World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Rising food prices threaten social calamity

இந்தியா: ஏறும் உணவு பொருட்களின் விலைகள் சமூகப் பேரிடர் பற்றி அச்சுறுத்துகின்றன

By Kranti Kumara
12 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவில் உணவு பொருட்களின் விலை உயர்வை பற்றிக் கவலை கொண்டுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம் இம்மாதத் ஆரம்பத்தில் அரிசி ஏற்றுமதி அனைத்திற்கும் தடை விதித்தது.

இத்தடைக்கு ஒரே விதிவிலக்கு பஸ்மதி அரசி ஏற்றுமதி ஆகும். இந்தியாவின் மிகச் சிறந்த அரிசி வகையான உள்ளுர் பஸ்மதி அரசி மிகவும் விலை உயர்ந்தது ஆகும்; பொதுவாக வசதி உடையவர்களால், அதுவும் சிறப்பு விருந்துகளில் மட்டுமே பயன்படுத்தப்படுவது ஆகும்.

அரிசி ஏற்றுமதியின்மீது தடை கொண்டுவந்த அதே அமைச்சர் குழுதான் ஜூன் 2006ல் முதலில் சுமத்தப்பட்ட தடையை பல அவரை விதைகள் மீது (பீன்ஸ், பருப்புவகைத் தானியங்கள் போன்றவற்றின் மீதும்) விரிவுபடுத்தியது. அவரை விதை வகைகளுடன் அரிசி அல்லது கோதுமை கலந்தவை பெரும்பான்மை இந்திய மக்களின் நாளாந்த உணவு ஆகும்.

இத்தகைய அரிசி ஏற்றுமதி தடைக்கு பின்னால் இரு காரணங்கள் உள்ளன. முதலும் முக்கியமானதுமாக ஆளும் வர்க்க வட்டங்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு சமூக அமைதியின்மையை தூண்டும் என்று எழுந்துள்ள அச்சம் ஆகும். இந்தியாவின் உயரடுக்கு மற்றும் சர்வதேச நிதிய ஊடகத்தின் பல பிரிவுகளும் இந்தியாவின் "எழுச்சி" பற்றி பறைசாற்றி வந்தாலும், இந்தியாவின் பெரும்பாலான மக்கட்தொகை போதுமான உணவு, உடை, வீடுகளுக்கு "சாதாரண காலங்களிலேயே" பெரும் அவதிக்கு உட்பட்டு வருபவை ஆகும். இந்தியாவில் 1.1 பில்லியன் மக்கட்தொகையில் 800 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்த வேண்டும்; 300 மில்லியன் மக்கள் நாள் ஒன்றுக்கு 1 டாலருக்கும் குறைவான பணத்தில்தான் வாழ்க்கை நடத்த வேண்டும்.

மற்றொரு காரணம் தவிர்க்க முடியாமல் வரவிருக்கும் பொதுத் தேர்தல்கள் ஆகும். UPA அரசாங்கத்தின் பதவிக்காலம் இப்பொழுதில் இருந்து 13 மாதங்களுக்குள் முடிந்துவிடும்; ஆனால் செய்தி ஊடகத்தில் தேர்தல்கள் 2008க்கு முன்பாக நடத்தப் பெறலாம் என்ற ஊகங்கள் வந்துள்ளன; இதற்கு காரணம் அரசாங்கத்திற்கும் இடது முன்னணிக்கும் இடையே திட்டமிடப்பட்டுள்ள இந்திய அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு பற்றி இருக்கும் கருத்து வேறுபாடுகள் ஆகும். ஸ்ராலினிச தலைமையில் இருக்கும் இடது முன்னணி UPA அரசாங்கத்திற்கு பதவியில் நிலைத்திருப்பதற்கு போதுமான பாராளுமன்ற ஆதரவை அளித்து வருகிறது.

இடது முன்னணியின் உதவியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) "சாமானிய மனிதனின்" நட்புக் கட்சி என்று காட்டிக் கொள்ள முயல்கிறது; அதே நேரத்தில் இது புதிய தாராள கொள்கைகளைத்தான் தொடர்கிறது. இதன் மிக சமீபத்திய வரவு-செலவு திட்டத்தில் UPA அரசாங்கம் பெரும் பரபரப்புடன் 600 பில்லியன் ரூபாய்க்கான (15 மில்லியன் டாலர்கள்) மிக வறிய விவசாயிகள் வங்கிகளுக்கும், கூட்டுறவுச் சங்கங்களுக்கும் கொடுக்க வேண்டிய கடன்களை "மன்னித்து" தள்ளுபடி செய்யும் விருப்பத்தை அறிவித்தது. சராசரியாக இந்த நடவடிக்கை குறைந்தது 40 மில்லியன் விவசாயக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 400 டாலர்கள் கடன் தள்ளுபடி எனச் செய்யும். முதுகெலும்பை முறிக்கும் கடன்கள் பல தொடர்ச்சியான விவசாயிகள் தற்கொலைக்கு வழிவகுத்துள்ளன; 1999ம் ஆண்டில் இருந்து 150,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மதிப்பீடுகள் உள்ளன.

மார்ச் மாதக் கடைசி வாரத்தில் இருந்த மொத்த விலைவாசி கடந்த ஆண்டு இருந்ததைவிட 7.4 சதவிகிதம் அதிகமாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது; இது 40 மாதங்களில் மிக அதிக உயர்வு ஆகும். பெரும்பலான உணவுப் பொருட்களுடைய விலை உயர்வு குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக இருந்தது.

மண் எண்ணெய், எரிபொருட்களின் விலை உயர்வுகளும் ஏற்பட்டுள்ளன; ஆனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, பெருகி வரும் உலக எண்ணெய் விலைகளுக்கு சற்றே ஈடு கொடுத்துள்ளது.

இந்தியாவில் உயரும் விலைகள் சர்வதேச மற்றும் உள்நாட்டுக் காரணிகளின் விளைவுகளாகும். உலக வங்கியின் கருத்தின்படி, விவசாய பொருட்களின் சர்வதேச விலைகள் ஆகஸ்ட் 2007ல் இருந்து மார்ச் 2008 வரையிலான காலத்தில் 73 சதவிகிதம் உயர்ந்துள்ளன. உதாரணத்திற்கு உலக கோதுமை விலைகள் கடந்த ஆண்டில் 100 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன; இதற்கு காரணம் சில கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் காணப்பட்ட மோசமான பருவநிலைகளாகும்; இந்த மாற்றமும் உயிர்வகை எரிபொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பயிர்களின் வளர்ச்சி, சீனா, இந்தியாவில் விரிவடைந்து வரும் மத்தியதர வகுப்பினரிடம் இருந்து வரும் தேவையும் இவற்றிற்கு காரணம் ஆகும். இதைத் தவிர ஊக வணிகத்தை ஒட்டியும் விலைவாசிகள் உயர்ந்துள்ளன; சர்வதேச வணிகர்கள், அமெரிக்க குறைந்த பிணையுள்ள வீடுகள் அடைமான நெருக்கடி, சரிவை அடுத்து பணச்சந்தைகள் அதிர்வுக்காளாகிய நிலைமைகளில் புதிய இலாபத்திற்கான வளங்களை காண விரும்புகின்றனர்.

இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி அதையொட்டி ஏற்படும் பற்றாக் குறைகள் ஆகியவையும் விலைஉயர்வுக்கு காரணமாக உள்ளன.

தொடர்ச்சியான இந்திய அரசாங்கங்கள் உள்நாட்டு, சர்வதேச முதலீட்டாளர்களின் இலாப நோக்கு நலன்களை திருப்தி செய்யும் வகையில் மகத்தான ஆற்றல் அளிப்புக்களை கொடுத்துள்ளன; அதே நேரத்தில் விவசாயத்துறையில் இருக்கும் சந்தை உறவுகளில் மிருகத்தனமான உறவுகளை வளர்த்துள்ளன. 1991ம் ஆண்டு அரசாங்க வழிநடத்துதல் வளர்ச்சிப் பணிகள், தேசிய பொருளாதாரக் கட்டுப்பாடு ஆகியவற்றை இந்தியாவில் கைவிட்டதில் இருந்து, நீர்ப்பாசன வசதி உட்பட விவசாயத்திற்கு அரசாங்கம் கொடுத்து வந்த பல ஆதரவுகளும் குறைக்கப்பட்டு விட்டன; உணவுப் பொருட்களுக்கான விலை ஆதரவு குறைக்கப்பட்டது, இல்லாவிடில் அகற்றப்பட்டு விட்டது; பொதுப் பகிர்வு முறை (மலிவான உணவுப் பொருட்களை அளிப்பது) பெரிய அளவில் குறைக்கப்பட்டு விட்டது.

இவற்றின் விளைவு மிகப் பெரிய பேரழிவு ஆகும். அரசாங்க அளவைகள் இந்திய கிராமப்புறத்தில் 1991ல் இருந்து வரும் கலோரிகள் நுகர்வு பெரிதும் குறைந்துவிட்டதைத்தான் காட்டுகின்றன.

2006-07 காலத்தில் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5 சதவிகித வளர்ச்சி வீதத்தை கண்ட நிலையில், விவசாயத் துறையின் வளர்ச்சி 2.6 என்றுதான் இருந்தது. 2002-07 ஐந்து ஆண்டு காலத்திற்கு சராசரி ஆண்டு வளர்ச்சி வீதம் விவசாயத் துறையில் சொற்பமான 2.2 சதவீதம் என்றுதான் இருந்தது; இது இந்தியாவின் மக்கட் தொகை வளர்ச்சியான 1.5 சதவீதத்தை விட சற்றே கூடுதலாகும்.

இந்தியாவின் விவசாயத்துறை நெருக்கடியில் முக்கிய காரணமாக இருப்பது சராசரியாக இருக்கும் நில உரிமையின் அளவு ஆகும். 1960ம் ஆண்டு 51 மில்லியன் தனித்தனி உரிமையாளர்கள் 131 மில்லியன் ஹெக்டர் நிலத்தை கொண்டிருந்தனர். 2003 ஐ ஒட்டி நிலப் பிரிவுகள் இரு மடங்காக 101 மில்லியன் என்று ஆகியுள்ள நிலையில் விவசாயத்திற்காக இருக்கும் நிலத்தின் அளவு 108 மில்லியன் ஹெக்டர்கள் என்றுதான் உள்ளது.

2003ல் இருந்து விவசாயத்திற்கு ஒதுக்கப்படும் நில அளவு இன்னும் குறைந்துவிட்டது; இதற்கு காரணம் இந்தியாவின் மத்திய, மாநில அரசாங்கங்கள் விவசாய நிலத்தை உள்நாட்டு, சர்வதேச நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதார பகுதிகளுக்காக கையகப்படுத்தியுள்ளன. மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசாங்கம் இந்த வழிவகையில் முதலிடத்தில் உள்ளது; போலீசையும் குண்டர்களையும் பயன்படுத்தி நந்திக்கிராமத்தை தாக்கியது; இதை ஒட்டி நில அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் எதிர்ப்புப் போராட்டங்களில் 20 பேர் உயிரிழந்தனர்.

புது டெல்லிக்கு இம்மாதத் தொடக்கத்தில் வருகை புரிந்திருந்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு, வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமை இயக்குனரான Jacques Dious, வளர்ச்சி பெறும் நாடுகளில் இருக்கும் அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மிக அதிக ஏற்றம் பெறும் விலைகளை கொண்ட அடிப்படை உணவுப் பொருட்கள் ஏழைகளுக்கு கிடைக்காமல் செய்துவிடக் கூடிய அபாயம் உண்டு என்று எச்சரித்துள்ளார். விவசாய தேவைகளுக்கு அவசர கவனத்தை அரசாங்கங்கள் செலுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்; இல்லாவிடில் விவசாயத் துறையில் முதலீட்டை பெருக்கவாவது வேண்டும் என்று அவர் கூறினார்.

உணவுப் பொருட்கள் விலையேற்றம் மற்றும் பட்டினி ஆகியவை ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சமீப வாரங்களில் எதிர்ப்புக்கள் கலகங்கள் ஆகியவற்றை தோற்றுவித்துள்ளன. இது இந்தோனேசியா, ஐவரி கோஸ்ட், எகிப்து, மோசாம்பிக், ஹைத்தி ஆகிய நாடுகளில் நடந்துள்ளது.

தன்னுடைய பங்கிற்கு இடது முன்னணி, UPA அரசாங்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த "முறையான நடவடிக்கைகளை" எடுக்காவிட்டாலும், பொதுப் பகிர்வு முறைக்கு ஊக்கம் தராவிட்டாலும், எதிர்ப்புக்கள் மற்றும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தையும் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. "அரசாங்கம் கேட்கவில்லை என்றால் மக்களிடத்தில் நாங்கள் செல்லுவோம்" என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸ்ட்) கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இடது முன்னணி வாடிக்கையாக இத்தகைய எதிர்ப்புக்களை நடத்தி வருகிறது. தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக அதன் சமூகப் பொருளாதார திட்டத்தை முன்னேற்றுவித்து இந்தியாவின் உழைக்கும் மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேவற்றும் அமைப்பாக திரட்டும் நோக்கத்தை அது கொண்டிருக்கவில்லை; மாறாக UPA அரசாங்கத்திற்கு ஆதரவு தரும் ஸ்ராலினி்ஸ்ட்டுக்களின் கொள்கைக்கு மக்கள் ஆதரவை திரட்டும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

Global Agro Industries Forum என்னும் விவசாய வணிகத்தை வளர்க்கும் அமைப்பு ஒன்றின் கூட்டத்தில் பேசிய இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங், உயரும் விலைகள் பற்றிய பாதிப்பு பற்றி கவலையை தெரிவித்தார்.

"பொதுப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு பற்றி நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்" என்று சிங் கூறினார். "அதிகம் உயரும் உணவுப் பொருட்களில் விலைகள் வறுமை அகற்றும் திட்டத்தை தாமதப்படுத்தும், பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும், வேலைகளை தோற்றுவிப்பதில் பின்னடைவை ஏற்படுத்தும்" என்றும் அவர் கூறினார்.

ஆனால் உணவுப் பொருட்கள் உயர்வு அரசியலில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றித்தான் சிங் குறிப்பான கவலையை காட்டினார். "பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கான தளம் [அதாவது முதலீட்டாளர் சார்புக் கொள்கைகள்], பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவையும் இதனால் தடைக்கு உட்படும். கட்டுப்பாட்டிற்குள் வணிக நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் பெருகும்" என்றார் அவர்.

விலைவாசிகள் மீதும் உணவுப் பகிர்வின்மீதும் கட்டுப்பாடு என்று "குருட்டுத்தனமாக மேற்கொள்ளப்பட் சகாப்தத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான செயல்களில் UPA ஈடுபடாது" என்பதில் சிங் பிடிவாதமாக உள்ளார்.

ஏற்றம் பெறும் பணவீக்கம், இந்தியாவின் உயரடுக்கினரை ஒரு பொருளாதார சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. அதிக வளர்ச்சி வீதத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அரசாங்கம் வட்டி வீதத்தை மிகக் குறைவாக வைத்துக் கொண்டுள்ளது; அதையொட்டி எளிதான கடன் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பணவீக்கத்தை தவிர்ப்பதற்காக அரசாங்கம் இப்பொழுது பொருளாதார தேவைகளை குறைக்கும் வகையில் வட்டி விகிதத்தை உயர்த்தும் கட்டாயத்தில் உள்ளது.

சமீபத்தில் ரிசேர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டி, "ரிசேர்வ் வங்கி இப்பொழுது விலைவாசி மற்றும் நிதிய உறுதிப்பாட்டிற்குக் கணிசமான கவனத்தை கொடுத்துவருகிறது; வளர்ச்சி, உறுதிப்பாடு என்ற இரு இலக்குகளையும் நன்கு அறிந்துள்ளது" என்று கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா மேற்கோளிட்டுள்ளது. 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக பணவீக்கம் ஏற்பட்டால் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்று ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.