World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா

Spiralling prices in Vietnam provoke fears of social unrest

வியட்நாமின் விலைவாசி உயர்வு சமூக அமைதியின்மைக்கான அச்சத்தைத் தூண்டுகிறது

By John Roberts
29 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை தூண்டிவிட்டிருக்கும் (முக்கியமாக வெளிநாட்டு உற்பத்தி ஆலைகளில்) அதிகரிக்கும் பணவீக்க விகித அளவுகளால் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அதிகரித்தளவில் எச்சரிக்கையடைந்து வருகிறது.

எண்ணெய், வீடு மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வால், ஏப்ரலில் ஓர் ஆண்டு பணவீக்க விகிதம் 21.4 சதவீதமாக உயர்ந்திருந்தது. அரிசி மற்றும் பிற தானியங்களின் 38.2 சதவீத விலையேற்றத்துடன், முந்தைய 12 மாதங்களுடன் ஒப்பிடுகையில் உணவு விலைகள் 34.1 சதவீதம் உயர்ந்திருந்தன. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 60 அமெரிக்க சென்ட் என்ற சம்பள விகிதம் பெறும் உற்பத்தி தொழிலாளர்கள் மீது இந்த விலையுயர்வு ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நீண்டநேரம் வேலை செய்தாலும், ஊதியம் மாதத்திற்கு 60 டாலரை தாண்டுவது அரிதாகும்.

இதன் விளைவு தொடர்ச்சியான "சட்டவிரோத வேலைநிறுத்தங்களாக" இருந்தன. ஏப்ரல் மாதம், ஆசியா டைம்ஸ் இணைய தளத்தில் வெளியான புள்ளிவிபரங்களின்படி, 2007ல் மட்டும் அங்கு சுமார் 350,000 தொழிலாளர்கள் பங்கெடுத்திருக்கலாம் என மதிப்பிடப்பட்ட 541 போராட்டங்கள் நடந்தன. உத்தியோகபூர்வ தொழிற்சட்டங்களை மீறி நடக்கும் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை EuroCham இன் அன்னிய முதலீடுகளுக்கான செய்திதொடர்பாளர் ஆலேன் கேனி குற்றஞ்சாட்டினார். தெற்கத்திய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி மண்டலங்களில் உள்ள EuroCham உறுப்பினர்கள் காலணி, ஆடைகள் மற்றும் மரத்தளபாட ஆலைகளில் போராட்டங்கள் நடப்பதை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 25ல் Wall Street இதழ், இந்த சூழலை "அன்னிய மற்றும் வியட்நாமின் சொந்த ஆலைகளில் தொழிலாளர் போராட்டங்களின் அலை" என குறிப்பிட்டது. அமெரிக்காவை மையமாக கொண்ட Nike நிறுவனத்திற்காக காலணிகள் உருவாக்கும் தாய்வானுக்கு சொந்தமான ஆலையில் கடந்த மாதம் 20,000 தொழிலாளர்களால் போராட்டம் நடத்தப்பட்டதும் இதில் ஒன்றாகும். தொழிலாளர்கள் தங்களின் மாத கூலியான 59 டாலரிலிருந்து 20 சதவீதம் உயர்வை வலியுறுத்தினார்கள்.

கடந்த வாரம், பணவீக்கத்தை சமாளிப்பதற்காக சம்பள உயர்வை வலியுறுத்தி வடக்கு வியட்நாமிலுள்ள தனியார் காலணி நிறுவனம் ஒன்றில் 5,000 த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்தார்கள். சமீபத்தில், ஊதிய ஒதுக்கீட்டிற்காக நிறுவனம் 800,000 டோங் ($US50) உயர்த்தி இருப்பதாக செய்திஊடகத்திடம் தெரிவித்த Sao Vang Ltd. Co நிறுவனத்தின் ஓர் அதிகாரி, "பணவீக்கம் விண்ணை முட்டுகிறது என்ற உண்மையின் மத்தியில், அவர்கள் என்ன கோருகிறார்கள் என்று புரிந்து கொள்வது மிகவும் கடினமாகவுள்ளது." என்று தெரிவித்தார்.

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தெளிவாக கவலையடைந்துள்ளனர். டிசம்பர் 2006ல் உலக வர்த்தக அமைப்புடன் (WTO) இணைந்த போது வியட்நாம் அளித்த வாக்குறுதியின்படி, முதலாளித்துவ சார்பான "சீர்திருத்த" திட்டங்களை தொடர்வோம் என அன்னிய முதலீட்டாளர்களுக்கு அந்த ஆட்சி மீண்டும் நம்பிக்கை அளிக்க முயன்றிருக்கிறது.

பணவீக்கத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியாக, அந்த அரசாங்கம் மே மாதத்திற்கு முன்னதாக தேசிய பாராளுமன்ற கூட்டத்தில், பொருளாதார வளர்ச்சி இலக்கை 8.5-9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்க இருப்பதாக ஓர் அறிக்கையை அளித்தது. கடந்த வருடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5% ஆக இருந்தது. மே 19ல், கடன்களை கட்டுப்படுத்துவதற்கான ஓர் முயற்சியில், ஸ்டேட் பாங்க் ஆப் வியட்நாம் அடிப்படை வட்டிவீதத்தை 8.75 திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தியதுடன் மற்றும் பணம் வைப்பாளர்களுக்கு 18 சதவீத விகிதமாக உயர்த்த வர்த்தக வங்கிகளுக்கும் அங்கீகாரம் அளித்தது.

அரசாங்கம் "விலை-சந்தை முறையை" தொடர்ந்து பின்பற்றும் என மே 6ல் நிதி மந்திரி வூ வான் நின் (Vu Van Ninh) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எண்ணெய் விலை ஒரு பரலுக்கு 120 டாலருக்கு மேல் இருந்தால், அவற்றுக்கு அரசாங்கம் மானியம் அளிப்பதைத் தொடராது என அவர் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், அதேநேரத்தில், பணவீக்கம் முதலில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என நின் தெரிவித்தார். திட்டமிட்டவாறு, இந்த மாதத்தில் விலை கட்டுப்பாடுகள் நீக்கம் கொண்டு வருவதற்கு பதிலாக, குறைந்தபட்சம் ஜூன் மாத இறுதிவரை 10 அடிப்படை பொருட்களின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் என அவர் அறிவித்தார்.

ஹனாய் சமூக பொருளாதார ஆய்வுத்துறையின் தலைவர் டாக்டர் குயென் மின் போன்ங் (Nguyen Minh Phong) அரசாங்கத்தின் தடுமாற்றத்தை வியட்நாம் நெட் இணைய தளத்தில் விவரித்தார். விலைகளை இந்த மாதம் உயர்த்துவதற்காக நிறுவனங்கள், விலை கட்டுப்பாடுகள் நீக்கத்தை எதிர்நோக்கி இருக்கின்றன என அவர் தெரிவித்தார். மாற்றத்தை தள்ளிப்போடுவது என்பது அதிகரிப்பிற்கான அழுத்தத்தை மாற்றிவிடாது. இந்த ஆண்டு இறுதிவரை அல்லது அடுத்த ஆண்டு வரை அரசாங்கம் இறுதிக்கெடுவை நீடித்தாலும் கூட, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட உடனேயே பாரிய விலையேற்றம் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

வியட்நாம் பொருளாதார ஆய்வு பயிலகத்தின் பொருளாதாரம் மற்றும் நாணய பிரிவிலிருந்து டிரான் டின்ஹ் தெயின் (Tran Dinh Thien), உயர்ந்த பணவீக்க விகிதத்திற்கு சர்வதேச எண்ணெய் விலை, இறக்குமதி செய்யும் பொருள்களில் அதிகரிக்கும் செலவுகள், கால்நடைகள் மற்றும் கோழிப்பண்ணைகளில் ஏற்பட்டிருக்கும் வரட்சி மற்றும் நோய் ஆகியவைகளின் மீது பழி சுமத்தினார். விலையேற்றத்தை பின்னடிப்பது என்பது வெளிநாடுகளிலுள்ள எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களை வறண்டு போக செய்யும் என்பதுடன் கடத்தல் ஒரு முக்கிய பிரச்சனையாக உருவெடுக்கும் என அவர் குறிப்பிட்டார். கூர்மையாகி வரும் சமூகபதட்டங்களை குறித்து கூறுகையில், "வியட்நாமின் பொருளாதார நிலைமைகள் மற்றும் மக்களின் எதிர்ப்புகளை" கையாள அரசாங்கம் கவனமான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பணவீக்க நெருக்கடி இருந்த போதினும், அரசாங்கம் நிறைய முதலீடுகளுக்கு ஊக்கமளிக்க பொறுப்பேற்றுள்ளது. 2007ல், பதிவு செய்யப்பட்ட 21.3 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களில் 8 பில்லியன் டாலர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக திட்டமிடல் மற்றும் முதலீட்டுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டது. இது 2006 இல் 10.2 பில்லியன் டாலராக இருந்ததிலிருந்து மேலும் 4.1 பில்லியன் டாலரால் மிகப் பெரிய உயர்வாக இருந்தது. இந்த ஆண்டு 10 மில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டுவது இலக்காகும். ஆனால் இது அதிகரிக்ககூடும். ஏப்ரலில் மட்டும், இது 1.4 பில்லியன் டாலராக இருந்தது.

தற்போது, வியட்நாமில் 85 பில்லியன் டாலர் பதிவு செய்யப்பட்ட மூலதனத்திலான 8,600 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன மற்றும் அவற்றில் 30 பில்லியன் டாலர் நடைமுறைப்படுத்தப்பட்ட மூலதனமாக உள்ளது. முதலீட்டு அனுமதிகளை மற்றும் நில ஒதுக்கீடுகளை அரசாங்கம் விரைவுபடுத்தி இருக்கிறது என்பதுடன் சாலை மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு திட்டங்களில் அது பணத்தை வாரியிறைத்து வருகிறது. சமீபத்தில் தெற்கு டோங் நேய் (Dong Nai) மாகாணத்தில் இரண்டு கட்டிட திட்டங்கள், அனுமதிக்கப்பட்ட வெறும் ஐந்து நாட்களில் தரையைத் தோண்ட ஆரம்பித்தன.

தனியார் முதலீட்டின் வளர்ச்சி பணவீக்கத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் சர்வதேச அரிசி விலைகள் 80 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் 2001 லிருந்து 2007 வரை விரைவான வேகத்தில் அன்னிய நாட்டு முதலீட்டு திட்டங்களானது, 500,000 ஹெக்டர் விவசாய நிலங்களை நகரமயமாக்கலுக்கு அல்லது தொழில்துறை பயன்பாட்டிற்கான மாற்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரிசி உற்பத்தியை இழந்த நிலத்தின் அளவு நாட்டின் மொத்த அரிசி ஏற்றுமதியின் அளவிற்கு சமமாகும் என விவசாயத்துறை மந்திரி Cao Duc Phat தெரிவித்தார். "ஏற்றுமதிக்காக நம்மிடம் உபரி அரிசி இருக்காது என்பதையே இது குறிக்கிறது என்பதுடன் நீண்டகால அடிப்படையில், நாட்டின் அரிசி கையிருப்பும் அபாயத்தில் தள்ளப்படும்." என அவர் எச்சரித்தார்.

அரசாங்கம் அதன் தொழிற்சட்டங்களை கடுமையாக்கி இருப்பதன் மூலம் சட்டவிரோத போராட்டங்களின் அதிகரிப்பிற்கு பிரதிபலிப்பை காட்டியிருக்கிறது. போராட்டங்களால் ஏற்பட்ட நஷ்டங்களுக்காக தொழிற்சங்கங்கள் அல்லது தொழிலாளர் பிரதிநிதிகளிடம் இழப்பீடு கோரி தனியார் தொழில்வழங்குனர்கள் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடர அனுமதிக்கும் Decree Number 11 சட்டத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தி இருக்கிறது.

பாரம்பரியப்படி, ஆட்சிக்கான ஆதரவை உறுதிப்படுத்த மட்டுமே உயர்ந்த ஊதியங்கள் வழங்கப்பட்டு வரும் அரசுத்துறை நிறுவனங்களிலும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை அரசாங்கம் முகங்கொடுக்க இருக்கிறது. அரசுத்துறை சிமெண்ட் ஆலைகளில், மாத சம்பளம் 200 முதல் 250 டாலராகும், இதுவே காகித உற்பத்தி ஆலைகளில் 120 முதல் 180 டாலராகும். எவ்வாறிருப்பினும், அரசுத்துறை நிறுவனங்களில் எவ்வித ஊதிய உயர்விற்கும் அரசாங்கம் ஒத்துக் கொண்டால், அது அன்னிய முதலீட்டை ஈர்க்கும் அரசாங்கத்தின் திறமையைக் குழி தோண்டி புதைத்து விட்டு தனியார்துறையில் அழுத்தத்தைக் கூட்டும்.

வியட்நாம் சீனாவின் போட்டி அழுத்தங்களின் கீழ் இருக்கிறது. வியட்நாமை பற்றிய ஸ்காட்லாந் ராயல் வங்கியின் ஓர் அறிக்கையில்: மற்றெதுவுமில்லாமல், வியட்நாமில் இருக்கும் குறைந்த கூலி விகிதங்கள் (ஒரு மணி நேரத்திற்கு 1.06 டாலர் என்ற சீனாவின் அளவுடன் ஒப்பிட்டால் வியட்நாமில் 50-60 சென்ட்) சீனாவின் "பரப்பளவின் சாதகமான தன்மைகளுக்கு" இணையாகாது என முதலீட்டாளர்களை சீனா எச்சரித்தது. 84 மில்லியன் மக்கள்தொகையை கொண்ட வியட்நாமின் மக்கள்தொகை சீனாவின் குவான்ங்டோங் (Guangdong) மாகாண மக்கள்தொகையை விட குறைவாகும் என்றும் அது குறிப்பிட்டது. பல நிறுவனங்கள், சீனாவின் கரையோர நகரங்களின் உயர் கூலிவிகிதத்தை சமாளிக்க, வியட்நாமிற்கு மாறாமல் சீனாவின் உள்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வந்தன என அவ்வறிக்கை குறிப்பிட்டது.

வியட்நாமிலுள்ள ஸ்ராலினிச ஆட்சி அதன் வளர்ந்து வரும் பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க ஒரேயொரு வழியைத்தான் கொண்டிருக்கிறது, அதாவது: சுமையை உழைக்கும் மக்களின் தலையில் சுமத்துவதுடன், அமைதியின்மை, போராட்டம் மற்றும் எதிர்ப்புகளை உடைக்க அரசு போலீஸ் இயந்திரத்தை பயன்படுத்துவது என்பதேயாகும்.