World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP holds meeting to demand inquiry into member's disappearance

கட்சி உறுப்பினர் காணாமல் போயுள்ளமை தொடர்பான விசாரணையைக் கோரி இலங்கை சோ.ச.க. நடத்திய கூட்டம்

By our correspondent
12 April 2007

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக அவசர விசாரணையொன்றை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோரி ஏப்பிரல் 9 கொழும்பில் சோ.ச.க. ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது. தொழிலாளர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் உட்பட சுமார் நூறுபேர் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் கே. ரட்னாயக்க, உடனடியான விசாரணையைக் கோரி இலங்கை மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, துருக்கி, ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் உட்பட ஏனைய நாடுகளில் இருந்து ஏற்கனவே பெருந்தொகையான கடிதங்கள் வந்து குவிந்துள்ளதாக குறிப்பிட்டார். சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பும் சோசலிச சமத்துவக் கட்சியும் மார்ச் 31 மற்றும் ஏப்பிரல் 1 ஆகிய திகதிகளில் ஆன் ஆபர், மிச்சிகனில் நடத்திய யுத்தத்திற்கு எதிரான அவசர மாநாட்டிலும் இதுபற்றி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரட்னாயக்க விளக்கியதாவது: "விமலேஸ்வரனும் மதிவதனனும் மார்ச் 22 வடபகுதி யாழ்ப்பாணத் தீவுகளில் காணாமல் போயுள்ளனர். அவர்கள் கடைசியாக சுமார் மாலை 6.30 மணியளவில் புங்குடு தீவில் இருந்து, தாம் வசிக்கும் ஊர்காவற்துறை தீவை நோக்கி இரு தீவுகளையும் இணைக்கும் நீண்ட கடல் பாலத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர். புங்குடு தீவு கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி, இந்த இருவரும் பாலத்தின் தமது பக்கத்தில் உள்ள கடற்படை வீதித் தடையை கடந்து சென்றுள்ளதாக அறிவித்துள்ளார். பாலத்தின் அடுத்த முனையில் உள்ள வீதித் தடைக்குப் பொறுப்பான ஊர்காவற்துறை கடற்படை முகாமில் உள்ள கட்டளை அதிகாரி, அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது என மறுக்கின்றார்.

"அவர்கள் புங்குடு தீவுக்கு சென்றுகொண்டிருக்கும் வழியில், சுமார் மாலை 5.30 மணியளவில் ஊர்காவற்துறை வீதித் தடையில் இருந்த கடற்படை சிப்பாய்கள் அவர்களை உடற்பரிசோதனை செய்ததையும் மற்றும் இரு பொலிஸ் அதிகாரிகள் அவர்களை விசாரணை செய்ததையும் நேரில் கண்டவர்கள் உள்ளனர். ஊர்காவற்துறை தீவு பூராவும் கடற்படையினர் இறுக்கமாக நிலைகொண்டுள்ளனர். கடற்படையினருக்குத் தெரியாமல் ஒருவர் காணாமல் போவது சாத்தியமற்றதாகும். இந்த காணாமல் போன சம்பவத்தில் கடற்படையும் பொலிசும் சம்பந்தப்பட்டிருப்பதாக சோ.ச.க. குற்றஞ்சாட்டுகிறது. நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் மூழ்கடித்துள்ள ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், இத்தகைய காணாமல் போகும் சம்பவங்களுக்கு பொறுப்பாளியாகும்."

பாதுகாப்பு அமைச்சு, ஊர்காவற்துறையிலும் புங்குடு தீவிலும் உள்ள கடற்படை முகாம்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிசுக்கும் சோ.ச.க. உத்தியோகபூர்வமாக அறிவித்தும், விமலேஸ்வரனையும் மதிவதனனையும் கண்டுபிடிப்பதற்கு பொலிசும் இராணுவமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு மூடிமறைப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, என ரட்னாயக்க சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று, திருகோணமலை மாவட்டத்தில் முல்லிப்பொத்தானையில் சோ.ச.க. ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் கொல்லப்பட்டதை ரட்னாயக்க நினைவூட்டினார். பொலிஸ் விசாரணைகளின் குறைபாடானது, கடந்த ஆண்டு பூராவும் காணமல் போண அல்லது கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்பாக இராஜபக்ஷ அரசாங்கத்தின் அலட்சியப் போக்கையே சுட்டிக்காட்டுகின்றது.

விமலேஸ்வரனின் வாழ்க்கையைப் பற்றி விளக்கிய ரட்னாயக்க தெரிவித்ததாவது: "ஊர்காவற்துறையில் வறிய குடும்பம் ஒன்றில் இருந்து வந்த விமலேஸ்வரன் அவரது சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். தனது பத்தாவது வயதிலேயே குடும்பச் சுமையைத் தாங்கத் தள்ளப்பட்ட அவர், மீன் பிடிப்பதன் மூலம் வருவாய் ஈட்டிக்கொண்டார். அவரால் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. உள்நாட்டு யுத்த நிலைமைகளின் கீழ் பெரும்பாலான இளைஞர்கள் எதிர்கொண்டுள்ள நிலைமை இதுவே.

யுத்தத்தின் மத்தியிலேயே விமலேஸ்வரன் வளர்ந்தார். அவரது சம காலத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் கொழும்பு அரசாங்கத்திற்கு எதிராக போரிடுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டனர். சோ.ச.க. உறுப்பினர்களை சந்தித்த விமலேஸ்வரன் புலிகளின் அரசியல் முன்நோக்கின் வங்குரோத்தைப் புரிந்துகொண்டார். தேசியப் பிரச்சினையையும் மற்றும் உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள ஏனைய எரியும் பிரச்சினைகளையும் தீர்க்க ஒரு அனைத்துலக சோசலிச முன்நோக்கின் தேவையை அவர் கண்டார். அவர் ஊர்காவற்துறையில் மீனவர்களினதும் ஏனையவர்களதும் உரிமைகளைக் பாதுகாப்பதில் முன்நின்றார்.

கூட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ரட்னாயக்க வலியுறுத்தினார். ''விமலேஸ்வரனும் அவரது நண்பரும் காணாமல் போய் 19 நாட்கள் கடந்து விட்டன. அவர்களது உயிர் பெரும் ஆபத்தில் உள்ளது." இவர்களைக் கண்டுபிடித்து விடுதலை செய்துகொள்வதற்கான பிரச்சாரத்தை உக்கிரப்படுத்த உதவுமாறு அவர் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் தெரிவித்ததாவது: "இந்த காணாமல் போன சம்பவம் தற்செயலானதல்ல. இது கடந்த 25 ஆண்டுகளாக கொழும்பில் ஆட்சி செய்த அரசாங்கங்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த கொடூரமான உள்நாட்டு யுத்தத்தின் விளைவாகும். இந்த உள்நாட்டு யுத்தத்தின் பெறுபேறாக 75,000 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் யுத்தம் உக்கிரமாக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து 4,000 த்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதோடு 225,000 ற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதே காலத்தில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர்."

ஊர்காவற்துறையில் விமலேஸ்வரனின் பாத்திரத்தைப் பற்றி விளக்கிய டயஸ் தெரிவித்ததாவது: "அவருடைய புகழுக்கு பின்னால், யுத்தத்தை நிறுத்த விரும்பும் இலட்சக்கணக்கானவர்களின் அபிலாஷைகளுக்கு நனவு பூர்வமான வெளிப்பாட்டை கொடுக்க சோ.ச.க. யின் உறுப்பினர் என்ற வகையில் அவர் முன்னெடுத்த போராட்டமே உள்ளது. அதே சமயம், தீவுப் பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள கடற்படையின் பலவித அச்சுறுத்தல்களுக்கு எதிராக, மீனவர்களது உரிமைகளையும் மற்றும் அவர்களது ஜீவனோபாயத்தையும் காப்பதற்கான போராட்டத்தில் அவர் ஒரு முன்னணிப் போராளியாவார்.

"சோசலிஸ்டுகள் என்ற அடிப்படையில், நாங்கள் ஒவ்வொரு மனிதனதும் உயிரின் பெறுமதியை ஏற்றுக்கொள்கிறோம். அதே சமயம், கொடூரமான யுத்தம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக சோசலிசத்திற்காக போராடும் ஒருவரின் உயிரின் சமூகப் பெறுமதி எல்லையில்லாதது மற்றும் அளவுகடந்தது என்பதை நாம் வலியுறுத்துகிறோம். அந்த வகையில், விமலேஸ்வரன் போன்ற சோசலிஸ்டுகள் காணாமல் போகின்றமையும் இதற்குள் அடங்கும்."

இலங்கையில் நடைபெறும் யுத்தத்தின் பூகோள உள்ளடக்கத்தை தெளிவுபடுத்திய டயஸ், இலங்கை உள்நாட்டு யுத்தத்திற்கும் புஷ் நிர்வாகத்தின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தினார். "நாங்கள் உள்நாட்டு யுத்தம், ஏகாதிபத்திய யுத்தம் மற்றும் உலக யுத்தத்தின் யுகத்திற்குள் பிரவேசித்துள்ளோம். 2001ல் ஆப்கானிஸ்தானையும் 2003ல் ஈராக்கையும் அமெரிக்கா ஆக்கிரமித்தமை ஏகாதிபத்திய நடவடிக்கைகளாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக, ஈராக் வெகுஜனங்கள் மீது தமது கட்டுப்பாட்டை ஸ்தாபித்துக்கொள்ள அமெரிக்க இராணுவம் முயற்சித்த அளவில், முடிவற்ற உயிரிழப்புக்களையும் பேரழிவுகளையும் நாம் காண்கின்றோம். முழு நகரங்களும் தரைமட்டமாக்கப்படுவதை நாம் கண்ணுற்றுள்ளோம். இது படுகொலைகளின் ஆரம்பம் மட்டுமே. புஷ் நிர்வாகத்திற்கு அல்லது வெள்ளை மாளிகையை கைப்பற்றிக்கொண்டுள்ள இன்னுமொரு நபருக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் யுத்தத்தை நிறுத்த முடியாது. அத்தகைய சிந்தனைகள் வெறும் மாயைகளே.

இந்தப் பிரச்சாரம் விமலேஸ்வரன் மற்றும் மதிவதனன் காணாமல் போயுள்ளமை தொடர்பாக விசாரணை செய்ய நெருக்குவதற்காக மட்டும் அல்ல என டயஸ் விளக்கினார். அது ஜனநாயக உரிமைகளையும் சமூக நிலைமைகளையும் காக்க ஒரு சோசலிச முன்நோக்கை அடிப்படையாகக் கொண்டு சுயாதீனமான அரசியல் இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதன் தேவையின் நிமித்தம் உழைக்கும் மக்களுக்கு கல்வியூட்ட வேண்டும். யுத்தத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது காணாமல் போகும் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வராது.

மேலக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் கண்காணிப்புக் குழு அன்றைய தினம் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்துள்ளதையும் பற்றி டயஸ் குறிப்பிட்டார். மக்கள் கண்காணிப்புக் குழு காணாமல் போகும் சம்பவங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் அதே வேளை, அது வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐ.தே.க.) கூட்டுச் சேர்ந்து கொண்டுள்ளது. அந்தக் கருத்தரங்கின் பிரதான பேச்சாளராக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இருந்தார்.

"அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர்களுக்கு எதிரான இனவாத உள்நாட்டு யுத்தத்தை தொடங்கி வைத்ததற்கு மட்டும் பொறுப்பாளி அல்ல, அது பத்தாயிரக்கணக்கான தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் காணாமல் போனதற்கும் பொறுப்பாளியாகும். ரனில் விக்கிரமசிங்க பட்டலந்த வதை முகாமுடன் (கொழும்பின் புறநகர் பகுதியில்) சம்பந்தப்பட்டவராவார். ஐக்கிய சோசலிசக் கட்சி இப்போது விக்கிரமசிங்கவிற்கு வெள்ளை பூசுவதோடு அவரது கட்சியை ஜனநாயகத்தின் பாதுகாவலனாக முன்நிறுத்துகிறது," என்று டயஸ் குற்றஞ்சாட்டினார்.

காணமால் போனவர்களை கண்டறியும் குழுவை ஸ்தாபித்த நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவின் பாத்திரத்தைப் பற்றியும் டயஸ் விளக்கினார். கருணாராட்ன அமெரிக்க தூதர் ரொபட் பிளேக்கிற்கு அனுப்பிய கடிதத்தில் பிரகடனம் செய்திருப்பதாவது: "தங்களது அரசாங்கம் இங்கு ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதையும் மற்றும் மனித உரிமைகள் மீறப்படுவதையும் பற்றி அக்கறை செலுத்துவதால், இந்த விவகாரத்தை (காணாமல் போகும் சம்பவங்கள்) இலங்கை அரசாங்கத்துடன் பேசுமாறு நாம் தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்." புஷ் நிர்வாகம் ஈராக்கில் படுகொலைகளை முன்னெடுக்கும் அதே வேளை இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்தத்திற்கும் ஆதரவளிக்கின்ற நிலைமையிலும் கூட கருணாரட்ன இதை எழுதுகின்றார்.

ஏனயை நாடுகளில் போலவே இலங்கையிலும், சமூக சமத்துவமின்மை ஆழமடைந்துள்ளது என டயஸ் விளக்கினார். பெரிய கம்பனிகளதும் வங்கிகளதும் இலாபம் பல மடங்கு அதிகரித்துள்ள அதே வேளை, தொழிலாளர் வர்க்கம் அதன் வாழ்க்கைத் தரம் மீது கூர்மையான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளது. சமூக சமத்துவமின்மையும் ஜனநாயக உரிமைகளும் உடனொத்து இருக்க முடியாதவை. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஜாதிக ஹெல உறுமய ஆகிய பேரினவாதக் கட்சிகளின் ஆதரவிலான இனவாத யுத்தத்தை உக்கிரப்படுத்துவதானது, வெகுஜன எதிர்ப்பை திசை திருப்பி ஜனநாயக உரிமைகள் மீது பெரும் விளைவுகள் கொண்ட தாக்குதல்களை முன்னெடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசக் குடியரசு ஒன்றியங்களின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை கட்டியெழுப்புவதற்குப் போராடுவதே உழைக்கும் மக்களுக்கான ஒரே பொருத்தமான முன்நோக்காகும் என விஜே டயஸ் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கைத் துருப்புக்களை உடனடியாக திருப்பியழைக்க விடுக்கும் கோரிக்கை, தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஸ்தாபிப்பதற்குத் தீர்க்கமானதாகும். அவர் விமலேஸ்வரனையும் மதிவதனனையும் விடுதலை செய்துகொள்வதற்கான பிரச்சாரத்தை உக்கிரமாக்கவும் மற்றும் சோ.ச.க. யை உழைக்கும் மக்களின் பரந்த அனைத்துலகவாத சோசலிசக் கட்சியாக கட்டியெழுப்பவும் இணையுமாறும் அழைப்பு விடுத்தார்.

இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணையைக் கோரி கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Gotabhaya Rajapakse,
Secretary of Ministry of Defence,
15/5 Baladaksha Mawatha,
Colombo 3, Sri Lanka
Fax: 009411 2541529
e-mail: secretary@defence.lk

N. G. Punchihewa
Director of Complaints and Inquiries,
Sri Lanka Human Rights Commission,
No. 36, Kinsey Road,
Colombo 8, Sri Lanka
Fax: 009411 2694924

சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) உலக சோசலிச வலைத் தளத்திற்கும் கடிதங்களை அனுப்பி வையுங்கள்.

Socialist Equality Party,
P.O. Box 1270,
Colombo, Sri Lanka.
Email: wswscmb@sltnet.lk

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப தயவுசெய்து இந்த online படிவத்தைப் பயன்படுத்தவும்.