World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

ஜிலீமீ ஹிஷி ஷ்ணீக்ஷீ ணீஸீபீ ஷீநீநீuஜீணீtவீஷீஸீ ஷீயீ மிக்ஷீணீஹீtலீமீ னீuக்ஷீபீமீக்ஷீ ஷீயீ ணீ sஷீநீவீமீtஹ்

ஈராக்மீதான அமெரிக்கப் போரும் ஆக்கிரமிப்பும் : ஒரு சமூகத்தின் படுகொலை

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

By Bill Van Auken
22 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

இது ஒரு மூன்று பகுதிகளையுடைய தொடர் கட்டுரையின் கடைசி, மூன்றாம் பகுதியாகும். இப்பொழுது ஐந்தாம் ஆண்டில் இருக்கும் ஈராக்கின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட பாரிய இறப்பு எண்ணிக்கை, அழிவு, அடக்குமுறை ஆகியவற்றை நன்கு உறுதிப்படுத்தியுள்ள சமீபத்திய தொடர்ச்சியான ஆவணத் தகவல்களை ஆராய்வது இதன் நோக்கமாகும். மொத்தத்தில் பார்க்கும்போது இந்த அறிக்கைககள் ஈராக்கில் அமெரிக்கச் செயற்பாடுகள் ஒரு சமூகப் படுகொலைக்கு ஒப்பானதை செய்துள்ளதை உறுதி செய்கின்றன. இது வேண்டுமென்று திட்டமிட்டு ஒரு சமூகத்தையே படுகொலைக்கு உட்படுத்திய நிகழ்வு ஆகும்.

உயர்கல்வி முறை மீதான தாக்குதல்

2003ல் இருந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் படுகொலை செய்யப்பட்டதின் எண்ணிக்கை 250ல் இருந்து 1,000 மாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வியாளர்கள் இஸ்லாமிய ஆயுதக்குழுக்களால் இலக்கு வைக்கப்பட்டனர்; ஏனெனில் இவர்கள் மத சார்பின்மை, மத-இன வேறுபாடுகளை கடந்து ஒரு தேசிய அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதாலாகும்.

பல்கலைக்கழகங்கள் மீதான தாக்குதல்கள் மாணவர்களையும் விரட்டியுள்ளது. இவ்வாண்டின் மூதல் இரண்டு மாதங்கள் Al Mustansiriya பல்கலைக் கழகத்தின் மீது இரு குண்டுவீச்சுக்கள் நடாத்தப்பட்டு, அவற்றில் 111 உயிர்கள் இழக்கப்பட்டன.

ஒரு காலத்தில் இப்பகுதியில் மிகச்சிறந்தவற்றுள் ஒன்று எனக் கருதப்பட்ட உயர் கல்வி முறை முழுவதுமே இப்பொழுது பெரும் அழிவில் உள்ளது. வகுப்புக்கள் பயிற்சி பெறாத பட்டதாரி மாணவர்களாலும், அதற்கும் குறைந்த தகுதி உடையவர்களாலும் நடத்தப்படுகின்றன.

"வன்முறை மற்றும் போதுமான வழங்கள் இல்லாத தன்மை ஈராக்கில் கல்வித்துறையை இல்லாதொழித்துள்ளது." என்று பாக்தாத் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பெளட் அப்துல் ரஸாக் IRIN செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். "இந்த ஆண்டு எந்தப் பட்டதாரியும் போதுமான திறமையுடன் தன்னுடைய பட்டப்படிப்பை முடிக்க இயலாது; மாணவர்கள் ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அறிவில் 60 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் பெறுவர்."

குறிப்பாக மருத்துவத்துறை மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து நோயாளிகளுக்கு போதிய பராமரிப்பு கொடுப்பதற்கு அறிவும், நம்பிக்கையும் இல்லாமல் வெளியேறுகின்றனர். "தற்போதைக்கும் சதாம் ஹுசைன் காலத்திற்கும் இடையே உண்மையில் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது; அப்பொழுது மருத்துவ பட்டதாரிகள் கல்லூரியை விட்டு நீங்குகையில் எந்த நோயாளிக்கும் சிகிச்சை கொடுக்க முடியும் என்ற திறமையுடன்தான் வெளியேறினர்." என அவர் மேலும் கூறினார்.

பொருளாதாரத் தகர்ப்பும் வெகுஜன வறுமையின் அதிகரிப்பும்

சமூகத்தின் அடிமட்டத்தில் ஈராக்கிய பொருளாதாரம் ஒரு தேக்கத்திற்கு வந்துவிட்டது. ஈராக்கிய சமூக விவகாரங்கள் அமைச்சரகத்தால் கூறப்படும் உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம், 48 சதவிகதமாக உள்ளது. ஆனால் இப்பொழுது மூடப்பட்டுவிட்ட அரசாங்க நிறுவனங்களின் தங்களுடைய பழைய ஊதியத்தில் 40 சதவிகிதத்தை மட்டும் பெற்றுக் கொண்டிருக்கும் முன்னாள் நூறாயிரக் கணக்கான ஊழியர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த சதவிகிதம் 70 என்று உயரும்.

2006 ஆண்டிற்கான பணவீக்க விகிதம் 50 சதவிகிதத்திற்கு உயர்ந்துவிட்டது; இது உலகிலேயே இரண்டாம் அதிக உயர்வாகும். உணவு உட்பட அடிப்படைத் தேவைகளுக்கான விலை உயர்வடைந்துவிட்டது. இது ஈராக்கிய மக்களில் மிகப் பரந்த பெரும்பான்மையினரின் வாழ்க்கைத் தரங்களை பாரியளவில் பாதித்துவிட்டது. இரண்டு ஆண்டு காலத்திற்குள் எரிபொருளின் விலை ஐந்து மடங்கு அதிகரித்து விட்டது.

ஏப்ரல் மாதம் ஈராக்கிலிருக்கும் ஐக்கிய நாடுகள் உதவி அமைப்பு கொடுத்த அறிக்கை மக்களில் 54 சதவிகிதத்தினர் நாள் ஒன்றிற்கு US$ 1 டாலருக்கும் குறைவான பணத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும், 15 சதவிகித்தினர் 50 அமெரிக்க சென்டிற்குள் மிக வறிய நிலையை பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்றும் கூறுகிறது. ஈராக்கிய ஆட்சியின் மத்திய புள்ளிவிவர அலுவலகம் இக்கண்டுபிடிப்புக்களை எதிரொலித்து ஈராக்கியர்களில் 43 சதவிகிதத்தினர் "பெரும் வறுமையில்" வாடுகின்றனர்; தேவையான உணவு, உடை, உறைவிடம் இல்லாமல் தப்பிப் பிழைக்கப் பெரும்பாடுபடுகின்றனர் என்று கூறியுள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு 1,687 டாலர் என இருந்த ஈராக்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தற்போது பாதிக்கும் குறைவானதாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களின் முக்கிய நோக்கமான எண்ணெய் உற்பத்திகூட மிகக் கடுமையாக குறைந்துவிட்ட படையெடுப்பிற்கு முந்திய அளவிற்கு இன்னும் மீட்கப்படவில்லை; நாச வேலைகள் இந்நடவடிக்கைகளை குறைத்துள்ளன; உற்பத்தி செய்யப்படுபவற்றில் பெரும்பகுதி திருடப்பட்டு வருகிறது.

ஆயுதமேந்திய வன்முறை, நாசம் இவற்றிற்கும் மேலாக, அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகள் சுமத்திய முடிவுகள் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தி மில்லியன் கணக்கான ஈராக்கியர்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க தளமுடைய பெருநிறுவனம் மற்றும் வலதுசாரி சிந்தனையினால் உந்துதல் பெற்ற அமெரிக்க நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு ஆட்சி L. Paul Bremer தலைமையில், முழுமையாக தனியார்மயமாக்குதலை தொடங்கி, அரை மில்லியன் ஈராக்கியர்களுக்கு வேலைகள் கொடுத்திருந்த 192 அரசாங்க உடைமை நிறுவனங்களை மூடிவிட்டது.

Bremer ஆல், பயனற்ற வகையில் காலம் கடந்து திறனிழந்துவிட்டவை என்று இந்த நிறுவனங்களுள் மதிப்பிடப்பட்டவற்றுள் "பாக்தாத்திற்கு தெற்கே இருக்கும் ஒரு பேரூர்ந்து, கனரக ஆலை நவீன உற்பத்தி மேடையையும், திறமையான மேலாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களை கொண்டிருந்ததும் அடங்கியிருந்தது. 10,000 ஊழியர்களில் 75 பேரை தவிர மற்றவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டனர்" என்று என Washington Post அண்மையில் குறிப்பிட்டுள்ளது. இங்கிருந்து வாகனங்களை வாங்கி வந்த ஈராக்கிய அரசாங்கம் இப்பொழுது அவ்வாறு செய்யாமல் தடுக்கப்பட்டு விட்டது.

இதன் நோக்கம் தேசியப் பொருளாதாரத்தை தகர்த்தல், இலாபகரமாக இருந்த பிரிவுகள் அனைத்தையும் அமெரிக்க சர்வதேச நிறுவனங்களுக்கு விற்றுவிடல், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஈராக்கிய எண்ணைய் வயல்களை கைப்பற்ற வழிவகுத்தல் என்பதாகத்தான் தெளிவாக இருந்தது.

ஈராக்கிய விவசாயத்தைக் காக்கும் அனைத்து காப்பு வரிகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் Bremer ஆணையிட்டார்; இறக்குமதிப் பொருட்கள் மலிவாகக் கிடைக்க வேண்டும் என்பது காரணம் என்று கூறப்பட்டது. இதன் விளைவு --இதை எதிர்பாராதது என்று நம்புவது கடினம்-- ஈராக்கின் சிறிய பண்ணைகளை திவாலாக்குவது என்பதாகும்; அவற்றில் உற்பத்தி ஏற்கனவே தொடர்ந்த இராணுவத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்தன. இப்பொழுது, ஆக்கிரமிப்பு ஐந்தாம் ஆண்டில் நுழைந்துவிட்ட அளவில், ஈராக்கிய விவசாயத்துறை சரிந்துவிட்டது; அந்நாடு முற்றிலும் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை நம்பியுள்ளது; அவையோ சாதாரண மக்களின் பெரும்பாலோருக்கு வாங்க முடியாத நிலையில்தான் உள்ளன.

இறுதியாக, அமெரிக்க காலனித்துவ நிர்வாகி "ஒரே மட்ட வரி" (flat tax) ஒன்றைச் சுமத்தினார் (அமெரிக்காவின் குடியரசு வலதுகளின் கனவே இதுதான்) இதையொட்டி வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து இலாபங்களையும் தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல முடியும்; அவற்றிற்கு ஈராக்கிய பொருளாதாரத்தில் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப்போல் சமமான உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கப் போர்க் குற்றங்களுக்கு ஈராக்கியரை குறை கூறுதல்

வாஷிங்டனில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர் இருவருமே இப்பொழுது ஈராக்கில் ஏற்பட்டுள்ள பேரழிவிற்கு ஈராக்கிய மக்கள்தாம் காரணம் என்று குறைகூறுவதை அரசியலில் உகந்ததாக கொண்டுவிட்டனர். அமெரிக்க துருப்புக்கள் குழுவாத உள்நாட்டுப் போரில் அகப்பட்டுக் கொண்டுவிட்டதாக அவர்கள் கூறுவதுடன், ஈராக்கிய அரசாங்கம் வன்முறையை கட்டுப்படுத்துவதில் உறுதியாக நடந்து கொள்ளுவதில்லை என்றும் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகள் மாற்றுவதில் உறுதியாக இல்லை என்றும் குறைகூறுகின்றனர்.

இது தற்காப்பிற்காக பாசாங்குத்தனமாக உரைக்கப்படும் அபத்தமாகும். முதலில், ஈராக்கில் இப்பொழுதுள்ள குழுவாத வன்முறைகளுக்கு முற்றிலும் வாஷிங்டனின் சட்டபூர்வ, அரசியல், அறநெறிப் பொறுப்பு ஆகும். அமெரிக்கா ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாகும், ஜெனிவா உடன்படிக்கைகளின்படி ஆக்கிரமிப்பு மக்களுடைய பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுக்கும் கட்டாயத்தில் உள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயப்படுத்தப்பட்டனர், மற்றும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுகின்றனர்.

இன்னும் அடிப்படையில், குழுவாத வன்முறையின் வெடிப்பு அமெரிக்க கொள்கையினால் நேரடியாக ஊக்கத்தை பெற்றது ஆகும். இவர்களுக்கு முந்தைய காலனித்துவாதிகளை போலவே, வாஷிங்டனும் ஈராக்கை பிரித்தாளும் சூழ்ச்சிக் கொள்கையில்தான் ஆள முற்பட்டனர். நாட்டில் உள்ள ஒவ்வொரு தேசிய அமைப்பையும் அழித்தபின், இது மீண்டும் அரசியல் வாழ்வை இன-மத வழிகளில் மறுகட்டமைக்க, ஈராக்கில் முன்னொருபோதும் இல்லாதிருந்த சுன்னிக்களுக்கும் ஷியாக்களுக்கும் இடையிலான பிளவுகளுக்கு மிகமுக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்பட முற்பட்டது.

அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகள் புதிதாக உருவாகிய ஈராக்கிய கைப்பாவை ஆட்சியில் அரசியல் அதிகாரங்களை கடுமையான குழுவாதத்தின் அடிப்படையில் பிரித்துக் கொடுத்தனர். சுன்னிக்களுக்கும் ஷியாக்களுக்கும் இடையே இருந்த நெருக்கடிகள் பெருக்கப்பட்டு, ஈராக்கிய பாதுகாப்புப் பிரிவுகள் ஷியா மத கட்சிகளின் ஆயுதக்குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இப்பொழுது, அமெரிக்க ஆக்கிரமிப்பு பாக்தாத்தில் சுன்னி பகுதிகளை சுற்றி சுவர்களை எழுப்பி மக்களை இன வழியில் பிரிவினை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது; இந்த முறை பல நாடுகளில் இருந்த மோசமான காலனித்துவ எதிர்க்கிளர்ச்சி போர்களை எதிரொலிக்கிறது; உண்மையில் நாஜிக்கள் வார்சோ குடியிருப்புகளை (Warsaw ghetto) உருவாக்கியதை நினைவுபடுத்துகிறது.

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முன்பு, பாக்தாத்திலும் மற்ற நகரங்களிலும் சுன்னிக்களும் ஷியாக்களும் அருகருகே பூசல்கள் ஏதுமின்றி, அடுத்தவருடைய மதப் பின்னணி பற்றி அதிகம் பொருட்படுத்தாமல் வாழ்ந்து வந்திருந்தனர். ஈராக்கில் மொத்த திருமணங்களில் மூன்றிலொரு பங்கு இரு சமூகத்தினருக்கும் இடையே நடைபெற்று வந்தது. இந்த இனவழி-மத அடையாளம் மில்லியன் கணக்கான மக்களுக்கு வாழ்வா சாவா என்ற அடையாளமாக மாறி, அவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தி, ஆயுதக்குழுக்களால் விசாரணை ஏதுமின்றி தூக்கிலிடுவதற்கும் உட்படுத்திவிட்டது.

ஈராக்கிய அரசாங்கம் குறிப்பிட்ட "வழி நிர்ணயங்களை" கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பொறுத்தவரையில், அவை வெறும் அரசியல் கண்காட்சிக்குத்தான். அமெரிக்க கட்டுப்பாட்டில் பச்சை பகுதியில் (Green Zone) இருக்கும் நெளரி அல் மலிகியின் தலைமையில் உள்ள இந்த ஆட்சி முக்கியமாக அதிகாரமற்ற கைப்பாவை ஆட்சிதான்; அமெரிக்காதான் நாட்டின் மீது முழுமையான கட்டுப்பாட்டை தொடர்ந்து கொண்டுள்ளது.

கடந்த வாரம் ஒரு முக்கிய பிரிட்டிஷ் சிந்தனைக் குழுவான Chatham House, ஈராக்கிய அரசாங்கத்தை "சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வை ஒழுங்குபடுத்துவதில் பெரிதும் பொருத்தம் அற்றதாக போய்விட்டது" என்று விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது இந்த உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் ஐயத்திற்கு இடமின்றி ஒரு குறைமதிப்பான முக்கிய அறிக்கை என்று கூறக் கூடிய அளவில், நாடு "ஒரு தோல்வியுற்ற நாடாக மாறும் விளிம்பிற்கு வந்துவிட்டது" என்றும் அது தெரிவித்துள்ளது.

டைகிரிஸ் நதி நச்சுத் தன்மையடைதல்

ஈராக்கில் இருந்து வரும் கொடூரமான தகவல்களில் ஒன்றாக, அதிகம் அடையாளம் காட்டகூடியது, பைபிளில் ஈடன் தோட்டத்தில் இருந்து கிளைநதியாக உருவாகியது என்று மேற்கோளிடப்பட்ட டைகிரிஸ் ஆறு பற்றியதாகும்; இது, இப்பகுதியின் நாகரிக வரலாற்றின் உயிர்ப்பாக மிகத் தொன்மையான காலத்தில் இருந்தே விளங்கி வருகிறது. இப்பொழுது அது, தேங்கிய, நாற்றம் பிடித்த நீர்வழியாக மாற்றப்பட்டுவிட்டது; மட்டமான கழிவுப் பொருட்கள், இரசாயனப் பொருட்கள், அமெரிக்கப் போர் மற்றும் ஆக்கிரமிப்பால் உருவாக்கப்பட்ட நச்சு நிறைந்த இராணுவ கழிவுப் பொருட்கள் இதில் விடப்படுகின்றன.

இந்த ஆறு, போருக்கு முன்பு மீனவர்களுக்கு ஆதரவு கொடுத்தது; படகுகள் நீரில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது; அப்படிச் சென்றாலும் விரோதமான துப்பாக்கிச் சூடுகளுகளுக்கு ஆளாவதுடன் இப்பொழுது அது கிட்டத்தட்ட மடிந்த நிலையில் உள்ளது; ஆற்றின் கரைகள் பெரும்பாலும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டு மற்றவர்கள் செல்ல முடியாத பகுதிகளாக போய்விட்டன.

சடலங்களை புதைக்கும் இடமாகவும் இந்த ஆறு மாறிவிட்டது; அன்றாடம் கொடூரமான சித்திரவதைக்கு உட்பட்ட பல சடலங்கள் ஆற்றில் இருந்து எடுக்கப்படுகின்றன. ஈராக்கிய உள்துறை அமைச்சரக அலுவலர் ஒருவரை மேற்கோளிட்டு, ஜனவரி 2006ல் இருந்து மட்டும் 800க்கும் மேற்பட்ட சடலங்கள் ஆற்றின் அல்லிகள், குப்பைகள் ஆகியவற்றை தடுத்து அள்ளுவதற்காக போடப்பட்டுள்ள இரும்பு வலைகள் உள்ள ஒரு பகுதியில் இருந்து மட்டும் எடுக்கப்பட்டன என்று IRIN செய்தி நிறுவனம் கூறுகிறது.

அமெரிக்க ஆக்கிரமிப்பு நான்கு ஆண்டுகளாக இருந்து வருவதின் பாதிப்பு ஈராக்கிய மக்களின் முழு உணர்வில் எப்படி உள்ளது என்பதற்கு குறைந்த அளவு பிரதிபலிப்பையேனும் காட்டியுள்ளது என்பதை அண்மையில் மார்ச் மாதம் அமெரிக்க, பிரிட்டிஷ், ஜேர்மனிய செய்தி நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அமெரிக்க துருப்புக்கள் தொடர்ந்து இருப்பதை குறைந்தது 78 சதவிகித ஈராக்கியர்கள் எதிர்ப்பதாக அது கண்டறிந்துள்ளது. 2005ல் 65 சதவிகிதத்தில் இருந்து இது உயர்ந்துள்ளது; மேலும் பெரும்பான்மையில் 51 சதவிகிதம் அமெரிக்க இராணுவப் படைகளின் மீது ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுக்கிறது; இந்த சதவிகிதம் 2004ல் 17 ஆகத்தான் இருந்தது.

இவ்விதத்தில் பொதுமக்கள் கருத்தில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டுள்ளது ஈராக்கிய மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள குற்றங்களின் பெரும் தன்மை என்ற நிலைப்பாட்டின்மூலம்தான் விளக்கப்பட முடியும். இவர்கள் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றனர்; அவர்களுடைய சமூகம் இடிபாடுகளாக தகர்க்கப்பட்டுள்ளது.

இவை உலக வரலாற்றுக் குற்றங்களாகும்; ஈராக்கியர்கள் நூறாயிரக்கணக்கிலும், அமெரிக்க துருப்புக்கள் ஆயிரக்கணக்கிலும் இறந்ததற்கு பொறுப்பு உடையவர்கள், ஒரு முழுச் சமூகத்தை முறையாக தகர்த்துள்ளதற்கு பொறுப்பானவர்கள், தண்டிக்கப்படாமல் இருப்பதுடன் அமெரிக்காவிற்குள் முக்கிய பதவியில் உள்ளனர்.

"முன்கூட்டியே தாக்கி தனதாக்கும் போரும்" நூரெம்பேர்க் முன்னோடியும்

வாஷிங்டனில் இருக்கும் அரசாங்கம் --குடியரசுக் கட்சியின் வெள்ளை மாளிகையும், ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் காங்கிரசும்-- "முன்கூட்டியே தாக்கி தனதாக்கும் போர்" என்ற கோட்பாட்டை இன்னும் தொடர்ந்து தழுவி வருகின்றது. அதாவது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய கருவி, ஆத்திரமூட்டல் இன்றி ஆக்கிரமிப்பை மேற்கொள்ளுவதாகும். அமெரிக்க ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி என்று பெயரளவிற்குக் கூறிக்கொள்ளும் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் இன்னும் கூடுதலான போர்வையில் ஈரானுக்கு எதிராக இக்கொள்கையை தொடக்க வாடிக்கையாக அச்சுறுத்தி வருகின்றனர்.

ஈராக்கிய போருக்கு பொறுப்பானவர்கள் மீதாக முழுமையான குற்ற விசாரணை மற்றும் வழக்குத் தொடுத்தல் அமெரிக்க மக்களை எதிர்கொண்டிருக்கும் அவசரமான அரசியல் பணியாகும். இன்னும் புதிய, கூடுதலான இரத்தம் சிந்தும் ஆக்கிரமிப்பு போர்களை தடுப்பதற்கும் அமெரிக்காவிற்குள்ளேயே அடிப்படை ஜனநாயக உரிமைகளின் மீது முன்னோடியில்லாத தாக்குதல்களை தடுப்பதற்கும் முந்தைய நிலைக்கு திரும்புவதற்கும் இது தவிர்க்க முடியாத செயலாகும்.

Mahmoudiya நகரில் 14 வயது பெண்ணை கும்பல் கற்பழிப்புக்கு உட்படுத்தியது, அப்பெண்ணின் முழுக் குடும்பத்தையும் படுகொலை செய்த இளைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான அல்லது ஹடிதாவில் படையினரால் செய்யப்பட்ட படுகொலைகளுக்கு பொறுப்பானவர்களை சிறிய அளவில் குற்ற விசாரணைக்கு உட்படுத்தியது என்பவை, இத்தகைய தனிநபர் கொடூரங்களுக்கு இறுதிப் பொறுப்பை வகிக்கும் மற்றும் ஒரு நாடே கற்பழிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்கள் சிறிதும் கவலையின்றி தண்டனையின்றி தொடர்ந்து பதவியிலிருப்பதற்கே வழிவகுத்துள்ளது.

அமெரிக்க ஆளும் உயரடுக்கின் புவியியல் மூலோபாய, நிதிய நலன்களுக்காக ஒரு சமூகமே திட்டமிட்டு பொய்களின் அடிப்படையை கொண்டு அழிக்கப்படுகிறது என்பது வரலாற்று பரிமாணங்கள் உடைய ஒரு போர்க்குற்றம் ஆகிறது; ஜேர்மனியின் மூன்றாம் ரைகின் முக்கிய நபர்கள் நூரம்பேர்க் விசாரணையில் தண்டனைக்குட்பட்ட அதே கொள்கைகளின் அடிப்படையில், அதே சட்டங்களின் அடிப்படையில் இக்குற்றத்தை புரிந்தவர்களும் தண்டனைக்கு உரியவர்கள் ஆவர்.

ஈராக்கில் போரை தொடக்கியதற்கு பொறுப்பானவர்கள் வெறும் புஷ், ஷென்னி, ரம்ஸ்பெல்ட், வுல்போவிட்சை சுற்றியிருக்கும் குடியரசுக் கட்சியின் தன்னல வலதுசாரிக் குழுக்கள் மட்டும் அல்லர். இதில் இப்போர் தொடக்கப்பட ஆதரவு கொடுத்த ஜனநாயக கட்சியினர், அமெரிக்க எரிபொருள் பெருநிறுவனங்கள் மற்றும் இதில் இருந்து இலாபம் பெறலாம் என்று நினைத்த நிதிய நிறுவனங்கள் மற்றும் இதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருந்த செய்தி ஊடக ஏகபோக உரிமை நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரும் அடங்குவர். அரசியல் கட்டமைப்பினுள்ளும் மற்றும் அமெரிக்க நிதிய உயர்தட்டிலும் இருக்கும் இந்த பிரிவினர் அனைவருமே 60 ஆண்டுகளுக்கு முன்பு நாஜிக்கள்மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட அதே குற்றங்களின் கீழ் தவறிழைத்தவர்கள் ஆவர்: அதாவது, ஒரு ஆக்கிரமிப்பு போரை திட்டமிட்டு செயல்படுத்தியது என்பதே அது. இந்த பிரதான குற்றத்தில் இருந்துதான் ஈராக்கிய மக்கள் மீது இழைக்கப்பட்ட பல குற்றங்களும் கொடூரங்களும் ஊற்றெடுத்தன.

இக்குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படாமல், இதைப் புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து விலக்கீடு அளிப்பது தொடர்ந்திருப்பது அமெரிக்கா மற்றும் உலகிற்கே பெரும் அரசியல், சமூக ஒழுக்கநெறி வாழ்விற்கு பெரும் தீமை விளைவிக்கும் தாக்கங்களை கொண்டுள்ளது. அது அடுத்த சுற்று போர்க்குற்றங்கள் மற்றும் கொடுமைகள் ஆகியவற்றை இன்னும் எளிதாகவும், மேலும் தவிர்க்கமுடியாததாகவும் மட்டுமே செய்யும்.

ஈராக்கிய போருக்கு எதிரான போராட்டம் அனைத்து அமெரிக்கப் படைகளும் உடனடியாக, நிபந்தனையற்ற முறையில் திரும்பப் பெறுதல் வேண்டும், பாரிய மனிதாபிமான, பொருளாதார உதவி ஈராக்கிய மக்களுக்கு கொடுக்கும் திட்டம், ஒரு சுதந்திரமான, சர்வதேச நீதிமன்றத்தின் முன் இப்போருக்கு பொறுப்பானவர்கள்மீது குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தொடரப்பட வேண்டும்.

அமெரிக்க இடைத் தேர்தல்கள் நடந்து ஆறு மாதம் ஆகிவிட்டது, இக்கோரிக்கைகள் இப்பொழுது இருக்கும் அரசியல் கட்சிகளாலோ, அரசாங்க அமைப்புக்களாலோ அடையப்பட முடியாது என்பதை தக்கமுறையில் உறுதிப்படுத்திவிட்டன. இக்கட்டுரை வெளிவரும் நேரத்தில், காங்கிரசில் இருக்கும் ஜனநாயகக் கட்சியனர், கடந்த நவம்பர் மாதம் போருக்கு எதிரான பாரிய வாக்குகளால் காங்கிரசை கைப்பற்றியவர்கள் தங்கள் குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் வெள்ளை மாளிகை அலுவலர்களுடனும் இரகசிய கூட்டங்கள் நடத்தி ஈராக்கில் இரத்த ஆறு இன்னும் வெள்ளமாக ஓடுவதற்கு பல பில்லியன் டாலர்கள் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப் பேசிவருவதாக தெரிகிறது. போருக்கு எதிர்ப்பாளர்கள் என்று வெளிப்படையாக போக்குக் காட்டி வரும் இவர்களுடைய பின்னணியில், ஜனநாயக் கட்சியினர் இவர்களும் 2003 படையெடுப்பின் ஏகாதிபத்திய நோக்கங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை தெளிவாக காட்டியிருப்பதுடன், அந்த நோக்கங்களை அடைவதற்காக ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்கள் பல ஆயிரக்கணக்கில் நிறுத்தி வைப்பதற்கும் விரும்புவதைத்தான் தெளிவுபடுத்தியுள்ளது.

போரை நிறுத்துதல், சதிகாரர்களை பொறுப்புக் கூறவைத்தல் --இன்னும் கூடுதலான பேரழிவு தரக்கூடிய ஆக்கிரமிப்பு செயல்களைத் தடுப்பதற்காக-- என்பவை இரு போர்க் கட்சிகளுக்கும் -- ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி --எதிரான நேரடியான அரசியல் போராட்டத்தின் மூலம்தான் சாதிக்கப்பட முடியும். அமெரிக்க நிதிய தன்னலக் குழுக்களின் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் போரை நிறுத்துவதற்கு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரு சோசலிசத் வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொண்ட ஒரு பரந்துபட்ட தொழிலாள வர்க்க அரசியல் இயக்கத்தை கட்டுவதன் மூலமே முடியும்.

முற்றும்