World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

West Bengal's Stalinist government mounts terror campaign to quash peasant unrest

விவசாயிகளின் கிளர்ச்சியை நசுக்குவதற்கு மேற்கு வங்க ஸ்ராலினிச அரசாங்கம் பயங்கர நடவடிக்கைகளை அதிகரிக்கிறது

By Kranti Kumara
15 November 2007

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலமாக இருப்பதில் மூன்றாம் இடத்தை வகிக்கும் மேற்கு வங்கத்தில் ஸ்ராலினிச அரசாங்கம், கொலை வெறிநடவடிக்கை மூலம் கொல்கத்தாவிற்கு 160 கிலோமீட்டர் தென்மேற்கில் இருக்கும் நந்திகிராமத்தின் மீது மீண்டும் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியுள்ள போதிலும், இப்பகுதி, கடந்த 10 மாதங்களாக விவசாயிகளுடைய எதிர்ப்புக்களால் கொந்தளித்துப் போயுள்ளது.

நவம்பர் 6ம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் (மார்க்ஸிஸ்ட்டுக்கள்) ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுதமேந்திய குண்டர்களால் அதிகரித்த ஒரு வாரகால வன்முறையில் குறைந்தது எட்டு பேர்கள் கொல்லப்பட்டனர், பலரும் காயமுற்றனர். சிபிஎம் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தில் ஆதிக்கம் செய்யும் பங்காளிக் கட்சியாகும்.

குறைந்தது 10,000 கிராமவாசிகள் --சில தகவல்கள் மொத்த எண்ணிக்கையைக் கிட்டத்தட்ட 18,000 என்கின்றன-- நந்திக்கிராமம் பகுதியில் இருந்து ஓடிவிட்டனர்; நிவாரண முகாம்கள் அல்லது உறவினர்களிடம் அடைக்கலம் நாடியுள்ளனர்.

ஆரம்பத்தில் CPM குண்டர்கள் அவர்கள் நுழைவைத் தடுத்தாலும், இப்பொழுது அப்பகுதி நூற்றுக்கணக்கான மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது; அது மத்தியில் இருக்கும் காங்கிரஸ்-தலைமையிலான கூட்டரசாங்கத்திற்கு பொறுப்பு கூறக் கடமைப்பட்டுள்ளது.

மாநில அரசாங்கம், தங்கள் நிலத்தை அபகரித்து அவற்றை இந்தோனேசியாவை அடிப்படையாகக் கொண்ட சலீம் குழுமத்திற்காக ஒரு சிறப்புப் பொருளாதாரப் பகுதியாக மாற்றுவதை தடுக்கும் வகையில் நந்திக்கிராமம் விவசாயிகள் கிளர்ந்து எழுந்தனர். ஒரு சில CPM மற்றும் அதன் நெருக்கமான கூட்டாளியுமான CPI இன் உள்ளூர் தலைவர்களும் உறுப்பினர்களும் எழுச்சியில் கலந்துகொண்ட அதேவேளை, பின்னர் அவர்களில் பலரும் ஓட்டம் பிடிக்கவில்லை அல்லது அப்பகுதியில் இருந்து விரட்டி அடிக்கப்படவில்லை. இதன் பின் அரசாங்கப் பிரதிநிதிகள் வரமுடியாத இடமாக நந்திக்கிராமம் மாறியது; அவர்கள் வரமுடியாத வகையில் கிராமவாசிகள் சாலைகளைச் சிதைத்தனர்; பாலங்களை அழித்தொழித்தனர்.

மார்ச் 14ம் தேதி, --துணை இராணுவத்தினர், விரைவு நடவடிக்கை படையினர், போரிடும் கமாண்டோ பிரிவினர் அடங்கிய 4,000க்கும் மேற்பட்ட போலீசார்--இடது முன்னணி அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் நந்திகிராமத்தின்மீது ஆயுதமேந்திய தாக்குதலை நடத்தினர். எதிர்பார்க்கக் கூடிய விளைவான படுகொலைகளும் நிகழ்ந்தன. 14 விவசாயிகள் கொல்லப்பட்டனர், அதைப்போல் பல மடங்கு விவசாயிகள் காயமுற்றனர்; ஆனால் இறுதியில் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. (See: West Bengal Stalinist regime perpetrates peasant massacre)

இம்முறை, மூத்த கட்சித் தலைவர்களால் தங்கள் விரோதிகளை நசுக்குமாறு தூண்டப்பட்டதாக கூறப்படும் CPM குண்டர்கள், இன்னும் இரக்கமற்ற முறையில் செயல்பட்டனர். இவர்கள் காயம்பட்டவர்கள் மருத்துவ உதவியை பெறுவதற்குத் தடை செய்தனர் அல்லது நேரடியாக தடுத்தே விட்டனர் என்று நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவிக்கின்றனர். கிழக்கு மித்னாப்பூரின் துணை போலீஸ் கண்காணிப்பாளர், CPM குண்டர்களால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் இரு இளவயதுப் பெண்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று கூறினார்.

வலதுசாரி இந்தியன் எக்ஸ்பிரஸ், "இடைக்காலப் போர்களை நினைவுறுத்தும் வகையில் ஒரு நடவடிக்கையை CPM ஏற்பாடு செய்து சிறைபிடிக்கப்பட்ட BUPC உறுப்பினர்கள் 500 பேரை கட்டப்பட்டநிலையில், மனிதக் கேடயங்கள் போல் முன்னிறுத்தி அணிவகுத்தனர்." என்று எழுதியுள்ளது.

நிலத்தில் இருந்து வெளியேற்றுவதை எதிர்த்துப் போராடும் குழு அல்லது பூமிப் பாதுகாப்பு இயக்கம், (BUPC) நந்திக்கிராமத்தில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வருகிறது. காங்கிரசில் இருந்து பிரிந்த கட்சியும், வலதுசாரி வங்க தேசியவாதக் கட்சியும், மாநிலச் சட்டமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியுமான திரிணமூல் காங்கிரஸ் அரசியல் ரீதியாக இதனை வழிநடத்தி வருகிறது. ஆனால் இந்திய சோசலிச ஐக்கிய மையம் (SUCI), CPM ல் இருந்து பிளவுற்றவர்கள் உள்பட மற்ற போக்குகளும் BUPC ல் தீவிரமாக உள்ளன.

நந்திகிராமத்தில் நடக்கும் CPM ன் அப்பட்டமான, இரத்தம்தோய்ந்த அச்சுறுத்தும் நடைமுறை மேற்கு வங்கத்திலும் இந்தியா முழுவதிலும் எதிர்ப்புப் புயலைத் தூண்டியுள்ளது.

திங்களன்று, மாநிலத்தில் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் SUCI ஆல் அழைப்பு விடுத்து நடத்தப்பட்ட பந்த் அல்லது பொது வேலைநிறுத்தத்தினால் பெருமளவு முடங்கிப் போயின.

முன்பு பகிரங்கமாக அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதாக அறியப்பட்ட ஏராளமான அறிவுஜீவிகள், பலரும், CPM ஆல் இயக்கப்படும் வன்முறையைக் கண்டித்துள்ளனர்.

ஞாயிறன்று கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் நந்திக்கிராமம் வன்முறைக்கு எதிராக நடத்திய அமைதியான எதிர்ப்பு ஊர்வலத்தில் போலீசார் தடியடிப் பிரயோகம் செய்து பலரைக் கைதும் செய்தனர்; இது 13வது கொல்கத்தா திரைப்பட விழா அரங்கிற்கு வெளியே நடைபெற்றது.

திரைப்பட இயக்குனர்கள் ரிதுபர்ண கோஷ், அஞ்சன் தத்தா, கவி ஜோய் கோஸ்வாமி மற்றும் ஓவியர்கள் சனாதன் டிண்டா மற்றும் சமீர் ஐச் ஆகியோர் அடங்கியிருந்த எதிர்ப்பாளர்கள் கூட்டம் "நந்திகிராமத்தில் சிபிஎம் காரியாளர்களால் மக்கட்படுகொலை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்று கோரினர்.

திரைப்பட இயக்குனரான அபர்ணா சென் இடது முன்னணி ஆட்சிக்கு அதன் அடக்குமுறை தோல்வியடையும் என்று எச்சரிக்கை கொடுத்தார். "உண்மை அடக்கப்பட முடியாதது. வினாக்கள் எழுந்துள்ளன; தொடர்ந்து எழும். அரசாங்கம் பதில் சொல்லியாக வேண்டும்."

CPM ன் இடது முன்னணிக் கூட்டணிக் கட்சிகளான பார்வர்டு பிளாக் (FB), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (RSP), சிபிஐ ஆகியவை தங்கள் பங்கிற்கு நந்திகிராமம் கொடூரத்தில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துக் கொள்ள கடுமையாக முயன்று வருகின்றன.

மாநில பொதுப்ணித் துறை அமைச்சரான க்ஷீதி கோஸ்வாமி தன்னுடைய கட்சியான RSP யிடம் தன்னுடைய மந்திரிப் பதவியை இராஜிநாமா செய்வதற்கு அனுமதி கோரியுள்ளார்.

நந்திக்கிராமத்தில் CPM தாக்குதல் பற்றி கோஸ்வாமி குறிப்பிட்டுக் கூறியதாவது: "இதை ஒரு இனக் கொலை என்று நான் அழைப்பேனா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது நிச்சயமாக ஒரு கொலை, கொள்ளை, பேரழிவு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள திட்டமிட்ட முயற்சி."

கடந்த வாரம், நந்திக்கிராமம் நெருக்கடிக்கு ஒரு சமாதான வகைத் தீர்வை காண்பதாகவும் அப்பகுதிக்கு நிதியுதவித் தொகுப்பு ஒன்று வழங்கப்படும் என்றும் கூறிய வகையில் சிபிஎம் அதன் நட்புக் கட்சிகளை "ஏமாற்றிவிட்டது" என்று கோஸ்வாமி கூறினார். "அங்கு சொல்வது ஒன்று, செய்வது வேறொன்றாக உள்ளது" என்றார் அவர்.

RSP, CPI, FB ஆகியவற்றின் அவசரக் கூட்டத்தைத் தொடர்ந்து CPI யின் மாநிலச் செயலாளர் மஞ்சு குமார் மஜும்தார் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்: "மூன்று இடது முன்னணி நட்புக் கட்சிகளும் CPI-M ஐ தற்போதைய நந்திக்கிராமம் பிரச்சினைக்கு முழுப் பொறுப்பு என்று கருதுகின்றன. அங்கு நடப்பதற்கு நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை; ஐயத்திற்கு இடமின்றி அங்கு நடைபெறும் காட்டுமிராண்டித்தனம், வன்முறை ஆகியவற்றைக் கண்டிக்கிறோம்."

மேற்கு வங்க முதல் மந்திரியும் CPM அரசுயற்குழுவின் உறுப்பினருமான புத்ததேவ் பட்டாச்சார்ஜி திமிர்த்தனமாக தன்னுடைய அரசாங்கத்தின் உள்ளிருந்தும், வெளியிருந்தும் வரும் குறைகூறல்களை நிராகரித்துள்ளார். அவர் செவ்வாயன்று, "எதிர்க்கட்சிகளுக்கு அதேபாணியில் திருப்பிக் கொடுக்கப்பட்டது" என தற்பெருமையுடன் அறிவித்தார் மற்றும் புதனன்று அவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை நந்திக்கிராமத்திற்கு விரைவாகக் கொண்டு செல்லாததால் அங்கு வன்முறை ஏற்பட்டது என்று மத்திய அரசாங்கத்தை குற்றம் சாட்டினார்.

பட்டாச்சார்ஜி மற்றும் CPM ன் தலைமை, அரசாங்கத்தின் அதிகாரத்தை மீண்டும் இப்பகுதியில் நிலைநிறுத்துவதில் மற்றும் "சட்டம் ஒழுங்கை" காப்பதில் தாமதப்படுத்துதல் அனுமதிக்கப்படாது என்று கூறியுள்ளனர்; ஏனெனில் நந்திகிராமத்தில் மாவோயிச எழுச்சியாளர்கள் அல்லது நக்சலைட்டுக்களும் ஒரு தளத்தை வளர்க்கத் தொடங்கிவிட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தை "தொழில்மயமாக்குதல்" என்ற பெயரில், சிறப்புப் பொருளாதாரப் பகுதிகள் நிறுவப்படுதல், தகவல் தொழில்நுட்பம் தொடர்புடைய தொழில்களில் வேலைநிறுத்தம் அனுமதி மறுப்பு உள்ளடங்கிய "முதலீட்டாளர் நட்பு" கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் பட்டாச்சார்ஜி இந்திய மற்றும் வெளிநாட்டு மூலதனத்தை மாநிலத்திற்கு கொண்டுவருவதில் ஊடாடுவதற்கான உந்துதலை முன்னெடுத்து வருகிறார். இதற்காக அவர் புஷ் நிர்வாகத்தால் உத்தியோகபூர்வமாக அமெரிக்காவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்; மேலும் சமீபத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியலின் மிகப் பெரிய புள்ளியான ஹென்றி கிஸ்ஸிஞ்சரும் இவரைச் சந்தித்தார்.

நந்திக்கிராமம் குருதிப் பாதைக்கு CPM தலைமை மற்றும் இடது முன்னணி அரசாங்கம் அரசியல், ஏன் குற்றப் பொறுப்பைக் கூட ஏற்றாக வேண்டும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. இந்திய மற்றும் சர்வதேச முதலாளித்துவத்தின் சார்பில் நடந்து கொள்ளும் இவை, தங்கள் வாழ்வாதாரமாக இருக்கும் நிலங்களை கைவிடும்படி விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டுள்ளன.

ஆயினும்கூட, இந்தியாவின் தொழிலாளர்கள், உழைப்பாளிகள், சோசலிச எண்ணம் கொண்ட அறிவுஜீவிகள் கட்டாயம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: இந்திய முதலாளித்துவ வர்க்கம், ஒட்டுமொத்த அரசியலையும், இன்னும் வலதுபுறம் நகர்த்த, ஸ்ராலினிஸ்ட்டுகளின் மீது அழுத்தம் கொடுப்பதற்கு அவர்களின் குற்றங்களை பயன்படுத்த நோக்கம்கொண்டுள்ளது.

இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்றப் பிரிவுத் தலைவரான எல்.கே.அத்வானி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை மேற்கு வங்கத்தில் "ஜனாதிபதி ஆட்சியை" திணிக்குமாறு, அதாவது மாநில அரசாங்கத்தை மத்திய அரசாங்கம் நீக்குமாறு கோரியுள்ளார்.

பாராளுமன்றத்தில் தப்பிப் பிழைப்பதற்கு இடது முன்னணியை நம்பியிருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, (UPA) இந்த CPM, இடது முன்னணிக்குள் இருக்கும் நெருக்கடியைப் பயன்படுத்தி, வலதுசாரி செயற்பட்டியலை செயல்படுத்துவதில் அவை இன்னும் வளைந்து கொடுக்கும்படி செய்ய முயல்கிறது; குறிப்பாக இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவருதல் பற்றியதில் அவ்வாறு முயல்கிறது.

உண்மையில், அணுஆயுத உடன்பாடு பற்றிய இடது-UPA இடையிலான சிக்கலில் தடைதகர்த்து ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்தித்தாள் அறிக்கைகள் வந்துள்ளன. இந்தத் தகவல்களின்படி, இடது முன்னணி இப்பொழுது உடன்பாட்டை செயல்படுத்த வைக்கும் அடுத்த கட்டத்திற்கு அரசாங்கத்தை அனுமதிக்கும் என்றும், அதாவது, உலக அணுசக்திக் கட்டுப்பாட்டு அமைப்புக்குள் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும், சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஒப்புதலைப் பெறுவதில் மத்திய அரசாங்கம் மேற்கொண்டு செல்வதை அனுமதிக்கத் தயாராக இருக்கிறது.