World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

The G7 and the Euro Group agree to pour billions into banks

ஜி7 ம் யூரோக் குழுவும், வங்கிகளில் பில்லியன்களை கொட்ட உடன்படுகின்றன

By Peter Schwarz
14 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வார இறுதியில் முக்கிய தொழில்துறை நாடுகளின் இரு உச்சி மாநாடுகள், தோல்வியுற்றிருக்கும் வங்கிகள் மற்றும் நிதியச் சந்தைகளைக் காப்பாற்றுவதற்கு வரம்பில்லாத வகையில் பொதுநிதியங்களை அவற்றிற்கு அளிப்பது என்ற முடிவை எடுத்தன.

அமெரிக்கா, கனடா, கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் (G7) ஆகிய நாடுகளின் நிதி மந்திரிகளும் மத்திய வங்கிகளின் தலைவர்களும் வெள்ளி மாலை வாஷிங்டனில் கூடினர்; யூரோக் குழுவின் (யூரோவை பொது நாணயமாக பகிர்ந்துகொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்) மற்றும் கிரேட் பிரிட்டனின் அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள் பாரிசில் ஞாயிறன்று கூடினர்.

இக்கூட்டங்களுக்கு முன்னதாக உலகப் பங்குச் சந்தைகளில் ஒரு கொந்தளிப்பான வராம் இருந்தது; அதில் கிட்டதட்ட உலகம் முழுவதும் ஐந்தில் ஒரு பங்கு மதிப்பு இழக்கப்பட்டுவிட்டது. நியூ யோர்க் Dow Jones குறியீடு அக்டோபர் 6ல் இருந்து 10 வரைக்குள் 18 சதவிகிதத்திற்கும் மேலாக மதிப்பை இழந்தது; லண்டன் FTSE 100 அதன் மதிப்பில் 21 சதவிகிதத்தை இழந்தது; பிராங்க்பேர்ட் DAX 21.6 சதவிகிதம், Tokyo Nikkei 24.3 சதவிகிதம் என்று இழப்பை அடைந்தன. மொத்தத்தில் உலகச் சந்தைகள் கடந்த நான்கு வாரங்களில் $11 டிரில்லியன் சொத்துக்கள் அழிந்ததை கண்ணுற்றன. இந்த பண மதிப்பு கிட்டத்தட்ட அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு மொத்த ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாகும்.

முக்கிய தொழில்துறை நாடுகளின் அரசாங்கங்கள் பீதியுடன் பங்குச் சந்தை சரிவுகளை எதிர்கொண்டு தங்கள் கருவூலங்களுக்கு அனைத்து உதவியையும் தடையின்றி நிதிய அமைப்புக்களுக்கு கொடுக்குமாறு உத்தரவிட்டன; ஆனால் இந்த அமைப்புக்கள்தான் நிதிய உருகிவழிதலுக்கு பொறுப்பானவை ஆகும்.

G7 நிதி மந்திரிகள் வாஷிங்டனில் ஒரு ஐந்து அம்ச திட்டத்தை ஏற்றனர்; அதில் துல்லியமான எண்ணிக்கைக்குறிப்போ, மதிப்பீடுகளோ கூட இல்லை; ஆனால் அவை தவிர்க்க முடியாமல் பிரம்மாண்டமான அளவு பணத்தை சம்பந்தப்படுத்தும்.

முதலில் அனைத்து G7 அரசாங்கங்களும், எந்த வங்கியும் புறக்கணிக்கப்படாது என்பதற்கு உத்தரவாதம் தருவதாக உறுதிபூண்டன. இரண்டாவதாக, நிதிய நிறுவனங்களுக்கு எளிதில் பணமாக மாற்றும் தன்மைக்கு போதுமான வழிவகை இருக்கும் என்று உத்தரவாதம் அளித்துள்ளன; உதாரணமாக குறுகியகால வங்கிகளுக்கு இடையேயான கடன்களுக்கு அரசாங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, இவை வங்கிகளுக்குப் போதுமான மூலதனம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றன; அதற்காக அரசாங்கங்கள் வங்கிகளின் பங்குகளை வாங்குகின்றன. நான்காவதாக, அரசாங்கங்கள் வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்புக்களுக்கு உத்தரவாதம் அளிக்க முற்பட்டுள்ளன; கடைசியாக இவை இருப்புநிலைக் குறிப்புக் கட்டுப்பாடுகளை தளர்த்தி நச்சு சொத்துக்கள் உடனடியாக வராக்கடன் வகையில் தள்ளுபடி செய்யாமல் இருக்க வேண்டும் என்று எளிதாக்க விரும்புகின்றன.

இந்த ஐந்து அம்சத்திட்டம் ஒரு காகிதத்தின் ஒரு பக்கத்தில் நேர்த்தியாக உள்ளது. இதன் விவரங்கள், செயற்பாடுகள் மற்றும் திட்டத்திற்கான நிதியம் என்பவை தனிப்பட்ட அரசுகளுக்கு விடப்பட்டுள்ளன. திட்டத்தின் முக்கிய கவலை ஒரு அரசால் அதன் நிதிய அமைப்புக்களுக்கு கிடைக்கும் எந்த உதவியும் அதன் போட்டியாளர்கள் மீதாக அதற்கு ஒரு சாதகமான நலனைக் கொடுத்துவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

ஞாயிறன்று மாலை ஐரோப்பிய குழுவின் அரசுகள், அரசாங்கங்களின் தலைவர்கள் G7 ன் ஆலோசனைகளை எடுத்துக் கொண்டு, ஐரோப்பாவில் வங்கிகளுக்கு ஆதரவு கொடுப்பதற்காக "ஒரு செயற் கருவித் தொகுப்பு" பற்றியும் உடன்பட்டனர். இந்த "கருவிகளுள்" எளிதில் பணமாக மாற்றுவதற்கான உதவி, மூலதனத்தை உட்செலுத்துதல் மற்றும் வங்கிகளுக்கு புதிய இருப்புநிலைக் குறிப்பைத் தயாரித்தல் ஆகியவை உள்ளன. எனவே இப்பொதி பொதுவான ஐரோப்பிய அணுகுமுறை எதையும் அளிக்கவில்லை; அதேபோல் கூட்டு நிதி அளித்தலுக்கும் ஏற்பாடு செய்யவில்லை.

ஐரோப்பிய குழுவின் உடன்பாட்டிற்கு முன்மாதிரி கடந்த வார இறுதியில் தொழிற்கட்சி அரசாங்கம் பிரிட்டிஷ் வங்கிகளுக்கு 500 பில்லியன் பவுண்டுகள் (635 பில்லியன் யூரோக்கள்) பொதியைக் கொடுத்தது ஆகும்.

திங்களன்று ஜேர்மனிய அரசாங்கம் அதன் சொந்த 480 பில்லியன் யூரோ பொதியை அளித்தது; இது இந்த வாரம் பாராளுமன்றத்தில் விரைவாக இயற்றப்பட உள்ளது. இப்பணத்தில் 400 பில்லியன் யூரோக்கள் வங்கிகளுக்கு இடையேயான கடன்களுக்கு அரசாங்கம் ஒப்புதலை கொடுப்பதற்கும், மிச்சமுள்ள 80 பில்லியன் யூரோக்கள் வங்கிகளுக்கு புது மூலதனமாகவும் அமையும்.

பிரான்சை பொறுத்தவரையில் அதனது சொந்த ஆதரவுப் பொதியாக 360 யூரோ பில்லியனுக்கான திட்டத்தை கொண்டுள்ளது; இதில் 320 பில்லியன் யூரோக்கள் வருவாய் இல்லாத கடன்களுக்கும் 40 பில்லியன் யூரோக்கள் வங்கிகளுக்கு புது மூலதனத்திற்கும் கொடுக்கப்படும். ஸ்பெயின் தனது வங்கிளுக்கு இடையேயான கடன்களுக்கு மொத்தத்தில் 100 பில்லியன் யூரோக்களைக் கொடுக்க உள்ளது.

இந்தப் பணங்கள் இந்நாடுகளின் தேசிய ஆண்டு வரவு செலவுத்திட்ட வருமானத்தைப் போல் இரு மடங்கு ஆகும்; தனி நபர் அடிப்படையில் பார்த்தால் அமெரிக்க அரசாங்கம் இயற்றிய 700 பில்லியன் டாலர்கள் தொகுப்பை விட மூன்று அல்லது நான்கு மடங்கு கூடுதல் ஆகும்.

திங்களன்று ஐரோப்பிய மத்திய வங்கி (EZB) பிரிட்டிஷ் மற்றும் ஸ்விஸ் மத்திய வங்கிகளுடன் சேர்ந்து தான் வரம்பில்லாத அளவிற்கு டாலர் எளிதில் பணமாக ஆக்கக்கூடிய தன்மையை வர்த்தக வங்கிகளுக்கு அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுவரை அது மிகக் குறைவான முறையில்தான் டாலர்களை வழங்கியுள்ளது.

அடித்தளம் இல்லா பொறி

கடந்த வாரம் ஏற்கப்பட்ட உடன்பாட்டில் முக்கியமாக காணப்படும் முதலாவது கூறுபாடு அவற்றின் அம்மணமான வர்க்கத் தன்மைதான்.

பொதுக் கருவூலத்தில் நிதி இல்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டு, கடந்த மூன்று தசாப்தங்களாக சமூக முன்னேற்றங்களுக்கான கோரிக்கைகள் யாவும் முரட்டுத்தனமாக ஒதுக்கப்பட்டன. உயர்ந்த வருமானங்கள் மற்றும் பெரும் சொத்துக்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டன; ஊதியங்கள் குறைக்கப்பட்டன; தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்கும் சட்டங்கள் அழிக்கப்பட்டன; ஏனெனில் இவர்கள் வாதத்தின்படி மகத்தான இலாப விகிதம் ஒன்றுதான் அனைவருக்கும் இலாபம் என்ற உத்தரவாதத்தைத் தரும் என்பதாக இருந்தது. இந்த வாதங்கள் ஆர்வத்துடன் எடுத்துக் கொள்ளப்பட்டு, உபதேசிக்கப்பட்டு பிரிட்டிஷ் தொழிற்கட்சி, ஜேர்மன் சமூகஜனநாயகவாதிகள் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிற்சங்கங்களால் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டன.

இப்பொழுது, பெரும் செல்வக்கொழிப்பு, ஊகச்செயல்களின் களிப்பு ஆகியவை முதலாளித்துவ முறையில் 1929க்கு பின்னர் மிகப் பெரிய நெருக்கடிக்கு வகை செய்துள்ளது; இந்த நிலையில் வரம்பின்றி கருவூலங்கள் செலவழிக்கும் என்று நமக்குக் கூறுகிறார்கள். வங்கிகளுடைய சூதாட்ட இழப்புக்களை ஈடுசெய்ய நூற்றுக்கணக்கான பில்லியன்கள் கொடுக்கப்படுகின்றன. மில்லியன்களும், பில்லியன்களும், சமீபத்திய தசாப்தங்களில் ஊக வணிகத்தால் சேகரிக்கப்பட்டவை இப்பொழுது தொடப்படவில்லை. நீண்ட கால முறையில் இச்செலவினம் முழுவதும் -- சமூக செலவினக் குறைப்புக்கள், வேலையின்மை உயர்வு, பணவீக்கம் என்ற விதத்தில் உழைக்கும் மக்களின் தலையில் இருத்தப்படும்.

நடைமுறையில் அரசாங்கங்கள் தங்கள் கருவூலங்களின் திறவுகோல்களை வங்கிகளிடம் கொடுத்துவிட்டன என்று கூறலாம். மக்களில் உழைக்கும் தட்டுகளில் இருந்து செல்வம் கொழிக்கும் தட்டிற்கு கடந்த மூன்று தசாப்தங்களாக மகத்தான முறையில் நிதியம் மறுபங்கீடு செய்தது தொடரப்படும் என்பதோடு, இப்பொழுது வந்துள்ள நிதிய நெருக்கடியின் போக்கின்போது இன்னும் அதிகமாக விரைவுபடுத்தப்படும்.

எந்த முக்கிய வங்கியும் சரிந்துவிட அனுமதிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை கொடுத்தபின் அரசாங்கங்கள் பகிரங்கமாக மிக சக்தி வாய்ந்த நிதிய நலன்களின் பிணைக் கைதிகளாக தங்களை மாற்றிக் கொண்டுவிட்டன. வங்கியாளர்களும் அரசாங்க அதிகாரிகளும் மிக நெருக்கமாக மீட்புப் பொதியைச் செயல்படுத்தவுள்ள குழுக்கள் அனைத்திலும் ஒத்துழைத்துள்ளனர்.

அமெரிக்காவில் கருவூலம் ஹென்றி போல்சன் தலைமையில் உள்ளது; இவர் நெருக்கடியில் பெரும் இலாபத்தை ஈட்ட முடிந்துள்ள வங்கியான கோல்ட்மன் சாக்ஸின் முன்னாள் தலைவர் ஆவார். ஜேர்மனியில் Deutsche Bank ன் தலைவரான Josef Ackermann அரசாங்கப் பிரதிநிதிகளுடன் இணைந்து செயலாற்றியுள்ளார்.

திங்களன்று பங்குச் சந்தைகள் வார இறுதியில் நடைபெற்ற உடன்பாடுகளுக்கு சாதகமான வகையில் பதிலாற்றின; இது வெள்ளிக்கிழமை இழப்புக்களை அதிக அளவு ஈடுகட்டியது (முழு வாரத்தின் இழப்பு எனக் கூறமுடியாது). சர்வதேச நிதியச் சந்தைகளில் வெள்ளமென புதுப் பணம் வந்ததால் நியூ யோர்க்கில் Dow Jones Industrial 936 புள்ளிகள் இலாபத்தை காட்டி மகிழ்ந்தது. ஆனால் பொதுவான உணர்வு இன்னும் அவநம்பிக்கைத் தன்மையில்தான் உள்ளது.

Süddeutsche Zeitung வாஷிங்டனில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நல்ல மதிப்பைக் கொடுத்துள்ளது. முதல் தடவையாக G7 "நிதிய முறையின் உலக நெருக்கடிக்கு ஒரு உலக விடையிறுப்பைக் கொடுத்துள்ளது" என்று கூறியுள்ளது. ஆனால் அவ்வேடு உடன்பாட்டின் பலவீனம் "G7 ன் செயல்திட்டம் வரலாற்றில் அரசுகளின் சர்வதேச சமூகம் அதன் நிதிய முறை உள்வெடிப்பிற்கு முன்னர் கடைசியாய் பதட்டமடைகையில் செய்த பெரும் காரியம் என்றும் போகக்கூடும்" என்று தொடர்ந்து எழுதியுள்ளது.

1987 சரிவைப் பற்றி Spiegel-on-line நிதிய வல்லுனர்கள் மேற்கோளிடுகின்றனர்; "அந் நேரத்தில் பங்குச் சந்தைகள் மீட்பின் ஆரம்பக் கட்டத்திற்குப் பின்னர் புதிய பெரும் ஆழ்ந்த சரிவைக் கண்டன."

அரசாங்கங்கள் தங்கள் பல பில்லியன் யூரோக்கள் ஆதரவுப் பொதி கொடுப்பதை நியாயப்படுத்தும் வகையில், இவை ஒன்றுதான் நம்பிக்கையை மீட்டு மூலதனப் போக்கை வங்கிகளுக்கு இடையே மறுபடியும் நிறுவ உதவும் என்ற வாதத்தை முன்வைக்கின்றன; அது இல்லாவிடில் முழுப் பொருளாதாரமும் அப்படியே நின்றுபோய்விடும் என்றும் வாதிடுகின்றன. இத்தகைய சிந்தனைப் போக்கின்படி, தற்போதைய நெருக்கடி எளிதில் பணமாக்கக்கூடியதன்மை, நம்பகத்தன்மை பற்றிய நெருக்கடிதான் என்றும் பணச் சுற்று மீண்டும் முன்பிருந்ததுபோல் அமைக்கப்பட்டதும் அது மறைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

உண்மையில் ஒரு மகத்தான ஊகக் குமிழி வெடித்துள்ளதைத்தான் காண்கிறோம்; இது விரைவில் ஒரு திருகுப்புரி சுருள் பணவீக்கத்திற்கு வகை செய்யக்கூடும்; இந்நிலைமைகளின் கீழ் அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகளால் மிகப் பெரிய அளவு புதிய பணம் நிதிய முறையில் உட்செலுத்தப்படும்.

சமீபத்திய நாட்களிலும் வாரங்களிலும், வங்கிகளுக்கு கூட எந்த அளவு மோசமான கடனைத் தாங்கள் வைத்திருக்கிறோம் என்பது தெரியாமல் உள்ளன என்பதுதான் பெருகிய முறையில் வெளிப்பட்டுள்ளது. இப்பொழுது சுற்றில் இருக்கும் எஞ்சிய நிதியத்தின் மொத்த மதிப்பு $516 டிரில்லியன் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடன், கடன் எச்சம் ஆகியவற்றிற்கான சந்தை கொள்ளளவு $56 டிரில்லியன் என்று உள்ளது. இவை அனைத்தும் வெறும் காகித மதிப்புக்கள்தான், வருங்கால வளர்ச்சி பற்றிய பந்தய ஊகங்கள், வங்கிகளின் இருப்பு நிலைக் குறிப்பில் உறங்குகின்றன.

G7 மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் மிக அதிக அளவுக்கு சென்று நம்பிக்கையையும் அமைதியையும் பெருக்க முயன்று வருகின்றன. இவை கடந்த வார இறுதியில் தயாரிக்கப்பட்ட மீட்பு பொதியை முன்வைத்து தாங்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதின் நிரூபணம் என்று நினைக்கின்றன. உண்மையில் இப்பொதிகள் பெருகிவரும் பீதியின் வெளிப்பாடுகள்தாம். மக்களுக்கு முன்வைக்கப்படும் கருத்து "ஒரு உலக நெருக்கடிக்கு ஒரு உலக விடையிறுப்பு" என்பதாகும்; உண்மையில் இது தனிப்பட்ட நாடுகளுக்கு இடையே பெருகிவரும் பூசல்களின் வெளிப்பாடுதான்.

அமெரிக்க அரசாங்கம் அதன் வங்கிகளுக்கு ஆதரவு கொடுக்க நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் என்று வரிப்பணத்தை எடுத்து கொடுக்க தொடங்கியதும், மற்ற நாடுகளும் இதே நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் போட்டியில் நலன்கள் குறைந்துவிடும் என்று அஞ்சின. இந்த பொது பீதியில், ஒரு நிதிய வலுவான அரசாங்கத்தின் ஆதரவைக் கொண்டுள்ள வங்கி புதி முதலீட்டாளர்களை ஈர்க்க அதிக வாய்ப்பை அத்தகைய ஆதரவு இல்லாத வங்கிகளைவிடக் கூடுதலாகப் பெற்றுள்ளது. எனவே அரசாங்கங்கள் தொடர்ந்த நிதிய உதவிகளைக் கொடுக்கும் பொறுப்புக்களை ஏற்றுள்ளன; ஆனால் இவற்றை அவற்றால் முழுமையாக ஏற்க முடியாது. சிறப்பாக சிறிய, பொருளாதாரத்தில் வலுவற்றிருக்கும் நாடுகள் இதில் பெரும் இழப்பை அடையக்கூடும்.

இதைத்தவிர, நிதிய நெருக்கடி இப்பொழுது விரைவில் உண்மைப் பொருளாதாரத்திற்கும் பரவி வருகிறது. Die Zeit எச்சரிக்கிறது. "உலகப் பொருளாதாரத்தை தாக்கும் அடுத்த சுனாமி ஏற்கனவே புறப்பட்டு விட்டது." இது மிக சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையே விரிசல்களையும் பூசல்களையும் ஏற்படுத்த வகை செய்யும்.

Suddeutsche Zeitung TM Stefan Kornelius ஏற்கனவே உலக ஒழுங்கிற்கு நெருக்கடியை எதிர்பார்த்து எழுதுவதாவது: "அமெரிக்கா சுயமாக மதிப்பைக் குறைத்துக் கொண்டது தேர்தலுக்கு முந்தைய காலத்தில் அதன் இயக்க முறையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறது... தன்னுடைய பிணைப்புக்களை அரசியல் அளவில் துண்டித்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஐரோப்பா ஏற்கனவே உள்ளது. மேற்கு, மேலை என்பதின் ஒளிவீசும் சிந்தை மங்கிவிட்டது; புதிதாகப் பங்கு பெறுபவர்கள் உள்ளே நுழையக் காத்திருக்கின்றனர். நிதிய நெருக்கடி ஒரு உலக ஒழுங்கின் நெருக்கடியாக மாறிக் கொண்டிருக்கிறது; இதுதான் வாஷிங்டன் மற்றும் பாரிசில் நடைபெறும் பீதியினால் உந்தப்பெற்ற மாநாடுகளில் வெளிவந்துள்ளது."

இத்தகைய நெருக்கடிகள் --பழைய அதிகார குழுக்களுக்கு பதிலாக புதியவை தோன்றுபவை--வரலாற்றில் அமைதியாக நடைபெற்றதே இல்லை. இப்பொழுது வந்துள்ள நிதிய நெருக்கடி முழு முதலாளித்துவ ஒழுங்கில் இருக்கும் ஆழ்ந்த நெருக்கடியின் விளைவும் வெளிப்பாடும் ஆகும்.

See Also:

1929 இற்கு பின்னர் உலகச் சந்தைகளுக்கு மோசமான வாரம்

உலக பெரு மந்த நிலை வரக்கூடிய அடையாளங்கள் பெருகுகையில் அமெரிக்கப் பங்குகள் சரிகின்றன

உலக நிதியச் சந்தைகளை பீதி கவ்வுகிறது