World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்ா

Fuel protests sweep across Europe

ஐரோப்பா முழுவதும் எரிபொருளுக்கான போராட்டங்கள் வலுக்கின்றன

By Carlos Alejandro and Paul Mitchel
11 June 200
8

Use this version to print | Send this link by email | Email the author

எரிபொருள் விலையுயர்வை எதிர்த்து சமீபத்தில் ஸ்பெயினில் எழுந்த போராட்ட அலைகள் பிரான்ஸ் மற்றும் போர்த்துக்கலிலும் பரவியுள்ளது.

ஓராண்டுக்கு முன்னர் லிட்டருக்கு 0.95 யூரோவாக இருந்த டீசல் விலை லிட்டருக்கு 1.30 யூரோவாக உயர்ந்துள்ளது, மற்ற ஐரோப்பிய நாடுகளின் விலைகள் அதிகபட்சமாக 1.50 யூரோவாக (இது ஒரு கலனுக்கு 9 அமெரிக்க டாலராகும்) உள்ளது. சமீபத்திய நாட்களில், எண்ணெய் விலைகள் சாதனையளவாக ஒரு பரலுக்கு 139 அமெரிக்க டாலரை எட்டியது. அடுத்த ஆண்டு இவ்விலை 200 அமெரிக்க டாலரை தொடலாம் என முதலீட்டு வங்கியான Goldman Sachs தெரிவிக்கிறது.

திங்களன்று, 70,000 லாரி சாரதிகளை கொண்டிருக்கும் போக்குவரத்து அமைப்புகளுக்கான தேசிய ஸ்பானிஷ் கூட்டமைப்பு, கடந்த வாரம் வேலைநிறுத்தத்தில் இறங்கிய போக்குவரத்து துறையின் பாதுகாப்பிற்கான அமைப்பின் உறுப்பினர்களுடன் ஒரு காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது. வணிக போக்குவரத்திற்கான ஸ்பானிஷ் கூட்டமைப்பு (CETM) இந்த வேலைநிறுத்தத்தில் சேரவில்லை. ஸ்பெயினிலுள்ள பெருமளவிலான சாரதிகள் சுய தொழில் செய்பவர்களாகவும் அல்லது சிறிய மற்றும் மத்திய தர நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களாகவும் உள்ளனர்.

ஸ்பானிஷ் சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE) அரசாங்கம் போக்குவரத்து சேவைகளுக்கான ஒரு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கவும், எண்ணெய் விலையுயர்வுக்கு ஏற்ப ஒப்பந்தங்களை மாற்றி அமைக்கவும் மற்றும் எண்ணெய் வரியை குறைக்கவும் தவறினால் இந்த வேலைநிறுத்தம் நாட்டை ஸ்தம்பிக்கச் செய்யும் என லாரி சாரதிகளின் தலைவர்கள் எச்சரித்தனர்.

"இந்த நாடு தொடர்ந்து செயல்பட பொருட்களை நகர்த்தும் நாங்கள் தேவைப்படுகிறோம்," என போக்குவரத்து அமைப்புகளுக்கான தேசிய ஸ்பானிஷ் கூட்டமைப்பு தலைவர் ஜூலியோ வில்லஸ்குசா தெரிவித்தார். "எரிபொருள் வாங்குவதற்கு எங்களிடம் பணம் இல்லாமல் நாங்கள் நிறுத்திக் கொண்டோமேயானால், நாடு இயங்குவதும் நின்றுவிடும்." என அவர் தெரிவித்தார்.

''ஏற்கனவே பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள'' நடவடிக்கைகளை முன்மொழிவதாக கடந்த திங்களன்று முறிவடைந்த பேச்சுவார்த்தையின் பின்னர் வில்லஸ்குசா அரசாங்கத்தை குற்றஞ்சாட்டினார். வயதான லாரி ஓட்டுனர்கள் ஓய்வு பெறுவதை ஊக்குவிக்க லாரி ஓட்டுனர்களுக்கான அவசரகால கடன்கள், வளைந்துகொடுக்ககூடிய ஒப்பந்தங்கள் மற்றும் ரொக்க தொகைகளை பிரதம மந்திரி ஜோசே லூயிஸ் ரொட்றிகஸ் ஸபடேரோ வழங்கியுள்ளார். எரிபொருள் விலையுயர்வால் கொண்டு வரப்பட்டிருக்கும் பிரச்சனைகளை அரசாங்கம் "உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்", ஆனால் "அவர்களுக்கென கடமையும் இருப்பதால், அவர்கள் இந்த வேலைநிறுத்த நடவடிக்கையின் விளைவுகளை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்." என ஸபடேரோ தெரிவித்தார்.

ஒரு சிறு ஸ்பானிஷ் நிறுவனத்தில் பணியாற்றும் பிரிட்டிஷ் ஓட்டுனர் ஒருவரின் இணைத்தள பதிவு குறிப்பிடுவதாவது: "எங்களின் நடவடிக்கைக்கு ஐரோப்பாவில் பலர் உடன்படாத போதினும், உடனடியாக ஏதாவது மாற்றம் ஏற்படாத நிலையில் எங்களால் தொடர முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டில் எரிபொருள் விலைகள் 20 சதவீதத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறது, ஆனால் அளிக்கப்படும் கூலி உயர்த்தப்படவில்லை. நான் பணியாற்றும் நிறுவனம் சர்வதேச அளவில் வெறும் மூன்று லாரிகளை மட்டுமே இயக்குகிறது, அவற்றிற்கு எரிபொருள் நிரப்ப தற்போது அண்ணளவாக 2,000 யூரோ செலவாகிறது, ஓர் ஆண்டுக்கு முன்னால் 1,470 யூரோ செலவானது."

தாங்கள் பிரச்சனையை தீர்க்க முயன்று வருவதாக [ஐரோப்பிய ஒன்றியத்தின்] புரூஸ்ஸெல்ஸ் மற்றும் மட்ரிட் அரசாங்கங்களிடமிருந்து நாங்கள் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். காலம் கடந்துவிட்டது என்பது தான் இப்போதைய பிரச்சனை, இந்நிலையில் அவர்கள் ஆறு இலக்க சம்பளத்துடன் செளகரியமாக உட்கார்ந்து கொண்டு நாங்கள் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று எங்களுக்கு கூறி வருகிறார்கள்."

ஸ்பெயின் மற்றும் பிரான்சுக்கு இடையே எல்லையை கடக்கும் முக்கிய இடத்தில் பல மைல் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர்கள் போராட்டம், மட்ரிட் மற்றும் பார்சிலோனா உட்பட பல நகரங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன, பல நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையில் இயங்குகின்றன. திங்களன்று மாலைக்கு முன்னதாகவே தலைநகரின் 15 சதவீத விற்பனை நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டது என மட்ரிட் எண்ணெய் நிலைய உரிமையாளர்கள் அமைப்பின் தலைவர் அண்டோனியோ ஓனிவா தெரிவிக்கிறார். தமது 1,714 நிலையங்களில் 40 சதவீத நிலையங்களை மூட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக கட்டலோனியாவின் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் மேனுவல் அமடோ தெரிவித்தார். தலைநகருக்கு உணவுபொருட்கள் வினியோகிக்கும் முக்கிய உணவுபொருட்கள் சந்தையான மெர்கமேட்ரிட் உட்பட, மொத்த விற்பனை சந்தைகளை அணுக முடியாமல் லாரி ஓட்டுனர்கள் முற்றுகையிட்டுள்ளதால், இந்த வேலைநிறுத்தம் உணவு வினியோகத்தையும் பாதிக்க தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்கள் நெருக்கமாக, தீவிர பொருளாதார சரிவுக்கு ஒத்திசைவாக உயர்ந்து வரும் எரிபொருள் விலைகளால், குறிப்பாக ஸ்பெயின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி காலங்களில் முக்கியமாக தங்கியிருந்த குடியிருப்பு கட்டுமானத்துறையும் அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 3.8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 1.8 சதவீதமாக வீழ்ச்சியுறும் (அபிவிருத்தியடைந்த நாடுகளின் மத்தியில் இதுவொரு மிக பெரிய வீழ்ச்சியாகும்) என்றும், பணவீக்கம் 4 சதவீதமாக உயரும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மிக சமீபத்திய கணிப்பு தெரிவிக்கிறது. "பெருநிறுவன மற்றும் வீட்டு கடன்கள் சாதனை அளவை எட்டிவிட்டன.... போதியளவிலான குறைந்த வட்டி கடன்கள் கிடைப்பதில்லை, தீவிர திருத்தம் தேவைப்படுகிறது." என ஐரோப்பிய பொருளாதார முன்கணிப்பு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

கடந்த சில வாரங்களில் ஐரோப்பாவில் நடந்த பல போராட்டங்களில் ஸ்பெயின் லாரி ஓட்டுனர்கள் போராட்டமும் ஒன்று. மே 28ல், சோஃபியாவின் நகர்புற எல்லையில் 150 லாரி மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் ஓர் ஊர்வலத்திற்காக ஒருங்கிணைந்த போது, பல்கேரியாவிலும் எரிபொருளுக்கான போராட்டம் நடந்தது. ஜூன் ஆரம்பத்தில், இத்தாலிய மற்றும் ஸ்பேனிய மீனவர்கள் போராட்டத்தில் இறங்கினர் மற்றும் சேபோ துறைமுகத்தில் கப்பல்கள் மற்றும் படகுகளை வெளியேற விடாமல் தடுத்து பிரெஞ்சு மீனவர்களும் முற்றுகையிட்டனர்.

பிரெஞ்சு லாரி ஓட்டுனர்களும் அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். திங்களன்று காலையில், போர்தோவுக்குச் செல்லும் நான்கு முக்கிய வாகனவழிகளில் சுமார் 200 லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசை ஏற்பட்டது. தொழிற்சங்க அதிகாரி ஜீன்-கிளாட் பெர்ரண் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்களிடம் வேறெந்த தீர்வும் இல்லை. இனி எங்களால் டீசல் வாங்க முடியாது. அவ்வளவு தான்." என தெரிவித்தார்.

எரிபொருள் விலையுயர்வின் விளைவுக்கு எதிராக "நாங்கள் உடனடி நடவடிக்கைகளை கோருகிறோம்" என அக்கிட்டைன் பிராந்தியத்தின் லாரிகளுக்கான ஐரோப்பிய அமைப்பின் தலைவர் ஜோன்-பியர் மோர்லன் தெரிவித்தார்.

ஸ்பெயினின் அண்டைநாடான போர்த்துக்கலின் ஓட்டுனர்கள் பல ஆலைகளின் நுழைவாயில்களை மூடியதுடன், நாட்டை "ஸ்தம்பிக்க" செய்யவும் அச்சுறுத்தியுள்ளனர். தொழிற்துறை புள்ளிவிபரங்களின்படி, போர்த்துகலில் 5,000 நிறுவனங்களுக்கு சுமார் 40,000 ஓட்டுனர்கள் பணிபுரிகின்றனர். இத்தாலியில், தாம் மேலும் பல இடைநிறுத்தங்களை ஆராய்ந்து வருவதாக ஏழு இத்தாலிய ஓட்டுனர்கள் சங்கங்களில் கூட்டமைப்பான கான்ஃப்டிரன்ஸ்போர்டோ தெரிவித்தது. கடந்த டிசம்பரில், இத்தாலிய லாரி ஓட்டுனர்கள் நடத்திய நாடு தழுவிய மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தால் இத்தாலியை ஸ்தம்பிக்க செய்தார்கள். அது பல பெட்ரோல் நிலையங்களை வற்றி போக செய்ததுடன், இத்தாலியின் மிகப் பெரிய உற்பத்தி நிறுவனமான பியட்டின் உற்பத்தியையும் அது பாதித்தது.

கடந்த சில வாரங்களில், உயர்ந்து வரும் எரிபொருள் விலையுயர்வுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை இங்கிலாந்தும் சந்தித்தது. லண்டனில் லாரி ஓட்டுனர்களால் "மெதுவாக-செல்லும்" ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஜூன் 5ல், 500 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் தெருவில் இறங்கிய போது மான்செஸ்டர் ஸ்தம்பித்தது, மேலும் இந்த வாரம் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விலையைக் குறைக்க North Sea எண்ணெய் நிறுவனத்தின் மீது 1 பில்லியன் யூரோ இலாபவரி விதிக்குமாறு வற்புறுத்தி ஓட்டுனர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த போக்குவரத்து துறை நிறுவனமான புல்லட் எக்ஸ்பிரஸின் மேலாண்மை இயக்குனர் டேவிட் மெக்கட்சியன், ஒவ்வொரு வாரமும் இது மீண்டும் நடத்துப்படும் எனவும், ஒரு முழுவேலைநிறுத்தம் சாத்தியமானது என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, "உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் மிகவும் சுமையாக உள்ளன, ஒட்டுமொத்த வியாபாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் இது பெரியளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது... நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், ஸ்காட்லாந்து ஒரே நாளில் முடங்கிவிடும்." என அவர் தெரிவித்தார்.

2000ம் ஆண்டில், ஒரு பரலுக்கு 34 டாலராக இருந்த போதே எரிபொருளுக்கான போராட்டங்கள் நடந்த Shell இன் ஸ்டேன்லோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் முன் சுமார் 150 ஆர்ப்பாட்டக்கார்கள் அணிதிரண்டனர். இந்த போராட்டத்தின் போது, பெட்ரோல் நிலையங்களில் எண்ணெய் பற்றாக்குறையாகி, பாரிய அங்காடிகளில் அடுக்குகளும் காலியாக்கப்பட்டன. பின்னர் அப்போதைய பிரதம மந்திரி டோனி பிளேயர் அவசரகால அதிகாரங்களை பிரகடனப்படுத்தி இராணுவ டாங்கிகளை மாற்றாக நிறுத்தி, மருத்துவமனைகளை விஷேட அவசரகால நிலைமையில் வைத்திருந்தார்.

மேலும் மேலும் உயர்ந்து வரும் எரிபொருள் விலையுயர்வுகள் மற்றும் இலையுதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள எண்ணெய் வரி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக ஜூன் 22ஐ போராட்டத்திற்கான ஒரு தேசிய நாளாக அறிவிக்க ஓர் இணைய தள பிரச்சாரம் அழைப்பு விடுத்திருக்கிறது.

சிறு படகுகளும் வேலைநிறுத்தத்தில் சேர்ந்து கொண்டிருக்கின்றன என்ற அறிக்கையுடன் ஸ்பெயின் மீனவர்களின் வேலைநிறுத்தம் இரண்டாம் வாரத்தில் நுழைந்திருப்பதை தொடர்ந்து இந்த போக்குவரத்துத்துறை வேலைநிறுத்தம் வந்திருக்கிறது. கப்பல் டீசல் விலைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 320 சதவீதமும், ஜனவரியிலிருந்து 30 சதவீதத்திற்கு மேலும் உயர்ந்து கொண்டிருக்கையில், நிறைய மீனவர்கள் தங்களின் படகை பயன்படுத்தமுடியாமலும், தாங்கள் திவாலாகி எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இத்தாலி மற்றும் பிரான்சிலுள்ள மீனவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுடன் ஐரோப்பிய ஒன்றியம் இந்த பிரச்சனைகளை விரைவில் தீர்க்கவில்லையென்றால் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த வாரம், ஸ்பெயின், பிரான்சு மற்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த 5,000 த்திற்கு நெருக்கமான மீனவர்கள், மட்ரிட்டில், "மலிவான மீன்கள், விலையுயர்ந்த டீசல்: தொடர்ந்து ஊக வியாபாரம் வேண்டாம்." என்று வாசகமிட்ட பாதகைகளை ஏந்தி, விவசாயதுறை அமைச்சகத்திற்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக புரூஸ்ஸெல்ஸில் நடந்த ஆர்பாட்டங்களை தொடர்ந்து இந்த போராட்டம் நடந்தது. அதில் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன, கார்கள் புரட்டி போடப்பட்டன.

"அழைப்பு முற்றாக வெற்றிபெற்றது. ஒட்டுமொத்த ஸ்பானிய கடற்கரையும் முடங்கி கிடக்கிறது." என பார்சிலோனாவின் மீன்வளத்துறை செய்திதொடர்பாளர் ஜோஸ் கபாரோஸ் தெரிவித்தார். தற்போது, துறைமுகங்களை முற்றுகையிடவும், ஏற்றுமதியை நிறுத்தவும் திட்டங்கள் உள்ளன. "திங்கள் முதல் அனைத்து குளிர்பதன சரக்கு பெட்டகங்களையும், அவற்றிற்குள் இருப்பவைகளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரவிருக்கிறோம்." என 27 வயது மீனவரான டேவிட் லோம்பா தெரிவித்தார். மீனவர்கள் அதை எவ்வாறு செய்வார்கள் என ஒரு பத்திரிகையாளரால் கேட்கப்பட்ட போது, "ஒவ்வொரு வகையிலும் சாத்தியமே. அவைகள் கடந்து செல்ல முடியாது." என லோம்பா தெரிவித்தார்.

20,000 தொழிலாளர்களை பணியில் நியமித்திருக்கும் 1,400 மீன் பிடிக்கும் நிறுவனங்களை கொண்டிருக்கும் ஸ்பானிய மீன்பிடிப்பாளர் கூட்டமைப்பு (SFC), அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. ஸ்பானிய மீன்பிடிப்பாளர் கூட்டமைப்பின் பொது செயலாளர் ஜேவியர் கேவட் கூறுகையில், "இது கடந்த 100 ஆண்டுகளில் இத்தொழில்துறையில் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான நெருக்கடியாகும். எரிபொருள் விலைகளை குறைக்க வரி குறைப்புகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட மானியங்களுக்கான அரசாங்க நடவடிக்கைகள் உட்பட, குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால முறைமைகளுடன் செயல்படுத்தக் கூடிய திட்டத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்."

இந்த வேலைநிறுத்தத்தால் ஜூன் 16க்குள் புதிதாக பிடிக்கப்பட்ட மற்றும் குளிர்பதனம் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தும் தீர்ந்து போய்விடும் என கேவட் தெரிவித்தார். மேலும் அவர், "அதற்குபின் மக்களுக்கு கிடைக்காது... அடுத்த 15-20 நாட்களுக்கு ஐரோப்பிய கப்பற்தொழில் கட்டுப்பட்டு கிடக்கும் என நான் நினைக்கிறேன்." என்றார்.

ஸ்பானிய மீன்பிடி தொழில்துறை தீவிர மறுகட்டமைப்பின் கீழ் சென்று கொண்டிருக்கிறது, தலைமுறை தலைமுறையாக மீன்பிடித்து வந்த பல குடும்பங்கள் தங்களின் தொழிலை விட்டிருக்கின்றன. இருந்த போதினும், ஐரோப்பாவில் அதுவே மிக பெரிய மின்பிடி தளமாக இருக்கிறது என்பதுடன் ஸ்பெயினின் ஏழை பகுதிகள், குறிப்பாக கலீசியா (ஸ்பெயின் மீன்பிடி தொழிலில் இப்பகுதி 47 சதவீதம் பங்களிக்கிறது), அண்டலுசியா, பாசிக் நாடு மற்றும் கனாரி தீவுகள் அனைத்தும் இத்தொழில்துறையையே முக்கியமாக சார்ந்திருக்கின்றன.

முதன்மையாக ஊக வாணிபத்தால் எரிபொருள் விலைகள் அதிமட்ட அளவை நோக்கி உந்தப்பட்டு வரும் நிலையில், ஐரோப்பா முழுவதிலுமான ஒரேமாதிரியான உயர்ந்த எரிபொருள் வரிகளை வரைமுறைப்படுத்தும் கொள்கை இதை இன்னும் மோசமாக்கி வருகிறது. வியாபாரங்கள் மற்றும் அதிகளவில் சம்பாதிப்பவர்களுக்கு நிதியியல் வரி வெட்டுக்கள் அளிக்கும் பொது கொள்கையின் ஒரு பகுதியாக உயர் வரிவிதிப்புகள் இருக்கின்றன. இதனால் ஏழை மக்களைக் கடுமையாக பாதிக்கும் வகையில், இது பொருட்கள் மற்றும் சேவைகளின் விற்பனையில் மறைமுகமாக வரி விதிக்கிறது. எரிபொருளை பொறுத்த வரை, தொழில்துறையின் பிரிவுகளை அச்சுறுத்துவதுடன், குறிப்பாக பொருட்களின் போக்குவரத்துதுறை உட்பட அது திவாலாக்க முனைகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய மாகாண மற்றும் அரசாங்க தலைவர்கள் ஜூன் 19 மற்றும் 20ல் புரூஸ்ஸெல்சில் ஒன்று கூட இருக்கிறார்கள். மேலும் வரி வெட்டுகள் உட்பட, பல கொள்கை முடிவுகளை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய பொருளாதாரத்தை பாதுகாக்க வரி வெட்டுக்காக பிரெஞ்சு ஜனாதிபதி நிகோலா சார்க்கோசி வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருக்கிறார். "எண்ணெய் சந்தையில் இருக்கும் சூழ்நிலையால்" ஐரோப்பிய மற்றும் சர்வதேச பொருளாதாரம் "ஒரு அதிர்ச்சியூட்டும் முன்னொருபோதுமில்லாத அழுத்தத்தை" சந்திக்கும் என அவர் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார். "என்னுடைய ஐரோப்பிய கொள்கை என்னவென்றால் ஐரோப்பா பாதுகாக்கப்பட வேண்டும்," என்ற அவர் தொடர்ந்து, விலைகளை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பு கூட்டு வரிகளை (vat) குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

எவ்வாறிருப்பினும், பிற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடமிருந்தும் சார்க்கோசி சிறிதளவு ஆதரவையே பெற்றார். ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் எதிராக குறிப்பிடுகையில், "நிலைமை ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வகையில் இருப்பதாக நான் உணர்கிறேன்." என்றார். நிதி நடவடிக்கைகள் "தவறான குறிப்புகளை அனுப்பும்" என மற்ற அரசாங்க மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். "எவ்வகை மானியங்களும், வரி வெட்டுக்களும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கே பெருமளவிலான பணத்தை திசை திருப்பும்." என ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் நாணயத்துறை ஆணைக்குழுவின் ஜொக்கன் அல்முனியா தெரிவித்தார்.

தற்காலிக உதவிகள் கோரி, மீன்பிடி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அரசாங்கங்கள் அனுப்பிய மனுக்களை நிராகரித்த ஐரோப்பிய ஆணைக்குழு, சிறப்பு இன மீன்கள் மற்றும் குறிப்பாக அளவுக்கதிகமாய் மீன்பிடிப்பதற்கான அபாயமுள்ள பகுதிகளில் மீன்பிடிக்கும் அளவை 25 சதவீதத்திற்கும் மேல் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேற்கொண்டும் அளிக்கப்படும் எரிபொருள் மானியங்கள் (தற்போது US$7,000 ஆகவுள்ள) அளவுக்கதிகமான பற்றாக்குறையை இருக்கும்போது, இது இன்னும் மேலதிக சேமிப்புகளை பாதிக்கும் என ஐரோப்பிய மீன்பிடித்துறை ஆளுனர் ஜோ போர்க் தெரிவித்தார்.