World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: War refugees to be detained in huge "welfare camps"

இலங்கை: யுத்த அகதிகள் பிரமாண்டமான "நலன்புரி முகாம்களில்" தடுத்து வைக்கப்படிருக்கிறார்கள்.

By Sampath Perera
20 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

நாட்டின் தமிழ் மக்களை "விடுதலை" செய்வதற்கே யுத்தம் முன்னெடுக்கப்படுவதாக கூறிக்கொண்ட போதிலும், இராணுவத்துக்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தற்போதைய மோதல்களில் சிக்கிக்கொண்டுள்ள 200,000 வரையான தமிழ் பொதுமக்களை தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்க கொழும்பில் உள்ள இலங்கை அரசாங்கம் திட்டங்களை தீட்டியுள்ளது.

தொண்டு நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, வடகிழக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் கால் மில்லியன் பொதுமக்கள் அகப்பட்டுள்ளார்கள். உணவு, சுத்தமான தண்ணீர், தங்குமிடம் மற்றும் மருத்துவ பராமரிப்பு உட்பட அடிப்படை தேவைகள் மிகவும் பற்றாக்குறையாக உள்ளன. இந்தப் பிரதேசம் இராணுவத்தின் கண்மூடித்தனமான ஆட்லறி மற்றும் விமானக் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காவதால் நூற்றுக் கணக்கான உயிரிழப்பதோடு மிகப் பெரும்பாலானவர்கள் காயமடைகின்றனர்.

அங்கிருந்து தப்பியோடுவோர், நலன்புரி நிலையங்குளக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்னதாக, வடக்கு யுத்த வலயத்துக்கு அருகில் உள்ள இடமாற்று நிலையங்களில் பாதுகாப்பு படைகளால் தடுத்து வைக்கப்படுகிறாரகள். சர்வதேச ஆதரவையும் நிதியையும் பெற்றுக்கொள்ளும் ஒரு முயற்சியாக, எஞ்சியுள்ள அகதிகள் அனைவரையும் தடுத்து வைக்க முகாம்களை விரிவாக்கும் திட்டங்கள் கொழும்பில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கும் இராஜதந்திரிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி செயலகத்தினால் வரையப்பட்ட திட்டங்களின் விபரங்கள், அதன் உள்ளடக்கத்தால் தொந்தரவுக்கு உள்ளான இரு தொண்டு ஏஜன்சிகளால் அசோசியேட் பிரஸ் ஊடகத்திற்கு கசிய விடப்பட்டுள்ளன. இதற்குப் பொறுப்பான அமைச்சின் செயராளர் ரஜீவ விஜயரட்ணவை தொடர்பு கொண்டு ஒரு பிரதியைப் பெறுவதற்கும், அவரின் கருத்தை அறிந்து கொள்வதற்கும் WSWS மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது. ஆனால் அவர் தொடர்ச்சியாக "தொடர்பு கொள்ள முடியாதவராக" இருந்தார்.

யதார்த்தத்தில், நலன்புரி முகாம்கள் அல்லது கிராமங்கள் மிகப் பெரிய சிறைகளாக இருக்கப் போகின்றன. 40,000 முதல் 50,000 குடும்பங்கள் அல்லது 200,000 பேர்வரை தங்குவதற்கு ஐந்து இடங்களில் முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. வவுனியா நகருக்கு அருகில் நான்கும் வடமேற்குக் கரையோரப் பகுதியில் உள்ள மன்னாரில் ஒன்றும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தம்மை முகாமுக்கு அனுப்புவார்களா அல்லது தம்மால் சுதந்திரமாக வெளியேற முடியுமா என்பது பற்றி அகதிகளுக்கு எந்தத் தேர்வும் கிடையாது. அகதிகளை மூன்று வருடத்துக்கு இந்த முகாம்களில் தடுத்து வைப்பதே தற்போதைய திட்டமாகும்.

இந்த முகாமின் அமைப்பு தனித்து ஒதுக்கப்பட்டதாக இருக்கும். ஒவ்வொரு நலன்புரி கிராமமும் 39,000 அரை நிரந்தர வீடுகளையும், 7,800 மலசல கூடங்களையும் மற்றும் 780 மலசல குழிகளையும், அதேபோல் பூங்காக்கள், தபால் கந்தோர்கள், வங்கிகள், களஞ்சியங்கள் மற்றும் 390 சனசமூக நிலையங்களையும் உள்ளடக்கியாதக இருக்கும். 86,000 க்கும் கூடுதாலன மாணவர்களுக்கு சுமார் 40 பாடசாலைகள் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் சர்வதேச விமர்சனங்களை முன் உணர்ந்து கொண்டுள்ள அரசாங்க அமைச்சர்களும் அதிகாரிகளும், அகதிகளுக்கான பாதுகாப்பு மற்றும் நலன்களிலேயே தாம் அக்கறை செலுத்துவதாகக் கூறிக்கொள்கின்றனர். அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, "கிராமங்கள் பொதுமக்களால் நடத்தப்டும்" மற்றும் உரிய காலத்துக்கு முன்னர் எவரும் மீளக் குடியமர நெருக்கப்படமாட்டார்கள் என மீண்டும் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும், சமரசிங்கவின் அமைச்சு செயலாளரான ரஜீவ விஜேசிங்க, முகாம்களை நடத்துவதில் இராணுவத்தின் "பெரிய தலையீடு" இருக்கும் எனபதை தெளிவு படுத்தினார். அகதிகளை கண்காணிப்பதில் இராணுவம் ஈடுபடும். இந்த அகதிகள் புலி என்ற சந்தேகத்தின் பேரில் குற்றச்சாட்டுக்கள் இன்றி காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படும் வாய்ப்புகளுக்கு முகம் கொடுப்பார்கள். விஜேசிங்க லண்டனைத் தளமாகக் கொண்ட டைம்ஸ் பத்திரிகையுடன் பேசுகையில், "உறுதியாக, இது சுயவிருப்பு பற்றிய விடயம் அல்ல -நாம் ஒவ்வொருவரையும் சோதனை செய்யவேண்டியுள்ளது. நாங்கள் பொது மக்கள் மத்தியில் ஊடுருவும் பயங்கரவாதிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கின்றோம். பாதுகாப்பு முதன்மையானது," என்றார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், முகாம்களாக உள்ளவை, தடுப்பு முகாம்களாக பயன்படுத்தப்படுவது பற்றி கடந்த டிசம்பரில் கேள்வி எழுப்பியிருந்தது. ஊடகம் மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் அங்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பகம் கூறுகிறது. எவரும் சுதந்திரமாக வந்து போக அனுமதிக்கப்படுவதில்லை. வெளியே செல்ல வேண்டியவர்கள் அனுமதி பெறவேண்டியிருப்பதோடு அவரது உறுவினர் ஒருவர் பணையமாக அங்கு இருக்கவேண்டும். இந்த முகாம் முற்கம்பிகளால் சூழப்பட்டிருப்பதோடு அங்கு பெருமளவு இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் மன்னார் மாவட்டத்தில் உள்ள முகாம் ஒன்றில் வாழ்பவர்களுடன் டைம் சஞ்சிகை பேசியது. அங்கு ஐந்து வயதுக்குக் குறைந்த 39 சிறுவர்கள் உட்பட 450 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்த தங்குமிடங்களில் அடிப்படை வசதிகள் குறைவாக இருந்தன. முகாமைச் சுற்றி முட்கம்பிகள் போடப்பட்டிருந்ததுடன் எந்நேரமும் இராணுவம் காவலில் இருந்தனர். கட்டுரை தெளிவுபடுத்தியது போல், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் வேறு சர்வதேச அமைப்புக்களும் முகாம்களைத் திறந்து விட வேண்டுமென்று அழுத்தம் கொடுத்திருந்தன. இதற்குப் பதிலாக, அரசாங்கம் ஜனவரி 10 அன்று, அந்த முகாம்களை "உயர் பாதுகாப்பு வலயமாக" மாற்றியதுடன், ஐ.நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை தவிர வேறு யாரும் அங்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

தாம் முகாம்களில் தங்குவதற்கு விரும்பவில்லை என்று அதிகளவான மக்கள் டைம் சஞ்சிகையிடம் தெரிவித்தார்கள். தங்களது ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் உறவினர்கள் அவர்களை அழைத்துச்செல்ல விரும்புவதாகவும் தங்களைப் பராமரித்துக்கொள்ள தங்களிடம் பணம் இருப்பதாகவும் அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தனர். "நாங்கள் இந்த விடயங்களை இராணுவத் தளபதிக்குச் சொன்னோம்" எனத் தெரிவித்த ஒரு அகதி, எங்களை விடுதலை செய்யுமாறு கோரி எழுதிய பல கடிதங்களுக்கு பதில் இல்லை என விளக்கினார். "எனக்குப் பித்துப் பிடிக்கும் போல் இருக்கிறது. நாங்கள் எந்தவித காரணமும் இன்றி வைக்கப்பட்டிருக்கிறோம் என்று மக்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்," என்றார் அவர்.

தெற்காசிய உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்ற குழு தலைவராக உள்ள, தொழிற் கட்சி அரசியல்வாதி ரொபேட் இவான்ஸ், இலங்ககைக்கு வந்திருந்தபோது லண்டன் டைம்ஸ் சஞ்சிகைக்கு தெரிவித்ததாவது: "இவைகள் நலன்புரி முகாம்கள் அல்ல; யுத்தக் கைதிகள் இருக்கும் ஒருமுகப்படுத்தப்பட் முகாம்களாகும்." பிரிட்டன் சர்வதேச அபிவிருத்தித் திணைக்களம், "நடைமுறைத் திட்டங்கள் சர்வதேச மனிதாபிமான தரத்துக்கு அமைய போதியளவு தீர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று நாங்கள் நம்பவில்லை" என எச்சரிக்கையாக பிரகடனம் செய்தது.

விமர்சனத்தை நசுக்கும் முயற்சியில், தமது திட்டங்களை புதுப்பித்திருப்பதாகவும், அதனால் 2009 முடிவில் 80 வீதமான அகதிகளை மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது ஒரு போலியான வாக்குறுதியாகும். ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவால் கிழக்கு "விடுவிக்கப்பட்டுவிட்டதாக" பிரகடனப்படுத்தப்ட்டு 18 மாதங்களின் பின்னர் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில், 15 தற்காலிக முகாம்களில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த 60,058 குடும்பங்கள் இன்னும் எஞ்சியுள்ளதாக, அரசாங்கத்தின் பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் பேசும் போது ஏற்றுக்கொண்டார்.

யுத்த அகதிகளை மலிந்த கூலியாகப் பயன்படுத்திக் கொள்ள வர்த்தகத் தலைவர்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளார்கள். ஆடை உற்பத்தி நிறுவன சங்கங்களின் கூட்டு அமைப்பின் பொதுச் செயலாளர் றொகான் மசாக்கொரலா, தமது உறுப்பினர்கள் "நல்ல எதிர்பார்ப்புகளுடன் யுத்த வெற்றிகளை அவதானிக்கின்றனர்" என பெப்பிரவரி 15 வெளியான ராவய பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார். "இது எங்ளுடைய வர்த்தகத்துக்கும் முழு பொருளாதாரத்துக்கும் ஒரு முன்னேற்றமான நிலைமையாக இருக்கும். நிலத்தை, மக்களை மற்றும் நிர்வாகத்தை கைப்பற்றுதல் எப்போதும் மூலதன முதலீட்டுக்கு சாத்தியமான ஊக்கத்தை வழங்கும்.

''வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள யுத்த அகதிகள் மிகவும் குறைந்த கூலிக்கு உழைப்பை வழங்குவார்கள். மலிந்த கூலியில் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவது சாத்தியமாவதால், தெற்கை விட வடக்கு மற்றும் கிழக்கில் ஆடைத் தொழிற்சாலைகளில் முதலீடு செய்வது மிகவும் முன்னேற்றமானதாக இருக்கும். வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திர வர்த்தக வலையங்களை அமைக்குமாறு நாம் அரசாங்கத்துக்கு பிரேரணை முன்வைக்கின்றோம். அப்போது எங்களால் அதிகபட்ச இலாபத்தை பெற முடியும்," என றொகான் மசாக்கொரலா மேலும் தெரிவித்தார்.