World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: immigrant retention centre burnt down following death of inmate

பிரான்ஸ்: காவலில் இருந்தவர் மரணத்தை அடுத்து குடியேறியவர் தடுப்புக் காவல் மையம் தீக்கிரையாக்கப்பட்டது

By Kumaran Ira and Pierre Mabut
28 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 22ம் தேதி இதயத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 41வயதான துனீசியர் பெல்காசெம் செளலி, மோசமான நிலையில் மையத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின் இறந்து போனதை யிட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் நடத்திய கலவரத்தால் பாரிஸுக்கு அருகே உள்ள Val-de-Marne இல் இருக்கும் Vincennes இல் அமைந்துள்ள ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கான மிகப் பெரிய நிர்வாகத் தடுப்புக்காவல் மையம் (Administrative Retention Cetnre-CRA) தீக்கிரையாக்கப்பட்டது. காவலில் உள்ள 273 பேர்களில் 18 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த மையத்தில் உள்ள வெளிநாட்டு ஆவணமற்றவர்கள் பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட அவர்களுடைய தாய்நாடு அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அங்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்னர் மிக மோசமான நிலைமையில் வைக்கப்படுகின்றனர். Cimade (Comité intermouvement auprès des évacués) அறக்கட்டளை அமைப்பு இந்த இடத்தை "அதன் அளவு மற்றும் நடக்கும் நிர்வாகத் தன்மை இவற்றை ஒட்டி பரந்தளவானோரை அடைத்து வைக்கப்படும் அடையாள மையமாகிவிட்டது" என்று விளக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில் 27 நிர்வாக தடுப்புக்காவல் மையங்களையும் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ள Cimade, இங்கு "உடற்பயிற்சி செய்ய இடம் இல்லாமை, சிறிய அறைகள், மற்றவர்களோடு மிகக் குறைந்த தொடர்பு, ஏராளமான புகைப்படக் கருவிகள், முள்வேலி" ஆகியவை மலிந்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

இத்தகைய நிலைமைகள், வாடிக்கையாக தற்கொலை முயற்சிகள், தங்கள் உறுப்புக்களையே சிதைத்துக் கொள்ளுதல் மற்றும் மோதல்கள் ஆகியவற்றிற்கு வழிவகுக்கின்றன. 2006ல் குடியேறியவர்களை கைது செய்யும் சூழ்நிலையை எதிர்த்து பல பட்டினிப் போராட்டங்கள் நடைபெற்றன; அதற்கு முந்தைய ஆண்டு 2005ல் பல பெரிய நகரங்களில் இளைஞர்கள் கலகங்கள் எழுந்தபோது அவசரகாலநிலை சுமத்தப்பட்ட காலத்தில் அவை நிகழ்ந்திருந்தன. 2007 ல் 35,000 புலம்பெயர்ந்தோர் நிர்வாகத் தடுப்புக்காவல் மையங்களில் இருக்க நேர்ந்தது. இவர்களில் ஐந்தாயிரம் பேர் Vincennes இலிருந்து வந்திருந்தனர்; அது தேசிய போலீஸ் பயிற்சி பள்ளிக்கு தலைமையிடமும் கூட ஆகும்.

தீக்கிரையாக்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு, காவல் நிலையங்கள் கட்டுப்பாட்டு தேசியக் குழு, (CRAZA) குடியேற்றப்பிரிவு மந்திரியான Brice Hortefeux க்கு ஒரு கடிதம் எழுதியது; இதில் "அழுத்தங்கள், வன்முறை ஆகிய சூழல் எப்படி அனைத்து நிர்வாக தடுப்புக்காவல் மையங்களிலும், குறிப்பாக Vincennes இலும் நிரந்தரமாக ஆட்சி செலுத்துகிறது என்றும், ஒரு சிறு நிகழ்வுகூட பெரும் நெருப்புக்கு வழிவகுக்கும்" என்றும் கூறப்பட்டிருந்தது.

2008ல், 26,000 புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவது என்பதை Hortefeux ஒரு முன்னுரிமையாக கொண்டுள்ளார். இது ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி அரசாங்கத்தின் கடுமையான புதிய கொள்கையான பிரான்சில் நுழைவதற்கு குறிப்பிட்ட வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையுடன் இயைந்து உள்ளது. இதன் பொருள் குடும்பங்களை ஒன்றாக வாழமுடியாமல் செய்து பிரிப்பதாகும். பல குடியேறிய இவ்வகைத் தொழிலாளர்கள், கடந்த ஆண்டு 242 சிறுவர்கள் உட்பட, போலீசாரால் பள்ளிகள், வீடுகள், விடுதிகள் மற்றும் தெருக்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பிடிபட்டவர்கள் ஆவர்.

துனீசிய குடியேறியவர் மரணத்திற்கு இரு நாட்கள் முன்பு, 2007 ல் இதே காலகட்டத்தில் இருந்ததை விட இவ்வாண்டு 80 சதவீதம் கூடுதலானவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்று பீற்றிக் கொண்டார்.

சார்க்கோசியின் ஆளும் கட்சியான மக்கள் இயக்கித்திற்கான ஒன்றியம் (UMP), Vincennes தீயெரிப்பிற்கு எவர்மீது குற்றம் சுமத்துவது என்பது பற்றிய தன் கருத்தை தெளிவாக்கியுள்ளது. இதன் செய்தித் தொடர்பாளர் Frédéric Lefebvre, RESF மனிதாபிமானக் குழுவின் (எல்லைகளற்ற கல்வி இணையம்) பரிவுணர்வாளர்கள் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்களுக்கு கொடுக்கும் ஆதரவால் தூண்டிவிடப்பட்டது என்று கூறியுள்ளார்; அவர்களில் 30 ஆதரவாளர்கள் காவல் மையத்திற்கு வெளியே எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். "RESF போன்ற சேகரிக்கும் அமைப்புக்கள் இந்த மையங்களுக்கு வெளியே தூண்டிவிடும் வகையில் கூடுவது ஏற்கத்தக்கது அல்ல; இது வெளிநாட்டை சேர்ந்த காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்." என்று அவர் கூறினார்.

"இந்த சேகரிக்கும் அமைப்புக்கள் இத்தகைய நடவடிக்கைகளை, இங்கு காரணமில்லாமல் வெளியே கூடி, மையங்களுக்கு அருகே அவற்றை நடத்தவதற்கு மிகவும் உறுதியான எதிர்ப்பு காட்டப்படும்.... அனைத்து நடவடிக்கைகளும், தேவையானால் நீதிமன்ற நடவடிக்கை உட்பட, RESF உறுப்பினர்களில் பொறுப்பு நிரூபிக்கப்பட்டால் எடுக்கப்படும்." ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமை கூட இவ்விததிதல் குற்றமாக்கப்படுகிறது; பாதிக்கப்பட்டவர்களுடைய ஆதரவாளர்கள் தவறு நடத்துபவர்கள் பார்வையில் குற்றவாளிகளாகிறார்கள்.

France Soir ல் ஜூன் 24 வந்த பேட்டி ஒன்றில் Frédéric Lefebvre, SOS-Racism, LICRA (International League against racisim and anti semitism) என்று சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் இரு அமைப்புக்களுடைய அணுகுமுறை இத்தோடு ஒப்பிடப்பட்டால் சாதகமாக உள்ளது என்றார். "அவையும் Vincennes ஐ சில வாரங்கள் முன்பு பார்வையிட்டவர்கள் பொதுவாக மையம் ஒரு தரத்தில் இயங்குகிறது என்றுதான் குறிப்பிட்டுள்ளன... Cimade மற்றும் SOS-Racism, LICRA இவற்றிற்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு பலவற்றை சுட்டிக் காட்டுகிறது."

"ஒரு சோகந்ததும்பிய உண்மையை மறைக்கவில்லை என்றால் சொற்கள் ஒரு இழிந்த நகைச் சுவை நடிகருடையது போல் போய்விடும்; ஆவணமற்ற குடியேறுபவர்களை அரசாங்கம் நடத்தும் முறைதான் சோகம் ததும்பிய உண்மை." என்று RESF விடையிறுத்துள்ளது. Cimade, "பொதுப் பொறுப்புக்களை ஏற்காமல் தவிர்ப்பது அரசாங்கத்தின் நயமற்ற செயற்பாடு ஆகும்." என்று தெரிவித்துள்ளது.

சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய பாராளுமன்ற அங்கத்தவர் Jean-Louis Bianco, சார்க்கோசியின் குடியேற்றக் கொள்கை Vincennes நிகழ்வை ஒட்டி உள்ளதற்கு கட்சியின் ஆதரவைக் கொடுத்து சுருக்கமாகக் கூறினார்: "உலகின் வறிய மக்கள் அனைவரையும் நாம் வரவேற்று இங்கு வசிக்க செய்ய முடியாது என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்; அதுவும் அவர்கள் சட்ட விரோதமாக வசிக்கும் நிலையில், அவரவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால் அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்; இந்த மையங்களில் ஆனால் அப்படி நடக்கவில்லை என்பது தெளிவு." ஒரு சோசலிச கட்சி செய்தி ஊடகத்திற்கு கொடுத்த அறிக்கையில் கூறுவதாவது, "வெளிநாட்டினரின் உரிமைகளை மதிக்கும் கொள்கை வேண்டும்... அதே நேரத்தில் குடியேறுபவர்கள் வருவது திறமையுடன் கட்டுப்படுத்தப்பட வேண்டும்."

இதற்கிடையில் 800 ஆவணமற்ற குடியேறிய தொழிலாளர்கள், அனைவரையும் சட்டபூர்வ குடிமக்கள் ஆக்குவதற்கு தொழிற்சங்கம் உடனடி நடவடிக்கை வேண்டும் என்று பாரிசில் இருக்கும் CGT தொழிற்சங்க அலுவலகத்தை மே 2ல் இருந்து ஆக்கிரமித்துள்ளனர். இது CGT நிலைப்பாட்டிற்கு எதிர்மாறானது; அது அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுத்து வேலையில் இருக்கும் உறுப்பினர்கள் சட்டபூர்வமாக வசிப்பவர்கள் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்கிறது. நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர்கள், CGT யில் வேலைநிறுத்தம் செய்யும் வகையில் பணியாட்கள், துப்புரவு அலுவலகங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்துள்ளனர். இன்றுவரை, ஒரு சில நூறு தொழிலாளர்கள்தாம் தற்காலிக வசிக்கும் உரிமையை பெற்றுள்ளனர்; அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் இயக்கத்தில் சேர விரும்பும்போது, CGT அதை அனுமதியாது பேச்சுவார்த்தைகளை உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் தனித்தனி விஷயமாக முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது.

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆவணமற்றோர் ஒருங்கிணைப்புக் குழு75 (CSP75), CGT அலுவலகத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியை ஆரம்பித்த மே 30 அன்று அதன் போராட்டத்தை அபிவிருத்தி செய்ய வெகுஜன இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தது. "ஏப்ரல் 30 அன்று CSP75, Prefecture (உள்ளூர் காவல் நிர்வாகம்) இடம் ஆயிரம் கோப்புக்களை அளிக்க முற்பட்டது, ஆனால் அவை தொழிற்சங்கத்தால் கொடுக்கப்படவில்லை என்று காரணம் காட்டி வாங்கப்படவில்லை, ஏன்? "

"எனவே அரசாங்கத்தையும் முதலாளிகளையும் வழிக்குக் கொண்டுவர.... இயக்கமானது அனைத்து போராளி அடுக்குகள், தொழிற்சங்கங்கள், கூட்டமைப்புக்கள், மாணவர்கள் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அனைத்துக் கூட்டுக் குழுக்களும் சேர்க்கப்பட கட்டாயம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்."

பிரான்சில் 400,000க்கும் கூடுதலான ஆவணமற்ற மற்றும் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் என அழைக்கப்படும் மக்கள் பிரான்சில் தாங்கள் வாழும் உரிமையை பாதுகாப்பதற்கான தங்களின் நம்பிக்கைக்கு "உத்தியோகபூர்வ இடது" மற்றும் தொழிற்சங்கங்கள் இவற்றிடமிருந்து இன்னும் விடையிறுப்பு கிடைக்கவில்லை.