World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

After G8 summit: Conflict between US and Russia intensifies

G8 உச்சிமாநாட்டிற்கு பின்னர்: அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இடையேயான மோதல் தீவிரமாகிறது

By Peter Schwarz
12 June 2007

Use this version to print | Send this link by email | Email the author

G8 நாடுகளின் தலைவர்களுக்கு இடையே ஜேர்மனியில் ஹைலிகென்டாமில் பகிரங்கமாக உச்சிமாநாட்டில் காட்டப்பட்ட நல்லிணக்கம் 24 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் நீடித்திருந்தது. பங்கு பெற்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கையிலேயே, பூசல்கள், குறிப்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே, மீண்டும் வெடித்தன.

லண்டனுக்கு விமானத்தில் திரும்புகையிலேயே பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் Der Spiegel சஞ்சிகையின் மூன்று நிருபர்களுக்கு ஒரு கருத்தாழம் மிக்க பேட்டியைக் கொடுத்தார். அவர் முதல் முதலாகக் கூறியது ரஷ்யாவுடனான பூசல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதாகும்.

"வேறுபாடுகளை கடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது என்பது உண்மையே. ஆனால் இருக்கும் வேறுபாடுகள் அப்படியேதான் உள்ளன." என்ற அவர், தொடர்ந்து கூறுைைகயில், "ரஷ்யாவுடன் நல்ல உறவுகள் முக்கியம் என்பது இயல்பானதாகும். ஆனால் எப்படி மறுபடி நிறுவுவது என்பது பற்றி ஐரோப்பாவில் ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன."

அமெரிக்கா செக் குடியரசு மற்றும் போலந்தில் ஒரு ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் நிறுவுதலை பிளேயர் வெளிப்படையாக ஆதரித்தார். இத்திட்டங்களை ரஷ்யா வலுவாக எதிர்ப்பதுடன் அவை தன்னுடைய சொந்த பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தல் என்றும் கருதுகிறது. G8 உச்சி மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அஜர்பைஜானில் ஒரு ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் பற்றிய கருத்தை முன்வைத்ததுடன் இது ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் கூட்டு செய்ற்திட்டமாக செயல்படுத்தப்படலாம் என்றும் கூறினார்.

வெள்ளியன்று உச்சிமாநாடு முடிந்தவுடன், ஜனாதிபதி புஷ் போலந்து ஜனாதிபதி லெக் காக்ஜின்ஸிகியை அருகில் இருந்த Gdansk ல் சந்தித்து, அமெரிக்கா தன்னுடைய மூலத் திட்டமான ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை போலந்திலும் செக் குடியரசிலும் நிறுத்துவதை நிறைவேற்றும் என்று உறுதி கொடுத்தார்.

போலந்தில் இருந்து புஷ் ரோமிற்கு சென்றார்; அங்கு அவர் "என்னுடைய பிரியமான ரோமனோ" என்று பலமுறை அழைத்து இத்தாலிய பிரதமர் ரோமனோ பிரோடிக்கு பாராட்டுக்களை தெரிவித்து, லெபனான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இத்தாலிய துருப்புக்களை நிறுத்தி வைத்துள்ளதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். நீண்டகாலம் கூட ஆகவில்லை, வாஷிங்டனுக்கும் மைய-இடது பிரோடி அரசாங்கத்திற்கும் இடையே உறவுகள் பதட்டத்தில் இருந்தன; பதவியேற்றபின் பிரோடி இத்தாலிய துருப்புக்களை ஈராக்கில் இருந்து திருப்பப் பெற்றிருந்தது பகுதி அளவில் இதற்கு ஒரு காரணம் ஆகும். ஆயினும், ரஷ்யாவுடன் ஆழமான மோதல் என்ற பின்னணியில், புஷ் இத்தாலிய அரசாங்கத்தை தன்னுடைய பக்கத்திற்கு வென்றெடுப்பதற்கு தக்க காரணத்தை கொண்டிருந்தார்.

ஞாயிறன்று புஷ் அல்பானிய தலைநகரான டிரானாவிற்குச் சென்று, கோசோவோ சுதந்திரம் பற்றி களிப்புடன் இருந்த கூட்டத்திற்கு உறுதியளித்தார். கோசோவோவின் வருங்காலம் பற்றி "முடிவிலா பேச்சுக்களை" அவர் எதிர்ப்பதாகவும், "பேசியது போதும் என்று விரைவில் சொல்லுவோம். கோசோவோ சுதந்திர நாடு." என்றார்.

சேர்பிய மாநிலமான கோசோவோ, அல்பானிய இனவழி வாழ்வோர் பெரும்பாலானவர்களை கொண்டது, இது சேர்பியாவிடம் இருந்து வலுக்கட்டாயமாக 1999ல் NATO இராணுவத் தலையீட்டினால் பிரிக்கப்பட்டது. இப்பொழுது அது ஐ.நா. நிர்வாகத்தின்கீழ் உள்ளது. அல்பானிய கோசோவோவின் கட்சிகள் முழு சுதந்திரத்தை கோருகையில், பெல்கிராட் சேர்பியாவின் தேசிய நிலப்பகுதியை விட்டுகொடுப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது, பெரிய கோசோவோவிற்கு பரந்த சுயாட்சியைத்தான் கொடுக்க தயாராக உள்ளது. சேர்பியா அதன் மரபார்ந்த நட்பு நாடான ரஷ்யாவினால் ஆதரிக்கப்படுகிறது.

கோசோவோவின் அந்தஸ்து பற்றிய ஓராண்டு பேச்சுக்களுக்கு பின்னர், முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி Martti Ahtisaari பெப்ருவரி மாதம் ஒரு திட்டத்தை முன்வைத்தார்; அதன்படி கோசோவோவின் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் வரையில் ஒரு சர்வதேச கண்காணிப்பு குழு வேண்டும் என்று கூறப்பட்டது. அஹ்டிச்சாரியின் திட்டம் சேர்பியா, ரஷ்யா ஆகியவற்றால் தயக்கம் காட்டப்பட்டதுடன், சீனா மற்றும் ஸ்பெயின், கிரேக்கம், இத்தாலி, ஸ்லோவாக்கியா, சைப்ரஸ், ருமேனியா, ஆஸ்திரியா போன்ற பல ஐரோப்பிய உறுப்பு நாடுகளாலும் தயக்கம் காட்டப்பட்டது.

புஷ் இப்பொழுது கோசோவோவின் சுதந்திரத்தை ஒருதலைப்பட்சமாக அங்கீகரிப்பதாக அச்சுறுத்தியுள்ளார் -அதாவது ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் உடன்பாடு இல்லாமல்; அங்கோ ரஷ்யாவிற்கு தடுப்பதிகாரம் உண்டு. ஐ.நா. தீர்மானத்தை பெறும் முயற்சிகள் தோல்வியடைந்தால், ரஷ்யாவின் தடுப்பதிகாரத்தை கடப்பதற்காக ஐ.நா.விற்கு வெளியே அமெரிக்கா நடக்கத் தயாராக இருப்பதாக புஷ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தின் ஆத்திரமூட்டும் தன்மை சேர்பியர்கள் மற்றும் கோசோவோவில் வாழும் பிற தேசிய சிறுபான்மையினரின் வருங்காலம் (பலரும் NATO போருக்குப் பின்னர் வெளியேறும் நிலையில் தள்ளப்பட்டனர்) தெளிவுறுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. 1990 களில் ஜேர்மனிய, அமெரிக்க அரசாங்கங்கள் குரோஷியா, பொஸ்னியா ஹெர்செகோவினாவின் சுதந்திரத்தை அங்கீகரித்தன; அதன்படி தேசிய சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதியாக்கப்படவில்லை; அதையொட்டி குருதி சிந்தும் முரண்பாடுகள் யூகோஸ்லேவியாவில் விளைந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிட்டது. கோசோவோவின் சுதந்திரம் அவசரப்பட்டு கொடுக்கப்பட்டால், அதுவும் சர்வதேச சட்டபூர்வ ஒப்புதல் இன்றி கொடுக்ப்பட்டால், மீண்டும் அத்தகைய இனவழிச் சண்டைகள் புதுப்பிக்கப்படுவதுதான் விளையும்.

இது ஒரு சர்வதேச வெடிப்புத் தன்மை உடைய சாத்தியப்பாடுகளையும் நிறுவும். எனவேதான் ஐரோப்பிய நாடுகள் அஹ்டிசாரித் திட்டத்தில் இருக்கும் பிரிவினைப் போக்குகளை அவநம்பிக்கைத்தன்மை, மற்றும் எச்சரிக்கை ஆகியவற்றுடன் அணுகுகின்றன.

ரஷ்யா பலமுறையும் கோசோவோ சேர்பியாவில் இருந்து தனிநாடாக துண்டாடப்பட்டால், கிளர்ச்சிநடந்துவரும் ஜோர்ஜிய மாநிலங்களான அப்காஜியா மற்றும் தெற்கு ஒசேடியா மற்றும் மால்டோவியன் டிரான்ஸ்நிஸ்டிரியா ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக அங்கீகரிப்பதாய் திரும்பத்திரும்ப அச்சுறுத்தியுள்ளது. இந்த மூன்று மேற்கூறிய பகுதிகளும் ரஷ்யாவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளன. இதன் விளைவு ஒரு புதிய பிராந்திய பூசல்களை விளைவிக்கும், அல்லது அது அமெரிக்காவுடன் நெருக்கமான அரசியல், இராணுவத் தொடர்புகளை கொண்டிருக்கும் ஜோர்ஜியா விஷயத்தில், மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் நேரடியான மோதலை விளைவிக்கக் கூடும்.

உலக வர்த்தக அமைப்பை புட்டின் தாக்குகிறார்

G8 உச்சிமாநாட்டிற்கு தன்னுடைய சொந்த அரசியல் தாக்குதல் மூலம் புட்டின் பதில் கொடுத்துள்ளார். ஞாயிறன்று சென்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் ஒரு வணிக அமைப்பு அரங்கில் அவர் உலக வர்த்தக அமைப்பு (WTO), மற்றும் மேலைநாடுகளின் ஆதிக்கத்தில் இருக்கும் பிற சர்வதேச பொருளாதார அமைப்புக்களை கடுமையாக தாக்கினார். "அவை பழங்கால முறையிலுள்ளவை, ஜனநாயமற்றவை, வளைந்து கொடுக்காத்தன்மை உடையவை" என்று அவர் கூறினார்; அவை ஒரு சிறிய எண்ணிக்கையிலான பணக்கார நாடுகளின் நலன்களுக்குத்தான் உதவுகின்றன என்றும் கூறினார்.

எழுச்சி பெற்று வரும் சந்தைகளின் பொருளாதார நலன்களை ஆதரிக்கும் மாற்றீடுகள் தேவை என்று புட்டின் அழைப்பு விடுத்தார். வளர்ச்சியுற்ற நாடுகள் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதாகவும், "யூரேசிய தடையற்ற சந்தை ஆய்வுக்கூடம்" (Eurasian Institute for Free Trade) தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். பூகோளந்தழுவிய நிதிய சந்தைகளையும் அவர் குறைகூறினார்; அவை "ஓரிரு நாணயங்களின்", அதாவது டாலர், யூரோ ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். "இந்த அறைகூவலுக்கு ஒரு விடைதான் உள்ளது: பல உலக நாணயங்கள் மற்றும் பல உலக நிதிய மையங்களின் உருவாக்கம்" என்றார் அவர்.

புட்டினுக்கு பின் பதவிக்கு வரக்கூடியவர் எனக் கருதப்படும், ரஷ்யாவின் துணைப் பிரதம மந்திரியான Sergey Ivanov, ரஷ்ய பொருளாதாரம் பல்வகைப்படுத்தக்கூடும் என்று அறிவித்தார். 2020 க்குள் நாடு குறைந்தது அணுசக்தி, வான்வழி மற்றும் விண்வெளிப் பயணங்கள், கப்பல் கட்டுதல், மென்னியம், மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உலக உற்பத்தியில் 10 சதவிகிதத்தையாவது கட்டுப்பாட்டில் கொள்ளும் என்றும் ஐந்து பெரிய தொழில்துறை நாடுகளில் ஒன்றாக தன்னை ஆக்கிக் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

Commonwealth of Indpendent States (CIS) என்னும் முன்னாள் சோவியத்தின் 11 குடியரசுகள் அமைப்பில் இருந்து வந்திருந்த அரசியல், வணிக பிரதிநிதிகள் 6,000 பேர் முன்னிலையில் புட்டினும், ஐவனோவும் உரையாற்றினர். சர்வதேச நிறுவனங்களில் இருந்து அதிகாரிகள், Simens, Motorola, ConocoPhilipos, Pepsico, சீன நிறுவமான Sinopec ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். உலக வங்கியின் முன்னாள் தலைவர் James Wofesnsohn, ஜேர்மனியின் முன்னாள் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் ஆகியோரும் பேசினர். பிந்தையவர் ரஷ்யாவின் அரசியல் மற்றும் பொருளாதார வலிமையை பாராட்டினார்; இது ஐரோப்பாவிற்கு நன்மை பயக்கும் என்று அறிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான சந்தையாக ரஷ்யா ஒரு திறந்த நாடாக இருக்கும் என்பதை முன்வைக்கும் நோக்கத்தை கூட்டம் கொண்டிருந்தது. மாநாட்டில் பல பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின; இவற்றில் சுசுகி, PSA Peugeot Citroen, Volvo ஆகியவற்றால் கட்டப்படும் பெரும் கார் தொழில்களுக்கான உடன்பாடுகள் உட்பட, அதேபோல 3 - 4 பில்லியன் டாலர்கள் வரை 22 Boing 787 விமானங்கள் ரஷ்ய Aeroflot -ஆல் வாங்கப்படுவதும் ஊள்ளடங்கியிருந்தன. முன்னாள் உலக செஸ் சாம்பியனான காரி காஸ்பரோவின் தலைமையில் 3,000 எதிர்ப்பாளர்கள் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

உலக வர்த்தக அமைப்பின் மீது புட்டின் நடத்திய தாக்குதல் புதிதாக தொழில்மயமாகும் நாடுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு வேண்டும் என்பதற்கான அழைப்பு என்று விளக்கப்பட்டுள்து. Suddeutsche Zeitung கருத்தின்படி, "ஒரு புதிய சர்வதேச பொருளாதார முறை, உலக வங்கி இல்லாமல், சர்வதேச நிதிய அமைப்பு இல்லாமல், G7 நாடுகளின் செல்வாக்கு, குறிப்பாக அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்த நிலையில் இருப்பதை, விளாடிமீர் புட்டின் விரும்புகிறார்.... இவருடைய பீட்டர்ஸ்பேர்க் உரையினால், புட்டின் தன்னுடைய நாட்டை புதிதாக தொழில்துறையில் வளர்ச்சி பெறும் நாடுகளின் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளார்; அவை கூடுதலான ஆக்கிரோஷ வகையில் சர்வதேச அமைப்புக்களில் தாம் கூறுவது எடுபட வேண்டும் என்று விரும்புகின்றன.

சீனா, இந்தியா, தென்னாபிரிக்கா, மெக்சிகோ, பிரேசில் போன்ற புதிதாக தொழில்மயமாகும் நாடுகள் G8 உச்சிமாநாட்டின் கடைசி தினத்தன்று அழைக்கப்பட்டு இருந்தன; ஆனால் அவை நன்கு நடத்தப்படவில்லை. அதிக தொழில்துறை முன்னேற்ற நாடுகள் போல் சுற்றுச் சூழல் நடவடிக்கைகளுக்கு மட்டும் பங்களிப்பு செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டன. ஆனால் அவற்றின் பொருளாதாரங்கள் குறைந்த வளர்ச்சியைத்தான் கொண்டுள்ளன. அவர்கள் முன்மொழிவுகளை எண்ணிப்பார்க்க மறுத்துவிட்டனர்.

அடுத்த சில ஆண்டுகளில் AIDS, காச நோய், மலேரியா என்று குறிப்பாக ஏழை நாடுகளை தாக்கும் வியாதிகளை எதிர்த்துப் போராட உச்சிமாநாடு தீர்மானித்திருந்த $60 பில்லியன் என்பது, நன்கு பரிசீலிக்கப்படுகையில் முற்றிலும் மோசடித்தனமாக நிரூபணம் ஆயிற்று. உதவி அமைப்புக்களின் கணக்கீட்டின்படி, இந்தத் தொகை நீண்ட காலமாகவே உறுதியளிக்கப்பட்டவை, அல்லது வளர்ச்சி தொகைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து கழித்துக் கொடுக்கப்பட இருப்பவை. இந்த மொத்தத்தில் 3 பில்லியன் டாலர்கள்தான் அடுத்த சில ஆண்டுகளில் புதிதாக கொடுக்கப்படும் பணமாக இருக்கும்.

2008 க்கும் 2015க்கும் இடையே ஜேர்மனிய அரசாங்கம் ஆபிரிக்காவில் தொத்து நோய்களுக்கு எதிராக போரிடுவதற்கு கொடுக்கும் பணத்தைதிற்காக 800 மில்லியன் யூரோக்களை மட்டுமே கூடுதலாக கொடுக்க உறுதிமொழி கொடுத்துள்ளது. உச்சிமாநாடு ஹைலிகென்டாமில் நடத்தப்படுவதற்கான மொத்தச் செலவு கிட்டத்தட்ட 100 மில்லியன் யூரோக்கள் என்பதைப் பார்க்கும்போது, இந்த ஒதுக்கீடு அற்பமானது ஆகும்.

ஐரோப்பிய சங்கடம்

ரஷ்யாவுடனான பூசல்கள் பொதுவாக அமெரிக்க, ஐரோப்பிய செய்தி ஊடகங்களால் ஜனநாயகம் பற்றிய சர்ச்சை என்று எடுத்துக் காட்டப்படும். அவை ரஷ்யா ஒரு ஜனநாயக நாடு இல்லை என்று அறிவிக்கும்.

விளாடிமீர் புட்டினுடைய ஆட்சியின் இரக்கமற்ற சர்வாதிகாரத் தன்மை பற்றி ஐயம் ஏதும் இல்லை; இது புதிதாக தோன்றியுள்ள செல்வம் கொழிக்கும், உயர்மட்ட அடுக்கின் நலன்களை பிரதிபலிக்கிறது. ஆனால் அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்களிடம் இருந்து ரஷ்யாவில் ஜனநாயகம் இல்லை என வரும் குற்றச் சாட்டு தீவிர அவநம்பிக்கைத் தன்மையைத்தான் காட்டுகிறது.

இது மிகத் தெளிவாக புஷ் Gdansk க்கு பயணித்ததில் இருந்து தெரியவரும்; அங்கு அவர் போலந்தை பெரிதும் சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் கோட்டை என்று பாராட்டினார். உண்மையில், காஜின்ஸ்கி சகோதரர்களுடைய ஆட்சியின் சர்வாதிகார, பிற்போக்குத்தன நோக்கங்கள் நன்கு அறியப்பட்டவையே. தற்பொழுது போலந்தின் கல்வி மந்திரியாக இருக்கும் Roman Giertych, போலந்தின் முக்கிய கத்தோலிக்க குழுக்கள் குடும்பங்களில் இருந்த வந்தவர், Kafka, Goethe மற்றும் உலக இலக்கியத்தின் பெரும் பிரதிநிதிகள் போலந்துப் பள்ளி நூல்களில் இருந்து அகற்றிவிடும் வேலையை செய்து கொண்டிருக்கிறார். அவர்களுடைய இடங்கள் வலதுசாரி, தீவிர தேசியவாதிகளால் நிரப்பப்படும்.

"ஜனநாயகம் பிழைப்பதற்கு தேவையான அமைப்புக்கள் பற்றி மிகக் கடுமையாக உழைத்து வரும் நாடு" என்று அல்பானியாவை புஷ் புகழ்ந்தார். கன்சர்வேடிவ் பத்திரிக்கையான Frankfurter Allgemeine Zeitung கூட இன்னும் திறனாய்ந்த பார்வையைத்தான் கொண்டுள்ளது. மிகக் குறைவான மதிப்பீட்டைக் கொடுக்கும் வகையில் செய்தித்தாள் புஷ் அல்பானியாவில் கொண்டுள்ள புகழுக்குக் காரணம், "ஐரோப்பிய ஒன்றியத்தைப் போல் இல்லாமல் அமெரிக்கர்கள் டிரானாவில் உள்ள அரசியல் உயரடுக்கினரின் விவகாரங்களில் சலித்துப் போகும் அளவிற்கு சீர்திருத்தங்களை கொண்டு வாருங்கள் என்ற இடைவிடாக் கோரிக்கையை முன்வைப்பதில்லை; அவ்வடுக்கினரின் செல்வ மறுபங்கீட்டுப் போராட்டங்களிலும் தலையிடுவதில்லை." "செல்வ மறுபங்கீட்டுப் போராட்டங்கள்" என்று Frankfurter Allgemeine Zeitung குறிப்பிடுவது இன்னும் துல்லியமான முறையில் அந்நாட்டில் இருக்கும் நெறிப்படுத்தப்பட்ட குற்றஞ்சார்ந்த குழுக்கள் ஊழல், போட்டி இவற்றில் தோய்ந்திருப்பதை விளக்குகிறது.

கிழக்கு ஐரோப்பாவில் புஷ் நின்ற இடங்களும், சென்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் புட்டினுடைய உரையும் அமெரிக்க, ரஷ்ய பொருளாதார, மூலோபாய நலன்களில் இருக்கும் பூசல்களின் உண்மையான உள்ளடக்கத்தை மிகத் தெளிவாக ஆக்கியுள்ளன.

இந்தப் பூசல்கள் ஐரோப்பாவை ஒரு சங்கடத்தை எதிர்கொள்ள வைக்கின்றன. ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரான்சின் புதிய ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியும் இன்னும் கூடுதலான அமெரிக்க வழியை தங்களுக்கு முன்பு பதவியில் இருந்தவர்களைவிட அதாவது, ஹெகார்ட் ஷ்ரோடர், ஜாக் சிராக் ஆகியோரை விடப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். பேர்லின், பாரிஸ் இரண்டுமே வாஷிங்டனுடன் மிகக் கூடுதலான வகையில் நம்பியிருப்பது பற்றி எச்சரிக்கையாக உள்ளன. அவற்றிற்கு ரஷ்யாவுடன் நல்ல உறவுகள் தேவை; அதிலும் அந்நாட்டுடன் குறிப்பாக ஜேர்மனி நெருக்கமான வணிக உறவுகளைக் கொண்டு தன்னுடைய ஆற்றல் தேவைகளுக்கு நம்பியிருக்கிறது.

அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இடையே இருக்கும் பூசல் இதை பெருகிய முறையில் கடினமாக்கியுள்ளது. இது ஐரோப்பாவை ஏதேனும் ஒரு புறத்தோடு சேர நிர்ப்பந்திப்பதுடன், கண்டத்துள்ளே பிளவுகளை ஏற்படுத்துகிறது. இவ்விதத்தில் ஜேர்மனிய அதிபர் G8 உச்சி மாநாட்டில் புஷ்ஷிற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் பூசலின் அளவை குறைக்க முயன்று, அதே நேரத்தில் ஜேர்மனி, மற்ற ஐரோப்பிய நாடுகள் தங்கள் ஏகாதிபத்திய நலன்களை வலுவாக வெளிப்படுத்த முடிகின்ற சர்வதேச அமைப்புக்களான ஐ.நா. போன்றவற்றின் பங்கை பெருக்க முயன்றார். அமெரிக்காவை ஐ.நா.வின் கட்டமைப்பிற்குள்ளே சுற்றுச்சூழல் உடன்பாட்டை ஏற்கவைத்ததில் வெற்றிபெற்றதாக கூறப்படுகின்ற உண்மையானது, ஜேர்மனிய செய்தி ஊடகத்தால் ஒரு பெரும் வெற்றியாக வரவேற்கப்பட்டது.

அத்தகைய கட்டுப்பாடு 2050 வரை நீட்டிக்கப்பட வேண்டும் ஆனால் அதற்கிடையில் ஐ.நா. 50 ஆண்டுகள் ஒருபுறம் இருக்க 15 ஆண்டுகளாவது தப்பிப் பிழைக்குமா என்பது கேள்விக்குறிதான். பெரும் சக்திகளுக்கு இடையே பதட்டங்கள் பெருகி வருகையில், ஐ.நா. அதன் முன்னோடியான அனைத்து நாடுகளின் கழகம் (League of Nations) போலவே திறமையற்றதாகவும், முக்கியத்துவம் அற்றதாகவும் தன்னை நிரூபித்துக் கொண்டு வருகிறது. ஐ.நா. ஆல் அளிக்கப்படும் வாக்கிலிருந்து சுதந்திரமான வகையில் கோசோவோவை அங்கீகரிக்கப்போவதாக புஷ் அச்சுறுத்துவது, இந்த அமைப்பின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட இன்னும் ஓர் ஆணி ஆகும்.