World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Anti-Karzai attack in Kabul shakes US puppet government

காபூலில் கர்சாய் மீதான தாக்குதல் அமெரிக்க கைப்பொம்மை அரசாங்கத்தை உலுக்குகிறது

By Barry Grey
29 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஞாயிறன்று காபூலின் மையப் பகுதியில் ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல், எந்த அளவு அமெரிக்க ஆதரவு அரசாங்கம் தனிமைப்பட்டுள்ளது என்பதையும் நாடு முழுவதும் ஆக்கிரமிப்பு-எதிர்ப்பு படைகளின் தாக்குதல் சக்தி வளர்ச்சியுற்று வருகிறது என்பதையும் விளங்கச் செய்வதாக இருக்கிறது.

கர்சாய் மயிரிழையில் உயிர் தப்பினார். 1992 இல் சோவியத் ஆதரவு அரசு தூக்கியெறியப்பட்டதன் 16வது ஆண்டு நினைவைக் கொண்டாடும் விதமாக நடைபெற்ற இராணுவ அணிவகுப்பின் மீது அரசாங்க-எதிர்ப்பு படைகள் துப்பாக்கித் தாக்குதல் நடத்த, கேபினட் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆப்கான் மற்றும் NATO இராணுவ அதிகாரிகள் மற்றும் அமெரிக்க தூதர் வில்லியம் உட் உள்ளிட்ட அயலுறவு தூதரக அதிகாரிகள் அனைவரும் குனிந்து கொண்டனர், ஓடினர், அல்லது பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.

நகரின் மிகப்பெரிய மசூதிக்கு குறுக்காக அமைந்திருக்கும் முஜாகிதீன் நாள் நினைவஞ்சலிக்கான பார்வையிடும் ஸ்டாண்டினை குறிவைத்து கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். சிறு துப்பாக்கி ஆயுதங்களை பயன்படுத்திய அவர்கள் ராக்கெட் எறிகுண்டுகளையும் வீசினர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஷியா தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டனர், மற்றும் 12 பேர் காயமுற்றனர். தாக்குதல்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு 10 வயது சிறுவனும் கொல்லப்பட்டான்.

இந்த தாக்குதலுக்கான பொறுப்பை தலிபான்கள் உடனடியாக ஏற்றுக் கொண்டனர். இது ஆறு பேர்கள் கொண்ட குழுவால் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் கூறினர். அதேநாளின் பிற்பகுதியில், முன்னாள் அமெரிக்க கூட்டாளி குல்புதீன் ஹெக்மதியார் தலைமையிலான இன்னுமொரு இஸ்லாமிய குழு தாங்கள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறியது.

தாக்குதலுக்குப் பின், காபூலில் சந்தேகப்படும் நூற்றுக்கணக்கானோரை அரசாங்கம் சுற்றி வளைத்து, நகரின் ஒட்டுமொத்த பிரிவுகளையும் சீல் வைத்துள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் வலைவீசித் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

நாடு முழுவதும் நேரடியாக நிகழ்ச்சி ஒளிபரப்பான வேளையில், இந்த நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட அசாதாரணமான நடவடிக்கைகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, ஆக்கிரமிப்பு எதிர்ப்பு சக்திகள் இத்தகையதொரு தாக்குதலை மேற்கொள்ளும் திறன் பெற்றிருந்தது தான் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது. ஆப்கான் துருப்புகள் பல நாட்களுக்கு முன்னதாகவே, இந்தப் பகுதியை சுற்றி வளைத்து சீல் வைத்து விட்டன. நகர் முழுவதும் சீருடை அணியா அதிகாரிகள் சுற்றிக் கொண்டிருந்தனர், வாகன சோதனைச் சாவடிகளும் நிறுவப்பட்டிருந்தன. சுற்றியிருக்கும் மலைப்பகுதிகளில் இருந்து விழா இடத்தைப் பார்வையிடுவதற்கு பாதசாரிகள் கூட அனுமதிக்கப்படவில்லை. டாங்கிகளிலும் ஆயுதமேந்திய வாகனங்களிலும் படையினர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு வெகு அருகில் அமைந்திருந்த அணிவகுப்பு மைதானங்களில் நிறுத்தப்பட்டனர்.

தேசிய கீதம் பாடப்பட்டு இராணுவத்தினர்கள் 21-குண்டு மரியாதையை செலுத்திக் கொண்டிருந்த போது தாக்குதல் துவங்கியது. விஐபி ஸ்டாண்டில் முன்வரிசையில் நின்று கொண்டிருந்த பிரிட்டிஷ் தூதர் சர் ஷெரார்டு கெளபர்-கோல்ஸ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார்: "வெடிச் சம்பவம் ஒன்றை நான் பார்த்தேன், என் இடப்பக்க திசையில் புழுதி எழுந்தது, பின் அனைத்து திசைகளிலும் இருந்து சிறு துப்பாக்கி சத்தங்கள் கேட்கத் துவங்கின".

தாக்குதல் துவங்கிய பின் சுமார் இரண்டு நிமிடங்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடர்ந்தது. நூற்றுக்கணக்கான ஆப்கான் படையினர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் சேர்ந்து அவ்விடத்தை விட்டு ஓட்டமெடுக்கும் காட்சி தெரிந்தது. சம்பவ இடத்தில் இருந்த Associated Press செய்தியாளர் தெரிவித்தார், "எங்களை வியப்பேற்றும் விதமாக, சீருடையணிந்த படையினர்களும் ஆயுதமேந்திய போலிசாரும் எங்களுக்குப் பின்னர் தலைதெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தனர். அணிவகுப்பு இசைப் பிரிவின் சீருடை அணிந்த இசைக்குழுவினரும் ஓடி விட்டார்கள்".

அரசாங்கம் மற்றும் அதன் அமெரிக்க மற்றும் NATO ஆதரவுப் படையினருக்கு நிகழ்ந்த படுதோல்வி குறித்து கருத்து தெரிவித்த ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமலான் பஷார்தோஸ்த் இவ்வாறு கூறினார், "ஆப்கானிஸ்தானில் மக்கள் நம்பிக்கை வைக்கும் பாதுகாப்பு படை எதுவும் இல்லை. நேற்றைய சம்பவத்தை நீங்கள் பார்த்தால், சம்பவ இடத்தை விட்டு சாதாரண மக்கள் ஓடும் முன்னதாக பாதுகாப்பு படைகள் ஓடி விட்டன".

வி.ஐ.பிக்கள் பார்வையிடும் ஸ்டாண்டில் இருந்து சுமார் 300 யார் தொலைவில், போலிஸ் மற்றும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு சுற்று வளைவுக்குள் அமைந்திருக்கும் ஒரு கைவிடப்பட்ட ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து தான் தாக்குதல்காரர்கள் தானியங்கு துப்பாக்கிகள் கொண்டு தாக்கியதாகவும் வெடிகுண்டுகள் வீசியதாகவும் கூறப்படுகிறது. ஆதரவற்ற ஏழை மக்களும், வீடில்லாதவர்களும் தங்கியிருக்கும் அந்த இடத்திற்கு வெளியே பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் அறைகளைச் சோதனை போட தவறியிருக்கின்றனர்.

ஒரு கையெறி குண்டு அல்லது ராக்கெட் குண்டு பார்வையிடும் இடத்திலிருந்து வெறும் 20 மீட்டர்கள் தூரத்தில் வெடித்தது. தங்களது போராளிகள் கர்சாய் மற்றும் கூடியிருந்த அரசாங்க விருந்தினர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு 30 யார் தூரம் வரை சென்று விட்டதாக தலிபான்கள் கூறுகின்றனர்.

ஆப்கான் இராணுவப் படைகள் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தி தாக்குதல்காரர்களில் மூன்று பேரைக் கொன்று விட்டனர். இவர்கள் அனைவரும் ஆப்கான்காரர்கள் தான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இன்னும் மூன்று கலகக்காரர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

படுகொலை நடத்தத் துணிந்தவர்கள் ஜனாதிபதிக்கு மிக அருகில் வர முடிந்திருக்கிறது என்பதன் மூலம் கர்சாய் அரசாங்கம் மற்றும் அதன் அமெரிக்க ஆதரவாளர்களுக்கான பாதுகாப்பு சிக்கல்கள் மேலும் சிக்கலாகியிருக்கின்றது. நியூயோர்க் டைம்ஸ் கருத்துக் கூறியது போல, இந்த உண்மையானது "அவர்களுக்கு உள்ளிருந்து உதவி கிடைத்ததைக் காட்டுவதாக உள்ளது".

அணிவகுப்பு மைதானத்தில் இருந்து பின்புற வழியே பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்ட ஜனாதிபதி கர்சாய் தாக்குதலுக்கு சுமார் இரண்டு மணி நேரம் கழித்து நாட்டிற்கு உரையாற்றினார். கிளர்ச்சிக்காரர்களை சுற்றி வளைத்த ஆப்கான் பாதுகாப்புப் படையினரை அவர் பாராட்டினார். "கடவுளுக்கு நன்றி, இப்போது எல்லாமே சீராகி விட்டது. ஆப்கான் மக்கள் அமைதியுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்".

ஆனால், அமெரிக்க ஆதரவாளர்களுடன் ஆட்சியாளர்களுக்கு சமீப மாதங்களில் உறவு சற்று நலிவுற்று வருகிற நிலையில் இந்த சம்பவமானது ஆட்சிக்கு ஒரு அவமானகரமான அடியாகும். தலைநகரை தனது இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் அனுமதிக்காததற்காக கர்சாய் அமெரிக்கா மற்றும் நேட்டோவினை விமர்சித்திருந்தார். தலிபான் மற்றும் அல்கெய்தா தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த புதிய பாகிஸ்தான் அரசாங்கம் திட்டம் தீட்டியுள்ளதை தான் ஆதரிப்பதாக தாக்குதலுக்கு ஒருநாள் முன்பு தான் நியூயோர்க் டைம்ஸிடம் அவர் கூறியிருந்தார்.

கர்சாய் அமெரிக்காவின் ஊதுகுழல் அல்ல என்பது போன்றதொரு நாடகத்தை ஞாயிறன்று நடந்த தாக்குதல் இல்லாமல் செய்து விட்டது. அவர் தனது ஆட்சி தொடர்ந்து இருப்பதற்கு மட்டுமல்ல, தான் தொடர்ந்து இருப்பதற்கே கூட அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளையே முழுக்கவும் சார்ந்திருக்கிறார்.

இது காபூலில் இந்த ஆண்டு நடக்கும் இரண்டாவது மிகப்பெரிய கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதலாகும். உயர் அதிகாரிகளும் அயலுறவுத் தூதரக அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் அடிக்கடி வந்து செல்லும் ஒரு ஆடம்பர ஹோட்டல் மீது ஜனவரியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது.

கர்சாய்க்கு எதிராக இது நான்காவது படுகொலை முயற்சியாகும். ஆனால், முந்தையவை எல்லாம் காபூலுக்கு வெளியில் நிகழ்ந்தன. இதுவரை, பெரும்பாலும் கர்சாயின் நடமாட்டமே தலைநகருக்கு உள்ளே தனது கோட்டைச் சுவர் வளாகத்திற்குள் தான் வரம்புக்குட்பட்டதாக இருக்கிறது. முன்னெப்போதையும் விட நாட்டின் அதிகமான பகுதிகள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தலிபான்கள் அல்லது அரசாங்க விரோதப் படைகளின் கீழ் இருக்கின்றன. இப்போது, கர்சாய்க்கு பெரும் பாதுகாப்புடன் கூட காபூலுக்கு உள்ளேயே நகர்வது என்பது கூட சந்தேகத்திற்குள்ளாகி இருக்கிறது.

தலிபான்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் இருப்பதாக அமெரிக்கா கூறுவதின் ஒரு மறுப்பு பதிலிறுப்பாக இந்த தாக்குதலை தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் மேற்கோள் காட்டினார். "கர்சாயும் மற்றும் அவரது கேபினட்டும் தலிபான் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்க முடியாது" என்று ஜபிஹுல்லா முஜாஹித் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புகளின் அளவு அதிகரித்துள்ளதாகவும் மக்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் கூறித் தான் இந்த தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. தெற்கு மற்றும் கிழக்கில் தலிபான்களின் வளர்ச்சி மற்றும் வடக்கில் ஹெக்மதியாரின் ஹிஸ்ப்-இ-இஸ்லாமி படையினரின் வளர்ச்சி இவற்றை எதிர்கொள்ளும் முயற்சியில் அமெரிக்கா சமீப மாதங்களில் இந்நாட்டிலிருக்கும் தனது துருப்புகளின் எண்ணிக்கையை 32,000 என்கிற அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவும் நேட்டோவும் நாட்டில் சுமார் 70,000 துருப்புகளைக் கொண்டிருக்கின்றன.

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 12,000 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் கலகம் தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. 2008 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஏற்கனவே பதட்டமாக இருக்கும் தெற்குப் பகுதிகளுக்கு வெளியே 465 கிளர்ச்சித் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக Vigilant Strategic Services of Afghanistan என்னும் பாதுகாப்பு நிறுவனத்தில் ஆய்வு நிபுணராக இருக்கும் சமி கோவனென் மேற்கொண்ட ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இது கடந்த வருடத்தின் இதே சமயத்தோடு ஒப்பிட்டால் 35 சதவீதம் அதிகமாகும்.

காபூலைச் சுற்றியுள்ள மத்தியப் பகுதியில் ஜனவரி-மார்ச் 2008 காலத்தில் 80 கிளர்ச்சித் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இது 2007 இன் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது 70 சதவீதம் அதிகமாகும்.

காந்தகார் மற்றும் ஹெல்மன்ட் ஆகிய கிளர்ச்சி மையங்கள் உள்ளிட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில், கோவானென் கூற்றுப்படி, கெரில்லா தாக்குதல்கள் 40 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றன.

ஹிஸ்ப்-இ-இஸ்லாமி வடக்கில் வளர்கிறது என்று லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் ஆராய்ச்சியாளராக இருக்கும் அன்டோனியா குஸ்டோஸி தெரிவிக்கிறார். நாட்டின் வட தூரப் பகுதிகளில் தலிபான்கள் வளர்ச்சியுற்று வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஃபர்யப் மாகாணத்தின் துணை ஆளுநர் கூற்றுப்படி, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அண்டை மாநிலமான பத்ஹிஸ் மாகாணத்தில் கெரில்லாக்கள் 17 தாக்குதல்களை நடத்தியுள்ளனர். சென்ற ஆண்டின் இதே சமயத்தில் இது ஒரு தாக்குதலாக இருந்தது.

அமெரிக்க இராணுவ வன்முறை அதிகரிப்பதையும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகளை பெருமளவில் அதிகரிப்பதையும் நியாயப்படுத்துவதற்கு ஞாயிறன்று நடந்த தாக்குதல் அநேகமாக பயன்படுத்தப்படக் கூடும். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பதவிக்கான போட்டியாளர்களான பாரக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளின்டன் இருவருமே ஆப்கானில் கூடுதல் அமெரிக்க படைகளை நிறுத்த அழைப்பு விடுத்திருக்கின்றனர். அமெரிக்க மத்திய படையின் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆளுநரான ஜெனரல் டேவிட் பெட்ரேஸ், ஈராக்கில் சிறு அளவில் குறைக்கப்படும் அமெரிக்க துருப்புகளை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இருப்பை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.