World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Populism and plutocracy: Obama speaks to the Wall Street Journal

ஜனரஞ்சக வாதமும் சிறு தன்னலக் குழுவும் : ஒபாமா வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் உரையாடுகிறார்

By Patrick Martin
19 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

பெருவணிகத்தின் ஆதார செய்தி ஏடான வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாயன்று பராக் ஒபாமாவுடன் நடத்திய பேட்டி ஒன்றை வெளியிட்டது; இது 2008 பிரச்சாரத்தில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கையாளும் தந்திரமான இரட்டை விளையாட்டை பற்றிய ஒரு பார்வையை கொடுக்கிறது. மில்லியன் கணக்கான தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள பொருளாதார கஷ்டங்களை பற்றி மக்களை ஈர்க்கும் வனப்புரை கூறுவதுடன் தங்கள் நலன்களைக் காக்க ஒபாமா நிர்வாகத்தை அமெரிக்க மில்லியனர்கள் நம்பலாம் என்ற உறுதி மொழிகளையும் அவர் இணைத்துக் காட்ட முயல்கிறார்.

ஜேர்னலில் நிருபர்களுடன் திங்களன்று தன்னுடைய பிரச்சார பஸ்ஸில் ஒபாமா பேசினார்; இது அவர் மிச்சிகனில் பல இடங்களுக்கும் சென்றிருந்தபோது, பிளின்ட்டில் இருந்து டெட்ரோயிட்டிற்கு செல்லும் நகர்ப்புறப் பகுதிகளில் செல்லும்போது கொடுக்கப்பட்ட பேட்டியாகும்; ஒரு காலத்தில் அமெரிக்க கார்த் தொழிலில் இதயத்தானமாக இப்பகுதி இருந்தது. "போட்டித்தன்மை நிறைந்த செயற்பட்டியல்" பற்றிய தன்னுடைய பொருளாதாரத் திட்டத்தை பிளின்டில் நடந்த கூட்டம் ஒன்றில் அவர் பேசியதற்கு பின்னர் இப்பேட்டி கொடுக்கப்பட்டது; அதற்கு முன் டெட்ராயிட்டில் ஜோ லூயி அரினாவில் மிகப் பெரிய அணிவகுப்பு ஒன்று நடந்தது.

பொருளாதார பிரச்சினைகளுக்கு ஒபாமாவின் அணுகுமுறையின் சாரம், அவருடைய வேட்பு தன்மையிலேயே முழுமையாக இருந்ததுபோல், சமரசத்திற்கு உட்படுத்த முடியாததை சமரசப்படுத்தி காட்டும் முயற்சியாகும். வேலை இல்லாதவர்களின் நிலைமை பற்றி அவர் பரிவுணர்வை வெளிப்படுத்துகிறார்; அதே போல் சுகாதாரப் பாதுகாப்பு அற்றவர்கள், அதிகம் பெட்ரோலுக்கு பணம் கொடுப்பவர்கள் என்று பரிவுணர்வு காட்டுகிறார்; அதே நேரத்தில் இத்தகைய நிலைமையை தோற்றுவிக்கக் காரணமாக இருக்கும் நிதிய ஒட்டுண்ணிகள் பற்றி அவர் சிறிதும் விரோத உணர்வு காட்டிப் பேசவில்லை.

அமெரிக்காவில் பழைய தொழில் மையங்களின் சரிவு பற்றி ஜேர்னலுடன் விவாதிக்கையில் ஒபாமா, அமெரிக்க சமூகத்தின்மீது பூகோளமயமாக்கலின் தாக்கம் பற்றி அப்பட்டமான விளக்கத்தை கொடுத்தார்: "உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஒரு தேசிய பொருளாதாரத்தில் இருந்து நாம் உண்மையிலேயே உலகப் பொருளாதாரம் என்ற பெரும் மாற்றத்திற்கு செல்லுகிறோம்; இதில் நாம் உலகில் ஒவ்வொரு மூலையில் இருந்தும் போட்டியை எதிர்கொள்கிறோம்."

"பூகோளமயமாக்கல், தொழில்நுட்பம், தானியக்கம் ஆகியவை இணைவு தொழிலாளர்களின் நிலைமையை வலுவிழக்கச் செய்துள்ளது. இத்துடன் தொழிற்சங்க எதிர்ப்பு உணர்வையும் நான் பட்டியலில் சேர்ந்துக் கொள்வேன். இவை அனைத்தும் தொழிலாளர்களின் நிலைமையை குறிப்பாக நீலக் காலர் தொழிலாளர்களை பலவீனமாக்குகின்றன; பொருளாதாரத்திலும், சில வரலாற்றளவிலுமாக. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவும், ஜப்பானும் சிதைக்கப்பட்ட நிலையில் நாம் ஒரு சிறப்பான நிலையில் இருந்தோம். மாவோ தலைமையில் சீனா எத்தொடர்பும் அற்று இருந்தது. எனவே அப்பொழுது நமக்கு அதிகம் போட்டி இல்லை; இப்பொழுது மற்ற நாடுகள் எழுச்சி பெற்று வருகின்றன; பணியில் தானியக்க முறை அதிகம் வந்துவிட்டது; முன்பு மத்தியதர வர்க்க தொழிலாளர்கள் இதைச் செய்து வந்தனர்" என்று அவர் தொடர்ந்து கூறினார்.

கடந்த இரு தசாப்தங்களில் --கிளின்டன் மற்றும் புஷ் நிர்வாகத்தின் கீழ்-- பொருளாதார சமத்துவமற்ற நிலை வளர்ந்துள்ளது பற்றி ஒபாமா குறிப்பிட்டார்; இது உற்பத்தி அதிகமானால் வாழ்க்கைத்தரம் மொத்தத்தில் உயர்த்தப்படும் என்ற கூற்றை எதிர்த்து நிற்கிறது என்று அவர் குறிப்பிட்டார். "உற்பத்தி உயர்ந்தது, ஆனால் பெருவணிக இலாபங்கள் உயர்ந்ததைத்தான் பார்த்தோம்; சராசரிக் குடும்பங்களுக்கு பலன் இல்லை, சரிந்த ஊதியங்கள் என்பதைத்தான் பார்த்தோம்" என்றார் அவர்.

அந்த காரணத்தால் செல்வப் பகிர்வை மாற்றுவதற்குப் பொருளாதார வாழ்வில் ஏதேனும் அரசாங்கத் தலையீடு தேவை என்று அவர் விளக்கினார். "உண்பதை வளர்ப்பதற்கு தக்க கவனம் செலுத்துவது என்பது மிகவும் முக்கியம்; இது அவசியமானது என்பது மட்டும் இன்றி, உண்பது எப்படி துண்டு போடப்பட்டு கொடுக்கப்படுகிறது என்பதும் முக்கியம். நியாயமான பங்கீடு மற்றும் உறுதியான பொருளாதார வளர்ச்சி என்பவை ஒன்றுக்கு ஒன்று விலக்குபவை என்று நான் ஒன்றும் நம்பவில்லை."

இந்தத் தலைமுறையில் ஒரு பிரச்சாரத்தில் செல்வப் பங்கீடு பிரச்சினையை எழுப்பும் முதல் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா ஆவார். ஆனால் ஜேர்னலில் வெளிவந்துள்ள கட்டுரை அவரை ஒரு ஆபத்தான முற்போக்குவாதி எனச் சித்தரிக்கவில்லை ஆனால் பெருவணிக அமெரிக்காவிற்கு வரிகளை குறைக்க தூண்டப்படக்கூடிய நட்புத் திறன் படைத்தவர் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளரின் கொள்கையை கட்டுரை சுருக்கிக் கூறுகிறது: "செனட்டர் பாரக் ஒபாமா நாட்டிற்கு தன்னுடைய பொருளாதாரத் திட்டங்கள் பற்றி புதிய பார்வையைக் கொடுக்கும் வகையில் தான் வளர்ச்சியை பெருக்குவதற்கு அதிக அரசாங்க செலவை மேற்கொள்ளுவதை நம்புவதாக கூறினார்; அமெரிக்க பொருளாதாரத்தில் வெற்றி பெறுபவர்களுக்கும் இழப்பவர்களுக்கும் இடையே உள்ள பரந்த இடைவெளியை குறைக்கும் வகையில் வரிவிதிப்பு பயன்படுத்தப்படும் என்றும் ஒருவேளை பெருநிறுவன வட்டி விகிதத்தில் குறைவிற்கு ஆதரவு இருக்கக்கூடும் என்றும் கூறினார்."

தன்னுடைய கொள்கைகளை பல முறையும் வணிக நட்பு உடையதாக அளித்து ஒபாமா கூட்டாட்சி அரசாங்கத்தின் விரிவாக்கம் அதிகமாக ஏதும் இராது என்றும் கூறினார்: "அரசாங்கத்தின் அளவுடன் திறமையை சமன்செய்தல் எப்பொழுதும் ஆபத்துத்தான்; நான் அவ்வாறு செய்வதில்லை. பெரிய அரசாங்கம் வேண்டும் என்று நான் நினைக்கவில்லை; ஆனால் அறிவார்ந்த முன்னுரிமைகளை சரியாக வைக்கும் அரசாங்கம் வேண்டும்; வரிப்பணத்தில் கிடைக்கும் டாலர்கள் கெட்டிக்காரத்தனமாக செலவழிக்கப்பட வேணேடும், வரிக்கொள்கைகள் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் கட்டமைக்கப்பட வேண்டும்."

புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் செல்வந்தர்பால் முற்றிலும் சார்பு உடையதாக இருந்த நிலையில் பலன்களுக்கு மாற்றாக இருந்தது, பெருநிறுவன உயரடுக்கின் நீண்ட கால நலன்களுக்கு உகந்ததாக இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

"சிலர் கூறுவது போல் வெற்றியடைபவர் பொருளாதாரத்தின் அனைத்து நலன்களையும் எடுத்துக் கொள்ளட்டும் என்றால் அதிக பயிற்சியுடைய, அதிகம் படித்தவர்கள் மிக அதிக வெகுமதியை அடைவர் பயிற்சியற்றவர்கள், ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் பொருளாதாரத்தில் மிகக் குறைந்த பங்கை அடைவர் என்றால் பின் நம்முடைய வரிக் கொள்கைகள் சுகாதாரப் பாதுகாப்பு கொடுப்பதின்மூலம் பாதிப்பு உற்றவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் வகையில் உதவலாம்." என்று அவர் கூறினார். "மக்கள் வேலைகளை இழந்தால் அவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பும் இல்லாமல் போய்விடாது. இது உண்மையில் வளைந்து கொடுக்கும் தன்மை உடைய தொழிலாளர் தொகுப்பை கொடுக்கும்; அவர்களும் பல அலுவல்களுக்கு செல்ல முடியும், மாறுதல்களுக்கு குறைவாகவே எதிர்ப்பைக் காட்டுவர்."

இந்த அசாதாரண அறிவிப்பு நன்கு கவனிக்கப்பட வேண்டும். மக்கள் வேலை இழப்பது பற்றியோ தேசிய வருமானத்தின் பங்கு குறைந்த மத்திய தர வருமானம் உடைய தொழிலாளர்களுக்கு குறைவது பற்றியோ ஒபாமா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. தொழிலாளர்களுக்கு வாதிடுபவர்களாக தன்னை ஜேர்னலிடம் இவர் காட்டிக் கொள்ளவில்லை; மாறாக பெருநிறுவன தன்னலக்குழுவிற்கு ஆலோசகர் போல் காட்டிக் கொண்டு, "இன்னும் பல அலுவல்களுக்கு செல்லும் முறையில், மாற்றத்திற்கு அதிக எதிர்ப்பு காட்டாத வகையில்" தொழிலாளர்களுக்கு தேவைப்படும் உத்திகளை அவர் விளக்குகிறார்.

இத்தகைய சொல்லாட்சி அமெரிக்கன் ஆக்சில் நிறுவனத் தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்தம் போன்ற நிகழ்வுகளை பற்றி சுற்றி வளைத்துக் குறிப்படுவது ஆகும்; அவர்கள் நிறுவனம் மற்றும் அதன் பில்லியனர் தலைமை நிர்வாக ரிச்சார்ட் டாஷ் ஆகியோர் கோரிய ஊதியக் குறைவுகள் நலன்கள், ஆயிரக்கணக்கான வேலை இழப்புக்கள் என்று முன்வைத்த "மாற்றத்திற்கு மிகவும் அதிகமாக எதிர்ப்புத் தெரிவித்தனர்" என்பது நிரூபணம் ஆயிற்று. யுனைட்டெட் ஆட்டோ வேர்க்கர்ஸ் தொழிற்சங்க அதிகாரத்துவம் கொண்ட நிலைப்பாட்டைத்தான் அடிப்படையில் ஒபாமாவும் ஏற்கிறார்: அது சில நலன்களை கொடுத்து அச்சுறுத்தல்களையும் கொடுத்து தொழிலாளர்களை நிறுவனத்தின் கோரிக்கைகளை ஏற்குமாறு கட்டாயப்படுத்தியது.

ஒபாமாவின் அறிக்கை ஒரு அடிப்படை தவறையும் கொண்டுள்ளது. அவர் கூறுவது போல் சமத்துவமின்மை வளர்ச்சி ஒன்றும் கல்வி, திறமைகள் இவற்றில் இருக்கும் வேறுபாடுகளின் அடிப்படையில் முக்கிய உந்துதலை பெறவில்லை. இது ஒரு தீவிரமான, வரலாற்றளவில் முன்னோடியில்லான வகையில் செல்வத்தை தொழிலாளர்களிடம் இருந்து மூலதன உரிமையாளர்களுக்கு மாற்றுகிறது. குறிப்பாக அமெரிக்கப் பொருளாதாரத்தின் அடிப்படை பொருட்கள் உற்பத்தியில் இருந்து நிதிய சந்தைகளை திரித்தல் என்ற வகையில் இறங்கும்போது செல்வம் கூடுதலான செல்வத்தை வளர்க்கும்.

"நீங்கள் பெருநிறுவன வரிவீதத்தை குறைக்க விரும்புகிறீர்களா?" என்று ஜேர்னலால் நேரடியாகக் கேட்கப்பட்டதற்கு ஒபாமா கூறினார்: "வரிவிதிப்புக்களில் இருக்கும் ஓட்டைகளை அகற்றினால், சமமான விளையாட்டு தளத்தை அனைவருக்கும் கொடுத்தால், பின் பெருநிறுவன வரிவீதங்களை குறைக்கும் வாய்ப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன்." புதிதாய் நியமிக்கப்பட்டுள்ள, முன்னாள் சிட்டிக்ரூப் தலைவர் ரோபர் ரூபினுக்கு உயர்மட்ட ஆலோசகராக இருந்த, ஜேசன் பர்மன் தலைமையில் இருக்கும் அவருடைய பொருளாதார ஆலோசனைக் குழு "அதைப்பற்றி கவனம் செலுத்தும்" என்று ஒபாமா கூறினார்.

தன்னுடைய கொள்கை ஆலோசகர்களை பற்றிக் கூறுகையில், ஒபாமா தன்னுடைய நடைமுறை, சிந்தனைச் செருக்கற்ற அணுகுமுறை பற்றி பெருமையாகக் கூறிக்கொண்டார்; தான் வோல் ஸ்ட்ரீட் முக்கியஸ்தர்களான கிளின்டன் நிர்வாகத்தில் கருவூலச் செயலாளராக இருந்த ரூபின் இன்னும் தாராளவாத நபர்களான முன்னாள் கிளின்டன் தொழிலாளர் பிரிவு மந்திரி ரொபேர்ட் ரீச் போன்றவர்களை கலந்து ஆலோசிக்கப்போவதாக தெரிவித்தார். "நான் வளைந்து கொடுக்கும் தன்மை உடையவன். சில கடுமையான சிந்தனைப் போக்கு முன் கருத்துக்கள் என்ற அடிப்படையில் இல்லாமல் எது முக்கிய நலன் தருமோ அந்த அடிப்படையில் செயல்படுத்துவேன்." என்றார். ஆதாரங்களை நான் நம்புகிறவன். உண்மையை நான் பெரிதும் நம்புகிறேன். உங்களுக்குத் தெரியும், ஒரு சந்தை வழி மூலம் ஒன்றை சிறப்பாகச் செய்ய முடியும் என்று எனக்கு எவரேனும் நிரூபித்தால், அதைச் செய்ய களிப்புடன் இருப்பேன். அரசாங்கத்தை விரிவாக்குதல் அல்லது திட்டம் வேண்டும் என்பதற்காக ஒரு திட்டத்தை அமைத்தல் என்பதில் எனக்கு ஆர்வம் இல்லை."

இதைவிடத் தெளிவாகத் தகவலை கொடுக்க முடியாது: "பெரிய அரசாங்கத்திற்கு" மீண்டும் செல்வதில்லை (இது அரசாங்கத்தின் சமூக நலத் திட்டங்களை குறைப்பது பற்றிய மறைமுகக் குறிப்பு), பெருவணிகத்தை தாக்குவதில்லை, இலாப நலன்களை கொண்டிருக்கும் "சந்தை அணுகுமுறை சமூகப் பிரச்சினைகளுக்கு கொடுப்பதில் எதிர்ப்பு ஏதும் இல்லை.

இப்படி வோல் ஸ்ட்ரீட்க்கு சமாதானத்தை அளிக்கும் வகை இயக்கத்தில் மாறுதல் எதையும் பிரதிபலிக்கவில்லை; ஜனநாயகக் கட்சி வேட்பு மனுவைப் பெறுவதற்கு தன்னுடைய பிரச்சாரம் முழுவதும் ஒபாமா தொடர்ந்திருந்த போக்கின் தொடர்ச்சிதான் இது. வோல் ஸ்ட்ரீடும் இதை நன்கு உணர்ந்துள்ளது: Center for Responsive Politics தொகுத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, ஒபாமா தனிப்பட்ட நன்கொடையாளர்கள், அரசியல் செயற்குழுக்கள் ஆகியவற்றின் மூலம் வந்ததைவிடக் கூடுதலான வகையில் பாதுகாப்பு பத்திரங்கள், முதலீட்டுப் பிரிவிடம் இருந்து நன்கொடை பெற்றுள்ளார்; ஹில்லாரியையும் விட சற்று அதிகமாகவும் குடியரசுக் கட்சியின் ஜோன் மக்கெயினை விட இரு மடங்கு அதிகமாகவும் பெற்றுள்ளார்.

ஓரளவிற்கு இது வோல் ஸ்ட்ரீட் நம்பிக்கை தரக்கூடிய "தொடக்க முயற்சியில்" முதலீடு செய்துள்ளதைத்தான் பிரதிபலிக்கிறது. தேசிய வாக்குக் கணிப்புக்களில் தற்போது ஒபாமா முன்னிலையில் உள்ளார் புதனன்று Quinnipiac கருத்துக் கணிப்பு அவர் முதல் தடவையாக மூன்று முக்கிய "போர்க்கள மாநிலங்களான பென்சில்வேனியா, ஒகையோ மற்றும் புளோரிடாவில்" முன்னணியில் நிற்பதாகக் கூறியுள்ளது.

தாராளவாத செய்தி ஊடகத்தில் ஒபாமாவின் வரிக்கொள்கை தன்மையில் இருப்பதாகக் கூறப்படும் முன்னேற்றம் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது; ஏதோ அவை பொதுநல அரசை புதுப்பித்து சமூக செலவினங்கள் சுகாதாரப் பாதுகாப்பு கல்விக்கு கூடுதலாக கொடுக்கப்படும் முயற்சிகள் எடுக்கப்படும் என்பது போல். உண்மை தெளிவாக இப்படி இல்லை.

Tax Policy Center கொடுத்துள்ள ஒரு பகுப்பாய்வின் படி ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்கள் கணிசமான முறையில் கூட்டாட்சி அரசாங்கத்தின் வருமானங்களை குறைப்பர். ஒபாமாவின் வரித்திட்டம் வரிகளை மொத்தத்தில் $2.7 டிரில்லியன் குறைத்துவிடும்; ஒப்புமையில் மக்கெயின் $3.7 டிரில்லியனை குறைப்பார்.

ஒபாமாவின் கொள்கைகள் மிகப் பெரிய செல்வந்தர்களுக்கு நட்புடையதாக இல்லை என்று ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷுடன் ஒப்பிடும்போதுதான் கூற முடியும். இவை உண்மையில் பில் கிளின்டன் பதவியில் முதல் பதவிக்காலத்தில் இருந்து செய்ததை விட குறைந்த கடினத்தன்மையை கொண்டுள்ளன; அப்பொழுது அவர் செல்வந்தர்களுடைய வருமான வரிகளை ஒரு சிறிய வீதத்தில் உயர்த்தியிருந்தார்.

பிளின்ட் உரையில் கோடிட்டுக் காட்டப்பட்டது போல், உள்கட்டுமானத்திற்கு கூடுதலாக செலவழிக்க வேண்டும் என்ற கருத்து இவருடைய திட்டங்களை பொறுத்தவரையில் உள்ளது; 10 ஆண்டுகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு $15 பில்லியன் புதிய ஆற்றல் தொழில்நுட்பத்திற்கு, $60 பில்லியன் போக்குவரத்து பிரிவு முன்னேற்றங்களுக்கு, குறிப்பாக இரயில், ஆற்றல் தொகுப்புக்களுக்கு மற்றும் $10 பில்லியன் சிறுகுழந்தைகள் கல்விக்கு என்பனவே இதில் அடங்கும்.

இந்தப் பணங்கள் --மொத்தத்தில் $220 பில்லியன் பத்து ஆண்டுகளில் என்பது-- பூர்த்தி செய்யப்படாத சமூகத் தேவைகள் என்பவற்றில் ஒப்புமையில் ஒரு பக்கட் நீரில் ஒரு துளி போல்தான்; அவற்றிற்கு டிரில்லியன் கணக்கில் பணம் தேவையாகும். ஆனால் மொத்தம் என்பதோ முக்கிய வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்களில் ஆண்டு மொத்த இலாபங்களைவிடக் குறைவுதான்.

இத்தகைய பொருளாதாப் பாதிப்பை பொறுத்தவரையில், ஒபாமாவின் ஆற்றல் திட்டம் இந்த ஆண்டு பொருளாதார ஊக்கத் தொகுப்பு என்று புஷ்ஷின் வெள்ளை மாளிகை மற்றும் ஜனநாயக காங்கிரஸ் இவ்வாண்டு ஒப்புக் கொண்டதைவிட குறைவாகத்தான் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும்; இதன் நீண்ட கால பொருளாதார விளவுகளும் அதிகமாக இருக்காது.

சீர்திருத்த அலங்காரச் சொற்களுக்கும் உண்மைக் கொள்கைகளுக்கும் இடையே இருக்கும் மிகப் பெரிய வேறுபாட்டிற்கு காரணம் வெளிப்படையானதுதான். மக்கெயின், கிளின்டன் போலவே, ஒபாமாவும் இலாபமுறையை காக்கும் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதி ஆவார். மிகப் பெரிய நிறுவனங்கள் மற்றும் பில்லியனர்களின் நலன்களுடன் பொருந்தி இருக்கும் நடவடிக்கைகளைத்தான் அவர் செயல்படுத்துவார்; ஏனெனில் அவர்கள்தான் அமெரிக்க சமூகத்தின் உண்மை ஆட்சியாளர்கள் ஆவர்.

உழைக்கும் மக்களின் நலன்களைக் காப்பதற்கு பெருநிறுவன கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அரசியல் கட்டமைப்பு, இரு கட்சி முறை ஆகியவற்றுடன் உடைத்துக் கொள்வதும், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் நலன்களுக்காக போராடும் ஒரு சுயாதீனமான பரந்த அரசியல் கட்சியை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கட்டமைப்பதுதான் தேவைப்படுகிறது.