World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama ordered US air strikes on Yemen

யேமன் மீது விமானத் தாக்குதல்களுக்கு ஒபாமா உத்தரவிட்டார்

By Barry Grey
21 December 2009

Use this version to print | Send feedback

கடந்த வியாழனன்று ஏராளமான பெண்கள், குழந்தைகள் உட்பட பல குடிமக்களைப் பலிவாங்கிய யேமன் மீதான அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா நேரடியாகவே உத்தரவிட்டிருந்தார்.

தலைநகரம் சானாவிற்கு தென்கிழக்கே, 480 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் Abyan கிராமத்திலும், வடகிழக்கே 60 கி.மீ. தொலைவில் Arhab மாவட்டத்தில் இருப்பதாகக் கூறப்படும் அல் கெய்டா முகாம்கள்மீது அமெரிக்கப் போர் விமானங்களும் ஆயுதமேந்திய ஏவுகணைகளும் தாக்குதல் நடத்தின. அமெரிக்க ஆதரவுள்ள யேமனின் ஜனாபதி அலி அப்தல்லா சாலேயுடன் இணைந்த விதத்தில் அமெரிக்கத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது வெளிப்படை. சர்வதிகாரியின் இராணுவப் படைகளும் குண்டுவீசப்பட்ட சிறு நகரங்கள்மீது தாக்குதல் நடத்தியதுடன், ஒரு மூன்றாவது கிராமத்தின் மீதும் தாக்குதல் நடத்தின; இதன் விளைவு யேமன் எதிர்க்கட்சிச் செய்தித் தொடர்பாளர் கருத்தின்படி 120 பேர் இறந்ததாகும்.

அமெரிக்க குண்டுத்தாக்குதல் அதிகமாக இருந்த மசத் பகுதியில் இருந்த உள்ளூர் அதிகாரிகளும் சாட்சியங்களும் இறந்தவர் எண்ணிக்கை 60 க்கு மேலாக இருக்கும் என்று கூறினர்; இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரணக் குடிமக்கள் ஆவர். ஒரு அல் கெய்டா பாதுகாப்புக் கோட்டை அப்பகுதி என்ற குற்றச்சாட்டை அவர்கள் மறுத்தனர்.

ABC செய்தியின் உடைய பகுப்பாய்வுச் செய்தியாளர் Brian Ross வெள்ளி இரவில் "ABC World News" நிகழ்ச்சியில் இத்தாக்குதல்களில் அமெரிக்கப் போர் விமானங்கள் தொடர்பு கொண்டிருந்தன என்று முதலில் தகவல் கொடுத்தார். "வெள்ளை மாளிகை அதிகாரிகள் ABC News இடம் வியாழனன்று யேமனில் அல் கெய்டா இடங்கள் என்று சந்தேகிக்கப்பட்டவற்றை தாக்குவதற்கான உத்தரவுகள் நேரடியாக ஓவல் அலுவலகத்தில் இருந்து வந்தன என்று கூறுகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.

"அமெரிக்க இராணுவம் க்ரூஸ் ஏவுகணைகளை யேமனில் இரு வெவ்வேறு இடங்களில் தாக்குவதற்குப் பயன்படுத்தியது. இன்று al-Jazeera வில் ஒளிபரப்பான படங்கள் டஜன் கணக்கான சடலங்கள் துணியால் மூடப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. கிட்டத்தட்ட 35 சந்தேகத்திற்குரிய அல் கெய்டா நபர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எதிர்த்தரப்புக் குழுக்கள் டஜன் கணக்கான சாதாரண குடிமக்களும் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றனர்" என்று அவர் தொடர்ந்து கூறினார்.

வெள்ளை மாளிகை அதிகாரிகள் நிருபர்களிடம், ஒபாமா யேமன் ஜனாதிபதி சாலேயை இம்மின்னல் வேகத் தாக்குதலை அடுத்து தாக்குதலுக்காக அவரை "பாராட்டினார்" என்று கூறியதாகவும் தெரிவித்ததாக ABC News மேற்கோளிட்டுள்ளது.

ABC News தகவலைப் பற்றி அமெரிக்க அதிகாரிகள் கருத்துக்கூற மறுத்துவிட்டனர்; ஆனால் அதை அவர்கள் மறுக்கவில்லை. "இக்கட்டத்தில் நாங்கள் விவரங்கள் ஏதும் கூறுவதற்கில்லை" என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். யேமனும் அமெரிக்காவும் "பயங்கரவாத எதிர்ப்பில்" நெருக்கமாக ஒத்துழைப்பதாகவும் அவர் கூறினார்.

சனிக்கிழமை தாக்குதல்களில் அமெரிக்கப் பங்கு பற்றித் தகவல் கொடுத்த நியூயோர்க் டைம்ஸிடம் பென்டகன் செய்தித் தொடர்பாளர் Bryan Whitman, "அல் கெய்டாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக யேமன் பாராட்டப்பட வேண்டும்" என்றார்.

சனிக்கிழமையன்று தெற்கு யேமனில் ஆயிரக்கணக்கான யேமனியர்கள் தெருக்களுக்கு வந்து காட்டுமிராண்டித்தன இராணுவ செயல்களைக் கண்டித்தனர். உள்ளூர் ஆதாரங்களின்படி, தால் மாநிலத்தில் கிட்டத்தட்ட 3,000 பேரும், Lahj, Abyan மாநிலங்களில் நூற்றுக்கணக்கானவர்களும் எதிர்ப்பைத் தெரிவிக்க அணிவகுத்துச் சென்றனர் என்றும் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பி தாக்குதல் பற்றி விசாரணை கோரினர் என்றும் தெரிகிறது.

கட்சிகளின் கூட்டுக் கூட்டம் என்று ஆறு எதிர்க்கட்சிக் கூட்டணி ஒன்று சானாவிற்கு தெற்கே 260 கி.மீ. தொலைவில் உள்ள Taiz மாநிலத்தில் சிவிலிய மக்கள் மீது இலக்கு வைத்து தாக்கப்பட்து பற்றி 10,000 பேர் அடங்கிய அணிவகுப்பில் கண்டித்தது. கூட்டணியின் முக்கிய உறுப்பினர் இத்தாக்குதல்கள் "இழிந்த குற்றம்" என்று விவரித்தார்.

வடக்கில் இருந்து பிரிய வேண்டும் என்று விரும்பும் தெற்கு இயக்கம் (Southern Movement), இத்தாக்குதல்கள் தெற்கு மக்கள் மீதான தாக்குதலே ஒழிய அல் கெய்டா மீது அல்ல என்று கூறியுள்ளது. "இது ஒரு இனப்படுகொலை" என்று தெற்கு இயக்கத்தின் முக்கிய அரசியல்வாதியான Abbass al Asal கூறினார். அப்யானில் வான், தரைவழித் தாக்குதல்கள் 62 சாதாரணக் குடிமக்களை, 22 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட, கொன்றுள்ளன என்றும் அவர் கூறினார்.

சனிக்கிழமை வெளிவந்த அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை ஒன்றின்படி, அப்யான் மக்கள் அப்பகுதியில் அல் கெய்டா பயிற்சி முகாம்கள் ஏதும் இல்லை என்றும், பெரும் தாக்குதல் வீடுகளை அழித்துவிட்டன--களிமண், செங்கல் ஆகியவற்றால் கட்டப்பட்ட வீடுகள், குடிசைகள், கூடாரங்கள்--இது ஒரு பழங்குடி கிராமப்பகுதி என்றும் கூறியதாகத் தெரிகிறது. அப்பகுதியில் வாழும் அலி மகம்மத் மன்சூர் என்பவர் இறந்தவர்களைப் புதைப்பதற்கு தான் உதவியதாகக் கூறினார். இந்தப் பகுதி ஒரு பயிற்சி முகாம் என்ற கூற்றை அவர் மறுத்து, இந்தச் சமூகம் ஒரு பெரிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில்தான் உள்ளது, இரு இராணுவத் தளத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில்தான் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இறந்தவர்களில் ஒருவரான மகம்மத் சாலே அல்-காஜேமி என்பவர் ஆப்கானிஸ்தானில் போராடிய பின் 2005ல் விடுவிக்கப்பட்ட ஒரு செளதி அரேபியர், அக்கிராமத்தில் விடுவிக்கப்பட்டபின் குடும்பத்தோடு வசித்ததாகவும், மறைந்து வாழவில்லை என்றும் மன்சூர் கூறினார்.

வியாழக்கிழமைத் தாக்குதல்கள் யேமனில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை பெருகியிருப்பதின் ஒரு பகுதியாகும்; இத்துடன் அமெரிக்க பிணைப்புள்ள ஜனாதிபதி சாலே மற்றும் செளதி முடியாட்சி ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்றும் பிந்தையதற்கு எகிப்தின் ஆதரவு உண்டு என்றும் தெரிகிறது. வியாழன் வரை அதிக அளவு அமெரிக்க இராணுவ வன்முறை யேமனின் வடக்குப் பகுதியில் ஹெளதி பழங்குடியின் எழுச்சிப் போராளிகளுக்கு எதிராக குவிப்பைக் காட்டியது. அப்பிரிவு ஈரானில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஷியைட் இஸ்லாம் வழிமுறையைக் கொண்டுள்ளது.

கடந்த வாரம் ஹெளதி போராளிகள் அமெரிக்க விமான ஜேட்டுக்கள் சாதா என்னும் வடமேற்கு மாநிலத்தில் 28 தாக்குதல்களை நடத்தியதாகக் கூறினர்; இப்பகுதி செளதி அரேபிய எல்லைக்கு அருகே உள்ளது. ஆகஸ்ட் மாதம், ஜனாதிபதி சாலே "Operation Scorched Earth (எரிக்கப்படும் விளைநில நடவடிக்கை)" என்பதை ஹெளதி எழுச்சியை அழித்துக் கட்ட ஆம்பித்து இருப்பதாக அறிவித்ததில் இருந்து, செளதித் துருப்புக்களும் விமானங்களும் யேமன் பகுதியில் செளதி அரேபியா எல்லைக்கு அருகே இருக்கும் பகுதிகளைத் தாக்கி வருகின்றன. சாலே, ரியத் மற்றும் கெய்ரோ அனைவருமே ஹெளதிகளுக்கு ஈரான் ஆயுதம் கொடுப்பதாகக் கூறியுள்ளன; அது அக்குற்றச்சாட்டுக்களை மறுக்கிறது.

யேமனில் உள்ள பல எதிர்ப்பு இயக்கங்களையும் ஒபாமா நிர்வாகம் அல் கெய்டாவுடன் இணைக்கிறது; அல் கெய்டா ஒரு சுன்னி இயக்கமாக இருந்து, ஹெளதி போன்ற ஷியைட்டுக்களுக்கு முற்றிலும் எதிராக இருந்தாலும், ஒபாமா நிர்வாகம் இப்படித்தான் செய்கிறது. டிசம்பர் 13ம் தேதி பிரிட்டிஷ் டெய்லி டெலிகிராப் பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோளிட்டு அமெரிக்கா யேமனுக்கு அந்நாட்டின் இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க சிறப்புப் படைத் துருப்புக்களை அனுப்பியதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர், "யேமன், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் அல் கெய்டாவின் செயற்பாடுகளுக்கு இருப்புத் தளமாக மாறிக் கொண்டிருக்கிறது" என்று கூறியதாக செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் போரை வாஷிங்டன் இப்பொழுது யேமனிலும் விரிவாக்கம் செய்கிறது என்பதற்கு இது தெளிவான அடையாளம் ஆகும்.

இத்தகைய ஜெட் சண்டை விமானங்கள் ஹெளதி போராளிகளுக்கு எதிராக பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தவதாகவும் கூறப்படுகிறது. டிசம்பர் 13ம் தேதி ஹெளதி ஆதாரங்கள் செளதி படைகள் எல்லை கடந்த பெரும் தாக்குதலை தொடக்கியுள்ளதாகவும், Razeh என்னும் வடக்கு மாவட்டத்தில் இதையொட்டி குறைந்தது 70 சாதாரணக் குடிமக்கள் கொல்லப்பட்டனர் என்றும் 100 பேர் காயமுற்றனர் என்றும் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (UNICEF) மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையரும் (UNHCR) அரசாங்க மற்றும் செளதி தாக்குதல்கள் இணைந்து வடக்கே நடத்தப்படுவதால், நூறாயிரக்கணக்கான யேமானிய மக்கள் இடம் பெயர நேரிடக்கூடியதால் ஏற்படும் பெரும் இடர்பாடுகள் உடைய நிலைமை பற்றி எச்சரித்துள்ளனர். கிட்டத்தட்ட 175,000 மக்கள் சாதாவில் தங்கள் வீடுகளை விட்டு நீங்கி போதிய உணவு, குடிநீர் வசதி அற்ற நெருக்கடி நிறைந்த அகதிகள் முகாம்களுக்கு வந்துள்ளதாக UNCHR மதிப்பிட்டுள்ளது. முகாமில் உள்ள நிலைமைகள் காரணமாக பல குழந்தைகள் இறந்து விட்டன.

யேமனில் கடந்த வியாழன் நடந்த அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் குறைந்தது 17 பேரைக் கொன்ற, வடக்கு வஜீரிஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமம் பாகிஸ்தானில் வாஷிங்டனால் நடத்தப்பட்ட மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் நடைபெற்ற அன்றே நிகழ்ந்தன.

ஆப்கானிஸ்தானிற்கு கூடுதலாக 30,000 துருப்புக்களில் முதல் பிரிவு அனுப்பப்பட்டதுடன் இணைந்த காலத்தில் நடந்த இந்நிகழ்ச்சிகள் ஒபாமா நிர்வாகம் ஒரு இராணுவ ஆக்கிரமிப்பு, காலனித்துவ வகை வெற்றி என்ற கொள்கையை புஷ் நிர்வாகத்தையும் விஞ்சக்கூடியவிதத்தில் செய்கிறது என்பதை நிரூபிக்கின்றன. பெருகும் இறப்பு எண்ணிக்கை, பேரழிவு என்று ஒபாமாவின் டிசம்பர் 1ம் தேதி West Point உரையில் சுட்டிக்காட்டப்பட்டது பற்றித்தான் இவை குறிப்பு கொடுக்கின்றன; அதைத் தொடர்ந்து இன்னும் நேரடியாக டிசம்பர் 10ம் தேதி நோபல் அமைதிக்கான பரிசை ஏற்றபோது நிகழத்திய உரையிலும் அவர் ஆப்கானியப் போர் விரிவாக்கம் பற்றிக் கூறியிருந்தார்.

தன்னுடைய West Point உரையில், ஒபாமா அறிவித்தது: "அதிதீவிர வன்முறைக்கு எதிரான போராட்டம் விரைவில் முற்றுப்பெறாது. இது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இரண்டிற்கும் அப்பாலும் செல்லும்." அவர் மேலும் "பல ஒழுங்கற்ற பிராந்தியங்கள், வேறுபட்ட எதிரிகளும் உள்ளனர்" என்று கூறி சோமாலியா, யேமன் இரண்டின் பெயர்களையும் கூறினார்.

இவருடைய நோபல் பரிசு பெற்றபோது நடத்திய உரை, ஏகாதிபத்தியப் போர் மற்றும் நவ காலனித்துவ வகைப் போருக்கான ஆணவமான வாதமாகும். முன்னரே தாக்கி தனதாக்கி கொள்ளும் போரின் சிறப்பு பற்றி பெரிதும் பேசிய ஒபாமா அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பிற்கு திறன் உடைய இலக்குகளில் ஈரான், சுடான், கொங்கோ, ஜிம்பாப்வே, மியன்மார் ஆகியவற்றை வரிசையாகத் தொகுத்துக் கூறினார்.

ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடுகளைப் போலவே, யேமனில் அமெரிக்க ஆக்கிரமிப்பு அல் கெய்டாவைத் தோற்கடிக்கவோ, பயங்கரவாதத்தில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்கோ அல்ல. அமெரிக்க ஆளும் உயரடுக்கு எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் தன் மேலாதிக்கத்தை நிறுவி மூலோபாயம் நிறைந்த முக்கிய குழாய்த் திட்டங்கள் மற்றும் கடல்வழிப் பாதைகள்மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக கொண்டுள்ள உந்ததுதலின் விளைவுதான்.

ஒரு முக்கிய புவியியல் நிலையை யேமன் கொண்டுள்ளது; இதையொட்டி அது பனிப்போர்க் காலத்தில் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே ஒரு போர்க்களமாயிற்று. கடந்த வியாழனன்று நடந்த விமானத் தாக்குதல்கள் பற்றிய அறிக்கையில் அசோசியேட்டட் பிரஸ் குறிப்பிட்டுள்ளபடி, "செங்கடல் மற்றும் ஏடென் வளைகுடா சந்திக்கும் மூலோபாயம் நிறைந்த முக்கிய இடத்தில் யேமன் உள்ளது; இதுதான் சூயஸ் கால்வாயைச் சென்று அடைய உதவும்--மேலும் இதற்கு எதிரில் சோமாலிய வளைகுடா என்னும் அதிக கொந்தளிப்பு உள்ள நாடும் இருக்கிறது."

அமெரிக்கா ஏற்கனவே சோமாலியா மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தி, எதியோப்பியாவை போலிப் போர் நடத்தவும் அந்நாட்டை ஆக்கிரமிக்கவும் முயன்றுள்ளது.

யேமன்மீது அமெரிக்க இராணுவ, அரசியல் கட்டுப்பாட்டை நிறுவும் உந்துதலில், அமெரிக்கா அப்பகுதி முழுவதும் அழுத்தங்களுக்கு வகை செய்துள்ளது--குறிப்பாக ஒரு புறத்தில் செளதி அரேபியாவிற்கும் எகிப்துக்கும் இடையேயும் மறுபுறம் ஈரானிலும்.

வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஏடென் வளைகுடாவை சுற்றி அமெரிக்க இராணுவத் தாக்குதல் நடத்துவது, இலக்கு கொள்ளப்பட்டுள்ள மக்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் பேரழிவு விளைவுகளை தரக்கூடிய உட்குறிப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள வடிவமைப்பு பற்றிய எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம்தான் வாஷிங்டனின் நவ காலனித்துவ மூலோபாயத்தை நிறுத்த வேண்டும்.

இதற்கு ஒபாமா நிர்வாகத்திற்கு எதிராக ஒரு நேரடிப் போராட்டம் தேவை. "மாற்றம்", "நம்பிக்கை" ஆகியவற்றைக் கூறிய வேட்பாளர் என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டிற்குள்ளாகவே, ஒபாமா ஒரு போர்க் குற்றவாளி என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க இராணுவ-உளவுத்துறைப் பிரிவுகளின் கருவியாகவும் உள்ளார். இராணுவவாதத்துடன் போராடுவதற்கு தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன சோசலிச இயக்கத்தை ஒபாமாவிற்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இரு கட்சி முறைக்கும் மற்றும் அடக்கு முறை, போர் ஆகியவற்றிற்கு ஆதாரமான முதலாளித்துவம் ஆகியவற்றிற்கு எதிராக ஸ்தாபிக்க வேண்டும்.