World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

US air strike massacres civilians in western Afghanistan

அமெரிக்க விமான தாக்குதல் மேற்கு ஆப்கானிஸ்தானில் பொதுமக்களை கொன்று குவிக்கிறது

By James Cogan
26 August 2008


Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க தலைமையிலான ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில், மிக மோசமான கொடுமைகளில் ஒன்றாக கடந்த வெள்ளியன்று மேற்கு மாகாணமான ஹீரட்டில் நடந்த அமெரிக்க விமான தாக்குதல் ஒன்றில் 90 குடிமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மற்றும் இராணுவ வட்டாரங்களின் தகவல்கள்படி, அதில் குறைந்தபட்சம் 15 வயதிற்கு குறைந்த 60 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க ஆயுத உற்பத்திச்சாலையின் பயங்கர போர்விமானங்களில் ஒன்றான AC-130 "ஸ்பூக்கி" மூலம் தரையில் இருந்த பாதுகாப்பற்ற மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. விரைவாக செல்லும் ஐந்து குழல் 25மிமீ தொடர்குண்டு துப்பாக்கி ஒன்றுடன், ஒரு 40மிமீ பீரங்கி மற்றும் ஒரு 105மிமீ அகன்ற கோண துப்பாக்கி ஆகியவற்றை உட்கொண்டிருந்த இது, ஏராளமான தோட்டாக்கள் மற்றும் பீரங்கி ஷெல்களை கொண்டு இலக்கை நாசமாக ஆக்கிவிடும் தன்மையுடைய வடிவமைப்பை கொண்டதாகும்.

ஹீரட் நகருக்கு 120 கி.மீ. தெற்கே ஷின்டண்ட் அரசாங்க விமானத் தளத்திற்கு அருகே உள்ள அஜிசாபாத் எனும் கிராமத்திலுள்ள சமூகத்தில் இருந்த பெரும் கூட்டத்தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டனர். இவர்களின் உள்ளூர் தலைவர் ஒருவர் இறந்த பின்னர் 40வது நாள் நினைவு தின மரபு கூட்டத்திற்கு இவர்கள் வந்திருந்தனர். கிராமத்தின் ஆண்களில் பலர் விமானத்தளத்தில் பாதுகாப்பு வேலையில் உள்ளவர்கள்.

இவர்கள் எப்படி அமெரிக்க விமானத் தாக்குதலுக்கு இலக்காயினர் என்பது முரண்பாடான அறிக்கைகளினால் இன்னமும் மர்மாகவே உள்ளது. அமெரிக்க இராணுவ தகவல்படி, முல்லா சித்திக் என்ற எழுச்சியாளருக்கு எதிராக ஒரு நடவடிக்கை ஏற்பாடாகியிருந்தது. சித்திக்கை கைப்பற்ற செல்ல முயன்ற ஆப்கானிஸ்தான் அரசாங்க படைகள் நடுவில் மறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் அதிலிருந்து தப்பித்து, தங்களை தாக்கியவர்களை அஜிசாபாத் வரை பின் தொடர்ந்தனர்; அங்கு அவர்கள் கிராமத்தை அழிக்க AC-130 க்கு அழைப்புவிடுத்தனர்.

அமெரிக்க இராணுவம் முதலில் வெளியிட்ட அறிக்கைகள், தாங்கள் ஹீரட் மாகாணத்திலுள்ள தாலிபாான் போராளிகளை வெற்றிகரமாக தாக்கி குறைந்ததாகவும், 30 பேரை கொன்றதாகவும் பெருமையடித்து கொண்டன. ஆனால் ஹீரட் மாவட்ட அதிகாரிகள், ஆப்கானிஸ்தான் இராணுவ அதிகாரிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள், செய்தியாளர்கள் மற்றும் ஜனாதிபதி ஹமித் கர்சாய் அரசாங்கத்தின் மூத்த மந்திரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர்தான் உண்மை வெளிப்பட்டது.

வெள்ளியன்று மாலை ஆப்கானிய உள்துறை அமைச்சகம் பின்வரும் ஓர் அறிக்கையை வெளியிட்டது: "76 நபர்கள், அனைவரும் சாதாரண குடிமக்கள், அதில் பெரும்பாலான பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டனர்...19 பெண்கள், 7 ஆண்கள் மற்றவர்கள் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்." பொறுப்பற்ற அமெரிக்க விமான தாக்குதல் பற்றி பலமுறை எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்சாய், தனிப்பட்ட ஓர் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அதில் ஆக்கிரமிப்பு படைகளால் குறைந்தது 70 நபர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள்" என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் செய்தி தொடர்பாளரான ராபுப் அஹ்மெதி Washington Post யிடம் கூறுகையில், சனிக்கிழமை அஜிசாபாத்திற்கு பயணித்த அதிகாரிகள் இறந்தவர்களிடையே 19 பெண்கள் மற்றும் 60 குழந்தைகளை கண்டதாக தெரிவித்தார். "அவர்கள் தாலிபாானை சேர்ந்தவர்கள் என்பதற்கான எந்த அடையாளமும் எங்களிடம் இல்லை, எங்களுக்கு கிடைக்கவும் இல்லை." என்று அவர் கூறினார். அசோசேடட் பிரஸ் புகைப்பட நிருபர் ஒருவர் 20 வீடுகளுக்கு மேல் அழிந்ததை பார்த்ததாகவும், புதிதாக தோண்டப்பட்ட 20 கல்லறைகளை கண்டதாகவும், அவற்றில் சில பல சடலங்களை கொண்டிருந்தன என்றும் தெரிவித்தார்.

மாவட்டத்தில் இருந்த மக்கள் அனைவரும் சனிக்கிழமையன்று அஜிசாபாத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "அமெரிக்கா ஒழிக" என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர். ஒரு போலீஸ் காரை தீயிட்டதாகவும், தப்பி பிழைத்தவர்களுக்கு உணவு, உடை ஆகியவற்றை வழங்கி கொண்டிருந்த அரசாங்க துருப்புக்கள் மீது கற்களை வீசியதாகவும் கூறப்படுகிறது. கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியபோது, அதில் குறைந்தது எட்டு நபர்கள் காயமடைந்தனர்.

உள்ளூர் பள்ளி தலைமை ஆசிரியரான குலாம் அசரத் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறியதாவது: "மக்கள் மிகவும் கோபமுற்றுள்ளனர். அவர்கள் துருப்புக்களிடம் 'உங்கள் உணவு எங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் கொடுக்கும் உடை எங்களுக்கு தேவை இல்லை. எங்களுடைய குழந்தைகள் வேண்டும். எங்கள் உறவினர்கள் வேண்டும். அவர்களை உங்களால் திருப்பி கொடுக்க முடியுமா? முடியாது. நீங்கள் புறப்பட்டு செல்லுங்கள்' என்று கூறினர்"

ஞாயிறுக்கிழமையில், விமான தாக்குதலினால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை உயர்ந்து விட்டது. இஸ்லாமிய விவகார மந்திரியான நேமதுல்லா ஷரானி Agence France Presse இடம் கூறியதாவது: "அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டோம்; மிக அதிக அளவில் குண்டு வீச்சு இருந்திருக்க வேண்டும்; ஏராளமான வீடுகள் சேதமுற்றுள்ளன; 90க்கும் மேற்பட்ட யுத்தத்தில் ஈடுபடாதவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் தான். அங்கு தாலிபாான்கள் இருந்ததாக அவர்கள் (அமெரிக்க இராணுவத்தினர்) தெரிவிக்கின்றனர். அவர்கள் அதை நிரூபிக்க வேண்டும். கூட்டணி இந்த வான் தாக்குலை ஏன் நடத்தியது என்று இதுவரை எங்களுக்கு தெளிவாகவில்லை."

ஆப்கானிஸ்தான் முழுவதும் இப்படுகொலை பற்றிய செய்தி பரவியதும், மேற்கு ஆப்கானிஸ்தானின் உயர்மட்ட இராணுவ தளபதியையும், விமான தாக்குதலுக்கு உத்தரவிட்ட கமாண்டோ படையின் தளபதியையும் பதவியிலிருந்து அகற்றியதன் மூலம் அமெரிக்க ஆக்கிரமிப்பு மீதான எதிர்ப்பை கர்சாய் கட்டுப்படுத்த முயன்றார். தாலிபாான்கள் கொல்லப்பட்டனர் என்ற வதந்தியை குறிப்பிட்டு, "அலட்சியம் மற்றும் உண்மையை மறைத்ததற்காக இருவரும் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக கர்சாய் தெரிவித்தார்.

புஷ் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் டோனி பிரட்டோ ஞாயிறன்று ஓர் அறிக்கையை வெளியிட்டார். அமெரிக்க இராணுவம் சாதாரண மக்களை படுகொலை செய்தது என்பதை அது இன்னமும் ஏற்கவில்லை. பிரட்டோ கூறியதாவது: "இத்தகவல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன; விசாரணையின் முடிவு வரை காத்திருப்போம்." விமர்சிக்கும் வகையிலான சொற்களுடன் அவர் மேலும் குறிப்பிட்டதாவது: "பொதுமக்களையும், பொதுமக்களின் இடங்களையும் கனமாக குறி வைத்து தாக்கும் தாலிபாாான்கள் மற்றும் போராளிகளை போல் இல்லாமல், கூட்டணி படைகள் எப்பொழுதும் பொதுமக்கள் உயிரிழப்பை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன." என்றார்.

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவ தலைமையகத்திலிருந்து வெளியான செய்திக்குறிப்பு தெரிவிப்பதாவது: "ஹீரட் மாகாணத்தில் ஷின்டண்ட் மாவட்டத்தில் வெள்ளியன்று நடந்த கலகலப்பில் பொதுமக்கள் இறந்திருக்கலாம் என்று கூறும் கருத்துக்கள் பதிவாகியுள்ளன."

இந்த அஜிசாபாத் படுகொலையானது, அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் அடிக்கடி ஆப்கானிஸ்தான் குடிமக்களை படுகொலை செய்வதிலும், அவர்களை காயப்படுத்துவதிலும் ஈடுபடுவதின் ஒரு தெளிவான அடையாளமாகவே உள்ளது. "முன்னெச்சரிக்கைகள்" எடுக்கப்பட்டதாகவும், இராணுவ நடவடிக்கைகள் மீது கெடுபிடியான விதிகள் பின்பற்றப்பட்டதாகவும் பிரச்சாரங்கள் குறிப்பிட்ட போதினும், புறநகர் பகுதிகளிலுள்ள தாலிபான் இயக்கங்களை தகர்க்க கடுமையான துப்பாக்கி சூடு மற்றும் தொடர்ச்சியான விமான குண்டுவீச்சுகளின் மூலம் மக்கள் நிறைந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு படைகள் போராளிகளுக்கு பதிலடி அளிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் மிக அதிக பகுதிகள் தாலிபாான் கட்டுப்பாட்டின்கீழ் வருவதால், விமான தாக்குதல்கள் இன்னும் பொறுப்பற்ற முறையில் வந்துள்ளன. கிராமப்புற பகுதிகளில் நிறைய மக்கள் கூட்டம் செல்லுவதோ அல்லது கிராமத்தில் மக்கள் கூடுவதோ தங்கள் பாதுகாப்பான தளங்களில் இருந்து துணைக்கோள் தோற்றங்களை ஆபத்தான இலக்குகளை ஆப்கானிஸ்தான் வான்பகுதியை கண்காணிப்பவர்களால் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றன. திருமண குழுக்கள் பலமுறையும் கடந்த ஆறு ஆண்டுகளில் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன-- மிக சமீபத்தியது என்னவென்றால் ஜூலை 6ம் தேதி நடந்தது. அதில் நங்கர்ஹர் எனுமிடத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றின் மீது நடந்த தாக்குதலில் மணமகள் உட்பட 47 நபர்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும், இதுவரை சுமார் 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 400க்கும் அண்மையிலான உயிரிழப்புகள் நேரடியாக ஆக்கிரமிப்பு படைகளால் ஏற்படுத்தப்பட்டன. மற்றவர்கள் தாலிபாாான்களால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களிலும், குண்டுவீச்சுக்களிலும் இறந்ததாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

பொதுமக்களின் இறப்பு பற்றிய சரியான எண்ணிக்கை இன்னமும் கூடுதலாக இருக்கும். அமெரிக்க அல்லது நேட்டோ தாக்குதல்களினால் மிக அதிக அளவு குண்டுவீச்சு நடந்த இடங்களில், சில உயிரிழப்புகள் தெரிவிக்கப்படுவிதில்லை. போராளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு இந்த ஆண்டு கொல்லப்பட்ட சில ஆயிரக்கணக்கானவர்கள், உண்மையில் மோதலில் மாட்டி கொண்ட கலகத்தில் ஈடுபடாதவர்கள் என்று கருதுவதற்கான அடித்தளமும் உள்ளது.

ஆழ்ந்த புதைகுழி

அப்பாவிகளின் உயிரிழப்பு பற்றிய ஒவ்வொரு அறிவிப்பும் மில்லியன் கணக்கான ஆப்கானியர்களுக்கு அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பின் மீது பொதுவான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் என்ற அவர்களின் ஒப்புதலை, ஹமித் கர்சாய் போன்ற பிரபலங்களின் உணர்வுகள் தாங்கிபிடிக்கின்றன. அனைத்திற்கும் மேலாக, ஓர் ஊழல் நிறைந்த, திறமையற்ற அமெரிக்க கைப்பாவை ஆட்சியாக பரவலாக மதிக்கப்படும் காபூல் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பையும் இது வளர்த்துவிடுகிறது.

மக்களின் இரக்கத்தையும், ஆதரவையும் பெருமளவில் பெற்று வருவதால், பாக்கிஸ்தான் எல்லையில் பழங்குடி பிரிவுகளுக்குள் உள்ள தாலிபான், பிற ஊழலற்ற ஆக்கிரமிப்பு போராளிகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் பஷ்டூன் மக்கள் நிறைந்திருக்கும் தெற்கு மற்றும் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாண பகுதிகளில் நிறுவிவிட்டன.

போராளிகளின் எண்ணிக்கையும், பரவலும் தீவிரமாகியுள்ள நிலையில், ஆக்கிரமிப்பு படைகளின் உயிரிழப்புகளும் மிக அதிகளவு உயர்ந்துள்ளன. 2008ல், இதுவரை அமெரிக்க மற்றும் நேட்டோ படையின் உயிரிழப்புகள் 194ஆக உள்ளது. இது யுத்தம் தொடங்கிய பின்னர் அடைந்திருக்கும் இரண்டாவது அதிகபட்ச ஆண்டு எண்ணிக்கையாகும். தற்போதைய போக்கை கருத்தில் கொண்டால், கடந்த ஆண்டின் 232 உயிரிழப்புகளையும் தாண்டிவிட கூடும்.

மிக குறைந்த ஆயுதங்களை ஏந்திய ஆப்கானிஸ்தான் இராணுவமும், போலீஸும் மிக அதிகளவில் இறப்புவிகிதத்தை எதிர்கொண்டுள்ளன. உள்துறை அமைச்சரகம் ஓர் அறிக்கையில் ஆகஸ்ட் தொடக்கத்தில் 600 போலீசார் உயிரிழந்தனர் என்றும், 800க்கும் மேலானவர்கள் கடந்த நான்கு மாதங்களில் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கிறது. ஒப்பீட்டளவில் இராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் பெரும்பாலான வாரங்களில் 10 முதல் 20 வரையிலான ஆப்கான் துருப்புகள் கொல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்பொழுது ஆப்கானிஸ்தானில், நேட்டோ நாடுகள் மற்றும் அமெரிக்க கூட்டினரின் 30,000 கூடுதல் துருப்புகளுடன், 34,000 அமெரிக்க துருப்புக்களும் அங்கு உள்ளன. ஆப்கானிஸ்தான் இராணுவம் 65,000 துருப்புக்களை கொண்டுள்ளது, ஆனால் அதன் பிரிவுகளில் பெரும்பாலானவை, நேட்டோ கட்டுப்பாட்டிலுள்ள சர்வதேச பாதுகாப்பு உதவிப்படையின் [International Security Assistance Force (ISAF)] விமான பலம், தாக்குதல் ஆதரவு, சரக்கு மற்றும் உளவுத்துறை உதவியின்றி இயங்க முடியாது.

இதற்கு பிரதிபலிப்பாக, ஜனநாயக கட்சி மற்றும் அதன் ஜனநாதிபதி வேட்பாளர் பராக் ஓபாமாவின் இரட்டை ஆதரவுடன், படைப்பிரிவிலிருந்து தொடங்கி 12,000 அமெரிக்க துருப்புகளை முடிந்தவரை விரைவாக நவம்பரில் அனுப்ப புஷ் நிர்வாகம் தயாராகி வருகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் இன்னும் 4,500 படையினரை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், ஆப்கானிஸ்தானில் அதன் எண்ணிக்கை பின்னர் 12,000ஆக உயரும். மற்ற ஐரோப்பிய சக்திகளும் இன்னும் கூடுதலான படையை அனுப்புமாறு வாஷிங்டனின் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும், கொரில்லாக்கள் பாக்கிஸ்தானின் பழங்குடி பகுதியை பாதுகாப்பான பதுங்கும் பகுதிகளாக பயன்படுத்தினால், கூடுதல் துருப்புகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பி வைப்பதால் ஆயுதமேந்தி போராளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்று மூலோபாய மற்றும் இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த பழங்குடி புகலிடங்களை தாக்கி அழிக்குமாறு பாக்கிஸ்தானிய அரசாங்கம் புஷ் நிர்வாகத்தால் அழுத்தம் அளிக்கப்படுகிறது. பஜெளர் மற்றும் முகம்மது மாவட்டங்களில், பஷ்டூன் கிராமங்கள் மீது மிருகத்தனமாக விமான தாக்குதல்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 300,000 பழங்குடி மக்கள் உயிர்பிழைக்க தங்கள் வாழ்வாதாரத்தை விட்டு ஓடிவிட்டனர். ஆப்கான் தாலிபானுடைய முக்கிய தளமாக நம்பப்படும் தெற்கு வஜீரிஸ்தானில் கடந்த வார இறுதியில், மோதல்களும், குண்டுவீச்சுக்களும் நடந்ததாக தெரிகிறது.

எவ்வாறிருப்பினும், எல்லை பகுதி முழுவதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், பாக்கிஸ்தான் இராணுவம் பல ஆயிரக்கணக்கான துருப்புக்களை தன்னாட்சி பகுதியான கூட்டாட்சி நிர்வாக பழங்குடி பிரிவிற்கு (Federally Administered Tribal Agencies FATA) அனுப்பும் கட்டாயத்தில் உள்ளது. பாக்கிஸ்தானில் அத்தகைய நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு கிடையாது. Terror Free Tomorrow நடத்திய கருத்துக்கணிப்பு, இன்றைய அமெரிக்காவில் ஆகஸ்ட் 22 மேற்கோளிட்டது, 55 சதவீத விடையிறுத்தவர்கள் பழங்குடி எல்லையில் நடக்கும் வன்முறைக்கு அமெரிக்காதான் பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளனர். 6 சதவீதத்தினர்தான் இஸ்லாமிய போராளிகள்மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். International Republican Institute நடத்திய மற்றொரு கருத்துக்கணிப்பில் 71 சதவீதத்தினர் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க யுத்தத்திற்கு பாக்கிஸ்தான் ஒத்துழைப்பு அளிப்பதை தாங்கள் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிரதம மந்திரி யூசப் ராசா கிலானியின் உறுதியற்ற அரசாங்கம் பெரியளவில் FATA இராணுவத்தை இறக்கினால், அது மிக அதிகமான முறையில் அமைதியின்மையை எதிர்கொள்ளும் என்பதுடன் இராணுவதிடமிருந்தும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடலாம்.

சர்வதேசம் மற்றும் மூலோபாய ஆய்விற்கான மையத்தின் [Center for International and Strategic Studies (CSIS)] ஆய்வாளர் Anthony Cordesman, ஆப்கான் யுத்தம் குறித்து கணித்திருக்கும் தீர்மானங்கள், அமெரிக்க ஆளும் வட்டாரங்களை பரந்த அளவில் எட்டியுள்ளன.

ஆகஸ்ட் 21 அறிக்கையில் Cordesman குறிப்பிட்டதாவது: "ஆப்கான்-பாக்கிஸ்தான் யுத்தம் இரு-நாட்டு யுத்தம், அது ஆப்கானிஸ்தானில் மட்டும் வெற்றி பெற முடியாது. இக்காலக்கட்டத்தில், நடைமுறையில் முழு ஆப்கானிய-பாக்கிஸ்தானிய எல்லையிலும் காணப்படும் பன்முக எழுச்சியை சந்திக்க, அமெரிக்க-நேட்டோ/ISAF-ஆப்கானிய படைகள் மிகவும் வலிமையற்றுள்ளன... ஆப்கான்-பாக்கிஸ்தான் யுத்தம் இன்னுமொரு தசாப்தத்திற்கு மேலாக நடக்கலாம் என்று தெரிகிறது. அது அமெரிக்கா மற்றும் பாக்கிஸ்தானின் அடுத்துவரும் ஜனாதிபதிகளின் அலுவலகங்களுக்கும் கூட ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கலாம்..."

ஒபாமாவின் பிரச்சார உரைகளை நேரடியாக எதிரொலிக்கும் வகையில், Cordesman உறுதிப்பட கூறியதாவது: "பாக்கிஸ்தானின் புதிய அரசாங்கம் இன்னும் கூடுதலான உறுதியான ஆக்கிரோஷ நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை தவிர அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளுக்கும் வேறு வழி ஏதும் இல்லை... முடிவான நடவடிக்கைகளுக்கான முடிவுகள் எடுக்கவிருப்பது பாக்கிஸ்தான் தான், ஆனால் இத்தகைய முடிவுகளை எடுக்கும் வரை அமெரிக்கா பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்பதையும், பாக்கிஸ்தான் விரைந்து செயல்படவில்லை என்றால் பாக்கிஸ்தான் பிராந்தியத்தை யுத்த களமாக நடத்தப்பட வேண்டி இருக்கலாம் என்றும் அது பாக்கிஸ்தானுக்கு தெளிவாக்க வேண்டும்."

பராக் ஒபாமா அல்லது ஜோன் மெக்கெயின் என்று எவருடைய தலைமையில் அடுத்த புதிய அமெரிக்க நிர்வாகம் அமைந்தாலும், பாக்கிஸ்தான் எல்லைகளில் "மறக்கப்பட்ட யுத்தம்" என்று குறிப்பிடப்பட்ட அமெரிக்காவின் நடவடிக்கைகள் விரிவாக்கப்படும் என்பதாக காணப்படுகிறது. வெள்ளியன்று நடந்த அஜிசாபாத் கிராம படுகொலைகள், அமெரிக்கா "யுத்த களமாக" நடத்தும் பகுதிகளுக்கு என்ன நடக்கும் என்பதற்கான எச்சரிக்கையாக அமைகிறது.