World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan's parliament says future US raids should be repelled "with full force"

வருங்காலத்தில் அமெரிக்க தாக்குதல்கள் "முழு பலத்துடன்" எதிர்க்கப்பட வேண்டும் என்கிறது பாகிஸ்தான் நாடாளுமன்றம்

By Keith Jones
6 September 2008


Use this version to print | Send this link by email | Email the author

தெற்கு வஜிரிஸ்தானில் புதனன்று நடைபெற்ற அமெரிக்க சிறப்பு நடவடிக்கை படைகளின் தாக்குதல் போன்று பாகிஸ்தானுக்குள்ளான ஆயுத குறுக்கீடுகளை முறியடிக்க அரசாங்கம் இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் மசோதாவுக்கு ஆதரவாக வியாழனன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒருமனதாய் வாக்களித்தன.

அங்கூர் ஆடா அருகேயுள்ள ஒரு கிராமத்தில் அமெரிக்க படைகள் நிகழ்த்திய விடியலுக்கு முந்தைய தாக்குதலில் குறைந்தது கிராமத்தினர் இருபது பேர் கொல்லப்பட்டனர்.

"நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கும் வருங்காலத்தில் இத்தகைய தாக்குதல்களை முழு படைபலத்துடன் எதிர்கொள்வதற்கும் அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசாங்கம் எடுக்க வேண்டும்" என்று இணைந்த தேசிய அவை மற்றும் செனட் மசோதா வலியுறுத்துகிறது.

பாகிஸ்தானின் இறையாண்மையை அப்பட்டமாக மீறியிருப்பதும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-நேட்டோ கூட்டணி படைகள் போர் தீவிரத்தை அதிகரித்திருப்பதுமான ஒரு நடவடிக்கையின் அங்கமாக புதன்கிழமை தாக்குதலை அமெரிக்க படைகள் நிகழ்த்தின என்பதை ஒப்புக்கொள்ள புஷ் நிர்வாகம் மறுத்திருக்கிறது. ஆனால் பதிவில் வராத விவரிப்புகளில் பெயர் கூற விரும்பாத பென்டகன் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளனர், பாகிஸ்தானின் அப்பாவி பொதுமக்களை திட்டமிட்டு படுகொலை செய்ததை ஒரு வெற்றியாக குறிப்பிட்டு.

கடந்த ஒன்பது மாத காலங்களில், அமெரிக்காவின் மேல்தட்டு வர்க்கத்தினரிடையே ஆப்கானிஸ்தானில் போர் தீவிரத்தை பெருமளவில் அதிகரிப்பதற்கு ஒருமித்த ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த முனையில் பென்டகன் சமீபத்தில் இந்த மத்திய ஆசிய நாட்டில் துருப்பு நிறுத்தத்தில் "அதிகரிப்பை" தொடக்கியது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பை எதிர்த்தும், பாகிஸ்தானில் வரலாற்று ரீதியாக தன்னாட்சி பெற்றதாக திகழும் பெடரல்ரீதியாக நிர்வகிக்கப்படும் பழங்குடி இனப் பகுதிகளை (FATA) தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் முயற்சி செய்வதை எதிர்த்தும் பாகிஸ்தானின் பஸ்தூன் பேசும் எல்லை பிராந்தியங்களில் எழுகின்ற கலகத்தை அடக்குவதற்கு பாகிஸ்தான் மீது கொஞ்சம் கொஞ்சமாக நெருக்குதலை அதிகரிப்பதையும் இந்த மையப்புள்ளியை மாற்றும் மூலோபாயம் உள்ளடக்கியிருக்கிறது.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பாரக் ஒபாமா உள்ளிட்ட ஏராளமான அமெரிக்க அரசியல்வாதிகளும், ஓய்வுபெற்ற தளபதிகளும், மற்றும் அயலுறவுத் துறை நிபுணர்களும், பாகிஸ்தான் தனது எல்லை பிராந்தியங்களில் கலகங்களை துரிதமாக தணிக்க தோல்வியுறும் பட்சத்தில் இராணுவரீதியாக தலையிட அமெரிக்கா தயாராக வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றனர்.

உண்மையில், சுமார் ஐந்து வருடங்களாகவே இந்த பிராந்தியத்தில் பாகிஸ்தான் இராணுவம் பெரும் அளவிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டே வந்திருக்கிறது. பழங்குடியினர் மற்றும் கிராமங்கள் மீது காலனி ஆதிக்க பாணியிலான மொத்த தண்டனைகளை திணிப்பது, பெருமளவிலான அப்பாவி மக்களுக்கான பாதிப்புகள், மற்றும் அவர்கள் காணாமல் போவது இவற்றுக்கெல்லாம் காரணமாகியிருக்கும் பாகிஸ்தான் இராணுவத்தின் நடவடிக்கைகள் இங்குள்ள மக்களை விரோதிகளாக்கவும் பிராந்தியத்தை பதட்டத்துக்குள்ளாக்கவும் மட்டுமே செயலாற்றியிருக்கிறது.

பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில தினசரியான Dawn பத்திரிகையின் வெள்ளிக்கிழமை தலையங்கத்தில், புதன்கிழமை நடைபெற்றதைப் போன்றதொரு ஹெலிகாப்டர் தாக்குதல் மீண்டும் நடைபெறும் சாத்தியம் அதிகம் என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் வேளையில், இனியும் பாகிஸ்தானில் ஒருதரப்பான அமெரிக்க இராணுவ நடவடிக்கை என்பது "எல்லோருக்கும் தொல்லையைத் தவிர வேறெதனையும் தராது" என்று எச்சரித்தது. அந்த பத்திரிகை கூறியது, "கடந்த வாரங்களின் அனைத்து ஆதாரங்களும் இந்த தாக்குதலானது கடைசியானதாக இருக்கப் போவதில்லை என்கிற உண்மையைத் தான் வெளிப்படுத்துகின்றன. 'இன்னும் இது போல் நடைபெறுவதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன' என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி 'நியூயோர்க் டைம்ஸ்' இதழிடம் கூறியுள்ளார்".

வெள்ளியன்று, வடக்கு வஜிரிஸ்தான் கிராமமான கூர்வெக் பைபாலியில் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர், ஒரு வீடு இடிந்து தரைமட்டமானது.

பல வருடங்களாகவேயும், மற்றும் இந்த ஆண்டு அதிகமான எண்ணிக்கையிலேயும், அமெரிக்கா பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்கள், குறிப்பாக பெரும் அளவிலான பொதுமக்கள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பை பரவலாக வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால் ஆறு மாதம் முன்பு வரைக்கும் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரியான ஜெனரல் பர்வேஸ் முஷாரப் தலைமையேற்றிருந்ததான பாகிஸ்தான் அரசாங்கமானது, இத்தகைய தாக்குதல்களுக்கு தலையசைத்து வந்தது என்பது ஊரறிந்த இரகசியம். உண்மையில், பாகிஸ்தானுக்குள்ளாகவே சிஐஏ தனது இராணுவ தளம் ஒன்றைக் கொண்டிருப்பதாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நியூயோர்க் டைம்ஸ் செய்தி தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானுக்குள் அமெரிக்க துருப்புகள் ஊடுருவி நடத்திய புதன்கிழமை தாக்குதலுக்கு எழுந்திருக்கும் புயல் போன்ற எதிர்ப்புக்கு நடுவிலும், நேற்று அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் நிகழ்ந்திருப்பதானது, என்னதான் பாகிஸ்தான் உத்தியோகப்பூர்வமாக எதிர்ப்பை பதிவு செய்தாலும், பாகிஸ்தானின் இறையாண்மையை தனது விருப்பத்துக்கு மீறும் உரிமையை அமெரிக்கா கொண்டிருக்கிறது என்கிற செய்தியையே தெளிவாக தாங்கியதாய் இருக்கிறது.

இதனிடையே, பாகிஸ்தானின் அதிகாரிகள் தங்களது சொந்த செய்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். "பாதுகாப்பு காரணங்களை" முன்நிறுத்தி, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா மற்றும் நேட்டோ துருப்புகளுக்கு உணவு மற்றும் எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய பாதையான டோர்காம் எல்லை பாதையை வெள்ளியன்று பாகிஸ்தான் மூடியிருக்கிறது.

அமெரிக்க ஊடுருவலுக்கும் எல்லை மூடலுக்கும் ஏதும் தொடர்பில்லை என்று கைபர் ஏஜென்சியின் அரசியல் ஏஜெண்டான தாரிக் ஹயத்தை மேற்கோள் காட்டி (பாகிஸ்தான்) டெய்லி டைம்ஸ் தெரிவித்தது: "ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் சர்வதேச பாதுகாப்பு உதவி படைக்கான அனைத்து சப்ளைகளும் (டோர்ஹாம்) ஹைவே மிகவும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கும் வஜிரிஸ்தான் நிலைமை அல்லது அமெரிக்க தாக்குதல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை".

புதன்கிழமைக்கு முன்பு இருந்த அமெரிக்க-பாகிஸ்தான் கூட்டணியின் உறவை அமெரிக்கா பராமரிக்க வேண்டும் என்பதால் அமெரிக்காவை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு பாகிஸ்தான் இத்தகைய மறுப்புகளை தெரிவிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.

இதேபோல் வெள்ளிக்கிழமையன்று, பாகிஸ்தானின் ஊழியர்கள் கமிட்டியின் இணைத் தலைவர்களின் குழுவின் தலைவரான ஜெனரல் தாரிக் மஸ்ஜித், தங்கள் நாட்டுக்கு வருகை தந்த ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் பிரான்ஸ் ஜோசப் ஜங்கிடம், "வருங்காலத்தில் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் மேற்கொள்ளக் கூடிய எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதிலடியாக தாக்கும் உரிமையை பாகிஸ்தான் தக்க வைத்திருக்கிறது" என்று தெரிவித்தார். பின்னர் ஜேர்மனி செய்தியாளர்களிடம் பேசிய ஜங், "பாகிஸ்தான் தனது பிராந்தியத்தில் உள்ள பயங்கரவாதிகளுடன் தனது சொந்த பலத்தில் போரிடுவது மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். நாம் ஆப்கான் பகுதியில் இருந்து இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. பாகிஸ்தானின் பிராந்திய இறையாண்மை மதிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

இனி அமெரிக்க தாக்குதலை "முழு பலத்துடன்" எதிர்கொள்ள அச்சுறுத்தும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் தீர்மானமானது ஒரு அடையாளம் தான். ஆனால் அமெரிக்காவுக்கான வெகுஜன எதிர்ப்புணர்வு, மற்றும் வாஷிங்டனின் இந்த சீண்டல்கள் மீது மேல்தட்டினரின் கவலைகள் மற்றும் அதிருப்திகள் ஆகியவற்றை ஆழமாக வெளிப்படுத்தும் ஒன்று.

பெனாசிர் பூட்டோவின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கான (PPP) இணைத்தலைவரும், நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட இருப்பவருமான ஆஸிப் அலி சர்தாரி, அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" தனது ஆதரவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பாகிஸ்தான் எல்லை பிராந்தியங்களில் ஏற்படும் கலகமானது பாகிஸ்தான் பூர்சுவா அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக ஆக்குகிறது, எனவே அதனை அடக்குவது என்பது "நமது" போரே அன்றி அமெரிக்காவுடையது அல்ல என்பது அவருடைய வாதமாக இருக்கிறது.

ஆனாலும் அவரும் அமெரிக்காவுக்கான பொதுமக்கள் எதிர்ப்பை முழுமையாக புறக்கணிக்க முடியாது என்பதால் அமெரிக்க நடவடிக்கையை கடுமையாகக் கண்டிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். சாதாரண பாகிஸ்தானியர்களைப் பொறுத்தவரை அவர்கள் பயங்கரவாதத்தை அல்லது தலிபான்களை விடவும் அமெரிக்காவை மிகப் பெரிய அச்சுறுத்தலாகக் காண்கின்றனர் என்பதை வலது சாரி அமெரிக்க சிந்தனை குழாம்களால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து கண்டறிந்திருக்கின்றன. காரணம் இருக்கிறது. முஷாரப்பின் சர்வாதிகாரத்தை தீவிரமாக ஆதரித்து வந்திருக்கும் நிலையில், அமெரிக்கா இப்போது ஆப்கானிஸ்தானில் தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக பாகிஸ்தானின் பெரும் பகுதியை கொலைக்களமாக மாற்றுவதற்கு பிரயத்தனம் செய்து வருகிறது.

பாகிஸ்தான் இராணுவம் அமெரிக்காவுடன் தசாப்த காலமாக நெருக்கமான ஒத்துழைப்பைக் கொண்டிருக்கிறது. ஆப்கான் ஊடுருவலுக்கு பின்புல இயக்க ஆதரவை நல்குவதற்கும், அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்கு சித்திரவதை தளங்கள் மற்றும் பிற சேவைகளை அளிப்பதற்கும் அமெரிக்கா அளித்திருக்கும் பில்லியன் கணக்கான தொகையால் அது அழகாக ஆதாயமுற்றிருக்கிறது.

ஆனால் அமெரிக்காவின் அதிகரிக்கும் கோரிக்கைகள் அதிருப்திகளை உருவாக்குவனவாக இருக்கின்றன. எல்லைப் பகுதிகளில் குறிப்பாக பஸ்தூன் பகுதியில், தங்கள் சகோதரர்கள் என தாங்கள் கருதும் மக்களிடையே எழும் கலகங்களை தணிக்கும் முயற்சிகள் இராணுவத்தினரிடையே அதிருப்தியையும் ஒத்துழைப்பின்மையையும் சம்பாதித்திருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வருகின்றன. பாகிஸ்தான் இராணுவத்தில் படையினர்கள் மற்றும் அதிகாரிகள் என இரு தரப்பிலும் பெரும் சதவீதத்திலான பஸ்தூன் இனத்தவர் உள்ளனர்.

தேசத்தின் வருவாயிலும் அதன் செறிவான அரசியல் அதிகாரத்திலும் பெரும் பங்கினைக் கோருவதற்கான நியாயப்படுத்தலாக தான் கூறும் மையப்புள்ளியாகிய 'பாகிஸ்தானின் இறையாண்மைக்கு பாதுகாவலர்' என்னும் பாகிஸ்தான் இராணுவத்தின் வாதம் புதனன்று நடந்த தாக்குதலால் பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது தவிர, பாகிஸ்தான் மேல்தட்டு வர்க்கத்தின் பிற பிரிவினரைப் போலவே, ஹமீத் கர்சாயின் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனும், பாகிஸ்தானின் வரலாற்று எதிரியான இந்தியாவுடனும் நெருக்கமான உறவுகளுக்கு அமெரிக்க இராணுவம் இணக்கம் கொண்டிருப்பதும் - அந்நாடுகளை ஊக்கப்படுத்துகிறது என்று ஒருவேளை கூற முடியாத பட்சத்தில் - பாகிஸ்தான் இராணுவத்திற்கு எச்சரிக்கையூட்டியிருக்கிறது. கடைசியாக ஆனால் முக்கியமானதாக, மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பத்திற்கு இந்தியாவுக்கு அணுகல் அளித்திருப்பதன் மூலம் அமெரிக்கா அடிப்படையாக தெற்கு ஆசியாவின் அதிகார சமநிலையை இந்தியாவுக்கு சாதகமாக திருப்பியிருப்பதாக பாகிஸ்தான் மேல்தட்டு வர்க்கம் நம்புகிறது.

இன்றைய ஜனாதிபதி தேர்தல்

பாகிஸ்தானின் தேசிய அவை மற்றும் நான்கு மாகாண அவைகளின் உறுப்பினர்கள் சேர்ந்து இன்று முஷாரப்புக்கு அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்ய இருக்கிறார்கள். கண்டன தீர்மானத்தை தடுக்கவும் கிரிமினல் வழக்கினைத் தவிர்க்கவும் சென்ற மாதம் முஷாரப் இராஜினாமா செய்திருந்தார்.

தேர்தல் மீது நிழலாடுவது அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகளில் நேர்ந்துள்ள நெருக்கடியும் நாட்டின் முக்கியமான அளவு பகுதிகளில் அரசு தனது கட்டுப்பாட்டினை பெருமளவில் இழந்துள்ளதும் மட்டுமல்ல; பாகிஸ்தானின் பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி ஆறு ஆண்டு குறைவினை எட்டியிருக்கிறது. பணவீக்கம் 25 சதவீதம் என்கிற அளவில் இருக்கிறது. உணவும் எரிசக்தி விலைகளும் இன்னும் விலை மிகுந்ததாய் இருக்கின்றன. ஏறக்குறைய ஒரு வருட காலமாக, பாகிஸ்தான் உணவுப்பழக்கத்தின் முக்கிய உணவான கோதுமை மாவில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறைகள் இருக்கின்றன. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பாகிஸ்தானின் ரூபாயானது அமெரிக்க டாலருக்கு நிகராக 40 சதவீதம் வரை சரிந்திருக்கிறது மற்றும் நாட்டின் பண கையிருப்பு ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைந்து 9.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மாறியிருக்கிறது.

அனைத்து பார்வையாளர்களின் கருத்துப் படி, சர்தாரி ஜனாதிபதியாக தேர்வாவது என்பது முன்கூட்டி அறியத்தக்க ஒன்று தான். MQM (1947 மற்றும் 1950 க்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தவர்களை பிரதிநிதித்துவப்படும் நோக்கோடு இயங்குவது) கட்சி மற்றும் சென்ற பிப்ரவரி தேர்தலில் முஷாரபின் இராணுவ ஆதரவுடனான PML-Q படுதோல்வி அடையும் வரை முஷாரபுக்கு விசுவாசமாக செயல்பட்டு வந்த இஸ்லாமிய JUI-F ஆகிய கட்சிகள் உள்பட பல்தரப்பட்ட கட்சிகள் அவருக்கு ஆதரவளிக்கின்றன.

முன்னாள் தலைமை நீதிபதி சயீத் உஸ் சமான் மற்றும் முஷாகித் ஹூசைன் சயீத் ஆகியோர் இரண்டு பிற வேட்பாளர்கள். அவர்களை முறையே நவாஸ் ஷெரிபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியும் PML(Q) கட்சியும் ஆதரிக்கின்றன.

ஆகஸ்டு 20 அன்று, அதாவது முஷாரப் தனது இராஜினாமாவை அறிவித்து PPP தனது ஜனாதிபதி வேட்பாளராக சர்தாரியை அறிவித்த இரண்டு தினங்களில், PPP தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு தனது கட்சியின் ஆதரவை திரும்பப் பெற்றார் நவாஸ் ஷெரிப்.

PPP மற்றும் PML (N) கட்சிகள் நீண்ட கால கடும் எதிரிகள். 1990களில் PPP அரசுகளை கவிழ்ப்பதற்கு PML (N) கட்சி தொடர்ந்து இராணுவத்துடனும் அதிகாரத்துவத்துடனும் தொடர்ந்து இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறது. 1999 இல் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு எதிராக முஷாரப் செய்த இராணுவப் புரட்சியை பெனாசிர் பூட்டோ ஆரம்பத்தில் ஆதரித்தார்.

PPP தலைமையிலான கூட்டணிக்கு தனது கட்சியின் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டதை நியாயப்படுத்தியிருக்கும் ஷெரிப், ஜனாதிபதி பதவிக்கு ஒரு "பொது வேட்பாளரை" நிறுத்த அளித்த வாக்குறுதியை சர்தாரி கைவிட்டதையும், சென்ற நவம்பரில் அவசரநிலை பிரகடனத்தின் கீழ் முஷாரப்பால் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி மற்றும் பிற நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்துவதில் அரசாங்கம் தவறியிருப்பதையும் காரணம் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி பதவிக்கு பரந்த அரசியல் சட்ட அதிகாரங்கள் உள்ளது, அரசாங்கத்தை நீக்குவது மற்றும் தேசிய அவையைக் கலைப்பது உள்ளிட.

PML (N) தலைமையில் பஞ்சாப் மாகாணத்தில் கூட்டணி அரசாங்கம் இயங்கி வருகிறது. நாட்டின் பணக்கார மாகாணமாகவும் அதன் பெரும்பான்மை மக்கள்தொகை கொண்டதாகவும் திகழும் இந்த மாகாணத்தில், பெடரல் அரசாங்கத்திற்கும் பஞ்சாப் அரசாங்கத்திற்கும் இடையில் மோதல் எழக் கூடும் என்ற சாத்தியக் கூறினைக் காட்டி, கூட்டணி அரசாங்கத்தில் இருக்கும் PPP அமைச்சர்கள் பதவி விலகுவதற்கு PML (N) இப்போது கோரி வருகிறது.

PPP மற்றும் PML (N) இரண்டு கட்சிகளுமே முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையின் கட்சிகள். கடந்த இரண்டு தசாப்தங்களில் PPP தான் அதிகாரத்தில் இருந்த சமயங்களில் எல்லாம் தனியார்மயமாக்கம், சந்தைமயமாக்கல் மற்றும் பிற வலது சாரி ஒழுக்கமயமாக்கல் நடவடிக்கைகளை செயலுறுத்தியிருக்கிறது என்றாலும், ஏழைகளுக்கான கட்சியாகத் தான் அது இன்னும் தன்னைக் காட்டிக் கொள்கிறது.

ஒரு தொழிலதிபரும் சபதமேற்கும் வலதுசாரியுமான ஷெரிப் தனது அரசியல் வாழ்க்கையில் முன்னாள் சர்வாதிகாரி ஜியா-உல்-ஹக்குக்கு தான் கடன்பட்டவராக இருக்கிறார். முஷாரப்பினால் பாதிக்கப்பட்டவராக தன்னை காட்டிக் கொள்வதன் மூலமும் வெகுஜன அமெரிக்க எதிர்ப்பு உணர்வுக்கு அளவெடுத்து அழைப்புகள் விடுப்பதன் மூலமும் தனக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கு இது ஒருபோதும் அவருக்கு தடையாக இருந்ததில்லை.

இரண்டு கட்சிகளுமே ஜனநாயகத்தின் சாம்பியன்களாக தங்களை பறைசாற்றிக் கொள்கின்றன. ஆனால் முஷாரப் ஆட்சியிலிருந்து விடுவிப்பதன் மீதான அவர்களது கடந்த 18 மாத கால நடவடிக்கைகள் பறைசாற்றுவதெல்லாம் வெகுஜன மக்கள் அரசியல் வாழ்க்கைக்குள் நுழைவதை தடுப்பதிலும், இராணுவத்தின் கைப்பிடிக்குள் இருப்பதிலும், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளுக்கு அடிமைத்தனத்தை கடைப்பிடிப்பதிலும் அவர்கள் தீர்மானமாய் இருப்பதையே விளங்கப்படுத்துவதாய் இருக்கின்றன.