World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Tens of thousands to protest on eve of G-8 summit

Fight against war and social reaction requires a socialist strategy

பல ஆயிரக்கணக்கானவர்கள் G8 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

போருக்கும் சமூகப் பிற்போக்குத்தனத்திற்கும் எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச மூலோபாயம் தேவை

Statement of the World Socialist Web Site editorial board
1 June 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 2ம் தேதி ஜேர்மனிய சுற்றுலா தனமான ஹைலிகென்டாம் இல் நடக்கவிருக்கும் G8 உச்சி மாநாட்டிற்கு அருகே ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட அறிக்கை வினியோகிக்கப்பட உள்ளது. PDF வடிவமைப்பிலும் இது பதிப்பிக்கப்பட்டுள்ளது. எமது வாசகர்களையும், ஆதரவாளர்களையும் அறிக்கையை பதிவிறக்கம் செய்து ஜூன் 2 ஊர்வலத்தின்போது வழங்குமாறு நாம் வேண்டுகின்றோம்.

சமூகத்தின் தற்போதைய நிலை பற்றி மில்லியன் கணக்கான மக்கள் ஆழ்ந்த கவலையுற்றுள்ளனர். உலகம் முழுவதும் இருக்கும் ஆளும் உயரடுக்கினரின் கொள்கைகளுக்கு அவர்கள் தீவிர எதிர்ப்பை கொண்டு, அவற்றை எதிர்க்க வழிவகைகளை தேடுகின்றனர். ஆனால் இங்கு அவர்கள் ஒரு முரண்பாட்டை எதிர்கொள்கின்றனர். ஏராளமான மக்களை ஈர்த்துள்ளதாக இருந்தாலும் எதிர்ப்பு என்பது போர், அடக்குமுறை, சமூகப்பிற்போக்குத்தனம் ஆகிய பெரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் போதுமானதாக இல்லை என்று அனுபவம் காட்டுகிறது.

முந்தைய G8 உச்சி மாநாடுகள் மற்றும் ஈராக் போருக்கு எதிரான வெகுஜன சர்வதேச அணிவகுப்புக்கள் ஆகியவை இதைப் புலப்படுத்தியுள்ளன. பழைய சீர்திருத்தவாதக் கட்சிகளை அழுத்தம் கொடுத்து இடதுபுறம் செல்ல வைக்கமுடியும் என்ற பிரமைகளால் அரசியல் ரீதியாக மேலாதிக்கம் செய்யப்படும்வரை, இவை தோல்வியில்தான் முடியும்.

ஆனால் இதுதான் Attac மற்றும் பிற அமைப்புக்கள் G8 உச்சி மாநாட்டிற்கு எதிராக ஜூன் 2ல் மேற்கொள்ள இருக்கும் ஆர்ப்பாட்டத்தின் துல்லியமான நிலைப்பாடாக இருக்கிறது; இவை இருக்கும் முதலாளித்துவ முறையின் வடிவமைப்பிற்குள் "மற்றொரு உலகம் சாத்தியமானது" என்ற கருத்தைக் கொண்டுள்ளன.

இந்த முன்னோக்கு உண்மைக்கு முற்றிலும் எதிரிடையாக உள்ளது.

முதலாளித்துவ சமூகத்தின் தற்போதைய நிலை பற்றி ஜேர்மனிய சுற்றுலாத் தனமான ஹைலிகென்டாமில் நடைபெறும் G8 உச்சிமாநாடு சக்திவாய்ந்த குவிப்பை காட்டுகிறது. உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்கள், பல கிலோமீட்டர்கள் நீளம் கொண்ட, மின் வேலி, உயர் பாதுகாப்புக்கு பின்னால் மற்றும் போருக்குப் பிந்தைய ஜேர்மனியின் வரலாற்றில் மிக அதிகமான போலீசார் இறக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதில் தங்களை இருத்திக் கொண்டுள்ளனர்.

12 மில்லியன் யூரோக்கள் செலவழிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள இப்பாதுகாப்பு வேலி உலகெங்கிலும் இருக்கும் அரசாங்கங்களுக்கும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் பரந்த மக்களுக்கும் இடையே உள்ள உறவின் அப்பட்டமான அடையாளமாக உள்ளது. ஜனநாயகம் என்பது ஒரு வெற்றுச் சொல்லாக மாற்றப்பட்டு விட்டது. உச்சிமாநாடு தொடங்குமுன், போலீசார் தொடர்ச்சியான திடீர்ச்சோதனைகள் பலவற்றை மேற்கொண்டனர், பெரும் கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர், எதிர்ப்புக் குழுக்கள் மற்றும் தனிநபர்களை மிரட்டும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் மீது தடைகளை விதித்தனர்; இவை அனைத்தும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஆணவத்துடன் மீறுவது ஆகும்.

உச்சி மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக தங்கள் செல்வத்தை மகத்தான முறையில் பெருக்கிக் கொண்ட ஒரு குறுகிய சமூக உயரடுக்கின் நலன்களை பிரதிபலிப்பவர்கள் ஆவர். 500 பில்லியனர்கள் உள்ளடங்கலான இந்த சர்வதேச நிதிய பிரபுக்கள் குழு மொத்தமாக சேர்ந்து, மனிதகுலத்தின் ஏழை மக்கள் பாதிப்பேர் கொண்டுள்ள சொத்துக்களை குவித்துள்ளனர். பில்லியன் டாலர்கள் வரை ஆண்டு வருமானம் இருக்கும் ஊக வணிகர்களை இது தழுவியுள்ளது; நூற்றுக் கணக்கான மில்லியன்கள் என்று ஊதியங்களும் போனசும் பெறும் பெரும் நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள்; மற்றும் "புதிய ரஷ்யர்கள்" என்று முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் சொத்துக்களை கொள்ளையடித்து நினைக்க முடியாத அளவிற்கு செல்வம் சேர்த்தவர்கள் ஆவர்.

சமூக சமத்துவமின்மை உலகம் முழுவதும் முன்னோடியில்லாத மட்டத்தை அடைந்துவிட்டது. பணக்கார, ஏழை நாடுகளுக்கு இடையே இருக்கும் பிளவுகளில் மட்டும் இது வெளிப்பாடு காணவில்லை; நாடுகளுக்குள்ளேயே உள்ள இச்சமத்துவமின்மையையும் கூட வெளிப்படுத்துகிறது. இரு சதவிகிதத்தினர் பெரும் ஆடம்பரத்தில் வாழும் நிலையில், சாதாரண மக்களில் பெரும்பாலானவர்கள் பரிதாபத்திற்குரிய வாழ்வை நடத்துகின்றனர்; அவர்கள் பொருளாதாரப் பாதுகாப்பின்மை, தேக்க நிலை, வாழ்க்கைத்தர சரிவு அல்லது ஒரேயடியான ஏழ்மை ஆகியவற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சமத்துவமற்ற தரங்கள் நீண்ட காலத்திற்கு சமாதான முறையில் தக்க வைக்கப்பட மாட்டா. விரைவிலோ காலம் தாழ்ந்தோ, சமூக முரண்பாடுகள் வன்முறையான வர்க்க மோதல்களாக வெடிக்கும். எனவேதான் ஆளும் வர்க்கங்கள் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி அரசின் போலீஸ் அதிகாரங்களை கூடுதலாக கட்டமைத்தும் தங்கள் இராணுவ சக்திகளை பெருக்கிக் கொண்டும் வருகின்றன.

ஈராக் போர் என்பது இந்த வழிவகையின் செறிந்த வெளிப்பாடு ஆகும். இதை தொடக்குவதற்கு கொடுக்கப்பட்ட உத்தியோகபூர்வமான காரணங்கள் பொய்களின் அடிப்படையை கொண்டிருந்தன என்பது இப்பொழுது அனைவராலும் ஏற்கப்பட்டுவிட்டது. அமெரிக்கா தலைமையிலான போர், எண்ணெய் மற்றும் மூலோபாய செல்வாக்கை பற்றித்தான் எப்பொழுதும் இருந்தது. எண்ணெய் செல்வாக்குக் குழு, துணை ஜனாதிபதி செனியின் தலைமையில், போர்த் தயாரிப்பில் முக்கியமான பங்கை கொண்டிருந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ஈராக் ஒரு இறைமை பெற்ற நாடு என்ற நிலை அழிக்கப்பட்டுவிட்டது; ஈராக்கிய சமூகம் தகர்க்கப்பட்டுவிட்டது. 700,000 ஈராக்கியர்கள் போரினாலும் ஆக்கிரமிப்பினாலும் மடிந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; நான்கு மில்லியன் மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 3,500 அமெரிக்க துருப்புக்கள் ஏகாதிபத்திய நலன்களுக்காக காவு கொடுக்கப்பட்டுள்ளனர்.

வாஷிங்டனில் இருக்கும் ஆட்சி அமெரிக்காவிற்குள்ளேயே மிகப் பரந்த போலீஸ் அரசாங்க கருவியை நிறுவியுள்ளது. ஆட்கொணர்வு உரிமை போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிக்கப்பட்டுவிட்டன; ஆனால் போர் முயற்சிகள் தளராமல் நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்திற்கு முன்புதான் ஜனநாயகக் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் அமெரிக்க தேசிய சட்ட மன்றம், போரைத் தொடர்வதற்கு இன்னும் 100 பில்லியன் டாலர்கள் பணத்தை அளிக்க வாக்களித்தது.

G8 உச்சிமாநாட்டில் பங்கு பெறும் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கா இப்போரை இழக்க அனுமதிக்கக்கூடாது என்பதில் உடன்பாடு கொண்டுள்ளனர். வாஷிங்டனுடன் எத்தகைய தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் அமெரிக்காவிற்கு இராணுவத் தோல்வி என்பது தங்களுடைய ஏகாதிபத்திய நலன்களுக்கும் ஒரு பேரிடி என்றுதான் கருதுகின்றனர். எனவே தங்களுடைய படைகளையும் மத்திய கிழக்கிற்கும் உலகின் ஏனைய மூலோபாய பகுதிகளுக்கும் அனுப்பும் வகையில் இதை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

ஜேர்மன் பசுமைக் கட்சித் தலைவரும் முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஜோஷ்கா பிஷர், பேர்லின் Humboldt பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், "உலகில் ஐரோப்பாவின் முக்கியத்துவம் அதிர்ச்சி அடையும் வகையில் குறைந்துள்ளது" என்பது பற்றி குறைகூறி, ஐரோப்பாவின் "மத்திய கிழக்கில் உள்ள புவி சார் அரசியல் அண்டை நாடுகள்" பற்றி குறிப்பிடத்தக்க வலியுறுத்தல் வைத்து, வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு நலன்களின்பால் இன்னும் உறுதியான அணுகுமுறை வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். ஆப்கான் பகுதியான குண்டுசில் துன்பியலான வகையில் மூன்று ஜேர்மனிய துருப்புக்கள் உயிரிழந்தது ஜேர்மனிய அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்தால் இன்னும் கூடுதலான இராணுவ நடவடிக்கைகள், கூடுதலான இறப்புக்களுக்கு மக்களை தயார் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இத்தாலிய அரசாங்கத்தின் தலைவரான ரோமனோ பிரோடி, பரந்த மக்கள் எதிர்ப்பிற்கு இடையே இத்தாலிய இராணுவம் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கும் லெபனானுக்கும் அனுப்பப்படுவதற்கு, இராஜிநாமா செய்துவிடுவதாக அச்சுறுத்தும் அளவுக்கு சென்றதுடன், அமெரிக்க இராணுவத் தளம் Vicenza வில் விரிவுபடுத்தப்படுவதற்கும் வழிவகுத்தார்.

பிரான்சில் புதிய ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி உலகம் முழுவதும் இராணுவமுறையில் தலையிடுவதற்கு நாட்டின் திறனை அதிகரிக்கும்பொருட்டு, ஒரு இரண்டாம் விமானந்தாங்கிக் கப்பலை கட்டுவதற்கு விரும்புகிறார்.

இராணுவவாத எழுச்சியானது, தங்களின் கொள்ளையடித்த பொருளுக்கு பங்கிடுவது போல் தங்களுடைய சொந்த செல்வாக்கு மண்டலங்கள் மற்றும் ஏகாதிபத்திய நலன்களுக்காக சண்டை போடும் பெரும் ஆற்றல் உடைய நாடுகளுக்கிடையில் வளர்ந்துவரும் பதட்டங்களுடன் கைகோர்த்துச்செல்கின்றது. இது பல ஆண்டுகளுக்கு பின்னர் வெளிப்படையான உடன்பாடின்மையில் முடியக்கூடிய உச்சிமாநாடாக இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

அமெரிக்காவின் திட்டமிட்ட ஏவுகணை-எதிர்ப்புப் பாதுகாப்பு முறையினால் தான் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக ரஷ்யா தன்னைக் காண்கிறது. உச்சிமாநாட்டிற்கு சற்றே முன்னதாக அது ஒரு புதிய கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் ஏவுகணையை சோதனைக்கு உட்படுத்திய வகையில் இதை நிரூபித்தது.

உச்சிமாநாட்டின் விருந்தோம்புனரான ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் சுற்றுச் சூழல் கொள்கையை பயன்படுத்தி அமெரிக்கா மீது அழுத்தம் கொடுக்க முயன்றுள்ளார்; தன் பங்கிற்கு அமெரிக்கா சர்வதேச சுற்றுச் சூழல் இலக்குகளுக்கு எவ்வித உறுதிமொழியும் அளிக்கத் தயாராக இல்லை.

பழமைவாத ஜேர்மனிய அதிபர் சுற்றுச் சூழல் பற்றிய தன்னுடைய நேசத்தை திடீரென்று உணர்ந்தார் என்று நம்புவது வெகுளித்தனத்தின் உச்சக் கட்டமாகிவிடும். உச்சிமாநாட்டின் இலக்கு -- உலக வெப்ப நிலையை இரு டிகிரி வரம்பிற்குள் மிகாமல் வைத்திருத்தல் என்பது -- ஒருவரும் கடப்பாடு கொள்ளவில்லை என்பதோடு, இருக்கும் சுற்றுசூழல் பேரழிவை பார்க்கும்போது இது முற்றிலும் போதுமானதாக இல்லை.

ஆனால், சுற்றுச் சூழல் பிரச்சினை சீனா, இந்தியா போன்ற தொழில்மயமாகி வரும் நாடுகளுடன் இணைந்து ஒத்துழைப்பது, அமெரிக்காவை விட நலன்களைப் பெறுவதற்கு தேர்ந்த முறையில் உகந்ததாகும். சீனாவும், இந்தியாவும் பசுமை இல்ல வாயுக்கள் குறைப்பு என்பதில் அமெரிக்கா அவ்வாறு செய்யாத வகையில் தாங்கள் ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்பதை நிராகரித்துவிட்டன. இக்கொள்கையை தொடர்கையில், மேர்க்கெல் பசுமைவாதிகளின் முழு ஆதரவையும் நம்பியிருக்க வேண்டியதாக உள்ளது.

ஹைலிகென்டாம் உச்சி மாநாட்டில் பங்கு பெறும் நாடுகள் ஒரு விஷயத்தில் முழு ஐக்கியத்துடன் உள்ளனர். அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் அவர்கள் பெற்றுள்ள கடந்த கால சமூக தேட்டங்கள் ஆகியவற்றின் மீதான தாக்குதல் தொடர்ந்து குறைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்பதில் உடன்படுகின்றனர்.

பிரான்சில் வலதுசாரி கோலிச சார்க்கோசியின் தேர்தல் வெற்றியானது ஐரோப்பாவில் இருக்கும் பல அரசியல் உயரடுக்கினரால் கண்டம் முழுவதும் "அமெரிக்க நிலைமைகள்" அறிமுகப்படுத்துவதுடன் இறுதியாய் முன்னெடுத்து செல்வதற்கான சமிக்கை என்று பார்க்கப்படுகிறது. இக் கோடை காலத்தில் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை குறைத்தல், இளம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குதல் பற்றி கடுமையான சட்டங்களை கொண்டுவருவதில் தீவிரமாக உள்ளார். இவருடைய பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் "மின்சார அதிர்ச்சி" என்ற சொற்றொடரை பிரெஞ்சு அரசாங்கத்தின் திட்டங்களை விவரிப்பதற்கு பயன்படுத்தியுள்ளார்.

சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் இடது கட்சியின் வலதுசாரி அரசியலுக்கு எதிராக

போர், அடக்குமுறை, சமூக நலன்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றிற்கு எதிரான எந்த தீவிர எதிர்ப்பும் இத்தீமைகள் அனைத்தும் முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியில் இருந்து பிரிக்க முடியாதபடி தொடர்புகொண்டுள்ளன என்ற உண்மையிலிருந்து கட்டாயம் தொடங்கப்பட வேண்டும். சமூக வாழ்வின் அனைத்துக் கூறுபாடுகளும் முதலாளித்துவ சந்தை முறையின் ஆணைகளுக்கு தாழ்த்தி நிறுத்தப்பட வேண்டும் என்பது ஆழமானவகையில் காலத்திற்கு ஒவ்வாத தன்மை பெற்று, மனித சமூகத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்துகிறது.

கணினி தொழில்நுட்பம், தொடர்புகள், போக்குவரத்து ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான வளர்ச்சிகள் உலகம் முழுவதிலும் இருக்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை இடைத்தொடர்பு கொள்ளச்செய்து, உற்பத்தித் திறன் மற்றும் விஞ்ஞான முன்னேற்றம் ஆகியவற்றில் மாபெரும் ஆதாயங்களை ஏற்படுத்தியுள்ளது; இது மனித குலத்தின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு அடிப்படையை கொடுக்கும். ஆனால் முதலாளித்துவ இலாபமுறையின் கட்டமைப்பிற்குள், பூகோளமயமாக்கல் முறை என்பது எதிரிடையான விளைவுகளைத்தான் தோற்றுவித்துள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது ஊதியங்களை குறைப்பதற்கும், வேலைகளை அழிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது; அதே நேரத்தில் ஒரு மிகச் சிறிய உயரடுக்கு இன்னும் கூடுதலான முறையில் சொந்த செல்வக் கொழிப்பை காண்கிறது.

இந்த நிலை தவறாக இயக்கப்படும் கொள்கையின் விளைவுதான் என்று எவர் கூறினாலும், இது மக்கள் அழுத்தத்தின் மூலம் சரி செய்யப்பட்டுவிடலாம் என்று கூறினாலும், அவர்கள் தம்மையே ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள் அல்லது நனவுடன் மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் பொருள்.

முதலாளித்துவ சொத்துரிமை உறவுகளை பாதுகாக்க விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும், பெயரளவிற்கு இடதோ அல்லது வலதோ, பெரு வணிகத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தங்களை அரசாங்க அதிகாரத்தை பெற்றவுடன் மாற்றிக் கொண்டுவிடுகின்றன. இதுதாமே இராணுவவாதம் மற்றும் பொதுநலச் செலவுக் குறைப்புக்கள் இந்த அல்லது அந்த அரசியல் வாதியின் அகநிலை விருப்பத்தின் விளைவு அல்ல என்பதை விளக்கிக் காட்டுவதுடன், இன்னும் சொல்லப் போனால் இது ஒட்டு மொத்த முதலாளித்துவ அமைப்பின் விளைபொருள் என்பதையே காட்டுகிறது.

ஜேர்மனியில், முன்னாள் ஆளும் கூட்டணியாக இருந்த சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பசுமைக் கட்சி இரண்டும் மிகப் பெரிய அளவில் சமூக நலன்கள் மீதான பரந்த தாக்குதலை சமீப காலத்திய வரலாற்றில் நிகழ்த்தின; அதே நேரத்தில் ஜேர்மனிய இராணுவத்தை ஒரு தற்காப்பு படை என்பதில் இருந்து தாக்குதல் நடத்தும், தலையிடும் படையாகவும் மாற்றின. பிரோடியின் தலைமையிலுள்ள இத்தாலி அரசாங்கம் இதே போன்ற போக்கைத்தான் கொண்டுள்ளது; இதற்கு இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பின்தோன்றல் இயக்கங்களின் தீவிர ஆதரவு உள்ளது.

ஜேர்மனிய இடது கட்சி இதே போக்கைத்தான் பின்பற்றி வருகிறது. தேசிய அளவில் அது எதிர்முனையில் இருப்பதாக காட்டிக் கொள்ள முற்பட்டு, G8 உச்சி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு ஆதரவைக் கொடுக்கிறது.

ஆனால் பேர்லினில், SPD உடன் அதிகாரத்தில் பங்கு கொண்டுள்ள நிலையில், இதுதான் வேறு எந்த ஜேர்மனிய மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத அளவிற்கு பொது பணிகள் செலவினங்களை குறைப்பதற்கு பொறுப்பாக உள்ளது. உச்சி மாநாடு நடைபெறும் Mecklenburg-Western Pomerania மாநிலத்தின் எதிர்ப்பாளர்களை அடக்குவதற்கு இப்பொழுது செயல்படுத்தப்படும் கடுமையான சட்டங்களும் இடது கட்சி SPD கூட்டணியினால்தான் இயற்றப்பட்டன.

இடது கட்சி இப்பொழுது G8 உச்சிமாநாட்டிற்கான எதிர்ப்பை, எதிர்ப்பு அரசியல் வரம்பிற்குள் மட்டுப்படுத்துவதற்கு முனைகிறது. அறநெறி அழுத்தம், பகுத்தறிவிற்கு முறையீடு ஆகியவை ஆளும் உயரடுக்கின் போக்கை மாற்றச் செய்யும் என்ற போலித் தோற்றத்தை இது பரப்புகிறது. இதையொட்டி அது சமூக எதிர்ப்பிற்கு ஒரு பாதுகாப்பான வடிகால் கொடுக்கிறது; அதே நேரத்தில் முதலாளித்துவ ஆட்சிக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக் கொள்ளுகிறது. இடது கட்சி இப்பொழுது முதலாளித்துவ சொந்து உரிமை உறவுகளை தளமாக கொண்டிருப்பதை எதிர்க்கும் உண்மையான சோசலிச முன்னோக்கிற்கு கடுமையான எதிர்ப்பை காட்டுகிறது.

இடது கட்சியானது, தங்களிடத்தில் இல்லாத முன்னோக்கிற்கு தூண்டுதல் மற்றும் சில நேரங்களில் வன்முறையான எதிர்ப்பு இவற்றால் ஈடுசெய்யக் கூடிய சுய செயல்பாடு உடைய மற்றும் அராஜகவாதக் குழுக்களால் குறை நிரப்புதல் செய்யப்படுகின்றது. இத்தகைய உத்திகளும் ஆளும் வர்க்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தைத்தான் கொண்டவை. இக்குழுக்கள் ஒரு சோசலிச முன்னோக்கில் சிறிதும் ஈடுபாடு அற்றவை; தொழிலாள வர்க்கத்திற்குள் அத்தகைய திட்டத்தை பரப்பும் போராட்டத்திலும் ஈடுபாடு அற்றவை.

அதே நேரத்தில், ஜேர்மனிய அதிகாரிகள் இக்குழுக்களை, இருக்கும் சமூக நிலைமைக்கு எதிர்ப்புக் காட்டும் எந்த அமைப்பையும் "குற்றம் சார்ந்த" அல்லது "பயங்கரவாத" என்ற முத்திரையிடுவதற்கு பயன்படுத்துகின்றனர். போலீஸ் முகவர்கள் பலமுறையிலும் நேரடியாக ஆத்திரமூட்டல்களில் தொடர்பு பெற்றுள்ளனர். இத்தகைய அராஜகவாத குழுக்களின் சிறுபிள்ளைத்தனமான செயல்களுடன் ஒரு புரட்சிகர சோசலிச மூலோபாயம் எவ்வித பொதுத்தன்மையையும் கொண்டிருக்கவில்லை.

ஒரு சோசலிச மூலோபாயத்தின் மையத்தில் இருப்பது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கம் கட்டமைக்கப்படுதல் என்பதாகும்; இது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பை சோசலிச சமூகத்திற்கான போராட்டத்துடன் இணைக்கும்; அந்நிலையில் மனிதத்தேவைதான் பெருவணிக இலாப நோக்கின் நலன்களைவிட முன்னுரிமை பெற்று நிற்கும். அத்தகைய இயக்கமானது, முதலாளித்துவ ஒழுங்கை பாதுகாக்க இருக்கும் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தும் பழைய சீர்திருத்தவாத அமைப்புக்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக கட்டாயம் இருக்க வேண்டும்.

இத்தகைய முன்னோக்கு சோவியத் ஒன்றியம் மற்றும் முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் தோல்வியுற்றது என்று சோசலிச வேலைத் திட்டத்திற்கு அடிக்கடி ஆட்சேபனைகள் எழுப்பப்படுகின்றன. அத்தகைய வாதம் இருபதாம் நூற்றாண்டின் வரலாறு பற்றி போதிய அளவு தெரியாமை அல்லது அந்த வரலாறு திரிக்கப்பட்டமை மற்றும் தவறாக கூறப்பட்டதை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

1917 அக்டோபர் புரட்சிக்கு பின்னர் நிறுவப்பட்ட சொத்துடமை வடிவைமைப்புக்கள் மகத்தான சமூக முன்னேறத்திற்கு ஓர் ஊக்கத்தை அளித்தன. உலகில் மிகப் பின்தங்கிய நாடு ஒன்று ஒரு குறுகிய காலத்தில் சக்தி வாய்ந்த தொழிற்துறை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றப்பட்டது.

ஆனால் சோவியத் ஒன்றியம் ஆழ்ந்த முரண்பாடு ஒன்றினால் பெரும்பாதிப்பிற்கு உட்பட்டது. சர்வதேச அளவில் அது தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டது, மற்றும் கடந்த காலத்தில் இருந்து அது பெற்றிருந்த பின்தங்கியதன்மை ஸ்ராலினின் தலைமையின்கீழ் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பறித்துக் கொண்டு, உண்மையான சோசலிச மற்றும் சர்வதேசிய கூறுபாடுகள் அனைத்தையும் நாட்டில் இருந்து தொடர்ச்சியான படுகொலைகள் மூலம் 1930 களில் அழித்த ஒரு ஒட்டுண்ணி அதிகாரத்துவமுறையின் வடிவமைப்பில் தன்னுடைய பழியை தீர்த்துக் கொண்டது. ஒரு இறுதிக் காட்டிக் கொடுப்பில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வாரிசுகள் 1990 களில் மீண்டும் முதலாளித்துவ அமைப்பை அறிமுகப்படுத்தப்படுவதை ஒழுங்கு செய்தனர்.

இந்த ஸ்ராலினிச அடக்குமுறையின் விளைவாக, தொழிலாள வர்க்கம் அக்டோபர் புரட்சியின் நலன்களை காக்க முடியாமற் போயிற்று. இதன் விளைவுகள் கொடூரமானவையாயின. முதலாளித்துவமுறை மீண்டும் அறிமுகப்படுத்தியதில் இருந்து, முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் பெரும்பாலான மக்கள் ஒரு அமைதியான காலத்தில் ஒத்திராத அளவிற்கு பொருளாதார மற்றும் கலாச்சார சரிவை அனுபவித்துள்ளனர்.

சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியானது, சோசலிசம் ஒரு சர்வதேச அளவில்தான் ஸ்தாபிக்கப்பட முடியும் என்ற மார்க்சிச நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இதற்கு அனைத்து நாடுகளையும் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தினரின் அரசியல் ஐக்கியம் மற்றும் ஒத்துழைப்பு ஒரு முன்நிபந்தனையாக இருக்க வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மனிய பிரிவாக சோசலிச சமத்துவக் கட்சி ஒரு சர்வதேச, சோசலிச வெகுஜனக் கட்சியை கட்டமைத்து வருகிறது. உலக சோசலிச வலைத் தளம் (www.wsws.org) அன்றாடம் அனைத்து முக்கிய சர்வதேச நிகழ்வுகள் பற்றியும் அவற்றைப் பற்றிய பகுப்பாய்வையும் 12 மொழிகளில் அளிப்பதுடன் மிக முக்கியமான அரசியல் நோக்குநிலையையும் கொடுக்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, தன்னுடைய சர்வதேச மாணவர் கூட்டமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பை (ISSE) நிறுவியுள்ளது.

G 8 உச்சி மாநாட்டில் பங்கு பெறுபவர்கள் அனைவரையும் ஒவ்வொரு நாளும் உலக சோசலிச வலைத் தளத்தின் இன் பகுப்பாய்வை படிக்குமாறு அழைப்பு விடுகிறோம். எங்களுடைய ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொண்டு SEP மற்றும் ISSE ஆகியவற்றை கட்டமைப்பதற்கு உதவுங்கள்.