World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Australian election: an ominous silence on US war plans against Iran

ஆஸ்திரேலிய தேர்தல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்க யுத்த திட்டங்கள் மீது ஓர் அச்சமூட்டும் மெளனம்

By the Socialist Equality Party (Australia)
15 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

சமீபத்திய வெள்ளை மாளிகை விவாதங்களை சுட்டிக்காட்டும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஊடகங்களின் தொடர்ச்சியான செய்தி கசிவுகளின்படி, புஷ் நிர்வாகம் ஈரானுக்கு எதிராக யுத்தத்திற்கு ஆயத்தமாவதால் அபாய அறிகுறிகள் அதிகரித்துள்ளன. எவ்வாறிருப்பினும், 2003ல் ஈராக் தாக்குதலுக்கு "விருப்பமுற்ற கூட்டணியில்" மூன்றாவது உறுப்பினரான ஆஸ்திரேலியா இவ்விடயத்தில் மெளனம் காத்து வருகிறது. இந்த பிரச்சனை பகிரங்கப்படுத்தப்படக்கூடாது என்பதில், நவம்பர் 24ல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த தேர்தலில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகள் மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் மத்தியில் ஓர் பேசப்படாத உடன்பாடு அமைந்துள்ளது.

இந்த மெளனமான சதி, New Yorker இதழில் அக்டோபர் 8ல் வெளியான "மாறும் இலக்குகள்" என்ற தலைப்பில் Pulitzer விருது பெற்ற பத்திரிகையாளர் செய்மொர் ஹெர்ஷால் (Seymour Hersh) எழுதப்பட்ட நீளமான கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டது. உயர்மட்ட பெண்டகன் மற்றும் சிஐஏ வட்டாரங்களின் அடிப்படையில், தெஹ்ரானின் அணு ஆயுத திட்டங்களை குற்றஞ்சாட்டிய புஷ் நிர்வாகம், அதிலிருந்து மாறி ஈரானிய புரட்சி பாதுகாப்பு படை (IRGC) ஈராக்கில் அமெரிக்க படையினரை கொல்ல அமெரிக்க எதிர்ப்பு போராளிகளுக்கு உதவி வருவதாக கூறப்படும் பரபரப்பூட்டும் குற்றச்சாட்டுக்களை கொண்ட போலிக் காரணத்தை முன்னிறுத்தி வருவதை இக்கட்டுரை எடுத்து காட்டியது. ஹெர்ஷின் கூற்றுப்படி, விரிவான அமெரிக்க திட்டங்கள் ஏற்கனவே தயாராகிவிட்டன மற்றும் மிக முக்கிய ஈரானிய புரட்சி பாதுகாப்பு படை முகாம்கள், வினியோக தளங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை அழிக்க இராணுவ தளபாடங்களும் தயாராக உள்ளன.

அமெரிக்காவில் இந்த கட்டுரை பரவலாக அறியப்பட்டதுடன், ஒரு புதிய யுத்தத்திற்கு திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுவதற்கு, நாகரீகமான மறுப்புரைகள் கூற வெள்ளை மாளிகைக்கு அழுத்தமளிக்க ஹெர்ஷ் பல தொலைக்காட்சி வலையமைப்புகளால் பேட்டியும் எடுக்கப்பட்டார். லண்டனில் இத்திட்டம் "பெரும்பான்மையாக நேர்மறையான வரவேற்பை" பெறப்பட்டது என ஹெர்ஷ் குறிப்பிட்டதை தொடர்ந்து, ஈரான் தொடர்பான எவ்வித நடவடிக்கையிலும் பிரிட்டனின் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் விலகி இருக்குமாறு வலியுறுத்தப்பட்டார். ஈராக்கில் தெஹ்ரானின் தலையீடு என்ற போலிக்காரணம் இருக்கும் வரை பிரிட்டன் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என ஜூலையில் பிரெளன் புஷ்ஷூடம் கூறியதாக குறிப்பிட்டு Telegraph இதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதன் பின்னர் டவுனிங் தெருவில் இருந்து மறுப்புரைகள் வெளியாயின, ஆனால் குறிப்பாக ஈரான் மீதான யுத்தம் குறித்து பிரெளன் எதுவும் கூறவில்லை.

CNN செய்தி நிறுவனத்தின் நேர்காணல் ஒன்றில், ஈரான் மீது விமானத் தாக்குதல் நடத்துவதில் ஆர்வமுறும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும் என அதன் பெயரைக் குறிப்பிட்டு ஹெர்ஷ் குறிப்பிட்டார். ஆனால் Sydney Morning Herald இற்கான வாஷிங்டன் செய்தியாளரைத் தவிர, இந்த வெளிப்படையான கருத்து மிகுந்த அக்கறையுடன் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. வாஷிங்டனின் யுத்த ஆயத்தங்கள்; அதாவது பிரதம மந்திரி ஜோன் ஹோவர்டு தமது அரசாங்கத்தின் ஆதரவை தொடர்கிறாரா மற்றும் எந்த அளவிற்கு குற்றம்மிக்க காட்டுமிராண்டித்தனத்திற்கான ஒரு புதிய சட்டத்திற்கு ஆஸ்திரேலிய இராணுவம் பொறுப்பேற்றிருக்கிறது என்பது தொடர்பாக அவர் என்ன கூறி இருக்கிறார் என அறிய ஊடகங்களோ அல்லது எதிர்கட்சிகளோ கோரவில்லை.

இந்த ஆழ்ந்த மெளனமானது, மற்றொரு யுத்த ஆக்கிரமிப்பிற்கு உடந்தையாக இருத்தல் என்ற ஒரே ஒரு அரசியல் அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கலாம். இதில் ஆஸ்திரேலிய படையினர் தவிர்க்க முடியாமல் ஈடுபடுத்தப்படுத்தப்படலாம். ஹெர்ஷின் கூற்றுப்படி, ஈரானை தாக்க மற்றும் எவ்விதமான பழிவாங்கும் நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்க கடற்படையை பயன்படுத்தும் திட்டமுள்ளது. ஆஸ்திரேலிய கப்பற்படை தற்போது ஒரு சிறு நீர்மூழ்கி வேவு கலத்தை பாரசீக வளைகுடாவில் கொண்டிருக்கிறது, இது பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க யுத்தக்கப்பல்களுடன் செயல்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த பணிக்குழு 158 இன் கமாண்டராக ஆஸ்திரேலிய கமாண்டர் அலன் டூ டோய்ட் செப்டம்பர் இறுதியில் பொறுப்பேற்றார். இந்த குழு பாரசீக வளைகுடாவின் வடக்கு எல்லையின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றுள்ளது.

தொடர்ச்சியான உயர்மட்ட கூட்டங்கள், திரைக்குப் பின்னால் ஈரானுக்கு எதிரான இராணுவ ஆயத்தங்கள் மிக தீவிரமான விவாதங்களில் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. ஆகஸ்டு மாத இறுதியில், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடவும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரோபர்ட் கேட்ஸுடனான ஒரு சந்திப்புக்காகவும் பாதுகாப்பு மந்திரி ப்ரென்டன் நெல்சன் வாஷிங்டனுக்கு பயணித்தார். நெல்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் நிச்சயமாக ஈரானைப் பற்றி விவாதிப்போம்." என்று தெரிவித்ததுடன், "ஆஸ்திரேலிய, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் முன் இருக்கும் முக்கிய பிரச்சனை என்னவென்றால், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு ஆயுதங்களைக் கொண்டு வருவதில் ஈரானிலுள்ள பிரிவினரின் பங்களிப்பை பற்றியதாகும்." என்று தெரிவித்தார். மேலும் அவர் இது குறித்து விரிவாக விவாதிக்க மறுத்துவிட்டார்.

செப்டம்பர் தொடக்கத்தில், ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் (APEC) கலந்து கொள்ள சிட்னிக்கு சென்றிருந்த ஜனாதிபதி புஷ், அங்கு ஹோவர்டு மற்றும் மந்திரிசபையின் தேசிய பாதுகாப்பு குழுவையும் சந்தித்தார். இதில் பிற பிரச்சனைகளும் சந்தேகமில்லாமல் விவாதிக்கப்பட்ட நிலையில், ஈரான் மற்றும் ஈராக் ஆகிய இரு முக்கிய விடயங்கள் பற்றிய விவாதங்களை புஷ் வெளிப்படையாகவே ஆரம்பித்து வைத்தார். ஈராக்கிலுள்ள உயர் அமெரிக்க தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரீயஸால் திட்டமிடப்பட்ட கூட்டத்தில் உரையாற்ற வாஷிங்டனில் இருக்க வேண்டிய காரணத்தால் அமெரிக்க ஜனாதிபதி முன்னதாகவே APEC மாநாட்டிலிருந்து வெளியேறினார். ஆயுதங்கள் அளித்தல், பயிற்சிகள் அளித்தல் மற்றும் போராளிகள் குழுக்களுக்கு வழிகாட்டுவதன் மூலம் ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு "மறைமுகபோரை" நடத்தி வருவதாக கூறப்படும் வலியுறுத்தல்களை பெட்ரீயஸின் கருத்துக்களில் முதன்மையாக இருந்தன.

அதே நேரம் சிட்னியில், செப்டம்பர் 6 இல் புஷ் எதிர்கட்சியான தொழிற்கட்சி தலைவர் கெவின் ரூட்டைச் சந்தித்தார். தெற்கு ஈராக்கில் இருந்து 550 ஆஸ்திரேலிய எதிர்தாக்குதல் துருப்புக்களை திரும்ப பெறுவதில் ரூட்டின் மன உறுதிப்பாட்டுக்கான ஒரு பரிசோதனையாக இந்த திடீர்சந்திப்பை ஊடகங்கள் வெளிப்படுத்தின; ஆனால் இந்த சந்திப்பு தெளிவாக சமாதானத்திற்கான ஒன்றாக இருந்ததுடன், 45 நிமிடங்கள் வரை நீண்டிருந்தது. புஷ்ஷின் வேண்டுகோளின்படி, ஆஸ்திரேலிய துருப்புகளை திரும்ப பெற்று கொள்வதே தொழிற்கட்சியின் விருப்பம் என மீண்டும் மீண்டும் கூறியதைத் தவிர்த்து, அவர்களின் விவாதம் குறித்த எந்த விபரமும் ரூட் வெளியிடவில்லை. ஈராக் மீதான யுத்தத்திற்கு மற்றும் ஆஸ்திரேலியாவின் பங்களிப்பிற்கு பரவலாக இருக்கும் பொதுமக்கள் எதிர்ப்பை அமைதிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் மோசடி தான் தொழிற்கட்சியின் இந்த அமைதியாகும். ரூட், பாக்தாத்தில் 300 இலிருந்து 400 வரையிலான ஆஸ்திரேலிய துருப்புகளை பாதுகாப்புக்காக மற்றும் தலைமையிட தேவைக்காக நிறுவுவதுடன், மேலும் ஒரு 700 கப்பல் மற்றும் விமானப்படையினரை மத்திய கிழக்கிலும் நிறுத்தலாம்.

2004 தேர்தலின் போது இதே போன்ற முன்மொழிவை முன்வைத்த முன்னாள் எதிர்கட்சியான தொழில் கட்சி தலைவர் மார்க் லதமிற்கு வழங்கப்பட்ட தண்டனையுடன் ஒப்பிடுகையில், ரூட்-புஷ்ஷின் நட்புரீதியான விவாதம் முழுவதும் எதிர்மாறாக உள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் ஆஸ்திரேலிய நவகாலனித்துவ நடவடிக்கைகளை வலுப்படுத்த "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில்" பயன்படுத்த துருப்புகளை அப்பிராந்தியங்களில் குவிக்கும் லதமின் ஈராக் யுத்த விமர்சனங்களும் ரூடைப் போன்றே தெளிவாக தந்திரோபாயரீதியானவையே. ஆஸ்திரேலிய அரசியலில் ஓர் அசாதாரண தலையீடாக, ஆஸ்திரேலியா துருப்புகளைத் திரும்ப பெறுதல் என்பது "ஆபத்தானது", அது அமெரிக்க-ஆஸ்திரேலிய உறவுக்கு ஒரு அச்சுறுத்தலாகும் என புஷ், துணை ஜனாதிபதி டிக் ஷென்னி மற்றும் பிற முக்கிய அமெரிக்க அதிகாரிகளும் வெளிப்படையாகவே அறிவித்தார்கள். இதனால் லதம் உடனடியாக அவர்கள் வலையில் விழுந்தார்.

கடந்த டிசம்பரில் தொழில் கட்சி தலைவர் பதவியை ரூட் ஏற்றுக் கொண்டபோது, இந்தக் காலகட்டத்தில் ரூடின் தீர்மானம் ஆதாரபூர்வமாக இருந்தது. அவரின் முதல் தொலைக்காட்சி உரையின் போது, அமெரிக்க-ஆஸ்திரேலிய உறவில் அவரின் ஆதரவு ''மிக உறுதியானது'' என எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டார். ஈராக்கில் இருந்து எந்தவிதமான பின்வாங்குதலும் "எங்கள் கூட்டணிகளுடன் கலந்தாராயப்பட்டு" பகிரங்கப்படுத்தப்படும் என்று அவர் மீண்டும் கூறி இருந்தார். ஆனால் இதிலிருந்து பின்வரும் கேள்விகள் எழுகின்றன: ரூட் ஏன் வெளிப்படையாக புஷ்ஷால் இப்பணிக்கு எடுத்து கொள்ளப்படவில்லை? ஈராக்கில் இருந்து படைகளை திரும்ப பெறுவதற்கு பதிலாக எதை வழங்கவதற்கு எதிர்கட்சி தலைவர் முனைகின்றார்? லதமைப் போன்றே, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய படைகளை அதிகரிப்பதாக ரூட் ஏற்கனவே உறுதி அளித்திருக்கிறார்.

இதில் மிக பெரிய வெளிப்படையான விளக்கம் என்னவென்றால், ஒரு தொழில் கட்சி அரசாங்கம் எவ்விதமான -குறிப்பாக ஈரானுக்கு எதிரான- அமெரிக்க தலைமையிலான இராணுவ தாக்குதலுக்கு முழுவதுமாக ஒத்துழைக்கும் என ரூட் புஷ்ஷூக்கு உறுதிமொழிகள் அளித்துள்ளார். அமெரிக்க திட்டங்களுக்கு ரூட் ஏதாவது எதிர்ப்பு காட்டி இருந்தால், அவர் சந்தேகத்திற்கிடமின்றி வாஷிங்டனிடம் இருந்து ஒரு தொடர்ச்சியான வலிய கண்டனங்களை எதிர்கொண்டிருப்பார். ஓர் இராஜாங்க ரீதியான தீர்வுகளுக்கும் மற்றும் யுத்த திட்டங்களை நிராகரிப்பது, சாதகமாக கண்மூடித்தனமான உறுதிமொழிகள் அளிப்பது மற்றும் ஈரானிய தலைவர்களை இழிவாக பேசும் அதேநேரத்தில், தெஹ்ரானின் ஈராக் "தலையீடு" மற்றும் அணுஆயுத திட்டங்களுக்கு எதிராக பிரச்சாரங்களை தொடர்வது ஆகியவைகளில் வெளிப்படையாகவே ரூட் மற்றும் ஹோவர்டு இருவரும் ஈரான் சார்ந்த வெள்ளைமாளிகையின் மூலத்திட்டத்தை மிக தெளிவாக பின்பற்றி இருக்கிறார்கள்.

அக்டோபரில் வெளியான ஆஸ்திரேலிய/இஸ்ரேலிய திறனாய்வின் பதிப்பின் ஒரு கேள்வி-பதில் பகுதியின் போது ரூட், தமது உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஈரானிய ஆட்சி இஸ்ரேலுக்கு மட்டுமின்றி, மத்திய கிழக்கின் பரந்த பகுதிகளுக்கும், ஐரோப்பா மற்றும் உலகளவிற்கும் ஓர் அடிப்படை அச்சுறுத்தலாக இருப்பதாக அர்த்தமற்று கூறியதன் மூலம் ஹோவர்டை விட ஈரான் மீது போர் தொடுக்க ஆர்வமாக இருப்பதை தொழில்கட்சி தலைவர் அவராகவே வெளிக்காட்டி கொண்டார். மேலும், ஒரு தொழில் கட்சி அரசாங்கம், இனப்படுகொலைகளை தூண்டியமைக்காக ஈரானிய ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதினிஜத்துக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் அறிவித்தார்.

இஸ்ரேலை வரைபடத்தில் இருந்தே நீக்குவதற்கான அஹ்மதினிஜத்தின் அறிக்கைகள் மற்றும் நீண்டு வரும் பேரழிவுகள் மீதான கேள்விகள், நிச்சயமாக வெறுக்கத்தக்கவையாக உள்ளன. எவ்வாறிருப்பினும், ஈரானிய ஜனாதிபதி தெளிவாக யூத எதிர்ப்பு உணர்வுகளுக்கு குறிப்பாக அழைப்பு விடுக்கையிலும், அவரின் அறிக்கைகள் இனப்படுகொலைக்கான தூண்டுதல் ஆகாது. பிற நாடுகளை போன்றே ஈரானும், 1948 இல் பாலஸ்தீன மக்களை வெளியேற்றி உருவாக்கப்பட்ட யூத அரசை அங்கீகரிக்கவில்லை. அஹ்மதினிஜாத் தண்டிக்கப்படவேண்டும் என்ற ரூடின் அழைப்பானது, ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்கு சேவை செய்கின்றது. அதாவது தொழிற் கட்சி அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் பின்னாலும் மற்றும் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு பின்னாலும் அணிவகுத்து நிற்பதையும் காட்டுவதற்கான முயற்சியாகும்.

ரூட்டின் குறிப்புகள் அக்டோபர் 3-ம் தேதி வெளியான மேர்டொக்கின் Australian இதழின் முதல் பக்கத்தில் வெளியாயின, ஆனால் அந்த விடயம் உடனடியாக கைவிடப்பட்டன. விவாதங்களுக்கான மேற்படி வாய்ப்புகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் யுத்தங்கள் மீதான எந்தவிதமான பொது விவாதங்களும் விரைவில் கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு சென்றுவிடும் என்பதை ஊடகங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் துல்லியமாக அறிந்திருக்கின்றன. இதனால் அனைத்திற்கும் மேலாக, பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்கள் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கின்றபோது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ஆயத்தங்களின் முன்னோக்கு முயற்சிகளைக் கண்டும், ஆஸ்திரேலியாவின் தயக்கத்தை கண்டும் அதிர்ச்சி அடைகின்றனர் என்றும் பரவலாக கருத்து வெளியிடப்பட்டன. அதிகாரபூர்வமான இந்த மெளனத் தடையானது அவர்களை இருட்டுக்குள் வைப்பதற்கே தொடரப்படுகிறது.

மீண்டும் ஒருமுறை, ஆஸ்திரேலியாவின் அரசியல் தலைவர்கள் கொடூரமான குற்ற ஆயத்தங்களில் உடந்தையாகிறார்கள். தாக்குதலுக்கான ஒரு யுத்தத்தை திட்டமிடுதலும் ஆக்கிரமிப்புமே இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஜேர்மன் நாஜி தலைவர்கள் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனைக்குட்படுத்தப்பட்டதற்கான முதன்மையான குற்றச்சாட்டாகும்.

பொதுத்தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவ கட்சி மற்றும் அதன் வேட்பாளர்கள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நவகாலனித்துவ யுத்தங்கள் தொடர்வதை மற்றும் ஈரான் மீதான ஒரு புதிய தாக்குதலுக்கான ஆயத்தங்களை தீவிரமாக எதிர்ப்பார்கள். உடனடியாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அந்நிய துருப்புகளையும் நிபந்தனையின்றி வெளியேற்ற நாங்கள் வலியுறுத்துவோம் மற்றும் பிரதம மந்திரி ஹோவர்டு உட்பட, அவரின் மந்திரிகள் மீது யுத்த குற்றங்களுக்காக வழக்குகளும் தொடரப்படும்.

இந்த கொள்கைகளுக்கு உடன்படும் அனைவரும் எங்களின் பிரச்சாரங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும், எங்களின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் சோசலிச சமத்துவ கட்சி கேட்டு கொள்கிறது.