World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Row over Internet "war plans" highlights China-Vietnam tensions

இணையத்தில் வெளியாகும் "யுத்த திட்டங்கள்" பற்றிய வாக்குவாதம் சீனா-வியட்நாம் பதட்டங்களை விளக்கமாக கூறுகிறது

By John Chan
22 September 2008


Use this version to print | Send this link by email | Email the author

வியட்நாமுடனான ஒரு யுத்தம் குறித்து சீனாவில் நடக்கும் இணைய கலந்துரையாடல்களுக்கு ஹனாய் (வியட்நாமின் தலைநகர்) உத்தியோகபூர்வமாக கண்டனம் தெரிவித்த பின்னர், கடந்த இரண்டு வாரங்களில் வியட்நாம் மற்றும் சீனா இடையிலான உறவுகள் மோசமடைந்தன. சீன தேசியவாத வெறியர்களின் ஒரு சிறு அடுக்குகளால் மட்டுமே இந்த கலந்துரையாடல்கள் வலைத் தளத்தில் பதிக்கப்பட்டிருந்த போதினும், தெற்கு சீன கடல் பிராந்தியம் உட்பட, மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களில் முரண்பாடு கொண்டுள்ள இந்த இரு நாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களை இந்நிகழ்ச்சி அடிக்கோடிடுகிறது.

செப்டம்பர் 5ல், South China Morning Post-TM வெளியான தகவலின்படி, ஆகஸ்டிலிருந்து சீன வலைத் தளங்களில் வரும் "யுத்த திட்டங்கள்" குறித்து விவரங்கள் அளிக்க மூத்த சீன இராஜாங்க பிரதிநிதிகளுக்கு ஹனாய் இருமுறை அழைப்பு ஆணை விடுத்தது. ஐந்து நாட்களுக்கான ஏவுகணை தாக்குதல்களுடன் தொடங்கி ஒரு முழு வீச்சிலான வியட்நாம் மீதான தாக்குதலின் சாத்தியக்கூறுகளை இந்த யுத்த திட்டங்கள் வரையறுத்திருந்தன. கடற்படை முற்றுகை மற்றும் வியட்நாமின் தொலைதொடர்பு சேவை முடக்கம் ஆகியவற்றை தொடர்ந்து, சீனாவின் யூன்னான் மற்றும் கியாங்சி மாகாணங்களிலிருந்தும் மற்றும் தெற்கு சீன கடலில் இருந்தும் 310,000 சீன துருப்புகள் வடக்கு வியட்நாமிற்குள் நுழையலாம் என்று இந்த திட்டங்கள் குறிப்பிட்டன.

சீனாவின் ஒரு முக்கிய செய்தி வலைத்தளமான Sina.com மற்றும் பல பிற தளங்களிலும் இந்த பதிவுகள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று பின்வருமாறு குறிப்பிட்டது: "சீன மாகாணங்களின் பாதுகாப்பிற்கு வியட்நாம் ஒரு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் சீனாவின் அமைதியான முன்னேற்றத்திற்கும் வியட்நாம் ஒரு தடையாக உள்ளது... தென்கிழக்கு ஆசியா முழுமைக்கும் வியட்நாம் ஒரு மூலோபாய மையமாக உள்ளதால், தென்கிழக்கு ஆசியா முழுமையும் மீண்டும் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டுமானால், முதலில் வியட்நாம் கைப்பற்றப்பட வேண்டும்."

இந்த தீவிர தேசியவாதிகள் பெய்ஜிங்கின் கொள்கை வடிவாக்கத்தில் நேரடியாக எவ்வித செல்வாக்கையும் பெற்றிருக்கவில்லை என்ற போதினும், உண்மையில், சீனாவின் கடுமையான இணைய போலீஸின் எவ்வித தலையீடும் இல்லாமல் இதுபோன்ற பொது விவாதங்கள் பதிப்பிக்கப்பட்டது, உத்தியோகப்பூர்வ அனுமதியின் ஒரு கோணத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது. சீனா ஒரு முக்கிய சக்தியாக வளர்வதில் தான், தங்களின் எதிர்காலம் உள்ளடங்கி இருப்பதாக காணும் சீனாவின் நடுத்தர வர்க்கங்களிடையே ஆதரவை பெறுவதற்கான ஒரு புதிய அடித்தளத்திற்காக, பெய்ஜிங் நினைவுப்பூர்வமாக தேசியவாதத்தை ஊக்குவித்து வருகிறது.

பெய்ஜிங் மற்றும் ஹனாய் இரண்டுமே உடனடியாக அந்த பிரச்சனையைத் தணிவிக்க முயற்சித்தன. வியட்நாமின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லீ டங் கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பாதிக்கும் எதிர்மறை கட்டுரைகளைத் தடுக்க சீனா உறுதியளித்திருப்பதாக அறிவித்தார். அதே சமயம், சீனாவின் ஒரு அரசாங்க செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த பதிவுகள், மக்களில் தொல்லை தரும் ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள், "இது எந்த வகையிலும் சீனாவின் நிலைப்பாட்டை குறிப்பவையல்ல" என்றார்.

South China Morning Post இதழிடம் சீனாவின் ஓர் இராணுவ நிபுணர் Song Xiaojun பேசும் போது, "யுத்த திட்டங்களை" ஒரு "பகடியாக" கூறி நிராகரித்தார். எவ்வாறிருப்பினும், தீங்கு விளைவிக்க கூடிய சதித்திட்ட கோட்பாடுகளைத் தவிர்ப்பதற்காக பொதுக்கருத்துக்களை நெறிப்படுத்த சீன அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த போதினும், வியட்நாமுடன் பதட்டங்கள் நிலவுவதாக Song குறிப்பிட்டார். "சீனா மற்றும் வியட்நாம் இரண்டும் ஒரே மாதிரியான அரசியல் முறைகளை கொண்டுள்ளன. எனவே இரண்டு நாடுகளுக்கும் பொது எதிரியான அமெரிக்காவை எதிர்க்க இவை ஒன்றுபட வேண்டும். வளர்ந்து வரும் சீனாவிற்கு எதிராக வியட்நாமைத் திருப்ப தெளிவாக இதில் அமெரிக்கா விளையாடி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

சீனா மீதான அமெரிக்காவின் மூலோபாய சுற்றிவளைப்புகளின் ஒரு பகுதியாக, அது வியட்நாமுடன் உறவுகளை வலுப்படுத்தி வருகிறது என்ற அரசாங்க வட்டாரங்களின் பரந்த கவலைகளை தான் Songன் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. தெற்கு சீன கடலிலுள்ள ஸ்ப்ராட்லி மற்றும் பாராசெல் தீவுகள் மீது பதட்டங்கள் அதிகரித்து வருக்கின்றன. ஜூலையில், தெற்கு சீன கடலின் பிரச்சனைக்குரிய கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை அபிவிருத்தி செய்வதற்கு அமெரிக்க எண்ணெய் நிறுவனமான Exxon Mobil உடன் ஹனோய் செய்து கொண்ட ஓர் உடன்படிக்கைக்கு பெய்ஜிங் கண்டனம் தெரிவித்தது. எண்ணெய் வயல் மற்றும் குழாய் அமைப்பு திட்டங்களுக்கு ஒப்பந்த புள்ளிகளை அளிக்குமாறு மேற்கத்திய மற்றும் ஆசிய எண்ணெய் பெருநிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, ஸ்ப்ராட்லி தீவுகள் மீதான இறையாண்மையை வியாட்நாமின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவித்தது.

பெய்ஜிங்கைப் போலவே, ஹனோயும் நாட்டுப்பற்றை ஊக்குவித்து வருகிறது. ஸ்பார்ட்லி மற்றும் பாராசெல் தீவுகளை சீனாவின் ஹைனன் மாகாணத்துடன் பெய்ஜிங் உத்தியோகப்பூர்வமாக இணைத்த பின்னர், கடந்த டிசம்பரில் நூற்றுக்கணக்கான வியட்நாம் மாணவர்கள் சீன எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினார்கள். ஹனாய், "சீன ஆக்கிரமிப்புக்கு" எதிராய் நிற்க வேண்டும் என்று போராட்டகாரர்கள் வற்புறுத்தினார்கள்.

கசப்பான வரலாறு

இந்த இரண்டு ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு இடையிலான உறவுகளின் வரலாறானது குறிப்பிடத்தக்க வேதனைகளின் ஒன்றாக விளங்குகிறது.

1960களின் தொடக்கம் வரை, சீன மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்டு கட்சிகள் உத்தியோகப்பூர்வமாக சோவியத் அணிக்குள் இருந்தன. எவ்வாறிருப்பினும், 1953ல் பிரெஞ்சு முன்மொழிந்த வியட்நாமிய பிரிவினையை ஏற்க ஹோ சி- மின்- ஐ வற்புறுத்தி, ஏகாதிபத்திய சக்திகளுடனான தங்கள் பேரங்களுக்கு, மாஸ்கோவை போலவே, பெய்ஜிங்கும் வியட்நாமுக்குள் காலனித்துவ எதிர்ப்பு போராட்டத்தை பகடைக்காயாக நடத்திக் கொண்டது. இந்த உடன்படிக்கை, ஓர் ஊழல்மிக்க தெற்கு வியட்நாம் சர்வாதிகாரத்திற்கு ஆதரவளிப்பதில் பிரான்ஸிற்கு பதிலாக அமெரிக்காவிற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது; இறுதியில், இது 1965ல் நேரடியாக அமெரிக்க இராணுவத்தின் தலையீட்டிற்கும், மில்லியன் கணக்கான வியட்நாமியர்களின் மரணத்திற்கும் இட்டு சென்றது.

1960களில் ஏற்பட்ட சீன-சோவியத் பிளவில், மாஸ்கோ பெய்ஜிங்கிற்கு எதிராக வடக்கு வியட்நாம் பக்கம் நின்றது. சோவியத் ஒன்றியத்துடனான தீவிரமடைந்த பதட்டங்களும், சொந்த நாட்டில் இருந்த பொருளாதார பிரச்சனைகளும், 1972ல் மீண்டும் அமெரிக்காவுடனான உறவை ஏற்படுத்த மாவோ சே துங்கை இட்டு சென்றது. நிக்சன் நிர்வாகத்தை பொறுத்தவரை, வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தின் தோல்வியினால் ஆசியாவிலிருந்து வெளியேறுவதில் சீனாவின் ஆதரவைத் தக்கவைப்பது தான் இந்த உடன்படிக்கை ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக இருந்தது.

1979 பெப்ரவரியில், கம்போடியாவில் பெய்ஜிங் ஆதரவான பொல்-போட் ஆட்சியை வீழ்த்தியதற்கு பிரதிபலிப்பாக சீனா வியட்நாம் மீது யுத்தம் தொடுத்தது. 200,000த்திற்கும் மேலான சீன துருப்புகள் வடக்கு வியட்நாம் மீது தாக்குதல் நடத்தின. கடுமையான யுத்தத்திற்கு இட்டு சென்ற இந்நடவடிக்கையில், ஆயிரக்கணக்கான வீரர்களும், பல வியட்நாம் குடிமக்களும் கூட உயிரிழந்தனர். Deng Xiaoping தமது வாஷிங்டன் விஜயத்திற்கு சில வாரங்களுக்கு பின்னர், அவர் அறிவித்த "சந்தை சீர்திருத்தத்தை" தொடங்கிய வெறும் இரண்டு மாதங்களில் பெய்ஜிங் இந்த யுத்தத்தை தொடங்கியது.

சீன துருப்புகளைத் திரும்ப பெறுவதையும் உள்ளடக்கிய பொசுக்கிய புவி கொள்கையானது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஆத்திரத்தை தான் அதிகப்படுத்தியது. உலகின் மிகப்பெரிய போர் இல்லாத காலத்து நிரந்தர சேனைகளில் ஒன்றை வியட்நாம் தொடர்ந்து பராமரித்து வருவதற்கு, சீனா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் தான் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 1980களில் தொடர்ந்து வந்த பரவலான சிறுசிறு மோதல்கள், ஹனாயின் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் சிதைவிற்கு பின்னர் படிப்படியாக குறைந்து போயின.

வியட்நாமின் தொழிலாளர்களும், மாணவர்களும் கூட இந்த உதாரணத்தை பின்பற்றலாம் என்ற அச்சம் சிறிதுமின்றி, 1989ல், தியனன்மென் (Tiananmen) சதுக்கத்தில் போராட்டக்காரர்களை கொன்று குவித்த பெய்ஜிங்கின் படுகொலைக்கு உலகளவில் வெளிப்படையாக ஆதரவளித்த சில அரசாங்கங்களில் ஹனோயும் ஒன்றாக இருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் அதிகரித்து வரும் போதினும், பதட்டங்கள் தொடர்ந்து நிலவுகின்றன. தற்போது சீனா ஒரு புதிய பொருளாதார சக்தியாக பரிணமித்துள்ளதால், ஸ்பாட்லி தீவுகள் மீது தொடர்ந்து வரும் வியட்நாமின் கட்டுப்பாடுகளை ஒரு மூலோபாய தடையாக பெய்ஜிங்கில் ஆளும் மேற்தட்டின் பிரிவுகள் காணுகின்றன. இராணுவத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் சீனாவின் முன்னணி பாதுகாப்புத்துறை இதழான, Ordnance Knowledge, ஜனவரியில், தெற்கு சீன கடலில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளுக்காக சீனாவின் "ஆழ்கடல்" கப்பற்படையின் திறனை குற்றஞ்சாட்டியது.

ஸ்பார்ட்லி குழுவிலுள்ள 7 தீவுகளை சீனா கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது, அதிகபட்சமாக 29 தீவுகளை கொண்டுள்ள வியட்நாம், அவற்றை பாதுகாக்க சுமார் 2,000 துருப்புகளை நிறுத்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் 8 தீவுகளையும், மலேசியா 5 தீவுகளையும் மற்றும் தாய்வான் 1 தீவையும் அவற்றின் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன. புரூனே மற்றும் இந்தோனேஷியா இரண்டும் கூட அந்த பகுதிகளில் கடல் சார்கோரிக்கைகளை கொண்டுள்ளன.

தெற்கு சீன கடலில் ஏற்படும் போட்டிகள் பல தசாப்தங்களாக நடந்து வருகின்றன. 1974ல், பாராசெல் தீவுகளை ஆக்கிரமிக்க தெற்கு வியட்நாமிய ஆட்சியின் உடனடி சிதைவை சீனா ஆதாயமாக்கி கொண்டது. 1988ல், ஸ்பராட்லி வளைவிலுள்ள ஜோன்சன் கடல் கற்பாறையை சீனா கைப்பற்றிய போது, சீன மற்றும் வியட்நாம் கப்பற்படைகள் மோதி கொண்டன. வியட்நாம் அதன் தென் கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பில் (ASEAN) உள்ள அதன் உறுப்பினர் பதவி மூலம் சீனாவை எதிர் கொண்டுள்ளது. அதில் 1995ல், தெற்கு சீன கடல் பிரச்சனைகள் மீது பெய்ஜிங்கிற்கு ஓர் ஒட்டுமொத்த பிரதிபலிப்பை அளிக்க இருதரப்பு பேச்சுவார்த்தைகளைப் புறக்கணித்தது.

கட்டுப்பாடற்ற வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் கூட்டு பொருளாதார மண்டலங்கள் மூலம் ASEAN நாடுகளுடன் சீனா நெருக்கமான உறவுகளை விரும்புவதால், சமீபத்திய ஆண்டுகளில் பெய்ஜிங் மற்றும் ஹனாய் இடையிலான உறவுகள் மேம்பட்டுள்ளன. 2002ல், தெற்கு சீன கடல் உட்பட இப்பிராந்தியத்தில் உள்ள பிரச்சனையை மேலும் சிக்கலாக்காமல் இருக்க, ASEAN நாடுகளுடன் பெய்ஜிங் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

எவ்வாறிருப்பினும், ஆழ்ந்த அவநம்பிக்கை நிலவுகிறது. வியட்நாம், மலேசியா மற்றும் பிற நாடுகள் இராணுவ பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும், தீவுகளில் தங்களின் பிடியை வலுப்படுத்த யுத்த கப்பல்கள், யுத்த விமானங்கள் மற்றும் ரோந்து படகுகள் போன்ற புதிய சாதனங்கள் வாங்குவதாகவும் Ordnance Knowledge குற்றஞ்சாட்டியது. 1995ல் வியட்நாம் உடனான உறவுகளை அமெரிக்க சீர்படுத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் செல்வாக்கு குறித்தும் சீனா கவலை கொண்டுள்ளது. 2003ல் இருந்து வியட்நாமை பார்வையிட வாஷிங்டன் யுத்த கப்பல்களை அனுப்பி வருவதால், சீனாவை சுற்றி வளைப்பதற்கான அதன் பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாக அமெரிக்கா நெருக்கமான இராணுவ உறவுகளை விரும்புவதாக சீனாவில் அச்சம் அதிகரித்துள்ளது.

கணிசமான பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் தெற்கு சீன கடலில் நிலை கொண்டுள்ளன. வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா ம்றறும் புரூனே ஆகிய நாடுகளால் ஸ்ப்ராட்லிஸைச் சுற்றி 500க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சீனாவால் கோரப்படும் கடலுக்கடியிலுள்ள சுமார் 100 கிணறுகளும் இதில் உள்ளடங்கும். மொத்த ஆண்டு வெளியீடு 50 மில்லியன் டன்களை எட்டியுள்ளது என்பதுடன் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் இரண்டிற்கும் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் ஈடுவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக இது மாறியுள்ளது. தெற்கு சீன கடலில் சுமார் 35 பில்லியன் டன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதில் 22.5 பில்லியன் டன் வளங்கள் சீனா கோரும் பகுதிகளில் உள்ளன.

குறிப்பிடத்தக்க வகையில், உலகின் மிக முக்கிய கடல்வழிகளில் சில (குறிப்பாக, மத்திய கிழக்கிலிருந்து வடகிழக்கு ஆசியா வரை) தெற்கு சீனா கடல் வழியாக செல்கின்றன. சீனாவின் வெளியுறவு வர்த்தகம் மற்றும் எண்ணெய் "வாழ்வாதாரத்திற்கு" ஸ்ப்ராட்லி தீவுகள் இதயம் போன்றிருப்பதாக Ordnance Knowledge குறிப்பிட்டது. சீனாவின் 39 கடல்வழிகளில் 21 வழித்தடங்கள் ஸ்ப்ராட்லிஸ் தீவுகள் வழியாக கடந்து செல்கின்றன. இது சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 60 சதவீத இடத்தைப் பிடிக்கிறது. மலாக்கா ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களில் சுமார் 60 சதவீதம் சீனாவினுடையது, இது மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவிலிருந்து சீனாவின் எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதம் இடம் பிடிக்கிறது.

அந்த இதழ் குறிப்பிட்டதாவது: "வெளியுறவு வர்த்தகம் மற்றும் கடல்-தள பொருளாதாரம் அபிவிருத்தி அடையும் போது, நமது தேசிய நலன்கள் படிப்படியாக அன்னிய நாடுகளை நோக்கி விரிவடைகின்றன. கடல்எல்லை மற்றும் வெளிநாட்டு நலன்களிடமிருந்து பாதுகாப்பதற்கான முக்கிய பொறுப்பேற்றுள்ள கடற்படை, சுமூகமான மற்றும் துல்லியமான பாதைகளை ஏற்படுத்தி அளிக்க வேண்டும்... கிழக்கிலிருந்து பசிபிக்கிற்கும் மற்றும் மேற்கிலிருந்து இந்திய பெருங்கடலுக்கும் இடையிலான சுமூக போக்குவரத்திற்கு, தீவுத்தொடரின் கட்டுப்பாடுகளை நீக்க ஸ்ப்ராட்லிஸை துல்லியமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது நமது கடற்படையின் ஒரு முக்கிய தேவையாகும்."

ஜப்பான் போன்ற முக்கிய போட்டியாளர்களுக்கும் இந்த தீவுகள் ஒரு முக்கிய ஆயுதமாகலாம் என்பதையும் Ordnance Knowledge குறிப்பிட்டது. "ஸ்ப்ராட்லிஸ் தீவுகளையும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் துல்லியமாக கட்டுப்படுத்துவது என்பது சீனாவின் தடுக்கும் சக்தியை ஊக்குவிக்கும், மேலும் நேரடியாக கட்டுப்படுத்துவதாலும் மற்றும் சர்வதேச எண்ணெய் வாழ்வாதாரங்கள் மீது செல்வாக்கை அதிகரிப்பதன் மூலமும் மூலோபாய முனைவுகளை சீனா எடுக்கலாம். விரோத சக்திகளை நேரடியாக அச்சுறுத்துவது என்பது ஒரு கூர்மையாக நடவடிக்கையாக அமையும், அது தெற்கு சீனா கடலைச் சுற்றியுள்ள மேற்கத்திய சக்திகளுக்கு மேலும் அச்சமூட்டும்." என்று அந்த இதழ் குறிப்பிட்டது.

தெற்கு சீனா கடலின் அருகில், ஹைனனின் தெற்கு தீவில் சீனா ஒரு பெரிய கடற்தளத்தை கட்டமைத்து கொண்டிருந்ததாக ஏப்ரலில் பல மேற்கத்திய ஆய்வாளர்கள் குறிப்பிட்டார்கள். அது எதிர்காலத்தில் 20 நீர்மூழ்கி கப்பல்கள் உட்பட, ஒரு யுத்த விமான தடம் அல்லது நீரிலும், நிலத்திலும் செயல்படும் யுத்த குழுக்களை கொண்டிருக்கும் ஒரு பெரிய கடற்படையை அனுமதிக்க கூடும். அதன் சொந்த வர்த்தக கடற்வழிகள் மற்றும் எண்ணெய் வினியோகத்தைப் பாதுகாப்பதில், சீனா அதன் போட்டியாளர்களை வெளிப்படையாகவே அச்சுறுத்தி வருகிறது.

வியட்நாம் மீது தாக்குதல் நடத்துவதற்கான "திட்டங்கள்" சீன வலை பதிவர்களுக்கு ஒரு முக்கிய விடயமாக அல்லது செல்வாக்கு மிக்கதாக இருக்காது என்ற போதினும், தென் சீன கடல் மீதான கட்டுப்பாடு பிரச்சனைகள் மற்றும் பிற பதட்டங்கள், அண்டை நாடுகள் மற்றும் முக்கிய சக்திகளுக்கு இடையே உடனடியாக மோதலை தூண்டி விடும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.