World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Forty years on: The bitter legacy of the 1967 Middle East war

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக: 1967 மத்திய கிழக்கு போரின் கசப்பான மரபுவழி தொடர்கிறது

By Jean Shaoul
18 June 2007

Use this version to print | Send this link by email | Email the author

இஸ்ரேலுக்கும் அதன் அரேபிய அண்டை நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற 1967ம் ஆண்டு போர் நீண்டகாலமாக அரேபிய ஆட்சிகளுக்கும், குறிப்பாக பாலஸ்தீன மக்களுக்கும் பேரிடர் என்று ஏற்கப்பட்டுள்ளது; பாலஸ்தீனிய மக்கள் பலரும் தப்பி ஓட நேர்ந்தது அல்லது இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் (IDF) விரட்டி வெளியேற்றப்பட்டனர். அங்கு தங்கிவிட்டவர்கள் நான்கு தசாப்தங்களாக இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் எப்பொழுதும் மோசமாகிக் கொண்டிருக்கும் வறுமை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் எண்ணிக்கையில் அதிகமான படைகளுக்கு எதிரான ஒரு பெரிய இராணுவ வெற்றி இஸ்ரேலுக்கு ஒரு அரசியல் மற்றும் சமூக அழிவைத் தரக்கூடிய வழிவகையை தோற்றுவித்துள்ளது என்பது சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. பாலஸ்தீனிய எல்லைப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது பாலஸ்தீனிய மக்களுடன் முடிவிலா பூசல்கள் மற்றும் அழிவுதரக்கூடிய பொருளாதார, சமூக, அறநெறிச் செலவினங்கள் என்று அத்துடன் தொடர்புடையவையையும் குறித்துள்ளது.

இஸ்ரேல் நிறுவப்படுதல்

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து 1947ல் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட ஐ.நாவில். வாக்களிக்கப்பட்டதை அடுத்து இஸ்ரேல் நிறுவப்பட்டது; இருநாடுகளுமே யூத அரசின் உருவாக்கத்தை மத்திய கிழக்கில் பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றின் இழப்பில் தங்களுடைய சொந்த அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு வழியாகக் கண்டன.

உண்மையை மறைத்துக் காட்டுவதற்கான யூதர்களுக்கான தாயகம் பாலஸ்தீனிய பூர்வீகக் குடிமக்களை சொத்துக்களை பறிமுதல் செய்தும் பலவந்தமாக வெளியேற்றல் மற்றும் மத அடிப்படையில் ஒதுக்கி வைத்தலின் அடிப்படையில் அடையப்பட்டது. இருந்தபோதிலும், இஸ்ரேல் அரசின் உருவாக்கம் வரலாற்றின் கொடுமையான குற்றங்களுள் ஒன்றான நாஜி இன ஒழிப்பினால் - 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் அழிக்கப்பட்டது - உலகெங்கிலும் இருந்த மில்லியன் கணக்கான மக்களால் பரிவு உணர்வுனும் சட்டரீதியான ஆதரவுடனும் காணப்பட்டது. இஸ்ரேலின் ஆட்சியாளர்கள் இஸ்ரேல் "நாடற்ற மக்களுக்கான மக்களில்லாத ஒரு நாடாக" ஆக இருந்தது என்ற கூற்றின் பின்னணியில், பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான தங்களுடைய சொந்த குற்றங்களை இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் மறைத்தனர்.

இஸ்ரேலின் ஆதிக் குடிமக்களில் பலர் ஐரோப்பாவில் இடதுசாரி இயக்கங்களில் இருந்த யூதர்கள் ஆவர்; அவர்களுள் பல இசைக் கலைஞர்கள், விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்கள் இருந்தனர். நாட்டின் குழுசமூகம் (kibbutzim) ஒரு புதிய சமூக ஒழுங்கிற்கான விழைவு என்பதற்கு உதாரணமாயிற்று. ஆளும் தொழிற்கட்சி அரசாங்கம் இதைப் பயன்படுத்திக் கொண்டு, இஸ்ரேல் சமூக நீதியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு சிறிய தைரியமான அரசு, சுற்றியிருக்கும் ஏராளமான சர்வாதிகளார நாடுகளுக்கு இடையே ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சிமுறை இவற்றிற்கு கலங்கரை விளக்காக மத்திய கிழக்கில் அமைந்துள்ளது என்ற கருத்தைப் பிரச்சாரம் செய்தனர்.

இம் முற்போக்கு பகட்டிற்கு கீழ் இஸ்ரேலானது அடுத்த 19 ஆண்டுகள் அதன் அண்டை நாடுகளுக்கு எதிரான ஆத்திரமூட்டல்கள், இராணுவத் தாக்குதல்கள் ஆகியவற்றின் மூலம் தக்க வைக்கப்பட்டது; இதில் எகிப்திற்கு எதிராக நடந்த முழு அளவிலான 1956ம் ஆண்டு போரும் அடங்கும். அரசு தோற்றுவிக்கப்பட்ட பின் அங்கு இருந்த பாலஸ்தீனியர்கள் 1966 வரை இராணுவச் சட்டத்தின்கீழ் இருந்தனர், அதேவேளை யூதர்கள் மற்றும் பாலஸ்தீனிய குடிமக்களுக்கு இடையே சமத்துவமின்மை புனிதமாய் போற்றிப் பேணப்பட்டது.

1967ம் ஆண்டு போர் இஸ்ரேலிய அரசின் விரிவாக்க தன்மையை அம்பலப்படுத்தி சியோனிசத்தின் சாரம்ச பிற்போக்குத்தனத்தை முன்னுக்கு கொண்டுவந்தது.

1967: கட்டுக் கதைகளும் யதார்த்தமும்

இப்போர் பொதுவாக அரேபிய கோலியாத்திற்கு எதிராக ஒரு இஸ்ரேலிய தாவீதின் வெற்றி என்று முன்வைக்கப்பட்டது. இஸ்ரேலிய பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட் சமீபத்தில் Guardian ல் எழுதுகையில், 1967-ஐ "(இஸ்ரேலை) தக்க வைத்துக் கொள்ளுவதற்காக நிகழ்ந்த தேவையற்ற போர்" என்று விவரித்தார்.

ஆனால் லிகுட் கட்சியின் தலைவராக பின்னர் வந்த முன்னாள் பயங்கரவாதியான மெனாச்செம் பெகின் (Menachem Begin) ஒப்புக் கொண்டார்: "ஜூன் 1967ல் எங்களுக்கு விருப்பத்தேர்வு இருந்தது. சினாய் வழிகளில் எகிப்திய இராணுவக் குவிப்புக்கள் நாசர் (எகிப்திய ஜனாதிபதி) உண்மையில் எங்களைத் தாக்குவதாக இருந்தார் என்பதை நிரூபிக்கவில்லை. நாம் எமக்கு நேர்மையாக இருக்க வேண்டும். அவரை தாக்க நாம் முடிவு செய்தோம்"

உண்மையில் இஸ்ரேலியர்கள் இராணுவத் தயாரிப்பை கொண்டிருந்து அதன் அண்டை நாடுகளுக்கு எதிராக ஆத்திரமூட்டல்களை தொடுத்தனர்; இதையொட்டி வரும் விளைவின் மூலம் எல்லைகளை விரிவுபடுத்துதலை நியாயப்படுத்த முடியும் என்பது அவர்கள் கருத்தாகும்.

எண்ணிக்கையில் உயர்ந்தும், விரோதப் போக்கும் உடைய அண்டை நாடுகளால் சூழப்பட்ட இஸ்ரேல் "பாதுகாக்கப்படக்கூடிய எல்லைகளை" கொள்ள வேண்டும் என்றும் அது முதலில் தாக்கினால் ஒழிய எப்போரிலும் தப்பிக்க முடியாது என்றும் தொழிற்கட்சித் தலைவர்கள் முன்னரே முடிவு செய்திருந்தனர். அப்பொழுது சியோனிச இயக்கத்திற்குள் சிறுபான்மையில் இருந்த திருத்தல்வாதப் போக்கினர், ஜோர்டான் மற்றும் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பாலஸ்தீனம் முழுவதையும் கைப்பற்றி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எப்பொழுதும் ஆதரித்து வந்திருந்தனர். 1923 லேயே அது சியோனிசம் என்பது "ஒரு குடியேற்ற வகைத் தீரச்செயல்; எனவே இராணுவ வலிமையை ஒட்டித்தான் அது நிலைக்கும் அல்லது சரியும்." என்று அது வலியுறுத்தியிருந்தது. மற்ற வலதுசாரிக் கூறுபாடுகள் ஜோர்டான் நதி இஸ்ரேலின் கிழக்கு எல்லையாக இருக்க வேண்டும் என்று வாதிட்டிருந்தனர்.

இத்தகைய விரிவாக்கக் கொள்கைக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்ப்பு இரண்டையும் எதிர்கொண்ட நிலையில், அதைச் செயல்படுத்துவதற்கு தக்க போலிக்காரணம் தேவைப்பட்டது. 1967ல் எகிப்திய ஜனாதிபதி கேர்னல் கமால் அப்துல் நாசர் அதை அளித்தார்.

ஜுன் மாதம் வெடித்த போர் ஆறு நாட்கள்தான் நடைபெற்றது; ஆனால் இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையே, இரு நாடுகளுக்கும் இடையிலான எவருக்கும் இல்லாத இராணுவமற்ற மனித நடமாட்டமற்ற பகுதியில் கால்நடை மேய்ச்சல் உரிமைகள் பற்றி பல ஆண்டுகள் பூசல் பெருவந்திருந்தது; மேலும் சிரியாவும் ஜோர்டானும் பலமுறை பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல்களை நடத்தின. இஸ்ரேலை பொறுத்தவரையில், இந்த நிலம் சிரியா கட்டுப்பாட்டில் கொள்ள அனுமதிக்கும் ஜோர்தான் ஆற்றின் ஆதார வளங்களுள் ஒன்றிற்கு வெகு அருகில் இருந்தது. ஏப்ரல் 1967ல் நடைபெற்ற குறிப்பாக ஆத்திரமூட்டலை தூண்டும் வான் சண்டை ஒன்றில் இஸ்ரேல் ஒரு சில நிமிஷங்களுக்குள் ஆறு சிரிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது.

எகிப்திய முடியாட்சியை அவர் அகற்றியதாலும், சூயஸ் கால்வாயில் இருந்து பிரிட்டிஷாரை வெளியேற்றல், ஒரு பரந்த அரபு தேசியவாதத்தை அவர் ஆதரித்தல் இவற்றின் காரணமாக சிரியர்களும் பாலஸ்தீனிய தலைமையும் நாசரிடம் பல ஆண்டுகள் ஆதரவுகோரி முறையிட்டனர். ஐ.நா. காசாப் பகுதியில் இருந்து தன்னுடைய படைகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று நாசர் மே 16 அன்று உத்தரவு இட்டார்; இதை எகிப்து பின்னர் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டது; 1956ல் சூயஸ் நெருக்கடிக் காலத்தில் இருந்து டிரான் நீரிணையை காத்த Shasrm el Sheikh ஐயும் எகிப்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டது; அதுதான் இந்தியப் பெருங்கடலுக்கு செங்கடலில் இருந்து செல்லும் வழியாகும்.

அதன்பின், நீரிணையை இஸ்ரேலிய கப்பல்களுக்கு மூடிவிட்டதாக அவர் அறிவித்தார். ஆனால் அவருடைய கருவூலம் காலியான நிலையில், யேமன் உள்நாட்டுப்போரில் அவருடைய சிறப்புப் படைகள் பின்தங்கியிருந்த நிலையில், நாசர் இஸ்ரேலுடனும் ஒரு போரை விரும்பவில்லை. இதை இஸ்ரேலியர்களும் அறிந்திருந்தனர். அப்பொழுது பருந்து என்று புகழ் பெற்றிருந்த படைகளின் தலைவர் Yitzhak Rabin பின்னர் அதை ஒப்புக் கொண்டார்.

போருக்கு முந்தைய வாரங்களில் அழுத்தம் பெருகிய அளவில், செங்கடலுக்கு ஒரே வழியாக இருந்த Eilat துறைமுகம் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டதை ஒரு போர்ச் செயல் என்று டெல் அவிவ் கண்டித்து, இஸ்ரேல் நிலைத்திருப்பதற்கு இது ஒரு அச்சுறுத்தல் என்றும் கூறியது. தொழிற்கட்சி அரசாங்கம் தளபதி மோஷே தயான் என்னும் முக்கிய பருந்தை பாதுகாப்பு மந்திரியாக கொண்டுவந்தது; மெனாச்செம் பெகின் மந்திரியானார்; இருவரும் விரிவாக்கக் கொள்கை பற்றி வெளிப்படையாக ஆதரித்துப் பேசுபவர்கள் ஆவர்.

சோவியத் ஒன்றியம் மற்றும் பிரிட்டனின் முன்னாள் கன்சர்வேட்டிவ் துணை வெளியுறவு மந்திரி ஆன்டனி நட்டிங் இருவரும் இஸ்ரேல் எகிப்தை தாக்கக்கூடும் என்று நாசரை எச்சரித்தனர்; அவருடைய இராணுவத் தலைவர்களும் சிரியாவும் முதல் தாக்குதலை தொடங்க வேண்டும் என்றும் வாதிட்டனர். இதை நாசர் ஏற்க மறுத்தார்; 1956 சூயஸ் நெருக்கடியின் போது நடந்து கொண்டதுபோல் அமெரிக்கா இஸ்ரேலை ஒரு போரைத் தொடக்க அனுமதிக்காது என்று அவர் நம்பி போர்த் தயாரிப்புக்கள் எதையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால் 1956ல் வாஷிங்டனின் தலையீடு மத்திய கிழக்கில் பிரிட்டன், பிரான்சின் பிடியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்று இருந்தது. இப்பொழுதோ அமெரிக்கா பெருகிய முறையில் அரேபிய மக்களின் தீவிரம் மற்றும் மாஸ்கோவின் பெருகிய நலன்கள் மற்றும் எகிப்து சோவியத் ஒன்றியத்தின் பால் வளர்ச்சிக் கடன்கள், இராணுவ உதவி ஆகியவற்றிற்கு நின்றது உள்ளடங்கலான மத்திய கிழக்கில், அதன் செல்வாக்கையும் எதிர்கொண்டது. இதைத்தவிர, வாஷிங்டனுடைய நட்பு நாடான செளதி அரேபியாவிற்கு எதிராக எகிப்து யேமனில் போரிட்டும் வந்தது.

எனவே ஜூன் 5ம் தேதி வாஷிங்டனுடைய ஆதரவுடன், இஸ்ரேல் வாய்ப்பை பயன்படுத்தி முதல் தாக்குதலை நடத்தி கிட்டத்தட்ட முழு எகிப்திய விமானப்படையையும் தகர்த்து அழித்தது. இஸ்ரேலிய அரசியல்வாதி சிமோன் பெரஸ், "10 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டிருந்த நடவடிக்கையை நிறைவேற்ற 80 நிமிஷங்கள்தான் பிடித்தன" என்று கூறினார்.

அரேபிய இராணுவங்கள் அடித்து விரட்டப்பட்டு, இஸ்ரேல் தன்னுடைய நிலப்பகுதிகள் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து முன்பு பிரிட்டிஷாருக்கு உட்பட்டிருந்த பாலஸ்தீனம், சிரியாவின் ஒரு பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றி, மத்திய கிழக்கில் இஸ்ரேலின் நிலைப்பாடு ஒரு பெரிய இராணுவ சக்தி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

1967 க்குப் பின்

இஸ்ரேலிய துருப்புக்களிடம் இருந்து தப்பியோடிய புதுத் தலைமுறை அகதிகளை போர் தோற்றுவித்தது. 1981ல் எகிப்துடன் நடந்த சமாதான உடன்படிக்கைக்கு பின்னர் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்ட சினாய், மற்றும் சிரியாவால் மீண்டும் 1973ல் கைப்பற்றப்பட்ட Quneitra இரண்டையும் தவிர, இன்றும் இஸ்ரேல் இப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. போரின் குறிப்பிடப்பட்ட இலக்கை அடைந்த பின்னர், அதாவது டிரான் நீரிணை இஸ்ரேலிய கப்பல்களுக்கு திறந்துவிடப்படும் என்பதை அடைந்த பின்னர், தொழிற்கட்சி அரசாங்கம் மீட்கப்பட்ட நிலங்களை திருப்பி ஒப்படைக்க மறுத்துவிட்டது. மாறாக அது ஜோர்டானிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கிழக்கு ஜெருசலேத்தையும் இணைத்துக் கொண்டது. பாதுகாப்பு மந்திரியான தயான், சிரிய மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதிகளில் இருந்த கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றை அழிக்க உத்தரவிட்டார்.

ஒரு சில மாதங்களுக்குள், இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகள், மற்றும் சிரியாவின் கோலன் குன்று பகுதிகளுள் குடியேறத் தொடங்கியது. வெளியுறவு மந்திரியின் மிக மூத்த சட்ட ஆலோசகரான தியோடர் மெரோன் பிரதம மந்திரிக்கு செப்டம்பர் 18 அன்று இதை எதிர்த்து எழுதுகையில் எச்சரித்தார்: "நிர்வாகம் நடத்தப்படும் பகுதிகளில் குடிமக்கள் குடியேற்றம் நான்காம் ஜெனிவா மரபுகளின் வெளிப்படையான விதிகளை மீறுவதாக உள்ளன என்பது என்னுடைய முடிவு ஆகும்."

சர்வதேச மரபுகளை மீறுகையில், தொழிற்கட்சி அரசாங்கம் வெளிப்படையாக ஒரு இராணுவவாத, காலனித்துவ மூலோபாயத்தை தழுவியது; இதன் பின்னே அனைத்து சியோனிச முக்கிய பிரிவுகளும் ஒன்றுபட்டன. வெற்றி, ஆக்கிரமிப்பு இவற்றின் யதார்த்தங்கள் இஸ்ரேலிய வாழ்க்கையின் அனைத்துக் கூறுபாடுகளையும் பாதிக்கும் ஆழ்ந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தின.

ஜனநாயக பாசாங்குதனத்தை தவிர, தொழிற்கட்சி அரசாங்கம் கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பையும் நிர்வகிக்க வேண்டியிருந்தது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்த பாலஸ்தீனியர்களுக்கு அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டன; ஆக்கிரமிப்புக்கு அதிகரித்த முறையில் பாலஸ்தீனியர்கள் எதிர்ப்புக் காட்டவே அது மிருகத்தனமாயிற்று. வீடுகள் இடிக்கப்பட்டன, உடைமைகள் அழிக்கப்பட்டன, பல பாலஸ்தீனியர்கள் சுடப்பட்டனர், கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன, பாலஸ்தீனியர்கள் காயமுற்றனர்; பலர் எந்த விசாரணையும் இன்றி காவலில் வைக்கப்பட்டனர்.

1967 போர் அரசியல் தலைவர்களின் புதிய தலைமுறை ஒன்றை வெளிக் கொண்டுவந்தது; மோஷே தயான், ஷிமான் பெரெஸ், யிகல் ஆல்லோன், யிட்சாக் ராபின் போன்றோர் இதில் இருந்தனர்; இவர்கள் அனைவரும் இராணுவத்துடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தனர். போர் இவர்களுடைய புகழை குறிப்பாக தயானுடையதை அதிகப்படுத்தியிருந்தது.

1967ல் இருந்து படைகளின் தலைவராக இருந்த ராபினுக்கு 1974ம் ஆண்டு பிரதமர் பதவி கொடுக்கப்பட்டது, பழைய காவலர் முடிவுக்கு வந்ததை குறித்தது. வெற்றிகரமான அரசியல் வாழ்விற்கு மூத்த இராணுவக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்திருக்க வேண்டும் என்பது முன்தேவையாயிற்று.

ஆக்கிரமிப்பு, பின்னர் சூயஸ் கால்வாயில் பிளவினால் ஏற்பட்ட போர், 1973ம் ஆண்டுப் போர், லெபனானில் 1976, 1982 போர்கள், 1987 மற்றும் 2000ல் இன்டிபடாக்களை அடக்குதல் ஆகியவற்றிற்கு பெருகிய முறையில் இஸ்ரேலிய அரசியல் வாழ்வையும் சமுதாயம் ஒட்டுமொத்தத்தையும் இராணுவமயமாக்கல் தேவையாயிற்று. கட்டாய சேவை என்பது இராணுவத்தில் எப்பொழுதும் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் குடிமக்கள் இராணுவ சேவை செய்ய வேண்டும் என்று இருந்தாலும், கட்டாய இராணுவ சேவையும், தயார்நிலை படைப்பிரிவில் கடமையும் நீண்ட கால அளவைக் கொண்டு தவிர்ப்பதற்கு முடியாமலும் போயின. இதன் விளைவு இன்னும் கூடுதலான மிருகத்தனமான முறையில் ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டு அதன் மனிதாபிமானமற்ற பாதிப்பு இஸ்ரேலியர்களிடையே ஏற்பட்டது; தாங்கள் நிலைத்திருப்பதற்கு பாலஸ்தீனியர்கள் அச்சுறுத்தலை கொடுக்கிறார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இன்னும் கூடுதலான முறையில் பெரிய குற்றங்களையும் மனித உரிமைகள் பாதிப்பையும் மேற்கொண்டனர்.

இதுகாறும் இல்லாத அளவிற்கு இஸ்ரேல் மிகப் பெரிய அளவிற்கு ஒரு கோட்டை அரண் கொண்ட நாடு போல் ஆயிற்று. 1967ல் வாஷிங்டன் ஆதரவு கொடுத்து, மத்திய கிழக்கில் இஸ்ரேலிய நிலைமையை ஒரு பெரிய இராணுவ சக்தி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதன் இராணுவப், பொருளாதார உதவியையும் அளித்தது. இன்று ஆண்டு ஒன்றிற்கு 3 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உதவி கிடைக்கிறது. இது சகாரா, துணை ஆபிரிக்க பகுதிகள் அனைத்திற்கும் கொடுக்கப்படும் தொகையை விட ஆறு மடங்கு ஆகும். இந்த உதவி மற்றும் பொருளாதார, அரசியல் ஆதரவு இல்லாவிட்டால், இஸ்ரேல் நீண்ட நாட்களுக்கு முன்பே பொறிந்திருக்கும்.

இதற்கு ஈடாக ஜோர்டானிலும், லெபனானிலும் பாலஸ்தீனியர்களை ஒடுக்க இஸ்ரேல் தலையிட்டது, அரபு தொழிலாள வர்க்கத்தை நசுக்கியது மற்றும் ஆதரவற்ற ஆட்சிகளை பதவியில் வைத்துக் கொண்டது. வாஷிங்டனின் குளிர் யுத்த இலக்குகளுக்கு சேவைசெய்யும் வகையில் சோவியத் ஒன்றியத்தின் நட்பு நாடுகளான எகிப்து, சிரியாவையும் 1973ல் மற்றொரு போரில் தோற்கடித்ததன் மூலம் மாஸ்கோவின் ஸ்ராலினிச ஆட்சியை நெருங்க விடாமல் வைத்தது. தன்னுடைய அணுவாயுதக் கிடங்குகளை வளர்த்துள்ள நிலையில், இது ஈராக்கிற்கு எதிராக நடந்து கொண்டது, பின்னர் மாஸ்கோவுடன் நட்பு கொண்டதால் ஈராக்கின் அணு உலை நிலையத்தின்மீது 1981ல் தாக்குதலை நடத்தியது.

ஈரான்-ஈராக் போரின்போது இஸ்ரேல் ஈரானுக்கு ஆயுதங்களை கொடுத்தது, அமெரிக்கா வெளிப்படையாக ஆதரவு கொடுக்க முடியாத மற்ற ஆட்சிகளுக்கும் ஆதரவைக் கொடுத்தது. கடந்த கோடையில் இது ஹெஸ்போல்லாவிற்கு எதிராக லெபனானில் இருக்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிர்ப்பை அகற்றுவதற்கு கொலைகார போரை நடத்தியது. இவை அனைத்தும் இஸ்ரேலை அதன் அண்டை நாடுகளின் பார்வையில் இன்னும் கொடூரமாக காட்டத்தான் உதவின மற்றும் ஒருகாலத்தில் இஸ்ரேலின் மீது பரிவுணர்வை காட்டிய உலகெங்கிலும் இருக்கும் மில்லியன் கணக்கானவர்களை அதற்கு எதிராகத் திரும்ப வைத்தன.

ஒரு மக்கட்திரள் மற்றும் அரசியல் மாற்றம்.

ஒரு விரோதத் தன்மை நிறைந்த பாலஸ்தீனிய மக்களால் சூழப்பட்டிருந்த இக்குடியேற்றங்கள் பெரும்பாலான இஸ்ரேலியர்களுக்கு ஈர்ப்பை கொடுக்கவில்லை. எனவே புதிய அலையெனும் குடியேறுபவர்கள் ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியேற ஊக்குவிக்கப்பட்டனர். வீடு வாங்க வசதியற்ற இஸ்ரேலியர்கள் இங்கு குடியேற நிதி ஊக்கம் அளித்து கவரப்பட்டனர்.

வலதுசாரி மற்றும் வன்முறை அடுக்கிற்கு இக்குடியேற்றங்கள் காந்தம் போல் ஆயின; அமெரிக்க யூதர் பாதுகாப்புக் குழுவின் தலைவரான Keir Kahane இதன் மொத்த உருவாக விளங்கினார்; அவர் அமெரிக்காவில் இருந்து மத புலம்பெயர்வோரின் புதிய அலையை தேர்ந்தெடுத்து கச் (Kach) எனப்படும் பாசிசக் கட்சியையும் கட்டமைத்தார்.

மதக் குழுக்கள் விரிவாக்கக் கொள்கையை ஒரு வாய்ப்பு என்றும் பைபிளில் கூறப்பட்ட "இஸ்ரேல் முழுநாடு", "யூதேயா மற்றும் சமேரியா" ஆகியவற்றை அடைவதற்கான கடமை என்றும் சித்தரித்தன. ஏரியல் ஷரோனின் கீழ் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த Chuck Freilich, நியூ யோர்க் டைம்சிடம் சமீபத்தில் கூறினார்: "இஸ்ரேல் இங்கு நிரந்தரமாகும் என்பதை 1967 போர் அரேபியர்களுக்கு உறுதிப்படுத்தியது. ஆனால் இது ஒரு புற்றுநோயும்கூட. ஆக்கிரமிப்பு என்பது நீண்ட காலத்தில் ஒரு சமூகத்தை ஊழல்படுத்திவிடும்; போர் இஸ்ரேலிய வாழ்வில் இல்லாத மத வழி உபதேசத் தன்மையையும் கொண்டு வந்தது."

சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்கு பின்னர் ரஷ்ய, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து 1.5 மில்லியனுக்கும் ஆதிகமான வறிய, அரசியலில் நோக்குநிலை தவறிய புலம்பெயர்வோரை கொண்டு வந்து சேர்த்ததால் அதிவலதுசாரிப் போக்கு இன்னும் கூடுதலான வகையில் பெருகியது இவர்கள் இப்பொழுது இஸ்ரேலின் யூத மக்கட்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியாக உள்ளனர்.

"பெரிய இஸ்ரேல்" என்னும் கொள்கை இவ்விதத்தில் ஒரு புதிய சமூக அடுக்கை கொண்டது; அவர்களுக்கு வலதுசாரி தேசியக் கட்சிகளான மெனாச்செம் பெகின் தலைமையிலான லிகுட், தீவிர மதக் கட்சிகள் போன்றவை அரசியல் கருவிகளாயின. அவர்கள் மேற்குக் கரையும் முறையாக இஸ்ரேலால் இணைக்கப்பட வேண்டும் என்று கோரினர். இதேபோன்ற போக்குகள் தொழிற் கட்சிக்குள்ளும், அதன் அரசியல் நட்புக் குழுக்களுக்குள்ளும் வளர்ச்சியுற்றன. குடியேற்ற செயற்திட்டத்தை உருவாக்கி வளர்த்த ஷரோன் தன்னுடைய இலக்கை அதாவது ஒரு பாலஸ்தீன நாடு தோன்றுவது தடுக்கப்பட வேண்டும் என்பதை மறைக்க முயற்சி ஏதும் கொள்ளவில்லை.

இராணுவம் போன்றே, தீவிர தேசிய, மதக் கட்சிகளும் இஸ்ரேலின் சிதைந்த அரசியல் அமைப்புமுறையில் அளவிற்கு மீறிய செல்வாக்கைக் கொண்டன: இதன் விளைவாக அவை கூட்டணி அரசாங்கங்களை ஒன்றாக இணைக்கும் முக்கிய பங்கைக் கொண்டன. தொடர்ச்சியான அரசாங்கங்கள்மீது தங்களுடைய கோரிக்கைகளை அவை திணித்ததுடன், உத்தியோகபூர்வ அரசியலையும் தீவிரமாக வலதிற்கு மாற்றின.

குடியேறுபவர் ஈடுபடும் வன்முறை மற்றும் பாலஸ்தீனியர்களிடம் திருடுதல் ஆகியவை தண்டனைக்கு உட்படுவதில்லை. மத அதிகாரிகளின் சக்தியும், இஸ்ரேலிய மக்கள்மீது மதக் கட்டுப்பாடும் பெருகிவிட்டன; இதையொட்டி மதசார்பற்ற பெரும்பான்மையினருக்கு அழுத்தம் தீவிரமாகியுள்ளது. இவ்விதத்தில் சியோனிச அரசு தன்னுடைய சொந்த மத அடிப்படைவாதத்திற்கு வழிவகுத்துள்ளது; இது ஒன்றும் பல முஸ்லிம் நாடுகளில் காணப்படும் அடிப்படைவாத அமைப்பின் சாராம்சத்தில் இருந்து வேறுபட்டது அல்ல.

தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் அரிப்பு

மத வலது சாரியின் சங்கு முழக்கத்திற்கு மிகவும் உடன்பட்ட அடுக்குகளில் இஸ்ரேலின் மிக வறிய, அடக்கப்பட்ட பிரிவுகளில் கணிசமான எண்ணிக்கையினர் உள்ளனர்.

ஆனால் இஸ்ரேலிய விரிவாக்கத்திற்கான உந்துதல், மற்றும் ஆளும் உயரடுக்கின் இலாபங்களுக்கான உந்துதல், இராணுவச் செலவினங்களுக்கான தேவைகளுடன் இணைந்து முழுத் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில்தான் அடையப்பட முடியும். அரசாங்க நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு விட்டன; சமூக நலன்கள் பெரிதும் குறைக்கப்பட்டுவிட்டன; ஓய்வூதிய வயது அதிகரிக்கப்பட்டு விட்டது; பெருநிறுவன வரிகள், செல்வந்தர்கள் மீதான வரிகள் ஆகியவை குறைக்கப்பட்டுள்ளன; சுகாதாரம், கல்வி, சமுக நலன் திட்டங்கள் அகற்றப்பட்டு விட்டன.

வேலையின்மையானது, உலகிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மிக அதிகமான தலை வீதத்துடன் உயர்ந்துள்ளது. இப்படி பெருமளவில் சுரண்டப்படும் தொழிலாளர்கள்தான் இன்னும் ஊதியங்களை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றனர்.

தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பங்களும் ஆபத்து நிறைந்த வாழ்க்கையைத்தான் எதிர்கொண்டுள்ளனர்; நான்கில் ஒரு பகுதிக்கும் மேலான குடும்பங்கள் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்கின்றன; இவற்றில் பலரும் வேலை பார்த்துவந்தாலும் இந்நிலைமைதான் உள்ளது. வருமானங்களில் சமத்துவமின்மை அதிகரித்த நிலை, மற்றும் வேலை தேடித்தரும் நிறுவனங்களின் வளர்ச்சியினால் ஊதிய அரிப்பு மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள தன்மை, பல ஆயிரக்கணக்கான ஊதியம் சம்பாதிக்கும் குடும்பங்களை வறுமைக் கோட்டின் கீழ் தள்ளிவிட்டன.

1967ல் தலா தனி நபருக்கு $1,500 என்று இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2006ல் $24,000 என்று உயர்ந்து, ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சி அறிக்கையின்படி இஸ்ரேலை 23 வது இடத்தில் இருத்தினாலும், செல்வத்தின் பெரும்பகுதி 6 குடும்பங்களின் கைகளில் மட்டுமே குவிந்துள்ளது; இவை டெல் அவிவ் பங்குச் சந்தையில் வரும் பங்குகளின் மொத்த மதிப்பில் 40 சதவிகிதத்தை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன.

இந்த குடும்பங்கள் 17 பெரிய பொருளாதார வணிகக் கூட்டமைப்புக்களில் 12ஐ கட்டுப்படுத்தி வருகின்றன; இவற்றில் வங்கிகள், நிதிய, செய்தி ஊடகம் ஆகியவை அடங்கும். அவை மகத்தான நிதிய, பொருளாதார, அரசியல் சக்தியை அவற்றிற்கு கொடுத்துள்ளன. வெளி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள், குறிப்பாக அமெரிக்காவில் இருந்து வருபவை, கிட்டத்தட்ட பங்குச் சந்தையில் வரும் அனைத்து எஞ்சிய பங்குகளுக்கும் உரிமையாளர்களாக உள்ளனர்.

ஒரு கையளவு மில்லியனர்கள், பில்லியனர்களுக்கும் பெரும் மக்கட்தொகைக்கும் இடையே இருக்கும் சமூகப் பிளவை தவிர, இஸ்ரேலிய சமுதாயம் ஏராளமான மற்ற பிளவுகளையும் கொண்டுள்ளது -- மத சார்பற்ற மற்றும் மதவாத யூதர்கள், ஐரோப்பிய வழியில் வந்த கூடுதலான வளம் படைத்த யூதர்கள் (Ashkenazi Jews), மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா பகுதிகளில் இருந்து வந்த வறிய குடும்பங்களின் அடுக்குகள் (Sepharid Jews) என்ற வகையில் ஆகும்.

நலன்புரி அரசைத் தகர்த்தது மற்றும் சமூகப் பாதுகாப்பை தகர்த்தது ஒரு ஒருங்கிணைந்த கூடுதலான சமத்துவம் வாய்ந்த சமுதாயத்திற்கு தளம் அமைப்பதை அகற்றிவிட்டது. போருக்குப் பிந்தைய ஐரோப்பிய யூதர்களின் குடியேற்றத்தின் விளைவாக வந்தவர்களின் வழிவந்த மற்றும் தொழிற் கட்சிக்குள்ளும் அதைச்சுற்றியும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள "திமிர்பிடித்த" மதசார்பற்ற உயரடுக்கிற்கு எதிராக மரபுவழி சிறுபான்மையினரை காப்பாற்றுபவர்களாக வலதுசாரிகள் தங்களை காட்டிக்கொள்ள அனுமதித்து, கிழக்கு ஐரோப்பிய புலம்பெயர்ந்தோர் உள்வாங்கப்படுதலை எவ்விதத்திலும் அது தடுத்துள்ளது.

Sephardi யூதர்கள் மற்றும் பிற வறிய அடுக்குகள் அதிகரித்தவகையில் வளர்ச்சியடைந்த நகரங்கள் என்று அழைக்கப்படும் இடங்களில் உள்ளனர்; உண்மையில் இவ்விடங்கள் இஸ்ரேல் தன்னுடைய விரோத அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள எல்லைப்பகுதியில் உள்ள காங்க்ரீட் சேரிகள்தாம்; இவைதான் இஸ்ரேல் மீது பாலஸ்தீனியர்கள் நடத்தும் தாக்குதலின் முழு வேகத்தையும் ஏற்கின்றன. மற்றொரு 16 சதவிகித தொழிலாளர்கள் குடியபெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர் (வேலை அனுமதி வைத்திருப்பர், இல்லாமலும் இருக்கலாம்); இது உலகிலேயே மிக அதிகமான விகிதாசாரம் ஆகும். பாலஸ்தீனிய தொழிலாளர்களை போலவே, இவர்களும் குறைந்தபட்ச ஊதியத்தையும்விட குறைந்த ஊதியத்தை பெறுகின்றனர்; கூடுதல் பணிநேரப் படி, ஆண்டு விடுமுறை போன்றவை இவர்களுக்கு கிடையாது.

யூத இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனத்தில் இருந்து வந்துள்ள 20 சதவிகித இஸ்ரேலியர்களுக்கும் இடையே பிளவு இன்னும் வியக்கத்தக்கது ஆகும். இரண்டாம்தர குடிமக்களாக இருக்கும் இவர்கள், சட்டத்தின் பார்வையில் சமத்துவம் மறுக்கப்பட்டவர்கள், அரேபியர்கள் வரவு-செலவு திட்டம் சார்ந்தவற்றில் பல பாரபட்சங்களை எதிர்கொள்ளுகின்றனர். எந்தப் புதிய அரேபிய நகரும் கட்டப்படவில்லை; பழைய நகரங்கள் சிதைந்துவிட அனுமதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி போன்றவை கிடையாது; இருமடங்கு வேலையின்மை மற்றும் வறுமையைத்தான் இவர்கள் எதிர்கொள்ள வேண்டும். அவர்களுடைய குடும்ப நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் இருப்பதற்கான உரிமையை மறுக்கும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்படுகின்றன.

இவை அனைத்தும் உலகிலேயே மிக நேர்மையற்ற ஆளும் உயரடுக்கினால் செயல்படுத்தப்படுகின்றன. இஸ்ரேலின் வணிக மற்றும் அரசியல் தலைவர்கள் அவதூறுகள், ஊழல்கள் என்ற சகதியில் மூழ்கியிருக்கின்றனர்; இதில் பிரதம மந்திரி மற்றும் சமீபத்தில் இரு ஜனாதிபதிகளும் அடங்குவர்; அவர்கள் இருவரும் பதவியில் இருந்து இறங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

இஸ்ரேலில் வசிக்கும் யூத மக்களின் பெரும்பான்மையினரை இஸ்ரேல் அரசாங்கம் பிரதிநிதித்துவம் செய்யவில்லை; யூதர்கள் மற்றும் பாலஸ்தீனிய குடிமக்களின் நலன்களை பற்றிக் கேட்கவே வேண்டாம். இஸ்ரேலின் நிதிய உயரடுக்கைத்தான் அது பிரதிபலிக்கிறது; அது வாஷிங்டனில் அதற்கு முக்கிய ஆதரவு தருபவர்களுடன் நெருக்கமாக உள்ளது.

தன்னுடைய சொந்த நலன்களுக்கு செயல்படும் வகையிலும், இப்பகுதியில் அமெரிக்காவின் போலீசாகவும் நடந்து கொள்ளும் வகையிலும், இஸ்ரேலிய ஆளும் உயரடுக்கு மேற்குக் கரை மற்றும் காசாப் பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை இடைவிடாமல் அடக்கி வருகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளில் பெரும்பாலான பாலஸ்தீனியர்களுடைய நிலைமை துயரமும் வறுமையும்தான்.

இன்று பாலஸ்தீனிய மக்களில் நான்கில் மூன்று பங்கினர் இடம் பெயர்ந்துள்ளனர்; உலகம் முழுவதும் இன்னும் 5 மில்லியன் அகதிகள் உள்ளனர். மேற்குக் கரை மற்றும் காசாவுடன் எல்லைகளை முடியது பல்லாயிரக்கணகவர்கள் இஸ்ரேலில் வேலை செயும் உரிமையை மறுத்துள்ளதுடன், ஆக்கிரமிப்பு பகுதிகளுக்குள் 500க்கும் மேற்பட்ட சாலைத் தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது; இஸ்ரேலின் இராணுவப் பிரிவுகள் பாலஸ்தீனிய மக்களை கிட்டத்தட்ட பட்டியில் அடைத்து வைப்பது போல் அடைத்து வைத்து அவர்களுடைய பொருளாதாரத்தையும் நெரித்துவிட்டனர்.

பாலஸ்தீன அதிகாரத்தினுள் இருக்கும் இல்லங்களில் 66 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்; வேலை செய்யக்கூடியவர்களில் 24 சதவிகிதத்தினர் வேலையின்மையில் வாடுகின்றனர். 1967ல் இருந்து 650,000 க்கும் மேற்பட்டவர்கள் இஸ்ரேலில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட மக்கட்தொகையில் ஆண்களில் 40 சதவிகிதத்திற்கு சமமாகும்.

மேற்குக்கரை முறையாக இணைக்கப்படவில்லை என்றாலும், கிழக்கு ஜெருசலேம் சியோனிச அரசுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1967 போரின் போது கைப்பற்றப்பட்ட அந்நிலத்தில் ஒரு பாலஸ்தீனிய அரசு அமைக்கப்படும் என்று 1993ல் ஓஸ்லோ உடன்பாடு உறுதியளித்தும் அக்குடியேற்றங்கள் தொடர்ந்து வளர்கின்றன.

இஸ்ரேலின் எல்லைகளை நிரந்தரமாக விரிவுபடுத்தும் நோக்கத்துடன் வந்துள்ள பாதுகாப்புச் சுவர் என்று அழைக்கப்படுவது, ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரையில் பெரும்பகுதியை கட்டுப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. இன்று கிட்டத்தட்ட 250 குடியிருப்புக்கள் மேற்குக்கரை முழுவதும் சிதறியுள்ளன; கிழக்கு ஜெருசலேம் உட்பட அவற்றின் மொத்த மக்கட்தொகை 450,000 ஆகும். பாலஸ்தீனியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள சாலைகள் இக்குடியிருப்புக்களுக்கு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது.

பாலஸ்தீனியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட துண்டு அரசிற்கான வாய்ப்புவளம், எப்பொழுதாவது அது அடையப்பட்டாலும் கூட, அவர்களுடைய ஜனநாயக உரிமைகள், சமூகப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தராது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் உத்தியோகபூர்வ கொள்கை --பொதுவாக மீறப்படுவதில்தான் கெளரவிக்கப்படுகிறது-- பாலஸ்தீனியர்களை இருகூறாகத் துண்டிக்கப்பட்ட அரசு ஆக மேற்குக் கரைக்கும் காசாப் பகுதிக்கும் இடையே ஒன்றிலிருந்து ஒன்று துண்டிக்கப்பட்டதாய் விட்டுவிடும்; மேற்குக்கரைதாமே பாதுகாப்புச் சுவரால் சிறைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் இஸ்ரேலிய படைகளால் சூழப்பட்ட வரிசையான தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வறிய நகரங்கள், கிராமங்களாக குறைக்கப்படும். இந்த சூழ்நிலைகள்தான் ஹமாசிற்கும் ஃபதாவிற்கும் இடையே ஒருவரையொருவர் அழிக்கும் கடுமையான யுத்தத்தை எழ வைத்துள்ளன.

உலகின் மக்களில் பெரும்பாலானவர்களால் சரியான முறையில் குற்றங்கள் எனக் காணப்படும் இஸ்ரேலின் நடவடிக்கைகள், அதன் சொந்த மற்றும் வாஷிங்டனுடைய நலன்களுக்காக செய்யப்படுபவை, இன்றைய உலக அரசியலில் மிகவும் தீயூட்டும் காரணிகளாகும்.

தன்னுடைய பிரச்சினைகளுக்கு இஸ்ரேலின் எல்லைகளை விரிவாக்குவது என்ற சியோனிஸ்டுகளுடைய தீர்வு, தீர்வில்லை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. 1967 போருக்கு பின் நடந்த நிகழ்வுகள் யூத மக்களுக்கு பாதுகாப்பான இடத்தை அளிக்கும் என்று உறுதி கூறியதை அளிக்கத்தவறிய இஸ்ரேலிய அரசாங்கத்தின் தோல்வியைத்தான் அம்பலப்படுத்தியுள்ளன; மேலும் யூதர்களுக்கு ஒரு நியாயமான, சமத்துவ சமுதாயம் ஏற்படுத்தப்படும் என்பதும் தோல்வியைத்தான் அடைந்துள்ளது. மாறாக இஸ்ரேல் ஒரு சமூக வெடிமருந்துப் பெட்டியாக மாறி தன்னையே அழித்துக்கொள்ளும் அபாயத்தை கொண்டுள்ளது. துன்பியலான விந்தைக்கு மற்றொரு உதாரணமாக இஸ்ரேலுக்குள்ளும், ஆக்கிரமிப்பு பகுதிக்குள்ளும் சேரிகள், அடக்கு முறை, உட்பூசல், போர்கள் என்று முந்தைய யூதர்களின் ஆரம்பகால தலைமுறை வெளியேற காரணங்களாய் அமைந்த அனைத்தையும் மீண்டும் தோற்றுவித்து வருகிறது.

இஸ்ரேலியர்கள் பலரும் எப்பொழுதும் இருக்கும் போர் சூழல் பற்றி அவதியுற்றும், களைப்பும் அடைந்துள்ளனர்; பாலஸ்தீனியர்களுக்கு அளிக்கப்படும் மிருகத்தனமான கொடுரம் பற்றி வெறுப்பும் அடைந்துள்ளனர். அவர்கள் சமாதானத்தை விரும்புகின்றனர்; ஆனால் அனைத்துப் புறங்களிலும் இராணுவவாதம், போர் இவற்றை தளமாகக் கொண்ட கட்சிகளைத்தான் எதிர்கொண்டிருக்கின்றனர்.

இப்பகுதி மக்களையும் பொருளாதாரங்களையும் பிளவுபடுத்தும் செயற்கையான எல்லைகளை இல்லாதொழிக்கும் ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டியமைப்பதற்காக அரேபிய மற்றும் யூதத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சுயாதீன அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன் நிபந்தனை, சியோனிசத்துடன் ஒரு உடைவும் மற்றும் அதன் தோல்வி என்பது தேசிய முன்னோக்கின் தவிர்க்க முடியாத விளைபயன் என்பதை தெளிவாய் அறிந்து கொள்ளுவதும்தான்.