World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan defence ministry stalls on inquiry into missing SEP member

இலங்கை பாதுகாப்பு அமைச்சு சோ.ச.க. உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பான விசாரணையை தட்டிக்கழிக்கின்றது

By our correspondent
28 March 2007

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போய் இன்றுடன் ஏழு நாட்கள் ஆகின்றன. இந்த இருவரும் ஊர்காவற்துறை தீவை வதிவிடமாகக் கொண்டவர்கள். பாதுகாப்பு செயலாளர் கோதபாய இராஜபக்ஷ உட்பட அரசாங்க அதிகாரிகளுக்கும் சோ.ச.க. உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்திருந்த போதிலும், இந்த இருவரையும் கண்டுபிடிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விமலேஸ்வரனும் மதிவதனனும் மார்ச் 22 ஊர்காவற்துறைக்கு அருகில் உள்ள புங்குடுதீவில் உள்ள மடத்துவெளி என்ற கிராமத்திற்கு சென்ற போதே காணாமல் போயுள்ளனர். ஊர்காவற்துறை அம்பிகை நகரில் திருமணமொன்றிற்கு செல்வதற்காக விமலேஸ்வரன் மடத்துவெளியில் தான் வாடகைக்கு எடுத்துள்ள வீட்டில் இருந்த சில ஆடைகளை எடுக்கச் சென்றுள்ளார்.

ஊர்காவற்துறையையும் புங்குடுதீவையும் இணைக்கும் பாலத்தை நெருங்கிக்கொண்டிருந்த தனது நண்பனின் மோட்டார் சைக்கிளில் விமலேஸ்வரன் இருந்ததற்கு கண்கண்ட சாட்சிகள் உள்ளன. மடத்துவெளியில் உள்ள அவரது உறவினர்களும் அயலவர்களும் கூட இந்த இருவரும் அந்த வீட்டில் இருந்து ஊர்காவற்துறைக்கு புறப்படுவதைக் கண்டுள்ளனர். அதிலிருந்து இந்த இருவரையும் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.

சோ.ச.க. புங்குடுதீவிலும் மற்றும் வேலனையிலும் உள்ள கடற்படை முகாம்களில் கட்டளை அதிகாரிகளிடம் முறைப்பாடுகளை உடனடியாகப் பதிவுசெய்தது. சனிக்கிழமை, சோ.ச.க. பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் ஒரு முறைப்பாட்டை தொலைமடல் மூலம் அனுப்பியது. வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சூழ உள்ள அனைத்து தீவுகளும் கடற்படையின் இறுக்கமான பாதுகாப்பிற்கு உட்பட்டுள்ளதுடன், கடற்படையானது தனது துணைப்படையான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (ஈ.பி.டி.பி.) நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றது.

அரசாங்கமும் இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உக்கிரப்படுத்தியுள்ள நிலையில், கடந்த ஆண்டு பூராவும் நூற்றுக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டுள்ளனர் அல்லது "காணாமல் போயுள்ளனர்". இதற்கு இராணுவத்தின் அனுசரணையிலான கொலைப் படைகளே பொறுப்பு என பரவலாக நம்பப்படுகிறது.

விமலேஸ்வரனும் மதிவதனனும் கடற்படையின் வீதித்தடையொன்றை நோக்கி பயணித்ததன் பின்னரே காணாமல் போயுள்ளனர் என்ற விடயம், இராணுவமே இதற்குப் பொறுப்பு என்பதை சுட்டிக்காட்டுகிறது. புங்குடுதீவு மற்றும் வேலனை முகாம்களில் உள்ள கட்டளை அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக பொருத்தமான விளக்கத்தை வழங்கத் தவறிவிட்டனர்.

சோ.ச.க. நேற்று தொடர்புகொண்ட போது, விமலேஸ்வரனும் மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக விராணையொன்றை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு எதையும் செய்திருக்கவில்லை. பொலிசுக்கு பொறுப்பாக உள்ள மேலதிக பாதுகாப்புச் செயலாளர் எச்.கே. பாலசூரிய, சோ.ச.க. அனுப்பிய தொலைமடல் சனிக்கிழமை அமைச்சுக்கு கிடைத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், தனக்கு அது திங்கட் கிழமையே கிடைத்ததாகத் தெரிவித்தார். இத்தகைய முறைப்பாடுகள், பொலிஸ்மா அதிபருக்கு உரியவை என அவர் தெரிவித்தார்.

தொலைமடல் தொடர்பாக எதுவுமே செய்திருக்காத பாலசூரிய, தான் அதை கவனிப்பதாக தெரிவித்தார். தான் அந்த முறைப்பாட்டை வாசிக்கக்கூட இல்லை என்பதை வெளிக்காட்டிக்கொண்ட அவர், இந்த காணாமல் போன சம்பவம் கொழும்பில் நடந்ததா எனக் கேள்வியெழுப்பினார். காணாமல் போனவர்கள் ஊர்காவற்துறையைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தை அடுத்து, தான் வடக்குக்கு பொறுப்பான உப பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிப்பதாகவும், வெள்ளிக்கிழமை நிலைமைகள் தொடர்பாக தெரிந்துகொள்ளலாம் எனவும் பாலசூரிய தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயற்திறமின்மையும் அலட்சியமும், தீர்க்கப்படாத நூற்றுக்கணக்கான காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான அதன் அலட்சியத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. ஊர்காவற்துறையில் ஒரு கடற்படை அலுவலரோ அல்லது ஒரு சிப்பாயோ இத்தகைய சூழ்நிலையில் காணாமல் போயிருந்தால், இத்தகைய அக்கறையின்மை இருந்திருக்காது. பாதுகாப்புப் படைகள் சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டைகளை முன்னெடுத்து பெருந்தொகையான அப்பாவி மக்களை தடுத்துவைக்க உடனடியாக தமது ஒடுக்குமுறை அதிகாரங்களைப் இதற்காக பயன்படுத்தியிருக்கும்.

விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பரதும் பாதுகாப்பிற்கு அரசாங்கமும் இராணுவமுமே பொறுப்பு என்பதை சோ.ச.க. கூறிவைக்கின்றது. விமலேஸ்வரன், கொழும்பு அரசாங்கம் முன்னெடுக்கும் யுத்தத்தையும் மற்றும் புலிகளையும் எதிர்த்து, உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்த நீண்டகால சோ.ச.க. உறுப்பினராகவே அவர் அந்த பிரதேசத்தில் பிரசித்திபெற்றிருந்தார். இந்த இருவரையும் கண்டுபிடிப்பதன் பேரில், உடனடியாக ஒரு முழுமையான விசாரணையை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சைக் கோருமாறு நாம் எமது ஆதரவாளர்களுக்கும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கின்றோம்.

கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரிகள்:

Gotabhaya Rajapakse,
Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha,
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529

N. G. Punchihewa
Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road,
Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924

பிரதிகள் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பிவைக்கவும்.

Socialist Equality Party, P.O. Box 1270, Colombo, Sri Lanka. Email: wswscmb@sltnet.lk

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவிற்கு கடிதங்களை அனுப்ப தயவு செய்து இந்த online form படிவத்தை பயன்படுத்தவும்

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள கடிதங்களின் பிரதிகளை இங்கு பிரசுரித்துள்ளோம்.

* * *

அன்பின் ஐயா,

ஊர்காவற்துறையை சேர்ந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினரான நடராஜா விமலேஸ்வரனும் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் மார்ச் 22 மாலையில் இருந்து காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அந்த இருவரதும் பாதுகாப்பான விடுதலையை உறுதிப்படுத்துமாறு நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

விமலேஸ்வரன் சோ.ச.க. உறுப்பினர் என்ற வகையில் அவரது சோசலிச கருத்துக்களுக்காக ஊர்காவற்துறையில் பிரசித்திபெற்றவர்.

விமலேஸ்வரனும் மதிவதனனும் ஊர்காவற்துறை தீவின் வேலனையில் அல்லது புங்குடு தீவில் காணாமல் போயுள்ளனர். மார்ச் 22 அன்று, சில துணிகளை எடுத்து வருவதற்காக புங்குடு தீவில் மடத்துவெளி கிராமத்தில் தான் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டிற்கு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் விமலேஸ்வரன் சென்றுள்ளார். கடல்வழிப் பாலத்தின் ஊடாக மடத்துவெளி கிராமத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் திரும்பியுள்ள போதிலும், அவர் இன்னமும் வீடு சென்று சேரவில்லை.

காணாமல் போகும் சம்பவங்கள், கடத்தல்கள் மற்றும் படுகொலைகளும் அடிக்கடி நடைபெறுகின்ற யுத்த சூழ்நிலையில், விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனின் பாதுகாப்பு தொடர்பாக நான் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன். இந்தப் பிரதேசம் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காரணத்தால் கடற்படை இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. கடற்படை மேற்கொள்ளும் அடக்குமுறை நடவடிக்கைகள் மற்றும் இந்த பிரதேசத்தில் துணைப்படைகளுடன் சேர்ந்து செயற்படுவதும் இந்த சந்தேகத்தை விரிவுபடுத்துகின்றன.

எம்.ஜி. கிரிபண்டா, மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர்,

இலங்கை மத்திய வங்கி.

* * *

அன்பின் திரு இராஜபக்ஷ,

நடராஜா விமலேஸ்வரன் மற்றும் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போயுள்ளனர்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பரான சிவநாதன் மதிவதனனும் மார்ச் 22, 2007 ஊர்காவற்துறையில் காணாமல் போயுள்ளமை தொடர்பாக உடனடியான புலணாய்வையும் விசாரணையையும் தொடக்குமாறு கோரி தங்களுக்கு எழுதுகிறோம். இலங்கை பாதுகாப்பு படைகளும் மற்றும் அவர்களது துணைப்படை பங்காளிகளும், குறிப்பாக தமிழ் இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக சட்டவிரோத கைதுகள், தடுத்துவைப்புகள், கடத்தல்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் போன்ற கொடூரமான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்ற ஒரு காலகட்டத்திலேயே இவர்கள் காணாமல் போயுள்ளனர்.

விமலேஸ்வரன், சோசலிச சமத்துவக் கட்சியினதும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் மற்றும் அதன் வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தினதும் அங்கத்தவர் என்ற வகையில், அவரது உத்வேகம் மற்றும் கொள்கை ரீதியான சோசலிச அரசியல் நோக்குகளுக்காக ஊர்காவற்துறை பிரதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவராவார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்கு எதிரான உங்களது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் கொடூரமான ஒடுக்குமுறை யுத்தத்திற்கான அவர்களது எதிர்ப்பு, நிச்சயமாக விமலேஸ்வரனை உங்களது அரசாங்கத்தின் எதிரியாக்கியிருக்கும்.

இந்த சம்பவத்தில், வடக்குத் தீவுகளைக் கட்டுப்படுத்தும் இலங்கை கடற்படைக்கு தொடர்பு இருப்பதற்கான பலமான ஆதாரங்களை ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதனால், விமலேஸ்வரனதும் மதிவதனனதும் உயிர் பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் ஆழமாகவும் நேர்மையான முறையிலும் அக்கறை கொண்டுள்ளோம். ஊர்காவற்துறை பிரதேசமானது உங்களது அதிகாரத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் இராணுவ நிர்வாகத்தின் கீழேயே உள்ளது என்பதையிட்டு நாம் விழிப்புடன் உள்ளோம். இலங்கை பாதுகாப்புப் படைகளும் துணைப்படையும் தளம் அமைத்துக்கொண்டுள்ள ஊர்காவற்துறை பிரதேசத்தில் விமலேஸ்வரனுக்கோ அல்லது மதிவதனனுக்கோ ஏதாவது ஆபத்து ஏற்படுமெனில், அத்தகைய அரசியல் ரீதியில் திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு தாங்களும் நேரடிப் பொறுப்பாளியாக இருக்க நேரிடும்.

தங்கள் உண்மையுள்ள,

ஏ.ஆர். மற்றும் எம்.எப், அவுஸ்திரேலியா

அன்பின் ஐயா,

ஜனநாயக உரிமைகள் தொடர்பான விவகாரம் என்ற வகையில், சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன், மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனன் காணாமல் போயுள்ளமை தொடர்பாக ஒரு உடனடியான விசாரணையை முன்னெடுக்குமாறு நான் உங்களைக் கோருகிறேன்.

நான் பல ஆண்டுகளாக இலங்கையில் சோ.ச.க. யின் கொள்கை ரீதியான போராட்டத்தை கவனித்துவரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேலையற்ற தொழிலாளியாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் சோ.ச.க. ஆதரவாளர் சிவபிரகாசம் மரியதாசின் படுகொலையைத் தொடர்ந்து, உங்களது ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள், நடராஜா விமலேஸ்வரனும் சிவநாதன் மதிவதனனும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என உள்நோக்கத்துடன் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வகையிலான நேரடியான பொய்கள், இந்த குற்றவியல் இனவாத யுத்தத்தை எதிர்க்கும் எவரையும் வன்முறையை பயன்படுத்தி அடக்குவதை நியாயப்படுத்த இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் கடுமையான ஆபத்தில் இருக்கக் கூடும். உலகம் உங்களை உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக பார்த்துக்கொண்டிருப்பதோடு, இலங்கை சோ.ச.க. யின் கோரிக்கைகளுக்கு உங்களது உடனடியான பிரதிபலிப்புகளுக்காக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையுள்ள,

எஸ்.பி. ஆஸ்திரேலியா.