World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

For a socialist and internationalist perspective to fight French President Sarkozy's social cuts

பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசியின் சமூக வெட்டுக்களை எதிர்த்துப் போராட ஒரு சோசலிச சர்வதேச முன்னோக்கு

By the editorial board
13 November 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியினால் தலைமை தாங்கப்படும் கோலிச அரசாங்கத்தினால் நடாத்தப்படும் சமூகத் தாக்குதல்களுக்கு எதிரான வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் பிரெஞ்சு தொழிலாளர் மற்றும் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவரும் அறிக்கையின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு.

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதியங்கள் மற்றும் அடிப்படை சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நவம்பர் 13, 14 மற்றும் மாதம் முழுவதும் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் மையப் பிரச்சினை அரசியல் முன்னோக்கு பற்றியதாகும். செய்தி ஊடகம் சார்க்கோசியை புகழ்ந்து வரும் தன்மையை, அக்டோபர் மாத நடுவில் எழுந்த சக்திவாய்ந்த வேலைநிறுத்த அலை தகர்த்துள்ளதுடன் பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் அவருடைய அரசியல் வேலைத்திட்டத்தின்மீது கொண்டுள்ள உண்மையான அணுகுமுறையையும் வெளிப்படுத்தியுள்ளது.

வேலைநிறுத்தம் செய்யும் போக்குவரத்து, எரிவாயு மற்றும் மின்சாரப் பிரிவுத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவமனைகள், உள்ளூராட்சி அரசாங்கப் பிரிவு ஊழியர்கள், அஞ்சல் துறை, தொலைத் தொடர்பு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பல்கலைக் கழகங்களை தனியார் மயமாக்க வழிவகுக்கும் பல்கலைக்கழக சீர்திருத்தங்களை எதிர்த்துப் போராடும் மாணவர்கள் ஆகியோரால் இணையப்பெற்று, அனைவரும் மோசமாகி வரும் வாழ்க்கைத் தரங்களை எதிர்த்தும் வேலைபாதுகாப்பு நாடியும், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகவுமான போராட்டத்தில் உள்ளனர்.

சார்க்கோசியின் திட்டங்களுக்கு உறுதியான எதிர்ப்பு மட்டுமே தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள், வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை காப்பாற்றுவதற்குப் போதாதது.

சார்க்கோசி, தொழிலாள வர்க்கத்தின் மீது தீர்க்கமான தோல்வியை திணிப்பதற்கான பல அறிகுறிகள் தென்படுகின்றன என்ற எச்சரிக்கையை கொடுப்பது அவசியமானதாகும். வாஷிங்டனில் பேசுகையில், சார்க்கோசி அறிவித்தார்: "நான் உறுதியாய்க் கருதுவேன். பிரான்ஸ் கடந்த காலத்தில் அளவுக்கதிகமாய் பின்தங்கி விட்டது. மேலும் பின்தங்க அதனால் முடியாது."

லு மொன்ட் இன் Eric Le Boucher, சார்க்கோசியின் நிலைப்பாட்டை முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சரின் தொழிலாள வர்க்க விரோத தாக்குதலுடன் ஒப்பிட்டு, வர்த்தக வட்டாரம் "ஜனாதிபதிக்கு வேறு வழி இல்லை என்பதை அறியும். அவர் விட்டுக் கொடுத்தால் அவர் சிராக்கின் கதியைத்தான் அடைவார்".

இப்போராட்டத்தை தனிமைப்படுத்தவும் கீழறுக்கவும் சார்க்கோசி தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் உத்தியோகபூர்வ "இடதின்" கோழைத்தனத்தையும் துரோகத்தையும் நம்பி உள்ளார். இந்த வங்குரோத்தான அமைப்புக்களின் மீது நம்பிக்கை வைக்கப்படக் கூடாது.

கோலிச அரசாங்கத்தை கீழிறக்கி அதற்குப் பதிலீடாய் உண்மையான ஜனநாயக ரீதியான தொழிலாளர்களின் அரசாங்கத்தை வைப்பதை நோக்கமாகக் கொண்ட, முழு தொழிலாள வர்க்கத்தின் முழு தொழிற்துறை மற்றும் அரசியல் அணிதிரட்டலின் மூலம் மட்டுமே வேலைகள், ஓய்வூதியங்கள் மற்றும் கல்வி ஆகியன பாதுகாக்கப்பட முடியும். இதன் பொருள் ஒரு சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த புதிய கட்சியை கட்டுவதற்கான போராட்டத்தை எடுக்க வேண்டும் என்பதாகும்.

கடந்த ஒரு தசாப்தமாக, 1995 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் ஓய்வூதியக் குறைப்புக்களுக்கு எதிராகவும் 2006ல் தொழிற் சட்ட "சீர்திருத்தங்களுக்கு" எதிராகவும் பல வெகுஜன வேலைநிறுத்த அலைகள் வெடித்துள்ளன. திட்டமிடப்பட்ட வெட்டுக்களில் மிகக் கடுமையானவற்றை சற்றே குறைத்திடும் வகையில் இந்த வேலைநிறுத்தங்கள் ஓரளவு வெற்றிகளை கொண்டிருந்தாலும், அதன் விளைவு அடுத்த அரசாங்கம் வந்தவுடன் இன்னும் கூடுதலான சமூகக் குறைப்புக்களுக்கான புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததில் இருந்து தான் பெற்றுள்ள சமூக நலன்கள் அனைத்தையும் அழித்துவிட வேண்டும் என்ற உறுதியைக் கொண்டுள்ள ஒரு எதிராளியை சார்க்கோசி வடிவத்தில் இப்பொழுது தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ளது. சிறப்புத்திட்ட ஓய்வூதிய நலன்களை தகர்க்கும் அவருடைய கருத்துக்கள், முழு மக்களுக்கும் ஓய்வூதிய உரிமைகளில் பெரும் வெட்டுக்களை கொண்டுவருவதற்கு ஒரு தேவையான முன்னோடியாக உள்ளன.

செப்டம்பர் 18ம் தேதி "சமூக ஒப்பந்தம்" பற்றிய தன்னுடைய உரையில் சார்க்கோசி கூறினார்: "தாங்கள் உழைக்க வேண்டிய ஆண்டுகள் 37.5 முதல் 40 என்றும் பின்னர் 41 வரை உயர இருக்கிறது என்ற நிலையில் ஒரு பொறியியல் தொழிலாளி அல்லது ஆசிரியர் இருக்கும்போது, பெரும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒரு தொழிலாளி 37.5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக உழைத்தாலே போதும் என்றுள்ள நிலையை எப்படி விளக்க முடியும்?"

வேலைக்கு சேர்க்கவும் வேலையிலிருந்து நீக்கவும் வகைசெய்யும் தொழில் சட்டங்களை மாற்றி எழுதுதல், மருத்துவ பாதுகாப்பு பெறுவதற்கு கட்டணம் செலுத்துதல், பொதுத்துறையில் வேலையிழப்புக்கள் போன்ற இன்னும் கூடுதலான பிற்போக்கான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்துவதற்குத் தயார் நிலையில் உள்ளன.

தொழிற்சங்கத் தலைவர்களும் 1995, 2003, 2006 ஆகிய ஆண்டுகளில் கொண்ட பங்கை மீண்டும் கடுமையாக செயல்படுத்தும் வகையில் உள்ளனர்: அதாவது வேலைநிறுத்தங்களை அதிக இடைவெளி விட்டு நடத்தி தொழிலாளர்களை களைப்படையவும், சோர்வடையவும் வைத்தல். அக்டோபர் 18ம் தேதி, சார்க்கோசியின் ஆத்திரமூட்டல் நிறைந்த சமூகக் கொள்கை பற்றிய உரைக்கு ஒரு மாதம் கழித்து வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்த பின், (ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட) CGT தலைமையிலான முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் அவை தொடரப்பட வேண்டும் என்பதற்காக நடத்திய கூட்டங்களை புறக்கணித்தன. CGT தலைவர் பேர்னாட் திபோ சார்க்கோசி "எவரும் போட்டியிட முடியாத ஒரு சட்ட நெறியை" கொண்டுள்ளார் எனக் கூறும் அளவிற்குச் சென்றார். அக்டோபர் 31ல் நடந்த கூட்டத்தில், இவர்கள் நவம்பர் 13 வரை அடுத்த வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஒத்திவைத்தனர்.

சார்க்கோசியுடன் சமூக வெட்டுக்கள் பற்றிய மோசமான உடன்பாடுகளை பேசிமுடிப்பதற்கான தங்களின் முயற்சிகளை தொழிலாளர்களின் அரசியல் போராட்டம் குறுக்காய் வெட்டி விடுமோ என்பதுதான் தொழிற்சங்க அலுவலர்களின் தீய கனாவாக உள்ளது. அவர்கள் தொழிலாளர்களை பிளவுபடுத்தி, சிறப்புத்திட்ட சலுகைக் குறைப்புக்களுக்கு எதிரான இரயில்வே ஊழியர்கள் மற்றும் மின்துறையினர் வேலைநிறுத்தம், ஊதியங்களுக்கான ஏயர் பிரான்ஸ் வேலைநிறுத்தம், வேலையழிப்புக்கள் மற்றும் நிலைமைகள் மீதான ஏயர்பஸ் வேலைநிறுத்தம், வேலைக் குறைப்புக்களுக்கு எதிராக பொதுத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், பல்கலைக் கழக தன்னாட்சி சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் போன்ற சார்க்கோசியின் அரசாங்கத்திற்கு எதிரான பல வேலைநிறுத்தங்கள், சார்க்கோசியின் கொள்கைகளுக்கு எதிரான ஒன்றுபட்ட இயக்கமாக மாறுவதை தடுத்து நிறுத்த முயல்கின்றனர்.

CFDT இன் (சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்த Confédération française et démocratique du travail) தலைவரான François Chérèque கூறியுள்ளபடி, "சிறப்புத்திட்ட பிரிவுகள், பொதுப்பணித் துறை ஊழியர்கள் மற்றும் வேறென்ன இருக்கிறது என்பது கடவுளுக்குத்தான் தெரியும், இவற்றுக்கிடையில் இயக்கங்களின் ஒரு கலவை ஏற்பட்டால், [வேலைநிறுத்த இயக்கத்தில் இருந்து] வெளியேறுவதற்கான உரிமையை பின்னர் பயன்படுத்துவதற்கு ஒதுக்கி வைப்போம்."

உண்மையில், சார்க்கோசியின் சமூகச் செலவின வெட்டுகளுக்கு எதிரான எந்த தீவிரப் போராட்டமும் அனைத்து வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் என்று தற்பொழுது இருப்பவற்றை சார்க்கோசியின் ஆட்சியை நேரடியாக சவால் செய்யும் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கமாக கட்டாயம் ஒன்றிணைக்க வேண்டும். அதிகம் பேசப்பட்டுவரும் இவருடைய "நெறித்தன்மை" என்பது ஒரு மோசடியாகும்; அது பிழையினால் வெல்லப்பட்ட ஒரு தேர்தல் முடிவு ஆகும்; சோசலிசஸ்ட் கட்சி வேட்பாளர் செகோலென் ரோயால் சார்க்கோசியின் கொள்கைகளில் இருந்து கிட்டத்தட்ட பிரித்து இனம் காணமுடியாத வகையில் வலதுசாரிக் கொள்கைகளை முன்வைத்திருந்தார். 1995, 2003, 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள் பலமுறை காட்டியுள்ளதுபோல், இத்தகைய கொள்கைகளுக்கு பரந்த மக்கள் எதிர்ப்பு உள்ளது; ஆட்சியின் முக்கிய தளம் பெரும் செல்வக் கொழிப்பு உடையவர்களிடத்தில்தான் அமைந்துள்ளது.

இத்தகைய போராட்டத்திற்கு, ஆளும் வர்க்கத்தின் சமூக விரோதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்து தொடரக்கூடிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் கட்சி தேவையாகும். உலக சோசலிச வலைத் தளமும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் தம்மை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டு, ஏற்றுள்ள பணி இதுதான். நாங்கள் கீழ்க்கண்ட கருத்துக்களுக்காக உறுதியாக நிற்கிறோம்.

1) தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம்

புதிய கட்சியானது, சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என்ற இடது அமைப்புக்களின் மற்றும் அவற்றுடன் அரசியல் ரீதியாக கூட்டு வைக்க முயற்சிப்பவர்களின் அரசியல் செல்வாக்கை முற்றிலும் கட்டாயம் நிராகரிக்க வேண்டும். இக்கட்சிகளின் வலதுசாரிக் கொள்கைகள், குறிப்பாக பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் தலைமையின் கீழ் இருந்த கடைசி சோசலிஸ்ட் கட்சி அரசாங்கமான பன்முக இடது கூட்டணி கம்யூனிஸ்ட் மற்றும் பசுமைவாதிகளுடன் சேர்ந்து பிரெஞ்சு வலதை 2002ல் அதிகாரத்திற்கு கொண்டுவருவதிலும் இன்னும் கூடுதலான வகையில் சமூகத் தாக்குதல்களை நடத்துவதிலும் முக்கிய பங்கை பெற்றிருந்தன. 2007 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் சோசலிஸ்ட் கட்சியால் சமீபத்தில் விளக்கிக்காட்டப்பட்டது போல், அனைத்து நடைமுறை இலக்குகளிலும் சோசலிஸ்ட் கட்சி சார்க்கோசியின் அரங்குடன் முழு உடன்பாட்டைக் கொண்டது.

சார்க்கோசியின் அரசியலுடனான அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்புக்களின் முழு ஒத்துழைப்பையும் சமரசத்திற்கு இடமில்லாமல் அரசியல் அம்பலப்படுத்தல் உட்பட, இந்த அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்புக்களுடன், அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாக உடைத்துக் கொள்ளுதல், சார்க்கோசியின் தாக்குதல்களுக்கு எதிரான ஒரு வெற்றிகரமான போராட்டத்திற்கு தவிர்க்கமுடியாத முன்நிபந்தனை ஆகும்.

2) சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தை ஒரு சோசலிச முறையில் மறுஒழுங்கமைத்தல்

பெரு முதலாளிகளுக்கு மகத்தான நிதியச் சலுகைகளை கொடுத்து அதே நேரத்தில் ஓய்வூதியங்கள், பிற சமூக உரிமைகளை தகர்த்தல் என்னும் சார்க்கோசியின் கொள்கையில், பெரும் முதலீட்டாளர்கள் மற்றும் CEO க்களின் கரங்களில் தனியார் செல்வக் கொழிப்பை கட்டுப்பாடற்ற, பெருகிய முறையில் சேர்த்தல் என்ற அழிவுதரும் தர்க்கம்தான் வெளிப்பட்டுள்ளது. Bettercourts, Dassaults, Pinaults பல மில்லியன் யூரோக்களை நல்வாய்ப்பாய் பெறுகையில், சார்க்கோசி உயர்மட்ட வருமானம் உடையவர்களுக்கு பெரும் வரிச் சலுகைகளை கொடுக்கையில், தொழிலாளர்களுடைய சுமாரான ஓய்வூதியங்கள் பொது கஜானாவுக்கு அளவுக்கதிகமான செலவினம் என்று கூறப்படுகிறது.

அரசாங்கம், பணியிடங்களில் சமூகச் செலவின சிக்கனங்களை ஆணையிடுவதற்கு அனுமதிப்பதற்கு பதிலாக தொழிலாளர்கள் பொருளாதாரத்தின் மூலோபாய உயர்நிலைகளை சமூகக் கட்டுப்பாட்டிற்கு கீழ்ப்பட்டு இருக்கும் வகையில் செய்ய வேண்டும். பெரு நிறுவனங்கள், வங்கிகள், விசை நிறுவனங்கள், முக்கிய உற்பத்தியாளர்கள், தொலைத் தொடர்புகள், போக்குவரத்துப் பிரிவுகள் ஆகியவற்றை பொது உடைமையின்கீழ், ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதன் மூலம் தொழிலாளர்கள் பொருளாதார செயற்பாடுகளின் பகுத்தறிவார்ந்த மற்றும் திட்டமிட்ட வளர்ச்சியை சாத்தியமாக்க வேண்டும்.

3) சர்வதேசியம்

ஐரோப்பா மற்றும் உலகத்தின் தேசிய முதலாளித்துவ வர்க்கங்கள் முதலீட்டிற்கும் மூலதனத்திற்கும் மிக அதிக இலாப விகிதத்தை பெறுவதற்காக ஒன்றோடொன்று போட்டியிடுவதுடன், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை இரக்கமற்ற முறையில் குறைப்பதற்கும் போட்டியிடுகின்றன. ஆனால் தொழிலாள வர்க்கம்தான் உண்மையிலேயே ஒரு சர்வதேச வர்க்கம் ஆகும்: மலிவு விலை உழைப்பை பெற்றிருக்கும் நிறுவனங்களுடன் தொடர்ந்து போட்டிமிக்கதாக இருப்பதற்கான முயற்சியில் ஒவ்வொரு நாட்டின் முதலாளித்துவ வர்க்கமும் தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்கள், மற்றும் வாழ்க்கைத் தரங்களை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்ற நிலையில், உலகின் எந்தப்பகுதியிலும் தொழிலாள வர்க்கம் அடையும் ஒவ்வொரு தோல்வியும் அதன் நலன்களை எதிர்மறையாகப் பாதிக்கின்றது.

பிரெஞ்சு இரயில் தொழிலாளர்கள் தங்களுடைய ஓய்வூதிய உரிமைகளை காப்பதற்கு வேலைநிறுத்தங்களை மேற்கொண்டிருக்கும் அதே நேரத்தில், சக்தி வாய்ந்த ஜேர்மனிய தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் மீறி ஜேர்மனிய இரயில் டிரைவர்களும் குறைந்த ஊதியத்திற்கு எதிராகவும், தனியார் மயமாக்குதலுக்கு எதிராகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டிஷ் அஞ்சல் துறை தொழிலாளர்கள் தனியார்மயமாக்கல் திட்டங்களுக்கு எதிராக திடீர் வேலைநிறுத்தங்களை அதிகரித்த வகையில் செய்கின்றனர். தனியார்மயம், சமூகச் செலவின சிக்கனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக உண்மையான ஐரோப்பா-தழுவிய இயக்கம் ஒன்று வெளிப்படுவதற்கான நிலைமைகள் தோன்றிவருகின்றன.

பிரான்சில் இருக்கும் சமூக அழுத்தங்களுக்கு புலம்பெயர்ந்தோர்களை பலிகடாக்களாக ஆக்கும் முயற்சியில் சார்க்கோசி அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், சர்வதேசியம் என்பது, வெளிநாட்டில் பிறந்த தொழிலாளர்களது உரிமைகள் மற்றும் அனைத்து வடிவங்களிலான தேசிய வெறி, இனவெறி, பின்தங்கிய நிலைமை ஆகியவற்றிற்கு எதிராக சமரசத்திற்கு இடமில்லாத வகையில் எதிர்ப்பு உள்பட, தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் உரிமைகள் உறுதியாகக் காக்கப்பட வேண்டும் என்று குறிப்பாய் தெரிவிக்கிறது.

4) இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிர்ப்பு

புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை மற்றும் மத்திய கிழக்கில் பரந்த போருக்கான அதன் திட்டங்கள் ஆகியவற்றின் பின்னே சார்க்கோசி ஊசலாடிக் கொண்டு, அதே நேரத்தில் அவர் பிரெஞ்சு தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களின் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது தற்செயலான நிகழ்வு அல்ல. உலகம் முழுவதும் கிடைக்கும் இலாபங்களில் கூடுதலான பங்கை கைப்பற்ற வேண்டும் என்னும் பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் அதிகரித்துவரும் வெறிபிடித்த கணக்கீடுகளைத்தான் இவ்வளர்ச்சிகள் குறிக்கின்றன.

எண்ணெய், மற்றும் பரந்த மத்திய கிழக்கில் மூலோபாய நன்மை மீதாக, பிரதான சக்திகளுக்கு இடையில் ஒரு பூகோள மோதலாக மாறக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்ட, ஒரு போருக்கான பல்வேறு முதலாளித்துவ தேசிய (கன்னைகளின்) பிரிவுகளின் குற்றகரமான திட்டங்களை தொழிலாளர்கள் கட்டாயம் எதிர்க்க வேண்டும். இராணுவச் செலவினங்களை சரிசெய்வதற்காக சமூகச் செலவினங்களை குறைக்கவும், தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரங்களை குறைக்கவும் போலிக்காரணங்களாக இவை பயன்படுத்தப்படும்; ஆனால் இவை பெரும் மனித இழப்புக்களை ஏற்படுத்தும் மற்றும் அறநெறி, கலாச்சார பிற்போக்குத்தனத்தை கொண்டுவரும் போர்கள் பற்றிய அச்சுறுத்தலை கொண்டுள்ளன.

சார்க்கோசியின் சமூக வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்திற்கு எளிதான விடைகளோ அல்லது குறுக்கு வழிகளோ ஏதும் கிடையாது. முழு ஆளும் உயரடுக்கு, அதன் கூட்டாளிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரின் சூழ்ச்சிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசியல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க கூடிய ஒரு அரசியல் தலைமை கட்டாயம் கட்டியமைக்கப்பட வேண்டும். உலக சோசலிச வலைத் தளத்தை படிக்குமாறும் மற்றும் அத்தகைய அமைப்பைக் கட்டியமைக்கும் போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணையுமாறும் நாம் அனைத்து பிரெஞ்சுத் தொழிலாளர்களையும் மாணவர்களையும் அழைக்கின்றோம் .