World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

In a stunning rebuke to Musharraf, Supreme Court orders chief justice reinstated

முஷாரஃப்பிற்கு அதிர்ச்சிதரக்கூடிய கண்டன முறையில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை மீண்டும் பதவியில் இருத்துகிறது

By Keith Jones
21 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

பாகிஸ்தானின் சர்வாதிகாரி தளபதி பர்வேஸ் முஷாரஃப்பிற்குப் பெரும் தாக்குதலைக் கொடுக்கக் கூடிய வகையில், நாட்டின் உச்ச நீதிமன்றம், தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த தலைமை நீதிபதி இப்திகார் செளதரியை உடனடியாக மீண்டும் பதவியில் இருத்துமாறும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அகற்றிவிடுமாறும் உத்திரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்புரையை உள்ளே நீடித்த கரவொலிக்கு இடையே வழங்கிக் கொண்டிருக்கும்போது, உச்ச நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியே கூடியிருந்த வழக்கறிஞர்கள் "போ, முஷாரஃப், போ" என்ற கோஷத்தை எழுப்பினர். லாகூர், கராச்சி, குவெட்டா, பெஷாவர் இன்னும் பிற நகரங்களிலும் வெற்றிக் களிப்பு ஆர்ப்பாட்டங்கள் இருந்தன.

ஜனாதிபதி முஷாரஃப் கடந்த மார்ச் 9 அன்று செளதரியை தற்காலிகப் பதவி நீக்கம் செய்ததில் தன்னுடைய அதிகாரங்களை மீறி நடந்து கொண்டார் என்று 13 நீதிபதிகளும் ஒப்புக்கொண்டனர். கொண்டனர், மற்றும் தலைமை நீதிபதிக்கு எதிராக முஷாரஃப் கொண்டுவந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் 10 க்கு 3 என்ற மிகக் கணிசமான பெரும்பான்மையில் தள்ளுபடி செய்தனர்.

மூத்த இராணுவ, உளவுத்துறை அதிகாரிகள் புடைசூழ, முஷாரஃப் மார்ச் 9 அன்று திடீரென நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் செளதரியை இராஜிநாமா செய்யுமாறு முஷாரஃப் மிரட்ட முயன்றார். தலைமை நீதிபதி மறுத்தபின், தயாரிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் நீதி விசாரணையில் முடிவு அடையும் வரையில், ஜனாதிபதி அவரைத் தற்காலிக பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டார்; பல நாட்களுக்கு செளதரி கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

முஷாரஃப் 1999ல் இராணுவ ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தபின் தலைமை நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட செளதரி நீண்ட காலமாகவே சர்வாதிகாரத்திற்கு விசுவாசமாக கைதூக்கி ஆதரிப்பவராகத்தான் இருந்தார். ஆனால் 2005 நடுப்பகுதியில் தலைமை நீதிபதியான பின்னர், அரசாங்கத்தின் செயற்பட்டியலுக்கு குறுக்கே நிற்கும் வகையில் பல தீர்ப்புக்களை வழங்கினார்; இதில் பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் ஒரு உடன்பாட்டிற்கும் முட்டுக்கட்டை போட்டார்; அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் இது மிக மலிவாக விற்கப்பட இருந்தது என்று கூறினர் அரசியலமைப்பை மீறி பாகிஸ்தான் ஜனாதிபதியாகவும் அதன் படைப்பிரிவுகளின் தலைவராகவும் தொடர்ந்து இன்னும் ஒரு ஐந்து ஆண்டு காலத்திற்கு பதவியை நீட்டிக்க இந்த இலையுதிர்காலத்தில் தான் நடத்த இருக்கும் தனக்கான "மறு தேர்தல்" என்ற போலித்தனத்திற்கும், தான் பதவியில் தொடர்வதற்கும் முத்திரையிட இவரை நம்பமுடியுமா என்ற சந்தேகத்தை இது இது முஷாரஃப்பிற்கு எழுப்பியது.

முஷாரஃப் மற்றும் அவருடைய நெருக்கமான நண்பர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், அமெரிக்க ஆதரவு உடைய ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு கொடுப்பதகான ஒரு அணிதிரளும் புள்ளியாக செளதரி தோன்றினார். கடந்த நான்கு மாதங்களாக, நூறாயிரக்கணக்கானவர்கள் தலைமை நீதிபதியை நீக்கும் முஷாரஃப்பின் முயற்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர்; பல இடங்களில் அவற்றில் செளதரியே முக்கிய பேச்சாளராக இருந்தார். கேட்பவர்களுக்கு களிப்பு தரும் வகையில், நேரடியாக முஷாரஃப்பை விமர்சிக்கவில்லை என்றாலும் செளதரி அதிகரித்த முறையில் அரசாங்கம் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவது பற்றி நேரடியாகக் கண்டித்து, இராணுவ ஆட்சியையும்("அரசியலமைப்பிற்கு விரோதமானது" என கண்டித்தார்

முஷாரஃப்பும் அவருடைய பிரதம மந்தரி ஷெளகட் அஜீஸும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக அறிவித்துள்ளனர். "வெற்றி அல்லது தோல்வி பற்றி கருதுவதற்கு இது நேரமல்ல. அரசியலமைப்பும் சட்டமும் வெற்றி பெற்றுள்ளன; எல்லாக் காலத்திலும் வெற்றி பெறவேண்டும்" என்று அஜீஸ் அறிவித்தார்.

இது ஒரு வீறாப்பான பேச்சாகும். உண்மை என்னவென்றால், தலைமை நீதிமன்றத் தீர்ப்பு முஷாரஃப்பிற்கு பெரும் அதிர்ச்சி தரும் அடியாக, இராணுவ ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பை தைரியப்படுத்தக் கூடியவகையில், முஷாரஃப்பின் அரசாங்கம் கொஞ்ச நஞ்சம் கொண்டிருந்த மக்கள் நெறியையும் அகற்றும் தன்மையைத்தான் புலப்படுத்தியுள்ளது.

அதிகாரத்தில் எப்படியும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக முஷாரஃப் அடுத்து எடுக்கும் ஆற்றொணா தந்திர உத்திகளில் ஒன்றாக அஜீஸ் பதவி பறிபோவதும் இருக்கக்கூடும். தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கில் இரண்டு மாத காலமாக நீதிமன்றத்தில் இருந்த நீடித்த வாதங்களின்போது, ஜனாதிபதியின் வழக்கறிஞர்கள் இதைத் தூண்டிவிடுவதில் முஷாரஃப்பின் பங்கு பற்றி குறைத்துக்கூற அதிகரித்தளவில் முற்பட்டனர்; செளதரி மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று அஜீஸ்தான் விரும்பினார் என்றும் ஜனாதிபதி என்னும் முறையில் முஷாரஃப் அரசியலமைப்பின்படி தன் பிரதம மந்திரியின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டியதாயிற்று என்றும் கூறினர்.

இது ஒரு கேலிக்கூத்தாகும். முஷாரஃப்தான் அனைத்தையும் முடுக்கிவிடுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பெருக்குவதற்கு, குறிப்பாக வெளியுறவிலும், தேசிய பாதுகாப்பிலும், நாட்டை ஆள்வதில் இராணுவத்திற்கு ஒரு நிலைத்த, முக்கிய செல்வாக்கை கொடுக்கும் துருக்கிய மாதிரியில் ஒரு தேசிய பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதற்கு, உண்மையில், முஷாரஃப்பிற்கு எதிர்க்கட்சியாக இருப்பதாகக் கூறிக் கொள்ளும் மதக் கட்சிகளின் கூட்டணியான MMA ஆதரவுடன்தான் அரசியலமைப்பை திருத்துவதில் தளபதி வெற்றி அடைந்தார்.

ஆனால் நீதிமன்றம் தலைமை நீதிபதியை நீக்குவதற்கு தடை தெரிவித்து, ஜனாதிபதி-தளபதிக்கு வீண் பழி ஏற்பதற்கு ஒருவர் தேவைப்படும் என்றால், செளதரியை நீக்கும் முயற்சிக்கான பொறுப்பை அஜிஸின் தலையில் சுமத்துவது, தெளிவாகவே முஷாரஃப்பின் நலனுக்காகும்.

சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பு என்பதை பொறுத்தவரையில், புஷ் நிர்வாகத்தின் ஆதரவுடன் முஷாரஃப் அதிகாரத்தை ஒரு இராணுவ மாற்றத்தின் மூலம் கைப்பற்றினார்; பலமுறையும் அரசியலமைப்பை சேதத்திற்கு உட்படுத்தினார்; எதிர்ப்பை வன்முறையின் மூலம் அடக்கி வருகிறார்; நீதிபதி செளதரி தன்னைக் காத்துக் கொண்ட முயற்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களிலும் அதுதான் நடந்தது. இதில் மிக இழிவானது முஷாரஃப் சார்புடைய MQM தன்னுடைய குண்டர்களை அழைத்து வந்து, பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்புடன் கராச்சியில் மே 12ம் தேதி நீதிபதி செளதரிக்கு மக்கள் ஆதரவு கொடுக்க கூடியபோது நடத்திய தாக்குதல் ஆகும். அத்தாக்குதல் பாகிஸ்தானின் மிகப் பெரிய நகரத்தில் இரண்டு நாட்கள் MQM தெருக்களில் வன்முறையில் ஈடுபட்டதில் தொடக்கியது; அதில் 40 பேருக்கும் மேலானவர்கள் இறந்து போயினர். இதன் பின்னர் முஷாரஃப் MQM இன் நடவடிக்கைகளுக்கு ஆசி வழங்கும் வகையில் வன்முறைக்கான குற்றம் முழுவதும் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் தலைமை நீதிபதியின் மீதும், எதிர்க்கட்சிகளின் மீதும்தான் உள்ளது என்றும், அவை அரசாங்கத்தின் எச்சரிக்கைகளை, அதாவது கராச்சியில் செளதரிக்கு ஆதரவான கூட்டம் "பொது பாதுகாப்பை அச்சுறுத்துகிறது" என்பதை கேட்காததின் விளைவு என்றும் கூறினார்.

சமீப வாரங்களில், குறிப்பாக அரசாங்கம் இஸ்லாமாபாத்தில் இருக்கும் செம் மசூதி தலைவர்களால் ஷரிய சட்டமான இஸ்லாமிய பிரச்சாரத்தை குருதி கொட்டும் முறையில் அடக்க வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர், அரசாங்கத்திற்கு நெருக்கமாக இருக்கும் பலர் பகிரங்கமாக முஷாரஃப் விரைவில் அவசரகால ஆட்சியை கொண்டுவருவார் என்று கூறினர். இது எதிர்ப்பை அடக்குவதற்கு இராணுவத்திற்கு இன்னும் கூடுதலான அதிகாரங்களை கொடுத்து, வரவிருக்கும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை குறைந்தது ஓராண்டிற்காவது முஷாரஃப்பை ஒத்திப்போட அனுமதித்திருக்கும்.

கடந்த திங்களன்று மிகப் பெரிய முஷாரஃப் ஆதரவுக் கட்சியான Pakistan Muslim League (Q) வின் தலைவர் செளதரி ஷூஜட் ஹூசைன் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஏதேனும் ஒன்றில் பாதிக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜிநாமா செய்தால், அரசாங்கம் அவசரகால ஆட்சியை சுமத்துவது அதன் உரிமைக்குள் இருக்கும் என்று கூறினார். சில எதிர்க்கட்சிகள் முஷாரஃப்பின் திட்டமான ஜனாதிபதி தேர்தல் குழுவினால் --ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய அளவில் இராணுவத்தால் சூழ்ச்சியுடன் கையாளப்பட்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று வந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் அடங்கியது-- தானே "மறு தேர்தல்" செய்து கொள்ளுவதை தடுத்துவிடும் வகையில் பாராளுமன்றத்தில் இருந்து இராஜிநாமா செய்வதாக அச்சுறுத்தியிருந்தன.

பத்திரிகை ஆசிரியர்களுடன் புதனன்று நடத்திய ஒரு வினா-விடை கூட்டத்தின்போது, முஷாரஃப் அவசரகால ஆட்சியை சுமத்தும் திட்டத்தை அவர் கொண்டிருக்கவில்லை என்று கூறினார். ஆனால் இருக்கும் சட்ட மன்றங்கள் மூலம் தம்மை ஜனாதிபதியாக "மீண்டும் தேர்வு செய்யும்" திட்டங்களை கொண்டிருப்பதாக பகிரங்கமாக அறிவித்தார்; அதே நேரத்தில் பாகிஸ்தானின் இராணுவ படைகளின் தலைவராகவும் அவர் தொடர இருப்பதாகவும் அறிவித்தார். தன்னுடைய சீருடையை சுட்டிக்காட்டி, முஷாரஃப் அறிவித்தார்: "ஆம், இப்பொழுது இருப்பதுபோல்தான் நான் தொடர்ந்தும் இருப்பேன்."

ஜனாதிபதியாகவும், இராணுவத்தின் தலைவராகவும் இருபதவிகளிலும் தான் தொடர்ந்து இருப்பதை "தாலிபான் மயமாக்குதலை" எதிர்த்து நிற்பதற்கு "ஒருங்கிணைந்த கட்டுப்பாடு" தேவை என்று மேற்கோளிட்டு முஷாரஃப் அதை நியாயப்படுத்த முற்பட்டார்.

முஷாரஃப், பாகிஸ்தானிய இராணுவம், உண்மையில் பாகிஸ்தானின் முழு உயரடுக்கு அனைத்துமே இஸ்லாமிய வலதை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு தடுப்பரணாக பயன்படுத்துவதில் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளதுடன், பல இஸ்லாமிய போராளிக் குழுக்களை ஆப்கானிஸ்தான், காஷ்மீர் மற்றும் இந்தியாவில் பாகிஸ்தானின் புவி-அரசியல் விழைவுகளை பெருக்குவதற்கும் பயன்படுத்துகின்றன. ஆனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் கார்சாய் அரசாங்கத்திற்கு இன்னும் கூடுதலாக ஒத்துழைப்பு கொடுத்து முட்டுக் கொடுக்க பாகிஸ்தான் முன் வர வேண்டும் என்னும் அமெரிக்க அழுத்தத்தின் விளைவாக ஓரளவும், பாகிஸ்தானிய உயரடுக்கின் நலன்களுக்கு குறுக்கே இஸ்லாமிய அடிப்படைவாத போராளிக் குழுக்கள் இருக்கின்றன என்பதாலும், "தாலிபன் மயமாதல்" என்ற அச்சுறுத்தல் தொழிலாள வர்க்கத்தை மிரட்டுவதற்கும் சர்வாதிகார ஆட்சியை நியாயப்படுத்துவதற்கும் பயன்படுமாதலால், முஷாரஃப் அரசாங்கம் தான் "தீவிர இஸ்லாமிய வாதத்திற்கு" எதிராக போரிடுவதாக பறைசாற்றியுள்ளது.

தலைமை நீதிபதி செளதரியை முஷாரஃப் ஆட்சி கொல்ல முயன்றதா

செம் மசூதி மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய ஒன்றரை வாரத்தில், ஏராளமான தற்கொலைப்படை, இன்னும் மற்ற தாக்குதல்கள் பாகிஸ்தானிய பாதுகாப்புப் பிரிவுகள், அரசாங்க அதிகாரிகள், வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆகியோரின் மீது நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 200 பேர் மடிந்துள்ளனர்.

ஆனால் இவற்றுள் ஒரு தாக்குதல் இலக்கின்படியோ அல்லது புவியியல் தன்மையின்படியோ வாடிக்கையான வடிவமைப்பிற்கு ஒத்திருக்கவில்லை. செவ்வாயன்று ஒரு சக்தி வாய்ந்த குண்டு இஸ்லாமாபாத்தில் தலைமை நீதிபதி செளதரி ஒரு கூட்டத்தில் பேசுவதற்கு சற்று முன்பு, சில நிமிஷங்களுக்கு முன்பு வெடித்தது. செளதரி பேசவிருந்த அரங்கத்தில் இருந்து ஒரு சில மீட்டர் தூரத்திற்குள் வெடித்த குண்டு பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தானிய மக்கள் கட்சி ஆதரவாளர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெடித்தது; அதில் 17 பேர் இறந்து போயினர்.

இஸ்லாமியவாதிகள் PPP ஐக் குறிவைப்பது முற்றிலும் சாத்தியம் என்றாலும் --அதன் தலைவர்கள் செம் மசூதியின் மீதான இராணுவத் தாக்குதலை பாராட்டி, முஷரப்புடன் சாத்தியமான அதிகாரப் பகிர்வு பற்றி பேச்சு வார்த்தையும் நடத்தி வருகின்றனர்-- செவ்வாயன்று நிகழ்ந்த குண்டுத் தாக்குதல், பல பாகிஸ்தான் செய்தியாளர்கள் சரியான வகையில் சுட்டிக் காட்டியபடி, பாகிஸ்தானின் பாதுகாப்பு படைகளின் செயலாக, நேரடியாக அல்லது அவை தொடர்பு கொண்டுள்ள பல இஸ்லாமிய போராளிக்குழுக்களின் ஒன்றின் மூலமாகவோ மறைமுகமாகவோ, இருந்திருக்கக்கூடும்.

செல்வாக்கு நிறைந்த இஸ்லாமிய வாதத்தினரின் கைகளால் நீதிபதி செளதரி மடிந்திருந்தால் அது முஷாரஃப்பிற்கு ஒரு முக்கியமான முள்ளை பாதையில் இருந்து அகற்றியதை போல் இருந்திருக்கும்.

நீதிபதி செளதரியின் எழுத்தாளர் ஒருவர், அவருடைய தற்காப்பு வாதத்திற்கு முக்கியமான சாட்சி என்று கருதப்பட்டவர், ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது; அதிகாரிகள் இது ஒரு கொள்ளையடிக்கும் முயற்சியின் விளைவு என்று கூறியுள்ளனர்; அவருடைய உறவினர்களோ இது உளவுத்துறைப் பிரிவினர் நடத்திய கொலை என்று கூறியுள்ளனர்.

ஓர் இழிந்த ஆட்சியின் துர்நாற்றம்

பாகிஸ்தானிய தலைமை நீதிமன்ற தீர்ப்புக்கள் இராணுவத்திற்கும் அந்நாட்டின் நான்கு இராணுவ சர்வாதிகாரங்களுக்கும் அடிவருடும் தன்மையை நீண்ட காலமாக கொண்டுள்ளன. தலைமை நீதிபதியை நீக்கும் முஷாரஃப்பின் முயற்சிக்கு முன்னோடி இல்லை என்றாலும், மற்ற நீதிபதிகளிடையே தங்கள் பதவி பற்றி கவலையை ஏற்படுத்தியது என்பதை பிரதிபலித்தாலும், செளதரி நீக்கத்திற்கு அவர்கள் ஒப்புதல் கொடுக்க மறுத்துள்ளது, பாகிஸ்தானிய உயரடுக்கின் வர்க்க மூலோபாயம் மீதாகவும், பெருகிய சமூக அதிருப்தியை எதிர்கொள்கையில் இராணுவ ஆட்சி சட்டரீதியானதன்மையை இழந்துவிட்டது என்ற கவலைகள் பற்றியதிலும் அதற்குள்ளே முக்கிய பிளவுகள் இருக்கும் தன்மையின் பின்னணியில்தான் புரிந்துகொள்ளப்படமுடியும்.

உழைக்கும் மக்களிடையே உணவுப் பொருட்கள் விலையேற்றம், பெருகிய முறையில் சமூக சமத்துவமின்மை, பொருளாதார பாதுகாப்பின்மை பெருக்கம் மற்றும், பல்வேறு மனிதாபிமான வகையிலான நெருக்கடிகளுக்கு பதிலாக ஊழலும் திறமையின்மையும் எடுத்துக்காட்டாய் விளக்கிக்காட்டப்பட்ட வகையில், அரசாங்கம் மக்களுடைய தேவைகளை பற்றி அலட்சியம் காட்டுதல் பற்றி சீற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் முஷாரஃப் கொண்டிருக்கும் உடன்பாடு பற்றியும் அதிகரித்த வகையில் மக்களுடைய சீற்றம் உள்ளது; ஏனெனில் பல தசாப்தங்களாக வாஷிங்டன் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியின் ஆதரவிற்காக நிதி, ஆயுதங்கள் இன்னும் பல ஆதரவுகளை கொடுத்து வந்துள்ளது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முஷாரஃப் ஆட்சி இணங்கியுள்ளது; மேலும் வாஷிங்டன் பாகிஸ்தானுக்குளேயே இராணுவத் தலையீட்டை நடத்த வேண்டும் என்று வலதை பெருகிய முறையில் வற்புறுத்துகிறது.

பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பொருளாதார உயரடுக்கானது, இராணுவம், அதன் நட்பு அரசியல்வாதிகள் மற்றும் பல வணிகச் செல்வாக்குடையவர்கள் அரசாங்கத்தின் நெம்புகோலை பயன்படுத்தி நியாயமற்ற முறையில் அரசாங்க ஆதரவை ஏகபோக உரிமையாக்கிக் கொள்ளுகின்றனர், அமெரிக்க உதவியின் நலன்களை எடுத்துக் கொள்ளுகின்றனர் மற்றும் தனியார் மயமாக்குவதால் வரும் வணிக வாய்ப்புக்களையும் பெறுகின்றனர் என்று கோபம் கொண்டுள்ளது.

இராணுவ ஆட்சி பாகிஸ்தான் நாட்டிற்குள்ளேயே வட்டார பதட்டங்களை அதிகப்படுத்திவிட்டது என்றும் அதையொட்டி பலுச்சிஸ்தான் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் பல பழங்குடி குழுக்களில் இருந்து எதிர்ப்பு தூண்டிவிடப்பட்டுள்ளது என்றும் இவற்றினால் ஏற்கனவே ஆட்டம் கண்டுள்ள பாகிஸ்தானிய தேசிய அரசு இன்னும் கூடுதலான சீர்குலைப்பிற்கு உட்பட்டுள்ளது என்று அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.

மேலும், குறிப்பாக காஷ்மீர் பற்றியதில் இந்தியாவில் இருந்து சலுகைகளை பெற வாஷிங்டனின் ஆதரவை பெறுவதை பட்டியலில் இணைக்கும்பொழுது, முஷாரஃப் புஷ் நிர்வாகத்துடன் தான் கொண்டுள்ள தொடர்புகளை திறமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் குற்றச் சாட்டுக்கள் உள்ளன.

ஏராளமான உள்நாட்டு, சர்வதேச சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், முஷாரஃப் ஆட்சி அதிகரித்த வகையில் இழிந்த துர்நாற்றத்தைத்தான் வெளியிட்டுக் கொண்டுவருகிறது; அதே நேரத்தில் அவ்வப்பொழுது பெரும் மரணங்களை ஏற்படுத்தும் வன்முறையையும் கட்டவிழ்த்து விடுகிறது.

அதன் வலிமையின் முக்கிய ஆதாரம் வாஷிங்டன் ஆகும் - கடந்த வராம்தான் செம் மசூதி படுகொலைகளை அடுத்து புஷ் பகிரங்கமாக தான் எந்த அளவிற்கு முஷாரஃப்பை விரும்புகிறேன் என்பதையும் -- மற்றும் இராணுவ ஆட்சியின் கீழ் தொடர்ந்து வேதனைப்படும் முதலாளித்துவ வர்க்க எதிர்ப்பின் இலஞ்சம் வாங்குவதற்கு தயங்காத தன்மையும் ஆகும்; ஆனால் முஷாரஃப்பிற்கு எதிரான எத்தகைய மக்கள் அணிதிரளலும் அதனுடைய அரசியல் கட்டுப்பாட்டைவிட்டு மீறிச் செல்லக் கூடும் என்றும், அதன் சொந்த வர்க்கச் சலுகைகளுக்கு பெரும் அரணாக விளங்கும் இராணுவத்தையே சீர்குலைக்கக் கூடும் என்றும் அது அஞ்சுகிறது.