World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Repression in Tibet: the class issues

திபெத்தில் ஒடுக்குமுறை : வர்க்கப் பிரச்சினைகள்

By the Editorial Board
15 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

திபெத்தில் சீன ஆட்சியின் அடக்குமுறையானது உலகெங்கிலும் இருக்கும் நகரங்களில் நடக்கும் தொடர்ச்சியான எதிர்ப்புக்களாலும், பெய்ஜிங்கின் நடவடிக்கை பற்றி மேலை அரசுகளால் செய்யப்படும் விமர்சனங்கள் மற்றும் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் புறக்கணிக்கப்படும் என்ற அச்சுறுத்தல்களாலும் சர்வதேச ரீதியில் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எதிர்ப்புக்களில் பங்கு பெறுபவர்கள் பலரும் திபெத்திய மக்கள் பற்றிய உண்மையான அக்கறை கொண்டுள்ளனர் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை; ஆனால் வெறும் நீதிநெறி வகைச் சீற்றம் மட்டும் திபெத்தின் துன்பங்களுக்கு முடிவைத் தராது; அவை எளிதில் மாற்றி திரித்துவிடப்பட முடியும். மனிதாபிமானம் சார்ந்த இராணுவத் தலையீடுகள் என்று கூறப்படுவனவற்றுக்கு அவர்களது துயரத்தை அடிப்படையாக திடீரென்று எடுத்துக் கொண்ட கொசோவோ, கிழக்கு திமோர் ஆகிய மக்களுக்கு நேர்ந்ததைத்தான் நினைவிற்குக் கொண்டுவர வேண்டும். ஒரு தசாப்தம் கடந்த பின்னர் இந்தப் பகுதிகள் வாடிக்கை நாடுகளாக மாற்றப்பட்டுவிட்டன; தொடர்ச்சியாக வெளிநாட்டு துருப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இரு விவகாரங்களிலும் மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் தொடர்ந்து வறுமையிலும் வேலையின்மையிலும் ஆழ்ந்துள்ளனர்.

ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் பொருளாதாரம் மந்தகதியை விரைவாக அடைந்துள்ளது, ஒவ்வொரு நாட்டிலும் வர்க்கப் பதட்டங்களை கூர்மையடையச் செய்துள்ளன மற்றும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி ஆகியவை கணக்கிலடங்கா தேசிய, இனப் பிரச்சினைகளுக்கு வெடிப்புத் தன்மை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. செய்தி ஊடகம் ஒரு குறிப்பிட்ட இனவழி ஒடுக்குதலுக்கு கவனம் கொடுக்கிறதா என்பது எல்லாவற்றிற்கும் மேலாக பெரிய சக்திகளின் நலன்களினால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி புஷ், சீனா திபெத்திய எதிர்ப்பாளர்களை நடத்தும் முறை பற்றி குறைகூறுகிறார், ஆனால் இலங்கை அரசாங்கத்தின் மிருகத்தனமான வகுப்புவாதப் போர் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டதற்கும் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய ஆட்சியினால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதற்கும் ஆதரவைக் கொடுக்கிறார் --பெயர் குறிப்பிட்டு சொல்வதென்றால் நீண்ட காலமாக இருக்கும் தேசியப் பூசல்களில் இவை இரண்டையும் குறிப்பிடலாம்.

சீனாவின் மீது கவனம் குவித்தல் ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. கடந்த இரு தசாப்தங்களாக சீன முதலாளித்துவத்தின் வெடிப்புத்தன்மை நிறைந்த எழுச்சி, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அரசியல் மற்றும் மூலோபாய சமன்பாடுகளை ஆழ்ந்த முறையில் மாற்றிக் கொண்டு வருகிறது. ஆற்றல், மூலப் பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கு சீனாவின் மிகப் பெரிய, பெருகிய தேவைகள் உலகில் இருக்கும் சக்திகளுடன் அதை ஒரு மோதல் பாதைக்கு கொண்டு வந்துள்ளன. ஜப்பானிய, ஐரோப்பிய பெருநிறுவனங்கள் மகத்தான குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு தேவைக்கு சீனாவை நம்பியுள்ளன; அந்நாட்டில் குறைந்த ஊதியங்கள், இழிந்த பணி நிலைகள் இவற்றிற்கு தொழிலாளர்கள் காட்டும் எதிர்ப்பை அடக்கிவரும் போலீஸ் அரசு ஆட்சியையும் நம்பியுள்ளன. அதே நேரத்தில் சீனாவின் போட்டியாளர்கள் --அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது--உலக மேலாதிக்கத்திற்கான தங்களுடைய நீண்டகால விழைவுகள் மற்றும் திட்டங்களுக்கு சீனா கொடுக்கக்கூடிய அச்சுறுத்தல் பற்றியும் கவலை கொண்டுள்ளனர்.

கடந்த எட்டு ஆண்டுகள் முழுவதும் புஷ் நிர்வாகம், ஜப்பானில் இருந்து தென்கொரியா என வடகிழக்கு ஆசியாவில், ஆஸ்திரேலியா மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, பாக்கிஸ்தான் உட்பட தெற்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றுடன் உடன்பாடுகளை வலுப்படுத்திக் கொள்ள முற்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு எல்லாவற்றிற்கும் மேலாக மத்திய கிழக்கு மற்றும் மத்திய கிழக்கில் வளங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகள்மீது மேலாதிக்கும் செலுத்த வேண்டும் என்ற வாஷிங்டனின் விழைவுகளால் உந்துதல் பெற்று வந்துள்ளது. திபெத்திய பகுதியின் முக்கியத்துவம் மத்திய, தெற்கு ஆசியாவுக்கு அருகில் உள்ள அதன் மூலோபாய நிலைப்பாட்டில் இருந்தும் அதன் இன்னும் பயன்படுத்தப்படாத தாதுப்பொருட்கள் வளங்களில் இருந்தும் எழுந்துள்ளது. ஒரு கொசோவோ முறையிலான இராணுவத் தலையீடு போல் திபெத்தின் பிரிவினைவாதத்தை பயன்படுத்தலாம் என்று இதுவரை புஷ் நிர்வாகம் குறிப்பு எதையும் கொடுக்கவில்லை. ஆனால் பிரச்சினையை கொதிநிலையில் வைத்துள்ள நிலையில், வருங்காலத்தில் அவ்வாறு செய்யக்கூடிய விருப்புரிமையை வாஷிங்டன் காட்டியுள்ளது.

முதலாம் உலகப் போருக்கு முன்பு பெரிய சக்திகள் சூழ்ச்சிக்கையாளல் உத்தி மற்றும் மோதல் உணர்வு கொண்டிருந்ததுடன் தற்போதைய உலக அரசியல் விசித்திரமான வகையில் ஒரு ஒத்ததன்மையை கொண்டுள்ளது. சூடான் மற்றும் பர்மிய அரசாங்கங்கள் பற்றியெல்லாம் கூறத் தேவையில்லை, திபெத் பற்றிய நீதிநெறி வகைப்பட்ட நிலைப்பாடு சீனாவின் மீது அழுத்தம் கொடுத்து அதன் உள்விவகாரங்களில் தலையிடக்கூடிய வகையில், அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் வசதியான அரசியல் நெம்புகோல்களாக அமைந்துள்ளது. இத்தகைய வழிவகைகள் அவற்றின் இயல்பான தர்க்கத்தை கொண்டுள்ளன; அவை தவிர்க்க முடியாமல் உட்பூசல்களை அதிகமாக்கி ஒரு புதிய உலகந்தழுவிய பெரும் மோதலுக்கு இட்டுச்செல்லும். அமெரிக்காவின் போட்டியாளர்களில் ஒன்று, அலாஸ்காவின் புகார்களை மனதிற்கொண்டு, அங்கு இருக்கும் வறிய எஸ்கிமோ பழங்குடியினர்களின் நிலைமையை தூண்டி தனி நாடு கோருவதற்கு அமெரிக்கா எவ்வாறு அனுமதிக்காதோ, அதேபோல்தான் சீனாவும் ஒரு சுதந்திரமான திபெத்தை மனம் உவந்து ஏற்காது.

புஷ், பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி போன்ற "உலகத் தலைவர்களின்" திபெத் பற்றிய புனிதம் தோய்ந்த அறிக்கைகள் பாசாங்குத்தனத்தால் நிரம்பியுள்ளன. சீன ஆட்சி திபெத்தில் நடத்தும் அடக்குமுறை, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈராக்கில் புதிய காலனித்துவ ஆக்கிரமிப்பு முறையை செயல்படுத்த அன்றாடம் நடத்தும் அரக்கத்தனமான குற்றங்களை காணும்போது மங்கி விடுகின்றது. பல முறையும் அமெரிக்க ஜனநாயகம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அது ஜனநாயக உரிமைகளுக்கு கொண்டிருக்கும் முழு இகழ்வையும் நிரூபணம் செய்துள்ளது. திபெத் பற்றி இப்பொழுது மனித உரிமைகளுக்காக பேசுகின்ற ஐக்கிய நாடுகள் மன்றம் உட்பட அனைத்து அரசாங்கங்களும் சர்வதேச நிறுவனங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் புஷ் நிர்வாகம் மற்றும் அதன் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு உடந்தையாகத்தான் உள்ளன.

சர்வேதேச செய்தி ஊடகத்தின் வெளிச்சமான குவிப்பு திபெத்தின்மீது இருக்கையில், சீனா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நடத்தும் எதிர்ப்புக்கள் கிட்டத்தட்ட முழு மெளனத்துடன்தான் எதிர்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் கடுமையான பணிநிலைமைகள், உத்தியோகபூர்வ ஊழல், தவறுகள், பொதுப் பணிகள் இல்லாத நிலை ஆகியவை பற்றி ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. லாசா கலகங்களுக்கு சற்று முன்பு குவாங்டாங் மாநிலத்தில் பன்யூ என்ற இடத்தில் உள்ள ஜப்பானியர்களுக்கு சொந்தமான காசியோ தொழிற்சாலையில் 4,000 தொழிலாளர்களுக்கு மேல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆயுதமேந்திய போலீசாருடன் நிகழ்ந்த மோதல்களில் 20 தொழிலாளர்கள் காயமுற்றனர், ஒரு டஜன் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரு மதிப்பீட்டின்படி சீனாவின் மிகப் பெரிய தொழில்துறை பகுதிகளில் ஒன்றாகிய பேர்ல் ரிவர் டெல்டாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 1,000 தொழிலாளர்கள் தொடர்புடைய பெரிய தொழில்துறை பூசல் ஒன்றாவது ஏற்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் திபெத்தில் சீனர்கள் நடத்தும் அடக்குமுறைக்கு எவ்வித அரசியல் ஆதரவையும் கொடுப்பதற்கு இல்லை. நாடு முழுவதும் திபெத்திய எதிர்ப்பாளர்களுக்கு எதிரான அரசாங்க போலீஸ் அடக்குமுறைகளை அன்றாடம் பெய்ஜிங் கடைபிடித்து செயல்படுத்தி வருகிறது. குறைந்தது 22 பேராவது இறந்துவிட்டனர் என்பதை சீன அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்; ஆனால் புலம் பெயர்ந்த திபெத்திய குழுக்கள் இந்த எண்ணிக்கையை மிகவும் அதிகமாகத்தான் கூறுகின்றன. திபெத்திய சுயாட்சி மற்றும் அருகில் இருக்கும் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான துணை போலீஸ் பிரிவினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 1,000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதமேந்திய போலீசார் லாசாவில் இருக்கும் முக்கிய ஆலயங்களை இழுத்து மூடியுள்ளனர்; மக்கள் அனைவர் மீதும் கடுமையான கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த அமைதியின்மை இந்தியாவில் உள்ள "தலாய் லாமா குழுவினரின்" சதி என்று பெய்ஜிங் கூறுவது நம்பகத்தன்மை வாய்ந்தது அல்ல. தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் ஒலிம்பிக் பந்தயங்கள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி ஆரம்பத்தில் ஊக்கம் கொடுத்திருக்கக்கூடும்; ஆனால் பெய்ஜிங்தான் லாசாவில் எதிர்ப்புக்கள் பெருகுவதற்கான எரியூட்டும் விஷயங்களை கொடுத்தது. சீனாவில் உள்ள ஆட்சிக்கு சோசலிசத்துடனோ, கம்யூனிசத்துடனோ எந்தத் தொடர்பும் கிடையாது. பெய்ஜிங்கில் இருக்கும் அதிகாரத்துவ கருவி, சக்திவாய்ந்த, விரைவில் எழுச்சி பெற்று வரும் முதலாளித்துவ வர்க்கத்தின் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிக்குத்தான் தலைமை தாங்குகிறது. இதன் சந்தை சீர்திருத்தங்கள் என்பது சீனா முழுவதும் இருக்கும் ஏழைகள், செல்வந்தர்களுக்கு இடையே இருக்கும் சமூகப் பிளவை அதிகமாக ஆழப்படுத்தியுள்ளன; ஹான் சீன பேரினவாதத்தின்மீது இது கொண்டுள்ள அரசியல் நம்பிக்கை திபெத்தியர்களுடனும் ஏனைய தேசிய இன மக்களுடனுமான பதட்டத்தை அதிகரித்துள்ளது. ஓர் உண்மையான சோசலிச, சர்வதேசிய முன்னோக்கிற்கு வெளியே நாட்டில் மூலைமுடுக்குகளில் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள அடக்குமுறையை எதிர்கொள்ளுவதற்கான போராட்டம் வேறு ஏதும் இல்லை.

வர்க்கப் பிரச்சினைகள்

செய்தி ஊடகங்களும் பல எதிர்ப்புக் குழுக்களும் திபெத்தில் இருக்கும் அமைதியின்மையை கிட்டத்தட்ட ஒருமித்த வகையில் பண்பாட்டு, மத அடக்குமுறை என்ற விதத்தில் கருதி, அடித்தளத்தில் இருக்கும் பொருளாதார வழிவகைகளை புறக்கணித்துள்ளன. திபெத்தில் சந்தை உறவுகள் ஊடுருவியிருப்பது வணிகச் செயல்களில் ஒரு வெடிப்புத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது; இதற்குக் காரணம் உள்கட்டுமானத்திற்கு மிகப் பெரிய அளவில் அரசாங்க உதவிகள், குறிப்பாக Great Western Development ("Go West") எனக் கூறப்படும் 2000 ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட கொள்கையினால்தான் தூண்டுதலளிக்கப்பட்டது. 2006ல் செயல்பாட்டிற்கு வந்துள்ள Qunghai-Tibet இரயில்வே முறை முதலீடானது பெருகிய முறையில் வருவதை விரைவுபடுத்தியுள்ளது. ஆனால் இனவழித் திபெத்தியர்களில் பெரும்பாலனவர்கள் இதனால் எந்த பயனையும் பெறவில்லை. திபெத்திய உயரடுக்கின் ஒரு சிறிய பகுதி, ஆதாயங்களை அள்ளிக் குவித்துள்ளபோது, திபெத்திய இளைஞர்களில் 80 சதவிகிதத்தினர் வேலையின்மையில் வாடுகின்றனர், மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.

லாசாவில் இருந்து தகவல் கொடுக்கையில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மார்ச் 27 அன்று எழுதியது: "ஒரு சிறிய துறவியர் குழுவினால் வன்முறை தூண்டிவிடப்பட்டுள்ளது என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ள போதிலும்கூட, அதிகமான மக்களை பேட்டி கண்டதில் இருந்து மற்ற பல காரணங்களும் இருந்தன என்பது தெரிகிறது. கொள்ளையடிப்பதில் சேர்ந்து கொள்ளும் பலர் வேலை கிடைக்காத இளைஞர்கள் என்று ஒரு அரசாங்க அதிகாரி கூறினார்." மற்ற அறிக்கைகளும் லாசாவில் இருக்கும் திபெத்தியர்களில் மிக வறிய அடுக்குகளிடையே வெடித்துள்ள பெரும் ஏமாற்றத் திகைப்பை சுட்டிக் காட்டுகின்றன; ஒரு புறம் நிலத்திற்கு மறு புறம் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பிற்கான தேவைப் பெருக்கமும் ஏற்பட்டபோது முன்பு விவசாயிகளும், ஆடு, மாடு மேய்ப்பவர்களாவும் இருந்த அவர்களில் பலர் நகரத்திற்கு வரவேண்டியது ஆயிற்று.

மார்ச் 17ம் தேதி பதிப்பில் Business Week சீனாவில் நடக்கும் பரபரப்பான வணிகச் செயல்பாடுகள் பற்றி சுட்டிக் காட்டியுள்ளது; உற்பத்தித் தளத்தை சீனா விரிவுபடுத்த முற்பட்டுள்ள நிலையில், மிக ஒதுங்கிய பகுதிகளில் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாத தாதுப்பொருட்களை எடுக்க முற்படுகிறது. கடந்த ஆண்டு மேலை நாடுகள் சீனாவில் வைத்துள்ள நிலையான சொத்து முதலீடுகள் $397 பில்லியனாக வளர்ந்தது; இது 28 சதவிகிதம் அதிகமானது ஆகும். இந்தப் பணத்தில் $40 பில்லியன் மத்திய அரசாங்கத்தால் உள்கட்டுமானம் மற்றும் பல திட்டங்களை வளர்ப்பதற்கு முதலீடு செய்யப்பட்டது. சீனாவில் மேற்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி 2007ல் 14.5 சதவிகிதமாகவும் திபெத்தில் 17.5 சதவிகிதமாகவும், தேசிய சராசரியை விட மிக அதிகமாக இருந்தன.

இது பற்றி Business Week தெரிவத்த கருத்தாவது: "அப்பகுதிக்கு வந்து குடியேறியுள்ள மில்லியன் கணக்கான Han சீனர்கள்மீது இனவழியிலான எதிர்ப்பு உணர்வை பெருக்கும் நோக்கத்திற்கு இது உதவியது; அவர்கள் அதிக திறைமை மிகுந்த, உயர் ஊதிய வேலைகளான புதிய சாலைகள் அமைத்தல், விமான நிலையங்கள் அமைத்தல் மற்றும் மின்விசை நிலையங்களை அமைத்தல் ஆகியவற்றை எடுத்துக் கொண்டுள்ளனர். சீனர்கள் பொதுவாக சிறிய சொந்த முயற்சி வணிகங்கள் பலவற்றை, உணவு விடுதிகள், சிறிய கடைகள் நடத்துதல் போன்றவற்றை செய்கின்றனர். எனவே மொத்தத்தில் கிராமப்புற வருமானங்கள் $583 என்பது நகரத்தில் இருப்பதைவிட மூன்றில் ஒரு பங்குதான் என்றாலும், மேற்கில் (நகர-கிராமப்புறப் பிரிவு அதிகம், சீனர்கள் நகர்ப்புறத்திலும் சிறுபான்மையினர் கிராமப்புறத்திலும் உள்ளனர்) இது இன்னும் அதிகமாக உள்ளது. திபெத்தின் கிராமப்புற வருமானம் $393 ஆக அதாவது நகர்ப்புற வருமானத்தில் கால் பகுதியாக உள்ளபோது Xinjiang ல் இது சற்றே உயர்ந்த அளவில் $444 ஆக உள்ளது."

இனவழியிலான பாகுபாடு மிகவும் பரந்த அளவில் உள்ளது. திபெத்திய இளைஞர்களிடையே உயர்ந்த அளவு வேலையின்மை இருப்பதற்கு முக்கிய காரணம் அங்கு அரசாங்க கல்வி சீன மொழியில் இருப்பதுதான். திபெத்திய மக்களில் 15 சதவிகிதத்தினருக்குத்தான் ஏதோ ஒரு வகையில் உயர்நிலைக் கல்வி கிடைக்கிறது. உயர்நிலைப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் படித்தவர்களுக்கு வேலை உத்தரவாதம் என்று இருந்த கொள்கையை பெய்ஜிங் நிறுத்திவிட்டது; இது இனவழி திபெத்தியர்களுக்கு கூடுதலான இழப்பைத்தான் கொடுத்துள்ளது. Far Eastern Economic Review வில் வந்துள்ள ஒரு சமீபத்தியக் கட்டுரை கூறுவதாவது: "2006ல் லாசாவில் திபெத்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் நடத்திய பெரிய ஆர்ப்பாட்டம் இருந்தது; அரசாங்கம் பகிரங்கப் போட்டியின் மூலம் அளித்த 100 வேலைகளில் இரண்டு மட்டுமே இனவழி திபெத்தியர்களுக்கு கொடுக்கப்பட்டதால் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாங்கம் இந்த நிலைமைக்கு விடையிறுக்கும் வகையில் "சந்தை" சக்தியிடம் நம்பிக்கை இருப்பதாகக் கூறியது; மில்டன் ப்ரீட்மனுக்கு (Milton Friedman) கூட இது சங்கடத்தைக் கொடுத்திருக்கும்."

சமூக சமத்துவமின்மையை பற்றிய எதிர்ப்புணர்வு சீன அதிகாரிகளின் நாட்டுவெறிப்பற்று மிகுந்த கூற்றுக்களால் கூடுதலாகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் சலுகை நிறைந்த அதிகாரத்துவத்தினரும், சோசலிசத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் அல்லது தொழிலாளர்களின் நலன்களை காக்கிறார்கள் எனக் கூறப்படும் கருத்துக்களை பெரும்பாலான மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். இதன் விளைவாக ஆட்சி தொடர்ந்து சீன தேசிய வாதத்தை வளர்க்கும் வகையிலும், சிந்தனைப் போக்கு வெற்றிடத்தை நிரப்பும் வகையிலும் முதலாளித்துவ மத்தியதர வர்க்கங்களின் அடுக்குகளின் ஆதரவை உறுதிபடுத்திக்கொள்ள முயல்கிறது. இந்தப் பிற்போக்குத்தனமான சிந்தனைப்போக்கு பழைய "மத்தியகால இராச்சியம்" என்பதில் பெருமிதம் கொள்வதை மையமாகக் கொண்டுள்ளது; இதில் அரசு "காட்டுமிராண்டிகள்" என அழைக்கப்பட்ட திபெத்தியர்கள் மற்றும் பிற தேசிய சிறுபான்மையினரிடமும் மற்ற ஆசிய மக்களாகிய ஜப்பானியர்கள், கொரியர்கள் ஆகியோரிடமும் ஒரு ஏகாதிபத்திய புரவலர் போல் நடந்து கொண்டது. இத்தகைய அழைப்புக்களை விடுக்கையில், நாட்டின் சொந்த நிலைமை ஏகாதிபத்திய சக்திகளால் 19ம் நூற்றாண்டு, 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எப்படி கீழ்ப்படுத்தியிருந்தனர் என்ற வரலாற்றைக் கொணர்கிறது.

திபெத்தில் இருக்கும் அமைதியின்மையை பயன்படுத்தி அரசாங்கம் இன்னும் கூடுதலான முறையில் இனவழி அழுத்தங்களுக்கு எரியூட்டும் வகையில் திபெத்தியர்களை பிற்போக்குத்தன்மை படைத்தவர்கள், வன்முறையாளர்கள் என்று சித்தரிக்கும் விதத்தில் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளது. எரிக்கப்பட்ட சீன வணிகக் கூடங்கள் மற்றும் வாகனங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் முடிவில்லாமல் மீண்டும் மீண்டும் செய்தி ஊடகங்களில் காட்டப்படுகின்றன. பெரும்பாலான இறப்புக்கள் ஹான் சீனர்கள்மீது திபெத்தியர்கள் நடத்திய தாக்குதலின் விளைவு என்று கூறப்படுகின்றன. அடுத்த வன்முறை வெடிப்புச் சுற்றுக்கள் திபெத்திய "தற்கொலை படைகளால்" நடத்தப்படக்கூடும் என்றுகூட அதிகாரிகள் கூறுகின்றனர். அரசாங்கம் நாட்டுப் பற்று மிகுந்த சீனக் குடிமக்களின் "எதிர்ப்புக்களை" பல வெளிநாட்டு நகரங்களில் திபேத்திய "பிரிவினைவாதிகளை" எதிர்க்கும் வகையில் நடத்தியுள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டுக்களின் ஆரம்ப நிகழ்ச்சிகளில் இருந்து பங்கு பெறாமல் ஒதுங்க வேண்டும் என்ற ஜனாதிபதி சார்க்கோசியின் அச்சுறுத்தலுக்கு, 2005ல் சீன இளைஞர்கள் ஜப்பானிய எதிர்ப்பு இயக்கத்தின்போது மேற்கொண்டிருந்த நாட்டுவெறி பிரச்சாரத்திற்கு ஒப்பான வகையில், சீனர்கள் பிரெஞ்சுப் பொருட்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளனர்.

ஹான் சீன பேரினவாதத்திற்கு திபெத்தியர்கள் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. இதேபோன்ற வழிவகைகள் ஜின்ஜியாங் மானிலத்திலும் நடைபெற்று வருகின்றன; அங்கு இஸ்லாமிய உய்குர் சிறுபான்மையினர் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கோருகின்றனர். 10 மில்லியன் மஞ்சூரியர்கள் சீனாவில் இருந்தாலும் சீனாவில் 100 பேருக்கும் அதிகமாக மஞ்சூரிய மொழி பேசுபவர் இல்லை என்றும் இதற்குக் காரணம் அம்மொழி காப்பாற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பெய்ஜிங்கினுடைய அணுகுமுறை முற்றிலும் சந்தர்ப்பவாதம் ஆகும். சமீபத்திய ஆண்டுகளில் அதிகாரிகள் திடீரென்று சீன யூதர்களின் நெறியான உரிமைகளை அங்கீகரித்துள்ளனர்; இது ஒரு சிறிய குழு, பல நூற்றாண்டுகளாக கிட்டத்தட்ட மறக்கப்பட்ட குழு. இதற்கு காரணம் இஸ்ரேலுடன் சீனா தன்னுடைய உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முற்படுகிறது; ஏனெனில் சீனாவிற்கு மிகப் பெரிய அளவில் ஆயுதங்களைக் கொடுப்பதில் அது இரண்டாம் இடத்தில் உள்ளது.

திபெத்திய தேசியவாதம் வெளிவருவதற்கு வழிகாட்டவில்லை. சமீபத்திய ஆண்டுகளில் தலாய் லாமா சுதந்திர திபெத் சிறு நாடு பற்றிய அழைப்பைக் கைவிட்டு, பெய்ஜிங்குடன் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்; ஏனெனில் புலம் பெயர்ந்துள்ள திபெத்திய பிரிவுகள் சில வளர்ச்சி அடையும் சீனாவிற்குள் மீண்டும் நுழைய முற்படுகின்றன. காரணம் அங்கு முதலாளித்துவம் வந்துள்ளது; இவர்கள் ஓரளவு தன்னாட்சியை நாடுகின்றனர். இன்னும் தீவிரப்போக்குடைய குழுக்களான திபெத்திய இளைஞர் காங்கிரஸ் போன்றவை "சுதந்திர திபெத்திற்கான" அழைப்புக்களை கொடுத்துள்ளதுடன், வெளிப்படையாக தலாய் லாமாவின் "நடுப் பாதையை" நிராகரித்துள்ளன. இரண்டு பாதைகளுமே திபெத்திய மக்களுக்கு தீர்வு அல்ல; அவர்கள் தொடர்ந்து லாசாவில் இருக்கும் ஒரு முதலாளித்துவ குழுவினால் சுரண்டப்படுவர்; இப்பொழுது இருக்கும் நிலைமை தொடர்ந்தாலும் மேலே கூறியுள்ள இரு மாற்றீடுகளில் ஒன்று வந்தாலும், நிலைமை அப்படித்தான் இருக்கும்.

பொருளாதாரப் பிற்போக்குத்தனத்தின் வரலாறு

திபெத்தில் உள்ள தற்போதைய நிலைமை, எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவின் தீர்க்கப்படாத தேசிய ஜனநாயக பணிகளை தீர்ப்பதற்கு முதலாளித்துவ வர்க்கத்தின் அமைப்பியல் ரீதியாய் இயலாத் தன்மையின் இயல்பான விளைவு ஆகும். கோமின்டாங்கின் (KMT) முதலாளித்துவ தேசியவாதிளோ அல்லது 1949க்குப் பின்னர் சீன ஸ்ராலினிஸ்ட்டுக்களோ நாட்டின் சிறுபான்மையினருக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்தவோ, அவர்களை ஒன்றுபடுத்தப்பட்ட நாட்டில் அந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளவோ முடியவில்லை. திபெத்திய உயரடுக்குகளை பொறுத்தவரையில், கடந்த நூற்றாண்டின் வரலாறு பலமுறையும் பல பெரிய சக்திகளிடம் அவர்கள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடந்ததைத்தான் நிரூபணம் செய்கிறது.

சீனாவின் தேசிய சிறுபான்மையினர் மொத்த மக்கட்தொகையில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தாலும், அவர்கள் நாட்டின் பாதிப் பகுதியில் வசிக்கின்றனர். சீனாவின் பெரிய இனவழிக் குழுக்களில் திபெத்தியர்கள் எப்பொழுதுமே மிக வறியவர்களாக, மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான Quinghai-Tibet பீடபூமிப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக திபெத்தின் சமூக வளர்ச்சி அரை நாடோடிப் பொருளாதார நிலையை கடந்தது இல்லை; உயிர் வாழ்வுக்குத் தேவையான விவசாயம் செய்யப்பட்டது. இப்பகுதியை பெளத்த மத ஆட்சி ஒன்று தலாய் லாமா தலைமையில் ஆண்டு வந்தது; இதற்கு நிலச்சுவான்தார்களின் பிரபுக் கூட்டம் ஆதரவு கொடுத்தது. பெரும்பாலான திபெத்தியர்கள் "சபாக்கள்" அல்லது பண்ணை அடிமைகள் என்ற முறையில் மடாலயங்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் உழைத்து வந்தனர். பெளத்தம் மிகப் பரந்த முறையில் மக்களை சாந்தப்படுத்தும் வகையில் பரப்பப்பட்டு வந்தது; அவர்களுடைய கசப்பான விதி முந்தைய பிறப்புகளில் தவறான செயல்களின் விளைவு என்று கூறப்பட்டது.

இன்று ஒரு "சுதந்திர திபெத்" வேண்டும் என்று அழைப்பு விடுபவர்கள், திபெத்திய அரசு ஒன்றின் வரலாற்றுச்சான்றுக்கு செப்பிடு வித்தை காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் இப்பகுதியின் மிகத் தீவிர பிற்போக்குத்தனம் எப்பொழுதும் திபெத்திய ஆளும் வர்க்கங்களை அரசியல் இயலாமைக்குத்தான் தள்ளியிருந்தது. துபோ பரம்பரையின் கீழ் திபெத் ஒன்றுபடுத்தப்பட்ட ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுகள் தவிர, இப்பீடபூமி எப்பொழுதுமே போட்டியிட்ட பிரபுக்கள் மற்றும் பெளத்த பள்ளிகளுக்கு இடையே பிளவுற்றிருந்தது. பெளத்த அதிகாரநிலையின் மையத்தானம் சீனாவில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் மங்கோலிய பரம்பரையை நிறுவிய குப்லாய் கானிடம் இருந்து பெறப்பட்டிருந்தது; அவர் திபெத்தின்மீது படையெடுத்து மத குருமுறையை பயன்படுத்தி தன்னுடைய அதிகாரத்தை நெறிப்படுத்திக் கொண்டார். ஏகாதிபத்திய சீன புரவலர்தன்மை மிங் மற்றும் மஞ்சு மரபினர் கீழும் தொடர்ந்திருந்தது; இது 1911 சீனப் புரட்சிக்காலம் வரை இருந்தது. சீன பேரரசர் திபெத்தின் மதசார்பற்ற ஆட்சியாளராக மட்டும் இருந்ததில்லை; பெளத்த கடவுளர் கூட்டுக் கூட்டத்தின் ஒரு அங்கமாகவும் இருந்தார் --மஞ்சூஷூரி என அழைக்கப்பட் "பெரும் ஞானம் பெற்ற புத்தரின் மறு பிறவி" என கருதப்பட்டும் இருந்தார்.

தற்கால திபெத்தின் "சுதந்திரம்" எனப்படுவது சீன ஏகாதிபத்திய முறையில் சிதைவு மற்றும் சரிவில் இருந்து எழுந்துள்ளது. பெய்ஜிங்கின் செல்வாக்கு குறைந்த நிலையில், சீனா ரஷ்யாவும் பிரிட்டனும் மத்திய ஆசியாவில் செல்வாக்கு, மேலாதிக்கத்திற்காக நடத்திய "பெரும் விளையாட்டின்" ஒரு பகுதியாயிற்று. 1904ம் ஆண்டு பிரிட்டன் ஒரு படைப்பிரிவை காலனிய இந்தியாவில் இருந்து லாசாவை வெற்றி கொள்ளுவதற்கு அனுப்பிவைத்தது; அது நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான திபெத்திய வீரர்களை கொலை செய்தது. இப்பகுதியை முறையாக இணைத்துக் கொள்ளவில்லை என்றாலும், பிரிட்டிஷ் அதிகாரிகள் ஒரு உடன்படிக்கையை திணித்து அதை ஒரு அரைகுறை பிரிட்டிஷ் காலனியாக திறமையுடன் மாற்றினர். பெய்ஜிங்கில் இருந்த வலுவற்ற மஞ்சு அரசவை ஏதும் செய்யமுடியாமல் லாசாவில் இந்த பிரிட்டிஷ் உயர்நிலையை ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.

மஞ்சு மரபினரை அகற்றிய 1911ம் ஆண்டு புரட்சியின் தலைவரான சன் யாட்-சென் ஒரு ஜனநாயகக் குடியரசை "ஐந்து இனங்களின் ஐக்கியம்" --ஹான், மஞ்சூரியர்கள், மங்கோலியர்கள், முஸ்லிம்கள், திபெத்தியர்கள்-- அடிப்படையில் அறிவித்தார். திபெத்தை ஒரு தேசிய சந்தையில் இணைப்பதற்கு இரயில்வே தடம் வேண்டும் என்ற கருத்தை அவர்தான் முதலில் முன்மொழிந்தார். அவருடைய KMT, (கோமின்டாங்) இந்த நிலையை ஒருபோதும் அடைய முடியவில்லை. சீன முதலாளித்துவத்தின் வலுவற்ற தன்மையை இந்த சக்தியற்ற நிலை பிரதிபலித்தது; அது ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து நின்று ஒட்டுண்ணித்தனமான நிலப்பிரபுக்கள் வர்க்கத்துடன் பிணைந்திருந்தது. மஞ்சு அரசவை கவிழ்ந்தபின் சீனா சிதைவுற்றது; அதற்குக் காரணம் பூசலிட்ட போர்ப்பிரபுக்கள் சிறு அரசுகளை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டனர்.

வேறுவழியின்றி, பிரிட்டிஷ் பாதுகாப்பின்கீழ் திபெத் "சுதந்திரமாக" இருந்தது. உள்பகுதி, புறப்பகுதி என்று பிரிட்டன் திபெத்தை இரண்டாகப் பிரித்தது; 9,000 சதுர கிலோமீட்டர் பகுதியை இந்தியாவின் வடமேற்குப் பகுதியுடன் இணைத்தது. தொடர்ச்சியான சீன அரசாங்கங்கள் இந்த லண்டனில் வரையப்பட்ட எல்லையை நிராகரித்தன; எஞ்சிய திபெத்திய பகுதி சீனாவுடையதுதான் என்று பிரிட்டன் ஒப்புக் கொண்டாலும் இந்த நிலை நீடித்தது. "மக்மோகன் கோடு" ("McMahon Line") என்று அறியப்பட்டிருந்த இந்த எல்லைதான் 1962ல் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே எல்லைப் போர் ஏற்பட அரங்கை அமைத்தது.

வலுவற்ற கோமின்டாங் ஆட்சியானது தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளின் எழுச்சி 1925-27ல் ஏற்பட்டபோதுதான் போர்ப் பிரபுக்களை வெற்றிகொள்ள முடிந்தது. மாஸ்கோவில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் துரோகக் கொள்கையின் மூலம் அது அதிகாரத்தின் பிடியைக் கொண்டிருந்தது; அதுவோ சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை (CCP ஐ) கோமின்டாங்கிற்கு கீழ்ப்படுத்தியது; கோமின்டாங்கின் தலைவர் சியாங்கே ஷேக் சீன தொழிலாள வர்க்கத்தை 1927ல் குருதி சிந்திய ஒடுக்குமுறையில் தள்ளினார். தன்னுடைய அதிகாரத்தின் உயர்நிலையில்கூட, 1931 ஜப்பானியர் மஞ்சூரியாமீது படையெடுப்பதற்கு முன்பு, சியாங் திபெத் உட்பட மேற்கு சீனாவில் பல பகுதிகளிலும் முழு அதிகாரத்தைச் செலுத்த முடியவில்லை.

திபெத்தின் "விடுதலை"

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அரசியல் வரைபடம் தீவிரமாக மாறியது. 1927 தோல்வியை அடுத்து சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) மாவோ சேதுங்கின் தலைமையில் தொழிலாள வர்க்கத்தை கைவிட்டு, சர்வதேச சோசலிச முன்னோக்கையும் கைவிட்டு, விவசாயிகளின் கொரில்லா முறையை பின்பற்றத் தொடங்கியது. 1949ம் ஆண்டு கோமின்டாங் ஆட்சியின் உட்தகர்ப்பிற்கு பின்னர் மாவோவின் விவசாயிகள் படைகள் அதிகாரத்திற்கு வந்தது சோசலிசத்தின் வெற்றியை குறிக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தை நகரங்களில் மாவோயிச ஆட்சி நசுக்கியது; தைவானுக்கு ஓடிச் செல்லாத சீன முதலாளித்துவத்தின் பகுதிகளுடன் இணைந்து வெளிப்படையாக மக்கள் குடியரசு ஒன்றை நிறுவியது.

CCP தேசிய சிறுபான்மையினர் மீது கொண்டிருந்த கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தினர், பல்வேறு இனப் பின்னணியை கொண்டிருந்தவர்களை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்படுத்தும் சர்வதேச நோக்கத்தின் ஒரு பகுதியாக இல்லை. மாறாக இதன் "புதிய ஜனநாயக திட்டம்" சீனாவை ஒரு "வலிமையான சக்தியாக" மாற்றும் தேசிய நோக்கத்தின் அடிப்படையில் இருந்து, முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று விழைவுகளை பிரதிபலித்தது; சீன விவசாய அடுக்குகளில் இருந்த இனவெறியையும் அது இணைத்திருந்தது. 1950 களில் மாவோ "பெரும் ஹன் பேரினவாதம்" மிகப் பெரிய அளவில் நாட்டில் இனவழி பதட்டங்களை அதிகப்படுத்தியது என்று ஒப்புக் கொண்டிருந்தார்.

தற்போதைய தலாய் லாமா --டென்ஜின் கியோட்சோ-- 1935ம் ஆண்டு விவசாய பெற்றோர்களுக்கு பிறந்தார். இரண்டாம் வயதில், மறைந்த 13வது தலாய் லாமாவின் மறு பிறவி என்று தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940ல் இவர் அரியணையில் அமர்த்தப்பட்டதற்கு ஒரு கோமின்டாங் தூதுக் குழுவும் வந்திருந்தது; அது தன்னுடைய தூதரகத்தை திபெத்தில் மீண்டும் நிலைநிறுத்தியிருந்தது. இப்பகுதியில் இருந்து பிரிட்டன் வெளியேறியிருந்தது, இந்தியாவிற்கு 1947ல் சுதந்திரம் அளித்த பின், ஒரு புவிசார்-அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. லாசாவில் இருந்த காஷக் எனப்படும் திபெத்திய மந்திரிசபை பெய்ஜிங்கில் ஒரு கம்யூனிச ஆட்சி வெளிப்படுவதற்கு ஆழ்ந்த விரோதப் போக்கை காட்டியது, லண்டனுடனும் புதுதில்லியுடனும் சேர்ந்து கொண்டு தன்னுடைய சுயாட்சியை தக்கவைத்துக் கொள்ள பார்த்தது.

மக்கள் விடுதலை இராணுவம் (Peoples Liberation Army) திபெத்தின் மீது 1950ல் படையெடுத்தது இப்பகுதி கோமின்டாங்கானது, வாஷிங்டன் ஆதரவுடன் தனக்கு எதிராக தைவானைப் போல் மற்றொரு தளத்தை ஏற்படுத்திவிடாமல் தடுக்கும் பெய்ஜிங் நோக்கதால் பிரதானமாக செயற்தூண்ண்டல் அளிக்கப்பட்டது. இப்பகுதியின் தலைவிதி அமெரிக்கத் தலைமை மற்றும் சோவியத் முகாம்களின் குளிர் யுத்தத்திற்குள் உட்பட்டுக் கிடந்தது. ஆரம்பத்தில் அமெரிக்காவோ பிரிட்டனோ காஷாக்கின் உதவிகோரிய முறையீடுகளில் எந்த அக்கறையும் காட்டவில்லை. ஆனால் கொரியப் போருக்கு பின்னர் வாஷிங்டன் அதன் கவனத்தை திபெத் மீது செலுத்தியது. 1950 களின் தொடக்கத்தில் CIA தலாய் லாமாவின் இரு சகோதரர்களை ஒரு நடவடிக்கைக்காக தேர்ந்தெடுத்தது, இறுதியில் இது திபெத்திய ஆட்சியின் பெரும்பாலானோரை சேர்த்துக் கொண்டது.

1951ம் ஆண்டு ஒரு சிறிய திபெத்திய இராணுவத்தை மக்கள் விடுதலை இராணுவம் வெற்றிகொண்ட பின் காஷாக் பெய்ஜிங்குடன் ஒரு "17-அம்சத்திட்டத்தை" ஏற்க வேண்டிய கட்டாயத்தை கொண்டது. இந்த உடன்பாடு லாசாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகள் உயர்ந்த அரசியல் தன்னாட்சியை கொண்டிருக்கும் என்றும், ஆனால் அவை சீனாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. மாவோ, வறிய திபெத்திய விவசாயத் தொகுப்பிற்கு முறையீடுவதற்கு முற்றிலும் மாறாக, பெளத்த படிநிலை மற்றும் பிரபுக்களின் சலுகை பெற்ற நிலைமையைத்தான் உறுதிசெய்தார். சீனாவின் பிற பகுதிகளில் இருந்ததைப் போல் மாவோ குறைந்த அளவு சீர்திருத்தங்களை கூட திபெத்தில் ஏற்படுத்தவில்லை; பண்ணை அடிமை முறையையும் அகற்றவில்லை.

இந்த கொள்கைதான் எதிர்கால பூசல்களுக்கான விதைகளைக் கொண்டிருந்தது. மக்களிடையே கணிசமான ஆதரவு இல்லாத நிலையில், CCP தன்னுடைய ஆட்சியின் தளத்தை பஞ்சன் லாமாவின் தலைமையில் இருந்த "நாட்டுப்பற்று மிகுந்த உயரடுக்கை" அணைத்துக் கொண்டு செல்லும் வகையில் அமைத்துக் கொண்டது. மக்கள் விடுதலை இராணுவத்தின் கோட்டை அரண்காக்கும் படை பிரிவுகளுக்காகும் பெரும் சுமை வறிய கிராமப்புற மக்கள்மீது விழுந்தது; இது சீன எதிர்ப்பு உணர்விற்கு எரியூட்டிது. மாவோ இறுதியில் நிலச் சீர்திருத்தத்தை தொடங்கியபோது, அப்பொழுது அது தீவிர கூட்டுப் பண்ணை என்று அதிகாரத்துவ விருப்பத்தை செயல்படுத்தியதே அன்றி திபெத்தின் வறிய விவசாயிகள், நாடோடிகளின் மீது ஏற்படும் பாதிப்பைப் பற்றி கவலை கொள்ளவில்லை; அதேபோல் தேவையான தொழில்நுட்ப வளங்களும் அங்கு இல்லை. இந்த நடவடிக்கைகள் விவசாயிகளின் ஆதரவை பெறுவதில் தோல்வி அடைந்தன; திபெத்திய உயரடுக்குகள் மக்களுடைய அதிருப்தியை தங்கள் பிற்போக்குத்தன அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொண்டன.

1959 எழுச்சிகள்

சீர்திருத்த நடவடிக்கைகள் திபெத்திய பகுதிகளில் 1956ம் ஆண்டு பெரும் எழுச்சிகளை ஏற்படுத்தின. ஆனால் இன்னும் பெரிய அளவிலான எழுச்சி 1959ம் ஆண்டு CCP க்கு எதிராக நடத்தப்பட்டது வெளிநாட்டு அமைப்புக்களாலோ நிலப்பிரபுக்களாலோ தூண்டிவிடப்படவில்லை. அது பரந்த முறையில் மக்கள் விடுதலை இராணுவத்தின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் CCP கட்சி எஜமானர்களின் நாட்டுவெறிக்கு எதிராக இருந்த விரோதப்போக்கில் ஆழ்ந்த வேர்களை கொண்டிருந்தது. மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சல் என அழைக்கப்பட்டிருந்த மாவோவின் கிராமப்புற சோசலிசம் என்ற கற்பனையுலக சோதனை பேரழிவில் தோல்வியுற்றதை அடுத்து, - அதற்குப் பின் பரந்த அளவில் வந்திருந்த பஞ்சத்தாலும் வெடித்து எழுந்தது.

ஒரு வரலாற்றாளர் குறிப்பிட்டார்: "பிந்தைய சீனக் கூற்றுகளுக்கு மாறாக, கம்யூனிஸ்ட்டுகள் திபெத்திய விவசாயத் தொகுப்பை திரட்டுவதற்கு ஒன்றும் செய்யவில்லை; வெளிப்படையாக சோசலிசம் பற்றிய வர்க்க நனவு பற்றியோ வாதிடவும் இல்லை. திபெத்திய விவசாயிகள் வர்க்க நலன்களை முதலில் வைத்து கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பார்கள் என்று அவர்கள் எளிதாகக் கருதியிருந்தனர். "மேலிருந்து சீர்திருத்தம்" என்ற கொள்கையினால், திபெத்திய விவசாயிகள் தொகுப்பு "கருணையான புறக்கணிப்பு" என்பதைத்தான் கண்டது; மோசமான அளவில் அவர்கள் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பின் ஆதாரம் என்ற முறையில் சுரண்டப்பட்டனர்." (Tsering Shakya, The Dragon in the Land of Snows: A History of Modern Tibet Since 1947, p.134, Pimlico).

மக்களிடத்தில் கூறப்படும் கற்பனைக்கு மாறாக, 24 வயது தலாய் லாமா 1959 எழுச்சிக்கு ஆதரவு கொடுக்கவில்லை; ஆனால் எதிர்ப்பாளர்களுக்கு, முக்கியமாக விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களுக்கு அடையாள முறையில் குவிப்புப் புள்ளியானார்; அவர்கள் CCP யை எதிர்த்ததோடு பழைய நிலப்பிரபு உயரடுக்கினரையும் எதிர்த்தனர். ஏழைகளின் ஆர்ப்பாட்டங்கள் மார்ச் 10ம் தேதி லாசாவில் வெடித்தன; சீன இராணுவம் தலாய் லாமாவை கடத்த இருக்கிறது என்ற வதந்திகளுக்கு இடையே இது நடந்தது. இந்த இயக்கம் விரைவில் காஷாக் அரசாங்கத்தை முடக்கியது; அது நீண்டகாலமாகவே பெய்ஜிங்குடனான உறவு பற்றி மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தது. அதன் அதிகாரிகள் சிலர் சீன எதிர்ப்பு உணர்வை தூண்டிவிட்டனர்; ஆனால் தலாய் லாமா மக்களையும் பெய்ஜிங்கையும் சமாதானப்படுத்த முயன்று வந்தார். சமரசம் செய்ய முன்வந்த அவருடைய நடவடிக்கைகள் தோல்வியுறவே, லாசாவை மக்கள் விடுதலை இராணுவ துருப்புக்கள் தாக்கி ஆயிரக்கணக்கான எளிய ஆயுதங்கள் ஏந்திய எதிர்ப்பாளர்களை கொன்றபோது அவர் திபெத்தில் இருந்து வெளியேறி விட்டார்.

CCP யின் உத்தியோகபூர்வ குறிப்பு, தலாய் லாமா பண்ணை அடிமை முறையை மீட்கும் முயற்சிதான் அவ்வெழுச்சி என்று அதனை விவரிக்கிறது. உண்மையில் தலாய் லாமா வெளியேறியது பற்றிய மாவோவின் முதல் எதிர்கொள்ளல், "நாம் இழந்து விட்டோம்" என்று கூறியதாகும். அவர் தலாய் லாமாவை ஒரு முக்கியமான அரசியல் கருவி என்று கருதியதுடன், முதலில் எழுச்சியாளர்கள் "கடத்திவிட்டதாகவும்" கூறினார். இறுதியில் CCP, அவர் வெளிப்படையாக கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை கூறத் தொடங்கியதும் அது தலாய் லாமாவை "துரோகி" என்று முத்திரையிட்டது. அமெரிக்க ஆதரவு இருந்த போதிலும்கூட, நாட்டிற்கு வெளியில் இருந்து செயல்பட்ட திபெத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை; வாஷிங்டனின் மற்ற நட்புநாடான தைவானில் இருக்கும் KMT சர்வாதிகாரம் இப்பகுதி சீனாவுடையதுதான் என்று வலியுறுத்தியது இதற்குக் காரணம் ஆகும்.

CCP ஆட்சிக்கு எதிரான விரோதப் பொக்கு 1966ல் "மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சி" என்பதை மாவோ கட்டவிழ்த்துவிட்டதில் அதிகமாயிற்று; அவர் தன்னுடைய எதிர்ப்பிரிவுகளுக்கு எதிரான கடுமையான உட்பூசலின் ஒரு பகுதியாக இதைக் கொண்டு வந்தார். 1964ல் மாவோவின் திபெத் கொள்கை பற்றி மிகுந்த எச்சரிக்கையுடன் குறைகூறியிருந்த பஞ்சன் லாமாவை அவர் அகற்றியது Liu Shaoqi, Deng Xiaoping ஆகியோரின் தலைமையில் இருந்த "முதலாளித்துவ வழியினருக்கு" எதிரான தாக்குதலின் தொடக்கத்தை குறித்தது. மாவோவின் சிதைவுற்ற பார்வையை கொண்டிருந்த இளைஞர் அணிக்கள் திபெத்தில் மோசமான தாக்குதல்களை நடத்தினர்; அங்கு Red Guards திபெத்திய கலாச்சார இடங்களையும், பெளத்த மடாலயங்களையும் உடைத்து நொருக்கிய வகையில் "நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களை" அழிக்கும் தங்களின் உறுதிப்பாட்டை விளக்கிக் காட்டினர்.

திபெத் பற்றிய CCP கொள்கை நிர்பந்திக்கப்பட்ட ஒருங்கிணைப்பாக மாறியது. சீனாவின் மற்ற பகுதிகளில் இருந்ததை போலவே திபெத்தியர்கள் "வறிய விவசாயி", "நடுத்தர விவசாயி", "நிலப்பிரபு" என்று இயந்திர கதியில் பிரிக்கப்பட்டனர், அதன்படி ஆதரவைப் பெற்றனர் அல்லது இழிவுகளைப் பெற்றனர். திபெத்தியர்கள் மாவோவிற்கு விசுவாசத்தை தெரிவிக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்; தங்கள் மரபார்ந்த ஆடைகளை துறந்து மாவோவின் சீருடையை பின்பற்றக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த பிரச்சாரம் CCP உட்பூசல்கள் ஆட்சியை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய போது திடீரென நிறுத்தப்பட்டது; செங்காவலரின் தாக்குதல்கள் தொழிலாள வர்க்க எதிர்ப்பு மற்றும் "கலாச்சார புரட்சியின்" உத்தியோகபூர்வ வடிவமைப்பிற்கு வெளிய எழுச்சிகள் ஏற்பட்டதும் இதற்குக் காரணம் ஆகும். திபெத் உட்பட எல்லா இடங்களிலும் ஒழுங்கை மீட்கவும் எதிர்ப்பை அகற்றவும் இராணுவம் அணிதிரட்டப்பட்டது.

நாட்டிற்கு வெளியே இருந்து செயல்பட்ட திபெத்திய அரசாங்கம் 1960 களில் வாஷிங்டனுடைய ஆதரவுடன் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தது; ஆனால் நிலைமை 1971ல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன், சீன ஆட்சியுடன் சமரசம் செய்து கொண்டபின் திடீரென மாறிவிட்டது. பொருளாதாரத் தேக்கம் மற்றும் சோவியத் ஒன்றியத்துடன் பதட்டங்கள் தீவிரமானதை எதிர்கொண்ட நிலையில் மாவோ நடைமுறைச் சிறப்பை கருதி வாஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார்; இவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்பு அலங்காரச் சொற்களையும் இவ்விதத்தில் கேலிக்கூத்தாக்கினார். உடன்படிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கா, பெய்ஜிங் திபெத்தின்மீது கொண்ட இறைமையை அங்கீகரித்தது; தலாய் லாமா, சியாங்கேய் ஷேக் உட்பட அதன் கம்யூனிச எதிர்ப்பு நண்பர்கள் பலரையும், இதையொட்டி பொருட்படுத்தாது விட்டது. திபெத்திய சிறு கொரில்லாக் குழுக்களுக்கு CIA ஆதரவு, பயிற்சி என்பது இதையொட்டி நின்று போயிற்று.

வாஷிங்டன்-பெய்ஜிங் ஒப்பந்தம் சீனாவை வெளிநாட்டு மூலதனத்தை அழைப்பதின் ஆரம்பமாயிற்று; இந்த வழிவகை விரைவில் 1976ல் மாவோவின் மரணத்திற்கு பின்னர் டெங் சியாவோபிங் அதிகாரத்திற்கு வந்தபின் பெருகியது. 1980 களின் ஆரம்பத்தில் மக்கள் கம்யூன்கள் தகர்க்கப்பட்டதானது விவசாயிகளுக்கு தற்காலிக நிம்மதியைக் கொடுத்தது; திபெத்திலும் அவ்வாறே ஆயிற்று; அங்கு கம்யூன்கள் ஒரு பொருளாதாரப் பேரழிவாக ஆயின. பெளத்த மத படிநிலை அமைப்புடன் CCP உறவுகளை சீரமைக்க முற்பட்டது; "மரபார்ந்த கலாச்சாரத்தை" மீட்டல், கருத்தியல் "தாராளமயத்தின்" பகுதியாக ஆலயங்களை மறுபடியும் அமைத்தல் என்பதின் ஒரு பகுதியாக அது நடைபெற்றது.

சந்தைச் சீர்திருத்தங்கள்

சீனாவில் செழிக்கும் சந்தை சீர்திருத்தம், வெள்ளமெனப் பெருக்கெடுத்து வந்த வெளிநாட்டு முதலீட்டால் எரியூட்டப்பட்டது குறைந்துவிடவில்லை; அது ஆழ்ந்த முறையில் சமூக பதட்டங்களைத்தான் நாடெங்கிலும் அதிகமாக்கியுள்ளது. முதலாளித்துவ சந்தையின் மேலாதிக்கம் இன்னும் கூடுதலான வகையில் சமூக துருவமுனைப்படலை தீவிரப்படுத்தியுள்ளதுடன் அதிருப்தியையும் அதிகமாக்கியுள்ளது; முந்தைய குறைந்த அளவு சமூகப் பாதுகாப்பு வலைகூட தகர்க்கப்பட்ட நிலையில் தற்போதைய நிலைமை உள்ளது.

வறிய திபெத்திய பகுதியில் எதிர்ப்புக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என்பன பரந்த முறையில் அமைதியற்ற தன்மையின் பரந்த எழுச்சிகளுக்கான முன்ன்றிவிப்பாளராக நிரூபிக்கப்பட இருந்தது. ஜனவரி 1989 ல் 10வது பஞ்சன் லாமா இறந்தது திபெத்தில் ஒரு சமூக வெடிப்பிற்கு வழிவகுத்தது; தன்னுடைய இறப்பிற்கு சற்று முன்பு திபெத் 1949ல் இருந்து பெற்றதை விட இழந்தது அதிகம் என்று அவர் கூறினார் என்று வந்த வதந்திகளை அடுத்து, அத்தகைய வெடிப்புக்கள் ஏற்பட்டன. திபெத்தில் கட்சியின் தலைவராக அந்த நேரத்தில் இருந்த, ஜனாதிபதி ஹு ஜின்டாவோ, மார்ச் மாதம் லாசாவில் எழுந்த கலகங்களை வன்முறையினால் அடக்கினார்; அதில் பலர், ஏன் நூற்றுக்கணக்கானவர்கள் கூட கொல்லப்பட்டனர். லாசா எழுச்சி இன்னும் பரந்த அளவில் நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஜனநாயகச் சீர்திருத்தங்கள் மற்றும் சமூக சமத்துவமின்மைக்காக ஏப்ரலில் இருந்து விளைந்த எதிர்ப்புக்களின் ஒரு அடையாளம்தான். அதிக உள் விவாதத்திற்கு பின்னர் CCP ஆட்சி பெய்ஜிங்கில் தியனன்மென் சதுக்கத்தில் 1989 ஜூன் 4ம் தேதி ஒரு மிருகத்தனமாக ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது.

தியானன்மென் சதுக்கத்தில் நடந்த நிகழ்வுகள் இன்னமும் சீன ஆட்சியை பதட்டத்திற்கு உட்படுத்தியுள்ளன. 1989ல் வெடித்த அனைத்து சமூக முரண்பாடுகளும் அதிகமாகி, பின்னர் இப்பொழுது வெளிநாட்டு முதலீட்டின் பெருக்கத்தால் தீவிரமாகியும் உள்ளன. எதிர்ப்புக்களை நசுக்குவது பற்றிய முதலைக்கண்ணீர் விடுதல் ஒருபுறம் இருந்தாலும், உலகந்தழுவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் தொழிலாள வர்க்கத்தின் எந்த எதிர்ப்பையும் பெய்ஜிங் அதிகாரபலத்தால் அடக்கிவிடும் என்ற உறுதிப்பாட்டை நன்கு அறிந்துள்ளனர். திபெத்தில் சமூகப் பிளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக உள்ளது; இங்கு வளரும் உயர் பொருளாதார நிலை, மகத்தான உள்கட்டுமானத்திற்கான செலவினங்கள் ஆகியவை இனவழி திபெத்தியர்களை ஒதுக்கியுள்ளது.

ஏப்ரல் 10ம் தேதி The Economist குறிப்பிட்டது: "உண்மையில், இன்றைய நிலைமை 1980 களின் கடைசிப்பகுதியில் இருந்த அமைதியற்ற நிலையை விடக் கூடுதலான வெடிப்புத் தன்மையை கொண்டிருக்கிறது என்று பெய்ஜிங்கை தளமாகக் கொண்டுள்ள திபெத்திய அறிஞர் வாங் லிக்சியோங் வாதிட்டுள்ளார்; ஏனெனில் சீன ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு திபெத்திய விவசாயிகள், அரசாங்கத் தொழிலாளர்களிடையேயும் பரவிவிட்டது. 1987ல் கடைசியாக நடைபெற்ற திபெத்தின் பெரும் அமைதியின்மை மற்றும் இராணுவ ஆட்சி புகுத்தப்பட்ட 1989 கலகங்கள் ஆகியவை தலைநகர் லாசாவுடன் தொடர்பு கொண்டு அங்கிருந்த துறவிகள், அறிவாளிகள், மாணவர்கள் ஆகியோரின் ஆதரவோடு நின்றிருந்தது. ஆனால் இன்றைய அமைதியின்மை திபெத்தின் மற்ற பகுதிகளுக்கும் படர்ந்து விட்டது, அனைத்து தரப்பு மக்களிடமும் பரவியுள்ளது."

திபெத்திய மக்களுக்கான தீர்வை தலாய் லாமா மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளில் காண முடியாது; "ஒரு சிறிய சுதந்திரநாட்டை" தோற்றுவிப்பதின் மூலமும் காண முடியாது. ஒரு தனி திபெத் நாடு என்பது ஒருபோதும் சுதந்திரமாகவோ, ஜனநாயக வகையை கொண்டோ அல்லது மக்களுடைய சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யும் தன்மையை கொண்டோ அமைய முடியாது. சீனாவுடன் 1950ல் திபெத் இணைக்கப்பட்டிருக்காவிட்டால், அது அண்டை நாடுகளான நேபாளம், பூட்டான் போன்றவை பின்பற்றிய பாதையில்தான் சென்றிருக்கும்; அங்கு முற்றுமுழுதான முடியாட்சிகள் சிறிய, வறிய சுதந்திரமற்ற நாடுகள்மீது ஆதிக்கம் செலுத்தின. 1991ல் சோவியத் ஒன்றியம் பொறிந்தபின் நிறுவப்பட்ட பல மத்திய ஆசியக் குடியரசுகள் செயல்படும் முறையைப் பார்த்தாலே, "ஒரு சுதந்திர" திபெத் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடியும். அது பெரும் சக்திகளின் அதிகரிக்கும் போட்டிகளின் சூழ்நிலையில் ஒரு விளையாட்டுக் கருவியாக மாறிவிடும்.

சீனா மற்றும் அந்த பிராந்தியத்தில் இருக்கும் எந்த தேசியப் பிரச்சினைகளும் ஒரு சோசலிச முன்னோக்கிற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைத்த போராட்டத்திற்கு வெளியில் தீர்க்கப்பட முடியாது. தேசிய, இனப் போராட்டங்கள் பெருத்துள்ளது என்பது உலக முதலாளித்துவத்தின், தேசிய அரசு முறை ஆகியவற்றின் நெருக்கடிகளின் மற்றொரு அடையாளம் ஆகும். இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்ததுடன் ஒப்பிடும்பொழுது --அது மொழி, இன, மத பிளவுகளை கடந்து மக்களை ஒன்றாக ஈர்த்த்து. --இப்பொழுதுள்ள தேசிய இயக்கங்கள் தவிர்க்க முடியாமல் விலக்குகின்ற, பிற்போக்குத் தன்மையைத்தான் கொண்டுள்ளன. ஏகாதிபத்தியத்தில் இருந்து சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்கு பதிலாக இவை "தங்கள்" சொந்த தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலுக்காக ஒரு முதலாளித்துவ சிறுநாட்டை அமைப்பதற்காக பெரும் சக்திகளின் ஆதரவை நாடுகின்றன.

குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு வளங்கள் ஆகிவற்றின் தேவைக்கான உந்துதலால் திபெத் சீனா மற்றும் உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கப்படுவது என்பது, திபெத்திய மக்களை சீன மற்றும் சர்வதேச தொழிலாளர்களுடன் கொண்டு வரும். ஜனநாயக உரிமைகள் இல்லாத நிலை மற்றும் திபெத்தியர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் ஆகியவை சீனா மற்றும் இந்தியா உட்பட அருகில் இருக்கும் பகுதிகளில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களாலும் அனுபவிக்கப்படுகின்றன. திபெத்திய மக்களின் சமூக, ஜனநாயக அபிலாசைகள், சர்வதேச சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, பெய்ஜிங்கில் இருக்கும் CCP ஆட்சியை தூக்கி எறிவதற்கு சீனாவில் இருக்கும் தொழிலாள வர்க்கத்துடன் கூட்டுப் போராட்டம் ஒன்றில் சேர்வதன் மூலம் மட்டுமே அடையப்பட முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இதற்கு ஸ்ராலினிசத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக நீடித்த போராட்டம் நடத்திய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்து அவசியமான படிப்பினைகளை பற்றியெடுப்பதும், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர தலைமை கொடுப்பதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியை சீனாவில் கட்டியமைப்பதும் தேவைப்படுகிறது.