World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistanis overwhelmingly reject US-backed strongman Musharraf

அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி முஷாரஃப்பை பாக்கிஸ்தானியர்கள் தீர்மானகரமாய் நிராகரிப்பு

By K. Ratnayake and Keith Jones
20 February 2008

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க ஆதரவுபெற்ற, இராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பர்வேஸ் முஷாரஃபின் ஆட்சியை திங்களன்று நடந்த தேசிய மற்றும் மாகாண தேர்தல்களில் பாக்கிஸ்தான் மக்கள் தீர்மானகரமாய் நிராகரித்துள்ளனர்.

செய்தித் தகவல்களின் படி, முஷாரஃபுக்கு எதிரான கட்சிகள் தேசிய நாடாளுமன்ற அவையில் குறிப்பிடத்தக்க பெரும்பான்மையைக் கைப்பற்றுவதோடு பாக்கிஸ்தானின் நான்கு மாகாணங்களில் குறைந்தபட்சம் மூன்றிலாவது முஷாரஃப் கூட்டணி கட்சிகள் இல்லாமல் அரசாங்கம் அமைக்க இயலும் நிலையில் இருக்கும்.

தேசிய நாடாளுமன்ற அவையின் இறுதி நிலவரம் இன்னும் முழுமையாகத் தீர்மானிக்கப்படாத சூழலில் (சில தொகுதிகளில் வாக்களிப்பு தள்ளி வைக்கப்பட்டது மற்றும் பொதுமக்கள் வாக்கு முழுமையாக எண்ணி முடிந்த பின்பு தான் பெண்களுக்கும் "மத சிறுபான்மையினருக்குமான" 70 இடங்கள் ஒதுக்கப்படும்), எதிர்க்கட்சிகள் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கைப்பற்றும் எனத் தோன்றுகிறது, இது முஷாரப்பிற்கு எதிராக அவையில் அரசியல் குற்றம் சாட்டுவதற்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை வெகுவாக குறைப்பதற்குமான வகையில் அரசியல்சட்டத்தை திருத்துவதற்கும் வகை செய்யும்.

முஷாரஃபின் சர்வாதிகாரத்திற்கு மக்கள் செல்வாக்கு எனும் மூடி மறைப்பை உருவாக்குவதற்கு இராணுவ உளவுத் துறை எந்திரத்தால் உருவாக்கப்பட்ட பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் (Q) கட்சி முழுமையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது தேசிய நாடாளுமன்ற அவைத் தேர்தலில் பாக்கிஸ்தானின் பாரம்பரிய ஸ்தாபிதமான கட்சிகளான பாக்கிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) ஆகிய கட்சிகளுக்கு பின்னால் மிகவும் பின்தங்கிய நிலையில், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தங்களது அடித்தளமான மாகாணம் என்றும் பெரும்பான்மை பாக்கிஸ்தானியருக்கு தாயகமாகவும் விளங்கக் கூடிய மாகாணம் என்றும் அவர்கள் கூறி வந்த பஞ்சாப் மாகாணத் தேர்தலிலேயே PML(Q) பரிதாபமான தோல்வியை தழுவியிருக்கிறது.

தலைவர் செளத்ரி சுஜாத் ஹுஸைன் மற்றும் அநேக கேபினட் அமைச்சர்கள் உட்பட ஏறக்குறைய ஒட்டுமொத்த PML(Q) தலைவர்களுமே தேர்தலில் தோல்வியை தழுவியிருக்கின்றனர். தண்டிக்கப்பட்ட ஹுசைன், "திறந்த மனதுடன் முடிவுகளை ஏற்கிறோம்" என்றும் "எதிர்க்கட்சி வரிசையில் உட்காருவோம்" என்றும் அறிவித்தார்.

சென்ற நவம்பர் 3ல் தொடங்கி ஆறு வாரங்களுக்கு போர்ச் சட்டத்தை அமல்படுத்தியதை, போதுமான அளவு ஒத்திசைந்து போகாதவர்கள் எனக் கருதப்பட்ட உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவர் களையெடுத்ததை, மற்றும் அரசியல் சட்டத்திற்கு விரோதமான, ஜோடிக்கப்பட்டதான, ஜனாதிபதி பதவிக்கான காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பதற்காக சென்ற அக்டோபரில் ஏற்பாடு செய்த "மறு-தேர்தல்" என ஏற்ற இறக்க சமயங்களில் எல்லாம் முஷாரஃப்புக்கு ஆதரவு அளித்து வந்த புஷ் நிர்வாகத்துக்கு தேர்தல் முடிவுகள் ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளன.

கடந்த ஏழு வருடங்களில், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" முஷாரஃப்பை முக்கியமான கூட்டாளி என்று புஷ் தொடர்ந்து பாராட்டி வந்திருக்கிறார், முஷாரஃபின் தன்னிச்சையான நடவடிக்கைகளை ஜனநாயகத்தை நோக்கிய படிகள் என்று நியாயப்படுத்தினார், தனிப்பட்ட வகையிலும் தனது மதிப்பையும் பாசத்தையும் கூட பாக்கிஸ்தான் சர்வாதிகாரியிடம் வெளிப்படுத்தினார்.

முஷாரஃப்பின் கீழ், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்பில் பாக்கிஸ்தான் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது, அமெரிக்க இராணுவ உளவு எந்திரத்திற்கு வெளிநாட்டில் சித்திரவதை தளத்தினையும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளுக்கு பயிற்சி தளங்களையும் மற்றும் நடவடிக்கை பகுதிகளையும் கூட வழங்கியுள்ளது.

முஷாரஃப் மீது பொதுமக்கள் வெறுப்பு வளர்ந்ததற்கு முக்கியக் காரணமே அமெரிக்காவுடனான அவரது நெருங்கிய மற்றும் கீழ்ப்படியும் உறவுமுறை தான் என்பதை அமெரிக்க ஊடகங்களே கூட ஒத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. பாக்கிஸ்தானில் தொடர்ந்து இராணுவ சர்வாதிகாரத்தினை ஆதரித்து வந்ததற்கும், அதன் ஆப்கான் மற்றும் ஈராக் போர்களுக்காகவும், பாக்கிஸ்தானின் பஸ்தூன் பேசும் பழங்குடி மற்றும் எல்லைப் பகுதிகளில் தலிபான்களை இரக்கமின்றி அடக்குவதற்கு முஷாரஃப் ஆட்சி மீது இது அளித்த நெருக்கடிக்காகவும் அமெரிக்கா கடும் வசவுகளை சம்பாதித்திருக்கிறது.

அமெரிக்காவின் வற்புறுத்தலால், பாக்கிஸ்தான் இராணுவம் கிளர்ச்சிப் பகுதிகளில் சாதாரண மக்களை இலக்காக்கி தாக்கியது, பாக்கிஸ்தான் உருவானது முதல் அகன்ற தன்னாட்சி அதிகாரத்தை அனுபவித்து வரும் பழங்குடி பகுதிகள் மீது மத்திய அரசு கட்டுப்பாட்டை செலுத்த தலைப்பட்டது, மற்றும் திடீர் திடீரென்று "காணாமல் போன" இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் மீதும் தாக்குதல் இலக்கு செலுத்தப்பட்டது.

பாக்கிஸ்தானின் தலிபான்-எதிர்ப்பு கலகத் தடுப்பு போரில் அமெரிக்க இராணுவ உளவுத்துறை எந்திரம் கூடுதலான பங்களிப்பை ஆற்ற பாக்கிஸ்தான் இராணுவம் அனுமதிக்க முஷாரஃபை வலியுறுத்துவதற்காக தேர்தலுக்கு முந்தைய வாரங்களில் கூட, அமெரிக்காவின் உளவுத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பென்டகன் அதிகாரிகள் குழு இஸ்லாமாபாத்துக்கு பயணம் மேற்கொண்டது.

முஷாரஃப்பை தொடர்ந்து பிடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா

திங்கள் தேர்தல்கள் சமயத்திலும், புஷ் நிர்வாகம் தொடர்ந்து முஷாரஃபையே தொடர்ந்து பிடித்துக் கொண்டிருக்க எண்ணுவதாகவே தோன்றுகிறது.

"யார் பிரதமராக ஆனாலும், புதிய அரசாங்கத்தின் பொறுப்பாளராக ஆனாலும், அவருடனும் (முஷாரஃபுடனும்) அனைத்து பிற (கன்னைகளுடனும்) பிரிவுகளுடனும் இணைந்து பணியாற்ற இயலும் என்றே நாங்கள் நம்புகிறோம்" என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டொம் கேஸி செவ்வாய் அதிகாலை அறிவித்தார்.

நாளின் பிற்பகுதியில் பேசிய வெளியுறவுத்துறையின் ஸீன் மெக்கார்மெக், முழுமையான அதிகாரபூர்வமான தேர்தல் முடிவுகள் இன்னும் அறியப்படவில்லை என்று சுட்டிக் காட்டினார் மற்றும் முஷாரஃபுக்கான நிர்வாகத்தின் தொடர்ந்த ஆதரவை மறு உறுதி செய்தார்: "ஜனாதிபதி முஷாரஃபுடன் இணைந்து நாங்கள் செய்து வரும் பணியையும், புதிய அரசாங்கம் எங்களது விருப்ப இலக்குகளின் மீது செய்யக் கூடிய வேறு எதனோடு இயைந்ததையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்ள இருக்கிறோம்".

புஷ் நிர்வாகத்தின் நிலைப்பாடானது திங்கள் தேர்தல்களை கண்காணிக்க பாக்கிஸ்தானுக்கு பயணம் சென்ற மூன்று அமெரிக்க செனட் உறுப்பினர்களான - செனட் அயலுறவு கமிட்டியின் ஜனநாயகக் கட்சி தலைவரான ஜோசப் பிடென், 2004 இன் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஜோன் கெர்ரி, மற்றும் குடியரசுக் கட்சியின் சக் ஹெகல் - ஆகியோரால் ஆதரிக்கப்பட்டது.

நவாஸ் ஷெரிப் மற்றும் PPP தலைவர் ஆஸிப் அலி சர்தாரி உடன் தேர்தலுக்கு பின்னர் நடந்த கலந்துரையாடல்களில் "கடந்து சென்றதையே கவனித்துக் கொண்டிராமல், நாட்டின் நலன் கருதி எதிர்காலத்தை நோக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள" அவர்களை வலியுறுத்தியதாக செவ்வாயன்று செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் தெரிவித்தனர்.

கெர்ரி கூறினார், "கடந்த கால வெறுப்புகளை கடந்த காலத்திலேயே விட்டு விட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்". வேறு வார்த்தைகளிலும் இதனைக் கூறலாம், அதாவது எதிர்க் கட்சிகள் முஷாரஃபின் ஜனாதிபதி பதவியை சவாலுக்குள்ளாக்க கூடாது - அது ஒரு மோசடியான தேர்தல் மூலம், போர்ச் சட்டம் ஒன்றை திணித்து, நீதிபதிகளை செயலிழக்கச் செய்து பெற்றதாக இருந்தாலும் கூட.

முஷாரஃப் ஆட்சி தேர்தல்களில் முறைகேடு, மோசடிகளில் ஈடுபட எந்த அளவுக்கும் சென்றது என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த முடிவுகள் பேரழிவுகரமானது என்பது புரியும்.

ஊடகங்கள் மீது நிரந்தரமான மற்றும் அரக்கத்தனமான கட்டுப்பாடுகளை திணிப்பதற்கும், எதிர்க்கட்சியினரில் ஆயிரக்கணக்கானோரை சித்திரவதை செய்யவும், சிறையிலடைக்கவும் (இவர்களில் சிலர் திங்கள் தேர்தல் வாக்களிப்பு முழுதும் சிறையிலோ அல்லது வீட்டுக் காவலிலோ தான் இருந்தனர்) முஷாரஃப் சென்ற ஆண்டின் அவசரகால நெருக்கடி நிலையையே பயன்படுத்தினார். எதிர்க்கட்சி பிரச்சாரங்களை பிரதானப்படுத்தாமலிருக்க செய்தியாளர்கள் மிரட்டப்பட்டனர், துன்புறுத்தப்பட்டனர். திங்களன்று வாக்களிக்க சென்ற பலர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை காரணம் அரசு ஆதரவு தேர்தல் கமிஷன் தயாரித்த வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்கள் இடம் பெறவில்லை.

முதன்மையான எதிர்க்கட்சி தலைவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

முஷாரஃப் மூலம் 1999 இராணுவப் புரட்சி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அதற்கு பின் அரச துரோகக் குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளியாக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, மறுபடியும் சென்ற செப்டம்பரில் அவர் முதன்முதலாக நாடு திரும்ப முற்பட்டபோது மீண்டும் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவரான நவாஸ் ஷெரிப் அவர் ஒரு குற்றம் உறுதி செய்யப்பட்ட கிரிமினல் என்கிற அடிப்படையில் தேர்தலில் நிற்பதிலிருந்து தடை செய்யப்பட்டார்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முஷாரஃபின் கூட்டாளிகள் தேர்தல் மோசடிகளில் ஈடுபட திட்டமிட்டிருப்பதற்கான ஆதாரத்தை வழங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த தேர்தல் தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முந்தைய ஒரு சமயத்தில், டிசம்பர் 27 அன்று PPP தலைவர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார்.

முஷாரப் ஆதரவு கட்சிகள் தோற்கடிக்கப்பட்டன

GEO தொலைக்காட்சி மற்றும் Dawn இதழ் செய்திகளின் படி, வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்ட 258 தேசிய நாடாளுமன்ற அவைத் தொகுதிகளில் வெறும் 38 ஐ மட்டுமே PML(Q) வென்றிருக்கிறது, அதே சமயத்தில் PPP 87 இடங்களையும் நவாஸ் ஷெரிபின் PML (N) 66 இடங்களையும் வென்றிருக்கின்றன.

முன்னர் PML(Q) அரசமைத்திருந்த பஞ்சாப் மாகாணத்தில் தற்போது அறிவிக்கப்பட்ட 285 முடிவுகளில் வெறும் 66 ஐ மட்டுமே வென்றிருக்கிறது. இதன் சிறந்த முடிவுகள் பலூசிஸ்தானில் மட்டுமே கிட்டியிருக்கிறது, வளம் மிக்கது புவியியல் ரீதியாக பெரியது தான் என்றாலும், பாக்கிஸ்தானின் நான்கு மாகாணங்களில் மிகச் சிறியது இது தான்.

இஸ்லாமிய கட்சிகளின் ஒரு கூட்டணியான முதாஹிதா மஜ்லிஸ்-இ-அமல் அல்லது MMA ம் கூட பயங்கரமான தோல்விகளை சந்தித்துள்ளது. நடப்பு தேசிய அவையில் சுமார் 50 இடங்களை கொண்டிருக்கும் இந்த கட்சி இப்போதைய தேர்தலில் வெறும் இரண்டு இடங்களைத் தான் வெல்ல முடிந்திருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக இது அரசமைத்திருந்த வடமேற்கு எல்லை மாகாணத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 91 இடங்களில் வெறும் 9 இடங்களை மட்டுமே இப்போது கைப்பற்றியுள்ளது.

முஷாரஃப் ஆட்சிக்கு எதிரானதாக காட்டிக் கொண்டாலும் கூட 2002 இல் நடத்தப்பட்ட ஜோடிக்கப்பட்ட தேர்தலில் இராணுவ ஆட்சியின் ஆதரவால் MMA அனுகூலம் பெற்றது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, பலூசிஸ்தானில் PML(Q) இன் அரசின் கூட்டணி உறுப்பினராக இடம் பெற்று நன்றியை திருப்பிச் செலுத்தியது. மிக முக்கியமாக, ஜனாதிபதி பதவியின் அதிகாரத்தை மிகப்பெரும் அளவில் அதிகமாக்குவதற்கும், அரசுக் கொள்கையின் முக்கிய அம்சங்களில் அதிகாரம் கொண்டுள்ள வண்ணமான இராணுவ ஆதிக்கமுள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்குவதற்குமாக அரசியல் சட்டத்தில் மாற்றங்களை நிறைவேற்றுவதற்கு தேசிய அவையில் முஷாரஃபுக்கு தேவையான வாக்குகளை இக்கட்சி அளித்தது.

மொஹாஜிர் சமுதாய அடிப்படையில், அதாவது இந்தியத் துணைக்கண்டம் 1947 இல் மதரீதியாக பிளவுபட்டபோது வட இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தவர்கள், முஷாரபின் கூட்டாளிக் கட்சியான MQM இன் நிலை சற்று தேவலாம். இது 19 தேசிய அவை இடங்களைக் கைப்பற்றியுள்ளது, இவற்றில் அநேகமானவை சிந்து மாகாணம் மற்றும் பாக்கிஸ்தானின் மிகப்பெரும் நகரமான கராச்சியின் சுற்றுப்புறத்தில் அமைந்தவை.

ஆனால் சிந்து மாகாணத்தில் வலிமையான வேர்கள் கொண்டுள்ள PPP - பூட்டோக்கள் குடும்பம் மாகாணத்தின் முன்னணி நிலப்பிரபுக் குடும்பங்களில் ஒன்று - சிந்து சட்டமன்ற அவையில் அறுதிப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

பெனாசிர் பூட்டோவின் "ஜனநாயகத்திற்கான தியாகத்தை" தனது பிரச்சாரத்தின் பிரத்யேக மையமாக PPP முன்நிறுத்தியது.

2007 இல், நாளுக்கு நாள் சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருந்த முஷாரபுக்கு கைகொடுக்கும் வகையில், பெனாசிர் பூட்டோ, அவரது PPP கட்சி மற்றும் முஷாரப், இராணுவம் மற்றும் முஷாரபின் PML(Q) இடையே ஒரு அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்பாடு செய்ய புஷ் நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

அமெரிக்காவின் அனுதாபத்தை ஏற்கவும் முஷாரஃபுடன் ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபடவும் பூட்டோ அதிகமாகவே ஆர்வம் கொண்டிருந்தார். புஷ் நிர்வாகத்துக்கு தனது நற்சான்றிதழ்களை காட்டும் நோக்கில், பாக்கிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதத்தை வேரறுப்பதற்கு முஷாரஃப் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஆனால், முஷாரஃப் தரப்பிலிருந்து எழுந்த எதிர்ப்பின் காரணத்தாலும், இராணுவ ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு அதிகரித்ததை அடுத்து அரசியல் இயங்கியல் மாற்றம் கண்டது என்பதாலும் ஒரு ஒப்பந்தமானது உறுதியாக்கப்பட முடியவில்லை.

எப்படியாய் இருந்தாலும், அமெரிக்காவின் நல்லெண்ணத்தை தக்கவைத்துக் கொள்ளும் வகையில், முஷாரஃபுடன் இணைந்து பணியாற்றுவது என்பதை ஒருபோதும் PPP கைவிடத் துணியவில்லை.

பெனாசிரின் கணவர் ஆஸிப் அலி சர்தாரி, நிலப்பிரபுத்துவ வழியிலேயே தனது மனைவி கொல்லப்பட்ட சில தினங்களுக்குள்ளாகவே PPP தலைமைக்கு உரிமை கொண்டாடியதோடு, புதிய தேசிய அவையில் மிகப்பெரும் எண்ணிக்கை கொண்டுள்ள தனது கட்சிக்கு ஆட்சி அமைக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்துள்ளார். முந்தைய PML(Q) தலைமையிலான அரசில் இடம் பெறாத அனைத்து சக்திகளையும் இணைத்த கூட்டணி அரசு ஒன்றுக்கு தான் முயற்சி செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார்.

அதிகாரத்தில் தனது பிற்போக்கு வரலாற்றிற்கு பிறகும், 1970களில் மக்களிடையே வரவேற்பை பெற்ற சீர்திருத்தங்களுடன் இந்த கட்சி இணைத்துப் பார்க்கப்படுவதன் காரணமாக பாக்கிஸ்தானின் உழைக்கும் வர்க்கத்தின் பல பிரிவினர் இடையே தொடர்ந்து ஆதரவைப் பெற்று வரும் PPP கட்சி பலமான வெற்றியை பெற்றுள்ளதை விடவும் ஆச்சரியமளிப்பது ஷெரிபின் PML (N) பெற்றிருக்கும் இடங்களின் எண்ணிக்கை தான். தேசிய அவைத் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள முடிவுகளில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமாக இடங்களை வென்றுள்ளதை தவிரவும், பஞ்சாப் சட்டமன்றத்திலும் இது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

PML (N) கட்சி பாரம்பரியமாக இராணுவத்துடனும் இஸ்லாமிய உரிமையுடனும் நெருக்கமான உறவுகள் கொண்டிருக்கிறது. தொழிலதிபர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவரான நவாஸ் ஷெரிப் தனது அரசியல் வாழ்க்கையை சர்வாதிகாரி ஜெனரல் ஜியாவின் அரவணைப்பில் தான் தொடங்கினார். ஆனால் முஷாரஃபுடன் அவர் கொண்டுள்ள பகைமை காரணமாகவும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் கொண்டுள்ள தொடர்புகள் காரணமாகவும், புஷ் நிர்வாகத்தால் ஷெரிப் ஒரு தடைக்கல்லாக பார்க்கப்படுகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, PPP தலைமையை விட அமெரிக்கா குறித்து தான் ஷெரிப் மிகவும் கடுமையான நிலைப்பாட்டினை கொண்டிருந்தார். முஷாரபால் அகற்றப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியமர்த்துவதையே PML(N) பிரச்சாரத்தின் மையக் கருத்தாகக் கொண்டிருந்ததன் மூலம் முஷாரஃபுக்கு ஒரு கூடுதலான சமாதானப்படுத்த முடியாத எதிரியாக அவர் முன்நின்றார்.

உருவாகவிருக்கும் தேசிய அவையில் ஐந்தாம் பெரும் கட்சியாகவும் வடமேற்கு எல்லை மாகாணத்தில் தனிப்பெரும் கட்சியாகவும் இருப்பது பஸ்தூன் அடிப்படையிலான அவாமி தேசியவாதக் கட்சி தான். முஷாரஃப், இஸ்லாமிய அடிப்படைவாதம், மற்றும் மாகாணத்தில் அதிகரிக்கும் அமெரிக்க இராணுவ இருப்பு இவற்றிற்கு எதிராக இது அழைப்பு விடுத்துள்ளது.

முஷாரஃபுக்கும் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைவுக்கு எதிராகவுமான எதிர்ப்பு பெரும் புறக்கணிப்பு விகிதத்தின் மூலமும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 40 சதவீதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்றிருக்க முடியாது என்று மதிப்பிடப்படுகிறது.

சில வாக்காளர்கள் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த அச்சுறுத்தலால் வாக்களிக்க வராமல் இருந்திருக்கலாம் என்றாலும், நிறைய ஏழை பாக்கிஸ்தானியர்கள் கட்சிகளுக்கு இடையே தேர்ந்தெடுக்கும் வண்ணம் தனித்துவமான எந்த வித்தியாசமும் இல்லை என்று கண்டிருப்பதாக முதலாளித்துவ ஊடகங்களே ஒத்துக் கொண்டிருக்கின்றன, இந்த கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும்போது முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களையே பாதுகாத்தன, சமூகரீதியாக கோபமூட்டுகிற புதிய தாராளமய சீர்திருத்தங்களை திணித்தன.

சில சிறு கட்சிகள், தங்களை இடது சாரிகள் என்றும் சோசலிஸ்டுகள் என்றும் அழைத்துக் கொள்ளும் பல கட்சிகள் உட்பட, அரசியல் சட்டத்திற்கு மாறுபாடான ஜனநாயக விரோத முஷாரஃப் ஆட்சியை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.

திங்கள் தேர்தல் மேடையானது PPP, PML (N), பிற சிறு கட்சிகள், முஷாரஃப், இராணுவம் இவர்களிடையே அதிகாரத்தையும் ஆதரவையும் பிரிப்பதற்கான சண்டைக்கான களத்தை அமைத்துள்ளது.

முஷாரஃபின் மீதான வெறுப்பு இராணுவ அதிகாரிகள் உருவாக்கியுள்ள விரிவான பொருளாதார நலன்களையும், பாக்கிஸ்தான் அரசின் நிலைத்த தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் சிக்கலில் ஆழ்த்தத் தொடங்கியிருப்பதாக உணரும் நிலையில், இராணுவமே கூட முஷாரஃப்பை ஆதரிப்பது எந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக இருக்கும் என்பதில் பிளவுபட்டு இருக்கிறது. கடந்த வாரங்களில் பல நூறு முதன்மையான ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் முஷாரஃப் இராஜினாமா செய்வதற்கு ஆதரவாக வெளிப்படையாகக் குரல் கொடுத்திருக்கிறார்கள், சிலர் முன்கண்டிராத வகையில் முஷாரஃப் எதிர்ப்பு போராட்டங்களிலும் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளை மாளிகை முஷாரஃபுக்கு ஆதரவாக விடுத்துள்ள அறிக்கைகள் எல்லாம் பென்டகன் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக உறவு கொண்டுள்ள பாக்கிஸ்தான் இராணுவத்துக்கான செய்தியாகும், தற்போது நடைபெறும் அரசியல் சீரமைப்புகளின் போது தனது நலன்கள் உறுதி செய்யப்படுவதில் அமெரிக்கா உன்னிப்பாக இருக்கிறது என்ற செய்தியாகும்.

புஷ் மற்றும் துணை ஜனாதிபதி செனி, அனைத்து செய்திகளிலும், சர்வாதிகாரி முஷாரஃபுக்கு தனிப் பாசம் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இறுதியாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முஷாரஃபின் தனிப்பட்ட வாழ்க்கை உண்மையான பிரச்சினையில்லை, மாறாக இராணுவம் பாக்கிஸ்தானின் தீர்மானிக்கும் சக்தியாக தொடர்வதை உறுதிப்படுத்துவது தான்.

தங்கள் பங்கிற்கு PPP மற்றும் PML (N) கட்சிகள் இராணுவம் மற்றும் அமெரிக்காவுடனான அனைத்து திரைமறைவு ஒப்பந்தங்களிலும் ஈடுபடுவார்கள். முன்னர் இதேபோல் இராணுவ சர்வாதிகாரங்கள் கலைந்த போது அதிகாரத்தைக் கைப்பற்றி பாக்கிஸ்தான் முதலாளித்துவ வர்க்கத்தை மீட்க இருமுறை PPP வந்திருக்கிறது. அதோடு இது எப்போதுமே இராணுவ பாதுகாப்பு எந்திரமும் அமெரிக்காவுடனான பாக்கிஸ்தானின் கீழ்ப்படியும் கூட்டணியும் சிதறாமல் பார்த்துக் கொள்வதை உறுதி செய்திருக்கிறது.

முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியானது ஒரு சிறிய சிறப்புரிமை பெற்ற சிறுபான்மையினருக்கு மட்டுமே ஆதாயமளித்துள்ள ஆண்டுகளின் பின்னர், கடந்த சில வாரங்களில் உணவுப் பொருள் மற்றும் மின்சாரப் பற்றாக்குறையால் இந்த நெருக்கடி சூழல் வெடித்து வெளிப்பட்ட, வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடி சூழல்களின் கீழ் புதிய அரசாங்கமானது அதிகாரத்திற்கு வருகிறது.

இந்த தேர்தல் பிரச்சாரங்களின் போது இந்த நெருக்கடி குறித்து PPP அல்லது PML (N) எதுவும் பேசவில்லை என்பது எதிர்பார்க்காத ஒன்று இல்லை. அடிப்படையில் இவை இரண்டுமே ஒரேகொள்கைகளையே கைக்கொள்கின்றன.

News என்னும் பாக்கிஸ்தான் செய்தித்தாளும் கூட தனது தேர்தல் நாள் ஆசிரிய தலையங்கத்தில், பாக்கிஸ்தானை எதிர்கொண்டுள்ள எரியும் சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதில் எதிர்க்கட்சிகளின் தோல்வியை குறித்து சுட்டிக் காட்டியுள்ளது: "வாக்களிப்பு நாள் மிக அருகில் இருக்கும் நிலையிலும் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் வார்த்தை முழக்கங்களிலும் வெற்று வாக்குறுதிகளிலும் ஒரு குறிப்பிடத்தக்க வெறுமை இருக்கிறது: ஒருவர், ஒருவர் கூட நிலச் சீர்திருத்தம் குறித்து பேசவில்லை. முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்று கூட தேசிய பேரழிவான வறுமையை தணிக்க தொடங்குவதற்கான தனியொரு மிக அடிப்படையான மாற்றமான நிலச் சீர்திருத்த விவகாரத்தில் உறுதி காட்டுவதாக இல்லை.

பாக்கிஸ்தானின் ஜனநாயகமானது, பாக்கிஸ்தான் மக்களின் முதுகுகளுக்கு பின்னால் அமெரிக்க, இராணுவம், மற்றும் முதலாளித்துவ வர்க்க மேல் தட்டின் கட்சிகள் இடையே ஒரு கறை படிந்த ஒப்பந்தம் பேசப்படுவதன் மூலம் சாதிக்கப்பட முடியாது, மாறாக தொழிலாள வர்க்கம் தங்களை உழைக்கும் மக்களின் தலைமையில் அமர்த்திக் கொண்டு, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை பாக்கிஸ்தானின் பிற்போக்கு சமூக-பொருளாதார ஒழுங்குக்கு சவால்விடுவதுடன் இணைப்பதன் மூலம் தான் சாத்தியமாகும்.

உண்மையான ஜனநாயகத்திற்கு, நிலப்பிரபுத்துவத்தை இல்லாமற் செய்வது, அமெரிக்க ஆதரவு இராணுவ பாதுகாப்பு அரசை அகற்றுவது, மதத்தை அரசு நிர்வாகத்தில் இருந்து அகற்றுவது, அனைவருக்கும் வேலையும் பாதுகாப்பான வருமானமும் அளிக்கத்தக்க சமூக நடவடிக்கைகள், மற்றும் 1947-48 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் இரகசிய ஒப்புதலுடன் தெற்கு ஆசியாவில் ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட வகுப்புவாத அரசு அமைப்பினைத் தூக்கி எறிவது இவையெல்லாம் தேவைப்படுகிறது. பாக்கிஸ்தான் மற்றும் தெற்கு ஆசியாவின் உழைக்கும் மக்களின் தலையெழுத்தினை, முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டுவதற்கான சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டத்துடன் நனவாக இணைக்கும் ஒரு தொழிலாளர்கள் விவசாயிகள் அரசாங்கத்தின் மூலம் மட்டுமே அது அடையப்படும்.