World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

After the Mumbai siege, India-Pakistan tensions rise

மும்பை முற்றுகைக்குப் பின் இந்திய பாக்கிஸ்தான் பதட்டங்கள் அதிகரிக்கின்றன

By Peter Symonds
2 December 2008

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வாரத்திய பயங்கரவாதிகள் மும்பையை முற்றுகைகையிட்டதின் அரசியல் விளைவு இந்தியாவிலும் அண்டை நாடான பாக்கிஸ்தானிலும் வெளிப்படத் தொடங்கிவிட்டது. உள்நாட்டில் பெரும் குறைகூறல்களை எதிர்கொண்டுள்ள இந்திய அரசாங்கம் தாக்குதல்களுக்கான குற்றத்தை பாக்கிஸ்தான்மீது சுமத்த விரும்புகையில் அணுவாயுதங்கள் உடைய இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பதட்டங்கள் அதிகரிதுவிட்டன.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரகம் பாக்கிஸ்தானிய உயர் அதிகாரி ஷாஹித் மாலிக்களை நேற்று அழைத்து, குறைந்தது 172 பேரைக் கொன்று 239 பேரைக் காயப்படுத்திய 60 மணி நேர அட்டூழியத்திற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக "கடுமையான நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்ற முறையான கோரிக்கையை இஸ்லாமாபாத் முன் வைத்தது. மாலிக்கிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தில் புதுதில்லி "பாக்கிஸ்தான் மண்ணை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததற்காக" இஸ்லாமாபாத்தை குறைகூறியுள்ளது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி, இந்தியா தாவுத் இப்ராஹிம் மற்றும் மெளலானா மசூத் அஷர் என்னும் இரு பயங்கரவாத சந்தேகத்திற்கு உரியவர்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளது; உடனடியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் உறவுகள் பாதிப்பிற்கு உட்படும் என்றும் எச்சரித்துள்ளது. முந்தைய பயங்கரவாத தாக்குல்களில் தொடர்பு இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டும், இருவரில் ஒருவர் கூட மும்பை கொடூரத்தில் நேரடியாக தொடர்புபடுத்தப்படவில்லை. இருவரையும் ஒப்படைக்க முன்பே பாக்கிஸ்தான் மறுத்துள்ளது; புதுப்பிக்கபட்டுள்ள கோரிக்கையும் இஸ்லாமாபாத்தின் சீற்றத்தைத்தான் எரியூட்டும்.

பாக்கிஸ்தானிய அரசாங்கம் பல முறையும் மும்பை மீதான தாக்குதல்களை கண்டித்துள்ளதுடன் இதில் தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் இந்திய அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளது. ஆனால் பாக்கிஸ்தானின் இராணுவத்திற்கும் ஒரு வலுவற்ற, உள்நாட்டில் ஆழ்ந்த பொருளாதார, அரசியல் நெருக்கடி இருப்பதை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கும், உறுதியற்ற அரசாங்கத்திற்கும் இடையே பிளவுகள் வளர்ந்துள்ளன. இராணுவ தலைமை தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரியையும் பிரதம மந்திரி யூசுப் ராஜா கிலானியையும் சந்தித்தபோது "தெளிவான வேறுபாடுகள்" இருந்தன என்று Dawn செய்தித் தாள் கூறியுள்ளது.

கடந்த வாரம் இஸ்லாமாபாத் ISI என்னும் பாக்கிஸ்தானிய இராணுவ உளவுத்துறைப் பிரிவின் தலைவரை இந்தியாவிற்கு விசாரணைகளில் உதவ அனுப்பத்தயார் என்று கூறியது. இத்திட்டத்தை இராணுவ உயர்மட்டம் மறுத்த நிலையில், அரசாங்கம் ஒரு இளைய ISI அதிகாரியை அனுப்பத் தயார் எனக் கூறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இப்பொழுது அந்த திட்டமும் சந்தேகம்தான். இந்திய செய்தி ஊடகமும் அரசியல்வாதிகளும் வாடிக்கையாக ISI தான் இந்தியாவிற்குள், குறிப்பாக பூசலுக்குட்பட்ட ஜம்மு, கஷ்மீர் பகுதியில், பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளன.

இந்தக் கட்டத்தில் மும்பை படுகொலைக்கு எவர் பொறுப்பு என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. செய்தி ஊடகத்தின் மூன்று நாட்கள் முற்றுகை பற்றிய தகவல்கள் முரண்பாடாகவும், நம்பகத்தன்மை இல்லாமலும் உள்ளன. சத்ரபதி சிவாஜி இரயில்வே நிலையம், கேப் லியோபோல்ட் மற்றும் ஒரு யூத மையம், இன்னும் இரு ஆடம்பர ஓட்டல்களான தாஜ்மஹால், ஒபேராய் டிரைடென்ட் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களில் 10 இயந்திர துப்பாக்கி ஏந்தயவர்கள்தான் தொடர்பு கொண்டிருந்தனர் என்று உறுதியாகி இருப்பதாகத் தோன்றுகிறது. இவர்கள் அனைவரும் இளைஞர்கள், மிகவும் ஒழுங்குறத் தயாரிக்கப்பட்டவர்கள், பயிற்சி அளிக்கப்பட்டவர்கள், ஆயுதம் வழங்கப்பட்டவர்கள் என்று இருந்தனர்.

இந்த குறைந்த தகவல்களை தவிர, ஒரே கூடுதலான தகவல் பெயரிடப்படாத இந்திய அதிகாரிகள், விசாரணையில் தொடர்பு உடையவர்கள் ஒரு துப்பாக்கி ஏந்திய நபர் உயிரோடு பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டிருப்பது ஆகும். இவன் பெயர் அஜ்மல் அமிர் கமல் என்றும், ஒரு பாக்கிஸ்தானிய குடிமகன் என்றும், போலீசாரிடம் தான் காஷ்மீர் பிரிவினைவாத லஷ்கர் -இ -தொய்பா அமைப்பை சேர்ந்து பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்றும், பிடிக்கப்பட்ட ஒரு இந்திய மீன்பிடிக்கும் படகின் மூலம் மற்றவர்களுடன் மும்பை வந்ததாகக் கூறியதாகவும் கூறப்படுகிறது.

லஷ்கர் -இ -தொய்பா அல்லது பாக்கிஸ்தானை தளமாக கொண்ட பிற இஸ்லாமிய போராளிகள், வை தொடர்பு பெற்றிருக்கக் கூடும் என்ற உறுதித்தன்மை இருந்தாலும்கூட, இந்திய மற்றும் சர்வதேச செய்தி ஊடகத்தில் வெளிவந்துள்ள தகவல்கள் பகிரங்கமாக இந்திய அதிகாரிகளால் உறுதி செய்யப்படவில்லை. இராணுவத்தின் ஒரு பிரிவு அல்லு ISI யின் ஒரு பிரிவு மும்பைத் தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுத்திருக்காலம் என்றாலும், பாக்கிஸ்தான் அரசாங்கம் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது என்று கூறுவது இயலாது. இந்தியாவை தளமாகக் கொண்ட தீவிரவாதிகள் உள்பட மற்ற குழுக்கள் பொறுப்பு என்று கூறுவதும் தள்ளப்பட்டு விட முடியாது.

விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கின்றன என்ற நிலையில் இந்திய அரசாங்கம் பாக்கிஸ்தானுக்கு எதிரான அதன் அலங்காரச் சொற்களை அதிகப்படுத்தியுள்ளது. நேற்று பாக்கிஸ்தானின் உயர் அதிகாரியை அழைத்துப் பேசியது என்பது ஞாயிறன்று பிரதம மந்திரி மன்மோகன் சிங் புதுதில்லியின் அனைத்துக் கட்சிகள் கூட்டம் ஒன்றை நடத்திய பின்னர் வந்தது ஆகும்; அக்கூட்டத்தில் பாக்கிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகள் வேண்டும் என கோரப்பட்டன. ஸ்ராலினிச இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் உடன்பட்டன.

பல நடவடிக்கைகள் வெளிப்படையாக விவாதிக்கப்படுகின்றன; இதில் இந்திய-பாக்கிஸ்தான் கிரிக்கட் பந்தயங்கள் இரத்து செய்யப்படல், இந்தியா பாக்கிஸ்தானில் இருக்கும் தூதரக அலுவலர் எண்ணிக்கை குறைத்தல், இரு நாடுகளுக்கும் இடையே பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர இருப்பதை ஒத்திவைத்தல், இன்னும் தூண்டிவிடும் வகையில் எல்லையில் ஐந்து ஆண்டு காலமாக இருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அகற்றுதல் ஆகியவை அடங்கியுள்ளன. ஞாயிறன்று கொடுத்த பேட்டி ஒன்றில் இந்திய வெளியுறவுத் துறையின் துணை மந்திரியான ஆனந்த் சர்மா அறிவித்தார்: "இப்பொழுது எங்கள் நாடு சீற்றத்தில் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் எப்பொழுதும் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே நடக்கும் சமாதான வழிவகைகளுக்கு பின்னடைவு தரும். இம்முறை நம்முடைய விடையிறுப்பு கடுமையாக இருக்கும்.'

நெருக்கடியை போதுமான முறையில் எதிர்கொள்ளவில்லை என்ற விதத்தில் அரசாங்கம் செய்தி ஊடகத்திடம் சீற்றத்தைப் பெற்றுள்ளது. இதையொட்டி பல இராஜிநாமாக்கள் நடந்துள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சியின் சூடான விவாதத்தை அடுத்து, உள்நாட்டு மந்திரி சிவராஜ் பாடில் கடந்த வார இறுதியில் இராஜிநாமா செய்தார். நேற்று மும்பையை தலைநகராக கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் மந்திரியும் துணை முதல் மந்திரியும் இராஜிநாமாவை அறிவித்துள்ளனர்.

சேதத்திற்கு உட்பட்ட தாஜ் மகால் ஓட்டலுக்கு வெளியே நேற்று ஒரு கோபம் நிறைந்த எதிர்ப்பு நடைபெற்றது; இதற்குக் காரணம், மும்பை தாக்கப்படும் என்ற, அமெரிக்க, இந்திய உளவுத்துறை எச்சரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டன என்று செய்தி ஊடகத்தில் வந்த தகவல்கள்தாம். உதாரணமாக நேற்று இந்துஸ்தான் டைம்ஸ் ஏட்டில் இந்தியாவின் வெளியறவு பிரிவு உளவுத்துறை அமைப்பான RAW, கண்காணித்திருந்த தொடர்ச்சியான தொலைபேசித் தகவல்கள், செப்டம்பர் மாதம் வரை பின்னோக்கி சென்றவை, மும்பை ஓட்டல்களின் தாக்குதல் இருக்கக் கூடிய வாய்ப்பு பற்றி தெரிவித்திருந்தன.

இத்தகைய தகவல்கள் திறைமையின்மை என்ற பிரச்சினையை எழுப்புவது மட்டும் இல்லாமல், இந்தியாவின் பாதுகாப்பு எந்திரம் தங்கள் அரசியல் காரணங்களுக்காக தாக்குதலை நடத்த அனுமதித்திருக்கக்கூடுமோ என்ற வினாவையும் எழுப்பியுள்ளன. இந்துத் தீவிரவாதிகள் அதன் தொகுப்பில் இருப்பதாகவும் அவர்கள் பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பொறுப்பு என்ற விதத்திலும்&ஸீதீsஜீ; இந்திய இராணுவம் சமீபத்தில் கடுமையான மேற்பார்வைக்கு உட்பட்டது. மும்பை கொடுமைகளை தொடர்ந்து இப்பிரச்சினை வசதியாக ஒதுக்கப்பட்டு விட்டது.

மும்பை தாக்குதல்கள் பற்றிய மக்களின் சீற்றம் பிற்போக்கு திசைகளில் இயக்கப்பட்டுவிடும் என்பதுதான் உண்மையான ஆபத்து ஆகும். அடுத்த ஆண்டு தேசியத் தேர்தல்கள் வரவிருக்கையில், இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) இந்நெருக்கடியை பயன்படுத்தி "பயங்கரவாதம்" மற்றும் பாக்கிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை கோருகிறது. ஆரம்பத்தில் ஒருங்கிணைந்த தேசிய விடையிறுப்பிற்கு ஆதரவு கொடுத்திந்த BJP தலைவர் எல்.கே. அத்வானி ஞாயின்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் வராமால் இருந்துவிட்டார்.

பாஜக வை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பிரதம மந்திரி மன்மோகன் சிங் ஏற்கனவே நாட்டின் பாதுகாப்புக் கருவிக்கு ஊக்கம் தரும் வகையில் ஒரு புதிய கூட்டாட்சி ஆய்வு அமைப்பை நிறுவ இருப்பதாகவும், மும்பை முற்றுகையை நிறுத்தப் பயன்படுத்திய கமாண்டோக்களுக்கு ஊக்கம் தர இருப்பதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் பாஜக இன்னும் அதிகமாக அரசாங்கம் சென்று கடுமையான பொடா சட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது; அதன்படி நூற்றுக்கணக்கான "சந்தேகத்திற்கு உரியவர்கள்" முன்பு காலவரையற்று, விசாரணையின்று காவலில் அடைக்கப்பட்டிருந்தனர்.

தீய விளைவுகளை தரக்கூடிய விதத்தில் பாஜக இந்தியா பாக்கிஸ்தானுக்குள் இருக்கும் "பயங்கரவாத பயிற்சி முகாம்களுக்கு" எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டுள்ளது. செய்தி ஊடகத்திடம் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்; "பாக்கிஸ்தானில் இருக்கும் பயிற்சி முகாம்களுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானிற்குள் தாலிபனிற்கு தண்டனை கொடுக்கவும் ஒசாமா பின் லாடனை துரத்திப் பிடிக்கவும் அமெரிக்கா செல்லலாம் என்றால், இந்தியர்கள் ஏன் தயங்க வேண்டும்.?"

இத்தகைய நடவடிக்கை ஒரு முழுப் போரை விரைவில் கொண்டுவரும் பெரிய ஆபத்தை கொண்டுள்ளது. இரு நாடுகளும் 1947 சுதந்திரத்திற்கு பின்னர் ஏற்கனவே மூன்று பெரிய போர்களை நடத்தியுள்ளன. இந்திய பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் டிசம்பர் 2001ல் காஷ்மீர் பிரினைவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், இந்தியா பல லட்சம் அடங்கிய துருப்புக்களை, டாங்குகள் உதவிக்கு இறக்க, பீரங்கிப் படைகளும் போர் விமானங்களும் உதவுவதற்கு இருக்குமாறு, பாக்கிஸ்தானிய எல்லையில் நிறுத்தியது. பலமாதங்கள் தெற்கு ஆசியா போர் விளிம்பில் நின்றது; பின்னர் சர்வதேச அழுத்தத்தை அடுத்து இந்திய படைகளைத் திரும்பப் பெற்றது.

புஷ் நிர்வாகம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர், கொண்டலிசா ரைசை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது; அழுத்தங்களை குறைக்கும் முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுடன் வாஷிங்டன் நெருக்கமான மூலோபாய உறவுகளைக் கொண்டுள்ளது; ஆனால் அதே நேரத்தில் பாக்கிஸ்தானையும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லுவதற்கு முக்கிய பாதை என்ற விதத்தலும் பாக்கிஸ்தானின் பழங்குடி மக்கள் வாழும் எல்லைப் பகுதிகளில் அமெரிக்க எழுச்சி எதிர்ப்பாளர்களை அடக்குவதற்கும் பாக்கிஸ்தானை நம்பியுள்ளது. இந்தியாவுடன் ஒரு மோதல் ஏற்பட்டால் பாக்கிஸ்தானிய-ஆப்கானிய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவப் படைகளை அகற்றிவிடுவதாக பாக்கிஸ்தான் அதிகாரிகள் அச்சுறுத்துகின்றனர்.

இந்திய கோரிக்களை ஏற்குமாறு பாக்கிஸ்தானுக்கு அழுத்தும் கொடுக்குமாறு வாஷிங்டன் விரும்புகிறது என்று ரைஸ் தெளிவாக்கியுள்ளார். லண்டனில் அவர் அமெரிக்கா பாக்கிஸ்தானிடம் இருந்து "முழுமையான வெளிப்படைத் தன்மை மற்றும் ஒற்றுமையை" எதிர்பார்ப்பதாகவும் அறிவித்தார். பாக்கிஸ்தானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம் என்று இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், அமெரிக்கா மும்பைத் தாக்குதல்களை ஐயத்திற்கு இடமின்றிப் பயன்படுத்தி வாஷிங்டனின் போலித்தனமான "பயங்கரவாதத்திற்கு எதிரான" ஆப்கானிஸ்தானில் நடக்கும் போருக்கு ஆதவரை அதிகரிக்குமாறு இஸ்லாமாபாத்திடம் வலியுறுத்தும்.

வாஷிங்டனுடைய தலையீடு இருந்த போதிலும்கூட, இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையே இருக்கும் பதட்டங்கள் கட்டுப்பாட்டை விட்டு எளிதில் நகர்ந்துவிடக் கூடும். 1947ல் துணைக்கண்டம் முஸ்லிம் பாக்கிஸ்தான், இந்துக்கள் அதிகம் உள்ள இந்தியா என்று பிரிக்கப்பட்டதில் இருந்து ஆளும் உயரடுக்குகள் இரு நாடுகளிலும் பல முறை அரசியல் நெருக்கடிகளுக்கு விடையிறுக்கும் வகையில் உள்நாட்டில் வகுப்புவாத பதட்டங்களை தூண்டிவிடுவதுடன், ஒன்றுக்கொன்று எதிராக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. உலகப் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை ஒட்டி எழுந்துள்ள சமூக அதிருப்தியை எதிர்கொள்ள நேர்ந்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் இருக்கும் அரசாங்கங்கள் மீண்டும் மகத்தான அழுத்தத்தில் ஆழ்ந்துள்ளன.

Stratfor சிந்தனைக் குழுவில் மத்திய கிழக்கு பகுப்பாய்விப் பிரிவில் இயக்குனராக இருக்கும் கம்ரான் பொகாரி, வாஷிங்டன் போஸ்ட்டில் எச்சரித்துள்ளபடி, "இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் உள்நாட்டு அரசியல் தவிர்க்க முடியாமல் ஒரு இந்திய-பாக்கிஸ்தானிய எல்லையில் வெடிப்பிற்கு வகை செய்துள்ளன. இதைப் போன்ற விவகாரங்களில் கொள்கை இயற்றுபவர்கள் விருப்பம் கவனிக்கப்படுவது இல்லை. ஒவ்வொரு நாடும் அதன் இடத்தில் அடைக்கப்பட்ட நிலையில், தர்க்கமோ ஒரு நெருக்கடியைச் சுட்டிக்காட்டுகிறது."