விசாரணைகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன" என பொலிஸ் மா அதிபரின் பிரதிநிதி சாதாரணமாகப் பிரகடனம் செய்தார். அவர் கடந்த மூன்று மாதங்களில் பொலிசார் எடுத்த நடவடிக்கை தொடர்பான எந்தவொரு அறிக்கையையும் காட்டாததோடு அவரை விசாரித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலரும் அதை சவால் செய்யவில்லை.

கடற்படையின் சார்பில் பேசிய அசங்க கருணாரட்ன சோ.ச.க. முறைப்பாட்டைப் பெற்றுக்கொண்டதையும் மற்றும் புங்குடுதீவுக்குள் மாலை 5.36 மணிக்கு மோட்டார் சைக்கிள் நுழைந்த போதும் மற்றும் மாலை 6.48 மணிக்கு வெளியேறிய போதும் தீவின் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளின் இலக்காமான NP MR 2098 பதிவு செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் தொடர்பாக எதுவும் தெரியாது என்ற அவர் குறிப்பிட்டதாவது: "நாங்கள் வாகனங்களை மட்டுமே பதிவு செய்துகொள்வோம், மனிதர்களின் பெயர்களைப் பதிவுசெய்வதில்லை. எத்தனைபேர் தீவுக்குள் நுழைந்தார்கள் மற்றும் வெளியேறினார்கள் என்பதை எங்களால் சொல்ல முடியாது."

கடல்பாலத்தின் வேலனை பகுதியில் இருந்து புங்குடுதீவு முடிவை பார்க்க முடியும் என்பதை கருணாரட்ன விசாரணையின் போது ஏற்றுக்கொண்டார். ஒரு முனையில் உள்ள சோதனை நிலையத்தில் வெளிப்படையாக பதிவுகள் எதவும் வைத்துக்கொள்ளாத அதே வேளை, ஒரு பகுதியில் மட்டும் பதிவுகளை வைத்துக்கொள்வது ஏன் என அவர் விளக்கத் தவறிவிட்டார். பொலிஸ் மா அதிபரின் பிரதிநிதி, காணாமல் போயுள்ளமை பற்றியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது, கடற்படையைப் பற்றி அல்ல எனக் கூறுவதன் மூலம், இந்தத் தகவல்களை பொலிஸ் பெறாதமைக்கான காரணத்தை விளக்குவதில் இருந்து தப்ப முயற்சித்தார்.

"ஊர்காவற்துறையையும் மற்றும் புங்குடுதீவையும் இணைக்கும் கடல் பாலத்தின் இரு முடிவுகளிலும் கடற்படை சோதனை நிலையங்கள் உள்ளன. கடல்பாலத்தின் வேலனை நுழைவாயிலில் உள்ள சோதனை நிலையத்தில் விமலேஸ்வனும் மதிவதனனும் சரீர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதற்கான கண்கண்ட சாட்சிகள் உள்ளன. அங்கு சாதாரண உடையில் இருந்த கடற்படை புலணாய்வுப் பிரிவினர் அவர்களை விசாரித்துள்ளனர். அன்றைய தினம் வேலனை கடற்படை சோதனை நிலையத்தில் கடமையில் இருந்த சிப்பாய்கள் யார் என்பதையும் மற்றும் அந்த சந்தர்ப்பத்தில் அங்கு சாதாரண உடையில் இருந்த அலுவலர்கள் யார் என்பதையும் பொலிசார் கண்டுபிடிக்க வேண்டும்," என டயஸ் வலியுறுத்தினார்.

ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அடுத்த விசாரணைக்கு அழைப்பதாக மட்டுமே அறிவித்தார். அடுத்த விசாரணைக்கு ஜூலை 6 திகதி குறிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 15 அன்று, தமது கணவன்மார் காணாமல் போயுள்ளமை தொடர்பாக விமலேஸ்வரனதும் மதிவதனனதும் மனைவிமார் செய்த உத்தியோகபூர்வ முறைப்பாடு தொடர்பான விசாரணையை ஊர்காவற்துறை நீதிமன்றம் தொடர்ந்தது. தமது விசாரணை நடவடிக்கைகள் இன்னமும் முடிவடையவில்லை என பொலிசார் மீண்டும் அறிவித்தனர். நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வேலனை மற்றும் புங்குடுதீவு கடற்படை முகாம்களின் கட்டளைத் தளபதிகள் அங்கு சமூகமளித்திருக்கவில்லை.

பொலிசார் சித்திரக்குமார் மற்றும் அருள் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த இருவரும் சோ.ச.க. யின் விசாரணையில் வழங்கப்பட்ட கண்கண்ட சாட்சிகளாவர். வேலனை சோதனை நிலையத்தில் விமலேஸ்வரனும் மதிவதனனும் சரீர சோதனை செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதை சித்திரக்குமார் நேரடியாகக் கண்டுள்ளார். அவர்கள் வேலனைக்குத் திரும்புவதற்காக புங்குடு தீவு சோதனை நிலையத்தில் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்வதை அருள் கண்டுள்ளார்.

இந்த இருவரும் காணாமல் போன தினத்தன்று கடமையில் இருந்த கடற்படை உத்தியோகத்தர்களிடம் பொலிசார் வாக்குமூலம் எடுக்கவில்லை. அதுபற்றி கேள்வி எழுப்பிய போது, கடற்படை உத்தியோகத்தர்களுக்கு வாக்குமூலம் கொடுக்க நேரம் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்தனர். அடுத்த விசாரணை ஜூலை 20ம் திகதி நடத்தப்படவுள்ளது.

அரசாங்க அலுவலர்கள், பாதுகாப்பு படை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சாட்சிகளுக்கும் கட்டளை அனுப்பவும் விசாரணை செய்யவும் ஆணைக் குழுவுக்கு பரந்த அதிகாரங்கள் உள்ளன. அது அவ்வாறு செய்யத் தவறியமை தற்செயலானதல்ல. "இலங்கையின் மனித உரிமைகள் நெருக்கடி" என்ற தலைப்பில் கடந்த மாதம் பிரசல்ஸை தளமாகக் கொண்ட சர்வதேச நெருக்கடி குழு வெளியிட்ட விபரங்கள் நிறைந்த அறிக்கை ஒன்றில் வெளிப்படையாகக் தெரிவித்தது போல்: "தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அரசியல் நியமனங்களால் நிறைந்து போனதை அடுத்து, அது ஆழமாக வலுவிழந்து போயுள்ளதோடு, அனைத்து நம்பகத்தன்மையையும் அது இழந்துவிட்டது." இந்த இயக்கம் அரசாங்கத்தினதும் பாதுகாப்புப் படையினரதும் குற்றங்களை அம்பலப்படுத்தி விசாரணை செய்வதற்கு மாறாக, அவற்றை இருட்டடிப்பு செய்கின்றது.

நாம் விமலேஸ்வரன் மற்றும் மதிவதனன் ஆகியோர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக, உடனடியாக முழு விசாரணை நடத்தி அவர்கள் பாதுகாப்பாக விடுதலை செய்யப்படுவதை உறுதிப்படுத்துமாறு, இலங்கை அதிகாரிகளைக் கோருமாறு சோ.ச.க. ஆதரவாளர்களையும் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இது, அரசாங்கம் அதன் இனவாத யுத்தத்தை உக்கிரப்படுத்துகின்ற நிலையில், அது வெளிப்படையாக நசுக்கும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் பிரச்சாரத்தின் பாகமாகும்.

கண்டனக் கடிதங்கள் அனுப்பப்படவேண்டிய முகவரிகள்:

Gotabhaya Rajapakse,
Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha,
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529
Email: secretary@defence.lk

N. G. Punchihewa Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road, Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924

பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பிவைக்கவும்.

Socialist Equality Party,
P.O. Box 1270,
Colombo, Sri Lanka.
Email: wswscmb@sltnet.lk

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப தயவு செய்து இந்த online படிவத்தைப் பயன்படுத்தவும்.

அண்மையில் கிடைக்கப்பெற்ற கடிதங்களில் சிலவற்றை இங்கு பிரசுரிக்கின்றோம்.

* * *

அன்பின் ஐயா,

கட்சி உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக உடனடி விசாரணை நடத்துமாறு விடுக்கும் வேண்டுகோள்

சோ.ச.க. (சோசலிச சமத்துவக் கட்சி) அதன் வலைத் தளத்தின் (WWW.WSWS.org) ஊடாக கட்சியின் அங்கத்தவர் நடராஜா விமலேஸ்வரனும் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் ஊர்காவற்துறை தீவுக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் காணாமல் போயுள்ளதாகவும் மற்றும் பிரதேசத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கடற்படையே இதற்குக் காரணம் என்றும் பிரகடனம் செய்துள்ளது.

நீண்ட கால உள்நாட்டு யுத்தம் இடம்பெறுகின்ற ஒரு பிரதேசத்தில் மக்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்தினுடையதாகும். காணாமல் போகும் சம்பவங்கள், கடத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு யார் பொறுப்பாயிருந்தாலும், அத்தகைய கொலைகாரத்தனமான அராஜகம் நடக்காமல் தடுப்பதற்கும் மற்றும் பொதுஜனங்கள் பாதுகாக்கப்படுவதற்கும் அரசும் மற்றும் சிவில் அமைப்புக்களுமே பொறுப்பாகும்.

சமாதானத்திற்காக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு சிவில் பிரஜை என்ற வகையில், கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள இருவர் தொடர்பாகவும் உடனடி விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும், அவர்கள் பாதுகாப்பாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் மற்றும் அதுவரை அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

தங்கள் உண்மையுள்ள

வை.எல்.சி

* * *

அன்பின் ஐயா,

சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) உறுப்பினரான நடராஜா விமலேஸ்வரனும் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் மார்ச் 22, 2007 முதல் காணாமல் போயுள்ள தகவலை இணையத்தளத்தில் இருந்து நான் பெற்றுக்கொண்டேன். இந்த இருவரும் புங்குடு தீவில் இருந்து தாம் வசிக்கும் ஊர்காவற்துறை தீவுக்கு செல்வதற்காக நீண்ட கடல் பாலத்தின் புங்குடு தீவு பகுதியில் உள்ள கடற்படை சோதனை நிலையத்தில் கடைசியாகக் காணப்பட்டுள்ளனர்.

புங்குடு தீவில் உள்ள கடற்படை கட்டளைத் தளபதி, விமலேஸ்வரனும் மதிவதனனும் மாலை 6.30 மணிக்கு சோதனை நிலையத்தைக் கடந்துள்ளதாக அங்குள்ள பதிவுப் புத்தகத்தைப் பார்த்து உறுதிப்படுத்தியுள்ளார். விமலேஸ்வரனும் மதிவதனனும் புங்குடு தீவுக்கு போகும் வழியில், மாலை 5.30 மணியளவில் நீண்ட கடல் பாலத்தின் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள கடற்படை சோதனை நிலையத்தில் சரீர சோதனைக்குட்படுத்தப்படுவதையும் மற்றும் சாதாரண உடையில் இருந்த இரு உத்தியோகத்தர்களால் அவர்கள் விசாரிக்கப்படுவதையும் சாட்சிகள் நேரில் கண்டுள்ளனர். தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள பாதுகாப்புப் படையினர் இந்த காணாமல் போன சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதற்கான பலமான ஆதாரங்கள் உள்ளன. இந்த விடயம் மறைந்துவிடப் போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இது இணையத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு தங்களுடைய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்பது தொடர்பான விளக்கத்தைக் கோரும் பிரச்சாரத்திற்கு உலகம் பூராவும் உள்ள உழைக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு வளர்ச்சிகண்டு வருகின்றது. உங்களது கட்டளையின் கீழ் இயங்கும் பாதுகாப்புப் படைகளால் கையாளப்படும் தொடர்ச்சியான மெளனம் மற்றும் கண்ணைப்பொத்தி விளையாட்டு என்பன, அவர்களின் இயலாமைக்கு அல்லது இந்தக் குற்றத்தில் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான போதுமான ஆதாரங்களாகும்.

இது ஒரு தனி சம்பவம் அல்ல. 2005 நவம்பரில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ வெற்றி பெற்றதில் இருந்து இராணுவத்தாலும் மற்றும் அதனுடன் சேர்ந்து செயற்படும் துணைப்படைகளாலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் படி, மார்ச் 22ல் இருந்து நாடு பூராவும் 58 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

நடராஜா விமலேஸ்வரனும் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து தகவல்களை வெளியிடுமாறு உங்களை நான் வலியுறுத்துகின்றேன்.

பி.எச்,

சிங்கப்பூர்