World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian Supreme Court outlaws Tamil Nadu political protest

இந்திய உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டு அரசியல் போராட்டத்தை தடை செய்கிறது

By Kranti Kumara
4 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

போராடுவதற்கான ஜனநாயக உரிமையை அவமதிக்கும் வகையில், அக்டோபர் 1-ம் தேதி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஆளுங்கட்சி கூட்டணி அறிவித்திருந்த பந்த் (பொது வேலைநிறுத்தம்) அரசியல் அமைப்பிற்கு முரணானதென கடந்த ஞாயிறன்று (30.09.2007) இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், திமுக தலைமையிலான கூட்டணி உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிடுமாறும், அன்றாட செயல்பாடுகள் தடை இல்லாமல் செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அரசு எந்திரத்தை பயன்படுத்தவும் அது உத்தரவிட்டது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள உத்தியோகபூர்வ எதிர்கட்சியான அஇஅதிமுக அதே நாளில் அளித்த ஓர் உடனடி மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் அதன் தீர்ப்பை வழங்கியது. இந்த போராட்டம் தொழில்களை பாதிக்கும் என்பதுடன், பரவலான வன்முறைக்கும் வழிவகுக்கும் என்பதால் இதை தடை செய்யுமாறு, திமுக -வின் எதிர்கட்சியான அஇஅதிமுக நீதிமன்றத்திடம் கோரியது.

முன்னதாக அஇஅதிமுக-வின் இதேபோன்ற மனுவை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்த வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்ற அதன் தீர்ப்பில், வேலைநிறுத்தங்கள் அரசியல் அமைப்பிற்கு முரணானவை மற்றும் சட்டவிரோதமானவை என 1997-ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட கேரள உயர் நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை ஆதரித்து இருந்த, 1998-ம் ஆண்டின் ஒரு முடிவை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு காட்டியது. வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்களால் இதுபோன்ற போராட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன எனக் கூறி, அதன் தீர்ப்பை கேரள நீதிமன்றம் நியாயப்படுத்தி இருந்தது.

கடைகள், தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து உட்பட பொதுவான தினசரி தொழில்களின் கதவடைப்புகளை உட்கொண்டிருக்கும் இந்த பந்த் என்பது இந்திய அரசியல் போராட்ட முறையின் ஒரு அங்கமாக இருக்கிறது. பந்த்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தப்பட்டன, சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் தொழிலாள வர்க்கங்களாலும் மற்றும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வலதுசாரி கட்சிகள் மற்றும் குழுக்களால் இவை ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய பெருமுதலாளிகளுக்கு சினமூட்டும் வகையிலும் கிலியூட்டும் வகையிலும், இந்தியாவின் ஐ.மு. (ஐக்கிய முற்போக்கு) கூட்டணி அரசாங்கத்தின் நவீன தாராண்மை சமூக பொருளாதார கொள்கைகளை எதிர்க்க, ஸ்ராலினிச தலைமையிலான இடதுசாரி மற்றும் அதன் தொழிற்சங்க கூட்டாளிகள் அவ்வப்போது திரும்பத்திரும்ப ஒருநாள் பந்த்களை நடத்தி வருகின்றனர், அதேவேளையில், இந்திய பாராளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தொடர்ந்தும் முண்டுகொடுத்து வருகின்றனர்

இதுபோன்ற போராட்டங்களுக்கு எதிராக கடுமையான நிலையை எடுக்கும்படி நீதிமன்றங்களை பெருநிறுவன ஊடகங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை அளிக்கப்பட்ட தீர்ப்பானது, ஓர் ஆரம்ப நடவடிக்கை மட்டுமே என்பதை நிரூபிக்கும்.

திங்கட்கிழமைக்கு முந்தைய நாளான வாரயிறுதி நாளில் அளிக்கப்படும் மனுக்கள் மீதான விசாரணை வழக்கமானதாக இருப்பினும், இந்தியாவின் மிகப் பெரிய நீதிமன்றம், அஇஅதிமுக நீதிமன்றத்தை அணுகிய ஒருசில மணி நேரங்களிலேயே ஒரு சிறப்பு விசாரணைக்கு ஏற்பாடு செய்தது.

"நீதிமன்றத்தின் 1998-ம் ஆண்டு தீர்ப்பு இருக்கும் வரை, முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள பந்த்திற்கு நீங்கள் அழைப்பு விடுக்க முடியாது. உங்களின் வலிமை மற்றும் இறையாண்மையை வெளிகாட்ட, அனைத்தையும் நிறுத்துவதே உங்களின் நோக்கமாக உள்ளது. இதை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது. பொதுமக்கள் உரிமை என்பது தனிப்பட்ட கட்சி உரிமையை விட பெரியதாகும்." என உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் முழங்கியது.

இருப்பினும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் -காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் பாமக- பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. இதனால் பொதுமக்களுக்கான போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் பெரும்பான்மையான கடைகள் திங்கட்கிழமை மூடப்பட்டன.

நீதிமன்ற தீர்ப்பை திமுக மதிக்க தவறிவிட்டமைக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி திங்கட்கிழமை மீண்டும் ஒரு விசாரணைக்கு அஇஅதிமுக உச்சநீதிமன்றத்தை அணுகியபோது, "ஜனாதிபதி ஆட்சியை" நடைமுறைப்படுத்த மைய அரசை வலியுறுத்தி ஒரு தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதிகளில் ஒருவர், திமுக தலைமைக்கு குறிப்பிட்டதுடன், அதன் கூட்டணிகளையும் அவமதிப்புடன் எச்சரித்தார். (இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, சட்ட ஒழுங்கு சீர்கெடும் போது மைய அரசாங்கம் ஒரு மாநில அரசாங்கத்தை நீக்கலாம்.)

போராட்டத்திற்கு தடை விதித்த நீதிமன்றத்தின் ஆணை மீறப்பட்டிருப்பதாக கூறிய அதிமுக வழக்கறிஞரின் வாதத்திற்கு பதிலளித்த நீதிபதி பீ.என். அகர்வால், "நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால், அங்கு மாநிலத்தின் மொத்த அரசு இயந்திரமும் முடங்கி இருக்கிறது என்று பொருள். இதற்காக தமிழ்நாட்டில் திமுக அரசாங்கத்தை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு நாங்கள் பரிந்துரைப்போம்." எனக் கூறினார்.

நீதிபதி அகர்வாலின் குறிப்புரைகளில் எவ்வித சட்ட முறைகளும் இல்லை. ஆனால் பந்த்களை ஒழித்து கட்டுவதற்கும், அதிருப்தியை வெளிப்படுத்தும் உரிமை மற்றும் அரசியல் எதிர்ப்புக்கள், கிளர்ச்சிகள் சார்ந்த உரிமைகளை கடுமையாய் நீக்குவதற்குமான நீதிமன்றத்தின் உறுதிப்பாட்டை அவை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

சேது சமுத்திரம் திட்டம் மீதான கருத்து முரண்பாடு

செப்டம்பர் மாத மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் நிறுத்தி வைக்கப்பட்ட, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல் எல்லையில் கால்வாய் வெட்டும் திட்டமான சேதுசமுத்திர திட்டத்தை மீண்டும் தொடரச்செய்ய, ஐ.மு. கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அக்டோபர் 1-ம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பந்த்திற்கு அழைப்புவிடுத்தன.

இந்து மேலாதிக்க சக்தியான பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) நெருக்கடியால் ஐ.மு. கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சி இறுக்கி வளைக்கப்பட்டதால், தற்காலிகமாக அந்த திட்டத்தை காங்கிரஸ் நிறுத்தி வைத்ததை தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பங்கு வகித்த திமுக இடையே பதட்டங்களை உருவாக்கி இருந்தது. இந்த திட்டம் இலாபகரமான ஒப்பந்தங்களை அளிக்கும் என்பதுடன் மாநிலத்தில் முதலீட்டை ஈர்க்கும் என திமுக மற்றும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பிராந்திய முதலாளித்துவ நலன்கள் நம்புகின்றன மற்றும் அக்டோபர் 1-ம் தேதி பந்த் மூலம், அவர்களின் காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்கடி கொடுத்து, திட்டத்தை தொடங்குதற்கு ஆணையிட அழுத்தம் கொடுக்கும் எனவும் நம்பின.

2002-ம் ஆண்டு, பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கி இருந்த போதிலும், கால்வாய் வெட்டுவதற்கான இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக பிஜேபி ஒரு பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறது. இந்தியாவில் இருந்து இலங்கை கடற்கரை வரை கண்ணுக்கு தெரிந்து இருக்கும், இயற்கையாக உருவான மணல் திட்டுக்கள் மற்றும் சுண்ணாம்பு படுகைகளுக்கு ஒரு இட்டுக்கட்டப்பட்ட இந்து மத பெயரான "ராம் சேதுவை" (இந்து கடவுளான ராமரின் பாலம்) இந்த சேறுவாரும் பணி நாசப்படுத்திவிடும் என பிஜேபி மற்றும் அதன் இந்து வெறி கூட்டாளிகள் கூறி வருகின்றன.

இந்த இயற்கையான புவியியல் உருவாக்கமானது, சிறந்த இந்திய இதிகாசமான இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 10,000 ஆண்டுகள் பழமையான புராண பாலமாகும் என ஒரு துண்டு விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல், வலதுசாரி இந்து அமைப்புகள் வேடிக்கையான கோரிக்கையை வலியுறுத்துகின்றன.

இந்த புராணக் கதையின்படி - மற்றும் பிற பொருள்விளக்கங்களின் அடிப்படையிலும் - இராமனின் மனைவி சீதையை கடத்திச் சென்ற இராவணனை தேடி செல்லும் இராமனுக்கு உதவ, ஒரு குரங்குகளின் படை இந்தியாவின் தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு ஒரு பாலத்தை கட்டியது. இதனால் இந்த புவியியல் உருவாக்கமானது, இந்தியாவின் "இந்து மரபியத்தின்" ஒரு முக்கிய பகுதியாகும் என பிஜேபி மற்றும் அதன் இந்து மேலாதிக்க சக்திகளின் கூட்டணி கோருகிறது.

ஒரு பிற்போக்கான, நெருக்கடி நிறைந்துள்ள கட்சியில் இருக்கும் இத்தகைய அறிவொளி எதிர்ப்பு முட்டாள்தனம், இந்தியாவில் முதலாளித்துவ வர்க்க அரசியலின் சீரழிந்த நிலை பற்றி நிறையக் கூறும் ஒரு முக்கிய அரசியல்வாதத்திற்கான பொதுத்தோற்றங்களை அமைக்கின்றது.

சேதுசமுத்திர திட்டத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கம் என்னவென்றால், இலங்கை மற்றும் தென்இந்தியாவை பிரிக்கும் ஆழமற்ற கடலை சேறுவாரி, அதில் ஒரு வணிக கப்பல் போக்குவரத்து வழியை உருவாக்குவது தான். இது இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு கடற்கரைகளை கடக்கும் போது, வங்காள விரிகுடாவில் இருந்து மன்னார் வளைகுடா மற்றும் பின் அரேபிய கடலுக்கு போகும்போது குறிப்பிட்ட அளவிற்கு கப்பல் பயணத் தூரத்தை குறைக்கும். எவ்வாறாயினும், உலக அரங்கில் இந்திய மேற்தட்டால் அடிக்கடி அறிவிக்கப்படும் அதிகாரபூர்வ பகட்டான ஆசைகள், இராணுவ ஆலோசனைகள் ஆகியவைகள் இந்த திட்டத்தை ஊக்கப்படுத்தும் முக்கிய காரணிகளாக இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பிஜேபி -யின் எதிர்ப்புகள் பிற்போக்கு அழுகலாகாகி இருக்கும் வேளையில், கடல்வாழ் உயிரினங்களையும் மற்றும் இந்தியா, இலங்கை கடற்கரை பகுதிகளில் வாழும் குடியானவர்களையும் மற்றும் மீனவர்களையும் பாதிக்கும் வகையில், சேதுசமுத்திர திட்டம் உயிரினங்கள் மீது நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியக்கூறு இருக்கிறது. மேலும், சில ஆய்வுகளின் அடிப்படையில், அது சுனாமி தாக்குதல்களை மற்றும் அவற்றின் அடர்த்தியை அதிகரிக்கவும் செய்யலாம்.

ஜனநாயக உரிமைகளின் மீது உச்சநீதிமன்றத்தின் தாக்குதல்

குழந்தை தொழிலாளர்கள் மற்றும் அடிமை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் மீதான சித்திரவதைகள், கொலைகள் மற்றும் இந்திய பாதுகாப்பு படையின் -குறிப்பாக நாட்டின் வடகிழக்கு மற்றும் காஷ்மீரில்- பிற ஒட்டுமொத்த மனித உரிமை வன்முறைகளுக்கு எதிராக எவ்வித கடுமையான நடவடிக்கையும் எடுக்க முடியாத அதன் தோல்வியால், திங்கட்கிழமை பந்த்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ஜனநாயக உரிமை மீதான அதன் பாசாங்கு ஒரு பகட்டான வெளித்தோற்றமாகும்.

ஞாயிறன்று வெளியான நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதனை தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சி அமுலாக்கப்படும் என்ற அச்சுறுத்தல் ஆகியவை மூலம் அதன் ஜனநாயகத்திற்கு எதிரான உத்தரவை நடைமுறைப்படுத்துவது என்பது தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ஒரு சட்டத் தாக்குதலை உருவாக்குவதின் பகுதியேயாகும். இந்திய ஆளும் வர்க்கத்தின் நவீன தாராண்மை செயற்பட்டியலுக்கு பெருமளவிலான மக்கள் எதிர்ப்பு இருக்கும் நிலையில், அதன் விளைவாக கதவடைப்புக்கள் மற்றும் ஆலை மூடல்கள் மீதான தடைகளை அகற்றுவது போன்ற முக்கிய சீர்திருத்தங்களை அரசாங்கங்கள் செய்யமுடியாமல் இருக்கின்றன என்பதால், உரிமையாளர்களின் மற்றும் நிர்வாகத்தின் அதிகாரங்களை வலிமையாக்கும், அரசு கொள்கையை எதிர்க்கும் மற்றும் மறுக்கும் உரிமைகளை வெட்டிக் குறைக்கும் தொடரான தீர்ப்பக்களை இந்நீதிமன்றம் அளித்திருக்கிறது.

2003-ம் ஆண்டில், தமிழ்நாட்டின் அப்போதைய அஇஅதிமுக அரசாங்கத்தால் செய்யப்பட்ட வேலைநிறுத்தத்தை தடுக்கும் பிரச்சாரத்தை உறுதிப்படுத்தி, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய அரசியல் அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. பொதுத்துறை ஊழியர்கள் பொதுமக்களுக்கு கடமை செய்ய வேண்டும் என்பதால் பொதுத்துறை தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய உரிமை இல்லை எனக் கூறி அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீதிமன்றம் நியாயப்படுத்தியது. மேலும் தனியார் துறை தொழிலாளர்களுக்கும் வேலைநிறுத்தம் செய்வதற்கான உள்ளார்ந்த அரசியல் உரிமை கிடையாது எனவும் அது அறிவுறுத்தியது.

இந்த தீர்ப்பின் மூலம், இந்தியாவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலதனத்திற்கு அவற்றின் சார்பில் தொழிலாளர்களின் எதிர்ப்புகளை நசுக்குவதில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் வலுக்கட்டாயமாக ஈடுபடும் என்று சமிக்கை காட்டியது.

மேலும், மறுப்புரிமை பேச்சு சுதந்திரம் மீதும் தாக்குதல் தொடுக்கும் ஒரு தொடர்ச்சியான தீர்ப்புகளை இந்த நீதிமன்றம் அளித்திருக்கிறது.

2002-ம் ஆண்டு மார்ச்சில், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றக் கூடிய நீர்மின் திட்டத்திற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை விமர்சித்தற்காக, புக்கர் பரிசு வென்ற எழுத்தாளரும் மற்றும் அரசியல் நடவடிக்கையாளருமான அருந்ததி ராயை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை அனுப்பியதையும் அது குறிப்பிட்டது.

2006-ல், பிரெஞ்சு விமானந்தாங்கிக் கப்பல் கிளெமென்சோ (Clemenceau) ஐ பிரித்தெடுத்தல் தொடர்பான அனைத்து பொது விவாதத்திற்கும் தடை விதித்து இந்த உச்சநீதிமன்றம் ஒரு கடுமையான உத்தரவை பிறப்பித்தது. ஓர் இந்திய துறைமுகத்தில் பிரித்தெடுக்க திட்டமிடப்பட்டிருந்த கிளெமென்சோ, மிதக்கும் நச்சு அபாயம், துறைமுக தொழிலாளர்களின் நலன்களுக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என சுற்றுசூழல் குழுக்களால் செய்யப்பட்ட பிரச்சாரம் மற்றும் எதிர்ப்புகளின் சில வாரங்களுக்கு பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. (பார்வையிடவும்: "Indian Supreme Court imposes sweeping ban on public debate on toxic warship")

தொழிலாளர்களின் உடல்நலம் அல்லது சுற்றுசூழல் பற்றிக் கவலைப்படாமல், உச்சநீதிமன்றத்தின் கவனம் வர்த்தக நிறுவனங்களை பாதுகாத்து கொண்டிருந்தது. துறைமுக தொழிலாளர்கள் தம்மால் இணைந்து செய்யப்படவிருந்த கிளெமென்சோவின் பிரித்தெடுத்தலுக்கு எதிரான எதிர்ப்புகளை தடுக்கும் நோக்கில் அது, இந்த விவகாரத்தில் மற்ற அனைத்து விதமான பொது விவாதங்களையும் தடை செய்தது.

தமிழ்நாடு பந்த்திற்கு தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தடைக்கு இந்தியாவின் பெருநிறுவன ஊடகம் பரந்த அளவில் பாராட்டு தெரிவித்திருந்தது.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் "சுதந்திரத்திற்கு எல்லைகள்" என்று தலைப்பிட்ட அக்டோபர் 2-ம் தேதி தலையங்கமே இதற்கு சான்றாகும். ஹிந்துஸ்தான் டைம்ஸின் "விமர்சனங்கள் விவாதிக்கும்" என்ற கட்டுரை, நமது அரசியல் அமைப்பில் போற்றி காத்து வைக்கப்பட்ட சுதந்திரங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செயல்படுவதாக குறிப்பிடுகிறது. மக்களிடம் இருந்து எதிர்ப்புக்களுக்கான சட்டப்பூர்வ வழிமுறைகளை அது நீக்கி வருவதாகவும் அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் சுய சேவை செய்துவரும் அரசியல் கட்சிகளின் இதுபோன்ற தந்திரங்களால் 60 ஆண்டுகள் பிணைக் கைதிகளாக இருந்த பின்னர், 'பந்த்கள்' தற்போது பெருமளவில் ஒருவகை தொல்லையை பிரதிநிதித்துவப்படுத்த வந்துள்ளன. பூகோளமயமாக்கப்பட்ட இவ்வுலகில், தனது உள்ளார்ந்த சக்தியை மற்றும் வாக்குறுதியை இப்பொழுது அறிந்த ஒரு தேசத்திற்கு, ஒரு நாளின் இழப்பு என்பது தானாய் பின்னோக்கி அடியெடுத்து வைத்தலை அர்த்தமாய் கொண்டிருக்கும்.