World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

The significance of the British Socialist Workers Party's call for a new "left alternative"

பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கட்சியின் புதிய "இடது மாற்றீட்டிற்கான" அழைப்பின் முக்கியத்துவம்

By Tony Robson and Chris Marsden
28 July 2009

Use this version to print | Send feedback

பிரிட்டனில் உள்ள சோசலிச தொழிலாளர் கட்சி "ஒரு மாற்றீட்டைத் தோற்றுவிப்பதற்கு இடதுகள் கண்டிப்பாக ஒன்றுபடவேண்டும்" என்ற தலைப்பில் ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஐரோப்பியத் தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் முடிந்து இரு நாடுகளுக்குப் பிறகு அதன் அழைப்பை ஜூன் 9 அன்று அது வெளியிட்டது.

இத்தேர்தல்கள் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மாற்றீட்டுத் தலைமை கட்டமைப்பதற்கான தேவையை உறுதியாக அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன. ஐரோப்பிய தேர்தல்களில் தொழிற்கட்சிக்கான வாக்கு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு குறைந்துவிட்டது. பழைமைவாதிகள் மற்றும் வலதுசாரி தேசியவாத ஐக்கிய இராச்சிய சுதந்திர கட்சிக்கு (United Kingdom Independence Party) அடுத்தாற்போல் மூன்றாம் இடத்திற்கு இது வந்தது. முதல் தடவையாக தீவிர வலதான பிரிட்டிஷ் தேசியக் கட்சி (BNP) ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு இரு வேட்பாளர்களை வெற்றி கொள்ள முடிந்தது. மொத்த வாக்குகளிலும் 6 சதவிகிதத்திற்கும் அதிகமாகப் பெற்றது.

இதற்கு தேவையான விடையிறுப்பு தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடம் இருந்து சுயாதீனமாக மார்க்சிச இயக்கத்தின் கோட்பாடு மற்றும் செயல்திட்ட மரபைத் தளமாக கொண்ட ஒரு ஒரு புதிய சோசலிச, சர்வதேச கட்சியை ஒரு கட்டமைப்பதாகும்.

சோசலிச தொழிலாளர் கட்சி மிகக் கடுமையாக இந்த முன்னோக்கை எதிர்க்கிறது. மாறாக, இதன் நோக்கம் தொழிற்கட்சியின் நெருக்கடியை பயன்படுத்தி இதன் நீண்ட நாளைய கோரிக்கையான பிரிட்டனின் வேறுபட்ட இடது போக்குகள் ஒரு புதிய தேர்தல் கருவியாக வெளிப்பட்டு, தொழிற்சங்க அதிகரத்துவத்தின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் மற்றும் அதிருப்தி அடைந்துள்ள தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை இயன்றளவு ஈர்க்க வேண்டும் என்பதாகும். பிரிட்டிஷ் தேசியக் கட்சி காட்டும் மிகைப்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் இத்திட்டத்தை ஊக்குவிக்கும் நலன்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்று அது நம்புகிறது. அதாவது அதிகாரத்துவத்தின் பிற பிரிவுகளை ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது, அது மற்ற சக்திகளால் நிரப்பப்பட முடியும் என்றும் அதன் "இடது" போட்டியாளர்கள் தாங்கள் நாடும் அதிகாரத்துவத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வது அதற்கு தேவை என்றும் நம்பவைப்பதே அது.

"பிரிட்டனில் இதுகாறும் பாசிஸ்ட்டுக்கள் இத்தகைய வெற்றியை அடைந்தது இல்லை", "நாம் ஒன்றுபட்டு எதிர்த்தால்தான் பாசிசம் போராடப்பட்டு நிறுத்தப்பட முடியும் என வரலாறு எமக்கு கற்பிக்கின்றது." என்று சோசலிச தொழிலாளர் கட்சி கூறுகிறது.

சோசலிச தொழிலாளர் கட்சி இலக்கு கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு ஐரோப்பியத் தேர்தல் முடிவுகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பது பற்றி கடிதத்தில் எழுதப்பட்டுள்ளதில் இருந்து விளக்கப்படுகிறது. "பிரச்சினைக்கு ஒரு விடை புதிய தொழிற்கட்சி செய்தது அனைத்தையும் நாம் விழுங்கிவிட்டு பிரிட்டிஷ் தேசியக் கட்சியை அதிகாரத்திற்கு வராமல் செய்ய அது கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் காமிரோனுக்கு ஆதரவு கொடுப்பதாகும்" என்று சோசலிச தொழிலாளர் கட்சி எழுதியுள்ளது.

அதிகாரத்துவத்தைவிட வேறு எந்த அமைப்பு இத்தகைய விவாதத்தை முன்வைக்கும்? ஐரோப்பிய தேர்தல்கள் வெளிப்படுத்திய ஒரு தனித்த மிகமுக்கியமான நிகழ்வு சமூக ஜனநாயகம் முற்றிலுமாக வீழ்ச்சியடைந்துவிட்டது என்பதுதான். அந்த வலதுசாரி கன்சர்வேடிவ், ஏன் பாசிச என்று கூற சொல்லக்கூடிய கட்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன என்பது வலது நோக்கிய ஒரு திருப்பம் என்பதற்கான சாட்சியம் அல்ல. மாறாக இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் பழைய கட்சிகளைப் புறக்கணித்தனர் என்றால் அவர்கள் அவை எந்தவித்திலும் மரபார்ந்த பெருவணிகக் கட்சிகளைவிட வேறுபட்டிருக்கவில்லை என்று நம்பியதுதான். எனவே முக்கியமாக எவருக்கும் வாக்களிக்காத வகையில் தங்கள் நிலைப்பாட்டைக் காட்டினர்.

ஐரோப்பா முழுவதும் சராசரியாள சமூக ஜனநாயகவாதிகள், சோசலிசக் கட்சிகள் மற்றும் தொழிற்கட்சியினர் 22 சதவிகித வாக்கைத்தான் பெற்றுள்ளனர். மொத்தமாக இடப்பட்ட வாக்குகளோ இதுவரை இல்லாத குறைந்த அளவில் 43 சதவிகிதம் என்றுதான் பதிவாயிற்று.

பிரிட்டனில் வந்த முடிவுகள் இந்த நிகழ்போக்கின் மிக வளர்ச்சியுற்ற வெளிப்பாடு ஆகும். தொடர்ச்சியான தொழிற்கட்சி அரசாங்கங்கள் தாட்சரிச வகை பொருளாதாரக் கொள்கைளான தனியார்மயமாக்குதல் மற்றும் செல்வந்தர்களுக்கு வரிக்குறைப்பை சுமத்தியுள்ளனர். மேலும் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மக்கள் சிறிதும் விரும்பாத போர்களை சுமத்தியுள்ளதுடன், ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக தொடர்ந்த தாக்குதலை நடத்தியுள்ளன. டோனி பிளேயருக்குப் பதிலாக கோர்டன் பிரெளனை பிரதமராக இருத்தினால் கட்சிக்கு புதிய வாழ்க்கைக்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை சரிந்துவிட்டது. மாறாக உட்பூசல்களும் பாராளமன்ற உறுப்பினர்கள் செலவினங்கள் பற்றிய ஊழல்கள் கட்சி சிதைந்துவிடக் கூடும் என்று அச்சுறுத்தியுள்ளன.

அதன் முன்னாள் சமூகத்தளமான தொழிலாள வர்க்கத்தால் தொழிற்கட்சி கைவிடப்பட்டுவிட்டது. அதையொட்டி தேர்தலில் மறைந்துவிடும் நிலையை எதிர்நோக்கியுள்ளது. 34.5 சதவிகித வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்த நிலையில் இது 16 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றுள்ளது. வாக்காளர்களில் 5 சதவிகிதத்தை ஒட்டித்தான் கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்பது அது ஒன்றும் டோரிக்களுக்கு மாற்றீடு எனக் காணப்படவில்லை என்று காட்டுகிறது. தொழிற்கட்சியின் வாக்குகள் லண்டனில் கால் பகுதி குறைந்துவிட்டன. வடமேற்கில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டன, யார்க்ஷயர் மற்றும் வடகிழக்கில் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டன.

எனவேதான், தான் எழுப்பிய வினாவிற்கு விடையாக, சோசலிச தொழிலாளர் கட்சி எச்சரிக்கிறது: "ஆயினும்கூட ஒரு அற்புதம் நடந்தால்தான் கோர்டன் பிரெளன் டெளனிங் தெருவிற்கு தேர்ந்தெடுக்கப்பட முடியும். நாம் வெறுமே தொற்றிக்கொள்ளுவதால் ஏற்படும் ஆபத்து புதிய தொழிற்கட்சியின் சிதைவுடன் நாமும் கீழே தள்ளப்படுவோம் என்பதே."

விகிதாசாரமுறைத் தேர்தலின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட தேவையான துவக்க நிலையை பிரிட்டிஷ் தேசியக் கட்சி கடக்க முடிந்ததற்குக் காரணம் தொழிற்கட்சிக்கான ஆதரவில் ஏற்பட்ட மகத்தான சரிவு மற்றும் வாக்களிக்காதவர்களின் அதிக மட்டமும்தான். வடகிழக்கு பகுதியும் யோர்க்ஷயர் மற்றும் ஹம்பர் பகுதியும் தொழிற்கட்சி வாக்குகள் மிகக் கடுமையான சரிவைக் கண்ட பகுதிகள் ஆகும். மேலும் அவ்விடங்களில் மிக அதிகமான சதவிகிதத்தினர் வாக்கு அளிக்கவில்லை. வாக்காளர்கள் 31.9 சதவிதமும் 32.51 சதவிகிதமும்தான் வாக்களித்தனர். இது 2004 தேர்தலில் இருந்து 10 சதவிகிதச் சரிவு ஆகும். தேசியஅளவில் பிரிட்டிஷ் தேசியக் கட்சியின் வாக்குகள் பங்கு 2004ல் இருந்து 1.3 சதவிகிதம்தான் உயர்ந்தது. வாக்குகள் எண்ணிக்கையில் 808,200ல் இருந்து 943,598 என்றுதான் உயர்ந்தன.

பல ஆண்டுகள் தொழிற்கட்சி அரசாங்கத்தின் வலதுசாரிப் போக்கு தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் ஒரு பிரிவு பிளவுற வகை செய்யும் என்று சோசலிச தொழிலாளர் கட்சி கணப்பீடு செய்திருந்தது. பிளவுறும் அப்பிரிவிற்கு தான் "இடது" ஆலோசகராக இருக்கலாம் என்றும் நினைத்திருந்தது. ஆனால் அத்தகைய முன்னோக்கில் ஒரு புதிய கட்சியை அமைக்கும் முயற்சி இழிந்த தோல்வியில் முடிவுற்றுவிட்டது. ஏனெனில் இன்று வரை அதிகாரத்துவத்தின் எந்த முக்கிய பிரிவும் தொழிற்கட்சியுடன் முறித்துக் கொள்ளவில்லை.

சோசலிச தொழிலாளர் கட்சி ஆதரவைக் கொண்ட "Respect--the Unity Coalition" என்பது ஒரு முன்னாள் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் காலோவேயை சேர்த்துக் கொள்ள அமைக்கப்பட்டது. அவர் எந்த அரசியல் அமைப்பும் இல்லாமல் நின்றார். ஏனெனில் அவர் அக்டோபர் 2003ல் அவருடைய ஈராக் போர்எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சோசலிச தொழிலாளர் கட்சி, Respect ல் காலோவேயின் தலைமை ஏற்றது. முஸ்லிம் வணிகர்கள், இஸ்லாமிய குழுக்கள் மற்றும் மத்திய கிழக்கில் இருக்கும் ஆட்சிகளுக்கு அவர் காட்டிய சந்தர்ப்பவாத சார்பிற்கு இணக்கம் காட்டி, இதைப்பயன்படுத்தி தன்னுடைய அரசியல் சுயசரிதையையும் உயர்த்திக் கொள்ள முற்பட்டது. சோசலிச தொழிலாளர் கட்சி "ட்ரொட்ஸ்கிசவாதிகளுடன்" தொடர்பு என்பது அவருடைய கம்யூனிச அரசியல் ஆதரவாளர்கள் விருப்பத்திற்கு எதிராக உள்ளது என்பதை அறிந்ததும் அவர்களுடைய பணிகளை காலோவே உதறித்தள்ளினார்.

சோசலிச தொழிலாளர் கட்சி தொழிற்கட்சியின் நெருக்கடி இதுகாறும் அவர்களுக்கு மூடப்பட்டிருந்த வாய்ப்பை அதிகாரத்துவத்திற்கு திறக்கும் என்று நம்பியது. பிரிட்டிஷ் தேசிய கட்சியின் வெற்றியை பயன்படுத்தி தங்கள் திட்டத்திற்கு அரசியல் நியாயப்படுத்தலை கொடுக்க விரும்புகிறது. இதில் முக்கியமான கருத்து என்னவென்றால், இந்த இலக்கை அடைவதற்கு தேவையான எந்த அரசியல் சமரசத்தையும் அவர்கள் ஏற்கத் தயாராக உள்ளனர் என்பதுதான். அதிலும் குறிப்பாக அதிகாரத்துவத்தின் பார்வையில் அவர்களுடைய அரசியல் கெளரவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும் சோசலிச மற்றும் புரட்சிகர சொற்றொடர்களைப் பிடித்துக் கொள்ளும் முயற்சிகளை அனுமதிக்காதது இருப்பதுதான்.

பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புகட்சி (NPA)

"இடது" மறுஅணிதிரளலை தொடர்வதில் சோசலிச தொழிலாளர் கட்சி தனியாக இல்லை. பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் பிரெஞ்சுப் பிரிவான Ligue Communiste Revolutionaire இந்த ஆண்டு அமைத்துள்ள புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடன் (New Anti-Capitalist Party, NPA) ஒப்பிடுகையில் குறிப்பாக Respect உடைய தோல்வியினால் சோசலிச தொழிலாளர் கட்சி மதிப்பிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சமூக ஜனநாயகவாதிகளிடம் இருந்து வார்த்தையளவில் ஒதுக்கியிருத்தல் தேவை என்று பப்லோவாதிகள் வாதிட்டு, NPA இன் இடது மதிப்பீடுகளை வலியுறுத்த இதைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த முடிவிற்கு அவர்கள் Respect மற்றும் ஸ்கொட்லாந்து சோசலிச கட்சியின் (Scottish Socialist Party) வீழ்ச்சியை அளவிட்டபின் வந்தார்கள் என்பதோடு, இத்தாலியின் Rifondazione Communistas (PRC) உடனும் அதே போன்ற ஸ்ராலினிச "எதிர்ப்பு" சீர்திருத்த போக்குகளுடன் பங்கு பெற்று அதற்குக் கொடுத்த ஆதரவினாலும் பெற்ற அரசியல் சேதமும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ரோமானோ புரோடியின் யூனியன் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக 2006ல் தேர்ந்தெடுக்கப்பட்டபின், PRC தலைவர் Fausto Bertinotti பிரதிநிதிகள் மன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். PRC அரசாங்கத்தில் தொடர்ந்து இருந்தது. அதுவோ வெட்டுக்களையும் சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இத்தாலிய இராணுவ நிலைப்பாடு ஆப்கானிஸ்தானத்தில் தொடர வாதிட்டும், லெபனானுக்கு படைகளை அனுப்பியும் வந்தது.

PRC இனுள் உழைந்து வந்த இத்தாலிய பப்லோவாதிகள், அரசியல் காட்டிக்கொடுப்பில் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டனர். 2007ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் இராணுவத் தலையீட்டை இத்தாலி செய்யவேண்டும், இத்தாலியின் ஓய்வூதிய "சீர்திருத்தச் சட்டத்திற்கு" ஆதரவு ஆகியவை தொடர்பான ஒரு 12 அம்ச இறுதி நிபந்தனையைத் தளமாகக் கொண்ட ஒரு நம்பிக்கை தீர்மானத்தில் புரோடிக்கு ஆதரவு கொடுத்தவர்களில், பப்லோவாத Sinistra Critica (Critical Left) சேர்ந்த செனட் உறுப்பினர் Franco Turigliatto ஆவார்.

சோசலிச தொழிலாளர் கட்சி இன் கோட்பாட்டு இதழான International Socialism என்பதில் NPA இற்கு எதிராக வாதிட்ட வகையில் (Revolutionary Paths: A Reply to Pans Garganas and Francois Sabado--March 31), அலெக்ஸ் காலிநிகோஸ் சமூக ஜனநாயகவாதிகளுடன் ஒத்துழைப்பிற்கு எதிர்ப்பை காட்டிக்கொள்ளும் பப்லோவாதிகளை எதிர்த்தார்.

"சோசலிச தொழிலாளர் கட்சியில் இருக்கும் நாங்கள் புதிய முதலாளித்துவக் கட்சியைப் பற்றி ஆர்வம் காட்டுகிறோம்" என்று காலிநிகோஸ் கூறுகிறார். ஆனால், "சிலவற்றில் முக்கியமான உடைவு என்பது சமூக தாராளவாதத்தை நிராகரிக்கும் சக்திகள் வெளிப்படையான சீர்திருத்தவாதத்துடன் உடைத்துக் கொள்ளாததுதான். உதாரணமாக ஜேர்மனியின் இடது கட்சி, இத்தாலியின் PRC ஆகியவற்றில் பழைய, புதிய தலைமைகள், கிரேக்கத்தில் Synaspismos மற்றும் போர்த்துகீசிய நாட்டில் Left Bloc உள்ள சில கூறுபாடுகள் ஆகியவை இதில் சேரும்.."

பிரிட்டனிலும் ஜேர்மனியிலும் "சமூக ஜனநாகம் ஆழ்ந்து நிலைபெற்றுள்ளது" என்று அறிவித்தபின், "எனவேதான் ஜேர்மனியில் இடது கட்சியின் (Die Linke) தோற்றம் முக்கிய வரலாற்று வளர்ச்சி ஆகும். ...பல தசாப்தங்களில் முதல் தடவையாக, சமூக ஜனநாயகத்தின் வீழ்ச்சி இடது நோக்கிய தீவிர திரும்புதலைக் கொடுத்துள்ளது. Die Linke உடைய அரசியல் இடது சீர்திருத்தவாதம்தான். ஜேர்மனியில் உள்ள சக்திகளின் சமநிலையில் வேறு எவ்விதமாக இது இருக்கமுடியும்?'

ஜூன் 2007ல் Die Linke முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் இருந்த ஜனநாயக சோசலிச கட்சியின் (SED) பழைய ஸ்ராலினிஸ்ட்டுக்களுக்கும் மேற்கில் சமூக ஜனநாயகக் கட்சியை விட்டு நீங்கிய சக்திகளுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. இதற்கு முன்னாள் ஜேர்மனிய நிதி மந்திரி ஒஸ்கார் லாபொன்டைன் வழிநடத்தினார். இதில் முக்கியமாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் இருந்தனர். சோசலிச தொழிலாளர் கட்சியின் சக சிந்தனையாளர்கள் Die Linke உடன் லாபொன்டைன் இயற்றியுள்ள சீர்திருத்த திட்டத்தை ஏற்றதைத் தளமாகக் கொண்டு செய்ற்படுகின்றனர்.

இவை அனைத்தும் இயலக்கூடியவையே என்று காலிநிகோஸ் வலியுறுத்துகிறார்; வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர முன்னோக்கினை நோக்கி வெற்றிகொள்ளும் சாத்தியப்பாட்டை அளிக்கவில்லை என்றும் கூறுகிறார்; மாறாக "தொழிலாள வர்க்கத்தின் புதிய தொழிலாளர் தட்டுக்களை வர்க்க உணர்மையுள்ள செயல்களுக்கு ஈர்த்தல் சீர்திருத்த அரசியலின் அடித்தளத்தை விரிவாக்கும் தன்மையைக் கொடுக்கக்கூடும்."

சோசலிச தொழிலாளர் கட்சியுடைய சொந்த அனுபவம் பற்றியே குறிப்பிடும் அவர், "சீர்திருத்தவாதத்தின் தொடர்ந்த செல்வாக்கு நம்பை பலவிதங்களில் கட்டுப்படுத்துகிறது. தொழிற்கட்சியில் பெரிய பிளவைக் கொண்டுவருவதில் அது தோல்வியுற்றதால் Respect இறுதியில் பயனற்றுப் போயிற்று... ஒரு தீவிரவாத இடதுகட்சி என்பது தொல்சீர்வகையிலான ஐக்கிய முன்னணி என்ற விதத்தில் அரசியலில் பலதரப்பட்ட சக்திகளை ஒன்றாகக் கொண்டு வரும் திறன் உடையது. ஒப்புமையில் அத்தகைய கட்சிகளின் வேலைத்திட்டங்களின் ஓரளவு வெளிப்படையாக தன்மை இதற்கு பகுதிக்காரணமாக இருக்கின்றது. பொதுவாக அவை சீர்திருத்தமா அல்லது புரட்சியா என்ற மாற்றீட்டை நயப்படுத்திக்கூறும்" என்று எழுதியுள்ளார்.

Respect இன் படிப்பினை, காலிநிகோஸிற்கு, தொழிற்கட்சியும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் கோருவதை இடது குழுக்கள் அளிக்க வேண்டும் என்பதாகும். ஜூலை 2009ல் வெளிவந்த ''தொழிற் கட்சியின் உடைவு, பிரிட்டிஷ் தேசிய கட்சியின் வெற்றி- அரசியல் உடைவு" என்ற மற்றொரு கட்டுரையில் அவர் தன்னுடைய "இடது" சக சிந்தனையாளர்களுக்கு "நாம் வெகு அப்பட்டமாக நம்முடைய வலிமை, பலவீனங்கள் பற்றி நேர்மையாகக் கூறுகிறோம் என்றால், தீவிரவாத இடது என்பது மிக மோசமான நிலையில் உள்ளது என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்" என்று எச்சிரிக்கை கொடுக்கிறார்.

பிரிட்டிஷ் தேசிய கட்சி இன்னும் மற்ற தீவிர வலது கட்சிகள் தொழிற்கட்சியின் சரிவில் இருந்து இலாபம் அடையக் கூடாது என்றால், "நாம் தேர்தலளவில் ஒன்றாகச் செயல்படவேண்டும். தீவிரவாத இடதின் பல கூறுபாடுகளும் நம் கூட்டுத் தோல்வியை ஒப்புக் கொள்ளுதல் இதற்கு தேவையாகும்.... நாம் தனியே ஒரு திருப்பு முனையை அடையமுடியும் என்ற நப்பாசையை கொண்டிருக்கும் வரை, நாம் மூழ்கித்தான் போவோம்."

சோசலிச தொழிலாளர் கட்சியுடைய அரசியல் அவநம்பிக்கைத்தனம் வரம்பில்லாதது ஆகும். அதன் தேர்தல் நட்பு ஆகக்கூடிய அமைப்புக்களை வலதுசாரிகளின் பேயை காட்டி என்பதின் மூலம் அச்சுறுத்தி, காலிநிக்கோஸ் அதே கட்டுரையில், இந்த அச்சுறுத்தல் பற்றி "அதிகம் வலியுறுத்தக் கூடாது என்பதும் முக்கியம்" என்று ஒப்புக் கொள்ளுகிறார். "பிரிட்டிஷ் தேசியக் கட்சியின் வாக்கு உண்மையில் அது வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் சரிந்துள்ளது. தொழிற்கட்சி வாக்காளர்கள் மிகப் பெரிய அளவில் வாக்களிக்க வராததால் நாஜிக்கள் பலன் அடைந்துள்ளனர்." "30 ஆண்டுகளுக்கு முன்பு தாட்சரை அதிகாரத்திற்கு கொண்டுவந்த மாற்றம் போல் இத்தகைய பொதுவான வலதிற்கு மாற்றம் என்பதற்கு பிரிட்டிஷ் சமூகத்தில் அடையாளம் இல்லை''.

வேறுவிதமாகக் கூறினால், சோசலிச தொழிலாளர் கட்சி அதன் "பகிரங்கக் கடிதத்தை" வெளியிடும் கட்டாயத்திற்கு உட்பட்டது, பாசிசத்தின் ஆபத்தைப் பற்றிய உண்மையான கவலையினால் அல்ல. அத்தகைய மறுப்பீட்டியல் "பிரிட்டிஷ் தேசியக் கட்சி உடைந்து எரிந்திருந்தால் பெரும்பகுதி மாறாமல் இருந்திருக்கும். அதன் அடிப்படை அரசியல் உந்துதல் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான எவ்விதமான உண்மையான சோசலிச எதிர்ப்பை நிராகரித்துவிட வேண்டும் என்பதுதான்.

"பிரிட்டனில் தொழிற்கட்சியின் மோசமான, வரலாற்று வலுவற்ற தன்மை பற்றி" க்கூட காலிநிக்கோஸ் குறைகூறுகிறார்; அதற்கு முன் "அவர்களுடைய கருத்துக்கள் இன்னும் மில்லியன்கணக்கான மக்களால் ஆதரவிற்கு உட்பட்டுள்ளது என்பது இல்லாவிட்டால் அதை பொருட்படுத்தத் தேவையில்லை தன்னுடைய எண்பதுகளில் கூட ரொனி பென் மகத்தான புகழைப் பெற்றுள்ளார் என்பதின் மூலம் சுட்டிக்காட்டுப்படுகிறது." என்றும் அவர் கூறுகிறார்.

இன்றைய அரசியலில் ஒரு பெரும் சக்தி என்று கூற முடியாத ரொனி பென் பல முறையும் தான் வாழ்நாள் முழுவதும் தொழிற்கட்சியின் விசுவாச உறுப்பினராக இருந்ததைப் போலவே இறந்தும் போவேன் என்று பலமுறை அறிவித்துள்ளார்.

இப்பொழுதும்கூட வருங்காலம் தொழிற்கட்சியில் இருந்து அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவு முறித்துக் கொள்வதில் உள்ளது என்ற தன் கூற்றிற்கு ஆதரவான சோசலிச தொழிலாளர் கட்சியிடம் வலுவான கருத்துக்கள் ஏதும் இல்லை. கடந்த 12 ஆண்டுகளில் தொழிற்சங்கங்கள் தொழிற்கட்சி அரசாங்கத்தை அதன் தடையற்ற சந்தை செயல்பட்டியலை தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் தனிமைப்படுத்திய விதத்தில் தொடர உதவியுள்ளன.

இரயில், கடல்வழி மற்றும் போக்குவரத்துத் தொழிற்சங்கள் (RMT) ஐரோப்பிய தேர்தல்களில் தொழிற்கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்திவைத்தது. இது பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டாக அமைக்கப்பட்டிருந்த உடன்பாடான No.2EU வின் ஒரு பகுதியாக நடைபெற்றது. ஆனால் பொதுத் தேர்தலில் இதைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று RMT கூறிய இந்த முன்னணி, மிகுந்த வலதுசாரித் தன்மையையும் தேசியவாதத்தையும் கொண்டிருந்த நிலையில் இதற்கு சோசலிச தொழிலாளர் கட்சி தன் ஆதரவைக் கொடுக்கத் தயங்கியது. தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக டோரிக்கள் அதிகாரத்திற்கு வரக்கூடும் என்ற நிலை இந்த ஆண்டு பொதுத் தேர்தல் ஏற்பட்டால், பின் நடக்கக்கூடிய பிளவு No.2EU முன்வைத்த முன்னோக்கிற்கு ஏற்றால்போல்தான் இருக்கும்.

தற்பொழுது பகிரங்கக் கடிதம் "[பொது மற்றும் தொடர்புப் பணிகள்] PCS எனப்படும் பொதுத்துறைப் பணி தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மார்க் செர்வோட்காவை மேற்கோளிடுவதுடன் நின்றுள்ளது; அவர் "தொழிற்சங்கங்கள் வேட்பாளர்களை நிறுத்தலாம்" என்று கூறியுள்ளார்.

"ஒரு இலகுவான படி" என்று வாதிடம் வகையில் சோசலிச தொழிலாளர் கட்சி முடிவுரை கூறுகிறது; அதாவது "அடுத்த தேர்தலில் தொழிலாளர்கள் வர்க்க நலன்களை பிரதிபலிக்கும் வகையில் வேட்பாளர்களை அளிக்க விரும்பும் அனைவரும் ஒரு மாநாட்டில் கூடவேண்டும்". இத்தகைய வடிவமைப்பற்ற அடிப்படையில் சீர்திருத்தத்திற்கும் புரட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு "நய உரையாக்கப்பட்டுவிடும்." சோசலிச தொழிலாளர் கட்சியும் மற்றவையும் தொழிலாள வர்க்கத்தை காட்டிக் கொடுத்த அதே சக்திகளுக்கு புத்துயிர் கொடுக்கும் தீவிர முயற்சியில் அவற்றிற்கு வக்காலத்து வாங்குபவையாகவும், பாதுகாப்புபடையாகவும் இருக்கும்.

ஐக்கிய முன்னணி

காலிநிகோஸும் சோசலிச தொழிலாளர் கட்சியும் தொழிற்சங்கங்கள் மேலாதிக்கத்திற்கு உட்பட்டுள்ள புதிய தேர்தல் கட்சிக்கான தங்கள் அழைப்பை "சிறப்பு வகையிலான ஐக்கிய முன்னணி" என்று விவரிக்கின்றனர். தங்கள் தந்திர உத்திகளை பாசிசம் தொழிலாள வர்க்கத்திற்கு உடனடியான அழிவைக் கொடுக்கும் ஆபத்தைப் பிரதிபலித்திருந்த 1930களில் ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு போராட்டம் நடத்திய லியோன் ட்ரொட்ஸ்கியின் சொற்றொடர்கள் மூலம் கொடுக்க முற்படும் வெளிப்படையான முயற்சி ஆகும்.

ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ராலினுடைய தலைமையில் இருந்த கம்யூனிச அகிலத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராக ஐக்கிய முன்னணியின் அவசியத்தை ட்ரொட்ஸ்கி எழுப்பினார். அகிலம் சமூக ஜனநாயகவாதிகளை "சமூக பாஸிஸ்ட்டுக்கள்" என்று கண்டித்து ஒரு பொது நடவடிக்கையை நிராகரித்தது. ட்ரொட்ஸ்கியின் நோக்கம் சமூக ஜனநாயக தலைவர்களுடைய ஆளுமையை உடைத்தல் ஆகும். அவர்களைத்தான் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தொடர்ந்து வழிகாட்டுவர் மற்றும் உண்மையான சோசலிச மாற்றீடு கொடுக்கக் கூடியவர்கள் என்று நம்பியிருந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி சமூக ஜனநாயக கட்சியுடன் ஐக்கிய முன்னணிக்கு திட்டமிட வேண்டும், இதனால் தொழிலாளர்களின் அமைப்புக்களை பாதுகாக்க நாஜிக்களுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கு ட்ரொட்ஸ்கி போராடினார். இவ்விதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்துவதற்கு தலைமை எடுத்துக்கொள்ள முடியும். சமூக ஜனநாயகம் வர்க்க விரோதிக்கு எதிராக பொது பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க மறுப்பதற்காக அதை அம்பலபப்படுத்த முடியும் அல்லது இத்தகைய தொழிலாள வர்க்க வெகுஜனப் போராட்டங்களில் புரட்சிகர கட்சியின் புரட்சிகரத்தலைமையை நிரூபிக்கமுடியும்.

ஆனால் புரட்சியாளர்களை ஒரு ஐக்கிய முன்னணிக்குள் சீர்திருத்த அதிகாரத்துவத்திற்கு அடிபணியச் செய்யவோ அல்லது வேலைத்திட்டத்தில் உள்ள வேறுபாடுகளை மறைக்கவோ முற்றிலும் அனுமதிக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார். ஐக்கிய முன்னணி பற்றிய எதிர்மறைகருத்து தேர்தல் கூட்டணியில் எத்தகைய வடிவமும் இருக்கலாம் அல்லது சீர்திருத்தவாதிகளுடன் அரசியல் பிணைப்பு என்பதாகும்; ஒரு பொதுவான கட்சியை வளர்ப்பது என்பதற்கு இடமில்லை. காலிநிகோஸ், "அத்தகைய தன்மை சீர்திருத்தம் அல்லது புரட்சியை நயப்படுத்தும்" என்று கூறியுள்ளார்.

மூன்றாம் அகிலம், ஸ்ராலினிச தலைமையை பற்றி விவாதிக்கக்கூட மறுத்ததுதான் உலகளாவிய வரலாற்றுக் காட்டிக் கொடுப்பு ஆகும். அதுதான் ஹிட்லர் அதிகாரத்திற்கு வர அனுமதித்ததுடன் நான்காம் அகிலத்தினை நிறுவ ட்ரொட்ஸ்கியை வழிநடத்தியது. தங்கள் ஜேர்மனிய தீவிர இடது கொள்கைகள் ஏற்படுத்திய பேரழிவிற்கு விடை கொடுக்கும் வகையில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் பாசிசத்திற்கு எதிரான பெரிய ஆபத்து பற்றிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் ஜனநாயக முதலாளித்துவக் கட்சிகள் அல்லது அரசுகளின் தலைமையை ஏற்று உடன்பட்டு நடக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் முன்னணியின் வலது-சந்தர்ப்பவாத கொள்கையை ஏற்றனர்.

இது உண்மையில் ஒரு எதிர்ப்புரட்சி கொள்கையாகும். இது எத்தகைய புரட்சிகர அல்லது சோசலிச கோரிக்கைகளை நிராகரிக்கிறது என்பதுடன் தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தையும் நிராகரிக்கிறது. ஸ்பெயின், பிரான்ஸ், இன்னும் ஐரோப்பாவில் எஞ்சிய பகுதிகளில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒன்றன்பின் ஒன்றாக பல பேரழிவுகளுக்கு இது வழிவகுத்ததுடன் மேலும் இரண்டாம் ஏகாதிபத்திய உலகப் போர் வெடிப்பதற்கும் வகை செய்தது.

சோசலிச தொழிலாளர் கட்சியுடைய கொள்கையான ஒரு தேர்தல் உடன்பாடு அல்லது அதிகாரத்துவத்துடன் பொதுக் கட்சி அமைத்தல் என்பது ட்ரொட்ஸ்கியுடைய கொள்கை என்பதற்கு பதிலாக ஸ்ராலினின் கொள்கையுடன்தான் பொருத்தமாக உள்ளது.

தொழிற்கட்சிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் எதிரான அரசியல் போராட்டத்தை எதிர்ப்பதற்கு ஒரு கருவியாக பாசிச பிரச்சினையை சோசலிச தொழிலாளர் கட்சி பயன்படுத்திக் கொள்வது இது முதல் தடவை அல்ல. 1977ம் ஆண்டு அது ANL (Anti-Nazi League) எனப்பட்ட நாசிச எதிர்ப்புக் குழுவை நிறுவியது. அதற்கு சில தொழிற்சங்கங்களுடைய ஆதரவும் முன்னாள் தாராளவாத இளைஞரின் (Young Liberal) தலைவர் Peter Hain உடைய ஒப்புதலும் இருந்தது (அவர் இப்பொழுது பிரதம மந்திரி கோர்டன் பிரெளனுடைய வேல்ஸுக்கான மந்திரியாக இருக்கிறார்; அப்பொழுது அஞ்சல் தொழிலாளர்கள் சங்கத்தின் தொடர்பு அலுவலராக இருந்தார்); அதைத்தவிர AUEW என்னும் பொறியியல் தொழிற்சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் Ernest Roberts, மற்றும் Neil Kinnock என்று தொழிற்கட்சியின் தலைவராக பின்னால் வந்தவரின் ஒப்புதலும் இருந்தது.

பிரிட்டிஷ் தேசிய முன்னணியின் முன்னோடியாக இருந்த தேசிய முன்னணி (National Front) என்ற அமைப்பிற்கு எதிராக "பொது போராட்டம்" என்று அழைக்கப்பட்டதில் முக்கியமாக இளைஞர்களை குவிக்கும் முயற்சியில் ANL ஈடுபட்டிருந்தது. தொழிலாள வர்க்கம் ஜேம்ஸ் காலகனின் தொழிற்கட்சி அரசாங்கத்துடன் நேரடி மோதலில் ஈடுபட்டுந்த காலத்தில் இது நடந்தது. அந்த ஆட்சி சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்ட கடும் சிக்கன நடவடிக்கைகளை சுமத்தி வந்தது. அது 1979ம் ஆண்டில் அதிருப்தி குளிர்காலத்தில் உச்சக்கட்டத்தை (Winter of Discontent) அடைந்து, மார்கரெட் தாட்சர் தலைமையில் கன்சர்வேடிர்டிவ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆனால் 1970களுக்கும் இன்றைக்கும் இடையே ஒரு கணிசமான வேறுபாடு உள்ளது. 1977ல் சோசலிச தொழிலாளர் கட்சி தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க இடதுகளின் ஆசியுடன் செயல்பட்டது. இன்று அது உத்தியோகபூர்வமாக Trade Union Congress (TUC) உடைய நியமிக்கப்பட்ட பிரதிநிதியாக பேசுகிறது.

பல தசாப்தங்களாக சோசலிச தொழிலாளர் கட்சி தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உயர் குழுக்களுடன் ஒருங்கிணைத்துக் கொண்டு, பல தொழிற்சங்கங்களில் முக்கிய பதவிகளை ஏற்று கல்விக்கூடங்களிலும் அது நிறுவியுள்ள சிறப்பு இடங்களையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதிகாரத்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் அமைப்பாக மட்டும் பேசவில்லை, இடதுகளின் உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் பெற்ற பேச்சாளர் போல் பேசுகிறது.

Respect வளர்ச்சிக்கு இணையான முறையில் சோசலிச தொழிலாளர் கட்சி, ANL ஐ அழித்துவிட்டு பாசிசத்திற்கு எதிரான ஐக்கியம் (Unite Against Fascism -UAF) என்று 2003ல் ஆக்கியது. அதற்காக தொழிற்கட்சியின் கறுப்பின பிரிவினரால் தலைமைதாங்கப்படும் இனவாதத்திற்கு எதிரான தேசிய பேரவையுடன் (National Assembly against Racism) அரசியல் கூட்டுசேர்ந்தது. இதன் ஒரே நோக்கம் பிரிட்டிஷ் தேசிய முன்னணி "இந்நாட்டில் தேர்தல் களத்தில் ஒரு இடத்தைப் பெறுவதை" தடுத்தல் என்பதற்காக தந்திரோபாய ரீதியான வாக்களிப்பை" கையாளுதல் ஆகும்.

UAF, TUC யினால் ஒப்புதல் பெற்று தொழிற்சங்கங்களிடம் இருந்து நிதி பெறுகிறது. முன்னாள் Respect உறுப்பினர் மார்க் செர்வோட்காவில் தலைமையில் உள்ள PCS எனப்படும் பொது, வர்த்தக சேவைகள் தொழிற்சங்கம் கொடுக்கும் அலுவலகங்களில் இருந்து செயல்படுகிறது. இதன் தலைவர் முன்னாள் தொழிற்கட்சியின் லண்டன் மேயராக இருந்த கென் லிவிங்ஸ்டன் ஆவார். சோசலிச தொழிலாளர் கட்சியின் வேமான் பென்னட் இணைத் தலைவராக உள்ளார்; சோசலிச தொழிலாளர் கட்சி உடைய தேசிய அமைப்பாளர் மார்ட்டின் ஸ்மித் இதன் இயக்குனர் குழுவில் உள்ளார்.

சோசலிச தொழிலாளர் கட்சிக்கு இந்த நிலை கொடுக்கப்பட்டுள்ளதற்கு காரணம், இப்பொழுது அது பரந்த அளவில் உத்தியோகபூர்வ அமைப்புக்களில் முழுமையாக ஒருங்கிணைத்துள்ளது என்பதால்தான். இதன் தீவிரவாத வார்த்தை ஜாலங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கை, சமூக சீர்திருத்தங்களுக்கான வாதிடல் ஆளும்நடைமுறை அமைப்பினுள் அதை இணைத்துள்ளதற்கு தடையாக இல்லை. ஒரு பயனுடைய பாதுகாப்பு திருகியாக (safety valve) இது பயன்படக்கூடிய சொத்து என்று ஆளும்வர்க்கம் இதை நினைக்கிறது.

உதாராணமாக அக்டோபர் 2008ல் உலக சோசலிச வலைத் தளம் சோசலிச தொழிலாளர் கட்சி உறுப்பினர் ஸஹீபா இக்பால் 22 பேர் கொண்ட இளம் முஸ்லீம்கள் ஆலோசனைக் குழுவின் (Young Musim Advisory Group-YMAG) ஒரு ஆலோசகராக நியமிக்கப்பட்டது பற்றி கவனத்தை ஈர்த்தது (See "Britain: Socialist Workers Party member becomes government adviser"). YMAG பிரெளன் அரசாங்கத்தால் இஸ்லாமிய தீவிரவாதத்தின் செல்வாக்குடன் எதிர்த்துப் போராடுவது எப்படி என்று ஆலோசனை கூற நிறுவப்பட்டதுடன், மேலும் "இளம் முஸ்லிம்களை பொதுவாழ்வில் பிரதிநிதித்துவம் பெற, பங்கு பெற ஊக்குவிக்க சிறந்த வகையானது" என்றும் கூறியது.

அப்பொழுது சமூகங்கள் பிரிவு மந்திரி ஹாஸல் பிளேயர்ஸ் இக்பாலின் அரசியல் தொடர்புகள் பற்றி "உலகை மாற்ற வேண்டும் என்று 17 வயதில் நினைக்காவிட்டால், அது வெட்ககரமானது." எனக்கூறினார். "அடுத்த தலைமுறை முஸ்லிம் சமூகத் தலைவர்கள்" என்று பிளேயர் விவரித்ததில் ஒருவராக இக்பால் வருவார்.

அரசுக்கு வெளிப்படையான பாதுகாப்பு

சோசலிச தொழிலாளர் கட்சியின் பகிரங்கக் கடிதமும் UAF ல் அதன் பங்கும் எப்படி அதன் வரலாற்று செயல்பாடான தொழிற்சங்க அமைப்பிற்கு வக்காலத்து என்பதில் இருந்து அது தொலைவில் சென்று இப்பொழுது முழு முதலாளித்துவ பாராளுமன்ற அரசாங்க அமைப்பின் வெளிப்படை ஆதரவு அமைப்பாகப் போய்விட்டது என்பதை நிரூபிக்கிறது.

ஐரோப்பிய தேர்தல்கள் முடிந்தவுடன், மார்ட்டின் ஸ்மித் UAF இன் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டார். அப்பொழுது அவர் Channel 4, BBC Newsnight ஆகியவற்றால் பேட்டி காணப்பட்டார். முழு அரசியல் நடைமுறையையும் சாடும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுவதற்கு பதிலாக, அவர்களுடைய குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்க்கை மீதான தாக்குதல்கள் பற்றி சாடுவதற்கு பதிலாக, (பிரிட்டிஷ் தேசிய முன்னணி வளர்ச்சிக்காக), அவர் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரிட்டிஷ் தேசிய முன்னணியின் அச்சுறுத்தலை தவிர்க்க ஒன்றாக வரவேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.

"அதற்கு சட்டபூர்வத்தன்மை கொடுப்பதுதான் மிகப் பெரிய பிரச்சினை ஆகும்" என்று பிரிட்டிஷ் தேசிய முன்னணி பற்றி அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் தேசிய முன்னணியை தவிர, ஒவ்வொரு அரசியல் கட்சிகும் "பேசும் உரிமை உண்டு" என்று ஸ்மித் கூறினார்; இதற்கு காரணம் "அது சட்டபூர்வமான ஜனநாயக கட்டமைப்பை தொடரவில்லை. அவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட பார்வை அதாவது உண்மையில் ஒரு புரட்சிகர பாசிச கண்ணோட்டம்தான் உள்ளது. அவர்கள் பாராளுமன்றத்தை தங்கள் கருத்துக்களை முன்வைக்கத்தான் பயன்படுத்துவர்."

இவை முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகள் ஆகும். பிரிட்டிஷ் தேசிய முன்னணி "புரட்சிகரமாக" இருப்பதற்கும் பாராளுமன்றத்தை "சட்டபூர்வ ஜனநாயக கட்டமைப்பிற்கு" பொருந்தாத கொள்கைகளை முன்வைக்கப் பயன்படுத்தும் என்றும் கண்டிக்கப்படுகிறது.

ஊடகத் தொழிலாளர்களுக்கான ஒரு UAF இன் அறிக்கை இதேபோல் "பாசிச கட்சிகள் அரசியல் மற்றும் செய்தி ஊடக நடைமுறையில் புழுப்போல் நெளிந்து உள்ளே வர அனுமதிக்கப்பட்டிருக்கையில்....அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மேடைகளை அரசியல் முக்கிய ஓட்டத்தில் தங்கள் இருப்பை ஒருங்கிணைத்துக்கொள்ள பயன்படுத்துகின்றனர், தங்கள் இனவெறி வாதங்களை இயல்பாகக் கூறுகின்றனர், முழுஅரசியல் அமைப்பையும் வலதிற்கு இழுக்கின்றனர், களத்தில் தங்கள் அமைப்புக்களை கட்டமைக்கின்றனர். அவர்கள் வளர்ச்சியுறுகையில், அவர்களிடம் சரணடைய மக்கள்மீது அழுத்தங்களும் பெருகுகின்றன. இன்றைய ஆபத்து பிரிட்டிஷ் தேசிய முன்னணி "தூய்மையான வட்டத்திற்குள்" உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து நம் செய்தி ஊடகத்தின் வாடிக்கையான தன்மையை மேற்கொண்டிருப்பதுதான்".(அழுத்தம் எமது ஆசிரியருடையது)

இத்தகைய பாசிச போக்குகள், அவற்றின் செயல்பாடுகள் பற்றிய தணிக்கை மற்றும் தடைகளுக்கான அழைப்புக்களுக்கு ஆளும்வர்க்கத்தின் பதிலளிப்பு, தவிர்க்க முடியாமல் தொழிலாளர்கள் இயக்கம் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக முக்கியமாக பயன்படுத்தப்படும். பொது ஒழுங்கு சட்டம் (Public Order Act) முதலில் 1936ம் ஆண்டு ஆஸ்வால்ட் மோஸ்லியின் பிரிட்டிஷ் பாசிச அமைப்பை (British Union of Fascists) எதிர்க்கும் காரணத்தைத்தான் கொண்டு இயற்றப்பட்டது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். அதன் தொடக்க, பிந்தைய அவதாரங்களில், அது அரசியல் கட்சிகள் முன்னேறுவதை தடுக்க பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், பரந்த அளவில் 1984-85ல் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின்போதும் பயன்படுத்தப்பட்டது. "பொலிசின் செயல்களையோ, அரசின் ஆயுதப் படைகளின் செயல்களையோ" தாக்க முற்படும் "எவ்வித மக்கள் அமைப்புக்களையும்" அது தடை செய்கிறது; மேலும் "எந்த அரசியல் இலக்கை வளர்க்கவும் உடலியல் ரீதியான வலிமை" பயன்படுத்துவதும் தடுக்கப்படுகிறது.

இத்தகைய கொள்கையான நிலைப்பாடுகளுக்கு பொருட்படுத்தாத்தன்மையைத்தான் காட்டுகிறது. முதலாளித்துவ பாராளுமன்ற முறையை இது வெளிப்படையாக ஆதரிப்பது மற்றும் பிரிட்டிஷ் தேசிய முன்னணி" சட்டரீதியான ஜனநாயக அமைப்பில்" ஒரு பகுதியாக இல்லாததற்காக கண்டிப்பது ஆகியவை எப்பொழுதும் கூறப்படும் பல்லவி ஆகும். சோசலிச தொழிலாளர் என்ற அதன் செய்தித்தாள் "எப்படி பிரிட்டிஷ் தேசிய முன்னணி ஒரு கெளரவமான கட்சியாக தன்னை காட்டிக் கொள்ளுகிறது", "பிரிட்டிஷ் தேசிய முன்னணியுடைய கெளரவ பாவனை சறுக்குகிறது" போன்ற தலைப்புக்களில் கட்டுரைகளை வாடிக்கையாக வெளியிடுகிறது.

இது சோசலிச தொழிலாளர் கட்சியின் சொந்த அரசியல் நோக்கங்களை பற்றி மிக அதிகமாக கூறுகிறது. அவர்கள் முதலாளித்துவ கெளரவத்தன்மையின் ஒரு அங்கமாக ஏற்கப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் நாடவில்லை. உண்மையில் பிரிட்டிஷ் தேசிய முன்னணியின் ஆதரவு வளர்ச்சிக்கான காரணங்களில் ஒன்று அது தன்னை ஒரு வெளிஅமைப்புப் போல் காட்டிக் கொண்டு, அரசியல் ஆளும்வர்க்கத்தின் எதிரி என்றும் காட்டிக் கொள்ளுவதுதான்.

இத்தகைய தீவிர வலது போக்குகளுக்கு வசதி செய்ய உத்தரவாதம் உள்ளது என்றால், அது சோசலிச தொழிலாளர் கட்சியின் பாராளுமன்றத்தின் புனிதத்தை இழுக்கும் முயற்சிகளும், தொழிற்சங்கம் மற்றும் தொழிற்கட்சியின் இடதின் அரசியல் சான்றுகளை உயர்த்தும் முயற்சிகளும்தான். ஆனால் சோசலிச தொழிலாளர் கட்சியுடைய UAF இன் தலைமை அது தொழிற்சங்கம் மற்றும் தொழிற்கட்சி அதிகாரத்துவம் தவிர மற்ற முதலாளித்துவ அரசியல் போக்குகளுடன் நட்பு கொள்ள முற்றிலும் தயார் என்பதைத்தான் காட்டுகிறது. UAF "தூய்மையான வட்டத்தை" தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுபவர்களுக்கு, பிரிட்டிஷ் தேசிய முன்னணியை சுற்றி இருப்பவர்களில், தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் டஜன் கணக்கில் இருப்பது மட்டும் இல்லாமல், "நம்முடைய செய்தி ஊடகமும்" (Daily Mirror கையெழுத்திட்டவற்றில் ஒன்று) இல்லாமல், அனைத்து முக்கிய கட்சிகளும் உள்ளன.

இந்தக் கண்ணோட்டத்தில், பிரிட்டிஷ் தேசிய முன்னணியினால் வரக்கூடிய ஆபத்துக்கள் பற்றிய நீடித்த எச்சரிக்கைக்கு பின்னர்தான் சோசலிச தொழிலாளர் கட்சியுடைய பகிரங்கக் கடிதம் அது விளக்கும் "ஐரோப்பிய தேர்தல்களில் இருந்து இரண்டாம் படிப்பினை"--"வேலைகளைக் காப்பாற்ற, பணிகளை காப்பாற்ற ஒன்றுபட்ட போராட்டத்தின் தேவை" என்பது வெளிவந்துள்ளதென்பது இன்னும் குறிப்பிடத்தக்கது ஆகும். கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் காமரோன் தேர்ந்தெடுக்கப்பட்டால், "பிரிட்டிஷ் மக்களின் பெரும்பாலானவர்களின் இழப்பில் அவர் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்" என்று சோசலிச தொழிலாளர் கட்சி எழுதுகிறது.

அப்படியும்கூட, சோசலிச தொழிலாளர் கட்சி டோரிக்கள் கொடுக்கும் அச்சுறுத்தலை பிரிட்டிஷ் தேசிய முன்னணி கொடுப்பதைவிட குறைவு என்ற விதத்தில் சித்தரிக்கிறது. கன்சர்வேடிவ் கட்சிக்கான வாக்குகள் குறைந்துவிட்டதால், "அவர்கள் தாக்குதல்களை நடத்துவது பற்றி அச்சம் கொண்டுள்ளனர்" என்று கூறுகிறது.

இதை தன்னுடைய செய்தித்தாளிலேயே சோசலிச தொழிலாளர் கட்சி எழுதுகிறது; அதுவும் காமிரோன் மற்றும் கன்சர்வேடிவ்களுடன் அரசியல் கூட்டு வைத்துள்ள நிலையில்--அவர்களும் சக ஜனநாயகவாதிகளும் பிரிட்டிஷ் தேசிய முன்னணிக்கு எதிரான போராட்டத்தில் நண்பர்கள்! என்ற அடிப்படையில் துல்லியமாக எழுதுகிறது.

காமரோனும் மற்றைய உயர்நிலை கன்சர்வேட்டிவ்களான Sir Teddy Taylor, Edwasrd Garnier, Anthony Steen போன்றவர்கள் UAF இல் கையெழுத்திட்டவர்களாவர். 2010 ல் காமரோன் பதவிக்கு வந்தால், சோசலிச தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ்களை பெருவணிக கட்சி என்று கூறாமல் ஜனநாயக சக்திகளுக்கு "சட்டபூர்வத்தன்மையுடையவர்கள்" என்று சித்தரித்துள்ளதற்கும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக டோரி அரசாங்கத்தின் முழு சக்தியையும் செலுத்தப்படும் ஆபத்தைக் குறைத்துக் கூறியதற்கும் ஓரளவிற்கு காரணமாக இருந்ததற்கும் நன்றி கூறுவார்.

முற்றும்