World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய அமெரிக்கா, கரிபியன்

Bush threatens escalation of aggression against Cuba

கியூபாவிற்கு எதிராக வலியத்தாக்குதல் தீவிரமாகும் என புஷ் அச்சுறுத்தல்

By Bill Van Auken
25 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

சுதந்திரத்தின் பெயரை இழிவுபடுத்தல் என்று வரும்போது, புதனன்று வெளியுறவுத்துறையில் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ், கியூபாவை தாக்கிய உரையுடன் உலகில் வெகு சில உரைகளே தீவிரமாகப் போட்டியிட முடியும்.

47 ஆண்டுகளாக கியூபாவின்மீது அமெரிக்கப் பொருளாதாரத் தடை இருந்து வருவதை இன்னும் கடினமாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த உரையில் புஷ் 25 தடவை அச்சொல்லை பயன்படுத்தி, உட்குறிப்பாக வன்முறை எழுச்சிகளை வளர்க்கும் விதத்தில் பேசி, அத்தீவு நாட்டிற்கு எதிராக அமெரிக்க வலியத்தாக்குதலை இன்னும் கூடுதலாக்கி ஒரு இராணுவ ஆட்சி மாற்றம் கூட வரலாம் என்றும் கூறினார்.

கியூபாவில் அண்மையில் நடைபெற்ற நகரசபை தேர்தல்களுக்கும் -- நோய்வாய்ப்பட்டிருக்கும் பிடல் காஸ்ட்ரோ அதிகாரத்தை கைவிட்டதற்கு பின் நடந்த முதல் தேர்தல்கள்-- அடுத்த வாரம் ஐ.நா.பொது மன்றத்தில் 1959 கியூப புரட்சியை அடுத்து கியூபாவின் பொருளாதாரத்தை நெரிக்கும் வகையில் அமெரிக்க மேற்கொண்டுள்ள வணிகத் தடையைக் கண்டிக்கும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கும் இடையில் இந்த உரை திட்டமிட்ட நேரத்தில் வந்துள்ளது. இதே போன்ற தீர்மானம் கடந்த ஆண்டும் 183-4 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்டது; இம்முறையும் வாஷிங்டன் அதேபோன்ற அவமானத்தை எதிர்கொள்ளக்கூடும்.

மீண்டும் ஒரு முறை புஷ், கியூப ஆட்சியை "தன்னுடைய குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுத்தது", "பல தலைமுறைகளுக்கு வறுமையை கொடுத்தது", "கியூபா மக்களுக்கு எலிப்பாதிப்பு விஷங்களை கொடுத்த ஒரு போலீஸ் அரசு" என்றெல்லாம் அரக்கத்தனமாக சித்தரித்தார். இந்தக் கண்டனங்கள் போதாது என்று, புஷ் வெளிவிவகாரத்துறை அடியாட்கள் மற்றும் மியாமியைத் தளமாகக் கொண்ட கியூபாவில் இருந்து வெளியேறிய வலதுசாரி மாஃபியா ஆகியோரைக் கொண்ட கூட்டத்தினருக்கு, "கியூபாவின் ஆட்சி ஐயத்திற்கு இடமின்றி இன்னும் உலகின் மற்ற பகுதிகளுக்கு தெரியாத கொடூரங்களையும் கொண்டிருக்கும். இவை வெளிப்பட்டுவிட்டால் மனித குலத்தின் மனச்சாட்சியை அதிர்ச்சிக்கு உட்படுத்தும்" என்றார்.

அமெரிக்க ஜனாதிபதியின் உரையினால் உடனடியாக எழும் கேள்வி இதுதான்: ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் பற்றிப் பிறருக்கு உரை ஆற்றுவதற்கு இந்த நபர் யார்? தற்காலத்தில், "மனிதகுலத்தின் மனச்சாட்சியை ஏதேனும் அதிர்ச்சிக்கு உட்படுத்தியது" என்றால், அது தேர்தல் முடிவை மோசடித்தனமாக மாற்றி பதவியைக் கைப்பற்றிய, காரணமற்ற போர்களை நடத்திய, ஒரு மில்லியனுக்கும் மேலான மக்களை கொன்ற, ஜனநாயக உரிமைகளின் மிக அடிப்படைத் தன்மைகளை நிராகரித்த மற்றும் சித்திரவதைக்கு ஒப்புதல் கொடுத்த அமெரிக்க ஜனாதிபதிதான்.

கியூபாவில் உள்ள சிறைகளை பொறுத்தவரையில், நிரபராதியான மக்கள் குற்றச்சாட்டு இல்லாமல் மிருகத்தனமான நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர் எனக் கூறப்படுவது பற்றி, தான் எந்த நிலைமையில் இருந்து பேசுகிறோம் என்பதை புஷ் உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்; ஏனெனில் அவர் குவாண்டனாமோ குடாவில் அத்தகைய காவற்கூடங்களில் ஒன்றை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

கியூபாவின் பொருளாதாரத்தை எள்ளி நகையாடிய புஷ் அறிவித்தார்: "சாதாரண கியூப மக்களுக்கு வீடுகள் என்பது மிக மோசமான நிலையில் உள்ளன, அதேவேளை ஆளும் வர்க்கம் பெரும் மாளிகைகளில் வசிக்கிறது." உலகிலேயே செல்வந்தருக்கும் வறியோருக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கும் தன்மையை தோற்றுவித்திருக்கிறது என்று வாதிடக்கூடிய, அமெரிக்க பொருளாதாரத்திற்கு இவர் தலைமை தாங்குகிறபடியால், இந்த ஒரு நாடுதான் உலகத்தில் அமெரிக்க ஜனாதிபதி "ஆளும் வர்க்கம்" என ஒன்று இருப்பதைக் கண்டுபிடிக்க முடிந்திருக்கிற நாடு போலும்.

புஷ் செய்தியின் இடிப்புரை வன்முறை நிறைந்தது ஆகும். அமெரிக்க-கியூப உறவுகளில் இது ஒன்றும் புதிய கூறுபாடு அல்ல; 1961ல் Bay of Pigs என்பதில் CIA கருச்சிதைந்த படையெடுப்பு ஒன்றை கியூபா மீது மேற்கொண்டது; அதையும் தவிர எத்தனையோ நூற்றுக்கணக்கான படுகொலை பயங்கரவாத தாக்குதல்கள் காஸ்ட்ரோமீது மேற்கொள்ளப்பட்டன. பிந்தையவற்றில் 1976ம் ஆண்டு ஒரு சிவிலிய விமானத்தின் மீது CIA பயிற்சி பெற்ற பயங்கரவாதியான Lous Posada Carriles நடத்திய குண்டுவீச்சில் 73 பேர் மடிந்ததும் உள்ளடங்கும்; அந்த CIA பயிற்சி பெற்ற பயங்கரவாதி இப்பொழுது புஷ் நிர்வாகத்தால் பாதுகாக்கப்படுகிறான்; இது வெனிசூலாவுடன் இருக்கும் உடன்பாடுகளை மீறும் செயல் ஆகும்; அங்கு இவன் விசாரணைக்கு தேவைப்படுகிறான்.

புஷ்ஷின் அலங்காரச் சொற்கள், ஆயுதமேந்திய எழுச்சிகள், வன்முறை அடக்குதல் போன்றவற்றை கொண்டிருந்தன. "கியூபாவுடன் நம்முடைய வருங்கால செயற்பாடுகளில், செயல்படுத்தவேண்டிய சொல், 'ஸ்திரத்தன்மை' அல்ல என்றார் அவர். "செயல்படுத்த வேண்டிய சொல் 'சுதந்திரம்' ஆகும்." இவருடைய ஓர்வெல்லிய சொல்லாட்சியில் இதன் பொருள் தீவை மீண்டும் வலிமையின் மூலம் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு கொண்டுவருவது ஆகும்.

இவர் பின்னர், கியூபாவின் இராணுவ, பாதுகாப்புப் பிரிவுகளுக்கு நேரடியாகப் பேசிய வகையில் அறிவித்தார்: "நீங்கள் ஒரு விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு இழிவாக்கப்பட்ட, மடிந்து கொண்டிருக்கின்ற ஒழுங்கை உங்களுடைய மக்களுடைய விருப்பத்திற்கு எதிராக காப்பீர்களா? அல்லது உங்களுடைய மக்களுடைய விருப்பமான மாறுதலை தழுவுவீர்களா?"

ஓராண்டிற்கும் மேலாக, பிடல் காஸ்ட்ரோ முறையாக அதிகாரத்தை ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு, அவருடைய சகோதர்ர் ரால் காஸ்ட்ரோ தலைமையில் ஒப்படைத்ததிற்கு பின், வாஷிங்டனும், மியாமியில் இருக்கும் வலதுசாரி புலம் பெயர்ந்த குழுக்களும், எழுச்சிகள், பெரிய அளவில் மக்கள் வெளியேறுதல் ஆகியவை வரும் என்று எதிர்பார்த்தன; இரண்டில் எதுவும் நடக்கவில்லை. இந்த அரசியல் யதார்ர்தமானது, புஷ்ஷின் உரை, மூர்க்கத்தனத்திற்கும் வெளித்தோற்றத்தில் அறிவுக்கு ஒவ்வாத தூண்டுதலுக்குக்கும் இடம் கொடுத்துள்ளது.

வாஷிங்டனுடைய உண்மையான நோக்கங்களை சுட்டிக்காட்டி, புஷ் "கியூபாவின் சுதந்திரத்திற்கான பல பில்லியன் டாலர் சர்வதேச நிதி" ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டார்; இது "கியூபா மக்கள் தங்கள் பொருளாதாரத்தை மறு கட்டமைக்கவும் ஜனநாயகத்திற்கு மாறுவதற்கும் உதவும்" என்றார். இந்த நிதி, "கியூபாவில் உள்ள பொருளாதார முயல்வோர்களுக்கு" கடனாக வழங்கப்பட பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிதிக்கு ஒரு முன்னிபந்தனை "அடிப்படை சுதந்திரங்கள்....மீட்கப்படுதல் ஆகும்" என்று அவர் சேர்த்துக் கொண்டார். அவற்றுள் முக்கியமானது கியூப அரசாங்கம் "தனியார் பொருளாதார நடவடிக்கை மீது கொண்டிருக்கும் இரும்புப்பிடியை கைவிடவேண்டும்" என்பதாகும்.

வாஷிங்டன் விரும்பும் "மீட்பு" என்பது கியூபா, மற்றும் அதன் பொருளாதாரத்தின் மீது அமெரிக்க அரைக்காலனித்துவ மேலாதிக்கம் ஆகும். 1959 புரட்சிக்கு முன்பு இருந்த நிலைமைகளுக்கு திரும்ப வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது; அப்பொழுது நாட்டின் விளைநிலங்களில் முக்கால் பகுதி மற்றும் தொழில், வணிகத் துறைகளில் பெரும் பங்கு ஆகியவை அமெரிக்கர்களின் கையிலேயே இருந்தன.

கியூபா குறிப்பிடத்தக்க வகையில் எண்ணெய் இருப்புக்களை கொண்டிருக்கக்கூடும் என்பதற்கான பெருகும் அடையாளங்கள், ஐயத்திற்கு இடமின்றி வாஷிங்டன் அந்நாட்டை ஒருகாலத்தில் அழைத்த "கொல்லைப் புறப் பகுதி" என்பதை மீட்கும் விருப்பங்களை தூண்டியுள்ளது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதாரப் போட்டியாளர்கள் புஷ் திட்டமிட்டிருக்கும் மீட்பு நிதிக்கு ஒன்றும் வரிசையில் நின்று நன்கொடை கொடுக்கப் போவதில்லை. ஐரோப்பா, சீனா, கனடா இன்னும் மற்ற நாடுகள் கியூபாவுடன் பெரிய வணிக, முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன; அமெரிக்கா அங்கு வணிகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள்மீது தண்டனை தரும் வகையிலான தடைகளை கொடுத்தும் இத்தகைய நிலை உள்ளது.

இந்த உண்மைதான்--இதைத் தவிர அமெரிக்க அரசியலில் சிறிதும் அளவுப்பொருத்தம் அற்ற முறையில் காஸ்ட்ரோ எதிர்ப்பு கியூப புலம் பெயர்ந்தவர்கள் குழுவின் மகத்தான பங்கும் உள்ளது-- புஷ் நிர்வாகம் எந்த விதமான சீரான அரசியல் மாற்றமும் கியூபாவில் வரக்கூடாது என எதிர்ப்புக் காட்டுவதற்கும், வன்முறை எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பற்கும் காரணமாகும். இத்தகைய எழுச்சிகளை, ஹவானாவிற்கும் மற்ற முக்கிய முதலாளித்துவ நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் மற்றும் பொருளாதார உறவுகளை தகர்த்துவிடும் வழிவகை என்று புஷ் நிர்வாகம் காண்பதுடன், அது தீவின்மீது தடையற்ற அமெரிக்க மேலாதிக்கத்தை மீட்கும் என்றும் நினைக்கிறது.

கியூபாவின் வெளியுறவு மந்திரி Felipe Perez Roque இந்த உரையை "வன்முறைக்கு அழைப்புவிடும் உரை" என்றும் "ஒரு பொறுப்பற்ற செயல்", அமெரிக்க ஜனாதிபதியின் "திகைப்புத் தரத்தையும், பெரும் ஏமாற்றத்தையும், கியூபா மீது கொண்டுள்ள தனிப்பட்ட வெறுப்பையும்" குறிப்பிடுகிறது என்றும் கூறினார். கியூபாவின் மக்கள் அமெரிக்க மேலாதிக்கம் மீட்கப்படுவதை எதிர்ப்பர் என்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற மக்கள் எழுச்சி போன்ற கணிப்புக்கள் "கற்பனை பிதற்றல்கள்", "அரசியலளவில் நடக்க முடியாதவை" என்றும் கூறினார்.

உரைக்கு முந்தைய பொழுதில், அதன் பொதுக் கருத்து ஏற்கனவே எல்லாவகையிலும் கணிக்கப்பட முடியும் என்ற நிலையில், 81 வயதான பிடல் காஸ்ட்ரோ, "புஷ், பசி மற்றும் மரணம்" என்று தலைப்பிடப்பட்ட தன்னுடைய குறுகிய கட்டுரையை வெளியிட்டார்.

புஷ் "நமது நாட்டில் "மாறுதல் காலத்தை" விரைவுபடுத்த புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்க உள்ளார், இதன் பொருள் கியூபாவை வலிமையின் மூலம் மீண்டும் வெற்றி பெறுதல்" என்பதாகும் என்று காஸ்ட்ரோ எச்சரித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி "மனித குலத்தை ஒரு மூன்றாம் உலகப் போர் என்ற அச்சுறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்; இம்முறை அது அணுவாயுதங்களையும் கொண்டிருக்கும்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

இப்போரின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் உள்ள நிர்வாகம் கியூபா மீது ஒரு "முன்னரே தாக்கித் தனதாக்கும்" தாக்குதலுக்கு தயாரிக்கிறதா என்பதுதான் புஷ்ஷின் ஆத்திரமூட்டல் தரும் உரை காட்டும் பிரச்சினை ஆகும்.