World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் 

France: The LCR and the unions betray planned rail strike

பிரான்ஸ்: LCR மற்றும் தொழிற்சங்கங்கள் திட்டமிட்ட ரயில் வேலைநிறுத்தத்தைக் காட்டிக் கொடுக்கின்றன

By Antoine Lerougetel
19 December 2008

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த இரயில் வேலைநிறுத்தத்தை கைவிட்டது CGT (General Confederation of Labour) தலைமையில் தொழிற்சங்கங்கள் நடத்திய முக்கிய காட்டிக் கொடுப்பாகும். உலகரீதியான வங்கி நெருக்கடியை தொடர்ந்து ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் பழமைவாத அரசாங்கத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு நாள் எதிர்ப்பை தாண்டி அது ஒரு முக்கிய தேசிய மோதலாக இருந்திருக்கும்.

எனவே இதை ஒலிவியே பெசன்ஸநோவின் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR) எதிர்கொண்டவிதம் முக்கியத்துவம் உடையதாகும். ஒரு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPR) என்று தன்னை புதுக் கட்டமைப்பாக மாற்றிக்கொள்ளும் விளிம்பில் LCR உள்ளது என்றாலும், புதிய அமைப்பு ஆற்ற உள்ள அரசியல் பங்கு மற்றும் பழைய ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுடன் அதன் உண்மையான தொடர்பு பற்றியும் இது உட்பார்வையை கொடுக்கிறது.

சரக்குப் பிரிவில் உள்ள சாரதிகளின் பணி நேர அட்டவணைகளில் மாற்றங்களை முன்னெடுக்க இருக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக அத்திட்டமிட்ட வேலைநிறுத்தம் நடக்கவிருந்தது. தேசிய இரயில் நிறுவனத்தை (SNCF) உடைத்து தனியார் மயமாக்க வேண்டும், பணி நிலைமைகளை அழிக்க வேண்டும் என்பதான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அது முன்னோடியாக இருக்கும். நவம்பர் 6ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் மக்களிடையே ஆதரவு பெற்றமை, நவம்பர் 23ம் தேதி காலவரையற்ற நிறுத்தத்திற்கு நல்ல வழியை காட்டியிருந்தது.

சமூக பதட்டங்கள் மிக அதிமாகும்போதெல்லாம், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலாளர்களின் இயக்கம் எதுவும் கட்டுப்பாட்டை மீறிப் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளன. போராட்டங்களை தனிமைப்படுத்தி குறுகிய கோரிக்கைகளுடன் அவற்றின் வரம்பை நிலைநிறுத்த அவை பாடுபடுகின்றன.

சரக்கு வண்டி சாரதிகளின் பணி நேரம் பற்றிய பிரச்சினையில் பங்கு பெறுவதற்கு SNCF தொழிலாளர்கள் 160,000 பேரையும் திரட்டுவதற்கு பதிலாக, இரயில் சாரதிகள் மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டனர். அதன்பின் வேலைநிறுத்த தேதிக்கு முன்னதாக நிர்வாகத்துடன் பல சிறு சலுகைகளை பெற்ற வகையில் பேச்சுவார்த்தைகளுக்கு பின் பல தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் இருந்து பின்வாங்கின. இதை திறம்பட முடித்துக் காட்டியது CGT ஆகும்; நவம்பர் 21ம் தேதி அன்று அதன் வேலைநிறுத்த அறிக்கையை "தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக" அறிவித்த வகையில் இது நடைபெற்றது. CGT பெரும்பாலான இரயில் தொழிலாளர்களை கொண்ட சங்கம் என்பதோடு கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாகவும் இருப்பதாகும்.

CGT க்கு போர்க்குண மாற்றீடு என்று தன்னை முன்வைத்துக் கொள்ளும் SUD அமைப்பு ஒன்றுதான் வேலைநிறுத்தம் நடக்க வேண்டும் என்று கூறி, அதுகூட ஒரு நாளைக்கு மட்டும்தான் என்று கூறியது. பெசன்ஸநோ SUD உடைய அஞ்சல் தொழிலாளர் சங்க உறுப்பினர் ஆவார்; செய்தி ஊடகத்திடன் வரம்பற்ற செல்வாக்கு உடையவர். ஆயினும் CGT யின் வேலைநிறுத்தத்திற்கு எதிரான முடிவிற்கு எதிர்ப்பு எதையும் அவர் திரட்டவில்லை. மாறாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வேலைநிறுத்தம் இல்லை என்று முடிவெடுக்கும் வரை காத்திருந்து பின்னர் CGT அதை சேதப்படுத்திவிட்டது என்று கண்டனம் தெரிவித்தது. அப்பொழுதுகூட அது தொழிலாளர்கள் கூடுதலான அழுத்தத்தை தொழிற்சங்கம் மீது செலுத்தவேண்டும், நடவடிக்கைகளில் ஐக்கியமாக இருக்க வேண்டும் என்ற அழைப்பைத்தான் விடுத்தது.

LCR இன் வாராந்திர ஏடான Rouge நவம்பர் 27ம் தேதி உறுதியாகக் கூறியது: "அடிப்படையில் CGT பின்வாங்குவதை எதுவும் நியாயப்படுத்தமுடியாது; இது முற்றிலும் கலப்படமற்ற நாச வேலைதான்." ஆனால் அதே பதிப்பில் Rouge அங்கத்தவர்களிடம் தங்கள் தொழிற்சங்கங்கள் மீது அழுத்தத்தை கொடுத்து "ஒரு உண்மையான ஒன்றுபட்ட வேலைநிறுத்ததிற்கு" பாடுபட வேண்டும் என்றும், "போராட்டங்கள் மற்றும் அணிதிரட்டல் உடைந்து சிதறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றும் எழுதியுள்ளது. இப்படி அங்கத்தவர்களுக்கு அறிவுரை கூறியபின், அது உடனடியாக நாசவேலைக்கு பொறுப்பானவர்களுக்கே அதாவது "சமூக மற்றும் அரசியல் இடதுகளுக்கு" இதே போன்ற அழைப்பைக் கொடுக்கிறது; அல்லது உண்மையில் இவற்றின் பெயரை கூறவேண்டும் என்றால், சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பவையாக உள்ளன. இப்போக்குகளுக்கு "அதிருப்தியை கிளறி எதிர்ப்பு இயக்கங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுமாறு செய்யவேண்டும்." என்று வலியுறுத்தப்படுகிறது.

தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்புக்கள் போர்க்குண அழுத்தத்தின் மூலம் தடுக்கப்பட முடியாதவை. அவை தொழிலாளர்களின் அமைப்புக்கள் என்று இல்லாமல் உறுப்பினர்களை கட்டுப்படுத்தி ஒழுங்கிற்குள் கொண்டுவரும் பெருவணிகத்தின் கருவிகளாகத்தான் செயல்படுகின்றன.

பிரான்சில் தொழிற்சங்கங்கள் பெருநிறுவன நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் கருவியாக இணைந்துவிட்டது என்பது வியக்கத்தக்க நிலையாகும். தொழிலாள வர்க்கத்திற்கு அவை கொடுக்கும் உண்மையான ஆதரவு மிக மிகக் குறைந்ததாகும். தொழிற்சங்கங்களில் உறுப்பினர் எண்ணிக்கை மொத்த தொழிலாளர் தொகுப்பில் 7 சதவிகிதம்தான்; CGT யில் தாராளமாக மதிப்பிட்டாலும் 2 முதல் 3 சதவிகிதம்தான்.

ஆனால் தொழிற்சங்கங்கள் செல்வக்கொழிப்பும் செல்வாக்கும் உடைய அமைப்புகளாக உள்ளன; ஏனெனில் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உள்ள நிலைமை CGT மற்றும் மற்றய தொழிற்சங்கங்களானது வேலை அளிப்போரின் நிர்வாகக் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் சமூகப் பாதுகாப்பு நிதியங்களினால் அளிக்கப்படும் ஓய்வூதியம், வேலையின்மை நலன்கள், சுகாதாரப் காப்பீடு மற்றும் மற்றய சேவைகளில் கூட்டுப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரத்துவத்தின் கணிசமான அடுக்கிற்கு தொழிற்சங்கங்கள் நிறைய ஊதியங்களையும், முதலாளிகளுடனும் அரசாங்க அதிகாரிகளுடனும் பயன்படுத்தவல்ல தொடர்புகளை வைத்துள்ளன. மிக உண்மையான மதிப்பீடுகள் தொழிற்சங்கங்களின் நிதியில் பாதிதான் உறுப்பினர் கொடுக்கும் கட்டணத்தில் இருந்து வருவதாக மதிப்புள்ளன; இந்த மதிப்பீடு கூட பல சலுகைகள், நலன்கள் மற்றும் மறைமுக நிதியளிக்கப்படுதல் என்று பெருநிறுவனங்கள் அதிகாரத்துவத்தினருக்கு கொடுக்கும் இரகசிய நிதிகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்த இரகசியம்தான். பாரிஸில் Montreuil TM CGT க்கு இருக்கும் தலைமை அலுவலகம் இதன் தலைமை அனுபவிக்கும் வாழ்க்கை வழிவகை மற்றும் அரசாங்க இருப்புக்களின் உதவி ஆகியவற்றை தெரிவிக்கின்றது.

இப்படி அரசாங்கம், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையிலான ஒத்துழைப்பு பன்முக இடதின் தேர்தல் வழிக்கு மற்றும் சார்க்கோசியின் வெற்றி ஆகியவற்றுடன் முடிவடைந்துவிடுவதில்லை. அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து இவற்றின் பங்கு ஒரு "சமூகப் பங்காளிகள்" என்று தான் கருதுவதாக சார்க்கோசி தெளிவுபடுத்தியுள்ளார்; தன்னுடைய மாற்று சீர்திருத்தங்களை செயல்படுத்த இவை முக்கியம் என்றும் கூறியுள்ளார். பிரெஞ்சு தொழிற்சங்கங்களை அவர் தொடர்ச்சியாக சந்தித்து கொள்கைகளை இயற்றவும், விவாதிக்கவும் பயன்படுத்தியுள்ளார்.

செப்டம்பர் மாதம் ஐரோப்பிய குழுவின் தலைவர் என்ற முறையில் சார்க்கோசி, ஐரோப்பிய வணிக ஒன்றியக் கூட்டமைப்பின் (ETUC) தலைவர் Wasnja Lundby-Wedin, பொதுச் செயலாளர் ஜோன் மாங்க்ஸ், பிரெஞ்சுத் தொழிற்சங்கத் தலைவர்கள் CGT யின் பேர்னார்ட் தீபோ, CFDT உடைய பிரான்சுவா செரெக், FO வின் Jean-Claude Mailly, CFTC கத்தோலிக்க அமைப்பின் Jacques Voisin, மற்றும் UNSAS -ன் Alain Olive (சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானது) ஆகியோர் வழிநடத்தும் ETUC அமைப்பின் பேராளர்களை சந்தித்தார்.

ஒரு ETUC அறிக்கை குறிப்பிட்டது: "ஐரோப்பிய சமூக பங்காளிகளின் பணி எவ்வளவு முக்கியம் என்பதையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்; எப்படி அவற்றின் திறன், ஒப்பந்தங்களை தங்களுக்குள்ளேயே முடிக்கக்கூடிய திறனுடையது, சீர்திருத்தங்களை ஏற்கும் வழிவகை, அதன் விரிவாக்கம் பற்றியும் உள்ளது என்று குறிப்பிட்டார். எனவே பிரதிநிதிகளை ஐரோப்பிய தரத்தின் சமூக உரையாடலை பயன்படுத்தி சீர்திருத்தங்கள் பற்றிய திட்டங்களை முன்வைக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும் என்று கூறினார்."

தொழிற்சங்கங்களுக்கும் பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கும் இடையே இருக்கும் உண்மையான உறவு பற்றி LCR க்கு தெரியாமல் இல்லை. இரயில் வேலைநிறுத்தக் காட்டிக் கொடுப்பு பற்றிய தன்னுடைய பகுப்பாய்வில் Rouge கூறியது: "இப்படி முற்றிலும் மாறியதற்கு பல விளக்கங்கள் கொடுக்கப்படலாம்; உதராணமாக CGT prud'homales தேர்தல்கள் ஒரு வாரத்திற்குள் வரவிருக்கும் நிலையில் அது தொலைக்காட்சி அறிக்கைகள் CGT மற்றும் SUD ரயில் ஆகியவற்றால் "பயணிகள் பணயக் கைதி போல் ஆக்கப்பட்டுள்ளனர்" என்று கூட்டம் நிறைந்த இரயில் நடைமேடைகள் காட்டப்படுவதை விரும்பவில்லை."

SUD இரயில் வேலைநிறுத்த செய்தியும் CGT prud'homales தேர்தல்களில் பயணிகள் வாக்குகள் பாதிக்கக்கூடிய வகையில் "தொந்தரவு செய்வதை" விரும்பவில்லை என்று கூறியுள்ளது.

prud'homales தேர்தல்கள் தொழிலாளர் நடுவர்மன்ற (labour tribunals) குழுவில் பிரதிநிதிகள் இடம் பெறுதலை நிர்ணயிக்கின்றன; அவைதான் தனித் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே இருக்கும் உறவுகளில் தீர்ப்பு கொடுக்கின்றன. இந்த தேர்தல்களின் முடிவுகள்தான் அதிகாரத்துவத்திற்கு முக்கிய பிரச்சினை ஆகும்; ஏனெனில் அவைதான் போட்டியிடும் தொழிற்சங்கங்கள், அவை கொண்டுள்ள சார்பு ஆகியவை பற்றி மதிப்பிடுவதற்கு உதவுகின்றன; அவைதான் நிர்வாகம் மற்றும் அரசாங்க துறைகளில் அவர்கள் பெறக் கூடிய பெரும் ஆதாயங்களுக்கும் உதவும்.

எப்படியும் டிசம்பர் 3 ல் நடைபெற்ற தேர்தல்கள் தொழிற்சங்கங்களில் இருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் விரோதப்போக்கு உடையதைத்தான் நிரூபித்தது. 25 சதவிகிதத்தினர் மட்டும்தான் பங்கேற்றனர்; 1970 களில் தேர்தல்களின்போது பங்கு பெற்றவர்கள் சுமார் 65 சதவிகிதம் என்று இருந்தது. இதனால்தான் CGT 33.65 சதவிகித வாக்குகளை பெற்றதில் மகிழ்ச்சி அடைய முடிந்தது; இது தொழிலாளர் தொகுப்பில் 8 சதவிகிதம்தான்; எனவே வர்க்க ஒத்துழைப்பிற்கான சலுகைகளில் மிகப் பெரிய அளவை அது பெற முடியும்.

தொழிற்சங்கங்களை நிர்வாகத்தின் இரண்டாம் கை போல் மாற்றிக் கொண்டது பற்றிய அரசியல் முடிவுகளையும் வரைய LCR மறுப்பது தத்துவார்த்த குருட்டுத்தனத்தின் விளைவு மட்டும் அல்ல. மாறாக, பல தசாப்தங்களாக அரசியல், தொழில்துறை நடவடிக்கைகளில் முக்கிய LCR அங்கத்தவர்கள் தொழிற்சங்கக் கருவிகளில் இணைக்கப்பட்டுவிட்டனர்; அவற்றின் மிக உயர்ந்த மட்டங்களில் கூட. இதன் உறுப்பினர்கள் தேசிய, வட்டார, உள்ளூராட்சி என்று தொழிற்சங்கங்களில் கணக்கிலடங்கா பதவிகளில் இருத்தப்பட்டுள்ளனர்; அங்கு அவர்கள் நிர்வாகத்தினருடன் கூட்டுக் குழுக்களில் உறுப்பினர் இடங்களில் பங்கு பெறமுடியும். தங்கள் மற்றய சக தொழிற்சங்கவாதிகளைவிட கூடுதலான போர்க்குண நடவடிக்கைகளை அவர்கள் முன்வைக்க முடியும், ஆனால் ஸ்ராலினிஸ்ட்டுக்களையும் சமூக ஜனநாயகவாதிகளையும் அகற்றுவதற்கு தொழிலாளர்களை ஒருபோதும் திரட்டுவதில்லை.

Rogue கட்டுரை அவர்களுடைய தொழிற்சங்கத்தை "நாசப்படுத்திய வேலைநிறுத்தம்" பற்றி குற்றச் சாட்டை எழுப்பிய இரு நாட்களுக்கு பின்னர் NPA ஆதரவில் நடைபெற்ற CGT உறுப்பினர்களின் கூட்டம் நவம்பர் 29, சனிக்கிழமையன்று நடைபெற்றது. தொழிற்சங்கத்தில் LCR க்கு கணிசமான இருப்புள்ளது என்னும் உண்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; அதில் 300 உறுப்பினர்கள் உள்ளனர். ஆயினும்கூட Rouge கட்டுரை, கூட்டம் பற்றிய அறிக்கையில் CGT யில் உள்ள Nord-Pas de Calais ல் இருக்கும் இடது பேசும் கார்த்தொழில் அதிகாரத்துவத்தினர் Jean-Pierre Delannoy இன் உரைக்கு பெரும் கெளரவத்தை அளித்தது; அவருடைய ஒரே விடை, "தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளை நிராகரிக்கும் அனைவரையும்" ஒன்றாகக் கொண்டுவருதல், "அனைவரையும் ஒன்றாக கொண்டுவந்து தவிர்க்க முடியாமல் கட்டமைத்து உபயோகமாக இருத்தல்" என்று கூறியிருப்பதுதான்

Europe solidaire sans frontiers க்கு நவம்பர் 20 அன்று கொடுத்த பேட்டி ஒன்றில், Delannoy "CGT யின் கடந்த கால போராட்டங்களுக்கு" திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்; அந்தக் கடந்த காலத்தில் 1936ம் ஆண்டு ஒரு தற்காலிக சலுககளுக்காக வேலைநிறுத்தத்தை கைவிட்டது, மே-ஜூன் பொது வேலை நிறுத்தத்தின்போது டு கோலை புரட்சிகர சவாலில் இருந்து காப்பாற்றியது ஆகியவைதான் அடங்கும். அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதைத்தவிர வேறு எந்த அரசியல் முன்னோக்கையும் தொழிலாளர்களுக்கு இவர் கொடுக்கவில்லை -- "எமது கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் சக்திவாய்ந்த விதத்தில் பொது அணிதிரளலை நீடித்து, சக்திகளின் உறவை மாற்றி தொழிலாளர்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்களுக்கு பதில் கூறும் வகையில் இருக்க வேண்டும்."

LCR வாடிக்கையாக அதன் NPA, சோசலிஸ்ட் கட்சியின் "சமூக தாராளவாதிகள்" உடன் அரசியல் கூட்டில் ஒத்துழைக்காது என்று வலியுறுத்துகிறது. ஆனால் அதன் தொழிற்சங்க வேலைகள் மற்றும் உள்ளூராட்சி அரசாங்கங்களில், அது SP, CP ஆகியவற்றுடன் இடைவிடாமல் தொடர்பை எல்லா மட்டங்களிலும் கொள்ளுவதுடன் எப்பொழுதும் அவர்களை "இடது" என்று குறிப்பிட்டு என்ன வந்தாலும் அவற்றுடன் இணைய வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டங்களை அவை நெரிப்பது ஆகியவற்றிற்கு சவால்விடாத எந்தக் கட்சியும் வருங்கால காட்டிக் கொடுப்புக்களுக்கு ஒரு இடது மறைப்பு என்றவிதத்தில்தான் இருக்கும். ஒரு சில போர்க்குண சொற்றொடர்களை கூறும் பிரச்சினை அல்ல அது; அதிகாரத்துவம் மற்றும் அதன் புறநிலைப் பங்கின் தன்மையை ஆழ்ந்து அறிவதால் ஊக்குவிக்கப்படும் எழுச்சி உணர்வை வளர்ப்பதின்மூலம்தான் அது முடியும்.

தொழிலாள வர்க்கத்தின் உண்மையான ஐக்கியம் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்ட்டுக்களுடைய அதிகாரத்துவங்களின் மேலாதிக்கத்திற்கு எதிரான அரசியல் போராட்டம் ஒன்றின் மூலம்மட்டும் தான் உருவாக்க முடியும்; ஆனால் ஒரு கொள்கைப்பிடிப்பற்ற போலி இடது போக்குகளினால் ஒரு சில குறைந்த கோரிக்கைகளுக்காக எழுப்பப்படும் போராட்டங்கள் மூலம் இது ஏற்படாது; இவை தீவிர போராட்டம் வந்தவுடன் உடைத்துவிடும். இதற்கு தேவையானது உண்மையான அமைப்புக்களை கட்டியமைப்பது இன்றியமையாதது ஆகும்; அவை இப்பொழுது தொழிற்சங்கங்களினால் புறக்கணிக்கப்பட்டுள்ள பரந்த தொழிலாளர்களை, குறிப்பாக இளைஞர்களை அங்கத்தவர்களாக கொண்டு அமைக்கப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும்.