World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Mass abstention and vote rigging in Afghanistan election

ஆப்கானிஸ்தான் தேர்தலில் ஏராளமானவர்கள் வாக்களிக்கவில்லை, வாக்குப் பதிவில் தில்லுமுல்லு

By Patrick O'Connor
21 August 2009

Use this version to print | Send feedback

ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த ஜனாதிபதித் தேர்தல் மிகப் பெரிய அளவு மக்கள் வாக்களிக்காததையும், அப்பட்டமான வாக்குப் பதிவு தில்லுமுல்லுகளையும் கொண்டிருந்தது; இது முழு தேர்தல் வழிவகையில் இருந்த ஊழல்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 100,000 வெளிநாட்டுத் துருப்புக்களின் துப்பாக்கிமுனையில் நடத்தப்பட்ட தேர்தலில், வாக்களிப்பு ஜனநாயகத்துடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை; அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகள் பெருகிய முறையில் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு எதிரான எதிர் நடவடிக்கைகள் குருதி கொட்டும் முறையில் நடப்பதற்கு ஒரு முறையான மறைப்பைக் காட்டும் வடிவமைப்பைத்தான் தேர்தல் கொண்டிருந்தது.

செப்டம்பர் 3ம் தேதி வரை துவக்க முடிவுகள் எதிர்பார்க்கப்படவில்லை, இறுதி முடிவுகள் பின்னர் இரு வாரங்களுக்குப் பின்னர்தான். இப்பொழுதுள்ள ஜனாதிபதி ஹமீத் கர்சாய் மற்றும் இன்னொரு வேட்பாளர் பதிவான வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெறவில்லை என்றால், மீண்டும் அக்டோபர் மாதம் அதிக வாக்குகள் பெற்ற இரு வேட்பாளர்களுக்கும் இடையே ஒரு தேர்தல் நடக்கும்; பொதுவாக இது கர்சாயிக்கும் முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல்லா அப்துல்லாவிற்கும் இடையே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரி Zekria Barakzai, Agence France-Presse இடம் தேசிய வாக்குப் பதிவு 50 சதவிகிதம் இருக்கலாம் என்று கூறினார் --இது 2004ல் வந்ததாகக் கூறப்படும் 70 சதவிகித வாக்குப்பதிவைவிட மிகக் குறைவு ஆகும். இந்த ஆண்டு உண்மையில் பங்கு பெற்றவர் விகிதம் பாராக்சாய் மதிப்பீட்டைவிடக் கணிசமாக குறைந்திருக்கலாம்; ஆனால் உண்மையான புள்ளிவிவரம் தேர்தல் மோசடியினால் ஒருபொழுதும் உறுதியாகக் கூறப்பட முடியாது.

அமெரிக்க நேட்டோ தாக்குதல்களை சமீபத்திய மாதங்களில் மோசமாக எதிர்கொண்ட, பஷ்டூன் பெரும்பான்மை இருக்கும் ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் வாக்குப் பதிவு பூஜ்யம் அல்லது கிட்டத்தட்ட பூஜ்யம் என்றுதான் இருந்தது. ஆக்கிரமிப்பாளர்களை எதிர்க்கும் தாலிபன் மற்றும் பிற போராளிக் குழுக்கள் இப்பொழுது நாட்டின் பெரும் பகுதிகளை திறமையுடன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன; பல பகுதிகளிலும் ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பிற்கான தங்கள் அழைப்பை அவற்றால் செயல்படுத்த முடிந்தது. கூட்டணி படைகள் மிகக் குறைவான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள மற்ற பகுதிகளிலும் அதிக மக்கள் வாக்களிக்கவில்லை. தற்பொழுது பிரிட்டிஷ் தலைமையிலான படைகளின் ஆக்கிரமிப்பில் இருக்கும், சாங்கின், ஹெல்மாண்ட் மாநிலங்களில்-70,000 தகுதியுடைய வாக்காளர்கள் உள்ள தொகுதியில் 500 பேர்தான் வாக்களித்தனர் என்று டைம்ஸ் ஆப் லண்டன் தெரிவித்துள்ளது.

இப்பொழுதுள்ள ஜனாதிபதி ஹமித் கர்சாய் நேற்று நாட்டின் 34 மாநிலங்களில் 15ன்மீது தாலிபன் 73 தாக்குதல்களை நடத்தியது என்று கூறியுள்ளார். மற்ற தகவல்களின்படி, 20 ல் இருந்து 30 பேர் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள் ஒரு பகுதியில் சாலைத் தடைகளை ஏற்படுத்தி வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு செல்ல முடியாமல் செய்தனர் என்றும் வாக்காளர்கள் அடையாள ஊதா நிற மை கையில் படிந்த இருவர் காந்தகாரில் கொலை செய்யப்பட்டனர் என்றும் நியூ யோர்க் டைம்ஸ் தெரிவிக்கிறது. இத்தகைய நிகழ்ச்சிகள் கடுமையான பாதுகாப்பை அமெரிக்க நேட்டோ படைகள், அரசாங்கம் அளித்தும் கூட --மொத்தம் 300,000 வெளிநாட்டு, ஆப்கான் இராணுவத்தினர்கள், போலீசார் வாக்குச் சாவடிகளின் பாதுகாப்புக்கு இருந்தனர்-- ஏற்பட்டன.

அமெரிக்க மற்றும் சர்வதேச செய்தி ஊடகத்தின் பிரிவுகள் நேற்றைய பெருவாரியான மக்கள் வாக்களிக்காதது, பாதுகாப்பு பற்றிய அவர்கள் அச்சம் மற்றும் தாலிபனிடம் இருந்து பதிலடி கிடைக்கும் என்பதால்தான் என்று கூறியுள்ளன. இது சில பகுதிகளில் உண்மையே என்றாலும், 2004 தேர்தலின் போதும் இத்தகைய அச்சங்கள் இருந்தன. தேர்தல் புறக்கணிப்பு இன்னும் பரந்த வகையில் மக்கள் பிரிவுகளால் என்பது, கர்சாய் மற்றும் பிற ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிரான பரந்த அளவில் உணரப்பட்டுள்ள இகழ்ச்சி மற்றும் விரோதப் போக்கின் வெளிப்பாடு என்று அறியப்பட வேண்டும். கர்சாயின் போட்டியாளர்கள் பெரும்பாலும் யுத்தப்பிரபுக்கள், போர்க் குற்றவாளிகள் மற்றும் மாபியா வகையிலான நபர்கள், வாஷிங்டனின் விருப்பப்படி நடக்க விரும்பும் பெயரளவு தலைமையைப் பெற வேண்டும் என்று துடிப்பவர்கள் ஆவர்.

காபூலில் ஒரு வாக்களிக்கும் மையத்தில் இருந்து தகவல் கொடுத்த Associated Press, "இந்த இடம் 2004ல் ஏராளமான மக்கள் கூட்டத்தைக் கண்டது" என்று கூறியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு காலை 7 மணிக்கு வாக்குச் சாவடி திறந்திருந்தபோதிலும், வாக்காளர்கள் ஒருவரும் வரவில்லை." என்றது. உள்ளூர் கடைக்காரரான மகம்மது தஹிர் கூறினார்: "நான் வாக்களிக்கவில்லை. இது, இந்த நாட்டில் எதையும் மாற்றப் போவது கிடையாது."

இத்தகைய உணர்வுகள் தேர்தல் மோசடி பற்றி பரந்த தகவல்கள் வந்ததை அடுத்துத் தீவிரமாயின. 17 மில்லியன் பெயர்கள் உத்தியோகபூர்வமாக வாக்களிக்கப் பதிவு ஆகியுள்ளன --இது 2004 தேர்தலைக் காட்டிலும் மூன்றில் ஒரு பகுதி அதிகமாகும். இந்தப் பதிவுகளில் கணிசமானவை --கிட்டத்தட்ட 3 மில்லியன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது-- மோசடிப் பதிவுகள் ஆகும். தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரிட்டிஷ் நிருபர்கள் காபூலில் தேர்தல் அடையாள அட்டைகள் விற்பனைக்கு வந்ததைக் கண்டனர். வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு பல பெயர்கள் போலித்தனமாக சேர்க்கப்பட்டதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. "பிரிட்நி ஜமிலியா ஸ்பியர்ஸ்" (Britney Jamilia Spears) என்ற பெயரில் ஒரு ஆப்கன் வாக்காளர் பெயர் இருந்தது பற்றி BBC வெளிச்சம்போட்டுக் காட்டியது.

வாக்குச் சாவடிகளில் மக்கள் பல அடையாள அட்டைகளுடன் வந்தது பற்றி நேற்று பல தகவல்கள் வெளிவந்தன. இதைத்தவிர, அழியாமல் இருக்கும் மை என்று வாக்காளர்களின் விரல்களில் தடவப்படுவது எளிதில் வீடுகளில் பயன்படுத்தும் சலவைப் பொருளால் அகற்றப்பட்டுவிட முடியும் என்று நிரூபணம் ஆயிற்று.

ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் உலக வங்கி அதிகாரியுமான Ramzan Bashardost இந்நிலையை எதிர்கொள்ளும் வகையில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட வேண்டும் என்றார். "இது ஒன்றும் தேர்தல் அல்ல, ஒரு நகைச்சுவை நிகழ்வு" என்று அவர் அறிவித்தார்.

"சரியான மை வாங்கத்தவறியதால் 2004 தேர்தலில் ஒருவரே பல வாக்குகளைப் போடுவதற்கு வழிவகுத்தது என்று இருந்த நிலையில், தற்போதைய நிலைமை தேர்தலை நடத்துபவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும். 2004 மை ஊழல் பல வாக்காளர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தவே, தேர்தல் நடத்தியவர்கள் இனி இப்படி நடக்காது என்று உறுதி கூறியிருந்தனர். மக்களிடையே தேர்தல் பற்றி நம்பிக்கையை ஊட்டும் விதத்தில் ஒரு சமீபத்திய நடவடிக்கையாக உள்ளூர் ஐ.நா. தலைவர் Kai ide செய்தியாளர்களை தன்னுடைய விரலில் இருந்து மையை வீடுகளில் பயன்படுத்தும் சோப் போன்றவற்றின் மூலம் அகற்றுவதைக் காணுமாறு அழைத்திருந்தார்" என்று Guardian எழுதியுள்ளது.

மிக அதிக அளவு வாக்குகள் நெறியற்று போடப்பட்டதாக பல தகவல்கள் வந்துள்ளன. காபூலுக்கு கிழக்கே Pul-e-Chariki யில் ஹாஜி ஜனத் குல் உயர்நிலைப்பள்ளியில் இருக்கும் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்குத் தொடங்கி அரை மணி நேரத்திற்குள் வந்த நிருபர்கள் ஒருவர் கூட வாக்களிக்க வராமல் இருந்ததை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து கண்டனர். ஆனால் தேர்தல் மேற்பார்வையாளர்கள் 5,530 வாக்குகள் நிருபர்கள் வருவதற்கு முன்னதாகவே போடப்பட்டுவிட்டன என்று வலியுறுத்தினர். "ஒவ்வொரு வாக்குப் பெட்டியிலும் 500 ல் இருந்து 510 வரை சீராக வாக்குகள் போடப்பட்டிருந்தன" என்று டைம்ஸ் குறிக்கிறது. "டைம்ஸ் அவ்விடத்தை அடைவதற்கு இரு நிமிஷங்கள் முன்பு கடைசி வாக்காளர் அங்கிருந்து சென்றுவிட்டார் என்று வைத்துக் கொண்டாலும், 12 வாக்குப் பெட்டிகளை வைத்து அவ்விடத்தில் தேர்தல் நடத்திய அதிகாரிகள் ஒரு நிமிஷத்திற்கு குறைந்த பட்சம் 100 வாக்காளர்களையாவது அனுமதித்திருந்தால்தான் அந்த அளவு வாக்குப் பதிவு நடந்திருக்க முடியும்."

Independent Election Commission-ல் வந்த தகவல்கள் பின்னர் Haji Janat Gul வாக்குச் சாவடியில் 70,000 சட்டவிரோத வாக்குகள் போடப்பட்டது பற்றி விசாரணை நடத்தி வருவதாக ஒப்புக்கொண்டன.

ஹெல்மாண்ட் மாநிலத்தில் மிக அதிக மக்கள் இருக்கும் பகுதியான நட்-எ-அலி வாக்குச் சாவடியில் இருந்து பிரிட்டனின் Independent கொடுக்கும் தகவலாவது: "கண்ணுக்குப் புலப்படா வாக்காளர்கள் புதிர் என்று வேண்டுமானால் அழையுங்கள் ...பிற்பகல் 1 மணி வரை 400 பேர்தான் வாக்களித்திருந்தனர். மூன்று மணி நேரம் கழித்து இந்த எண்ணிக்கை 1,200 க்கு உயர்ந்துவிட்டது. தெருக்கள் காலியாகவும் அனைத்து கடைகளும் வணிகங்களும் மூடப்பட்டிருந்த உண்மை இருந்தும் இந்நிலை ஏற்பட்டது; ஒரு ஆப்கானிய இராணுவ அதிகாரி இடத்தைக் காவல் காத்த தன் வீரர்கள் இந்த குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் எந்த வாக்காளர் வந்ததையும் பார்க்கவில்லை என்றதாக கூறினார். தேர்தல் அதிகாரிகள் பின்னர் குவிந்த வாக்குச் சீட்டுக்களை எண்ணினர்; எவருக்கு வாக்கு என்றுகூட பார்க்கவில்லை; ஏனெனில் அனைத்து வாக்குகளும் இருக்கும் ஜனாதிபதியான ஹமித் கர்சாயிக்கு பதிவு செய்யப்பட்டிருந்தன."

இத்தகவல்கள் எதுவும் ஜனாதிபதி பாரக் ஒபாமாவை தேர்தலுக்கு இசைவு கொடுப்பதில் இருந்து தடுக்கவில்லை. வெள்ளை மாளிகை வானொலிப் பேட்டி ஒன்றில் அவர் அறிவித்தார்: "தாலிபன் தடைசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தும், ஆப்கானிஸ்தானில் ஒரு வெற்றிகரமான தேர்தல் நடந்தது போல் தோன்றுகிறது."

தேர்தல் விளைவு இன்னும் கூடுதலான அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படுவதை காணக்கூடும். இராணுவம் மற்றும் வெளியுறவு கொள்கை நடைமுறைகளுக்குள்ளே இருந்து ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு இருப்பதை அடக்கவும், நாட்டிலும் மத்திய ஆசியா முழுவதிலும் அமெரிக்க மேலாதிக்கத்தை உயர்த்தவும் தீவிரத் தாக்குதல் வேண்டும் என்பது அதிகரித்த அழைப்பாக உள்ளது. ஆப்கானிஸ்தானிலும் அண்டை பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியிலும் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட இருப்பதாக ஒபாமா உறுதியளித்துள்ளார். இந்த மூலோபாயம் --பொறுப்பற்ற விதத்தில் இரு நாடுகளிலும் சாதாரண மக்களுக்கு எதிராக வன்முறையை கையாளுதல்-- மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியின் மீது பிடியை தக்கவைத்துக்கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்திய தேவையால் உந்தப்படுகிறது.

ஒபாமாவின் போர் உந்துதலுக்கு எதிர்ப்பு என்பது அமெரிக்காவின் சாதாரண மக்களிடையே அதிகரித்துக் கொண்டுவருகிறது. நேற்று Washington Post-ABC News நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்று ஆப்கானிஸ்தான் போர் பயனற்றது என்று 51 சதவிகிதத்தினர் கூறியதாகவும், 47 சதவிகிதத்தினர் பயனுடையது எனக்கூறினர் என்றும் தெரிவிக்கிறது மேலும் 24 சதவிகிதத்தினர்தான் கூடுதல் படைகள் அனுப்பப்பட வேண்டும் என்று விரும்பியதாகவும், 45 சதவிகிதத்தினர் தற்போதைய எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று கூறினர் என்றும் தெரிவிக்கிறது